-தொ.பத்தினாதனின் 'நாளையும் நாளையே' என்ற தொகுப்பை முன்வைத்து-


இலங்கையில் யுத்தம் முடிந்து 15 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. போரின் நிமித்தம் அமைக்கப்பட்ட அகதி முகாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றப்பட்டிருக்கின்றன. அதே போன்று போரின் நிமித்தம் புலம்பெயர்ந்த நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றவர்களில் பெரும்பான்மையானோருக்கு அந்த நாடுகள் தமது குடியுரிமையையோ/நிரந்தர வசிப்பிடத்தையோ கொடுத்திருக்கின்றனது. ஆனால் உலகில் மிகப் பெரும் ஜனநாயக நாடு எனச் சொல்லப்படுகின்ற இந்தியாவில், இலங்கையிலிருந்து அகதிகளாகப் புலம்பெயர்ந்தவர்கள் இன்னும் அகதிகள் என்ற அடையாளத்தோடோ இருக்கின்றார்கள். இப்படி அகதியாக அவர்கள் இருப்பது ஐந்தோ, பத்தோ ஆண்டுகள் அல்ல. கிட்டத்தட்ட 20/30 வருடங்களாக அகதிகளாக, அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட அகதி முகாங்களிலே விளிம்புநிலை மனிதர்களாய்த் தங்க வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
 
அந்த அகதி முகாங்களில் அனைத்துத் தரப்பாலும் கைவிடப்பட்ட மக்களின் வாழ்க்கைப்பாடுகளைப் பதிவு செய்பவர்களில் முதன்மையான ஒருவராக தொ.பத்தினாதன் இருக்கின்றார். பத்தினாதன் அவரது 16வயதில், 1990இல் ஓர் அகதியாக இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்தவர். கிட்டத்தட்ட இலங்கையில் வாழ்ந்ததை விட இரண்டு மடங்கு இந்தியாவில் வாழ்ந்திருந்தபோதும், அவர் அங்கே நிரந்தரமான அகதியாகவே வாழவேண்டிய துர்ப்பாக்கியமே நிகழ்ந்திருக்கின்றது.

பத்தினாதன் ஏற்கனவே 'போரின் மறுபக்கம்' என்கின்ற தன்வரலாற்று நூலையும், 'அந்தரம்' என்கின்ற நாவலையும் எழுதியிருக்கின்றார். இப்போது அவர் கடந்த பத்தாண்டுகளாக எழுதிய 12 கதைகளை உள்ளடக்கி 'நாளையும் நாளையே' என்கின்ற சிறுகதைத் தொகுப்பை  வெளியிட்டிருக்கின்றார்.

*

பத்தினாதன் இதுவரை எழுதியவற்றை வாசித்தவர்களுக்கு, இது அவர் ஏற்கனவே எழுதியவற்றவைகளின் ஒரு தொடர்ச்சியென எளிதில் அடையாளங் கண்டுகொள்ள முடியும். இந்தக் கதைகளில் பெரும்பாலானவை அகதி முகாங்களில் நடக்கின்றன அல்லது அகதி என்கின்ற அடையாளத்தோடு புறச்சூழலில் நடக்கின்றவையாக இருக்கின்றன.

 'அகதி' என்கின்ற கதை, நட்சத்திர விடுதியில் திருமணக் கொண்டாட்டங்களில் உதவியாளராக வேலை செய்கின்ற ஒருவனின் வாழ்க்கைப்பாட்டைச் சொல்கிறதாக நீள்கின்றது. இந்தக் கதையில் வருகின்றவனுக்கு ஏற்கனவே நிறைய யோசனைகள் பீறிட்டுக் கிளம்பி, தனக்கு மனநலப் பிரச்சினை இருக்கின்றது என்று நம்புகின்றான். அதற்காக மருத்துவரைக் கூடப் பார்க்கின்றான்.

அப்படியான உளவியல் சிக்கலோடு நட்சத்திர விடுதியில் வேலை பார்க்கும்போது அங்கே ஏற்படுகின்ற அனுபவங்களை அவன் விபரிக்கின்றான். இத்தனைக்கு நடுவிலும் இலங்கையிலிருந்து வந்த அகதி  தானென்கின்ற அடையாளத்தை மறைத்தே அங்கே வேலை பார்க்கின்றான். இறுதியில் ஒரு சிக்கல் வந்து அவன் வெஞ்சினத்தில் வெடித்துச் சிதறும்போது, அவனை 'நீ மதுரக்காரனா?' என்று இன்னொருவன் அணைத்தலுடன் அந்த கோப நெருப்பு அணைந்து ஓர் அமைதி அவனுக்குக் கிடைத்து விடுகின்றது.

இதில் முக்கியமான கதைகளில் ஒன்றாக 'நோஞ்சானை'ச் சொல்லலாம். இக்கதையில் ஒரு நாடகம் நடக்கின்றது. அதை ஒருவர் எப்படி இலங்கையில் யுத்தம் இருந்தது, தமிழகத்தில் எப்படி அகதி வாழ்க்கை இருக்கின்றது என்று நடித்துக் காட்டுகின்றார். அப்படி நடித்துக் காட்டுபவரே சட்டென்று முழுநாடகத்தையும் முடிக்காமல் அமைதியாக ஒதுங்கி ஒளித்துக் கொள்கிறார். அதற்கு பார்வையாளர் மத்தியில் வாட்டசாட்டமாக ஒரு கியூ பிராஞ்ச் அதிகாரி உட்கார்ந்திருந்தமையே காரணம். இந்த உண்மையான காரணத்தை இதில் நடித்துக் கொண்டிருந்த பெரியசாமிக்கும், இந்த நாடகத்தை நிகழ்த்த இடம் கொடுத்த பேராசிரியர் பிரபாகருக்கு மட்டுமே தெரியும் என்று கதை முடியும். ஆக கலை இலக்கியங்களில் கூட முழுமையான சுதந்திரமாகப் பேச, தமிழகத்தில் இலங்கை அகதிகளுக்கு இடமில்லை என்பதை அந்தக் கதை சொல்லாமல் சொல்லிச் செல்வதை நாம் அறிந்து கொள்கிறோம்.

அதுபோல 'தேசியகீதம்' கதை, இந்திய ஜனாதிபதி மதுரைக்கு வருவதையிட்டு அகதிகள் அனைவரையும் அகதி முகாங்களுக்குள் அடங்கியிருக்கும்படி கட்டளையிடப்படுகின்றது. இந்த 'ஊரடங்கில்' பாடசாலைக்குப் போகும் குழந்தைகளுக்குக் கூட விதிவிலக்கு கிடைப்பதில்லை. அவர்களும் பாடசாலைக்குப் போகாமல் முகாங்களுக்குள் அடைந்து கிடக்கின்றார்கள். அப்படி இரண்டு நாள் பாடசாலைக்குப் போகாத குயின்ரனை, அவனது புதிய ஆசிரியர் ஏன் வரவில்லை என்று கேட்டு அதட்டுகிறார். அவனுக்கு அனைவர் முன்னிலையிலும் தானொரு இலங்கை அகதி, எங்களை இவ்வாறான நாட்களில் அகதி முகாமை விட்டு வெளியே விடுவதில்லை என்று சொல்லத் தயக்கமாக இருக்கின்றது. ஆனால் அவனோடு பத்தாம் வகுப்பு கூடப்படிக்கும் ரோஸ்மேரிக்கு இந்தப் பிரச்சினையில்லை. அவள் நெஞ்சுரத்துடன் 'நாங்கள் அகதி முகாமில் இருப்பவர்கள். இவ்வாறு முக்கிய அரசியல்வாதிகள் இங்கு வரும்போது எமக்கு பாடசாலைக்கு வர அனுமதியில்லை' எனச் சொல்லி குயின்ரனைக் காப்பாற்றுகிறாள்.

பாடசாலை அசெம்பிளியில் தேசியகீதம் பாடப்படுகின்றபோது, அனைத்து மாணவர்களும் சேர்ந்து பாடும்போது, குயின்ரன் அதைப் பாடவில்லை என்பதைக் கண்டுபிடித்து ஏன் என அந்த ஆசிரியர் கேட்கிறார். அவன் மெளனமாக இருக்கின்றான். ஆனால் ஆசிரியர் உறுக்கிக் கேட்ட்கும்போது குயின்ரன் கேட்கிறான், 'நான் ஏன் தேசிய கீதம் பாட வேண்டும்?'. அத்துடன் இந்தக் கதை, அவனை நோக்கி ஆசிரியரின் தண்டனை அவனுக்குப் பிடிக்காத பல்லியைப் போல ஆவேசமாக நாக்கைச் சுழற்றியபடி வருவதுடன் முடிகின்றது. ஓர் அகதியாக/நாடற்றவனாக குயின்ரன் இருக்கும்போது, அவனுக்குரிய தேசம் எது, தேசிய கீதம் எதுவென்பது அவ்வளவு அழுத்தமாக இந்தக் கதையினூடாகச் சொல்லப்படுகின்றது.

*

பத்தினாதனின் கதைகளினூடாக பல்வேறு விதமான அகதி முகாம் வீடுகளைப் பார்க்கின்றோம். எல்லா வீடுகளும் மழையின்போது அடிக்கடி  ஒழுகுகின்றன, கதவுகள் உடைந்து சாட்டுக்கு கதவுகள் போல காட்சியளிக்கின்றன, சேலையை கட்டி அறைகளாக்கி மனிதர்கள் எவ்வித அந்தரங்கமுமில்லாது படுத்துறங்குகின்றார்கள். அப்படிப்பட்ட அகதி முகாமில் தன்பாட்டில் வளர்ந்து வரும் காய்க்காத புடலங்காய் கொடியால் பாம்பு வந்துவிட்டதென்று, இனி புடலங்காய் செடியைக் கூட அகதிமுகாமில் வளர்க்கக் கூடாதென்று சட்டமொன்று கொண்டுவரப்படுவதை 'புடலங்காய்' கதை சொல்கின்றது.

அதுபோலவே அகதிமுகாமில் வாழும் பெண்கள் மீது நிகழும் பாலியல் துஷ்பிரயோகத்தை 'நாளையும் நாளேயே' சொல்கின்றது. அகதி முகாமில் கொடுக்கப்படும் சம்பளக் காசின் நிமித்தம் நடந்த பாலியல் சேட்டையைத் தனது கணவரிடம் சொன்னாலும், அதற்கு எதிராகக் குரல் கொடுக்க முடியாத அவல நிலையே அந்தக் கணவர்க்கு இருக்கின்றது. ஒருகட்டத்தில் இப்படியான துஷ்பிரயோகங்கள் தாளாது, இங்கே இருக்கவேண்டாம், இலங்கைக்குத் திரும்பப் போகப் பதிவு செய்துவிடுங்கள் என்று அந்தப் பெண் மன்றாடுகின்றார். எனினும் அடுத்தநாள் எதுவுமே நடக்காதமாதிரி கணவனான கணேஷ் பெயிண்ட் டப்பாவுடன் வேலைக்கு நடந்துகொண்டிருப்பதாக இந்த கதை அவ்வளவு அவலச்சுவையுடன் முடிவதை வாசகராக நாம் கையாலாகாத நிலையில் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

'பசிப்பாடல்' என்பது ஒரு அகதியின் ஒருநாள் பட்டினியை அவ்வளவு நெகிழ்ச்சியுடன் விபரிக்கின்றதென்றால், இன்னொரு கதையான   'அ(க)திகாரம்' கதை, மருத்துவமனையில் நீண்டநாள் சிகிச்சை பெறும் மகனின் நிலையை ஆவணங்களாகக் காட்டியும் ஏற்றுக்கொள்ளாது, அகதிகளுக்கான உதவிப்பணத்தைக் கொடுக்காத அதிகாரியின் அதிகாரத்தால் நொந்த ஓர் அகதி மின்சாரக் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்கின்ற துயரக்கதையைச் சொல்கின்றது. ஒரு மனிதன் உயிரைத் தக்க வைப்பதற்காக நாடு கடந்து அகதியாக வந்து, அந்த இன்னொரு நாட்டில் கொடுக்கப்படும் நிர்ப்பந்தத்தால் தனது உயிரை மாய்த்துக் கொள்வது என்பது எவ்வளவு அவலமானது.

இத்தொகுப்பிலிருக்கும் துயரமும், கொந்தளிப்புமான கதைகளை முன்வைத்து, அண்மையில் வெளிவந்த நூல்களில் கவனிக்கத்தக்க சிறுகதைத் தொகுப்பென்று இதை எளிதாகச் சொல்லிவிட முடியும். மேலும் அகதிகளின் கதைகளை வைத்து அனுதாபமோ கழிவிரக்கவோ வேண்டி நிற்காமல், அதை புனைவின் இயல்பான மொழியில் பத்தினாதன் சொல்வதைக் கவனித்தாக வேண்டும். இதில் 'பயம்' மற்றும் 'வடக்கத்தையான்' பத்தினாதனின் வழமையான மொழியை விட்டு விலகி நிற்பதால் அவற்றைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் கூட, அவரின் ஏனைய பத்துக் கதைகள் முக்கியமானவை என உறுதியாகச் சொல்ல முடியும்.

பத்தினாதனின் எழுத்துக்களை இதுவரை வாசிக்காதவர்களாயின் இந்தத் தொகுப்பு பத்தினாதனை வாசிப்பதற்கான நல்லதொரு தொடக்கமாக அமையும். இன்னுமொரு முக்கிய விடயம், ஈழத்தமிழர்கள் மீது அக்கறையுள்ளவர்கள் எனச் சொல்லிக்கொள்ளும் தமிழகத்தவர்கள், ஒருபோதும் தவறவிடக்கூடாத எழுத்துக்கள் இந்த நூலும், பத்தினாதனுடைய ஏற்கனவே வெளிவந்த ஏனைய தொகுப்புக்களும் எனச் சொல்வேன்.

பத்தினாதனின் அகதி முகாம் கதைகளை எங்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை எனில், 'என் கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தினை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம்' என்று மாண்டோ சொன்னதை நமக்கு நாமே ஞாபகப்படுத்திக் கொள்வதே சரியான வழியாக இருக்கும்..

***

(நன்றி: 'கலைமுகம்' - 81)