கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கனகாம்பரம்பூ குறிப்புகள்

Thursday, January 12, 2017

Rezeta

மெக்ஸிக்கோப் படம் என்ற ஒரே காரணத்தால் மட்டுமே இந்தப் படத்தைப் பார்க்கத் தொடங்கினேன். மெக்ஸிகோவிற்கு தன் இருபதுகளில் வருகின்ற மொடலிங் செய்கின்ற ஒரு பெண்ணுடைய கதை. அல்பேனியாவில் பிறந்து (அமெரிக்காவிற்கு பதின்மங்களில் அகதியாகப் புலம்பெயர்ந்த) இந்தப் பெண் மெக்ஸிகோவிற்கு வரும்போது சந்திக்கும் புதிய காதல்கள்/காதலர்களைப் பற்றிய படமிது.

இந்தப் பெண்ணின் காதலர்களில் ஒருவர் அறிவுஜீவியாக இருப்பார். அவரின் நண்பர்கள் கூட எந்த நேரமும் அரசியல் பேசிக்கொண்டிருப்பவர்களும் கூட. நெருக்கமாய் இருவரும் இருக்கும் ஒரு சமயத்தில் இவர் அந்தப் பெண்ணோடு அல்பேனியா/கொசோவா நிலவரங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க, Rezeta அதிகம் அக்கறை காட்டாதிருப்பார். ஒருகட்டத்தில் அந்தக்காதலர் பொறுமையிழந்து உனக்கு உனது நாட்டில் நடப்பது குறித்து அக்கறையில்லையா என வினாவுவார். அப்போது Rezeta , எனக்கு அதுகுறித்து அக்கறையிருக்கிறது, ஆனால் கடந்தகாலத்தில் எப்போதும் வாழ்வதில் பிடிப்பதுமில்லை. எனக்கு பலருக்குக் கிடைக்காத பயணஞ்செய்வதற்குக் கிடைத்திருக்கின்றது. அதனால் நான் வாழ்வைக் கொண்டாட விரும்புகின்றேன் என்பார். சிலவேளைகளில் ஒருவர் மீது எவ்வளவு அக்கறையிருந்தாலும், அவர்களின் கடந்தகாலத்தை/துயரத்தை அவர்கள் செளகரியமாக உணராத வேளைகளில் நாங்கள் பேசுவதோ அல்லது கேள்வி கேட்பதோ அவ்வளவு நல்லதில்லை என்பதை உணர்த்துகின்ற ஓரிடமிது.

காதல், அதுவும் மொழிகளை/கலாசாரங்களை கடக்கின்றபோது இன்னும் அழகாகின்றது. பிரிதலின் வலிகளென்பதும் அது நாடுகளை/எல்லைகளைக் கடந்தபின்னும் மனதிலிருந்து எளிதில் இல்லாமற் போவதென்பதும் இல்லை.

இத்திரைப்படத்தைப் பார்த்தபின், இது குறித்துத் தேடிய விடயங்கள் இன்னும் சுவாரசியமானவையாக இருந்தன. இதில் நடித்தவர் மொடலிங் செய்பவர் என்பதோடு, அல்பேனியாவில் பிறந்த அவரின் உண்மைக்கதையுமாகும். மெக்ஸிக்கோவிற்கு மொடலிங்கிற்கு வந்து மெக்ஸிக்கோவின் மீது ஈர்ப்பு வந்து இப்போது அங்கே வசிக்கத் தொடங்கியுமிருக்கின்றார். இத்திரைப்படத்தில் நடித்த இந்த மொடல் மட்டுமில்லாது இதில் நடித்த அனைவரும் புதியவர்கள் என்பதோடு, இயக்குநருக்கும் இதுவே முதற்படம். மெக்ஸிக்கோ சிட்டியில் Rezetaவை சந்தித்தபோது அவர் தனது கதையைச் சொல்ல, அந்தப் பாதிப்பில் இதைப் பின்பு இந்த இயக்குநர் படமாக்கியிருக்கின்றார்.


Divines

பிரான்சிற்கு கலைகளின் தேசம் என்ற ஒரு முகமிருப்பதுபோல, இன்னமும் விளிம்புநிலை மனிதர்களை எட்டிவைத்துப் பார்க்கும் பக்கமொன்றும் அதற்கு உள்ளது. 'Divines' என்கின்ற திரைப்படம் இரண்டு முஸ்லிம் பதின்மப்பெண்களின் வாழ்வைப் பின் தொடர்ந்தபடி செல்கின்றது. குடிக்கு அடிமையாகிய single motherல் வளர்க்கப்படும் பெண், பாடசாலையிலும் ஒழுங்காக தன்னை தகவமைத்துக்கொள்ளாது தவிர்க்கின்றார். அதன் நீட்சியில் போதைமருந்து விற்கும் கும்பலோடு சேர்ந்து, அவரின் வாழ்வு எங்கெங்கோ எல்லாம் அலைகின்றது. பாரிஸின் புறநகர்ப்பகுதியில், புறாக்கூண்டுகளைப் போன்ற வீடுகளில் மனிதர்கள் இப்படியா வாழ்கின்றார்கள் என்பதை மேற்குலகக் கனவிலிருக்கும் பலரால் அவ்வளவு எளிதாக நம்பமுடியாது.

ஒரு கனவு வாழ்க்கையிற்காய் எல்லாவற்றையும் துச்சமாக உதறித்தள்ளும் இந்தப் பதின்மப்பெண்ணினதும், அவரது தோழியினதும் வாழ்க்கை என்னவாகியது என்பதை ஒருவித விறுவிறுப்புடன் படமாக்கும்போது நமக்கு பிரான்ஸின் இன்னொருமுகம் தெரிகின்றது. இதில் பதின்மப் பெண்ணாக நடிக்கும் Oulaya வின் நடிப்பை அவ்வளவு எளிதில் மறக்கமுடியாது. பெண் நெறியாளரால் இயக்கப்பட்ட இப்படம் கான்ஸ் திரைப்படவிழா, ரொறண்டோ திரைப்பட விழா போன்றவற்றில் தேர்தெடுக்கப்பட்டு இவ்வாண்டில் திரையிடப்பட்டிருக்கின்றது.


Dangal

நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அதுவும் ஒரு விளையாட்டை முக்கியபொருளாகக் கொண்டு இறுக்கமான திரைப்படத்தை எடுத்தலென்பது எளிதில்லை. அதுவும் இந்தியா/இலங்கை போன்ற கிரிக்கெட் மட்டுமே விளையாட்டு என்ற பிரமை இருக்கின்ற நாடுகளில் வேறு விளையாட்டைப்பற்றி ஒரு திரைப்படம் எடுப்பதென்பதே பெரும் சிரமமானது. மேலும் பெண் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு விளையாட்டுச் சம்பந்தமான படங்கள் வருவது எளிதுமன்று. அவ்வாறு ஏற்கனவே வந்த இறுதிச்சுற்று ஒரு முக்கியமான படமென்றால் அமீர்கான் என்கின்ற பெரும் நாயகன் இருந்தாலும் அவர் அடக்கிவாசித்து பெண் பாத்திரங்களுக்கு முக்கியம் கொடுத்து வந்திருக்கின்றது Dangal.

அமீர்கான் National Champion ஆன, முன்னாள் மல்யுத்தவீரர் என்றாலும் அவருக்கான பகுதிகளை சில காட்சிகளில் கூறிவிட்டு முக்கியமான பாத்திரங்களான இரு பெண்களையும் பின் தொடர்ந்தபடி இப்படமிருக்கின்றது. அமீர்கானின் அந்தத் தந்தைப் பாத்திரம், பயிற்றினராக இருப்பதா அல்லது ஒரு தந்தையாக இருப்பதா என்கின்ற குழப்பம், பெண்பிள்ளைகளை ஒருசிறு கிராமத்திலிருந்து மல்யுத்த வீரர்களாய் ஆக்குவதாய் அவரும் அந்தப் பெண்பிள்ளைகளும் பெறுகின்ற அவமானம், ஒருகட்டத்தில் வெளியே உலகம் தெரியும்போது பிள்ளைகள் தந்தையிடமிருந்து விலகிப்போகும் கட்டமென எல்லாவற்றையும் மிகச் கச்சிதமாய் அமைத்திருக்கின்றனர். அப்பாவிற்கும் பெண்பிள்ளைகளுக்குமான நெருக்கம் அவ்வளவு வெளிப்படையாகக் காட்டப்படாவிட்டாலும், அதை மிகநுட்பமாக சில காட்சிகளால் கொணரும்போது நம்மையறியாமலே ஏதோ ஒருவகை உணர்ச்சியிற்குள் விழுந்துவிடுகின்றோம்.

இப்படத்தின் சில காட்சிகள் மட்டுமில்லாது இறுதிக்காட்சி கூட ஒருவகையில் இறுதிச்சுற்றை நினைவுபடுத்தினாலும், மல்யுத்தப்போட்டிகளை படமாக்கியவிதத்தில் நாமும் அதை நேரே பார்க்கின்ற பார்வையாளரைப் போல ஆகிவிடுகின்றோம். அண்மைய ஒலிப்பிக்கில் இந்தியாவிற்கான பதக்கங்களைப் பெண்களே பெற்றுக்கொடுத்து நாட்டின் மரியாதையைக் கொஞ்சமாவது காப்பாற்றியிருந்தார்கள். நம் நாடுகளில் பெண்களுக்கு அவர்கள் விரும்பியதைச் செய்வதற்கான ஒரு சுதந்திரமான வெளியை நாம் கொடுத்தாலே போதும், அவர்கள் தாம் விரும்பிய துறைகளில் நிறையச் சாதித்து நம்மையும் பெருமை கொள்ளச் செய்வார்கள் என்பதை உணர்த்துகின்ற/உதாரணமாக இருக்கக்கூடிய ஒரு படம் Dangal .


Adi Kapyare Kootamani

ஆண்களின் ஹொஸ்டலுக்குள் ஒரு பெண் தற்செயலாக வந்துவிடுகின்றார். அவரை அங்கிருந்து எப்படி மற்றவர்க்குத் தெரியாது வெளியே கொண்டு செல்ல சில நண்பர்கள் முயற்சிக்கின்றார்கள் என்பதே இதன் கதை. . இடையில் அப்பெண்ணின் தமிழ்க்குடும்பம், அவருக்கிருக்கும் காதலனோடு சேர்ந்துதான் இந்த பெண் ஓடிவிட்டாரென அடியாட்களுடன் தேடுகின்றனர். இந்த இரண்டு சிறிய விடயங்களை வைத்து சிரிக்க சிரிக்கச் சுவாரசியமாகப் படத்தை எடுத்திருக்கின்றார்கள். யட்ஷி என்ற விடயத்தை முதலில் நகைச்சுவையாக கையாண்டு அது இருக்கா இல்லையா என இறுதியில் ஒரு மர்மத்தை எழுப்பியபடி முடிக்கின்றார்கள்.

இதில் நடிக்கும் Namitha Pramod ஐ வினீத்தின் 'ஒர்மாயுண்டே ஈ முகம்' என்ற படத்தில் நடித்தபோது, நன்றாக நடிக்கின்றார் ஆனால் எதற்கு இப்படி மிகையாக மேக்கப் போட்டிருக்கின்றார் என நினைத்திருக்கின்றேன். அந்தப்படம் 50 datesன் மலையாள தழுவலெனச் சொல்லலாம். அந்தப்பெண்ணுக்கு ஒருநாள் மட்டும் நினைவில் நின்று அடுத்தநாள் எல்லாமே மறந்துபோகும் ஞாபகமறதியை, 50 dates/கஜினி படங்களினது பெயர்களைச் சொல்லி மூலத்தை மறைக்காமல் இருப்பதைப் பாராட்டத்தான் வேண்டும்..
குணச்சித்திர /நகைச்சுவை வேடங்களில் நடிக்கும் அயூ வாகீசின் நடிப்பிற்கு நானொரு இரசிகனாகிக்கொண்டேயிருக்கின்றேன்.
------------------------------

0 comments: