கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 152

Tuesday, June 23, 2026

 

இன்று ஓரு சுவாரசியமான செய்தியை வாசித்தேன்.

டிரம்பின் செல்வாக்கால் கனடாவில் மத்திய மாகாணங்களில் ஒன்றான அல்பேர்ட்டா கனடாவில்  இருந்து பிரிந்து போவதற்கான 'தில்லுமுல்லு'களைச் செய்து கொண்டிருக்கின்றது. இன்னொருவகையில் கனடாவில் இருந்து பிரிந்து அமெரிக்காவின் ஒரு மாநிலமாக (annex) மாறுவது அவர்களின் விருப்பு எனச் சொல்லலாம். ஏற்கனவே டிரம்ப் கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக அறிவித்து அவ்வப்போது அதகளம் செய்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே.

இந்த விடயத்தை வைத்து, எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம் கணக்காய் கனடாவில் வசிக்காத, பலர் முகநூல் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் ஊடாகப் பணம் சம்பாதிக்கின்றனர் எனச் சொல்கின்றார்கள். அதாவது இந்த தனிநாட்டுப் பிரச்சினையில் முன்னணியில் நிற்கும் சமூகவலைத்தளங்களில் இந்தோனேசியா, இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் இருப்பவர்கள் தங்களைக் கனடியர்களாகக் காட்டிக் கொண்டு இந்த 'எரிகிற விடயங்களில்' தாங்களும் பங்கேற்பதாகச் சொல்லி பணம் சம்பாதிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள்.

Uploaded Image


இந்தச் செய்தியில் இந்தோனேசியாவில் நூடில்ஸ் விற்கின்ற ஒரு பெண்மணி, கனடாவில் இருப்பதாகவும், அல்பேர்டாவின் பிரிவினைக்காக தெருவில் நின்று பிரச்சாரம் செய்தபோது தனக்கு கல்லெறியப்பட்டதாகவும் அல்பேர்டாவில் நடந்த  ஓர் சம்பவத்தை இன்னும் தீவிரமாக்கி சமூகவலைத்தளத்தில் போட, அவருக்கு ஆயிரக்கணக்கில் 'லைக்கிட்டு' ஆதரவளிக்கின்றனர் என்பதை ஆதாரத்தோடு இந்தச் செய்தி நிரூபிக்கின்றது.

கனடாவில், முகநூல் பக்கங்களில் செய்தி நிறுவங்களின் செய்திகளைப் பகிர முடியாத தடை இருப்பதால், இங்கே அந்தச் செய்தியைப் பகிர முடியவில்லை. இதன் முழுச்செய்தி அறிய விரும்புவர்கள் 'Facebook is paying people overseas promoting Alberta separatism' என்ற தலைப்பில் கூகிளிட்டுத் தேடினால் அதை வாசிக்கலாம். அதன் உபதலைப்பு இது CBC uncovers 14 accounts from India, Pakistan, Indonesia posting on popular Alberta separatist groups.

ஆக, இன்று செய்திகளின் உண்மைத்தன்மை என்பதே கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது என்பதோடு, ஒரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினையை உலகில் எங்கோ தொலைவில் இருப்பவர் கூட தீர்மானிக்க முடியும் என்ற நிலைக்கு நாம் வந்துவிட்டோம். இது ஒரு சாதாரண மனிதரைப் பற்றிய செய்தி. இவர்களைப் போன்றோர் முகநூல் கொடுக்கும் சிறுதொகைப் பணத்துக்காக இந்த விடயங்களைச் செய்கின்றார்கள். ஆகையால் இஃதொரு பெரிய விடயமில்லை.

ஆனால் இப்படி ஒரு சாதாரண மனிதரே ஒரு செய்தியின் narrativeஐ மாற்றமுடியுமென்றால், அரசுக்கள்/பெருநிறுவனங்கள் உள்ளிட்ட அதிகாரம் மிகுந்தவர்கள் எதையெல்லாம் சமகாலத்தில் செய்து கொண்டிருப்பார்கள் என்று நினைக்கத்தான் அதிக அச்சம் வருகின்றது.

***

 

இருத்தலின் மீது கவியும் இன்மைகள் - ரதன்

Tuesday, June 16, 2026

 

பொதுவாகவே நூல் விமர்சனங்கள்-அறிமுகங்கள் மிக முக்கியமானவை. இவை படைப்பாளிக்கும் நுகர்வோருக்கும் (வாசகர்-வாசிப்பவர்) இடையில் ஒரு நெருக்கத்தை உண்டாக்குகின்றன. நுகர்வோரின் கருத்துக்களை மீள் பரிசீலிக்கின்றன. நுகர்வோருக்கான தேடலை அதிகரிக்கின்றது. அதே சமயம் விமர்சகரின் அனுபவங்கள், அறிந்தவை, கருத்தியல் என்பன விமர்சனத்தினூடாக வெளிப்படுகின்றன. இது நுகர்வோருக்கு விமர்சகர்களை விமர்சன கண்ணோட்டத்துடன் பார்ப்பதற்கும் வழிவகுக்கின்றது.

இளங்கோவின் “இருத்தலின் மீது கவியும் இன்மைகள்” நூலையும் அறிமுகப்படுத்தவதின் அவசியம் உள்ளது. எழுநாவின் வெளியீடான இந் நூலை எழுநா எனக்கனுப்பிய நூல்களுள் ஒன்றாகவே பெற்றுக்கொண்டேன்.

Uploaded Image

இளங்கோ கடந்த பல வருடங்களாக எழுதிவருகின்றார். இவர் டி.செ தமிழன் என்ற பெயரிலும் அறியப்படுகின்றார். இவர் சீரிய இலக்கியம், நூல் விமர்சனங்கள், தீவிர சினிமா, நாடக விமர்சனம், அரசியல் ஆய்வு, மொழிபெயர்ப்பு போன்றவற்றுடன் கவிதைகள், சிறுகதைகள், நாவல்களும் எழுதியுள்ளார். இவற்றுடன் இவர் ஒரு பயணி. பல நாடுகளுக்கு பிரதேசங்களுக்கு பயணங்களை மேற்கொண்டு பதிவு செய்கின்றார்.

தான் பார்ப்பதை, கேற்பதை, வாசிப்பதனை, நுகர்வதனை தனது எழுத்துக்களில் கொண்டுவருகின்றார். இவரது மனச்சாட்சியின் ஒரு குரலாக இவர் எழுத்துக்கள ஒளிர்கின்றன, ஒலிக்கின்றன. இதுவரை சுமார் 500 ஆக்கங்களுக்கு மேலாக இணையம், இலக்கிய இதழ்கள், பத்திரிகைகள், சஞ்சிகைள் போன்றவற்றில் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.

இளங்கோ பல நூல்களின் விமர்சனங்களை பதிவு செய்துள்ளார். 2018ம் ஆண்டு அம்ருதாவில் வெளிவந்த பிள்ளையானின் “வேட்கை” நூலைப் பற்றிய விமர்சனம் இவரது நூல் விமர்சனங்களுள் முக்கியமானது. அதிலிருந்து சில பகுதிகள் இவை:

“முஸ்லீம் மக்கள் மீது தான் பரிவுள்ளவர் என்றாலும் அதை மீறி கிழக்கு மாகாணத்து தமிழ் மக்கள் மீது அக்கறை என்று சொல்லிக்கொண்டு முஸ்லீம்கள் மீது ஒருவகையான வெறுப்பு உமிழப்படுகின்றது”.
நூலில் இலங்கை அரசாங்கம் மீது ஒரு துளி விமர்சனமும் இல்லை என்றும் இளங்கோ குறிப்பிட்டுள்ளார். போராளியாகவிருந்தவர் அரசியல் தளத்துக்கு வரும் பொழுது தன்னைப் பற்றிய சுய விமர்சனம் அவசியம் எனச் சுட்டிக்காட்டும் இளங்கோ, தனது இளமையை தான் நம்பிய கொள்கைக்காக இழந்தவர்கள் அரசியல் செய்வதற்கு பல மடங்கு நியாயங்கள் உள்ளன எனவும் கூறியுள்ளார். (முழுமையான கட்டுரையை இளங்கோ சமூகவலைத் தளத்தில் வெளியிடுவார் என நம்புகின்றேன் - இது கருத்துபிறழ்வுகளை தவிர்க்க உதவும்). இது மிக நேர்மையான ஆழமான விமர்சனம் - வேட்கை பற்றிய விமர்சனம். பலர் எனது கருத்துடன் முரண்படலாம்.

யூன் 2026 அம்ருதா இதழில் இளங்கோ எழுதியுள்ள டி.தருமராஜ்ன் “ஜல்லிக்கட்டு” நூல் விமர்சனமும் இளங்கோவின் நூல் விமர்சனங்களுள் முக்கியமானது.

இருத்தலின் மீது கவியும் இன்மைகள் என்ற கவித்துவ தலைப்பைக் கொண்ட நூலில் 13 நூல்களைப் பற்றிய விமர்சனம் பதிவாகியுள்ளது. இந்த 13 நூல்களின் முக்கியத்துவம், நூலாசரியர் தவறவிட்ட விடயங்கள், அவரது பலவீனம் என பன்முகத் தன்மையுடன் விமர்னத்தை இளங்கோ முன்வைக்கின்றார். இந் நூலில் உள்ள அனைத்து நூல்களையும் வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. எனினும் இளங்கோவின் விமர்சனங்களை நுகர்ந்த பின்னர் மீண்டும் ஒரு தடவை நூல்களை முழுமையாகவோ பகுதியாகவோ வாசிக்க வேண்;டும் என்ற அவசியம் எழுந்துள்ளது.

நூலின் அட்டை இளங்கோ சிறிய வயதில் வாழந்த வீட்டின் படம். நூலின் உள்ளிருக்கையை எதிரொலிக்கின்றது. நூலின் சமர்ப்பணம் என்பது படையல் என்ற தலைப்பில் பின்வருமாறு உள்ளது “ ஈழ யுத்தத்தில் அநியாமாக பலியான அனைவர்க்கும்”: என்றுள்ளது. இளங்கோவின் கருத்துடன் முரண்பட்டாலும், அவர் கூறிய கருத்தின் பின்னால் உள்ள விடயம் ஒரு உரையாடல் வெளியை ஏற்படுத்தியுள்ளது. 

எந்தவொரு போரும் ஒரு காரணத்துடனேயே தொடங்கப்படும். போர் வெற்றி பெற்றால் பலியானவர்களை “தேசத்துக்காக” என்று கூறுகின்றோம். தோல்வியடைந்தால் அநியாமாக என்கின்றோம்.

நிரோமி டி சொய்சாவின் தமிழ்ப் பெண்புலி என்ற ஆங்கில நூலின் விமர்சனத்தில் தமிழ்ப் பெண்புலி நூலின் கடைசி அத்தியாயம் விடுதலைப் புலி ஆதரவாளர்களை கோபப்படுத்தும் என்று எழுதும் இளங்கோ, புலி ஆதரவாளர்களை எரிச்சல்படுத்தும் என்கின்றார். “போராட்டத்தின் பெயரால் எல்லாச் சுமைகளையும் சுமந்த மக்கள் என்ற மூன்றாவது தரப்பும் இருக்கின்றது” அத்தரப்பைப் பற்றியே நாமின்றி நிறைய கவலைப்படவேண்டியிருக்கின்றது. அந்த அக்கறை இந்த நூலை எழுதிய நிரோமியிடம் ஏதோ ஒரு வகையில் இருக்கின்றது என இளங்கோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தீவிரவாதிகளுடன் தேநீர் நேரம் என்ற மார்க் ஸ்-ரீபனின் நூலின் முக்கியத்துவத்தைப் பற்றி இளங்கோ குறிப்பிட்டுள்ளார். இந்திய சமாதானப்படையின் கொலைகளைப் பற்றி ஸ்-ரீபன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் தமீழ் ஈழக் கோரிக்கையை கைவிடாதபடியால் தான் மூர்க்கமாக அழிக்கப்பட்டனர் என ஸ்-ரீபன் எழுதியதையும் இளங்கோ பதிவு செய்துள்ளார்.

சக எழுத்தாளராக விடுதலைப் புலியின் போராளி மலரவனின் “போர் உலா” நூலைப் பற்றியும் விரிவாக இளங்கோ எழுதியுள்ளார்.

இளங்கோ இந் நூலின் ஊடாக இளங்கோவிற்கு போர் ஏற்படுத்தியுள்ள வெறுமையை வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் போரில் இறந்தவர்களை நினைத்து வருத்தப்படுகின்றார். இளங்கோ தனக்கு ஏற்பட்டுள்ள குற்றயுணர்வினை இந்த நூல்களினூடாக வெளிப்படுத்துகின்றார். போருடன் தான் முரண்பட்டு நிற்பதனை இளங்கோ வெளிப்படுத்த தயங்கவில்லை. போரினால் உடைக்கப்பட்டுள்ள சமூகக் கட்டமைப்புக்கள், சமூகக்கட்டமைப்பினால் கட்டுடைக்க முடியாமல் போன போர், உடைக்கப்படவேண்டிய சமூகக்கட்டமைப்பு, அரசியல் கட்டமைப்பு என இளங்கோ விமர்சிக்கின்றார். போர் “மகிழ்ச்சி” என்ற வார்த்தையையே மனிதர்களிடம் அழித்துவிட்டது என்பது இளங்கோவின் விமர்சனம். ஒவ்வொரு நூலுடனும் இளங்கோ உரையாடியுள்ளார். அதுவே இந்த நூலின் சிறப்பம்சங்களுள் ஒன்றாகும்.

போர் இளங்கோவிற்கு ஏற்படுத்தியுள்ள இருண்மையை நேர்மையாக குற்றவுணர்வுடன் பதிவு செய்துள்ளார். இளங்கோவின் பல கருத்துக்களுடன் முரண்பட்டாலும், அவர் கருத்துக்கள் ஒரு உரையாடல் வெளியை ஏற்படுத்தியுள்ளது.

இது இந்த நூலுக்கான விமர்சனமல்ல. நூலை அனைவரும் வாசிக்க வேண்டியதன் அவசியத்தையே கூறியுள்ளேன். பிறிதொரு தளத்தில் விரிவான விமர்சனம் வெளியாகவுள்ளது.

நூலில் உள்ள நூல்கள் பற்றிய விபரங்கள் இவை:
A Passage to North - Anuk Arudpragasam
Brotherless Night - V.V. Ganeshananthan
Tamil Tigress  - Niromi de Soyza
The Story of a Brief Marriage - Anuk Arudpragasam
The Hungry Ghosts – Shyam Selvadurai
The Boat People – Sharon Bala
Prisoner No 1056 – Roy Ratnavel
The Sadness of Geography: My Life as a Tamil Exile - Logathasan Tharmathurai
Love Marriage - V.V. Ganeshananthan
போர் உலா – மலரவன்
Tea Time With Terrorists - Mark Stephen Meadows
Song of the sun god - Shankari Chandran
Vanni: A Family's Struggle through the Sri Lankan Conflict - Benjamin Dix  and  Lindsay Pollock

***
ரதனின் முகநூல் பக்கம்

 

கார்காலக் குறிப்புகள் - 151

Saturday, June 13, 2026

 

மைக்கல் ஜாக்சன்

மைக்கல் ஜாக்சனைப் பற்றி ஒரு கட்டுரை 'அம்ருதா' இதழில் வெளிவந்திருக்கின்றது. மைக்கல் ஜாக்சனின் பாடல்களையும், ஆடல்களையும் பிடிக்காதவர்கள் எவரும் இருக்கமுடியுமா என்ன? நாம் அனைவருமே அவரின் பாடல்களைத் தாண்டாமல் வந்திருக்கவே மாட்டோம். மேலும் அவரின் நிறம், குடும்பச்சூழல், அன்றையகால அமெரிக்கா போன்ற பின்னணியில் இருந்து ஒருவர் இந்தளவு உயரத்துக்கு எழுந்து வருவது என்பது நாம் கற்பனையே செய்து பார்க்க முடியாதது. ஆனால் அதற்காய் அவர் மீதான குழந்தைகள் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்களையும் எழுந்தமானமாகத் தாண்டிப் போய்விடமுடியாது.

'அம்ருதா'வில் வெளிவந்த கட்டுரை மைக்கலின் மீதான பேரன்பினால் அதை முற்றாக நிராகரிக்க முயல்கின்றது. அந்தக் குற்றச்சாட்டுகள் 'சதிக்கோட்பாடு'களால் கட்டமைக்கப்பட்டது என்று சொல்லுவது, ஒரு கறுப்பு-வெள்ளைப் பார்வையில் பார்ப்பது என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

மைக்கல் ஒரு கறுப்பினத்தவராகவும், அவர் மீது குழந்தைத் துஷ்பிரயோக குற்றச்சாட்டை முன்வைத்தவர்களில் பெரும்பான்மையினர் வெள்ளையினத்தவர்களாக இருப்பினும், நாம் அதை எளிதாக இனவெறிப் பார்வையில் வைக்கவும் முடியாது. மேலும் மைக்கலுக்கு ஆதரவாக 90களில் (அப்போதுதான் முதன்முதலில் குழந்தைப் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது) சாட்சி சொன்ன சிலர் பின்னாட்களில் பொய்ச்சாட்சியம் சொன்னோம் என்று உண்மையைப் பின்னர் சொல்லவும் செய்திருக்கின்றார்கள். இது குறித்த உள்வீட்டு விபரங்களை நாம் அவ்வளவு அறியாவிட்டாலும் இந்தக் குற்றச்சாட்டுக்களில் கொஞ்சமேனும் உண்மையில்லாவிட்டால் இந்தளவுக்கு இந்த விடயம் தீவிரமாகச் சென்றிருக்காது என்பது எளிதான உண்மையாகும்.

மைக்கல் ஏன் இப்படி குழந்தைகள் மீது பித்தானார் என்பதற்கும், எப்படி குழந்தைகளை (அக்குழந்தைகளின் பெற்றோர்) மைக்கலோடு படுக்கையைப் பகிர அனுமதித்தனர் என்பதெல்லாம் நிறைய கேள்விகளுக்குரியது. இன்னொருபுறம் மைக்கல்  வித்தியாசமான குழந்தையாக/பதின்மனாக வளர்ந்தார் என்பதெல்லாம் அவரின் உளவியலை வைத்து அலசிப் பார்க்க வேண்டியதே. ஆனால் அதேவேளை குழந்தைகளாக இருந்தபோது மைக்கலால பாதிப்புற்றவர்களின் குரல்களில், பல ஆவணப்படங்கள் வந்திருப்பதையும் நாம் கவனித்தாக வேண்டும்.  அவற்றையெல்லாம் நாம் எளிதாகப் புறக்கணித்து மைக்கலைப் புனிதராக ஆக்கவும் முடியாது.

அண்மையில் வெளிவந்த மைக்கலைப் பற்றிய படம் (Michael) வசூலிலும் பெரும் சாதனை படைத்திருக்கின்றது. இறந்தாலும் யானை ஆயிரம் பொன் என்பதற்கிணங்க மைக்கல் தனது அதிசயத்தக்க திறமைகளால் நெடுங்காலத்துக்கு வாழ்ந்து கொண்டிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் மைக்கலை இந்தக் குழந்தை துஷ்பிரயோக குற்றச்சாட்டிலிருந்து வெள்ளையடித்துத்தான் நாம்  அவரைக் கொண்டாட வேண்டும் என்கின்ற எந்த அவசியமும் இல்லை. இப்போது வந்திருக்கும் மைக்கலின் திரைப்படம் கூட மைக்கலில் வெற்றியின் முதல்படிக்கட்டுடன் முடிந்தாலும், மைக்கல் பற்றிய குற்றச்சாட்டுக்களை காட்சிப்படுத்தாது மைக்கலைத் திருவுருவாக்கும் முயற்சியென கடும் விமர்சனமும் இன்னொருபக்கம் வைக்கப்பட்டிருக்கின்றன.

நான் இத்திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது அந்தக் குற்றச்சாட்டுக்களும் உறுத்தத்தான் பார்த்தேன்.  எமக்கு ஒருவரின் கலைத்திறமைகள் பிடிக்கின்றன என்பதற்காக அவர்களைப் புனிதர்களாக்கித்தான் அந்தத் திறமைகளை இரசிக்கவேண்டும் என்கின்ற எந்தக் கட்டாயமும் இல்லை. இப்படியான விமர்சனங்களோடுதான் மைக்கலை மட்டுமில்லை, பாப்லோ நெரூடா, வூடி அலன் போன்ற எண்ணற்ற படைப்பாளிகளையும்  நான் பார்க்க விரும்புகின்றேன்.

இவர்களைப் பற்றி ஒருவர் வியந்து ஒரு ஆக்கம் எழுதுகின்றார் எனின், அதில் இந்தக் குற்றச்சாட்டுகளையும் தொட்டுச் செல்லவேண்டும் என எதிர்பார்ப்பேன். இந்தப் புனிதங்களால் நாம் எமக்குப் பிடித்தவர்களை ஒருபோதும் காப்பாற்ற முடியாது என்பது ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் இவர்களால் பாதிப்புற்றவர்களின் குரல்களை அமைதியாக்கி அநீதி இழைப்பவர்களாகவும் நாம் ஆகிவிடுகின்றோம்.

என்னைப் போன்றவர்களுக்கு ஆங்கிலப்பாடல்களே மைக்கல் ஜாக்சனால்தான் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது. என் பதின்மத்தின் முகிழ்ந்த முதல் காதலின் காதலி ஒரு காஸெட் முழுதும் மைக்கல் ஜாக்சனின் பாடல்களைப் பதிவு செய்து எனக்காகத் தந்திருந்தார். அந்தப் பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டு அப்பாவிடம் இதிலென்ன இருக்கின்றது என திட்டுவாங்கியதும், நான் என் வாழ்வில் (அப்பாவுக்கு எதிராக) முதன்முதலாக அச்சம் களைந்து எதிர்த்துப் பேசியதும் (எல்லாம் காதலும் மைக்கலும் தந்த 'தில்'தான்) இப்போதும் நன்றாக ஞாபகம் இருக்கின்றது.

இவ்வாறு என் முதல் காதலிலும், குடும்பத்துக்கு எதிரான முதல் குரலிலும் முக்கிய பங்காற்றிய மைக்கலை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது. ஆனால் அந்த மைக்கலையும் அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களோடுதான் ஏற்றுக்கொள்வேன்.

கடவுளரை வேண்டுவோர்க்குத்தான் புனிதர்கள் தேவைப்படுவார்கள்; கலைஞரை நேசிப்போர்க்கு, கலைஞர்கள் அவர்களின் பலவீனங்களோடோ போதும்.

மேலும் எந்த ஒரு கலைஞரையும் அவரின் இருண்டபக்கத்தை மட்டும் வைத்து, படைப்புத் திறமைகளைப் புறக்கணித்த சந்தர்ப்பங்கள் வரலாற்றில் மிக அரிதே என்பேன்.

***

 

இருத்தலின் மீது கவியும் இன்மைகள் – நூல் வெளியீட்டு நிகழ்வு

Tuesday, June 09, 2026

 

– திருமறைக்கலாமன்றம், யாழ்ப்பாணம் 

எழுநாவின் வெளியீடாகிய, இளங்கோவின் 'இருத்தலின் மீது கவியும் இன்மைகள்' நூல் வெளியீட்டு நிகழ்வு, 28.02.2026 (சனிக்கிழமை) அன்று, காலை 10.00 மணிக்கு - 238, பிரதான வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கலைத்தூது மணி மண்டபம் - திருமறைக்கலாமன்றத்தில் இடம்பெற்றது.


Uploaded Image


திரு. இ. கிருஷ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திரு. கி. செல்மர் எமில் வரவேற்புரை வழங்க, திரு. டெ. க. அரவிந்தறாஜ் மற்றும் திரு. சி. ரமேஸ் ஆகியோர் மதிப்பீட்டுரைகளை வழங்கினர்.
 
 



நிகழ்வின் தொடர்ச்சியாக, நூலினை திரு. வடகோவை வரதராஜன் அவர்கள் வெளியிட்டு வைக்க, திரு. சோ. பத்மநாதன் மற்றும் திரு. அ. யேசுராசா ஆகியோர் கெளரவப்பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.

நிகழ்வினை ஒழுங்குபடுத்தியவர்களுக்கும், பேச்சாளர்களுக்கும், நூலாசிரியர் இளங்கோ சார்பில் வடகோவை வரதராஜனால் நினைவுப்பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. பொதுமக்கள், வாசகர்கள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


நன்றி: எழுநா


 

இளங்கோவின் "இருத்தலின் மீது கவியும் இன்மைகள்"

 

டெ. க. அரவிந்தறாஜ்
***

நூலாசிரியர் இளங்கோ யாழ்ப்பாணத்தில் அம்பனையில் பிறந்து தனது பதினாறாவது வயதில் புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கிறார். இதுவரை கவிதைகள், கட்டுரைகள்,  சிறுகதைகள், நாவல் என ஒன்பது நூல்களை வெளியிட்டுள்ளார். இது அவரது பத்தாவது புத்தகம்.

ஈழயுத்தத்தில் அநியாயமாக பலியான அனைவரிற்குமாக படையல் செய்யப்பட்டுள்ள இந்நூல் 112 பக்கங்களில் எழுநாவால் அழகான, கைக்கடக்கமான வடிவமைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. 

 



நூலின் அட்டைப்படம் இளங்கோவின் யுத்தத்தால் சிதைவடைந்த வீட்டின் எஞ்சிய பகுதியின் புகைப்படமாகவும் அதைச் சுற்றிப் படரும் கொடிகளும் பூக்களுமாக காட்டப்பட்டுள்ளது. வீடு என்பது இருத்தலின் ஒரு குறியீடு. ஆனால் இங்கு அதன்நிலை இல்லாமையையும் அதேவேளை பூக்கள் நம்பிக்கையையும் தருவதுபோல தலைப்பிற்கு வலுச்சேர்க்கின்றது.

எழுநா சஞ்சிகையில் தொடர்ச்சியாக வெளிவந்த 13 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூலாகும். ஈழப்போராட்டத்துடன் தொடர்புடைய ஆங்கிலத்தில் வெளியான 13 நூல்களை ஆசிரியர் தன்னுடைய பார்வையில் ஆராய்கிறார். அவற்றின் சார்பு நிலை, வரலாற்று உண்மைகள், எழுதப்பட்ட நோக்கம், அதற்கு நியாயம் செய்யப்பட்டுள்ளதா என விரிகின்றது இக் கட்டுரைகள்.

இதற்கான களத்தை  ‘எழுநா’ வழங்கி உள்ளது. அதாவது ஈழக்கற்கைகள் என்ற எண்ணக்கருவின் கீழ் வரலாறு, பண்பாடு, சமூகவியல், மானிடவியல், மொழியியல், அரசியல், அபவிருத்தி, சட்டம், பொருண்மியம் என்று பல்வேறு துறைகள் தொடர்பான ஆய்வை மேற்கொண்டு அறிவு பரம்பலை அல்லது கருத்தாடலை அல்லது வெவ்வேறு பார்வை கோணங்களை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு ‘எழுநா’ செயற்படுகின்றது. அந்த வகையில் ஆங்கிலத்தில் வெளியான இந்தப் புத்தகங்கள் தொடர்பான உரையாடலை உருவாக்குவதில் எழுநாவும் இளங்கோவும் வெற்றி பெற்றுள்ளார்கள் எனலாம்.

பதினொரு எழுத்தாளர்களின் 13 நூல்கள் தொடர்பாக இக்கட்டுரைகள் பேசுகின்றன. அதாவது அனுக் அருட்பிரகாசத்தின் "வடக்கிற்கான பயணம்" மற்றும் ஒரு குறுகிய திருமணத்தின் கதை" ஆகிய இரு நூல்களும் வாசுகி கணேசானந்தனின் "சகோதரனற்ற இரவு" மற்றும் "Love Marriage" ஆகிய  இரு நூல்களும், நிரோமி டீ ஸொய்ஷாவின் "தமிழ்ப் பெண் புலி", ஷியாம் செல்லத்துரையின் "பசித்த பேய்கள்", சாரோன் பாலாவின் "படகு மக்கள்",  ரோய் ரத்னவேலின் "கைதி # 1056", லோகதாசன் தர்மதுரையின் "The Sadness of Geography" , மலரவனின் போர் உலா, மார்க்ஸ் ஸ்டீபனின் "தீவிரவாதிகளுடன் தேநீர் நேரம்", சங்கரி சந்திரனின்"சூரியக்கடவுளின் பாடல்", மற்றும் பெஞ்சமினின் "வன்னி: கிரபிக் நாவல்" என்பவையாகும்.

மலரவன் அவர்களின் போர் உலா தவிர்ந்த ஏனையவை யாவும் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டவை. போர் உலா தமிழில் எழுதப்பட்டு ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்டது. இந்நூல்களின் எழுத்தாளர்களை எடுத்து நோக்கினால் இருவர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். பத்துப்பேர் புலம் பெயர்ந்தவர்கள். மலரவன் ஈழ விடுதலைப் போராளி. நிரோமி போராளியாய் இருந்து விலகி பின்னர் புலம்பெயர்ந்தவர்.

இந்நூல்கள் தொடர்பான தனது பார்வையை இளங்கோ முன் வைக்கும்போது ஒரு தெளிவான வடிவத்தை கையாளுகின்றார். அதாவது முதலில் நூலை அறிமுகம் செய்து அதனுடைய கதை, அதை எழுதியவரின் பின்புலம், கதை எழுதப்பட்ட சூழல் என்பவற்றை குறிப்பிட்டு அதன் பின்னர் அந்த பிரதி ஊடாகவும் அந்த பிரதிக்கு வெளியேயும் அந்நூல் எதைப்பற்றி பேசுகிறது என்பதை  தெரிவிப்பதன் ஊடாக வாசகர்களை சிந்திக்கத் தூண்டுகின்றார்.

இது இலக்கியத்தில் ஆதாரமான ஒரு கேள்வியை எழுப்புகின்றது. ஒரு படைப்பை புரிந்து கொள்ள படைப்பு மாத்திரம் போதுமா அல்லது அதன் பின்னணி,  எழுத்தாளரின் நோக்கம் போன்றவற்றையும் கொண்டு அதனை மதிப்பிட வேண்டுமா? அத்துடன் இலக்கியம் என்றால் என்ன? அதன் சார்பு நிலைகள் என்ன? வாசகர்களுக்கு இலக்கியத்தின் ஊடாக என்ன வழங்கப்பட வேண்டும்? போன்ற கேள்விகள் இப்புத்தகத்தை வாசித்து முடிக்கின்ற போது எழுவதை தவிர்க்க முடியவில்லை.

உதாரணமாக அண்மையிலே வெளிவந்த டிலுக்ஸன் மோகனின் ‘படுபட்சி’ நாவல் தன்வரலாறு என்று குறிப்பிடப்பட்டிருந்த போதும் பல்வேறு காரணங்களுக்காக  உண்மைக்கு முரணான பல தகவல்களை கொண்டிருந்ததாக சர்ச்சைக்கு உள்ளானது.

அத்துடன் "தீவிரவாதிகளுடன் தேநீர் நேரம்" என்ற நூல் தொடர்பாக இளங்கோ குறிப்பிடும்போது அதன் நூலாசிரியரான மார்க்ஸ் ஸ்டீபன் தீவிரவாதிகள் பற்றி ஆராயும் ஆசையில் அவர்களை சந்திக்க முயல்கிறார். வேறு நாடுகளைவிட இலங்கையில் சமாதான பேச்சு வார்த்தைகள் இடம்பெற்ற காலமாகையால் அது அவருக்கு இலகுவாக அமைகின்றது. எனினும் ஓமந்தை சோதனைச் சாவடியில் மதுபானங்களுடன் சூதாடும் போராளிகளை காணுதல் என குறிப்பிடுவது முற்று முழுதாக தவறானது என்கிறார்.

அதேபோல மார்க்ஸ் ஸ்டீபனின்  தீவிரவாதிகளை பற்றி அறிய வேண்டும் என்ற எண்ணத்தை அமெரிக்க மனநிலை என்று அவருடைய காதலியே சொல்வதாக இப்புத்தகம் குறிப்பிடுகின்றது. இக்கட்டுரையை முடிக்கும்போது இளங்கோ ஈழப் போராட்டம் பற்றி அறிய இப்புத்தகம் ஒன்றும் அவ்வளவு முக்கியத்துவம் ஆனதல்ல என்கிறார்.

அனுக் அருட்பிரகாசம் போர்ச் சூழலிற்குள் எப்போதும் இருக்காதவர். அதை வெளிப்படையாகத் தெரிவித்தே தனது கதைகளை எழுதுகிறார். அதேபோல ஏனையோரும் நேர்மையாக செயற்படுவது அவர்களது புத்தகங்களை புரிந்துகொள்ள உதவும் என்கிறார்.

பெரும்பாலான புத்தகங்கள் எண்பதுகளில் இடம்பெற்ற இனக் கொலைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. உதாரணமாக  "வடக்கிற்கான ஒரு பயணம்" , "படகு மக்கள்" , கைதி # 1056, "நிலவியலின் துயரம்"  1983 ஜூலை  இனக்கொலையுடன் தொடர்புபடுகின்றது.  இந்நூல் ஆசிரியர்களோ அல்லது அவர்களின் பெற்றோர்களோ எண்பதுகளில் புலம்பெயர்ந்த நடுத்தர அல்லது உயர் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்கிறார் இளங்கோ. 




வாசுகி கணேசானந்தனின் ‘சகோதரன் அற்ற இரவு’ நாவலானது 1980 களில் ஆரம்பித்தாலும் இடையில் 20 ஆண்டுகளை விட்டுவிட்டு 2009 ற்கு தாவுவதை குறிப்பிட்டு இடையில் நடந்த யுத்தத்தாலான பாதிப்புகள் தொடர்பாக மௌனம் காப்பதுடன் போராட்டத்தின் அடிப்படை காரணத்தை மறைத்து யுத்தத்தில் ஈடுபட்ட இரண்டு தரப்புகளும் குற்றம் செய்தாக பொதுவாக கூறுவது பொருத்தமற்றது என்கிறார். ஒரு புலம்பெயர்ந்தவராக  யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தரப்பின் வலிகளை புரிந்து கொள்ள வேண்டாமா என்றும் கேள்வி எழுப்புகிறார்.

படகு மக்கள் நாவல் தொடர்பாக குறிப்பிடும்போது சாரோன் பாலா யுத்தத்தோடு தொடர்புபடாதவர். அத்துடன் புலம்பெயர்ந்த இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவர். இருந்தும் அவரால் ஈழப் போராட்டத்தின் நியாயப்பாட்டை புரிந்து கொள்ள முடிகின்றது என்கிறார். சிக்கலான, அபாயம் நிறைந்த, உயிரைப் பறிக்கக்கூடிய படகுப் பயணத்தை ஏன்  இவ் அகதிகள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை இந்தப் பின்னணியில் அவரால் நியாயப்படுத்த முடிகிறது.

அதேபோல சூரிய கடவுளின் பாடல் நாவலில் சங்கரி சந்திரனால் 1930 இலிருந்து 2010 வரையான மூன்று தலைமுறைகளின் கதைகளை யுத்தத்தை நேரடியாக சொல்லாமல் குடும்பங்களின் ஊடாக சொல்லப்படுகின்றது.

வாசுகி கணேசானந்தன், சாரோன் பாலா, சங்கரி சந்திரன் போன்ற எழுத்தாளர்கள் 70,  80களில் வெளிநாடுகளில் பிறந்தவர்கள். தமிழைச் சரியான முறையில் வாசித்து விளங்குவதற்கான திறமை குறைவாக உள்ளவர்கள். இருந்தாலும் அவர்களால் ஈழப் பிரச்சனையின் வரலாற்று ஒழுங்கை எழுத முடிகிறது. அதிலும் சாரோன் பாலா மற்றும் சங்கரி சந்திரன் ஆகியோர் ஈழப் பிரச்சினையின் அடிப்படைகளைப் புரிந்து கொண்டு உண்மைக்கு நெருக்கமாக எழுதுகிறார்கள் என்கிறார் இளங்கோ.

அதேபோல ரோய் ரத்தனவேல் மற்றும் லோகதாசன் தர்மதுரையின் சுயசரிதைகள் போரின் பாதிப்புகளையும் புலம்பெயர்வின் அவலங்களையும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. போரால் ஏற்பட்ட உளவடுக்களில் இருந்து விடுபட இவர்களுக்கு நீண்ட காலம் சென்றுள்ளது. ரோயிற்கு ஒரு இராணுவ அதிகாரி உதவ, லோகதாசனுக்கு புகையிரதத்தில் சந்திக்கும் ஒரு பெண்ணும் ஒரு இஸ்லாமிய குடும்பமும் உதவுகின்றது. இது மனிதர்கள் தனித்தனியாக நல்லவர்களாக இருப்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

போர் உலாவை பற்றி  இளங்கோ குறிப்பிடும்போது ஈழப் போராட்டத்தைப் பற்றி ஒரு போராளியால் எழுதப்பட்ட முதலாவதும் முதன்மையானதுமான போர் இலக்கியம் என்கிறார். எனினும் அதை எழுதிய மலரவன் சிறிய வயதிலேயே இறந்து விடுவதை குறிப்பிட்டு அவர் இன்று இருந்தால் இன்னும் எவ்வளவு சிறப்பான படைப்புகளை தந்திருப்பார் என்று கேட்பதன் ஊடாக போரினால் என்ன நன்மை விளைந்துவிடக் கூடும் என கேள்வி எழுப்புகிறார்.

ஈழப் போராட்டம் தொடர்பில் வெளிவந்த ஆங்கில நூல்களில்  எவை சரியான வரலாற்று புரிதலுடன் எழுதப்பட்டுள்ளன மற்றும்  எவை வேண்டுமென்றே திரிவுபடுத்துவதற்காகவே எழுதப்பட்டுள்ளன  என்பதை எடுத்துக்காட்டுவதன் ஊடாக ‘இருத்தலின் மீது கவியும் இன்மைகள்’
தமிழில் வாசிப்பவர்களுக்கு ஒரு முக்கியமான நூலாக விளங்குகின்றது. அத்துடன் ஆங்கிலத்தில் ஈழப் போராட்டம் தொடர்பான நூல்களில் எவற்றின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் வாசகர்களுக்கு முன்வைக்கின்றது.

எனினும் தமிழ் வாசகர்கள் ஈழப் போராட்டம் தொடர்பாக ஓரளவுக்கு தெளிவான பார்வை உடையவர்கள். புலம்பெயர்ந்த இரண்டாம் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவர்களே ஆங்கிலத்தில் வாசிக்கும்போது எது உண்மை எது பொய் என்று தெரியாது ஒரு பிழையான வரலாற்றை நோக்கி இழுத்துச் செல்லப்படக்கூடிய வாய்ப்பு உடையவர்கள். எனவே இளங்கோவின் இப்புத்தகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவது அவர்களுக்கும் ஒரு சரியான வரலாற்றை அறிந்து கொள்ள பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

***

(‘எழுநா’வினால் 2025 இன் இறுதியில் வெளியிடப்பட்ட ‘இருத்தலின் மீது கவியும் இன்மைகள்’ நூல் தொடர்பாக கடந்த 28/02/2026 அன்று திருமறைக்கலாமன்ற கலைத்தூது மணி மண்டபத்தில் ஆற்றப்பட்ட மதிப்பீட்டுரை.)

நன்றி: 'அம்ருதா' - சித்திரை இதழ் 2026