கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

எனதில்லாத எனது ஊர் - ‍ யாழ்ப்பாணம்

Saturday, April 18, 2020

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போகும்போது காலை ரெயினை எடுத்திருந்தேன். நேரத்தை சிக்கனமாகப் பாவிக்கவேண்டுமாயின் இரவு பஸ்ஸெடுக்கலாம். ஆனால் இலங்கைக்கு எப்போதாவது செல்லும் எனக்கு பயணக்காட்சிகளைத் தவறவிடுவதில் விருப்பமில்லை என்பதால் சற்று நீண்டதாயினும் ரெயினைத் தேர்ந்தெடுத்தேன். கொழும்பின் நெரிசல்களைக் கொஞ்சம் தாண்டிவிட்டால் அது ஒரு அழகான காட்சியாக விரியத்தொடங்கும். சூரியன் இன்னும் உதிக்காக விடிகாலையில் பனிப்புகார் மூடிய பசும் வெளிகளுக்குள்ளால் இரெயின் ஊடறுத்துப் பாயும்போது நாமும் புத்துணர்ச்சி அடைவோம். என்ன வளம் இந்த நாட்டில் இல்லை என்கின்றமாதிரியாக சிறுகுளங்களையும், பெருமரங்களையும்,விவசாய நிலங்களையும், மகிழ்ச்சியான கிராமத்து மனிதர்களையும் கண்டடைந்து கொள்வோம்.

யாழ்ப்பாணத்தில் ஒரு கிராமத்தைப் பூர்வீகமாய்க் கொண்டவன் என்றாலும், இப்போது நான் யாழுக்கு அந்நியன். இங்கிருந்த 15 வருடங்களில் பெரும்பாலும் போரின் நிமித்தம் வெவ்வேறு கிராமங்களுக்கு அலைந்து திரிந்ததால், எந்த ஊரும் முழுதாய்த் தெரிந்ததுமில்லை. அன்றைய காலத்தைப்போல இப்போதும் யாழ் நகரம் எங்கேனும் தொலைந்துவிடுவேனோ என‌ அச்சுறுத்துவே செய்கிறது.

யாழ் சென்ற அடுத்தநாள் நண்பரொருவர் காலை உணவுக்காய் ரொலக்ஸிற்கு அழைத்துச் சென்றார். அநேகர் விரும்பும் உணவான இடியப்பம் எனக்குரியதல்ல, புட்டை வாங்கி கோழிக்கறியோடும், முட்டைப்பொரியலோடும் ஒருகை பார்த்தேன். நண்பனுக்கு வேறு வேலை இருந்ததால் என்னை யாழ் நூலகத்தில் கொண்டுபோய் அவரின் மோட்டார்சைக்கிளில் இறக்கிவிடச்சொன்னேன். நூலகத்தில் இரவல் வாங்கும் பகுதிக்குப் போய் இருக்கும் நூல்களை மேய்ந்துகொண்டிருந்தேன். குமார் மூர்த்தியின் கதைகள் 2008 அளவில் நூலகத்துக்கு வந்திருக்கின்றது. 2020 வரும்வரை மூன்றே மூன்றுபேர்தான் எடுத்திருந்தார்கள். புலம்பெயர் இலக்கியத்தின் முக்கியமான ஒருவரையே மூன்றுபேர்தான் வாசித்திருக்கின்றார்கள். யாழ்ப்பாணமும் யாழ்ப்பாணிகளும் நம்மைபோல‌ இன்னும் மாறாமல் அன்றையகாலம் போலவே இருக்கின்றார்கள் என்பதில் கொஞ்சம் நிம்மதி வந்தது.

முகநூலில் பொங்கும் போராளிகள் போலத்தான் இலக்கிய உலகும் யாழில் இருக்கின்றதென்று 'மகிழ்ந்து' கொண்டு சஞ்சிகைகள் வாசிக்கும் மறுபக்கத்துக்கு நகர்ந்தேன். அந்தப் பகுதியில் இருந்து கொண்டு யன்னலுக்குள் விரியும் காட்சிகளைப் பார்ப்பது இதமாக இருந்தது. கண்ணைத் திருப்பியபக்கம் எல்லாம் மரங்களும், யாழ் நகரத்தின் நெரிசல்/சத்தம் தவிர்த்து ஏதோ தூரத்தில் தள்ளிவைத்தாற்போல அவ்வளவு அமைதியாகவும் இருந்தது பிடித்திருந்தது.

ன்றைய காலங்களில் ஊருக்கொன்றாய் அலைந்தபோதும், நூலகத்திற்குப் போகும் ஆசையை விட்டதில்லை. தொடக்கத்தில் தெல்லிப்பழை நூலகம், பிறகு அது இடம்பெயர்ந்து அளவெட்டி மகாஜனசபைக்கு அருகில் இயங்கியபோது அங்கும் தேடிச் சென்றிருக்கின்றேன். பின்னர் இடம்பெயர்ந்து வரியப்புலப் பகுதியில் இருந்தபோது சுன்னாகம் பொதுநூலகம் என்னை வாசிப்பில் உந்தித்தள்ளியதில் பெரும் பங்காற்றியிருக்கிறது. அதுதான் வாண்டுமாமாவிலிருந்து, கே.டானியல் வரை, எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இன்று அவ்வாறான இடம்பெயர்வுகள், போர்ச் சூழல் இல்லாதபோதும் ஏன் ஒரு புதிய தலைமுறை வாசிப்பின் பக்கம் அவ்வளவு தீவிரமாய் வரவில்லை என யோசிப்பது சுவாரசியமாக இருக்கும்.

ஒருகாலத்தில் நூல்கள் பரவலாகக் கிடைப்பதில்லை, விலைகொடுத்து வாங்குவது கஷ்டம் என்பது காரணமாகச் சொல்லப்பட்டாலும், இன்று அநேகமாய் எல்லாப் புத்தகங்களுமே பிடிஎப்வ் வடிவில் பரவலாகப் பகிரப்பட்டும் வருகின்றது. இலவசமாகக் கிடைக்கும் இவற்றை வாசித்து எண்ணிக்கை கூடியதாகத் தெரியவில்லை.

இப்படியாக யாழ் நூலகத்தின் யன்னலுக்குள்ளால் பார்த்து யோசித்துக் கொண்டிருந்தபோது (வடகோவை) வரத்ராஜன், யாழ் முற்றவெளியில் நிற்கின்றேன், அங்கே வா என்று அழைத்தார். இடையில் நடந்துபோகும் வழியில் கன்ரீனில் பெண்கள் சிலர் கலகலவென்று சிரித்தபடி இருக்க, இதற்காகவே தண்ணீர்த்தாகம் வந்ததுபோல,  அங்கேபோய் ஒரு தண்ணீர்ப்போத்தலை வாங்கி ஆறுதலாக 'இரசித்து' குடித்துவிட்டு முற்றவெளி நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

வடகோவையாரை முதன்முதலாக நேரில் சந்திக்கின்றேன் என்றாலும், அது ஒரு பெரிதான விடயமாக எமக்குத் தெரியவில்லை. பின்னர் அலெக்ஸ் பரந்தாமனும், சி.ரமேஷும் இணைந்துகொள்ள, கண்காட்சிக்கென அமைத்திருந்த‌ லிங்கன்பாரில் போய் கதைத்துக்கொண்டிருந்தோம். ஆனால் நிம்மதியாக நம்மைப் பேசவிடாது, அங்கே கட்டிவைத்திருந்த ஒலிபெருக்கியில் மூச்சுவிடாத ஒரு பெண்ணும், ஆணும் மாறி மாறி அலறிக்கொண்டிருந்தார்கள். பக்கத்தில் கிடந்த விறகுக்கட்டையால் அவர்களுக்கு ஒன்று போட்டால் என்ன என்று தோன்றியது. பின்னர்தான் இது ஒரு வியாபாரக் கண்காட்சி, அங்கே கூவிக்கூவி விற்காமல் வேறெதைச் செய்வார்கள் என ஆறுதற்படுத்திக்கொண்டு நாமெல்லோரும் வெளியில் வர சத்தியனும் இணைந்துகொண்டார்.

விடுதியில் தங்கிநின்ற என்னை, வடகோவையார் தன்னோடு ஏழாலையில் வந்து தங்கேன் எனக் கேட்டார். நண்பரொவனும் தன் வீட்டில் தங்க ஏற்பாடு செய்ததால், நண்பனுக்கு அழைத்துச் சொல்லிவிட்டு, வடகோவையாரில் மோட்டார் இரதத்தில் ஏறிக்கொண்டேன். ஏழாலையில் அவரின் வீடு, நான் யாழை விட்டு என் பதின்மத்தில் நீங்கும்போது எப்படி இருந்ததோ அப்படி அது இருந்தது. சாறம் கட்டும் வழக்கமில்லாததால், வடகோவையாரிடம் சாறமொன்றை கடன்வாங்கி, ஆசைதீர கிணற்றடியில் நின்று அள்ளிக்குளித்தேன்.

டகோவையாரின் கதைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாய் வாசித்திருக்கின்றேனே தவிர அவரின் தொகுப்பு என் கைக்குக் கிடைத்ததில்லை என்பதால் எனக்கு ஒரு பிரதி அன்பளிப்பாய்த் தந்தார். இளமையில் எழுதத் தொடங்கிவிட்டு, குடும்பம்/வேலை நிமித்தம் 30 ஆண்டுகளாக எழுதாமல் இருந்தவர்/இருப்பவர். என்னோடும், ரமேஷோடும், அவரும் இணையாக எல்லா விடயங்களையும் கதைக்க, 'நீங்கள் ஒரு இலக்கிய மார்க்கண்டேயர்'தான் என நான் அன்பு பாராட்ட அவருக்கு மகிழ்ச்சி. அன்றிரவு ஒரு தோழியின் வீட்டில் எனக்கு இரவுணவு ஏற்பாடாக இருந்தது. அங்கே அழைத்துச் சென்று என்னை இறக்கிவிட்டிருந்தார், ஆனால் இடையில் மது விற்கும் கடையைக் கண்டபோதுமட்டும் விசர் நாய் கடிக்க வருவதுபோல‌, விரைவாக ஏன் மோட்டார இரதத்தை விரட்டினார் என்பது மட்டும் விளங்கவேயில்லை.

இரவு 9 மணியிலிருந்து ரமேஷ், நான், அவரென இலக்கியம் பேசிக்கொண்டிருந்தோம். ரமேஷ் ஆழமாய் வாசிக்கும் ஒருவர், எனவே தீவிரமாக இலக்கியம் குறித்து கருத்துக்களை வைத்திருப்பவர்.  இரண்டு இலக்கியவாதிகள் கதைக்க நான் வடகோவையாரின் செல்லப்பிராணிகளான நாச்சியாரோடும், சிங்காரியோடும், எனக்காய் புதிதாய்க் கொண்டு வந்திறக்கிய 'லயனோடும்' சேர்ந்து நான் இவர்களை வாய் பார்த்துக்கொண்டிருந்தேன்.

இதற்கிடையில் வயல்வெளியில் விரிந்திருந்த அவரது பிள்ளையார் கோயிலைக் கூட்டிக்கொண்டு போய் காட்டியிருந்தார். அங்கே அவரின் பிள்ளைகளின் படிப்புச் சாதனைகளின் நினைவுக்காய் வைத்த‌ மரங்களையும் காட்டினார். தொலைவில் நாச்சிமார் கோயில் இருக்கின்றதென இன்னொரு கோயிலைக் காட்டினார். இந்தக் கேணியடியில் மஞ்சள் தோய்த்துக் குளிக்கும் குமரிகள் இப்போதும் வருகின்றார்களா எனவும் கேட்டேன்/ அல்லது கேட்க மறந்தேன்.

பின்னர் ஆறுதலாக அவரின் 'நிலவு குளிர்ச்சியாக இல்லை' தொகுப்பில் இருந்த கதைகளை வாசித்தபோது இந்த இடங்களை எவ்வளவு அற்புதமாக எழுத்தில் கொண்டுவந்திருக்கின்றார் என்பது விளங்கியது. இந்தத் தொகுப்பில் இருப்பவை எல்லாம் 80களில் எழுதப்பட்டவை. தொகுப்பைக் கூட அந்தக் காலத்து எளிய நடையில் எழுதப்பட்டிருக்குமென கொஞ்சம் 'அசட்டை'யாக வாசிக்கத் தொடங்கிய என்னை, அவரின் ஒவ்வொரு கதைகளும் (அரைவாசிதான் இதுவரை வாசித்துமுடித்தேன்) உள்ளிழுத்துக்கொண்டன‌. வடகோவையாருக்கு இயல்பாகவே மரங்களின் மீதும், விலங்குகளின் மீதும், பறவைகளின் மீதும் இருக்கும் மோகத்தை அவரின் கதைகளில் எளிதாகக் கண்டுகொள்ளலாம்.

ன்றைய நவீன/பின்நவீனத்துவ‌ கதைசொல்லிகளான நாங்கள் இயற்கையை விட்டு எவ்வளவு தொலைவுக்கு வந்து கதைகளைச் சொல்கின்றோம் என்பதைப் பார்க்க இந்தக் கதைகள் நல்ல உதாரணங்களாக இருக்கின்றன. அரபு பாலைவனத்தில் பிழைப்புக்காய் சென்ற கதைசொல்லி, பேச எதுவுமற்ற நிலையில் பிள்ளையார் எறும்புகளை யாழ்ப்பாணத்தைப் போல அங்கும் கண்டும் அதனோடு நெருக்கம் கொண்டு தன் நிலம்பெயர்ந்த துயர் ஆற்றும் நுட்பமான  கதைகளை எழுதியிருக்கின்றார். 'மழைப் பஞ்சாங்கமும்', 'நேர்முக வர்ணனை'யும், 'மொழிபெயர்ப்பு'ம் இன்றும் தன் உயிர்ப்பை விடாது புதிய வாசகருடன் உரையாடத் தயாராகவே இருக்கின்றது. 80களிலேயே ஆதிக்கச் சாதிகளின் சாதித்தடிப்பை சுட்டிக்காட்டவும், நக்கலடிக்கவும் தயங்காத ஒரு படைப்பாளியைக் கண்டுகொள்வது மகிழ்ச்சியாக இருந்தது.

எவரெவரோ எதையெதையோ எழுதி எங்களைச் சோர்வடையச் செய்கையில், இந்த மனுசன் 30 வருடங்கள் உறங்குநிலைக்குப் போயிருக்கத்தேவையில்லை என்றே எனக்குத் தோன்றியது. ஆனால் ஏற்கனவே பல இடங்களில் குறிப்பிட்டதுபோல ஈழ இலக்கியத்துக்கு என்று ஒரு தனித்துவம் இருக்கின்றது. நம்மவர்களில் பலர் தொடர்ச்சியாக அதிகம் எழுதாவிட்டாலும், அவர்களை ஒன்றிரண்டு தொகுப்புக்களோடு என்றாலும் என்றைக்கு நினைவுகூரும் வழக்கம் நம்மிடையே இருக்கிறது என்று. அந்தவகையில் வடகோவையாரின் கதை சொல்லும் பாணி எனக்கு அப்படிப் பிடித்திருந்தது. குமார் மூர்த்தியையே அவ்வளவு வாசிக்காத யாழ் சமூகம், வடகோவையாரை எவ்வளவு வாசித்திருக்குமெனத் தெரியாவிட்டாலும், புதிய தலைமுறை இவரை வாசிப்பதன் மூலம் தமது கதைசொல்லலின் பலவீனங்களைக் களைந்துகொள்ள முயலலாம்.

அடுத்தநாள் காலையில் நிகழ்ந்த 'நினைவில் உதிரும் வர்ணங்கள்' அறிமுக நிகழ்வுக்கு ஏழாலையிலிருந்து நல்லூருக்குப் புறப்பட்டோம். செல்லும் வழியில் சட்டநாதனைச் சந்திப்போமா எனக் கேட்டார். நிகழ்வுக்கு இன்னும் அரைமணித்தியாலம் இருக்கும்போது இப்போது சாத்தியப்படாது அடுத்தமுறை சந்திக்கலாமென வந்துவிட்டேன். நிகழ்வு முடிந்து இரவில் திரும்ப கொழும்புக்கு பஸ் பயணம் இருந்தது. இடையில் கொஞ்ச மணித்தியாலங்கள் இருக்கையில் இளைப்பாறுவதை விடுத்து நண்பன் சங்கரோடு 'சைக்கோ' பார்ப்போமெனப் புறப்ப்பட்டேன். சைக்கோ காட்சி நாம் சென்ற நேரம் இருக்கவில்லை. வீட்டிற்குப் போனாலும் அங்கே தூங்கத்தானே போகின்றேன், வாருங்கள் 'தர்பார்' பார்ப்போமெனப் போய் படத்தின் இடைவெளியில் முன்னுக்கும் பின்னுமென நிம்மதியாக நித்திரை கொண்டேன்.

கொழும்பிற்கு பஸ்ஸில் போகும்போது, ஆமிக்காரர் கிளிநொச்சியில் வைத்து இறக்கி பயணப்பொதிகளைப் பரிசோதித்து இலங்கை, தமிழர்களாகிய‌ எமக்குரிய நாடில்லை என்பதை மீண்டும் நினைவுபடுத்தினார்கள். ஒவ்வொரு முறையும் யாழ் போகும்போது கொஞ்ச நேரமாவது சிதைவடைந்துகிடக்கும் எமது வீட்டைப் பார்க்கப் போவேன். இந்தமுறை அங்கும் போகாது யாழ்ப்பாணத்துக்கு முற்றாக ஓர் அந்நியனானேன்.

...................................................

(Feb 07, 2020)

0 comments: