கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

'ஏலாதி' விருதிற்கான‌ ஏற்புரை

Monday, February 01, 2010

பொய்த்துப் போன பருவங்கள்

'...சிறுவர்கள்
தொலைந்துகொண்டிருக்கும் நாட்டை
பூர்வீகமாய்க் கொண்டவர்க்கு
நேசித்தல் என்பது கூட
நம்மை நாமே சிதைத்து உருவழிப்பதுதான்...'


சிறுவ‌ய‌திலேயே உயிருக்காய் த‌ப்பியோடி ஓடி அக‌தி வாழ்க்கை ப‌ழ‌க்க‌மாயிற்று விட்ட‌து. ப‌தினமூன்று வ‌ய‌துக்குப் பிற‌கு முற்றாக‌ நான் வாழ்ந்த‌ ஊருக்குப் போக‌ முடியாத‌ அள‌வுக்கு போர் மிக உக்கிர‌மாகியிருந்தது. அவ்வ‌ப்போது 'ச‌மாதான‌ச் சூழ‌ல்' வ‌ந்து ஆக‌க்குறைந்த‌து தாம் வாழ்ந்த‌ இருப்பிட‌த்தைப் பார்க்கும் ச‌ந்த‌ர்ப்ப‌ம் ப‌ல‌ருக்கு வாய்த்தாலும் என்னைப் போன்ற‌வ‌ர்க‌ளுக்கு, இராணுவ‌ உய‌ர்பாதுகாப்பு வ‌ல‌ய‌ம் (High Security Zone) ப‌குதிக்குள் வ‌ருவ‌தால் ஒருபோதும் ஊரையோ வாழ்ந்த வீட்டையோ பின்னாட்களில் பார்க்க‌ முடிந்ததில்லை. இஃதொரு பெரிய‌ இழ‌ப்புமில்லை. இன்றைய‌ கால‌க‌ட்ட‌த்தில் போர் ‍ -நான் ஈழ‌த்தில் வாழ்ந்த‌ கால‌க‌ட்ட‌த்தைவிட‌ - இன்னும் ப‌ல‌ம‌ட‌ங்கு உக்கிர‌மாய் ப‌ல நூற்றுக்க‌ண‌க்கான‌வ‌ர்க‌ளை ப‌லி கொண்டும், இட‌ம்பபெய‌ர்க்க‌வும் செய்து கொண்டிருக்கும்போது என‌க்காய் விதிக்க‌ப்ப‌ட்ட‌ அகதி வாழ்வில் நான் ஒர‌ள‌வு 'ஆசிர்வ‌திக்க‌ப்ப‌ட்ட‌வ‌ன்' என்றுதான் சொல்ல‌வேண்டும். ஏனெனில் இன்று ஆக‌க்குறைந்த‌து, உயிருக்காவ‌து உத்த‌ர‌வாத‌ம‌ளிக்கும் ஒரு நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்க‌ முடிகிற‌து; எறிகணை வீச்சினதோ, விமானத்தாக்குதலினதோ அச்சமில்லாது விரும்புகின்றபோது அவ்வவ்போது எழுதிக்கொண்டிருக்க முடிகின்றது.

போரிற்குள் சிறுவ‌ய‌திலிருந்து வாழ்ந்ததாலோ என்ன‌வோ, மூர்க்க‌மாய் விம‌ர்ச‌னங்க‌ளை வைக்க‌வும் எதிர்கொள்ள‌வும் ப‌ழ‌கிய‌ அள‌வுக்கு பாராட்டுக்க‌ளையோ வாழ்த்துக்க‌ளையோ எப்ப‌டி ஏற்றுக்கொள்வதென்று தெரிய‌வில்லை. எழுதிய‌ ஒரு ப‌டைப்புக்கு எப்போதாவது சிறு பாராட்டுக் கிடைக்கும்போது மிகுந்த‌ ப‌த‌ற்ற‌ங்க‌ளோடே அதை உள்வாங்கிக்கொள்ள‌ முடிகின்ற‌து.

எழுதுவ‌தில் பிரிய‌முடைய‌ ஒருவ‌ருக்கு தான் எழுதிக்கொண்டிருப்ப‌து ம‌லையிடுக்குக‌ளில் ச‌ல‌ன‌ம‌ற்றுப் போய்க்கொண்டிருக்கின்ற‌தோ என்ற‌ நினைப்பை, எவ‌ரின‌தோ க‌டுமையான‌ விம‌ர்ச‌ன‌மோ, சிறு பாராட்டோ நெகிழ‌ச் செய்துவிடுகின்ற‌து. பிற‌ர் த‌ன‌து எழுத்தைக் க‌வ‌னிக்கின்றார்க‌ள் என்ற‌ நினைப்பு தொடர்ந்து பொறுப்பாக‌ எழுதுவதற்கான ஒருவிதமான மனோநிலையைத் தரத்தான் செய்கின்றது.

ஒரு புதிய‌வ‌னுக்கு, அவ‌ன் யாரென்று அவ‌ன‌து பின்புல‌ங்க‌ள் அறியாது, அவ‌ன‌து ப‌டைப்பை ம‌ட்டுமே முன்னிறுத்தி வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் ஒரு விருது என்ற‌வ‌கையில், த‌மிழ்நாட்டு க‌லை இல‌க்கிய‌ ம‌ன்ற‌ம் - தக்கலை சார்பாக‌ ந‌ண்ப‌ர்க‌ள் நீங்க‌ள் என‌து தொகுப்பான‌ 'நாட‌ற்ற‌வ‌னின் குறிப்புகளுக்கு' வ‌ழ‌ங்கும் 'ஏலாதி இலக்கிய விருதை' ஏற்றுக்கொள்கின்றேன். இவ்விருதை என‌க்கான‌ அங்கீகார‌மாய் அல்லாது, இனி எழுதுகின்ற‌போது பொறுப்போடும், முதிர்ச்சியை நோக்கி செல்வ‌துமாக‌ எழுத‌வேண்டுமென்ற‌ நினைவூட்ட‌வே -இவ்விருதை- ஏற்றுக்கொள்கின்றேன் என‌க் கூறிக்கொள்ள‌ விரும்புகின்றேன்.

இவ்விருதை வ‌ழ‌ங்கும் ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் தேர்வுக் குழுவிற்கும் ந‌ன்றி சொல்கின்ற‌ அதேவேளை 'அடையாள‌ம்' சாதிக்கிற்கும் என‌து த‌னிப்ப‌ட்ட‌ நன்றியைச் சொல்ல‌ப் பிரிய‌ப்ப‌டுகின்றேன். எழுதுகின்ற‌ ஒருவ‌னுக்கு ஒரு ந‌ல்ல‌ ப‌திப்பாள‌ர் ‍அதுவும் த‌மிழ்ச்சூழ‌லில் கிடைப்ப‌து அரிது. எவ்வ‌ள‌வோ தொலைவிலிருந்தாலும், என‌து க‌விதைக‌ளைத் தொகுப்பாக்க‌ வேண்டுமென்று பிரிய‌ப்ப‌ட்ட‌போது, எந்தத் தயக்கமுமில்லாமல் வெளியிட முன்வந்தவர் சாதிக். அது ம‌ட்டுமில்லாது, இவ்விருதுக்கும் பிர‌திக‌ளை எனது அனுமதியிற்குக் காத்திருக்காது, தனது சுயவிருப்பில் அனுப்பியும் வைத்து உதவியவர். இவ் இனிய கணத்தில் சாதிக்கின‌தும், உங்க‌ள் அனைவ‌ரின‌தும் க‌ர‌ங்க‌ளை நெகிழ்வுட‌ன் ப‌ற்றிக்கொள்கின்றேன். இறுதியாக‌, நான் சிறுவ‌ய‌தில் அக‌தியாய் அலைந்ததைவிட‌ மிக‌க் கொடுமையான‌ சூழ்நிலைக்குள் இன்று ஈழ‌த்திலும் உல‌கெங்கிலும் சிறார்க‌ள் அக‌திக‌ளாக்க‌ப்ப‌ட்டுக் கொண்டிருக்கின்றார்க‌ள். அகதிகளாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அச்சிறார்களுக்கு இவ்விருதைச் சமர்ப்பிக்கின்றேன். இன்னும் இவ்விருதுட‌ன் வ‌ழ‌ங்கும் பணமுடிப்பைத் த‌மிழ‌க‌த்திலுள்ள‌ ஆத‌ர‌வ‌ற்ற‌ குழ‌ந்தைக‌ள் காப்ப‌க‌ம் ஏதாவ‌தொன்றுக்கு வ‌ழ‌ங்குமாறு என் சார்பின் இவ்விருதைப் பெற்றுக்கொள்ளும் 'அடையாள‌ம்' சாதிக்கிடம் கேட்டுக்கொள்கின்றேன். ந‌ன்றி.

(Aug 15, 2008)

*ச‌ந்தோச‌ம்; ஆனால் யாருக்கும் தெரியாம‌ல்.

Friday, January 29, 2010

1.
ந‌ம்மைப் போல‌ ச‌க‌ ம‌னித‌ரையும் நேசித்த‌ல் என்ப‌து அற்புத‌மான‌ ஒரு விட‌ய‌ம். ந‌ம‌க்குள்ள‌ எல்லாச் சுத‌ந்திர‌ங்க‌ளும் பிற‌ருக்கும் வேண்டும் என்று அவாவி நிற்ப‌து போல்,. ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் த‌னிம‌னித‌ உரிமைக‌ள் பாதிக்க‌ப்ப‌டும்போது ந‌ம‌தான உரிமைக‌ள் பாதிக்க‌ப்ப‌டுகின்ற‌ என்றரீதியில் குர‌ல்கொடுக்கின்ற‌வ‌ர்க‌ள்தான் உண்மையான‌ ம‌னிதாபிமானிக‌ள். ஆனால் உல‌கம் இவ்வாறு அழ‌காய், எல்லோரும் ச‌ம‌ உரிமைக‌ளுட‌ன் வாழ்கின்ற‌ ஒரு நில‌ப்ப‌ர‌ப்பாய் விரிந்திருக்க‌வில்லை என்ப‌துதான் ந‌ம் கால‌த்தைய‌ சோக‌ம். மைய‌வோட்ட‌த்திலிருந்து வில‌க்கி விளிம்புக‌ளாக்க‌ப்ப‌ட்டு, ப‌ல்வேறுப‌ட்ட‌ ம‌க்க‌ள் திர‌ள் இருப்ப‌தைப் பார்த்துக்கொண்டு நாம் 'இவ்வுல‌க‌ம் மிக‌ அழ‌கான‌து' என்று கூறுவ‌து ந‌ம்மை நாமே ஏமாற்றுவ‌துதான்.

புல‌ம்பெய‌ர் தேச‌ங்க‌ளில் ந‌ம‌து நிற‌ம்/நாம் பின்ப‌ற்றும் ம‌த‌ம்/ந‌ம் க‌லாசார‌ப் பின்புல‌ங்க‌ள் என்ற‌ ப‌ல்வேறு வ‌கைக‌ளை முன்வைத்து ஒடுக்க‌ப்ப‌டுகின்றோம் என்று உண‌ர்கின்ற‌ நாமே எம் ச‌மூக‌த்திலேயே சாதி, பாலின‌ம், பிர‌தேச‌ங்க‌ள் போன்ற‌வ‌ற்றை முன்வைத்து ப‌ல‌ரை விளிம்புநிலை ம‌னித‌ர்க‌ளாக்கி வைத்திருக்கின்றோம். இது குறித்து சிறிதும் அவ‌மான‌ப்ப‌டாது பிற‌ரை குற்ற‌ஞ்சாட்டுவ‌தில் ம‌ட்டும் கால‌ங்கால‌மாக‌ ந‌ம‌து த‌மிழ‌ர் 'பெருமை'க‌ளைப் ப‌றைசாற்றிக் கொண்டிருக்கின்றோம்.

'ஒடுக்க‌ப்ப‌டுகின்ற‌வ‌ர்க‌ளின் போராட்ட‌ங்க‌ள் ஒருபோதும் முடிவ‌தில்லை'என்ற‌ரீதியில் ப‌ன்முக‌வெளியில் ட‌்ன்ஸ்ர‌னின் உரை தொட‌ங்கிய‌து. டன்ஸ்ர‌ன் த‌ன்னை வெளிப்ப‌டையாக‌ ஓரின‌ப்பாலின‌ராக‌(gay) அறிவித்த‌ ஒருவ‌ர். 'சிநேகித‌ன்' என்ற‌ ஓரின‌ப்பாலின‌ருக்க்கான‌ ஓர் அமைப்பை ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் சேர்ந்து ந‌ட‌த்திவ‌ருப‌வ‌ர். (எளிய‌ புரித‌லிற்காய் நான் இங்கே ஓரின‌ப்பாலின‌ர் அமைப்பு என்று குறிப்பிட்டாலும் அவ‌ர்க‌ள் LGTTIQQ2S என்ற‌ வ‌கைக்குள் வ‌ரும் அனைவ‌ரையும் உள்ள‌ட‌க்குகின்ற‌ன‌ர் என்ப‌தைத் த‌ய‌வுசெய்து க‌வ‌ன‌த்திற் கொள்ளவும்).

நாம் விளிம்பு நிலையாக்க‌ப்ப‌ட்ட‌ ம‌னித‌ர்க‌ளாய் இருந்தாலன்றி, அவர்க‌ளின் ஒடுக்க‌ப்ப‌டும் வ‌லிக‌ளைப் ப‌ற்றியோ அத‌ற்கெதிரான‌ போராட்ட‌ங்க‌ள் ப‌ற்றியோ முழுதாய் விள‌ங்கிக்கொள்ள‌ முடியாது. ஆனால் அவ‌ர்க‌ள் பேசுவ‌த‌ற்கு வேண்டிய‌ வெளிக‌ளைத் திற‌ந்துவிடுவ‌தில்.., அவ‌ர்க‌ளை வெளிப்ப‌டையாக‌ பேச‌விடுவ‌தென.., ஆரோக்கிய‌மான‌ உரையாட‌ல்க‌ளைத் தொட‌ர்வ‌தில் அக்க‌றையாக‌ நாம் ப‌ங்குபெற‌முடியும். சாதி நிலையில் தான் ஒடுக்க‌ப்ப‌டுவ‌தை, ஒருவர் ஒரு பொதுவெளியில், ம‌ட்டுப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ ம‌ணித்தியால‌ங்க‌ளில் த‌ன‌து முழுக்க‌தையையோ வ‌லியையோ/ த‌த்த‌ளிப்புக்க‌ளையோ கூறிவிடுவார் என்று எதிர்ப்பார்க்க‌முடியாது. முத‌லில் தான் அவ்வாறு உரையாடுவ‌தை -தானாய் அல்லாத பிற‌ர்- எவ்வாறு எடுத்துக்கொள்வார் என்ற‌ ப‌ய‌ங்க‌ள் விளிம்புநிலையின‌ருக்கு ஏற்ப‌டுவ‌தும், தாம் சொல்லும் நிகழ்வுக‌ளைக் கொண்டு பிற‌கு த‌ன்னை அடையாள‌ப்ப‌டுத்தி, த‌ம்மை மேலும் ஒடுக்குவ‌த‌ற்கு கார‌ணிக‌ளாக‌ இவைக‌ள் அமைய‌க்கூடும் என்ற‌ நினைப்பும் ஒருவ‌ருக்கு ஏற்ப‌டுத‌ல் இய‌ல்பான‌து. நியாய‌மான‌தும் கூட‌.

ஆக‌வே இவ்வாறு விளிம்புநிலையில் உள்ளவர்களின் வாழ்வை அறிந்துகொள்ள‌ அக்க‌றைகாட்டாத‌ ச‌மூக‌த்தில், த‌ன‌து அடையாள‌த்தை வெளிப்ப‌டையாக‌ அறிவித்து ஒருவ‌ர் பொதுவெளியில் உரையாட‌த் த‌யாராகுகின்றார் என்றால் அது கூட‌ மிக‌ப்பெரும் போராட்ட‌த்தின்பின் வ‌ந்திருக்கக்கூடிய‌து என்ப‌தை நாம் முத‌லில் விள‌ங்கிக்கொள்ள‌ வேண்டியிருக்கின்ற‌து. மேலும் ஒடுக்க‌ப்ப‌ட்டு ச‌மூக‌த்திலிருந்து வில‌த்தி வைக்க‌ப்ப‌டும் ஒருவர் தான் க‌ட‌ந்துவ‌ந்த‌ பாதை முழுதையும் பொதுவெளியில் வைக்கும் சாத்திய‌ங்க‌ளும் மிக‌க்குறைந்த‌தாக‌ இருக்கின்ற‌து என்ப‌தையும் நாம் நினைவில்கொள்ள‌ வேண்டும். இவ்வாறான‌ புரித‌ல்க‌ளுட‌னேயே நாம்  விளிம்புநிலையிலிருப்ப‌வ‌ர்க‌ளுட‌னான‌ எம‌து உரையாட‌ல்க‌ளைத் தொட‌ங்க‌வேண்டும். அவ்வாறில்லாது ந‌ம‌க்கு இருக்கும் 'வெளி' அனைத்தும் அவ‌ர்க‌ளுக்கும் இருக்கிற‌து என்று சிறுபிள்ளைத்த‌ன‌ங்க‌ளுட‌ன் உரையாட‌ல்க‌ளை ஆர‌ம்பித்தால் நாம் இன்னும்  அவர்களை ஒடுக்குப‌வ‌ராய் ஆகிவிடும் ஆப‌த்துக்களுண்டு.

2.
பிற‌ அம‌ர்வுக‌ளைப் போலன்றி -தாம் பேச‌ ச‌பையிலிருப்ப‌வ‌ர்க‌ளைச் செவிம‌டுக்க‌ச் செய்யாது- ச‌பையிலிருப்ப‌வ‌ர்க‌ளையும் ப‌ங்குபெற‌ச் செய்யும் நோக்குட‌ன் டன்ஸ‌ர‌ன் அம‌ர்வை மாற்றிய‌மைத்து வித்தியாச‌மாக‌ இருந்த‌து. மூன்று கேள்விக‌ள் கொடுக்க‌ப்ப‌ட்டு ஒவ்வொரு குழுவின‌ரின‌தும் ப‌தில்களை அறிந்து, அத‌ன் மூல‌ம் ஒரு க‌ல‌ந்துரையாட‌ல் உற்சாக‌மாய்த் தொட‌ங்க‌ப்ப‌ட்ட‌து. இதுவே பொதுவெளியில்(த‌மிழ‌ர் ம‌த்தியில்) செய்யும் முத‌ல் அம‌ர்வு என்ப‌தால் எளிதான‌ கேள்விக‌ளை முன் வைத்திருக்கின்றோம் என்ற‌ன‌ர் ட‌ன்ஸ்ர‌னும் அவ‌ருட‌ன் வ‌ந்திருந்த‌ பிற‌ நண்பர்களும்..

முத‌ற்கேள்வியாக‌ Gay, Lesbian என்ப‌வ‌ற்றிற்கு த‌மிழில் எவ்வாறான‌ சொற்க‌ள‌ ப‌ய‌ன‌ப‌டுத்த‌ப்ப‌டுகின்ற‌ன‌ என்று கேட்க‌ப்ப‌ட்ட‌து. சில‌ர் ஓரின‌ப்பாலின‌ர்/ த‌ற்பால் சேர்க்கையாள‌ர் என்றும் வேறு சில‌ர் ஆண் ஓரின‌ப்பாலார், பெண் ஓரின‌பாலார் என்றும் கூறினர். இன்னொரு குழு ஓரின‌ப்பாலினருக்கு எவ்வாறான வ‌சைச்சொற்க‌ள் நம் சமூகத்தில் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டுகின்ற‌ன‌ என்று அச்சொற்க‌ளையும் குறிப்பிட்டார்க‌ள். எங்க‌ள் குழுவில் இருந்த‌ ந‌ண்ப‌ரொருவ‌ர் த‌மிழ‌ர் ப‌ண்பாட்டில் ஆதிகால‌த்திலிருந்தே ஓரின‌ப்பால் இருந்து வ‌ந்த‌தென‌வும், ஆனால் ச‌ங்க‌ம் ம‌ருவிய‌ கால‌ங்க‌ளில் ம‌த‌ங்க‌ளின் ஆதிக்க‌த்தால் அவ‌ர்க‌ள் ஒடுக்க‌ப்ப‌ட்டார்க‌ள் என‌வும், ஆக‌வே ஓரின‌ப்பாலின‌ருக்குப் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ ப‌ழைய‌ சொற்க‌ளை நாம் மீட்டெடுப்ப‌த‌ன் மூல‌ம் வ‌ர‌லாற்றை மீள‌க் க‌ண்டுபிடிப்ப‌தாய் இருக்குமென்ற‌ க‌ருத்தை முன்வைத்தார். மேலும் இன்றும் த‌மிழ‌க‌த்திலிருக்கும் (இந்தியா) ப‌ல‌ சிற்ப‌வேலைப்பாடுக‌ளில் த‌ற்பால்சேர்க்கை சித்த‌ரிக்க‌ப்ப‌ட்டிருப்ப‌து முக்கிய‌ சாட்சிய‌ம் எனவும் சொன்னோம். அத்துடன் வ‌ர‌லாற்றிலிருந்து புழ‌ங்கிய‌ ஒரு சொல்லை எடுத்தாளும்போது 'இப்போதுதான் இந்த‌ மாதிரியான‌ உறவு/சேர்க்கை' என்று பாசாங்குகாட்டும் ம‌னித‌ர்க‌ளிற்கு உறுதியான‌ எதிர்வினை கொடுக்க‌ உக‌ந்த‌மாதிரியாக‌வும் இருக்கும் என்றும் கூறினோம்.

எல்லாக் குழுக்க‌ளின் க‌ருத்துக்க‌ளை தொகுத்து ட‌ன்ஸ்ர‌ன் த‌ன‌து சில‌ க‌ருத்துக்க‌ளையும் சேர்த்து LGTTIQQ2Sக்கு விரிவான‌ விள‌க்க‌ம் கூறியிருந்தார். தான் 90களில் அமைப்பாயிருக்கையில் LGBT ம‌ட்டுமே இருந்த‌தாக‌வும் இப்போது இன்னும் ப‌ல‌ விளிம்புநிலையின‌ரை உள்ளட‌க்கி தாமொரு உறுதியான‌ அமைப்பாக‌ மாறிவ‌ருகின்றோம் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதேவேளை எல்லாப் பிற‌ அமைப்புக்களிற்கும் இருப்ப‌தைப் போல‌ தாங்களிற்கும் ப‌ல‌ பிள‌வுக‌ள் இருக்கின்ற‌ன‌ என‌வும் அவ‌ற்றோடும் போராடவேண்டியிருக்கிற‌து என்றும் குறிப்பிட்டார். முக்கிய‌மாய் த‌ங்க‌ள் 'சிநேகித‌ன்' அமைப்பில் அதிக‌ இல‌ங்கைய‌ர்க‌ள் இருப்ப‌தால் தென்னிந்தியாவைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் தாங்க‌ள் அதிக‌ம் க‌வ‌னிக்க‌ப்ப‌டாது இருக்கின்றோம் எனறு நினைக்கும் நிலை இருக்கிற‌து என்றார்.

இர‌ண்டாவது கேள்வியாக‌ என்ற‌ எப்ப‌டி த‌மிழ்ப்ப‌ட‌ங்க‌ளில் Gay, Lesbians சித்த‌ரிக்க‌ப்ப‌டுகின்றார்க‌ள் கேள்வி கேட்க‌ப்ப‌ட்ட‌து. த‌மிழ்ப்ப‌ட‌ங்க‌ளே எங்க‌ள‌ ச‌மூக‌த்தின் முக‌ங்க‌ளாக‌ (அதாவ‌து அதிகமானோர் பார்ப்ப‌வ‌ர்க‌ள் என்ற‌வ‌கையில்) இருப்ப‌த‌னால் இந்த‌க்கேள்வி கேட்க‌ப்ப‌ட்ட‌தாய்க் கூற‌ப்ப‌ட்ட‌து. அரவாணிக‌ள்/திருந‌ங்க‌ளைக‌ள் போல‌ எவ்வித‌ மாற்ற‌முமின்றி மிக‌க்கேவ‌ல‌மான‌ முறையிலேயே அனைத்து விளிம்புநிலையின‌ரும் சித்த‌ரிக்க‌ப்ப‌டுகின்றார்க‌ள் என்ப‌தே ப‌ல‌ரின் பொதுக்க‌ருத்தாய் இருந்த‌து 'வேட்டையாடு விளையாடு'வில் வ‌ரும் வில்ல‌ன்க‌ளை ஓரின‌ப்பாலாக்கி ந‌கைச்சுவை என்ற‌ பெய‌ரில் அது வ‌ன்ம‌மாய் வெளிப்ப‌ட்ட‌து ப‌ல‌ரால் இங்கே சுட்டிக்காட்ட‌ப்ப‌ட்ட‌து. அதேபோன்று இவ்வாறான‌ விளிம்புநிலையின‌ரை இய‌ல்பாய்காட்டும் எந்த‌ சாத‌க‌மான‌ முய‌ற்சியும் த‌மிழ்ச்சூழ‌லில் காட்ட‌ப்ப‌ட‌வில்லை என்ப‌தையும் குறிப்பிட்டிருந்தோம்.

மூன்றாவ‌து கேள்வியாக‌, க‌ன‌டாவில் ஓரின‌ப்பாலின‌ர் திரும‌ண‌ம் செய்வ‌தை ஏற்றுக்கொள்ளும் ச‌ட்ட‌ம் குறித்து என்ன‌ நினைக்கின்றீர்க‌ள்? என‌க் கேட்க‌ப்ப‌ட்ட‌து. அனைவ‌ரும் இச்ச‌ட்ட‌ம் ஏற்றுக்கொள்ள‌க்க்கூடிய‌து; வ‌ர‌வேற்க‌த்த‌க்க‌து என்று கூறினோம். அதேச‌ம‌ய‌ம் இந்த‌ச் ச‌ட்ட‌ம் இவ்வாறானவ‌ர்க‌ளை ச‌மூக‌த்தில் இய‌ல்பான‌வ‌ர்க‌ளாய் ஏற்றுக்கொள்ளாது அடையாள‌ப்ப‌டுத்தி வேறுப‌டுத்தி வைத்திருக்கும் அபாய‌முண்டு . என‌வே இவ்வாறான‌வ‌ர்க‌ளை இய‌ல்பாய் பொதுச்ச‌மூக‌ம் ஏற்றுக்கொள்ளும்வ‌ரை தொட‌ர்ச்சியான‌ போராட்ட‌ங்க‌ள் நிக‌ழ்த்த‌ப்ப‌டுத‌ல் அவ‌சிய‌மான‌து என்றும் க‌வ‌ன‌ப்ப‌டுத்தினோம். எனெனில் இனி ஓரின‌ப்பாலின‌ருக்கான‌ உரிமைக‌ளையோ அல்ல‌து அவ‌ர்க‌ள் ஒடுக்கப்ப‌டுவ‌தையோ குறிப்பிட்டால் 'அதுதானே ஏற்க‌ன‌வே ச‌ட்ட‌மிருக்கிற‌து;அது பார்த்துக்கொள்ளும் ' என்று -தொட‌ர்ச்சியாய் செய்ய‌வேண்டிய‌ போராட்ட‌த்தை- அட‌க்கிவிடும் வாய்ப்பு அதிகார‌வ‌ர்க்க‌ங்க‌ளிற்கும், ம‌த‌ம்சார்ந்த‌ அமைப்புக்க‌ளிற்கும் பொதுப்புத்தியிற்கும் ஏற்பட்டுவிடும் என்ற‌ அபாய‌த்தைச் சுட்டிக்காட்டினோம்.

3.
இக்கேள்விக‌ளுக்குப் அப்பால் பிற‌கு இன்னொரு கேள்வி டன்ஸ்ர‌னின் ந‌ண்ப‌ர்க‌ளால் முன்வைக்க‌ப்ப‌ட்ட‌து. அதாவ‌து பெற்றோராக‌ இருக்கும்/இருக்க‌ப்போகும் நீங்க‌ள் உங்க‌ள் ம‌க‌னோ/ம‌க‌ளோ தான் த‌ற்பாலின‌த்த‌வ‌ர் என்று கூறினால் உங்க‌ள‌து எதிர்வினை எப்ப‌டியிருக்கும் ?‌. ப‌ல்வேறு க‌ருத்துக்க‌ள் இக்கேள்வியை முன்வைத்துச் சொல்ல‌ப்ப‌ட்ட‌ன‌. சில‌து மிகுந்த‌ அபத்த‌மாக‌வும் இருந்த‌ன‌. அதைத் த‌னிம‌னித‌ர்க‌ளின் க‌ருத்து என்றில்லாது பொதுப்புத்தி சார்ந்த‌ க‌ருத்துக்க‌ள் என்ற‌வ‌கையிலும் த‌ம‌து ம‌ன‌தில் உள்ள‌த்தை வெளிப்ப‌டையாக‌ச் சொல்கின்றார்க‌ள் என்ற‌வ‌கையிலும் அவ‌ற்றை ட‌ன்ஸ்ர‌னும் அவ‌ரின் ந‌ண்ப‌ர்க‌ளும் எடுத்துக்கொண்டாலும் என‌க்கு -த‌னிப்ப‌ட்ட‌வ‌ளவில்- எரிச்ச‌லாக‌வே இருந்தது. முக்கிய‌மாய் ஒருவ‌ர், சிறார்க‌ளாய்/ப‌தின‌ம‌ங்க‌ளில் இருக்கும்போது த‌ற்பால் சேர்க்கையில் க‌ட்டாய‌மாய் ஈடுப‌டுத்த‌ப்ப‌டுவ‌தால் அவ‌ர்க‌ள் பிற்கால‌த்தில் அப்ப‌டியாகிவிடும் அபாய‌ம் இருக்கிறது என்றார். இதை ம‌றுத்து சும‌தி அதை பாலிய‌ல் துஷ்பிர‌யோக‌மாக‌வே (sexual abuse) எடுக்க‌வேண்டுமே த‌விர‌ ஒரு உற‌வாய் எடுக்க‌வேண்டிய‌தில்லை என‌க்குறிப்பிட்டார். நானும் அதேயே ஆண்க‌ள்/பெண்க‌ள் த‌னியே விடுதிகள்/சிறைக‌ள் போன்ற‌வ‌ற்றில் இருக்கும்போது த‌ற்பால் உற‌வில் ஈடுப‌டுகின்றார்க‌ள். அது நிச்சய‌ம் பாலிய‌ல் வ‌ற‌ட்சியால் (sexual starvation) ஏற்ப‌டுவ‌தே த‌விர‌,இய‌ல்பான‌ ஓரினபாற் சேர்க்கையாய் இருப்ப‌தில்லை. எனெனில் பிற‌கு பொதுவெளிக்குள் அவ‌ர்க‌ள் வ‌ரும்போது த‌ம‌து பாலிய‌ல் உற‌வை இய‌ல்பாய்த் தேர்ந்தேடுக்கின்றார்க‌ள். ஆகவே பாலிய‌ல் வ‌றட்சியால் வ‌ரும் த‌ற்பால் உற‌வுக‌ளையும், இய‌ல்பாய் வ‌ரும் த‌ற்பால் உற‌வுக‌ளையும் ஒன்றாய்ச் சேர்த்துக் குழ‌ப்ப‌க்கூடாது என்றும் குறிப்பிட்டேன். அவ்வாறு பார்த்தால் ஆண்கள்/ பெண்க‌ள் என‌த் தனித்த‌னியே ஹொஸ்ட‌ல்க‌ளில் த‌ங்கியிருந்த‌வ‌ர்க‌ளில் பெரும்பாலானோர் பிற்கால‌த்தில் த‌ற்பால் சேர்க்கையாள‌ராக‌ இருக்க‌வெண்டும். ஆனால் அவ்வாறான‌ விகித‌ம் அதிக‌ம் இருப்ப‌த‌ற்காய் எந்த‌த் த‌ர‌வையும் நான் அறிந்த‌தில்லை என‌வும் குறிப்பிட்டேன் (நிகழ்வில் நான் சொல்ல‌வ‌ந்த‌தைச் ச‌ரியாக‌க் குறிப்பிட்டேனோ தெரிய‌வில்லை)

உரையாட‌லின் முடிவில், ட‌ன்ஸ்ர‌ன் த‌மிழ்ச்ச‌மூக‌த்தில் ஓரின‌ப்பாலின‌ராய் இருப்ப‌த‌ன் அவ‌திக‌ளையும் ப‌த‌ற்ற‌ங்க‌ளையும் முன்வைத்து சில‌ விட‌ய‌ங்க‌ளையும் கூறினார். உதார‌ண‌மாய் நான்கு ச‌கோத‌ர‌க‌ளுட‌ன் பிற‌ந்த‌ த‌ன‌க்கு த‌ன்னை த‌ற்பால் சேர்க்கையாள‌ர் என‌ பொதுவெளியில் அடையாள‌ப்ப‌டுத்த‌ல் (ஒர‌ள‌வு) எளிதாய் இருப்ப‌தைப் போன்று, ச‌கோத‌ரிக‌ளுட‌ன் பிற‌ந்த‌ ஒரு த‌ற்பால் சேர்க்கையாள‌ருக்கு எளிதாக‌ இருப்ப‌தில்லையென்றார். எனெனில் 'உன‌து ச‌கோத‌ர‌ர் த‌ற்பால்சேர்க்கையாள‌ர்' என்று அச்ச‌கோத‌ரிக‌ளின் திரும‌ண‌வாழ்வு ந‌ம் ச‌மூக‌த்தில் குழ‌ப்ப‌டும் சாத்திய‌ங்க‌ள் நிறைய‌ உள்ள‌தென‌க் குறிப்பிட்டார். மேலும் த‌மிழில் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும் உற‌வு முறை அழைப்புக்க‌ளிலும் சிக்க‌ல்க‌ள் த‌ங்க்ளைப் பொறுத்த‌வ‌ரை உள்ள‌தென்று குறிப்பிட்டார். உதார‌ண‌மாய் த‌ன‌து ச‌கோத‌ர‌ரின் ம‌க‌ன் த‌ன்னைச் சித்த‌ப்பா என்று அழைக்கின்ற‌வ‌ர். ஆனால் த‌ன‌து துணையை ச‌கோத‌ர‌ரின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போகும்போது எவ்வாறு அவ‌ரை அழைப்ப‌து போன்ற‌ சிக்க‌ல்க‌ள் இருக்கின்ற‌தென்றார். சிறிய‌ விட‌ய‌ங்க‌ளாய் நாம் க‌வ‌னிக்காத‌ இம்மாதிரியான‌வை பெரும் 'அர‌சிய‌லாய்' இருப்ப‌தை நாம் உண‌ர்ந்துகொள்ள‌லாம். இவ‌ற்றுக்கு எல்லாம் தீர்வுக‌ளை அடைவ‌த‌ற்கு ஓரின‌பாலாருக்கு ம‌ட்டுமில்லை அவ‌ர்க‌ளைப் புரிந்துகொள்ள அக்க‌றைப்ப‌டும் ந‌ம‌க்கும் இருக்கின்ற‌து என்ப‌தை ஒருபோதும் ம‌றந்துவிட‌முடியாது.


புகைப்ப‌ட‌ங்க‌ள்: சென்ற‌வ‌ருட‌ம் (2009) றொறொண்டோவில் ந‌ட‌ந்த‌ Pride Week ன்போது எடுக்க‌ப்ப‌ட்ட‌வை

*ட‌ன்ஸ்ர‌னும், அவ‌ரின் ந‌ண்ப‌ர்க‌ளும் இத் த‌லைப்பிலேயே த‌ம‌து அம‌ர்வைச் செய்திருந்த‌ன‌ர்

(ந‌ம் சூழ‌லில் இவ்வாறான‌ விட‌ய‌ங்க‌ள் விரிவாக‌ உரையாட‌ப்ப‌டுவ‌தில்லை என்ற எண்ண‌த்தாலேயே நிக‌ழ்வில் நிகழ்ந்த‌ அனைத்தையும் இய‌ன்ற‌வ‌ரை தொகுத்திருக்கின்றேன்)

சாந்தனின் படைப்புலகம்

Monday, January 04, 2010

'விளிம்பில் உலாவுதல்' குறுநாவல்களின் தொகுப்பை முன்வைத்து
1.

ஈழ‌த்துப் ப‌டைப்பாளிக‌ளில் முக்கிய‌மான‌ ஒருவ‌ரான‌ சாந்த‌ன் நெடுங்கால‌மாக‌ எழுதி வ‌ருகின்ற‌வ‌ர். ஈழ‌த்தில் முற்போக்கு அலை, வீச்சுட‌ன் இருந்த‌ எழுப‌துக‌ளில் அத‌னுள் எற்றுப்ப‌ட்டுப்போகாம‌ல் த‌ன‌க்குரிய‌ கதை சொல்லும் முறையை இவர் த‌னித்துவ‌மாய்க் கொண்ட‌வ‌ர். சாந்த‌னின் தொட‌க்க‌ கால‌ க‌தைக‌ள் ‍‍-அவ‌ரே ஓரிட‌த்தில் ‍குறிப்பிடுவ‌தைப் போல‌-பேருந்துக‌ளிலும் புகைவ‌ண்டிக‌ளிலும் நிக‌ழ்ப‌வை. எளிய‌ ம‌னித‌ர்க‌ளும், சாதார‌ண‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளும் சாந்த‌னின் க‌தையுல‌க‌த்தில் பெரும்பாலும் நுழைந்தாலும் அவ‌ர்க‌ளை/அவ‌ற்றை ம‌ற‌க்க‌முடியாத‌வ‌ர்க‌ளாய் மாற்றிக்கொள்வ‌தில்தான் சாந்த‌ன் என்னும் ப‌டைப்பாளி முக்கிய‌ம் உடைய‌வ‌ராக‌விடுகின்றார். சாந்த‌ன் த‌ன‌து பாத்திர‌ங்க‌ளின் வ‌ர்ண‌னைக‌ளுக்கு அதிக‌ இட‌ம் எடுத்துக்கொள்வ‌தில்லை. பெரும்பாலான அவரது க‌தைக‌ள், ஏதோ இர‌ண்டு ம‌னித‌ர்க‌ள் க‌தைத்துக்கொண்டிருக்கும்போது -இடையில் நுழைகின்ற‌ மூன்றாவ‌து ம‌னித‌ன் எப்ப‌டி உரையாட‌லில் ப‌ங்குகொள்வானோ- அப்ப‌டியே ச‌டுதியாக‌ க‌தைக‌ள் ஆர‌ம்பித்து அதிக‌ம் அல‌ட்ட‌லில்லாது சொல்ல‌ வ‌ந்த‌தைக் கூறிவிட்டு அதேவேக‌த்தில் முடிந்தும்விடுகின்ற‌ன‌. அத‌னாலேயே அவ‌ர‌து அதிக‌ சிறுக‌தைக‌ள் ஒரு சில‌ ப‌கக‌ங்க‌ளிலோ (சிலவேளைக‌ளில் ஒரு ப‌க்க‌த்தில் கூட‌) முடிந்துவிடுகின்ற‌வையாக‌ இருக்கின்ற‌ன‌. குறுநாவ‌ல்க‌ளின் அத்தியாங்க‌ளுக்குக் கூட‌ அதிக‌ ப‌க்க‌ங்க‌ளைச் செல‌வ‌ழிக்க‌ விரும்புவ‌தில்லை சாந்த‌ன். அதனால் என்ன‌, குறைந்த‌ ப‌க்க‌ங்க‌ள் கொண்ட‌ க‌தைக‌ள் என்றாலும் சாந்த‌னின் க‌தைக‌ள் சுரீரென்று எங்கோ ம‌ன‌தில் குத்திவிட்டு ந‌க‌ர‌த்தான் செய்கின்ற‌ன‌.

ஒரு ப‌டைப்பாளி என்ப‌வ‌ர் எப்போதும் விசால‌மான‌ ம‌ன‌தோடு இருக்க‌வேண்டும். தொட‌ர்ச்சியாக‌ சுற்றியிருப்ப‌வை குறித்து அவதானித்து, வேண்டிய‌வ‌ற்றை எடுத்தும் வேண்டாத‌வ‌ற்றை வ‌டிக‌ட்டிய‌ப‌டியும் இருக்க‌வேண்டும். ப‌டைப்பாளிக‌ள் ப‌ல்வேறு மொழிக‌ளை அறிந்துவைத்திருப்ப‌தும், வித்தியாச‌மான‌ க‌லாசார‌ப்பின்ன‌ணிக‌ளில் வாழ‌ நேர்கின்ற‌போதும், ப‌டைப்புக்க‌ள் ப‌ன்மைத்துவ‌மாய் முகிழும் ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ள் அதிக‌ம் இருக்கின்ற‌ன‌ சில‌ர் எங்குபோனாலும் கிண‌ற்ற்துத‌வ‌ளையாக‌ த‌ம‌து க‌லாசார‌மும் மொழியும் ம‌ட்டுமே உய‌ரிய‌து என்று க‌த்திக்கொண்டிருப்பார்க‌ள், அவ‌ர்க‌ளை இப்போதைக்கு மறந்து விடுவோம். சாந்த‌னுக்கு த‌மிழ், சிங்க‌ள‌ம், ஆங்கில‌ம் ஆகிய மூன்று மொழிக‌ளில் ந‌ன்கு தேர்ச்சி இருக்கின்ற‌து; இர‌ஷ்ய‌மொழியை விரும்பிக் க‌ற்றுமிருக்கின்றார். அத‌ன் நிமித்த‌ம் மொஸ்கோவுக்கு -சோவிய‌த்து ஒன்றிய‌த்தின் அழைப்பின்பேரில்- ப‌ய‌ணித்துமிருக்கின்றார். 1966 - 1980 வ‌ரை க‌ட்டுப்பெத்தை, கொழும்பு, திருக்கோண‌ம‌லை போன்ற‌ யாழ்ப்பாண‌த்தைத் தாண்டிய நகரங்களில் வாழ்ந்த‌ சாந்த‌னின் அனுப‌வ‌ங்க‌ளும், ஆர‌ம்ப‌கால‌ங்க‌ளில் அவருக்கு அதிக ஈர்ப்பிருந்த‌ மார்க‌சிச‌மும் அவ‌ர‌து ப‌டைப்புல‌கிற்கு இன்னும் வளத்தைக் கொடுக்கின்றன சொந்தமண்ணைவிட்டுப் பிரிவதில்லையென்ற வைராக்கியத்தில். -1980க‌ளின் பின் யாழை விட்டு வெளியேற‌விட்டாலும்- அவ‌ரால் ஈழ‌த்தில் எல்லா ம‌க்க‌ளையும் ப‌டைப்பின் மூல‌ம் நேசிக்க‌ முடிகின்ற‌து.


'விளிம்பில் உலாவுத‌ல்' என்கின்ற‌ இத்தொகுப்பில் சாந்த‌னின் அய்ந்து குறுநாவ‌ல்க‌ள் இருக்கின்ற‌ன‌. அவை 1984 லிருந்து 2007 வ‌ரை ப‌ல்வேறு கால‌ க‌ட்ட‌ங்க‌ளில் எழுத‌ப்ப‌ட்ட‌வை. எந்த‌ ஒரு ப‌டைப்பும் அது சார்ந்த‌ நில‌ப்ப‌ர‌ப்பையும் க‌தைக்கான‌ ச‌முக‌ அரசிய‌ல் கார‌ண‌ங்க‌ளையும் நேர‌டியாக‌வோ அல்ல‌து ம‌றைமுக‌மாவோ உண‌ர்த்திக்கொண்டேயிருக்கும். புனைவுக‌ளினூடாக‌க் கூட, ஒரு கால‌க‌ட்ட‌த்தின் வ‌ர‌லாற்றைப் ப‌டிக்க‌லாம் என்று சில‌ சிந்த‌னையாள‌ர்க‌ள் குறிப்பிடுகின்றார்க‌ள். இன்றைய‌ சில‌ ஈழ‌த்து/புலம்பெய‌ர் ப‌டைப்பாளிக‌ள் நில‌த்தில் காலூன்றா வான‌த்துப் ப‌ற‌வைக‌ளாகிவிடுகின்ற‌ன‌ர் என்ப‌தும் ஒருவ‌கை அவ‌ல‌மே.

சாந்த‌னின் க‌தைக‌ளில் வ‌ரும் சாதார‌ண‌ ம‌னித‌ர்க‌ளினூடாக‌ அந்த‌க்கால‌ அர‌சிய‌ல் சூழ‌ல்க‌ளும், நிக‌ழ்த்த‌ப்ப‌டுகின்ற‌ நில‌ப்ப‌ர‌ப்புக‌ளும் துல்லிய‌மாக‌க் காட்ட‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஏற‌த்தாழ அரை நூற்றாண்டுக‌ளாய் அரசிய‌ல் ப‌த‌ற்ற‌ங்க‌ளோடேயிருக்கும் ஈழ‌த்தில் ஒவ்வொரு பிர‌தேச‌மும் அத‌ற்குரிய‌ அர‌சிய‌லைக் கொண்டிருக்கின்ற‌ன‌. யாழ்ப்பாண‌த்தில் இருப்ப‌வ‌ர்க‌ளும் கொழும்பில் இருப்ப‌வ‌ர்க‌ளும் வெவேறு சூழ‌லில் வாழ்ந்துகொண்டிருப்பார்க‌ள். அதேபோன்று யாழில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கும் ம‌ட்ட‌க்கிள‌ப்பில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்குமான‌ சூழ‌ல் வெவ்வேறு வ‌கையான‌து. யாழ்ப்பாண‌த்தில் ஒருகால‌க‌ட்ட‌த்திற்குப் பிற‌கு முற்றுமுழுதாக‌ த‌மிழ‌ர்க‌ள் ம‌ட்டுமே வாழ்ந்து வ‌ந்திருக்கின்ற‌ன‌ர். ம‌லைய‌க‌ப் ப‌குதிக‌ளிலும், கொழும்பிலும் பெரும்பான்மை சிங்க‌ள ச‌மூக‌த்தோடு வாழ்ப‌வ‌ர்க‌ளுக்கான‌ சூழ‌ல் முற்றிலும் வேறுவித‌மான‌வை. ம‌ட்ட‌க்கிள‌ப்பு, திருக்கோண‌ம‌லை, அம்பாறை போன்ற‌ எல்லைக் கிராம‌ங்க‌ளிலும், குடியேற்ற‌த்திட்ட‌ங்க‌ளோடும் வாழ்ப‌வர்க‌ளுக்கான‌ சூழ‌ல் இவையெல்லாவ‌ற்றையும் விட‌ இன்னும் வித்தியாச‌மான‌வை. யாழில் நிறைய‌க் கால‌ம் வாழ்ந்தாலும்,வெவ்வேறு பிர‌தேச‌ங்க‌ளில் வாழ்நதிருந்ததால் சாந்த‌னின் க‌தைக‌ள் அவை சொல்ல‌ப்ப‌டுகின்ற சூழ‌லில் காலூன்றியே கதை சொல்கின்றன.

2.
இத்தொகுப்பிலுள்ள‌ முத‌ற்க‌தையான‌ 'ஆரைக‌ள்' கொழும்பின் பின்புல‌த்தில் நிக‌ழ்கின்ற‌து. 1977 க‌ல‌வ‌ர‌ம் முடிந்து மீண்டு வந்து வேலை செய்யும்போது த‌மிழ‌ர்க‌ளுக்கிடையில் இருக்கும் சாதி பார்த்து ப‌ழ‌கும்/ கூட‌ச்சேர்ந்து தேநீர் குடிக்கும் ப‌ழ‌க்க‌ங்க‌ளை இன‌ங்காட்டுகின்ற‌து இக்க‌தை. எத்த‌கைய‌ அசாத‌ர‌ண‌ சூழ்நிலையாய் இருந்தால் என்ன, தொழில்ச‌ங்க‌ அமைப்புக்க‌ளாய் இருந்தால் என்ன‌, இவ‌ற்றை மீறி ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் ம‌ன‌ங்க‌ளிடையே ஊடுருவியுள்ள‌ சாதி ஒருபோதும் ம‌றைவ‌தேயில்லை என்பதை மறைமுகமாய் உணர்த்துகின்றது. நான்கு வ‌ருட‌ங்க‌ளாய் ஒரே அலுவ‌ல‌க‌த்தில் வேலை செய்தும் கதைசொல்லியைப் பார்த்து சிறிதும் புன்ன‌கைக்காத‌ த‌ன‌பால் இறுதியில் க‌தைக்க‌த் தொட‌ங்குகின்றார். அத‌ற்கு அவ‌ர் கூறும் கார‌ண‌ம் 'க‌ன‌நாளைக்குப் பிற‌கு இவ‌ன் மூர்த்திதான் சொன்னான், எட‌ போய்யா, அவ‌ன் சுண்டியெடுத்த‌ வெள்ளாள‌ன் எல்லோ எண்டு'. ஒரு உய‌ர்ந்த‌ சாதிக்கார‌ன் இன்னொருவ‌னோடு உரையாடுவ‌த‌ற்கான‌ முன் நிப‌ந்த‌னையாக‌ இருக்க‌வேண்டிய‌து, ம‌ற்ற‌வ‌ரும் உய‌ர்ந்த‌ சாதிக்கார‌ராய் இருக்க‌வேண்டும் என்ப‌தை நினைத்து, க‌தை சொல்லி ஏள‌னமாய்ச் சிரித்துக்கொள்வதோடு கதை முடிந்துவிடுகின்றது.

இர‌ண்டாவ‌து க‌தையான‌ 'உற‌வுக‌ள் ஆயிர‌ம்' ர‌ஷ்யாவில் நிக‌ழ்கின்ற‌து. க‌தை சொல்லி, கொழும்பிலிருந்த‌ கால‌த்தில், விருப்பின்பேரில் ர‌ஷ்ய‌ மொழி க‌ற்க‌, அவ‌ரை ர‌ஷ்யாவைச் சுற்றிப் பார்க்க‌ அழைக்கின்றார்க‌ள். ஈழ‌த்தில் இளைஞ‌ர்க‌ள் இய‌க்க‌ங்க‌ளாய்த் த‌ங்க‌ளை த‌க‌வ‌மைத்துக் கொள்கின்ற‌ கால‌க‌ட்ட‌ம் அது. மிக‌வும் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு வேலையிலிருந்து விடுமுறை எடுத்து க‌தைசொல்லி ர‌ஷ்யாவுக்குப் ப‌ய‌ணிக்கின்றார். அங்கே ப‌ல்வேறு நாடுக‌ளிலிருந்து வ‌ந்த‌ ப‌ல்வேறும மொழிக‌ளைப் பேசுப‌வ‌ர்க‌ளோடு ப‌ழ‌கும் ச‌ந்த‌ர்ப்ப‌ம் வாய்க்கிற‌து. அந்த‌வேளையில் கேர‌ளாவிலிருந்த‌ வ‌ந்த‌ கீதாவுக்கும் க‌தை சொல்லிக்கும் இடையில் மெல்லிய‌ காத‌ல் முகிழ்வ‌து அழ‌காக‌ச் சொல்ல‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. ஆனால் வெளிநாட்டுப்ப‌ய‌ண‌த்தைக் கூட‌க் குதூக‌லிக்க‌ முடியாது இடையில் இல‌ங்கையிலிருந்து ஒரு செய்தி(வ‌த‌ந்தி) ப‌ர‌வுகின்ற‌து. க‌ட்டுநாய‌க்காவில் போய் இற‌ங்குகின்ற‌ த‌மிழ‌ர்க‌ளையெல்லாம் இல‌ங்கை அர‌சு பிடித்துக்கொண்டு போய் சிறையில் அடைக்கிற‌தென்று. அந்த‌ அவ‌திக‌ளினால் க‌தைசொல்லியின் காத‌ல் கைந‌ழுவிப் போவ‌தையும் எப்ப‌டி க‌தைசொல்லி போய் க‌ட்டுநாய‌க்காவில் இற‌ங்க‌ப்போகின்றார் என்ற‌ ப‌தைபதைப்ப‌தையும் இக்க‌தை ப‌திவுசெய்கின்ற‌து. இக்க‌தையை வாசிக்கும்போது ச‌ட்டென்று ம‌ன‌தில் வ‌ந்து தோன்றிய‌து அசோக‌மித்திர‌னின் 'ஒற்ற‌ன்' நாவ‌ல். எங்கிருந்தோ வ‌ந்து புதிய‌ சூழ‌லில் கொஞ்ச‌கால‌ம் ந‌ட்பாய்ப் ப‌ழ‌கி, பிற‌கு என்றென்றைக்குமாய் அவ‌ர்க‌ளில் ஒருவ‌ரையும் பார்க்க‌முடியாது பிரிகின்ற சூழ‌ல் மிகுந்த‌ நெகிழ்ச்சி த‌ர‌க்கூடிய‌து. அசோகமித்திர‌னின் 'ஒற்ற‌னும்', சாந்த‌னின் 'உற‌வுக‌ள் ஆயிர‌மும்' வெவ்வேறு க‌தைப் ப‌ர‌ப்பைக் கொண்டிருந்தாலும், இர‌ண்டிலும் க‌தைசொல்லிக‌ள் த‌ங்க‌ளுக்கு இதுவ‌ரை ப‌ழ‌க்க‌ப்ப‌டுத்தாத‌ புதிய‌ நாடொன்றுக்கு முத‌ன்முறை போகின்றனர். அத்தோடு தாங்க‌ள் இதுவ‌ரை பார்த்த‌றியாத‌ ம‌னித‌ர்க‌ளையும், க‌லாசார‌ங்க‌ளையும் த‌ங்க‌ள் பார்வையிலிருந்து பார்த்து எந்த முன்முடிவுகளும் எடுக்காது, அம்ம‌னித‌ர்க‌ளை அவர்களின் இயல்புகளோடு ஏற்றுக்கொள்வ‌துமென‌வும்... ஒத்த‌ த‌ன்மையுடைய‌வ‌னாய் இருக்கின்றன. தஸ்தயேவ்ஸ்கியின் 'வெண்ணிற‌ இர‌வு'க‌ளை வாசித்த‌ நில‌ப்ப‌ர‌ப்புக்கு தாங்க‌ள் உண்மையில் நிக‌ழ்கால‌த்தில் இருக்கின்றோம் என்று கீதாவும் க‌தைசொல்லியும் உரையாடும் பகுதியும், கீதா காத‌லுடன் ஒரு ம‌லையாள‌ப் பாட‌லை குழுவாய் இருக்கும்போது பாடுவ‌தை அப்ப‌டியே என்றென்னைக்குமாய் கதைசொல்லி நினைவில் வைத்திருப்ப‌துமான பகுதியும் வாசிப்பவருக்கு நெகிழ்ச்சி த‌ர‌க்கூடிய‌வையாகும்.

'ம‌னித‌ர்க‌ளும் ம‌னித‌ர்க‌ளும்' என்கின்ற‌ க‌தை 1977ம் ஆண்டு க‌ல‌வ‌ர‌ம் நிக‌ழும்போது கொழும்பில் சிக்கிக்கொண்ட‌ சில‌ குடும்ப‌ங்க‌ளின் க‌தையை அந்த‌ப் ப‌த‌ற்ற‌ங்க‌ளோடு முன்வைக்கின்ற‌து. கொழும்பில் இருப்ப‌து சாத்திய‌மில்லை என்கின்ற‌ நிலையில் அங்கிருக்கும் த‌மிழ்ம‌க்க‌ள் த‌ங்க‌ள் சொந்த‌ இட‌ங்க‌ளுக்கு புற‌ப்ப‌ட‌த்தொட‌ங்குகின்றார்க‌ள். அவ்வாறான‌வ‌ர்க‌ள் முத‌லில் அக‌தி முகாமில் த‌ங்க‌வைக்க‌ப்ப‌ட்டு க‌ப்ப‌லில் ஏற்றிச் செல்ல‌ப்ப‌டுகின்றார்க‌ள். அஃதொரு நெடிய‌ ப‌ய‌ண‌ம். இவ்வாறு போவ‌தை விரும்பாத‌ சில‌ குடும்ப‌ங்க‌ள் புகைவ‌ண்டியில் போவ‌த‌ற்குத் தீர்மானிக்கின்ற‌ன‌ர். இர‌விலிருந்து விடிகாலை வ‌ரை ஊர‌டங்குச் ச‌ட்ட‌ம். இவற்றினூடாக‌ க‌தைசொல்லியும் அவ‌ர‌து ம‌னைவியும் இன்னொரு குடும்ப‌மும் த‌ப்பிப் போகின்றார்க‌ள் என்ப‌தைப் ப‌ற்றிய‌தே இக்க‌தை. க‌தையில் இத்த‌கைய‌ அவ‌திக‌ளுக்குள்ளும் த‌ங்க‌ளைக் காப்பாற்றும் ஒரு சிங்க‌ள ஆட்டோக்கார‌ருக்கும் அவ‌ரின் உத‌விக்குமாய் க‌தை சொல்லி நெகிழ்வ‌து மொழிக‌ளையும், இன‌ங்க‌ளையும் தாண்டிய‌ ம‌னித‌ர்க‌ளுக்குள்ள காருண்ய‌த்தைத் தெளிவாக‌க் காட்டுகின்ற‌து

'எழுத‌ப்ப‌ட்ட‌ அத்தியாய‌ங்க‌ள்' குறுநாவ‌ல் சுதும‌லையில் புலிக‌ளின் த‌லைமையை இந்திய‌ இராணுவ‌ உல‌ங்குவானூர்த்திக‌ள் ஏற்றிச்செல்வத‌ற்கான‌ காத்திருப்பில் தொட‌ங்கும் க‌தை க‌ட‌ந்த‌ கால‌த்தையும் நிகழ்காலத்தையும் நோக்கி முன்/பின்னாக ந‌க‌ர்கின்ற‌து. அவ்வ‌வ்போது வ‌ந்து போகும் ச‌மாதான‌ முயற்சிகளில் ம‌க்க‌ள் ந‌ம்பிக்கை கொள்வ‌தையும், இவ்வாறான‌ வானூர்த்திக‌ளே த‌ன‌க்கு நெருக்க‌மான‌வ‌ர்க‌ளை முந்தைய ஆண்டுக‌ளில் ப‌லியும் எடுத்தும் இருக்கின்ற‌து என்ப‌தையும் கதைசொல்லி நினைவுகூர்கிறார். காத்துக்கொண்டிருக்கும்போது வ‌ழ‌மைபோல‌ அர‌சிய‌லும் பேச‌ப்ப‌டுகின்ற‌து. ஒரு கால‌த்தில் ந‌ம்பிக்கை த‌ர‌க்கூடிய‌தாய் இருந்த‌ இட‌துசாரி இய‌க்க‌த்தில் தான் இணைந்த‌தையும், அதிலிருந்த‌ சில‌ அர்ப்ப‌ணிப்புள்ள‌ த‌லைவ‌ர்க‌ளைப்ப‌ற்றியும் க‌தைசொல்லி அசைபோடுகின்றார். வ‌ட‌க்கு கிழ‌க்கிற்கு இணைப்புக்கு ஒரு ம‌க்க‌ள் வாக்கெடுப்பை வைப்ப‌துபோல‌ ஏன் வ‌ட‌க்கும் கிழ‌க்கும் முழு இலங்கையிலிருந்து பிரிந்துபோவ‌த‌ற்கான‌ ஒரு தேர்த‌லை இவ‌ர்க‌ள் ந‌ட‌த்த‌க்கூடாதென‌ ஒரு இட‌துசாரி வினாவ‌ச் செய்ததை கதை சொல்லி அசைபோடுகின்றார். இந்த‌ ச‌ம‌ய‌த்தில் ஒருவ‌ர் 'நீங்க‌ள் யாரோடு?' என்று கேட்கும்போது க‌தைசொல்லி 'நான் ச‌ன‌ங்க‌ளோடு' என்று கூறுவ‌தோடு ம‌க்க‌ள் ம‌ய‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட‌வேண்டிய‌ போராட்ட‌ம் இடைந‌டுவில் சிதைந்துபோன‌து குறித்தும் கவலைப்படுகின்றார். ஈழ அரசியலில் உன‌து நிலைப்பாடு என்ன‌வென்கின்ற‌போது, 'ச‌ன‌ங்க‌ள் எதைத் தீர்மானிக்கின்றார்க‌ளோ, அதுதான். என்னைப் பொறுத்த‌ளவிலை த‌மிழ‌ர்க‌ள் ஒரு த‌னித் தேசிய‌ இன‌ம். அவ‌ர்க‌ளுடைய‌ சுய‌நிர்ண‌ய‌ உரிமை ம‌றுக்க‌ப்ப‌டமுடியாதது. எந்த‌வித‌ சுர‌ண்ட‌ல்க‌ள் பாகுபாடுக‌ள், அட‌க்குமுறைக‌ள், அடிமைத்த‌ன‌ங்க‌ளுக்கும் ஆளாகாம‌ல் இறைமையோடும் கெள‌ர‌வத்தோடும் நாங்க‌ள் வாழ‌ ஏற்ற‌ வ‌ழி எந்த‌ வ‌ழி ஏற்ற‌து என்ப‌தைத் தெரிவு செய்கிற‌ சுத‌ந்திர‌ம் அவ‌ர்க‌ளுக்கு உண்டு. எந்த‌ வித‌த்திலென்றாலும் அவ‌ர்க‌ளுக்கு நியாய‌மும் பாதுகாப்பும் இருக்க‌வேண்டும். பிர‌ச்சினை தீர‌வேண்டும் அதுதான் முக்கிய‌ம்' என்று கதைசொல்லும் ப‌குதி இன்றைய‌ கால‌த்திற்கும் பொருந்த‌க்கூடிய‌தே.

'அடையாள‌ம்' என்கின்ற‌ க‌தை, நீண்ட‌ கால‌ம் க‌தைசொல்லி யாழ்ப்பாண‌த்தில் இருந்துவிட்டு ந‌ண்ப‌ரொருவ‌ரின் அழைப்பின்பேரில் இந்தியாவுக்கு ஒருவார‌ம் செல்கின்ற‌தைப் ப‌ற்றிய‌ க‌தை. யாழ்ப்பாண‌த்திலிருந்து கொழும்புக்கு வ‌ரும் க‌தைசொல்லிக்கு கொழும்பு மிகுந்த‌ ப‌த‌ற்ற‌த்தைத் த‌ருகின்ற‌து. பொலிஸ் ப‌திவு, பாதுகாப்புச் சோத‌னைக‌ள் போன்ற‌வ‌ற்றையெல்லாம் மிகுந்த‌ பய‌த்துட‌னேயே எதிர்கொள்கின்றார். வீதியில், லொட்ஜில் ச‌ந்திக்கும் த‌மிழ‌ர்க‌ளெல்லாம் த‌ன‌து ப‌ழைய‌கால‌த்தை நினைவுப‌டுத்தி பொலிசில் சிக்க‌வைத்து வைத்துவிடுவார்க‌ளோ என்ற‌ ப‌த‌ற்ற‌ம் தொட‌ர்ந்த‌ப‌டியே அவருக்கு இருக்கின்ற‌து. என்றாலும் கிட்ட‌த்த‌ட்ட‌ ப‌தினைந்துவ‌ருட‌ங்க‌ளுக்குப் பிற‌கு ச‌ந்திக்கும் சிங்க‌ள் ந‌ண்ப‌ர் எவ்வித‌ மாற்ற‌மில்லாது ந‌ட்புட‌ன் இருப்ப‌து க‌தைசொல்லிக்கு நிம்ம‌தியாக‌ இருக்கிறது.

இந்தியாவிலிருக்கும் சொற்ப‌ வார‌த்திலும் எப்போது கொழும்புக்குத் திரும்பிப் போவ‌து.., அங்கே என்ன‌ ந‌ட‌க்கின்ற‌து என்று அந்த‌ர‌த்தோடே க‌தைசொல்லி ஓடிக்கொண்டிருக்கின்றார். அந்த‌ப்ப‌ய‌ண‌த்தின்போது நீல‌ ப‌த்ம‌நாப‌ன், அருந்த‌தி ரோயையெல்லாம் ச‌ந்திப்ப‌தாக‌க் கூற‌ப்ப‌டுகின்ற‌து. க‌ட்டுநாய‌க்காவில் வ‌ந்து இற‌ங்கும்போது இவ‌ரை ஏற்றிச்செல்ல‌ எவ‌ருமில்லாது ஓட்டோவொன்றில் செல்லும்போது க‌தைசொல்லிக்கும், ஒரு சிங்க‌ள முதிய‌வ‌ருக்கும், இவ‌ர் முத‌ன்முத‌லான் சுவைக்கும் பிய‌ருக்கும் இடையில் நிக‌ழும் உரையாட‌ல் நினைவில் நிற்க‌க்கூடிய‌து. த‌ன்னையொரு த‌மிழ‌னாக‌ சோதனைச்சாவடிகளில் காட்டாதிருக்க‌ பிய‌ரைக் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் குடித்துக்கொண்டு இருப்பது காப்பாற்றும் என்று இவர் ந‌ம்புகின்றார். இறுதியில் பார்த்தால் அந்த‌ பிய‌ர் கானில் 'ப்ளு ரைக‌ர்' என்ற பெய‌ருட‌ன் புலிப்ப‌ட‌மொன்றும் இருக்க‌ த‌ன‌து அச‌ட்டுத்த‌ன‌ம் க‌தைசொல்லிக்கு புரிகின்ற‌மாதிரி க‌தை முடியும்.

சாந்த‌ன் இதுவ‌ரை த‌மிழில் 15 தொகுப்புக்க‌ளையும், ஆங்கில‌த்தில் 4 தொகுப்புக்க‌ளை வெளியிட்டிருக்கின்றார். சாந்த‌னின் எழுப‌துக‌ளின் வ‌ந்த‌ தொகுப்பைப் பார்க்கும்போது அங்கே வ‌ரும் க‌தைசொல்லிக‌ள் ப‌ய‌ண‌த்தை உற்சாக‌மாய் மேற்கொள்ப‌வ‌ர்க‌ளாய்... நினைத்த‌ நேர‌த்தில் கொழும்பிலிருந்து யாழுக்கும், திரும‌லைக்கும் போக‌க்கூடிய‌வ‌ர்க‌ளாய் இருக்கின்றார்க‌ள். ஆனால் இறுதியாய் வ‌ந்த‌ இததொகுப்பில் உள்ள கதைகளில் (80க‌ளின் ந‌டுப்ப‌குதிக்கு பின்) இப்ப‌ய‌ண‌ங்க‌ள் எவ்வ‌ளவு அல்ல‌ல்க‌ளுக்கும் ப‌தற்றங்க‌ளுக்குமிடையில் நிக‌ழ்கின்ற‌து என்ப‌தை விள‌ங்கிக்கொள்ள‌ முடியும். உண்மையில் இந்த‌ப் 'ப‌யண‌ங்க‌ளின் க‌தை'க‌ளினூடாக‌க் கூட‌ நாம் ஈழ‌த்தின் அர‌சியல் நில‌வ‌ர‌ங்க‌ளைப் புரிந்துகொள்ள‌ முடியும். எவ்வாறு த‌மிழ‌ர்க‌ளுக்கான‌ அர‌சிய‌ல் சூழ‌ல் ஈழத்தில் மாறிக்கொண்டிருந்த்ன என்பதை சாந்த‌னின் 70க‌ளின் கொழும்புச் சூழ‌லை முன்வைத்து எழுத‌ப்ப‌ட்ட‌ க‌தைக‌ள் முக்கிய‌ சாட்சிக‌ளாகும். சாந்த‌னின் யாழுக்கு அப்பால் வாழ்ந்த‌ சூழ்நிலை சிங்க‌ள ம‌க்க‌ளை வெறுத்தொதுக்காம‌ல் த‌மிழ‌ர்க‌ளின் மீதான‌ பேரினவாதத்தின் ஒடுக்குமுறையை மட்டுமே கூற‌க்கூடிய‌தாக‌ இருப்பது கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும்.

இந்த‌ அய்ந்து குறுநாவ‌ல்க‌ளில் -சாந்த‌னின் ஏனைய‌ அநேக‌ சிறுக‌தைக‌ளைப் போல‌வே- எந்த‌ப் பிர‌ச்சார‌த்தொனியும் புல‌ப்ப‌ட‌வில்லை. 'எழுத‌ப்ப‌ட்ட‌ அத்தியாய‌ங்க‌ள்' கதையில் கூட‌ அர‌சிய‌ல் வெளிப்ப‌டையாக‌ப் பேச‌ப்ப‌டுவ‌து, யாழ் சூழ‌லில் அவ்வாறு மக்கள் இருப்பது இய‌ல்பான‌ ஒன்றென‌க் காட்சிப்ப‌டுத்துவ‌த‌ற்கேயாகும். 1977ம் இன‌க்க‌ல‌வ‌ர‌த்தில் த‌ப்பிப்போவ‌த‌ன் ப‌த‌ற்ற‌த்தைத் 'ம‌னித‌ர்க‌ளும் ம‌னித‌ர்க‌ளும்' கதையில் த‌க்க‌வைத்திருந்தாலும் புகைவ‌ண்டியில் ஏறுவ‌தோடு க‌தையை சாந்தன் முடித்துவிடுகின்றார். தேவைக்க‌திம‌காய் புகைவ‌ண்டிப்ப‌ய‌ண‌த்தில் என்ன‌வெல்லாம் நிக‌ழ்ந்திருக்கும் என்றேல்லாம் விப‌ரிக்க‌வில்லை. அநேகமான கதைகளில் சாந்தன் வாசிப்பவருக்கான வெளியை கதை முடிந்தபின்னும் தருகின்றார். உதாரண்மாய் 'உறவுகள் ஆயிரம்' கதையில், கதை சொல்லி கட்டுநாயக்காவில் போயிறங்கும்போது என்ன நிகழப்போகின்ற பதற்றத்தை வாசிப்பவரிடையே படியவிட்டாலும், கதை மொஸ்கோவில் விமானம் ஏறுவதோடு முடிந்துவிடுகின்றது. கட்டுநாயக்காவில் என்ன நிகழ்ந்திருக்கும் என்ற வெளி வாசகருக்கு திறந்துவிடப்படுகின்றது. கட்டுநாயக்காவில் இறங்கி எளிதாக வெளியேறியவர் ஒருமாதிரியும், அங்கே சோதனைக் கெடுபிடிகளால் சிக்குப்பட்டு அல்லற்பட்டவர் வேறொரு மாதிரியுமாய் இக்கதையை வாசித்து முடிப்ப‌த‌ற்கான‌ வெளி தரப்படுகின்றது.

'உற‌வுக‌ள் ஆயிர‌ம்' க‌தையில் க‌றுப்பின‌த்த‌வ‌ர்க‌ளை 'நீக்ரோக்க‌ள்' என்று ஓரிட‌த்தில் குறிப்பிடுகின்ற‌து.இன்றைய‌ வ‌ழ‌க்கில்லாத‌, ஒரு இன‌த்துவேச‌ வார்த்தையாக‌ ம‌திப்பிட‌ப்ப‌டுகின்ற‌ இவ்வார்த்தையை சாந்த‌ன் அடுத்த‌ ப‌திப்பிலாவ‌து திருத்திக்கொள்ள‌வேண்டும். அத்தோடு 'ஆரைக‌ள்' க‌தையில் கொழும்பு போன்ற‌ பல்லின‌ச்சூழ‌லில் இருந்துகொண்டு, க‌ல‌வ‌ர‌த்தால் பாதிக்க‌ப்ப‌ட்டும் சாதி பார்ப்ப‌தை சாந்த‌ன் கேலி செய்தாலும், அதை முழுமையாக‌ தெளிவாக‌ ம‌றுக்காம‌ல் இவ்வாறான‌ விட‌ய‌ங்க‌ளை ஒரு ஏள‌ன‌ப் புன்ன‌கையால் எளிதாக‌க் க‌ட‌ந்துவிட‌முடியுமா என்ப‌தும் கேள்விக்குரிய‌து.  எனெனில் நாம் சாதி குறித்த‌ க‌தையாட‌ல்க‌ளில் மிக‌த் தீவிர‌மாக‌வே எதிர்வினையாற்ற‌ வேண்டியிருக்கிற‌து.

ஏறத்தாழ 40 வருடங்களுக்கு மேலாய் யாழ் சூழலில் இருந்து எழுதிக்கொண்டிருக்கும் சாந்தனுக்கு உரிய அங்கீகாரம் தமிழ்ச்சூழலில் கொடுக்கப்படவில்லையெனவே எண்ணத்தோன்றுகின்றது. சனங்களுக்கான கதையை அந்தச் சனங்களில் ஒருவராய் போர்ச்சூழலுக்குள் நின்று எழுதிக்கொண்டிருப்பவர்களை நமது தமிழ் கூறும் நல்லுலகம் அதிகம் கவனித்ததாய் வரலாறுகளும் இல்லை என்பதும் உண்மையே. ஈழத்தின் அரசியல் வரலாற்றை -புனைவுக‌ளினூடாக‌- அறிந்துகொள்ள விரும்புவர்கள், 1970களிலிருந்து 2000 வரையான‌ சாந்த‌னின் கதைகளை வாசித்தால் தமிழர்கள் எவ்வாறு வரலாற்றில் நுட்ப‌மாய் திட்ட‌மிட்டு ஒடுக்கப்பட்டு வந்திருக்கின்றார்கள் என்பதையறிய முடியும். அதேபோன்று தமிழர்களின் அரசியல் வரலாற்றில் விடப்பட்ட தவறுகளும், இழைக்கப்பட்ட துரோகங்களும் கூட சாந்தனின் கதைகள் பூடகமாய் பதிவுசெய்வதையும் நாம் கவனிக்கவேண்டும். சாந்தனைப் போன்ற பல்லின மொழி மக்களோடு பரிட்சமுடைய படைப்பாளிகளின் குரல்களை இலங்கை அதிகார வர்க்கங்களோ, தமிழ்ப்போராட்ட இயக்கங்களோ அதிகம் செவிமடுத்திருந்தால் நாம் இன்றைய பேரழிவுக்கு வந்திருக்கமாட்டோமோ என்ற ஆதங்கம் எழுவதைத் த‌விர்க்க‌வும் முடிவதுமில்லை. சாந்தனின் கதைகள், பிறரை நேசிப்பதற்கான விசாலமனதையும், எதிர்க்கருத்தாய் இருந்தாலும் செவிகளைத் திறந்து வைத்துக் கேட்பதையும்தான் வேண்டி நிற்கின்ற‌ன‌ போல‌த் தெரிகின்ற‌து.

இக்க‌ட்டுரைக்காய் மேல‌திக‌மாய் உத‌விய‌வை:
காலங்கள் (1984)
ஒரே ஒரு ஊரிலே (1975)

விக்கிபீடியா (சாந்த‌னின் புகைப்ப‌ட‌ம்)

(கூர் 2010ம் ஆண்டு தொகுப்பிற்காய் எழுதிய‌து)

இரண்டு உலகங்களுக்கு இடையில்

Sunday, January 03, 2010

-விமுத்தி ஜெயசேகராவின் In Between Two Worldsஐ முன்வைத்து-

1.
திரைப்ப‌ட‌ங்க‌ள் என்ப‌து பொழுதுபோக்கிற்கான‌து மட்டுமே என்றொரு விம்ப‌ம் த‌மிழ்ச்சூழ‌லில் பொதுப்புத்தியில் ப‌திந்திருக்கின்ற‌து. அவ்வாறான‌ சூழ‌லிலிருந்து வ‌ரும் நெறியாள்கையாள‌ர்க‌ளும் பொதுப்புத்தியைத் த‌விர்த்து புதிய‌ க‌ள‌ங்க‌ளில் த‌மிழ்த்திரைப‌ட‌ச்சூழ‌லை ந‌க‌ர்த்துவ‌த‌ற்கு அக்க‌றை கொள்வ‌துமில்லை.. ஆக‌வேதான், வ‌ழ‌மைக்கு மாறாய் ஆடல், பாட‌ல், ச‌ண்டைக்காட்சிக‌ள் குறைவாக‌ வ‌ரும் திரைப்ப‌ட‌ங்க‌ளைக் கொண்டாட‌வேண்டிய‌ அவ‌ல‌ச்சூழ‌ல் த‌மிழில் இருக்கிற‌து. எனினும் இவ‌ற்றுக்கு அப்பால் இவ்வாறான‌ திரைப்ப‌ட‌ங்க‌ளில் கூட‌ த‌லித்துக்க‌ள், பெண்க‌ள், அர‌வாணிக‌ள் போன்ற‌ விளிம்புநிலை ம‌னித‌ர்கள் ப‌ற்றிய‌ சித்த‌ரிப்புக்க‌ள் மிக‌ மோச‌மாக‌ நுண்ணிய‌த‌ள‌த்தில் இய‌ங்கிக்கொண்டிருப்ப‌தை நாம் அவ‌தானிக்க‌ முடியும்.த‌மிழ்ச்சூழ‌லோடு ஒப்பிடும்போது மிக‌ச்சிறிய‌ பார்வையாள‌ர் வ‌ட்ட‌த்தையும் மோச‌மான‌ த‌ணிக்கைச் சூழ‌லையும் கொண்ட‌ சிங்க‌ள‌த் திரைப்ப‌ட‌ச்சூழ‌லிலிருந்து அற்புத‌மான‌ திரைப்ப‌ட‌ங்க‌ள் ப‌ல்வேறு பின்புல‌ங்க‌ளை முன்வைத்து வ‌ர‌த்தொடங்கிவிட்ட‌ன‌. அதிகார‌த்தின் அமைப்புக‌ளுக்கு அறைகூவ‌ல் விடுத்தப‌டி ப‌ல இளைய‌ நெறியாள்கையாள‌ர்க‌ள் த‌ம‌க்கான‌ -முக்கிய‌மாய் போருக்கும்/அர‌ச அதிகார‌ங்க‌ளுக்கும் எதிரான‌ க‌தைக‌ளைத் துணிவுட‌ன்- திரைப்ப‌ட‌மாக்க‌த் தொட‌ங்கிவிட்ட‌ன‌ர். இன்று ப‌ல்வேறு நாடுக‌ளில் நிக‌ழும் திரைப்ப‌ட‌ விழாக்க‌ளில் சிங்க‌ள‌ப்ப‌ட‌ங்க‌ள் திரையிட‌த் தேர்ந்தெடுக்க‌ப்ப‌டுவ‌தும், விருதுக‌ளைப் பெறுவ‌தும் புதிய‌ க‌ள‌ங்க‌ளைப் ப‌ரீட்சித்துப்பார்த்த‌ சிங்க‌ள‌த்திரைப்ப‌ட‌ச்சூழ‌லிற்குக் கிடைத்த‌ அங்கீகார‌மென‌ எடுத்துக்கொள்ள‌லாம்.

அவ்வாறான‌ சிங்க‌ள‌ நெறியாள்கையாளர்களில் ஒருவ‌ராக‌, த‌ன‌து இருபத்தேழாவது வ‌ய‌தில் The Forsaken Land திரைப்ப‌ட‌த்தை இய‌க்கிய‌த‌ன் மூல‌ம் பல‌ர‌து க‌வ‌ன‌ததைத் திருப்பிய‌ ஒருவ‌ர் விமுக்தி ஜெய‌சேக‌ரா. இல‌ங்கையின் தென்ப‌குதியில் பிற‌ந்த‌ விமுக்தி திரைப்ப‌ட‌த்துறை சார்ந்த‌ க‌ல்வியை இந்தியாவில் புனேயிலும், பின்ன‌ர் மேற்படிப்பை பிரான்சிலும் மேற்கொண்ட‌வ‌ர். இப்போது மீண்டும் -நான்கு வ‌ருட‌ இடைவெளியின்பின்- த‌ன‌து இர‌ண்டாவ‌து ப‌ட‌மான‌ Between Two Worlds என்ற‌ ப‌ட‌த்தோடு வ‌ந்திருக்கின்றார்.. ஏற்க‌ன‌வே வெனிஸ் திரைப்ப‌ட‌ விழாவில் திரையிட‌த்தெரிவான‌ இத்திரைப்ப‌ட‌ம் இமமாத‌ம் ரொற‌ண்டோவில் நிக‌ழ்ந்த‌ ச‌ர்வ‌தேச‌த் திரைப்ப‌ட‌விழாவிலும் தெரிவு செய்ய‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. .மிக‌க் குறைவான‌ உரையாட‌ல்க‌ளையும், நிறைய‌ப் ப‌டிம‌ங்க‌ளாலான‌ கவித்துவ‌க்காட்சிக‌ளையும் கொண்ட‌ விமுத்தியின் ப‌ட‌ங்க‌ளில் சாதார‌ண‌மாய் ஒருவ‌ரால் அவ்வ‌ள‌வு எளிதில் நுழைந்துவிட‌முடியாது..மிக‌ மெதுவாக‌வும், நேர்கோட்டுத்த‌ன்மை அற்ற‌ காட்சிக‌ள் ஒன்றுக்கு ஒன்று தொட‌ர்பில்லாது அடிக்க‌டி மாறிக்கொண்டிருக்கும் இத்திரைப்ப‌ட‌ங்களைப் பார்க்க‌த் த‌ன்னைத் த‌க‌வ‌மைத்துக்கொள்ளாத‌ ஒரு பார்வையாள‌ரை இத்திரைப்ப‌ட‌ங்கள் த‌ம்மிலிருந்து வெளியே எற்றி எறிந்துவிட‌வே செய்யும். Between Two Worlds என்கின்ற இத்திரைப்ப‌ட‌ம் தொட‌ங்குவ‌த‌ற்கு முன், ஒரு சிறு அறிமுக‌த்தை விமுக்தி த‌ரும்போது, "ஏற்க‌ன‌வே இப்ப‌ட‌த்தைப் பார்த்த‌ ப‌ல‌ர் விள‌ங்குவ‌த‌ற்குக் க‌டினமான‌ ப‌ட‌ம் என்றே கூறியிருக்கின்றார்க‌ள். இது ப‌ல‌ puzzleக‌ளைக் கொண்ட‌ ஒரு திரைப்ப‌ட‌ம். ப‌ட‌ம் முடியும்போது நீங்கள் puzzleளைப் பொருத்தி உங்க‌ளுக்கான‌ ஒரு க‌தையை உருவாக்க‌ முடியும்" என்றிருந்தார். உண்மையில் இந்த‌ப்ப‌ட‌ம் பார்வையாள‌ருக்குரிய‌ திரைப்ப‌ட‌ம்; .puzzleக‌ளை மாற்றி மாற்றி அடுக்குவ‌த‌ன் மூல‌ம் பார்ப்ப‌வ‌ர் த‌ன‌க்கான‌ ஒரு க‌தையை உருவாக்க‌ முடியும். ஒருவ‌ர் உருவாக்கும் க‌தையும், ப‌ட‌த்தைப் பார்க்கும் ம‌ற்றொருவ‌ர் உருவாக்கும் க‌தையும் ஒன்றாய் இருக்கவேண்டும் என்ற‌ எந்த அவ‌சிய‌மும் இல்லை. இதை இன்னொருவித‌மாய் இது த‌ன்ன‌ள‌வில் பார்ப்ப‌வ‌ரின் சூழ‌லுக்கும், அனுப‌வ‌ங்க‌ளுக்கும் ஏற்ப‌ க‌ண‌ந்தோறும் மாறிக்கொள்ளும் பிர‌தியென‌ எடுத்துக்கொள்ள‌லாம். ஆனால் ஒற்றைத்த‌ன்மையிலும், நேர்கோட்டுக்க‌தைச் சொல்ல‌லிலும் ஊறியிருக்கும் ந‌ம்மில் எத்த‌னைபேர் இத்திரைப்ப‌ட‌ம் த‌ரும் சுத‌ந்திர‌த்தை அனுப‌விக்க‌த் த‌யாராக‌ இருக்கின்றோம்? கட்டற்ற சுத‌ந்திர‌ம் என்ப‌து சில‌ருக்குப் பிடிக்காதுபோல‌ இத்திரைப்ப‌ட‌ம் எடுக்க‌ப்ப‌ட்ட‌வித‌மும் ப‌ல‌ருக்குப் பிடிக்காது போக‌வும் கூடும்.

2
ஒருவ‌ன் ம‌லையுச்சியிலிருந்து க‌ட‌லுக்குள் வீழ்வ‌துட‌ன் ஆர‌ம்பிக்கும் முத‌ற்காட்சி, அவ‌ன் திரும்ப‌வும் ம‌லை மீதேறி ந‌க‌ருக்குள் நுழையும்போது ந‌க‌ர் க‌ல‌வ‌ர‌த்தின் அந்த‌ர‌த்தில் மித‌க்க‌த் தொட‌ங்கியிருக்கின்ற‌து. தெருவில் போகின்ற‌வ‌ர்க‌ளை அடித்துத் துவைத்து க‌டைக‌ளையெல்லாம் நொறுக்கிய‌ப‌டி குழுக்குழுவாய் இளைஞ‌ர்க‌ள் கூக்குர‌லிட்ட‌ப‌டி இருக்கின்றார்க‌ள். க‌ல‌வ‌ர‌த்தின் ந‌டுவில் ப‌யந்து ந‌டுந‌டுங்கிய‌ப‌டி ஒரு பெண்ணிருப்ப‌தைப் பார்த்து, க‌ட‌லில் விழுந்து ந‌க‌ர் மீண்ட‌ இளைஞ‌ன் அவ்ளைக் காப்பாற்றுகின்றான். சீன‌ச்சாய‌லுடைய‌ பெண்ணை இவ‌ன் (திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்திற்கு பெயர் எதுவும் இருக்காததால் அந்தப் பாத்திரத்தை 'இவன்' எனக்குறிப்பிடுகின்றேன்) இன்னொருத்த‌னின் வானில்(Van) ஏற்றிய‌ப‌டி நீண்ட‌வீதியினூடாக‌ கிராம‌ப்புற‌த்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றார்க‌ள். 'உன்னை வ‌ன்புண‌ர்ந்த‌வ‌ர் யாரென்று தெரியுமா' என அந்த‌ப் பெண்ணிட‌ம் கேட்கும்போது, 'உன்னைப் போன்ற‌ சாய‌லுடைய‌ ஒருவ‌ன்' என்கிறாள் அந்த‌ப்பெண். வானிற்குள் வைத்து -காப்பாற்றிப்போகும்- பெண்ணை வ‌ன்புண‌ர‌ இவ‌ன் துடிக்கின்ற‌போது, வானை ஓட்டிக்கொண்டு வ‌ருகின்ற‌வ‌ர் அதற்கு இடைஞ்ச‌லாய் இருப்ப‌து புரிகின்ற‌து. இப்ப‌ய‌ண‌த்தின்போது சீனாவில் ஒரு நகரில் ப‌ல‌ தொலைத்தொட‌ர்புச்சாத‌ன‌ங்க‌ளைத் த‌க‌ர்த்த‌ப‌டி போராளிக‌ள் முன்னேறிக்கொண்டிருக்கின்றார்க‌ள் என்றொரு செய்தி -வானின் வைத்து கேட்க‌ப்ப‌டும் வானொலியில்- சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து (ம‌றைபொருளாய் இல‌ங்கையிலிருக்கும் போராளிக‌ள் என்றும் அர்த்த‌ம் கொள்ள‌லாம்). ப‌ய‌ண‌த்தின் ந‌டுவில், இவ்வாறு காம‌த்துட‌ன் பித்தேறியிருக்கும் இவ‌னை அடித்துப்போட்டுவிட்டு அந்த‌ப்பெண்ணும், சார‌தியும் வானில் ஏறித் த‌ப்பிப்போகின்றார்க‌ள்.

இவ‌ன் மீண்டும் த‌ன‌து கிராம‌த்திற்குப் ப‌ஸ்சில் போகின்றான். ஊரிலிருப்ப‌வ‌ர்க‌ள் 'ஊருக்கு ஏன் இவ்வ‌ளவு விரைவில் திரும்பி வ‌ந்தாய்?' என்று கேட்டு, 'தெருவில் திரியாதே அவ‌ர்க‌ள் சுட்டுப்போட்டுவிடுவார்க‌ள், காட்டுப் பாதையால் போய் எங்கையாவ‌து ஒளிந்துகொள்' என்கின்றார்க‌ள். அவ‌னைப் போன்ற‌ ப‌ல‌ இளைஞ‌ர்க‌ள் அதிகார‌ அமைப்பின் வ‌ன்முறைக்குப் ப‌ய‌ந்து ஊரைவிட்டு ஒதுங்கி காட்டுப்ப‌க்க‌மாய் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்க‌ள் என்ப‌தை ஒரு சிறுவ‌னின் துணைகொண்டு இவ‌ன் அறிகின்றான். .தானும் அவ‌ர்க‌ளோடு ப‌துங்கிவாழ‌ இவ‌ன் த‌யாராகின்ற‌போது, தான் வ‌ந்த‌ வான் குள‌மொன்றில் க‌விழ்வ‌தைக் காண்கின்றான். இவ‌ன் விரைவாக‌ ஓடிப்போய் குள‌த்தைப் பார்க்கின்ற‌போது அங்கே வான் விழுந்த‌த‌ற்கான‌ எந்த‌ அடையாள‌மும் இல்லை.. குள‌த்தினுள் குளித்துக்கொண்டிருக்கும் ஒரு முதிய‌வ‌ரிட‌ம் இது குறித்துக் கேட்கும்போது, 'வான் எதுவும் குள‌த்தினுள் இப்போது விழ‌வில்லை. ஆனால் முன்னோர் கால‌த்தில் இப்ப‌டியோரு ச‌ம்ப‌வ‌ம் நிக‌ழ்ந்திருக்கின்ற‌து. க‌ட‌ந்த‌கால‌த்தில் நிக‌ழ்ந்த‌து எதுவும் இனி நிக‌ழாது என்றும் அறுதியிட்டுக் கூற‌முடியாது' என்கிறார். இப்போது அடுத்த‌ காட்சி மாறுகின்ற‌து.

3.
ஒரு முதியவ‌ரும் இளைஞ‌னும் ந‌ல்ல‌ வெறியில் க‌ட‌லையொட்டிய‌ குன்றொன்றில் அம‌ர்ந்திருக்கின்றார்க‌ள். முதிய‌வ‌ர் க‌தையொன்றைச் சொல்ல‌ப்போவ‌தாய்க் கூறுகின்றார். ஆனால் க‌தையின் ந‌டுவில் எதுவும் கூறி க‌தையை வேறு வித‌மாக‌ மாற்றக்கூடாது என்று இளைஞ‌னை எச்ச‌ரிக்கின்றார். க‌தை: ஒரு நாட்டின் அர‌ச‌னுக்கு இர‌ண்டு ம‌க‌ன்க‌ளும் ஒரு ம‌க‌ளும் இருக்கின்றார்க‌ள். எதிர்கால‌த்தில் இந்த‌ அர‌ச‌னின் ம‌க‌ள் திரும‌ண‌ஞ்செய்து அவளுக்குப் பிற‌க்கின்ற‌ ஆண் குழ‌ந்தை, அவ‌னின் இரு மாம‌ன்க‌ளையும் கொன்றுவிட்டு அரசாட்சியைக் கைப்ப‌ற்றுவான் என்று சோதிட‌ர்க‌ள் எச்ச‌ரிக்கின்றார்க‌ள். இத‌ன் நிமித்த‌ம், எவ‌ரையும் திரும‌ண‌ஞ்செய்து குழ‌ந்தை பெறாதிருக்கும் நோக்கில், அரச‌னின் ம‌க‌ள் ஒரு தீவின் ந‌டுவில் சிறைவைக்க‌ப்ப‌டுகின்றாள். ஆனால் ஏதோவொரு வ‌கையில் அவ‌ள் கர்ப்ப‌ம‌டைந்து ஒரு ஆண் குழ‌ந்தையைப் பெற்று விடுகின்றாள். வ‌ள‌ர்ந்துவ‌ரும் அந்த‌ இள‌வ‌ர‌ச‌னைக் கொல்ல‌ இர‌ண்டு மாம‌ன்க‌ளும் முய‌ல்கின்றார்க‌ள். இறுதியில் அந்த‌ இள‌வ‌ர‌ச‌ன் கொல்ல‌ப்ப‌ட்ட‌ விதம் ப‌ற்றிப் ப‌ல‌ க‌தைக‌ள் கூற‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஒன்று: இள‌வ‌ரச‌ன் குறித்த‌ ச‌ரியான‌ அடையாள‌ந்தெரியாத‌தால், அந்நாட்டிலுள்ள‌ அவ‌ன் வ‌ய‌தொத்த‌ அனைத்து இளைஞ‌ர்க‌ளையும் கொலைசெய்ய‌ அவ‌ன‌து மாம‌ன்மார்க‌ள் க‌ட்ட‌ளையிட்டார்க‌ள் என்று க‌தை சொன்ன‌ முதிய‌வ‌ர் கூறுகின்றார். அதைக் க‌தை கேட்ட‌ இளைஞ‌ன் ம‌றுத்து, அந்த‌ இள‌வ‌ர‌ச‌ன் த‌ன‌து தோழ‌ர்க‌ளுட‌ன் நீராடிக்கொண்டிருந்த‌போது அவ‌ர்க‌ள் சுற்றிவ‌ளைக்க‌ப்ப‌ட்டு கொல்லப்படுகின்றார்கள், எனினும், இள‌வ‌ர‌ச‌ன் தப்பிப்போய் ஒரு ம‌ர‌ப்பொந்தில் போய் ஒளிந்துகொள்கின்றான் என‌வும், அவ‌ன் இன்ன‌மும் அந்த‌ ம‌ர‌ப்பொந்தில் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கின்றான் என்று ந‌ம்ப‌ப்ப‌டுகின்ற‌து என்றும் க‌தையை வேறுவித‌மாய் முடிக்கின்றான்.

4.
இதற்கு அடுத்து வரும் காட்சியில், . காட்டுக்குள் த‌ன் வ‌யதொத்த‌ -ப‌துங்கியிருக்கும்- இளைஞ‌ர்க‌ளைத் தேடும் இவ‌ன், த‌ன‌து அண்ணியின் வீட்டுக்குள் வ‌ருகின்றான். க‌ண்ணில் காய‌ம் ஏற்ப‌ட்டு ஒரு விழி திற‌க்க‌முடியாத‌ இவ‌னுக்கு அவ‌ர் முலைப்பால் விட்டு காய‌ம் ஆற்றுகின்றார். இடையில் இவ‌னுக்கு அண்ணி மீது உட‌ல்சார்ந்த‌ ஈர்ப்பு வ‌ர‌ அண்ணி அவ‌னை உத‌றித்த‌ள்ளுகின்றார். 'என‌து ராஸ்க‌ல் அண்ண‌ன் இனியும் திரும்பி வ‌ருவான்?' என்று நீங்க‌ள் நினைக்கின்றீர்க‌ளா என்று வினாவுகிறான். பின்னொரு பொழுதில் அண்ணி இவ‌னோடு ப‌ற்றைக‌ளுக்கிடையில் கூடுகின்றார். மீண்டும் இவ‌ன் சிறுவ‌னின் துணையுட‌ன் ஒளிந்திருக்கும் இளைஞ‌ர்க‌ளைத் தேடிப் போகின்றான். சிறுவ‌ன் ஒரு ம‌ர‌ப்பொந்தைக் காட்டுகின்றான். அருகே போகும்போது வெடிச்ச‌த்த‌ங்க‌ள் கேட்கின்ற‌ன‌. இவ‌ன் சிறுவ‌னின் ம‌ன்றாட்ட‌த்தையும் அல‌ட்சிய‌ம் செய்து ம‌ர‌த்த‌டிக்குப் போகின்றான். அந்த‌ ம‌ர‌ம் இள‌வ‌ர‌ச‌ன் தான் கொல்ல‌ப்ப‌டுவ‌திலிருந்து த‌ப்ப‌ ஒளிந்து கொள்வ‌தாய்த் தொம‌க்க‌தையில் குறிப்பிட‌ப்ப‌டுகின்ற‌ ம‌ர‌ம்.

இத‌ற்கிடையில் கிராம‌ம் எங்கும் கைக‌ள் ம‌ட்டும் வெளியே தெரியும் உட‌ல‌ங்க‌ள் தென்ப‌ட‌த்தொட‌ங்குகின்ற‌ன‌. கிராம‌த்துக் குழ‌ந்தைக‌ளும், பெண்க‌ளும் பீதியுட‌ன் உறைந்த‌ நிலையில் இவ‌ற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கின்ற‌ன‌ர். நாய்க‌ள் மாடுக‌ள் எல்லாம் கூட‌வே சுட‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஒரு முழு மாட்டைக் கோர‌மாய் கிழித்துண்ணும் க‌ரிய‌ நாய் சூழ‌லின் கொடூர‌த்தை ந‌ன்கு புல‌ப்ப‌டுத்துகின்ற‌து.. கிராம‌த்தில் எல்லா இய‌ல்ப‌ற்றுப் போய்க்கொண்டிருக்கின்ற‌ன‌. இளைஞ‌ர்க‌ள் காணாம‌ற்போய்க்கொண்டிருக்கின்ற‌ க‌தையை வெளியே சொல்ல‌முடியாத‌ க‌ன‌த்த‌ சோக‌த்தை த‌ங்க‌ள் தொண்டைக்குழிக‌ளுக்குள் அட‌க்கிய‌ப‌டி கிராம‌த்த‌வ‌ர்க‌ள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்க‌ள்.அதேவேளை கிராம‌த்த‌வ‌ர்க‌ளின் நீர்த்தேவைக‌ளைப் பூர்த்திசெய்யும் குள‌மும் ந‌ஞ்சூட்ட‌ப்ப‌டுகின்ற‌து. பதுங்கியிருக்கும் இளைஞ‌ர்க‌ள் வெளியே வர, இவனும் அந்த இளைஞ‌ர்க‌ளும் ஒன்றுசேர்ந்து அக்குள‌த்தைச் சுத்திக‌ரிக்கும் ப‌ணியில் இணைந்துகொள்கின்றார்கள். ஒரு இயக்கமாய்ச் சேர்ந்து. குள‌த்தைச் சுத்திக‌ரித்து வெற்றியைக் கொண்டாடும்போது குதிரைக‌ளில் ஆயுத‌ங்க‌ளுட‌ன் வ‌ருப‌வ‌ர்க‌ள் கூடி நிற்கும் இளைஞ‌ர்க‌ளைத் அடித்தும் சுட்டும் கொல்ல‌த்தொட‌ங்குகின்றார்க‌ள். எல்லோரும் கொல்ல‌ப்ப‌ட‌ இவ‌ன் ம‌ட்டும் த‌ப்பிப்போய் ம‌ர‌ப்பொந்தில் ஒளிந்துகொள்கின்றான். காணாமற்போன‌ இவ‌னைத் தேடி சிறுவ‌னும், இவ‌ன‌து அண்ணியும் அலைய‌த்தொட‌ங்குவ‌துட‌ன் ப‌ட‌ம் முடிவுபெறுகின்ற‌து.

காட்சிக‌ளை அப்ப‌டியே ப‌திவாக்குவ‌து என்றால் இப்ப‌டித்தான் இத்திரைப்ப‌ட‌த்தின் க‌தையிருக்கும். விமுத்தி குறிப்பிட்ட‌துபோல‌ பார்ப்ப‌வ‌ர் இந்த‌ puzzleக‌ளை எப்ப‌டி அடுக்கித் த‌ன‌க்கான‌ ப‌ட‌த்தை உருவாக்குகின்றார் என்ப‌தில்தான் ப‌ட‌த்தின் முழுமை த‌ங்கிருக்கிற‌து. திரையிட‌லின் பின் ப‌ட‌ம் குறித்த‌ கேள்விக‌ளுக்கு, 'இந்த‌ப்ப‌ட‌த்தின் மூல‌ம் எந்த‌க் க‌தையைச் சொல்ல‌ விரும்புகின்றீர்க‌ள்?' என்று பார்வையாள‌ரிடையே இருந்து வினாவ‌ப்ப‌ட்ட‌போது, 'நீங்க‌ள் யோசியுங்க‌ள் இப்போதில்லாவிட்டாலும் இன்னும் ஒருவார‌த்தில் உங்க‌ளுக்கான‌ ஒரு க‌தை உருவாகியிருக்கும்' என்று விமுத்தி ப‌தில‌ளித்திருந்தார்.. 'சில‌வேளைக‌ளில் இந்த‌ப்ப‌ட‌த்தை த‌ங்க‌ளின் ஜ‌தீக‌க் க‌தைக‌ளோடு இணைத்துப் பார்த்து இல‌ங்கைய‌ர்க‌ளால் விள‌ங்கிக்கொள்ள‌ முடியும், அத‌னாற்றான் எங்க‌ளால் விள‌ங்குவ‌த‌ற்குக் க‌டின‌மாய் இருக்கிற‌தா?' என்றொருவ‌ர் கேள்வி எழுப்பிய‌போது, 'இதில் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌ க‌தை ம‌காவ‌ம்ச‌த்தில் வ‌ருகின‌ற‌து. ஆனால் ம‌காவ‌ம்ச‌த்தை வாசித்தால்தான் இந்த‌ப் ப‌ட‌ம் விள‌ங்கும் என்ப‌த‌ற்கு எந்த‌ அவ‌சிய‌மும் இல்லை' என்றும் விமுக்தி க‌வ‌னப்ப‌டுத்தியிருந்தார்.. ஒரு நேர்கோட்டு முறையில் சொல்லும் வ‌ர்த்த‌க‌ ஹொலிவூட் ப‌ட‌ங்க‌ளுக்கு தான் எதிரான‌வ‌ன் என்ப‌தை விமுக்தி ப‌திவு செய்த‌போது, அப்ப‌டியாயின் இத்திரைப்ப‌ட‌த்திற்கான‌ பார்வையாள‌ர்க‌ள் யாரென‌ வினாவ‌ப்ப‌ட்ட‌போது, 'அது குறித்து நான் அக்க‌றைகொள்ளவில்லை. என்ன‌ளவில் எத்த‌கைய‌ ச‌ம‌ர‌ச‌த்திற்கும் த‌யாரில்லை. ஆக‌க்குறைந்து அய்ந்துபேர் பார்த்தாலே போதுமான‌து' என்று விமுத்தி தெளிவாக‌வே கூறியிருந்தார்.

5.
இனி, என‌க்கு விள‌ங்கிய‌மாதிரி உருவாக்கிக்கொண்ட‌ க‌தை: இர‌ண்டுவித்தியாச‌மான‌ உல‌கு என்ப‌தை விமுக்தி ய‌தார்த்த‌திற்கும் புனைவுக்குமான‌ உல‌க‌ம் என்று குறிப்பிட்டிருந்தார். நான் இன்னும் எளிதாக்கி இது க‌ன‌வுக்கும் ந‌ன‌வுக்கும் இடையிலான‌ உல‌க‌ம் என்று பொருள் கொள்கின்றேன். உண்மையில் இந்த‌ க‌ன‌வு X ந‌ன‌வு என்கின்ற‌ இர‌ண்டு உல‌கை அவ்வ‌ளவு எளிதாக‌ எவ‌ராலும் வித்தியாச‌ப்ப‌டுத்த‌ முடியாது. நாம் ய‌தார்த்த்தில் இருக்கும்போதே ச‌ட்டென்று க‌ன‌வுல‌க‌த்திற்குப் போய்விட‌முடியும். இங்கே த‌ன்னை த‌டுத்துநிறுத்த‌ முய‌ல்கின்ற‌ சிறுவ‌னை இவ‌ன் த‌ரையில் அடித்துக்கொள்வ‌தும், த‌ன‌க்கு புண‌ர‌ முத‌லில் ச‌ம்ம‌த‌ம் த‌ராத‌ அண்ணியை க‌ல்லொன்றால் ச‌த‌க் ச‌த‌க் என்று இர‌த்த‌ம் பீறிட இவன் கொல்வ‌துமான‌ காட்சி யதார்த்த‌தில் நிக‌ழ்வ‌துபோல‌க் காட்ட‌ப்ப‌ட்டிருந்தாலும் இவைய‌னைத்தும் இவ‌னின் உள்ம‌ன‌தில் உருளுகின்ற‌ உல‌கில் வ‌ருப‌வையே. எனெனில் இறுதிக்காட்சிக‌ளில் இவ‌ன் பொந்தில் இருக்கின்ற‌போது தேடி உயிருட‌ன் மீள‌ வ‌ருப‌வ‌ர்க‌ள் இச்சிறுவ‌னும் அண்ணியுமே ஆகும். விமுத்தியிற்கு ப‌டிம‌ங்க‌ளைக் காட்சிப்ப‌டுத்துவ‌தில் பெருவிருப்ப‌ம் உள்ள‌தென்ப‌தால் எதையும் நேர‌டியாக‌ச் சொல்வ‌தற்காய் அதிக‌ நேர‌ம் செல‌வ்ழிப்ப‌தில்லை. அவ‌ர‌து முத‌ற்ப‌டமான‌ Forsaken Land லிலேயே, போரைப் ப‌ற்றிச் சொல்ல‌ப்பட்டாலும் போரின் நேர‌டி அழிவுக‌ளை எந்த‌வொரு காட்சியிலும் காட்சிப்ப‌டுத்தியிருக்க‌ மாட்டார்.. அதுபோல‌ அந்த‌ப்ப‌ட‌த்தில் அடிக்க‌டி ஒரு ப‌டிம‌மாய் வ‌ரும் க‌வ‌ச வாக‌ன‌மும் (ராங்கியும்) அது குறிப்பார்க்க‌த் திருப்புகின்ற‌ நீண்ட‌ குழாயும், 'ச‌மாதான‌ கால‌ம்' என்று சொல்ல‌ப்ப‌டுகின்ற‌ கால‌த்திலும் போர் வாச‌ற்ப‌டியில் நின்று, எப்போதோ மீண்டும் நிக‌ழ‌த் த‌யாராகின்ற‌தென‌ நாம் எடுத்துக்கொள்ள‌லாம். இந்த‌ப் ப‌ட‌த்திலும் அவ்வாறான‌ ப‌டிம‌ங்க‌ளையே விமுக்தி ப‌ய‌ன்ப‌டுத்தியிருப்பார். உண்மையில் இந்த‌ப்ப‌ட‌த்தில் வ‌ரும் இவ‌ன் ஒரு முன்னோர் கால‌த்தில் நிக‌ழ்வ‌தாய்க் கூற‌ப்ப‌டுகின்ற‌ க‌தையில் வ‌ருகின்ற‌ இள‌வ‌ர‌ச‌னின் இன்னொரு ப‌டிம‌மே. இங்கே வ‌ரும் அண்ணியும் கூட‌. அவர் மூன்றாம் முறையாக‌ இவ‌ன‌து காய‌த்தை ஆற்றுவ‌த‌ற்காய் த‌ன‌து முலைப்பால் கொடுக்கும்போது, இவ‌ன் கேட்கின்றான் எப்ப‌டி 'உங்க‌ளுக்குப் பிள்ளையில்லாம‌லே முலை சுர‌க்கிற‌து?' என்று. இதை நாம் அந்த‌ ஜ‌தீக‌க் க‌தையில் தீவின் ந‌டுவில் சிறைவைக்க‌ப்ப‌ட்ட‌ இளவ‌ர‌சி எவ‌ருமேயின்றி எப்ப‌டி ஒரு ஆண் குழ‌ந்தைக்குத் தாயாகின்றாள் என்ப‌தோடு பொருத்திப் பார்க்க‌லாம். அதே மாதிரி இள‌வ‌ர‌ச‌னின் தோழ‌ர்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்ட‌தைப் போல‌ நிக‌ழ்கால‌த்தில் இவ‌ன‌து ஊரைச் சேர்ந்த இளைஞ‌ர்க‌ள் கொல்ல‌ப்ப‌டுகின்றார்க‌ள். ஒரு கிள‌ர்ச்சி/க‌ல‌க‌ம் அழிக்க‌ப்ப‌ட்டுவிட்ட‌து என்று அதிகார‌த்திலிருப்ப‌வ‌ர்க‌ள் கொண்டாடுகின்ற‌போதும், இவ‌ன் பொந்தில் இருப்ப‌து என்ப‌து, போராட்ட‌த்திற்கான‌ கார‌ணி இன்ன‌மும் அழிந்துவிட‌வில்லை என்ப‌தைக் குறியீடாக‌க் கொள்ள‌லாம். இந்த‌த் திரைப்ப‌ட‌த்தை ஈழ‌த்தில் ந‌டைபெற்ற‌ இர‌ண்டுவித‌மான‌ உள்நாட்டுப் போர்க‌ளோடு ஒப்பிட்டுப் பார்க்க‌லாம்.. திரைக்க‌தை மேலோட்ட‌மாய் த‌னியொருவ‌னின் க‌தையைச் சொல்வ‌தாக‌ இருந்தாலும், அது ஒரு போராடிய ச‌மூக‌த்தின் க‌தையைத்தான் சொல்கின்ற‌து என்ற‌ நுட்பமான பார்வையை நாம் வ‌ந்தடைய‌ முடியும். ஈழ‌த்தில் ந‌டைபெற்று முடிந்த‌ த‌மிழரின் ஆயுத‌ப்போராட்ட‌ம், சிங்க‌ள இளைஞ‌ர்க‌ளின் 'சே குவேரா' (ஜேவிபி) கிள‌ர்ச்சிக‌ளுட‌ன் நாம் இணைத்துப் பார்க்கலாம். என்னைப் பொருத்த‌வ‌ரை அதிக‌மாய்ப் பொருந்திப் போவ‌து ஜேவிபியின் கிள‌ர்ச்சிக்கால‌ம் என்றே சொல்வேன். பிரேமதாசா ஜ‌னாதிப‌தியாக‌ இருந்த‌போது ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ சிங்க‌ள இளைஞ‌ர்க‌ள் மிக‌ மிலேச்ச‌த்த‌ன‌மாய் எந்த‌வித‌ சாட்சிக‌ளோ விசார‌ணைக‌ளோ இன்றி கொல்ல‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள். இல‌ங்கையின் தென்பாகம் எங்கும் ச‌ட‌லங்க‌ள் க‌ட‌லில் மித‌ந்த‌தாக‌வும் அரைகுறையாய் புதைக்க‌ப்ப‌ட்ட‌தாக‌வும் பின்வ‌ந்த‌ க‌தைக‌ள் சாட்சிய‌ம் கூறியிருக்கின்ற‌ன‌. இன்றைய‌ த‌மிழின‌ அழிப்பில் எவ்வாறு இந்தியாவின் கொடூர‌க்க‌ர‌ங்க‌ள் இருந்த‌ன‌வோ அதேபோல் சிங்க‌ள இளைஞ‌ர்க‌ளின் கிள‌ர்ச்சிக்கால‌த்தை ஒடுக்க‌வும் இந்தியாவின் இர‌த்த‌க்க‌ர‌ங்க‌ள் நீண்டிருந்த‌ன‌ என்ப‌தை நாம‌னைவ‌ரும் அறிவோம்.

மானுட‌ விடுத‌லைக்கான‌ கல‌க‌ங்க‌ள் எவ்வ‌ளவு கொடூர‌மாய் அதிகார‌த்தின் க‌ர‌ங்க‌ளால் ஒடுக்க‌ப்ப‌ட்டாலும் அவை என்றேனும் ஒருகால‌த்தில் மீண்டும் திரும்பி வ‌ருவ‌த‌ற்கான‌ நிக‌ழ்த‌க‌வுக‌ள் இருக்கின்ற‌ன‌ என்ப‌தையே இப்ப‌ட‌ம் உள்ளுறை உவ‌மமாக‌க் கூறுவ‌தாக‌த் தோன்றுகின்ற‌து.. இப்ப‌ட‌த்தில் ஒரு முதிய‌வ‌ர் அடிக்க‌டி வ‌ந்து வ‌ர‌லாற்றில் நிக‌ழ்வுக‌ள் அடிக்க‌டி மீள‌ நிக‌ழ‌க்கூடிய‌வை என்ப‌து இச்சாராம்ச‌த்தோடு இணைந்துபோக‌க்கூடிய‌துதான். விமுத்தியின் Forsaken Landயாய் இருந்தால் என்ன‌, இந்த‌ப் ப‌ட‌மாய் இருந்தாலென‌ன‌ அவ‌ருக்கு மிக‌ப்பெரும் வெளியைக் காட்சிப்ப‌டுத்துவ‌து பிடித்திருக்கின்ற‌து. Forsaken Landல் பொட்ட‌ல் வெளி என்றால், இங்கே காடு சார்ந்த‌ பெரு நில‌ப்ப‌ர‌ப்பு. அத்தோடு அதிக‌ காட்சிக‌ளில் க‌மரா அப்ப‌டியே அசையாம‌ல் ச‌ல‌ன‌ம‌ற்றிருக்கின்ற‌து; அது காட்டுகின்ற‌ வெளியில் ம‌னித‌ர்க‌ள் வ‌ருகின்றார்க‌ள், பிற‌கு ம‌றைந்தும் போய்விடுகின்றார்க‌ள்.. அக‌ண்ட‌காட்சிகளாய் விரியும் ப‌ல‌ காட்சிக‌ளில் வ‌ந்துபோகின்ற‌ ம‌னித‌ர்க‌ள் மிக்ச்சிறிதாக‌த் தெரிகின்றார்க‌ள். இந்த‌ப் ப‌ட‌க்காட்சிக‌ள் ந‌ம‌து ம‌ன‌தோடு ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய‌வை. நம‌து வாழ்வில் எத்த‌னையோ ம‌னித‌ர்க‌ள் வ‌ருகின்றார்க‌ள் போகின்றார்க‌ள், ஆனால் ந‌ம‌து வாழ்வு தொட‌ர்ந்து ஒரேயிட‌த்தில் நின்று இவை எல்லாவ‌ற்றையும் ச‌ல‌ன‌ம‌ற்றுப் பார்த்துக்கொண்டிருக்கின்ற‌துபோல‌.

விமுக்தியின் பட‌ங்க‌ளை -ஏற்க‌ன‌வே குறிப்பிட்ட‌தைப் போன்று- சாதார‌ண‌ப் ப‌ட‌ங்க‌ளை பார்க்கும் வேக‌த்திலோ, அதிர‌டியான‌ திருப்ப‌ங்க‌ளையோ எதிர்பார்த்தோ பார்க்க‌ முடியாது. முத‌ல் வ‌ரும் காட்சிக்கும் அடுத்த‌ காட்சிக்கும் க‌ட்டாய‌ம் தொட‌ர்பு இருக்க‌வேண்டும் என்ற‌ அவ‌சிய‌த்தையெல்லாம் விமுத்தி உடைத்துத்த‌ள்ளும் அதேவேளை சில‌ காட்சிக‌ள் மிக‌ மிக‌ மெதுவாக‌ ந‌க‌ர்கின்ற‌போது ச‌ற்று அலுப்பு வ‌ர‌ச்செய்வ‌தையும் குறிப்பிட்டாக‌ வேண்டும். இன்று விமுத்தியின் ப‌ட‌த்தை பார்த்து ஒரு க‌தையை உருவாக்கும் ஒரு பார்வையாள‌ர் நாளை அத‌ற்குத் தொட‌ர்பில்லாத‌ இன்னொரு க‌தையைத் த‌ன்ன‌ளாவில் உருவாக்கிக்கொள‌ள‌வும் முடியும். நாம் வாசிக்கும் ஒரு பிர‌தி வாசிக்கும் க‌ண‌ந்தோறும் த‌ன‌க்கான‌ க‌தையை மாற்றிக்கொள்ளும் மாய‌த்தை உள்ள‌ட‌க்கினால் எப்ப‌டியிருக்குமோ அப்ப‌டியே விமுத்தியின் இப்ப‌ட‌மும் ஒவ்வொரு காட்சியிலும் புதிர்க‌ளின் குறுக்குவெட்டுக்க‌ளால் புதிய கதைகளைப் புனைந்துகொள்ள‌ முனைகின்ற‌து. இந்த‌க் மாய‌ வித்தை சில‌ருக்கு வ‌ன‌ப்பூட்ட‌லாம், வேறு சில‌ருக்கு அலுப்பூட்ட‌லாம். அது க‌தைசொல்லியின் த‌வ‌றும‌ல்ல‌, க‌தைகளைச் ச‌துர‌ங்க‌க் க‌ட்ட‌த்தில் ந‌க‌ர்த்த‌ விரும்பும்/விரும்பாத‌ ந‌ம‌து த‌னிப்ப‌ட்ட‌ விருப்புக‌ள் சார்ந்த‌வை.

நன்றி: உன்னதம் & வைகறை

*பால‌ஸ்தீன‌ எதிர்ப்பிசையின் இல‌ய‌ங்க‌ள்

Sunday, November 15, 2009

பாலஸ்தீன எதிர்ப்பு இசை
-அஹமட் ஹபீப்

தமிழாக்கம்: டிசே தமிழன்

திரைப்பட இயக்குநரும், நெறியாளருமான, ஜாக்கி ரீம் சலூம், பாலஸ்தீனக் கலைகளை உலக அளவில் எடுத்துவருவதில் முக்கியமான ஒருவராக இருந்து வருகின்றார்.

பாலஸ்தீன மற்றும் சிரியாப் பெற்றோருக்கு, டியபோர்ன் மிக்சிக்கனில் பிறந்த சலூமின் கலைப்படைப்புக்களில் ஒரு புலம்பெயர்ந்த அரபு இளம்பெண்ணுக்குரிய பாதிப்பு இருக்கின்றது. சலூம் தனது பதின்ம இறுதிகளில், நியூயோர்க் பல்கலைக்கழகத்திலுள்ள கலைக் கல்லூரியில் படித்திருக்கிறார்.

2005ம் ஆண்டில் சண்டான்ஸ் திரைப்படவிழாவில், 'அரேபியர்களின் உலகம்' என்கின்ற ஒன்பது நிமிடப் படத்தை சலூம் தயாரித்து அளித்திருக்கிறார். இப்படம் எப்படி அரேபியர்கள் ஊடகங்களில் சித்தரிக்கப்படுகின்றார்கள் என்பதைக் காட்சிப்படுத்துகிறது. எனினும், சலூம் அவரது அண்மைய படமான 'slingshot hip hop' மூலமாக அதிக கவனத்தைப் பெற்றதுடன், இப்படம் ரொறொண்டோவில் நிகழ்ந்த பாலஸ்தீனியத் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டிருக்கிறது.

இந்த 80 நிமிட ஆவணப்படத்தில், சலூம் எவ்வாறு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் பாலஸ்தீன ஹிப் ஹொப் கலைஞர்களின் வாழ்வும் கலையும் இருக்கிறது என்பதைக் கவனப்படுத்துகின்றார்.

இஸ்ரேலுக்குள் இருக்கின்ற DAM மற்றும் Lyd போன்ற குழுக்களும், காஸாவில் இருக்கின்ற P.R போன்ற குழுக்களும் தங்கள் இசையை ஒரு கலாசார எதிர்ப்பாய் அறிமுகப்படுத்துகிறார்கள்.

அல்ஜீசிராவிற்காய் இந்நேர்காணலைக் கண்டவர்: அஹமட் ஹபீப்

அஹமட் ஹபீப்: ஏன் நீங்கள் உங்கள் திரைப்படத்தை ஒருவிதமான எதிர்ப்பு எனக்கூறிக்கொள்கின்றீர்கள்?

சலூம்: அர‌புக்கார‌ர் ஒருவ‌ர், பொதுப்புத்தி ம‌ற்றும் அர‌சு/ வெளிநாட்டுக் கொள்கைக‌ளை எதிர்க்கும் ஒரு ப‌டைப்பைக் கொண்டு வ‌ருதலோ அல்ல‌து எங்க‌ள் க‌லாசார‌த்தையும் வ‌ர‌லாற்றையும் பிர‌திப‌லிக்கும் ப‌டைப்புக்க‌ளை உருவாக்குவது என்பதோ, ஒரு எதிர்ப்பினூடாக‌வே நிக‌ழ்த்த‌வேண்டியிருக்கிற‌து.

இந்த‌த் திரைப்ப‌ட‌த்தை தொட‌ர்ச்சியாக‌ உல‌கின் ப‌ல்வேறுபகுதிக‌ளிலுள்ள‌ திரைப்ப‌ட‌ விழாக்க‌ளில் திரையிடும்போது, ப‌ல‌ ம‌க்க‌ள் முத‌ற்த‌ட‌வையாக‌ பால‌ஸ்தீனர்க‌ளையும், பால‌ஸ்தீனம் பற்றிய படிமங்களையும் பார்க்கின்றார்க‌ள்.இப்ப‌ட‌த்தில் வ‌ருகின்ற‌ ராப் பாட‌க‌ர்க‌ள், பால‌ஸ்தீனர்க‌ளின் வாழ்க்கையில் புதிய‌ ய‌ன்ன‌ல் ஒன்றைத் திற‌ந்துவிடுகின்றார்க‌ள்.

இன்னொருவ‌கையில் இந்த‌ப்ப‌ட‌ம் க‌ற்பித்தலிற்கான ஓர் உப‌க‌ர‌ண‌மும் கூட‌. அமெரிக்காவிலுள்ள‌ ப‌ல‌ உய‌ர்க‌ல்லூரிக‌ள் மற்றும் க‌ல்லூரிக‌ளின் பாட‌விதான‌த்தில் இந்த‌ப்ப‌ட‌ம் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டுகின்ற‌து.

ப்ரோக்ளின் போன்ற‌ ப‌குதிக‌ளிலிருந்து வ‌ரும் மாண‌வ‌ர்க‌ள் ‍-முக்கிய‌மாய் க‌றுப்பின, இல‌த்தீனிய‌ இனத்தைச் சேர்ந்தவர்கள்- பால‌ஸ்தீன்ர்களின் போராட்ட‌த்தினால் க‌வ‌ர‌ப்ப‌ட்ட்டிருக்கின்றார்க‌ள். இவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் பிர‌ச்சனைக‌ளுக்கும், ஆக்கிரமிக்கப்பட்ட பால‌ஸ்தீனத்திலும், இஸ்ரேலிலும் இருந்து பாலஸ்தீன ராப் பாடகர்கள் பாடும் த‌ங்க‌ளின் வாழ்வு ப‌ற்றிய‌ கதைகளுக்கும் இடையில் தொட‌ர்புக‌ளைக் க‌ண்டுபிடிக்கின்ற‌ன‌ர். அமெரிக்காவிலிருக்கும் சில மாண‌வ‌ர்க‌ள், பால‌ஸ்தீன ராப் பாட‌க‌ர்க‌ளைக் க‌வுர‌ப்ப‌டுத்தும் முக‌மாய் ஹிப் ஹொப் பாட‌ல்க‌ளை அர‌பு-அமெரிக்க‌ க‌ல‌ப்பு இசையில் எழுதியுமிருக்கின்றார்க‌ள்.

இந்த‌ப்ப‌ட‌ம் ஒருவ‌கையான‌ 'எதிர்ப்பு' என்று கூறுவ‌த‌ற்கு இவ்வாற‌ன‌வை ஒரு சில‌ உதார‌ண‌ங்க‌ளாகும்.

அஹமட் ஹபீப்: : எவ்வாறான‌ த‌டைக‌ளை இப்ப‌ட‌த்தை உருவாக்கும்போது ச‌ந்தித்திருந்திருந்தீர்க‌ள்?

சலூம்: நான் இத்திட்ட‌த்திற்காக‌ ப‌ண‌த்தைச் சேக‌ரிக்க‌த் தொட‌ங்கிய‌போது, இப்ப‌ட‌ம் பால‌ஸ்தீனர்க‌ளின் ஹிப் ஹொப் இய‌க்க‌ம் ப‌ற்றிய‌து என்ப‌தை எப்போதும் நினைவுப‌டுத்திக்கொண்டு இருக்க‌வேண்டியிருந்த‌து.

அநேக‌மான‌வ‌ர்க‌ள் இப்ப‌ட‌ம் இஸ்ரேலிய‌ர்க‌ளும், பால‌ஸ்தீனர்க‌ளும் எப்ப‌டி ஹிப் ஹொப்பால் இணைகின்றார்க‌ள் என்ப‌தாக‌ இருக்குமென‌ நினைத்தார்க‌ள். ஆனால் இது பால‌ஸ்தீனிய‌ர்க‌ளைப் ப‌ற்றிய‌து மட்டும் என்று அவ‌ர்க‌ள் உண‌ர்ந்த‌போது, அவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் இந்தத் திட்டத்தில் ஈடுபாட்டைக் காட்ட‌வில்லை.

இறுதியில், என்னிட‌மிருந்த‌ ப‌ண‌ம் அனைத்தும் செல‌வழிந்து என‌து பெற்றோருட‌ன் திரும்பச்சென்று வாழ‌ வேண்டிய‌ நிலை ஏற்ப‌ட்ட‌து. அங்கே என‌து பெற்றோருக்குச் சொந்த‌மான‌ ஜ‌ஸ்கிறிம் க‌டையில் வேலை செய்திருக்கின்றேன். இவ்வாறாக‌ வேலை செய்துகொண்டு, இர‌வில் படத்தை எடிட் செய்வ‌துமாய் இருந்தேன். ஐஸ்கிறிம் பார்ல‌ரினால் வ‌ந்த‌ லாப‌ம் எல்லாவ‌ற்றையும் இந்தப்படத்திற்காய்ச் செல‌வ‌ழித்தேன்.

அத‌னால் தான், இப்ப‌ட‌ம் முடியும்போது, 'குளிர்ச்சியான ஜ‌ஸ்கிறிம் த‌யாரிப்புக்க‌ளுக்கு' என்று ச‌ம‌ர்ப்பித்திருப்ப‌தை நீங்க‌ள் காண்பீர்கள்.

இவையும், ச‌மூக‌த்தின‌தும் ம‌ற்ற‌ க‌லைஞ‌ர்க‌ளின் உத‌வி இல்லாதிருந்துவிட்டால் இப்ப‌ட‌த்திற்கு நிதியே வ‌ந்திருக்காது.

அத்தோடு இப்ப‌ட‌த்தை இஸ்ரேலில் எடுத்துக்கொண்டிருந்த‌போது, ப‌ல‌வித‌ த‌டைக‌ளைச் ச‌ந்தித்திருந்தேன். ஓர் அர‌பு அமெரிக்க‌ராய், ரெல் அவிவிலுள்ள‌ பென் குரிய‌ன் விமான‌ நிலைய‌த்திற்குப் போவ‌தென்ப‌தும் எப்போதும் மிக‌ப்பெரும் ச‌வாலான‌ அனுப‌வ‌மாக‌வும் அதைவிட‌ காஸாவிற்குள் நுழைவ‌து என்பது இன்னும் க‌டின‌மானதாக‌வும் இருந்திருக்கின்ற‌து.

நானொரு பால‌ஸ்தீனிய‌ப் பின்புல‌த்தில் இருப்ப‌தை அவ‌ர்க‌ள் அறியும்போது இது இன்னும் மோச்மாக இருந்தது. என்னை ஒவ்வொருமுறையும் விசாரணைக்காக தடுத்தி நிறுத்தி வைத்திருந்திருக்கின்றார்கள், சில‌ நேர‌ங்க‌ளில் ஏழு ம‌ணித்தியால‌ங்க‌ளுக்கு மேலாக‌வும்.

இன்ன‌மும் ம‌ன‌அழுத்த‌ம் இருப்ப‌து எங்கே என்றால், நான் (இஸ்ரேலின்) உள்ளே அனும‌திக்க‌ப்ப‌டுவேனா என்ப‌தை அறிய‌முடியாம‌ல் இருக்கும்போது; எனெனில் என‌க்குத் தெரிந்த ப‌ல‌ அர‌பு ந‌ண்ப‌ர்க‌ளுக்கு இஸ்ரேலின் உள்ளே பிர‌வேசிக்கப்ப‌டுவ‌து ம‌றுக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. ஒருமுறை இஸ்ரேலிய‌ அதிகாரிக‌ள் என‌து க‌ம‌ராவைத் திருப்பித் த‌ருவ‌த‌ற்கு முன் உடைத்திருக்கின்றார்க‌ள். அத‌ன் பின், நான் டேப்புக்க‌ளையோ, உப‌க‌ர‌ண‌ங்க‌ளையோ ப‌ய‌ணிக்கும்போது கொண்டு செல்வ‌தில்லை.

நாங்க‌ள் இஸ்ரேலின் இவ்வாறான‌ செய்கைக‌ள் குறித்து எந்த‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளையும் ஒருபோதும் கேட்ட‌தில்லை. ராச்ச‌ல் கோரி போன்ற‌ அமெரிக்க‌ குடியுரிமையுள்ள‌வர்கள் இஸ்ரேலிய‌ புல்டோச‌ர்க‌ளால் கொல்ல‌ப்ப‌ட்ட‌போது கூட‌, இஸ்ரேலின் செயற்பாடுகளை -அவ‌ர்க‌ள் காஸாவிலுள்ள 'தீவிர‌வாதிகளிற்கு' எதிராக‌ச் ச‌ண்டைபிடிக்கின்றார்க‌ள் என்ற‌வ‌கையில் ஊட‌க‌ங்க‌ளினால் நியாய‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌.

அஹமட் ஹபீப்: : எவ்வாறான உற‌வுக‌ள் பால‌ஸ்தீன ம‌ற்றும் இஸ்ரேலிய‌ ராப் பாட‌க‌ர்க‌ளுக்கிடையில் இருக்கிற‌து?

சலூம்: நான் பால‌ஸ்தீனர்க‌ளும் இஸ்ரேலிய‌ர்க‌ளும் எப்ப‌டி ராப் பாட‌ல‌களினுடாக‌ ஒற்றுமையாக‌ சேர்ந்து வ‌ருகின்றார்க‌ள் என்ப‌தைப் ப‌ற்றிப் ப‌ட‌ம் எடுக்க‌வில்லை எனெனில் ய‌தார்த்த‌தில் அவ்வாறான‌ ஒரு நிலை ஹிப் ஹொப்பில் அங்கே இருக்க‌வேயில்லை.

அத்துட‌ன் குறிப்பிடும்ப‌டியான‌ ஒருங்கிணைவு பால‌ஸ்தீன ம‌ற்றும் இஸ்ரேல் ராப்ப‌ர்க‌ளிடையே இருக்க‌வில்லை. மிக‌வும் பிர‌ப‌ல்ய‌மான‌ இஸ்ரேலிய‌ ஹிப் ஹொப் க‌லைஞ‌ரே ஒரு வ‌ல‌து சாரி சியோனிஸ்டாக‌ இருப்ப‌தோடு, அர‌புக்க‌ளை கொல்லுமாறுதான் த‌ன‌து நிக‌ழ்வுக‌ளில் இர‌சிக‌ர்க‌ளுக்குப் பாடிக்கொண்டிருக்க்கின்றார்.

பால‌ஸ்தீன ராப்ப‌ர்க‌ளும் அவ‌ர்க‌ள‌து இர‌சிக‌ர்க‌ளும் ஒருபோதும் இஸ்ரேலிய‌ர்க‌ளையோ யூத‌ர்க‌ளையோ கொல்ல‌ச் சொல்லிப் பாடுவ‌தில்லை.

ஒரு சில‌ இஸ்ரேலிய‌ ராப்பர்க‌ள் மித‌வாதிக‌ளாக‌வும், பால‌ஸ்தீனர்க‌ளின் ஹிப் ஹொப்பிற்கு ஆத‌ர‌வாக‌வும் இருப்ப‌தோடு, டாம் ம‌ற்றும் அர‌பு‍-இஸ்ரேலிய‌ ராப்ப‌ர்க‌ளோடு சேர்ந்து வேலை செய்ப‌வ‌ர்க‌ளாக‌வும் இருக்கின்றார்க‌ள்.

என்கின்ற‌போதும், இவ்வாறான மிக அரிய ஒன்றிணைவுகள் எதுவும் அவ்வ‌ள‌வாய் மைய‌நீரோட்ட‌த்திலுள்ள‌ இஸ்ரேலிய‌ ஹிப் ஹொப் உல‌கில் பிர‌திப‌லிப்ப‌தில்லை.

அஹமட் ஹபீப்: : அர‌புப் பெண்க‌ள் க‌லைக‌ளில் அதிக‌ம் ஈடுப‌ட‌வேண்டும் என்று நீங்க‌ள் அழைப்பு விடுத்துள்ளீர்க‌ள்?

சலூம்: பெண்க‌ளின் குர‌ல்க‌ள் எல்லா இட‌ங்க‌ளில் கேட்க‌ப்ப‌ட‌வேண்டும் என்ப‌து எப்போதும் மிக‌ முக்கிய‌மான‌து.

இளைய‌ அர‌புக்க‌ளுக்கு அவ‌ர்க‌ள் ஆண்க‌ளாய் இருந்தாலென்ன‌ பெண்க‌ளாய் இருந்தாலென்ன‌ இவ்வாறான‌ க‌லை ச‌ம்ப‌ந்த‌மான‌ விடய‌ங்க‌ளில், தங்களுக்கு ஈடுபாடு இருக்கிறது என்பது ப‌ற்றித் த‌ம‌து குடும்ப‌ங்க‌ளுக்குக் கூறுவது என்ப‌து மிக‌வும் க‌டின‌மாயிருக்கிற‌து.

வீட்டிலிருக்க‌வும், ச‌மைக்க‌வும் சுத்த‌ம் செய்ய‌வும் வேண்டிய‌வ‌ர்க‌ள் பெண்க‌ள் என்கின்ற‌ க‌ருத்துக்க‌ளுக்கு எதிராக‌ இவ்வாறான‌ விட‌ய‌ங்க‌ளில் ஈடுப‌டுவ‌து என்ப‌து ய‌தார்த்த‌தில் பெண்க‌ளுக்கு இன்னும் மிக‌வும் க‌டின‌மாயிருகிற‌து. நான் என‌து பெற்றோருக்கு க‌லைப்ப‌டிப்பு ப‌டிக்க‌ப்போகின்றேன் என்று கூறிய‌போது, அவ‌ர்க‌ள் வேண்டாம், ஒரு பார்ம‌ஸிக்காரியாகவோ நூலகக்காரியாகவோ ஆகத்தான் ப‌டிக்க‌ச் சொன்னார்க‌ள்.

அவ‌ர்க‌ளைச் ச‌ம‌ர‌ச‌ம் செய்வ‌த‌ற்காய் கிராபிக் டிசைனை தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அத‌னால் அவ‌ர்க‌ள் என்னை ஊக்குவித்தார்க‌ள். ஆனால் நான் தொடர்ச்சியாக ஓவிய‌ங்க‌ளை வ‌ரைந்து அது ஊட‌க‌ங்க‌ளின் க‌வ‌ன‌த்தையும் பெற்ற‌போது அவ‌ர்க‌ள் (பெற்றோர்) என்க்கு மிக‌ உத‌வியாக‌வும் பிற‌ அர‌புப் பெற்றோர்க‌ளுக்கும் அவ‌ர்க‌ளின் பிள்ளைக‌ளை ஓவிய‌ர்க‌ளாக‌, இய‌க்குந‌ன‌ர்க‌ளாக‌, பாட‌க‌ர்க‌ளாக‌ வ‌ர‌ ஊக்குவிக்க‌ச் சொல்லிக் கூறியிருந்தார்கள்.

பால‌ஸ்தீனக் க‌லைஞ‌ராக‌ இப்ப‌ட‌த்தில் வ‌ருகின்ற‌ அபீர், மேடைக‌ளில் ஏறிப்பாடும்போது த‌ன‌து உற‌வின‌ர்க‌ளின் ப‌ய‌முறுத்த‌ல‌க‌ளுக்கு எதிராக‌ப் போர‌ட‌வேண்டியிருந்த‌து. அதிக‌மான‌ வேளைக‌ளில் பாடுவ‌தை இர‌க‌சிய‌மாக‌ச் செய்ய‌வேண்டியிருந்த‌து.

இவை எல்லாவ‌ற்றுக்கும் அப்பால், அபீர் எது த‌ன‌க்க்கு அதிக‌ம் பிடித்த‌தாக‌ இருந்த‌தோ அதைத் தொட‌ர்ந்து செய்துகொண்டிருந்தார்.... அது தானே பாட‌ல்க‌ளை உருவாக்கிப் பாடுவது என்பதாக இருந்தது.

ஜோர்டான், லெப‌னான், பால‌ஸ்தீனம் ம‌ற்றும் அமெரிக்காவில் இப்ப‌ட‌ம் திரையிட‌ப்ப‌ட்ட‌திலிருந்து ப‌ல‌ இளம் பெண்க‌ள் அபிரூக்கு த‌ங்க‌ள் ஆதரவையும், அபீர் செய்யும் பணிக்கான கவுரவத்தையும் மின்ன‌ஞ்ச‌ல்க‌ள் மூல‌ம் கூறிக்கொண்டிருக்கின்றார்க‌ள். அவ‌ர்க‌ளில் அநேக‌ர் தாங்க‌ளும் அபீரைப் போல‌வே ப‌ல‌வேறு ச‌வால்க‌ளைச் ச‌ந்தித்துக்கொண்டிருப்ப‌தாக‌க் கூறியிருக்கின்றார்க‌ள். அபீருக்கு பால‌ஸ்தீன ராப்ப‌ர்க‌ளிட‌மிட‌மிருந்தும் அதிக‌ அதரவு கிடைத்திருக்கின்ற‌து. அவ‌ர்க‌ள் த‌ம‌து திட்ட‌ங்க‌ளிலிருந்து அபீரை அக‌ற்றுவ‌தை ம‌றுத்த‌துட‌ன், அர‌புச் ச‌மூக‌ங்க‌ள் பெண்க‌ளை ந‌ட‌த்தும் வித‌த்தையும் விம‌ர்சித்தும் இருக்கின்றார்க‌ள்.

அர‌பு உல‌கிலுள்ள‌வ‌ர்க‌ளுக்கு, அபீர், அரிய‌பெய‌ட் போன்ற‌ இள‌ம் பெண்க‌ளைக் காட்ட‌வேண்டும் என்ப‌திலும், ஹிப் ஹொப் உல‌க‌ம் என்ப‌து அமெரிக்கா மற்றும் அர‌பு நாடுக‌ளிலிருந்து வ‌ரும் இனிப்பு பூச‌ப்ப‌ட்ட‌ பொப் இசை போன்ற‌த‌ல்ல‌ என்ப‌தை உண‌ர்த்த‌வேண்டும் எனவும் நான் மிகவும் விரும்பினேன்.

அஹமட் ஹபீப்: : இந்தப் படத்தை தயாரித்துக்கொண்டிருந்தபோது, எவ்வகையான மறக்கமுடியாத் தருணங்களைச் சந்தித்திருந்தீர்கள்?

சலூம்: மேற்குக் கரையில் எப்போதும் எங்கள் உறவினர்கள் வாழ்ந்துகொண்டிருந்தார்கள் என்பதனால் எனக்கு ஆக்கிரமிப்பு வாழ்வு மிகவும் பழக்கப்பட்டதாக இருந்தது.

இஸ்ரேலியர்களுடான தொடர்பு என்பது எனக்கு காவலரண்களைத் தாண்டும்போதோ, விமான நிலையத்தால் வரும்போதோ தான் இருந்திருக்கின்றது. இல்லாதுவிட்டால் அவர்கள் டாங்கிகளில் வரும்போதோ அல்லது சினைப்பர் ர(ட)வர்களில் இருக்கும்போதுதான் அவர்களைச் சந்திக்கவேண்டியிருந்தது. எனினும் இந்தப்படம் எனக்கு இஸ்ரேலியர்களின் 1948ம் ஆண்டு ஆக்கிரமிப்பின்பின் பாலஸ்தீனர்கள் தங்கள் நிலங்களில் எவ்வாறு வாழ்கின்றார்கள் என்ப‌தை அறிமுகப்படுத்தியது.

இஸ்ரேலிய குடியுரிமை இருந்தும் கூட மக்கள் மிகவும் மோசமான ஒடுக்குதலுக்கும், புறக்கணிப்புக்கும் இஸ்ரேலில் உள்ளாகின்றார்கள் என்பது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

முக்கியமாக பலவேறு நிலைகளில் பாலஸ்தீனர்கள் என்ற ஒரு பொது அடையாளத்திற்குள் அடைக்கப்பட்ட்டு ஒருமைப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். சில இளையவர்களை நான் சந்தித்தபோது அவர்களுக்கு தமது பாலஸ்தீன அடையாளம் குறித்த குழப்பம் இருந்ததுடன், த்ங்களை எவ்வாறு அடையாளப்படுத்துவது என்பதும் தெரியாமல் இருந்தது.

இவையெல்லாம் சேர்ந்து ஆக்கிரமித்த மக்களைப் பல்வேறு வழிகளில் பிரிக்கின்றது. அத்துடன் மேற்குக் கரையிலும், இஸ்ரேலிலும், காஸாவிலும் வாழும் பாலஸ்தீனர்களுக்கு ஒருவரை ஒருவர் சென்று பார்ப்பது எனபது மிகவும் சிரமமாக இருக்கின்றது.

இந்தப்புள்ளியில்தான் ஹிப் ஹொப் இசை பாலஸ்தீன இளையவர்களை ஒன்றாகக் கொண்டுவருவதில் முக்கியம் பெறுகின்றது.

அஹமட் ஹபீப்: நாங்கள் உங்களின் அடுத்த திட்டமாய் எதை எதிர்ப்பார்க்கலாம்?

சலூம்: இந்தப் படத்திற்காய் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களைச் செலவழித்திருக்கின்றேன். Slingshot hip hop படம் வெளிவந்துவிட்டதால் அதன் வெற்றிக்காக உழைக்க விரும்புகின்றேன்.

இறுதியாய், நான் அரபு கலைஞர்களின் வீடியோ இசை ஆல்பங்களில் வேலை செய்ய விரும்புகின்றேன். என்னால், தரப்படும் மூன்று நிமிடங்களுக்குள் ஒரு கதையைப் பாடலில் சொல்லமுடியுமென நினைக்கின்றேன்.

இன்றையநாட்களில் பாடல்களில் ஆக்கிரமித்திருக்கும் மெழுகுவர்த்திகள், நீர் மற்றும் பெண்களைப் பயன்படுத்தும் சூத்திரங்கள் என்பவற்றுக்கு மாற்றாய் வித்தியாசமாய் செய்ய நான் விரும்புகின்றேன்.

நன்றி: அல் ஜீசிரா
(உன்னதம், Nov, 2009)

*த‌லைய‌ங்க‌த்தைப் பொருத்த‌மாய் த‌மிழாக்கித்த‌ந்த‌ வ‌ள‌ர்ம‌திக்கு ந‌ன்றி.

எதிர்ப்பே வாழ்வாய்...

Saturday, October 31, 2009

-Aimee & Jaguar ஜேர்ம‌னிய‌த் திரைப்ப‌ட‌த்தை முன்வைத்து-

வ்வொருவ‌ருடைய‌ வாழ்வும் அவ‌ர‌வ‌ர்க‌ள் வாழ்கின்ற‌ கால‌த்தையும், இருக்கின்ற‌ ச‌மூக‌ங்க‌ளையும் பொறுத்து வேறுப‌ட‌க்கூடிய‌து. எல்லா நில‌ப்ப‌ர‌ப்புக‌ளுக்கும் ந‌ம்மால் எப்ப‌டி ப‌ய‌ணிக்க‌ முடியாதோ, அவ்வாறே ந‌ம்மால் எல்லோருடைய‌ வாழ்வையும் வாழ்ந்து பார்க்க‌வும் முடியாது. ஆனால் எம்மால் வெவ்வேறு வாழ்க்கை முறைக‌ளையும், க‌லாசார‌ப்  பின்புல‌ங்க‌ளையும் வேறுவ‌கைக‌ளால் விள‌ங்கிக்கொள்ள‌ முய‌ற்சிக்க‌ முடியும். அத‌ற்கு ந‌ம் எல்லோருக்கும் விசால‌மாய் சிந்திக்கும் ம‌னோநிலையும், தெரியாத‌தை தெரிந்து கொள்ளும் ஆர்வ‌மும், இவ‌ற்றுக்கு அப்பால் முன் முடிவுக‌ள் எதையும் எடுக்காத‌ ச‌கிப்புத்தன்மையும் அவ‌சிய‌மாகின்ற‌ன‌.

Aimee & Jaguar என்கின்ற‌ இத்திரைப்ப‌ட‌ம் இர‌ண்டாம் உல‌க‌ப்போரின்போது நட‌க்கின்ற‌ க‌தை. ஹிட்ல‌ரின் நாஸிப்ப‌டைக‌ள், அமெரிக்காவின‌தும் அத‌ன் நேச‌ப்ப‌டைக‌ளின‌தும் தாக்குத‌ல்க‌ளினால் தோல்வியுற்றுக் கொண்டிருக்கின்ற‌ கால‌க‌ட்ட‌ம்; விமான‌க்குண்டுக‌ள் அகோர‌மாக‌ ஜேர்ம‌னிய‌ ந‌க‌ர‌ங்க‌ளில் விழுந்து வெடிக்கின்ற‌ன‌. வெல்வ‌த‌ற்கான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் இன்ன‌மும் உள்ள‌தென‌ அதீத‌ ந‌ம்பிக்கை கொள்கின்ற‌ நாஸிப்ப‌டையின‌ர் எல்லைக‌ளில் நின்று ச‌ண்டைபிடித்துக் கொண்டிருக்கின்ற‌ன‌ர்.


நான்கு குழ‌ந்தைக‌ளின் தாயான‌ லிலிக்கு (Lilly) நாஸிப்ப‌டையில் போரிட்டுக்கொண்டிருக்கின்ற‌ க‌ண‌வ‌னால், அவரின் உடல்சார்ந்த‌ வேட்கையைத் த‌ணிக்க‌ முடியாதிருக்கின்ற‌து. அந்த‌வேளையில் த‌லைம‌றைவாக‌ வாழ்ந்துவ‌ருகின்ற‌ யூத‌ப்பெண்ணான‌ பெலிசியினுட‌ன்(Felice), லிலிக்கு உற‌வு முகிழ்கின்ற‌து. தொட‌க்க‌த்தில் காத‌லும் காம‌மும் வ‌ழிய‌ வ‌ழிய‌ வ‌ருகின்ற‌ அநாம‌தேய‌க் க‌டித‌ங்க‌ள் ஒரு ஆணால் அனுப்ப‌ப்ப‌டுகின்ற‌தென‌ லிலி நினைக்கின்றார். பின்னாளில் அது பெலிசியினால் எழுத‌ப்ப‌ட்ட‌ க‌டித‌ங்க‌ளென‌க் க‌ண்டுபிடித்து பெலிசியோடு சேர்ந்து வாழ‌த்தொட‌ங்குகின்றார். இவ்வாறிருக்கையில் த‌லைம‌றைவாக‌ இருக்கும் பெலிசியின் ந‌ண்ப‌ரொருவ‌ர் நாஸி உள‌வுத்துறையால் சுட‌ப்ப‌ட்டு கொல்ல‌ப்ப‌டுகின்றார். அதிலிருந்து தொட‌ரும் விசார‌ணைக‌ளில் யூத‌ரான‌ பெலிசியையும் நாஸிக‌ள் தேட‌த்தொட‌ங்குகின்ற‌ன‌ர்.

இத‌ற்கிடையில் குறுகிய‌ விடுமுறையில் போர்முனையிலிருந்து திரும்பி வ‌ரும் லிலியின் க‌ண‌வ‌ன், லிலி‍-பெலிசியின் உற‌வைக் க‌ண்டுபிடிக்கின்றார். எனினும் நான்கு குழ‌ந்தைக‌ளுட‌ன் இருக்கும் லிலி த‌ன்னுட‌ன் திரும்பிவ‌ருவார் என்று க‌ண‌வ‌ன் ந‌ம்புகின்ற‌போது, லிலி த‌ன‌க்கு விவாக‌ர‌த்துத் த‌ரும்ப‌டி க‌ண‌வ‌னிட‌ம் வேண்டுகின்றார்.

விவாக‌ர‌த்துப் பெற்ற‌ பெற்ற‌ லிலியுட‌ன் பெலிசி சேர்ந்து குடும்ப‌ப் பொறுப்புக்க‌ளை எடுக்கும்போது, ஹிட்ல‌ரைக் கொல்வ‌த‌ற்கென‌ உட்க‌ட்ட‌மைப்புக்குள் நிக‌ழ்ந்த‌ Valkyrieதிட்ட‌ம் நிகழ்ந்து தோல்வியில் முடிகின்ற‌து (இந்தக் கொலைத்திட்ட‌த்தை வைத்து, அண்மையில் Tom Cruise ந‌டித்து சொத‌ப்பிய‌ ப‌ட‌ம் நினைவுக்கு வ‌ருகிற‌து) . அத‌ன்பின் நிக‌ழ்கின்ற‌ ப‌டுமோச‌மான‌ க‌ளையெடுப்பில், தாங்க‌ளும் அக‌ப்ப‌டப்போகின்றோம் என்று அஞ்சி -த‌லைம‌றைவாய் வாழும் -பெலிசியின் ந‌ண்ப‌ர்க‌ள் ஜேர்ம‌னியை விட்டு வெளியேறுகின்ற‌ன‌ர். த‌ங்க‌ளுட‌ன் கூட‌வே வ‌ர‌ வ‌ற்புறுத்தியும் பெலிசி, த‌ன் காத‌லியான‌ லிலியை விட்டு வ‌ர‌மாட்டேனென‌ ம‌றுக்கின்றார்.

இந்த‌ப்பொழுதிலேயே லிலியிட‌ம், பெலிசி தான் த‌லைம‌றைவாய் வாழுமொரு யூத‌ இன‌த்தைச் சேர்ந்த‌வ‌ர் என்ற‌ உண்மையைக் கூறுகின்றார். யூத‌ர்க‌ளைத் தேடி அழிக்கும் நாஸிக‌ளின் ப‌த‌ற்ற‌மான‌ காலக‌ட்ட‌த்தில் பெலிசியை லிலி ஏற்றுக்கொள்வ‌தோடு த‌ன‌து காத‌லியைத் த‌ன‌து பெற்றோர்க‌ளிட‌மும் அறிமுக‌ப்ப‌டுத்துகின்றார். ஓரின‌ப்பால் துணையாக‌ ம‌ட்டுமின்றி, ஒரு யூத‌ராக‌வும் இருக்கும் பெலிசியை, லிலியின் பெற்றோர் த‌ய‌க்க‌த்துட‌ன் ஏற்றுக்கொள்கின்ற‌ன‌ர்.

இறுதியில் பெலிசியின் கொல்ல‌ப்ப‌ட்ட‌ தோழியிட‌ம் க‌ண்டெடுத்த‌ த‌ட‌ய‌ங்க‌ளை வைத்து பெலிசியை லிலியின் வீட்டில் வைத்து நாஸிக‌ள் கைது செய்கின்றார். சிறையிலிருக்கும் பெலிசியை அவ்வ‌ப்போது லிலி ச‌ந்தித்தாலும் அவ‌ரால‌ பெலிசியை விடுத‌லை செய்ய‌முடியாதிருக்கின்ற‌து பின்ன‌ர் போல‌ந்திலிருந்த‌ ஒரு சித்திர‌வ‌தை முகாமில் எவ்வித‌ச் சாட்சிய‌ங்க‌ளுமின்றி பெலிசி காணாம‌ற்போய்விடுகின்றார்(கொல்ல‌ப்ப‌ட்டுவிடுகின்றார்).

பின்னாளில் த‌ன‌து முதிய‌ வ‌ய‌தில் லிலி த‌ன‌து பால்ய‌கால‌த் தோழியொருவ‌ரை முதியோர் இல்ல‌மொன்றில் ச‌ந்திக்கும்போதே இந்த‌க் க‌ட‌ந்த‌கால‌ நினைவுக‌ள் கிள‌ற‌ப்ப‌டுகின்ற‌ன‌. லிலியின் தோழி, பெலிசி கைதுசெய்ய‌ப்ப‌ட்டு காணாம‌ற்போன‌த‌ன் பிற‌கு, எவ்வாறு லிலியின் வாழ்வு க‌ழிந்த‌தென‌ வினாவுகிறார். பெலிசி கைதுசெய்ய‌ப்ப‌ட்ட‌த‌ன் பிற‌கு தான் எந்த‌ப் புதிய‌ உற‌வுக்குள்ளும் போக‌வில்லை என்கின்ற‌ லிலி, பெலிசியோடு இருந்த‌ கால‌ங்க‌ளே உண்மையான‌ காத‌லோடு இருந்த‌ கால‌ங்க‌ளென‌க் கூறி ந‌ன‌விடை தோய்வ‌தோடு ப‌ட‌ம் முடிவ‌டைகிற‌து.


ப்ப‌ட‌ம் போரின் ப‌த‌ற்ற‌ங்க‌ளை ம‌ட்டுமில்லாது போர்க்கால‌ அழிவுக‌ளையும் காட்சிப்ப‌டுத்துகின்ற‌து. ஒரு கால‌த்தில் தேசிய‌த்தின் பேரால் வெறியூட்ட‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ள், அழிவுக‌ள் த‌ம் வீட்டு வாச‌ல்க‌ளில் வ‌ந்துகொண்டிருப்ப‌தைத் துய‌ர‌த்துட‌ன் பார்த்த‌ப‌டி இருப்ப‌து ம‌ன‌தில் தைக்கும்ப‌டியாக‌ காட்ட‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. ஒருகாட்சியில் குழ‌ந்தைக‌ளை மிருக‌க்காட்சிச்சாலைக்குக் கூட்டிச் செல்ல‌ப்ப‌டும்போது அங்கே மிருக‌க்காட்சிசாலையென்றிருப்ப‌து குண்டுத்தாக்குத‌லில் சிதில‌மாகிப்போன‌ ஒரு க‌ட்ட‌ட்ட‌த்தொகுதி ம‌ட்டுமே. குண்டுக‌ள் தொட‌ர்ச்சியாக‌ வீழ்ந்துகொண்டிருக்க‌, ம‌னித‌ர்க‌ள் உட‌ல‌ங்க‌ளைச் ச‌ர்வ‌சாத‌ர‌ண‌மாக‌ -வேற்றுக்கிர‌க‌வாசிக‌ள் மாதிரி- தாண்டிய‌ப‌டி ந‌ட‌மாடிக்கொண்டிருக்கின்றார்க‌ள். ஆனால் இவ்வாறாக‌ தோல்வியின் விளிம்பில் நாஸிக‌ள் நின்ற‌போதும் த‌ம‌து அதிகார‌த்தைக் கைவிடாது யூத‌ர்க‌ளை அர‌ச‌ இய‌ந்திர‌ம் வேட்டையாடிய‌படியே இருக்கின்ற‌து என்ப‌தும் காட்ட‌ப்ப‌டுகின்ற‌து. அதேபோன்று எல்லாமே கைந‌ழுவிப்போய்விட்டாலும் ஹிட‌ல‌ரின் தேசிய‌த்தின் மீது க‌டைசிவ‌ரை ந‌ம்பிக்கையிழ‌க்காது போர்முனைக்குப் போய் இற‌க்கின்ற‌ லிலியின் க‌ண‌வ‌னைப் போன்ற‌வ‌ர்க‌ளும் இருக்க‌த்தான் செய்கின்றார்க‌ள்.




த‌ம‌க்கான‌ ம‌கிழ்ச்சியை ம‌ட்டுமில்லாது த‌ம‌க்கான‌ பாலிய‌ல் விடுத‌லையைத் தேடுகின்ற‌வ‌ர்க‌ளாய் லிலியும் பெலிசியும் இருக்கின்றார்க‌ள். த‌ன‌து ம‌ர‌ண‌ம் வாச‌ல‌டியில் ஒரு நிழ‌லைப்போல‌ ம‌றைந்திருக்கிற‌து என்ப‌தைத் தெளிவாக‌ உண‌ர்கின்ற‌ பெலிசி அந்த‌ நாளைய‌ ம‌கிழ்வையோ அல்ல‌து த‌ன‌து காத‌லையோ கைவிட‌த்த‌யாரில்லாத‌வ‌ராக‌வே இருக்கின்றார். வாழ்வு என்ப‌து என்ன‌ என்கின்ற‌ கேள்வி தோழிக‌ளிடையே வ‌ரும்போது 'நான் இந்த‌ப்பொழுதைக் கொண்டாடிக்கொண்டிருப்ப‌வ‌ள் நாளையைப் ப‌ற்றி ஒருபோதும் க‌வ‌லைப்ப‌ட்ட‌தில்லை'யென‌ பெலிசி த‌ன்னைப் பிர‌க‌ட‌ன‌ம் செய்துகொள்ள‌வும் செய்கின்றார். இர‌ண்டாம் உல‌க‌யுத்த‌த்தின்போது ஜேர்ம‌னியில் கூட‌ த‌லைம‌றைவாக‌ மிக‌ப்பெரும் எண்ணிக்கையான‌ ஓரின‌ப்பால் பெண்க‌ள் இருந்த‌தை இப்ப‌ட‌ம் க‌வ‌ன‌ப்ப‌டுத்துகின்ற‌து. ஹிட்ல‌ரின் நாஸிப்ப‌டைக‌ள் யூத‌ர்க‌ளை ம‌ட்டுமின்றி ஹிப்பிக‌ள், ஓரின‌ப்பாலார் போன்ற‌ ப‌ல்வேறு விளிம்புநிலை ம‌னித‌ர்களை 'ப‌ரிசுத்த‌ இன‌ப்பெருமை'யில் க‌ண‌க்கில்லாது கொன்றொழித்த‌தை நாம் நினைவில் கொள்ள‌வும் வேண்டும். அதிகார‌ம் ம‌றுத்த‌ வாழ்க்கை முறைக்கு எதிராக‌ த‌ங்க‌ள் வாழ்வு முறையையே ஒரு போராட்டமாக‌ ஆக்கிக்கொண்ட‌ லிலியைப் போன்ற‌ எத்த‌னையோ பேர்க‌ள் கால‌ங்கால‌மாக‌ இருந்துகொண்டேதான் இருக்கின்றார்க‌ள்.


த‌மிழ் சூழ‌ல் சார்ந்து ஓரின‌ப்பால் குறித்து மிக‌க் குறைவான‌ உரையாட‌ல்க‌ளே நிக‌ழ்த்த‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌. ஓரின‌ப்பால் குறித்து த‌மிழில் ப‌ட‌ங்க‌ள் ஏதாவ‌து வ‌ந்திருக்கின்றதா என‌ப் பார்க்கும்போது, சும‌தி ரூப‌ன் திரைக்க‌தை எழுதி, ரூப‌ன் இய‌க்கிய‌
You 2 என்ற‌ (30-45 நிமிட‌ங்க‌ள்) ஓட‌க்கூடிய‌ ஒரு குறும்ப‌ட‌மே வ‌ந்திருக்கின்ற‌தென‌த் தோன்றுகின்ற‌து. அந்த‌ப் ப‌ட‌த்தில் ந‌டிப்ப‌த‌ற்கும் ந‌டிகைக‌ள் தேட‌ தான் மிக‌வும் கடின‌ப்ப‌ட்ட‌தாய் சும‌தி எங்கோ ஓரிட‌த்தில் கூறிய‌தும் நினைவினிலுண்டு. ந‌டிகைக‌ள் இல்லாது போன‌போது திரைக்க‌தை எழுதிய‌ சும‌தியே அதிலொரு பாத்திர‌ம் ஏற்க‌வேண்டியும் இருந்திருக்கின்ற‌து. You 2 என்கின்ற‌ இக்குறும்ப‌ட‌த்தின் க‌தை, குழ‌ந்தைக‌ளுள்ள‌ ஒரு பெண் த‌ன‌து க‌ண‌வ‌னின் வ‌ன்முறையால் பாதிக்க‌ப்ப‌ட்டு இன்னொரு தோழியின் வீட்டில் வீட்டில் சென்று வாழ‌த்தொட‌ங்குகின்றார். க‌ண‌வ‌னை க‌ண்க‌ண்ட‌ தெய‌வ‌ம் என‌ ந‌ம்புகின்ற‌ -குடும்ப‌ வ‌ன்முறையால் மிக‌ மோச‌மாக‌ப் பாதிக்க‌ப்ப‌ட்ட‌- பெண் க‌ண‌வ‌னிட‌ம் மீண்டும் போக‌ விரும்புகின்ற‌வ‌ராய் தொட‌க்க‌த்தில் இருக்கின்றார்.

இவ்வாறான‌ நீட்சியில் இரு தோழிக‌ளுக்குமிடையில் ஒரின‌ப்பால் உற‌வு முகிழ்கின்ற‌து. ஆனால் அந்த‌ ஓரின‌ப்பால் உற‌வில் கூட‌ ஏற்ற‌த்தாழ்வுக‌ள் இணைக‌ளுக்குக்கிடையில் வ‌ருவ‌தையே 'நீயும் கூட‌வா' என்று அந்த‌ வ‌ன்முறையால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ பெண் நினைப்ப‌தாய் ப‌ட‌ம் முடிக்க‌ப்ப‌ட்டிருக்கும். அற்புத‌மான‌ ஒளிப்ப‌திவாலும், ஆக‌ அல‌ட்ட‌லில்லாது சூட்சும‌மாய் தோழிக‌ளிடையே வ‌ரும் உற‌வைக் காட்டிய‌ இந்த‌ப்ப‌ட‌ம் குறித்து இதுவ‌ரை ஆக்க‌ப்பூர்வ‌மான‌ உரையாட‌ல்க‌ள‌ நிக‌ழ‌வேயில்லையென்ப‌து ந‌ம் கால‌த்தைய‌ சோக‌ம். ஓரின‌ப்பால் ப‌ற்றிய‌ ச‌ரியான‌ புரிந்துண‌ர்வுக‌க‌ளோ இல்லா ந‌ம் ச‌மூக‌த்தில், லெஸ்பிய‌ன் உற‌வுக‌ளிலும் அதிகார‌ம் நுண்ணிய‌த‌ள‌த்தில் செய‌ற்ப‌டுகின்ற‌து என்ப‌தை இப்போது காட்சிப்ப‌டுத்துவ‌து அவ‌சிய‌மா என்று இப்ப‌ட‌த்தை முன்வைத்து சில‌ கேள்விக‌ள் இருப்பினும், எதையும் எந்த‌க் கால‌த்திலும் எடுக்கும் சுத‌ந்திர‌ம் ஒரு ப‌டைப்பாளிக்கு இருக்கிற‌தென்ப‌தையும் ம‌றுக்க‌முடியாது.

4.
Amiee & Jaguar ப‌ட‌ம் நுட்ப‌மான‌ ப‌ல‌ கேள்விக‌ளைப் பார்வையாள‌ரிடையே முன்வைக்கின்ற‌து. குடும்ப‌ம் என்ற‌ அமைப்பைத் தீவிர‌மாக‌ ந‌ம்பும் ஒருவ‌ருக்கு நான்கு பிள்ளைக‌ளுட‌ன் உள்ள‌ லிலியின் பாத்திர‌ம் உவ‌ப்பாக‌ இருக்க‌ப்போவ‌தில்லை. லிலியிடம் ஒருச‌ம‌ய‌த்தில் இர‌ண்டு தெரிவுக‌ள் இருந்திருக்கின்ற‌ன‌.ச‌மூக‌த்தின் ச‌ட்ட‌திட்ட‌ங்க‌ளுக்கு உட்ப‌ட்டு த‌ன‌க்கு உவ‌ப்பில்லாத‌ வாழ்வை வாழ்வ‌து ஒன்று. த‌ன‌க்குப் பிடித்த‌தொரு வாழ்வை ச‌மூக‌ம் வ‌ரைய‌றுத்த‌ ச‌ட்ட‌க‌ங்க‌ளை உடைத்து வாழ்வ‌து என்ப‌து ம‌ற்றொன்று. இங்கே லிலி த‌ன‌க்குப் பிடித்த‌மான‌ ஒரு தெரிவை எடுக்கின்றார். ஆனால் அவ்வாறு தீர்க்க‌மான‌ முடிவுக‌ள் எடுக்க‌முடியாது ஆயிர‌ங்கால‌ ப‌ண்பாட்டுச் சுமை சும‌க்க‌வேண்டிய‌ அவ‌ல‌ம் ப‌ல‌ பெண்க‌ளுக்கு இருக்கிற‌து. த‌ன‌க்கு நெருக்க‌மாக‌வும், த‌ன‌து உட‌ல் சார்ந்த‌ ம‌ர்ம‌ங்க‌ளின் முடிச்சுக்க‌ளை அவிழ்க்க‌ கூடிய‌வ‌ராக‌வும் இன்னொரு பெண்ணே இருக்க‌முடியுமென‌க் க‌ண்டுபிடிக்கின்றார். தான் ந‌ம்பிய‌ காத‌லுக்காய் லிலி க‌டைசிவ‌ரை உண்மையாக‌வே இருக்கின்றார். த‌ன‌து துணை, த‌ங்க‌ளுக்கு எதிரிக‌ளாக‌ க‌ட்டிய‌மைக்க‌ப்ப‌ட்ட‌ யூத‌ர்க‌ளாயிருந்தாலும், அந்த‌த் த‌டைக‌ளை மீறி பெலிசியை ஒரு யூத‌ரென‌ பின்னாட்க‌ளில் தெரிந்தாலும் முழும‌ன‌துட‌ன் ஒரு துணையாக‌ ஏற்றுக்கொள்ள‌த் த‌ய‌ங்க‌வும் இல்லை.

இந்த‌க் க‌தை, ஹிட்ல‌ரின் கால‌த்தில் நிக‌ழ்ந்த‌ ஒரு உண்மைக்க‌தையாகும். கிட்ட‌த்த‌ட்ட‌ 50 ஆண்டுக‌ளின்பின் இந்த‌க்க‌தையை எரிக்கா பிஷ‌ர் என்ப‌வ‌ர் நூலாக‌ எழுத‌, பின்ன‌ர் இப்ப‌ட‌மாக‌ எடுக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. உண்மைக‌ள் எப்போதும் அடியாழ‌ங்க‌ளில் உற‌ங்கிக்கொண்டிருக்காது. ஒருநாள் உண்மைக‌ள் வெளியே வ‌ரும்போது அதிகார‌த்திலிருந்து த‌ம‌க்கான‌ வ‌ர‌லாற்றை எழுதிய‌வ‌ர்க‌ளை மீண்டும் புதைகுழிக‌ளிலிருந்து தோண்டியெடுத்து, கேள்விக‌ளின் க‌ணைக‌ளால் நிர்வாண‌மாக்க‌ப்படுவ‌தும் நிக‌ழ்ந்து கொண்டுதானிருக்கிற‌து.

க‌றுப்பு ‍வெள்ளைப் ப‌ட‌ங்க‌ள்: அச‌ல் லிலி ம‌ற்றும் பெலிசி
(நன்றி: கால‌ம்' , இதழ்-33 )

உட‌ல‌ப்ப‌ச்சைய‌ங்க‌ள்

Tuesday, October 06, 2009

1.
நேற்றைக‌ளின் இர‌வுக‌ளின்
ஒவ்வோர் க‌த‌க‌த‌ப்பான‌ அழைப்பிலும்
ப‌ச்சைய‌ம் ப‌டிந்து உருவான காடுக‌ள்...
க‌ழுத்திலொரு வ‌ளைய‌ம் அணிவித்து
கால‌ம் ந‌ம்மை நெருக்கிய‌போது
எல்லா இர‌க‌சிய‌ங்க‌ளையும்
தம்மோடு மூடிக்கொண்டு
துய‌ர‌த்தில் த‌ற்கொலை செய்திருந்த‌ன‌

'எல்லாமும்' இருக்கின்ற‌
யாரும‌ற்ற‌ ப‌னிப்பாலையில்
சுழிய‌த்திலிருந்து தொட‌ங்கும் ப‌திய‌ங்க‌ள்...
த‌வ‌றுக‌ளின் துரித‌க‌தியில் ஊரத்தொட‌ங்குகின்ற‌ன‌ புத்த‌க‌ப்பூச்சிக‌ள்
புத்த‌க‌ங்க‌ளும் வேண்டாம் பூனாவும் வேண்டாமென‌
மூர்ககமாகி அனைத்தையும் உதைத்துத்த‌ள்ளிய‌பின்
கொளுத்த‌த்தொட‌ங்கினேன் புத்த‌க‌ம் + பூச்சிக‌ளை.

2.
இப்போது உதிர்ந்துகொண்டிருக்கும்
இலைக‌ளில்
பொழியும் மழை
மீண்டும் கிள‌ர்த்திக்கொண்டிருக்கிற‌து
க‌ன‌வுக‌ளை.

'ந‌ம‌க்கான‌ க‌ன‌வுக‌ள் த‌னித்துவ‌மான‌வை'
நூறிலிருந்து சுழிய‌த்துக்கு ந‌க‌ர்ந்துகொண்டிருந்த‌
விருப்புக்க‌ளின் ச‌துர‌ங்க‌த்திற்குள் நின்றொலித்திருக்கிறேன்
பாம்பு வாலால் சுழ‌ற்றி வீழ்த்திய‌போதும்
ஏணியில் ஏற்றிவிட‌ 'தொலைவிலொரு குர‌ல்' காத்திருந்த‌து

ப‌ச்சைய‌ங்க‌ளில் வ‌ள‌ர்த்த‌
ந‌ம‌க்கான‌ காடு த‌ற்கொலையை நாடிய‌போது
அத‌ன் க‌டைசிப்பொழுது க‌த்தரிப்பூ நிற‌த்திலிருந்த‌து
பிடித்த‌மான‌ க‌ள்ளிச்செடிக‌ளை வ‌ளர்க்க‌க்கூட‌
மூர்க்க‌மாய் ம‌றுத்துத் த‌ரிசான‌து நில‌ம் (அல்ல‌து காடு).

3.
பிற‌ருக்கான‌
ந‌ன்றிக‌ளையும் விருப்புக்க‌ளையும்
ம‌றுத‌லித்து பாவ‌ங்க‌ளின் குறுக்கும‌றுக்குமான‌
முடிவிலி வ‌லைக்குள் வீழ்ந்தா நானா?
ந‌ம‌க்கான‌ க‌ன‌வா?
காடெரிந்த‌ க‌த்தரிப்பூச் சுவாலை
மீண்டும் ஊருலா வ‌ருகையில்
காலையில் த‌ருமொரு முத்த‌மாய்
உன்துயில் க‌லைக்காது 'போய்விட‌' விரும்புகின்றேன்

'எரிப்ப‌தை விட‌ வ‌னாந்த‌ர‌த்தில் புதைப்ப‌தே விருப்ப‌மான‌து'
அன்பே, த‌ய‌வுசெய்து ம‌ற‌ந்துவிடாதே
க‌ன‌வு எண் 25ஐ.

காடு த‌ன்னை எரித்த‌துபோல‌வ‌ன்றி
அடையாளமின்றிப்போவ‌தை ம‌றுக்கின்றேன்
'இந்த‌க் க‌ன‌வுக‌ள் - ஈர‌லிப்பான‌வை நித்திய‌மான‌வை நிக‌ழ‌க்கூடிய‌வை'

ப‌ஞ்ச‌வ‌ர்ண‌க்கிளியின் வ‌ழிகாட்ட‌லோடு
க‌ன‌வுக‌ளை நிக‌ழ்த்திக்காட்ட‌
வ‌ருமொருவ‌ரின் கால‌டித்த‌ட‌ங்க‌ளுக்காய்
மித‌ந்த‌ப‌டியிருக்க‌ட்டும்
என்னுட‌ல‌ப் ப‌ச்சைய‌ங்க‌ள்.

(2009)

சே குவேரா, சுகுமார‌ன், லிவிங் ஸ்மைல் வித்யா: சில‌ குறிப்புக‌ள்

Wednesday, September 02, 2009

உல‌க‌ அள‌வில் இன்று அர‌சிய‌ல் என்ப‌து மாற்று, எதிர்ப்பு என்ப‌வ‌ற்றை விடுத்து ஒருவித‌ பித்த‌ உற‌க்க‌த்தில் இருப்ப‌த‌ன் ப‌ய‌ங்க‌ர‌ம் அச்ச‌த்தை அளிக்கிற‌து. அற‌ங்க‌ளைப் ப‌ற்றி பேசுவ‌தும் அற‌ அழுத்த‌ங்க‌ளைப் ப‌திவு செய்வ‌தும் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம், வ‌ன்முறை என்று அடையாள‌ப்ப‌டுத்த‌ப்ப‌டும் ஒரு கால‌க‌ட்ட‌த்தில் விடுத‌லை என்ப‌து ப‌ற்றிச் சிந்திப்ப‌து ஒரு க‌வித்துவ‌மான‌ ஆறுத‌லை ம‌ட்டுமே த‌ர‌க்கூடிய‌தாக‌ உள்ள‌து.
(பிரேம் -ர‌மேஷ்: க‌ட்டுரையும் க‌ட்டுக்க‌தையும்)

1.
சில‌ புத்த‌க‌ங்க‌ளை அதிக‌ ஆர்வ‌த்தோடு வாசிக்க‌த் தொட‌ங்கும்போது அவ‌ற்றிலிருந்து எடுத்துக்கொள்ள‌ எதுவுமில்லையென்ற‌ வெறுமை வ‌ந்துவிடும். எதிர்பார்ப்பில்லாது வாசிக்கும் சில‌ புத்த‌க‌ங்க‌ளோ சில‌வேளைக‌ளில் சுவார‌சிய‌மான‌ வாசிப்ப‌னுவ‌த்தை எதிர்பாராது த‌ந்துவிடுகின்ற‌ன‌. ஏற்க‌ன‌வே அங்குமிங்குமாய் உயிர்மையில் வ‌ந்திருந்த‌ க‌ட்டுரைக‌ளை வாசித்த‌ கார‌ண‌த்தால் -ஒர‌ள‌வு அசுவார‌சிய‌மான‌ நிலையிலே- தனிமையின் வ‌ழி என்னும் சுகுமார‌னின் ப‌த்தித் தொகுப்பை வாசிக்க‌த் தொட‌ங்கியிருந்தேன். ப‌க்க‌ங்க‌ளைப் புர‌ட்ட‌ புர‌ட்ட‌ புற‌க்கார‌ண‌ங்க‌ளால் சோர்ந்துபோயிருந்த‌ ம‌ன‌து நெருக்க‌மான‌ க‌ர‌ங்க‌ளினால் இத‌மூட்ட‌ப்ப‌ட்ட‌து போன்ற‌ உண‌ர்வுநிலைக்கு வ‌ந்திருந்த‌து. எத்த‌னைவித‌மான‌ ம‌னித‌ர்க‌ளை.., எத்த‌னை வித‌மான‌ உண‌ர்ச்சிநிலைக‌ளை சுகுமார‌ன் எதிர்கொண்டாரோ அவற்றையெல்லாம் வாசிக்கும் ந‌ம்மிலும் ப‌டிவ‌துமாதிரியான‌ அனுப‌வ‌த்தை இத்தொகுப்பு தோற்றுவித்திருந்த‌து. த‌ன்னை நோக‌டித்திருந்தாலும், எந்த‌ ம‌னித‌ரையும் அவ‌மான‌ப்ப‌டுத்த‌ விரும்பாத‌, அவர்க‌ளின் ப‌ல‌வீன‌ங்க‌ளை ஏற்றுக்கொள்கின்ற‌ ஒரு ப‌த்தியெழுத்தாள‌ராக‌ சுகுமார‌ன் மாறுகின்ற‌போது இன்னும் நெருக்க‌முடைய‌வ‌ராக‌ மாறிவிடுகின்றார்.


க‌விஞ‌ர்க‌ளாலும் ந‌ல்ல‌ ப‌த்தியெழுத்தாள‌ராக‌ முடியும் என்ற‌ ந‌ம்பிக்கையை பிர‌மிளுக்குப் பிற‌கு துல்லியமாகக் க‌ண்ட‌றிந்த‌து கொண்டது சுகுமார‌னிட‌ம் என‌ச் சொல்ல‌லாம். இத்தொகுப்பில் கூற‌ப்ப‌டும் சில‌ (அவ‌மான‌) அனுப‌வ‌ங்க‌ள் சில‌ பொழுதுகளில் க‌ள்ளிக்காடு பால‌ச்ச‌ந்திர‌னின் சித‌ம்ப‌ர‌ நினைவுக‌ளை நினைவுப‌டுத்தியிருந்த‌து. இருவரினதும் அனுப‌வ‌ங்க‌ள் வெவ்வேறான‌வை என்றாலும், நிக‌ழும் நில‌ப்ப‌ர‌ப்புக்க‌ள் ஒன்றென்ப‌தால் அவ்வாறான‌ இணைப்பை என‌து ம‌ன‌து பொருத்திப் பார்த்த‌தோ என்ற‌ ச‌ந்தேக‌மும் உண்டுதான்.

வீட்டை விட்டு (இர‌ண்டு முறை) ஓடிபோத‌ல், அப்பாவைப் பிரிந்து அம்மாவோடும் ச‌கோத‌ரிக‌ளோடும் வாழ்வ‌து என்று ப‌ல‌வேறு துய‌ர‌ நினைவுக‌ளைச் சும‌ந்திருந்தாலும், அவ‌ற்றைக் கூட‌ வாழ்வில் இய‌ல்புக‌ளில் சில‌வாய் இருக்க‌க்கூடும் என்று சுகுமார‌ன் எழுதிப்போவ‌து பிடித்த‌மான‌து. ஆர்.ஷ‌ண்முக‌சுந்தர‌த்தை ச‌ந்திக்கும்போது அவ‌ர் ப‌டைப்புச் சார்ந்து க‌தைக்காது பிற‌ விட‌ய‌ங்க‌ளைக் க‌தைத்து, இல‌க்கிய‌ம் சோறு போடாது என‌ எச்ச‌ரிப்ப‌தும், காஃப்காவினால் ப‌ரிட்ச‌ய‌மாகும் சிற்றித‌ழ் வெளியிடும் ந‌ண்ப‌ரொருவ‌ர் க‌டும்போதையால் இள‌வ‌ய‌தில் இற‌ந்துபோவ‌தையும் வாசிக்கும்போது இல‌க்கிய‌ம் சார்ந்த‌ க‌ச‌ப்பே க‌விய‌த்தொட‌ங்குகின்ற‌து. ஆனாலும் இவ்வாறான‌ க‌ட‌ந்த‌கால‌ க‌ச‌ப்பான‌ நிக‌ழ்வுக‌ளையும் தாண்டி ஏதோ ஒரு ம‌ர்மமான‌ சுழ‌ல்தான் ப‌ல‌ரை இன்னுமின்னும் ப‌டைப்பில‌க்கிய‌ம் சார்ந்து தீவிரமாய் இய‌ங்க‌வைத்துக்கொண்டிருக்கின்ற‌து போலும்.
ஒரு ப‌த்திரிகையாள‌ராக‌ சில்க் சுமிதாவைச் ச‌ந்திப்ப‌தும், சுமிதா க‌விஞ‌ராக‌ இருக்கும் தனது சுய‌ம‌ரியாதையைக் கேலிப‌ண்ணிவிட்ட‌தாக‌ ப‌த்தியெழுத்தாள‌ர் ம‌ன‌ங்கோணுவ‌தும், பிற‌கு சில்க் சுமிதாவின் த‌ற்கொலை செய்த உட‌லைப் பார்க்கும்போது, எத்த‌னையோ ஆயிர‌மாயிர‌ம்பேர்க‌ளின் க‌ன‌வுக‌ளில் வ‌ந்த‌ ஒரு உட‌ல், யாருமே க‌வ‌னிக்காத‌ உட‌லமாகிப்போன‌ அப‌த்த‌த்தையெல்லாம் ம‌ன‌தில் ஊடுருவிச்செல்லும்ப‌டியாக‌ சுகுமார‌ன் எழுதியிருக்கின்றார். சுகுமார‌ன் த‌ன்ன‌ள‌வில் க‌விஞ‌ராக‌ இருப்பதோடு வெகுச‌ன‌ ஊட‌க‌ங்க‌ங்க‌ளிலும் ப‌ணிபுரிந்த‌தால் விசால‌மான‌ நில‌ப்ப‌ர‌ப்புக‌ளில் நிக‌ழ்ந்த‌ ப‌ல‌வேறு ச‌ம்ப‌வ‌ங்க‌ள் நினைவூட்ட‌ப்ப‌டுகின்ற‌ன‌.

2.
த‌னிமையின் வ‌ழி தொகுப்பைவிட‌ அண்மையில் அதிக‌ம் பாதித்த‌/விய‌ந்த‌ ஒரு நிக‌ழ்வென்றால் லிவிங் ஸ்மைல் வித்யாவின‌து நான் வித்யா என்ற‌ சுய‌ச‌ரிதை நூலை முன்வைத்து ஆஹா எப்ஃ எம்மில் நிக‌ழ்ந்த‌ நேர்காண‌ல். எத்த‌னையோவித‌மான‌ அவ‌மான‌ங்க‌ளையும், துய‌ர‌ங்க‌ளையும் வித்யா பெற்றிருப்பார். ந‌ம‌து ச‌மூக‌ம் கொடுத்த‌/கொடுத்துக்கொண்டிருக்கும் வ‌லிக‌ளையும் த‌ழும்புக‌ளையும் ம‌ன‌தில் இருத்திக் காழ்ப்புக்கொள்ளாது (அவ்வாறிருப்ப‌த‌ற்கான‌ அனைத்து உரிமையும் வித்யாவிற்கும் இருந்தும்) மிக‌ நிதான‌மாய் த‌ன‌து வ‌லிக‌ளை -மெல்லிய‌ சிரிப்பால் க‌ட‌ந்து- இன்னும் திருந‌ங்கைக‌ளுக்காய் இச்ச‌மூக‌ம் மாற‌வேண்டிய‌ முக்கிய‌ புள்ளிக‌ளை அந்நேர்காணலில் தொகுத்து அளித்திருந்தார். நாம் எல்லோருமே கொஞ்ச‌ நேர‌ம் ஒதுக்கியேனும் இந்நேர்காண‌லைக் கேட்ப‌தென்ப‌து நாமின்னும் திருந‌ங்கைக‌ளை அணுக்கமாக‌ அணுக‌ உத‌வ‌க்கூடும். லிவிங் ஸ்மைல் வித்யா வெளிப்ப‌டையாக‌ த‌ன‌து சுய‌ச‌ரிதையாக‌ எழுத‌ வ‌ந்த‌து... திருந‌ங்கையாக இல்லாத‌வ‌ர்க‌ளை ம‌ட்டுமில்லை, திருந‌ங்கைக‌ள் என்று அறிந்தும் ச‌மூக‌த்தின் முன் வெளிப்ப‌டையாக‌ அறிவிக்க‌த் த‌ய‌ங்குகின்ற‌வ‌ர்க‌ளையும் பாதித்திருக்கிற‌து என்றே ந‌ம்புகின்றேன். திருந‌ங்கைக‌ளாக‌ த‌ங்க‌ளுக்கான‌ உரிமைக‌ளைக் கேட்கும்போதுகூட‌ கால‌ங்கால‌மாய் நாங்க‌ள் வைத்திருக்கும் வெளியில் த‌ங்க‌ளுக்கான இட‌த்தைக் கூடக் கோரவில்லை; த‌ம‌க்கான‌ த‌னித்துவமாயிருக்கும் ஒரு வெளியை அங்கீக‌ரிக‌க‌ ம‌ட்டுமே வித்யா போன்றோர் வேண்டுகின்றார்க‌ள்; திருந‌ங்கைக‌ள் போன்ற‌ விளிம்புநிலை ம‌னித‌ர்க‌ள் ம‌ட்டுமில்லை ஏனைய‌ மாற்றுப் பாலின‌த்த‌வ‌ர்க‌ளும் இதையேதான் கேட்க‌ விழைகின்றார்க‌ள்.
இன்று கூட‌ எழுத்துச்சூழ‌லில் (வ‌லைப்ப‌திவுக‌ளிலும்) திருந‌ங்கைக‌ள் பிச்சையெடுக்கின்றார்க‌ள், பொதுவெளியில் த‌ங்க‌ளைச் சுற்றிக் கூடி 'ஏடாகூட‌மாய்' கேலிசெய்கின்றார்க‌ள்' என்று இன்னும் அரிவ‌ரியில் இருப்ப‌துபோல‌ ப‌ல‌ர் எழுதும்போது/பேசும்போது அலுப்பே மிஞ்சுகின்ற‌து. அவ்வாறான‌வ‌ர்க‌ள் திருந‌ங்கைக‌ள் உட்ப‌ட்ட‌ மாற்றுப்பாலின‌த்த‌வ‌ர்க‌ள் அப்ப‌டியிருப்ப‌த‌ற்கான‌ கார‌ண‌ங்க‌ளை வித்யா மிக‌ எளிதாக‌ எல்லோருக்கும் விள‌ங்கும்ப‌டியாக‌ கூறும் இந்நேர்காண‌லை நிச்ச‌ய‌ம் கேட்டாக‌ வேண்டும்.

தானொரு திருந‌ங்கையாக‌ மாறிக்கொண்டிருப்ப‌தை அறிந்து, ஆனால் இன்ன‌மும் பொதுவெளியில் அவ்வாறாக‌ அறிவித்துக்கொள்ளாத‌ அனிதா என்றொரு திருந‌ங்கை, நான் வித்யா நூலை வாசித்தபோது த‌ன்னாலும் இச்ச‌மூக‌த்தில் த‌னித்து நிற்க‌முடியும் என்ற‌ ந‌ம்பிக்கையை வித்யா த‌ந்திருந்தார் என்று இந்நிக‌ழ்வில் கூறிய‌தைக் கேட்ட‌போது மிகுந்த‌ நெகிழ்வாயிருந்த‌து. இவ்வாறு வித்யாவின் இந்த‌ நூல் இன்னும் ப‌ல‌ருக்கு உத்வேக‌த்தையும்.., திருந‌ங்கைக‌ள் ப‌ற்றி அறிந்துகொண்டு நெருக்க‌ம் கொள்ள‌வும்... உத‌வியிருக்குமென‌ நினைக்கின்றேன்.

ஆணிலிருந்து பெண்ணாக‌ (M 2 F) மாறுவ‌துபோல‌, ஒரு பெண்ணாயிருந்து ஆணாய் (F 2 M) மாறுவ‌து அவ்வ‌ள‌வு சுல‌ப‌மில்லையென‌வும், மிகுந்த‌ ம‌ன‌த்திட‌ம் வேண்டியிருக்கிற‌தென‌ வித்யா குறிப்பிடுவ‌து க‌வ‌னிக்க‌வேண்டிய‌ ஒன்று. அத்தோடு இவ்வாறு பால் க‌ல‌ப்புட‌ன் இருப்ப‌வ‌ர்க‌ள் உரிய‌ அறுவைச்சிகிச்சை செய்யாதிருக்கும்வ‌ரை ப‌ல்வேறு ச‌ங்க‌ட‌ங்க‌ளை எதிர்கொள்ளவும் வேண்டியிருக்கிற‌து. அண்மையில் இங்கு இதுதொட‌ர்பாய் ந‌ட‌ந்த‌ தொலைக்காட்சி நேர்காண‌லில் க‌ல‌ந்துகொண்ட‌ ஒருவ‌ர் த‌ங்க‌ளுக்கு எந்த‌க் க‌ழிவ‌றைக்குச் செல்வ‌து என்ப‌தே மிக‌ப்பிர‌ச்சினையாக‌ இருக்கிற‌தென‌வும், ஒருமுறை த‌ன்னை காவ‌ற்துறை ப‌ல்பொருள் அங்காடியிலிருந்து வெளியேற்றிய‌தாக‌வும் கூறிய‌தாய் நிக‌ழ்ச்சியைப் பார்த்த‌ தோழியொருவ‌ர் கூறியிருந்தார். ஆக‌, மேற்குல‌க் நாடுக‌ளில் கூட‌ இன்ன‌மும் மாற்றுப் பாலின‌த்த‌வர்க‌ளுக்கான‌ இடைஞ்ச‌ல்க‌ள‌ க‌ளைய‌ப்ப‌ட‌வில்லை என்ப‌தை நாம் நினைவில் கொள்ள‌வேண்டியிருக்கிறது. அண்மையில்தான் ஜ‌பிஎம்(IBM) போன்ற‌ சில‌ த‌னியார் நிறுவன‌ங்க‌ள் இவ்வாறான‌ நிலையிலிருப்ப‌வ‌ர்க‌ள் அறுவைச்சிகிச்சை செய்வ‌த‌ற்கான‌ காப்புறுதிப் பொதிக‌ளை (Insurance Packages) த‌ம‌து தொழிலாள‌ர் ந‌ல‌ங்க‌ளில் சேர்ந்திருந்திருக்கின்ற‌ன‌.

லிவிங் ஸ்மைல் வித்யா போன்ற‌வ‌ர்க‌ள் விரிவாக‌வும் ஆழ‌மாகவும் பேசுவ‌த‌ற்கான‌ வெளிக‌ள் எல்லா ஊட‌க‌ங்க‌ளிலும் திற‌க்க‌ப்ப‌ட‌வேண்டும். இதுவ‌ரை ம‌ற்ற‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளுக்காய்ப் பேசிய‌து போல‌வ‌ன்றி, அவ‌ர்க‌ளே அவ‌ர்க‌ளின் குர‌ல்க‌ளில் (த‌லித்துக்க‌ள் போல‌) பேசுவ‌த‌ற்கான‌ சூழ‌ல் க‌னிய‌வேண்டும். இவ்வாறான‌ விளிம்புநிலை ம‌னித‌ர்க‌ளின் க‌ருத்துக்க‌ளே சீழ்பிடித்து வீங்கிப்போயிருக்கும் ச‌முதாய‌த்தின் காய‌ங்க‌ளை ஆற்ற‌க்கூடிய‌ வ‌லிமையுடைய‌தாக‌ இருக்குமென‌ நம்புகின்றேன். மில்க்(Milk) ப‌ட‌த்தில் ஹார்வி தேர்த‌லில் நிற்கும்போது ஓரின‌ப்பாலினருக்கு ம‌ட்டுமில்லாது வ‌றுமைக்கோட்டிற்குள் வாழ்ப‌வ‌ர்க‌ள், வ‌ய‌தான‌வ‌ர்க‌ள், ஹிப்பிக‌ள் போன்ற‌வ‌ர்க‌ளின் ந‌ல‌த்திட்ட‌ங்க‌ளையும் முன்வைத்தே போட்டியிருக்கின்றார். வ‌லிக‌ளைப் புரிந்த‌வ‌ர்களாலே பிற‌ர‌து வ‌லிக‌ளையும் அதிக‌ம் விள‌ங்கிக்கொள்ள‌ முடியும் என்ற‌வ‌கையில் இவ்வாறான‌ விளிம்புநிலை ம‌னித‌ர்க‌ள் அதிகார‌த்திற்கு வ‌ருவ‌தையும், அதிகார‌ங்க‌ளைக் கைப்ப‌ற்றுவ‌தையும் நாம் ஊக்குவிக்க‌வேண்டும்.

3.
சேகுவேராவின‌து வாழ்வின் எந்த‌ப் ப‌குதியை எடுத்தாலும் அது சுவார‌சியமாக‌ ஆழ‌மும் விரிவாக‌ நீள‌க்கூடிய‌துதான். மோட்டார் சைக்கிள் ட‌ய‌ரியாய் இருந்தாலென‌ன, கொங்கோ ட‌ய‌ரியாயிருந்தாலென்ன, க‌டைசிக்கால‌ பொலிவியா ட‌ய‌ரியாயிருந்தாலென்ன‌ எல்லாமே விய‌ப்பும் திகைப்பும் உடைய‌வை. சில‌வேளை இப்ப‌டியொரு ம‌னித‌ன் எம‌க்கு அண்மைக்கால‌த்தில் வாழ்ந்தானா என்ற‌ பிர‌மிப்பும் கூடவே வ‌ந்துவிட‌த்தான் செய்கின்ற‌து. த‌ன‌து பிர‌ச்சார‌த்திற்கென‌த்தான் Jorge G. Castañeda சேகுவாரா பற்றி எழுதினார் என்ற‌ குற்ற‌ச்சாட்டு இருந்தாலும் அதையும் மீறி அந்நூலில் கூட‌ சே த‌னித்துவ‌மாக‌ ஒளிர‌த்தான் செய்கின்றான். சூரிய‌னைக் க‌ண்டு நாய் குரைக்கின்ற‌மாதிரி த‌மிழ்ச்சூழ‌லில் சில‌ குர‌ல்க‌ள் சேயை அசிங்க‌ப‌டுத்த‌ முய‌ன்றாலும் சேயை உண்மையான‌ விருப்புட‌ன் வ‌ந்த‌டைகின்ற‌ ஆயிர‌க்க‌ண‌க்கான‌ இளைஞ‌ர் இளைஞிக‌ள் இருக்க‌த்தான் செய்கின்ற‌ன‌ர்.
சேயின‌து ம‌றைவின்போது, ஃபிட‌ல், எங்க‌ள‌ கால‌த்திற்கு அல்ல‌, இனி வ‌ரும் எதிர்கால‌த்திற்கு எல்லாவித‌த்திலும் ஒரு முன்மாதிரியே சே என‌க்கூறுவ‌து பொருத்த‌மான‌ வார்த்தைக‌ள்தான். எது என்னைச் சேயோடு அதிக‌ம் நெருக்க‌முற‌ச் செய்கின்ற‌து என்று யோசித்தால் அவ‌ன் த‌ன‌து பெருங்க‌ன‌வுக‌ளின் ப‌ல‌வீன‌ங்க‌ளை அறிந்து வைத்திருந்தான் என்ப‌தே. ஆனால் வீழ்ச்சி அடைந்துவிடுவேனே என்ப‌த‌ற்கு அஞ்சி த‌ன‌து க‌ன‌வுக‌ளைக் கைவிட‌த்த‌யாராக‌வும் இருக்க‌வில்லை என்ப‌துதான் அதிக‌ம் வ‌சீக‌ரிக்கின்ற‌து. கியூபாப் புர‌ட்சியின்போது புர‌ட்சியை ஏற்றும‌தி செய்ய‌முடியாது என்கின்ற‌வ‌ன், கொங்கோவிற்கு கியூபாக் கெரில்லாப் புர‌ட்சியின் மாதிரிக‌ளை எடுத்துச் செல்கின்றான். கொங்கோவில் த‌ன‌து வீழ்ச்சியை (ஒருக‌ட்ட‌த்தில் சாகும்வ‌ரை அங்கு இருக்க‌லாமென‌வும் முடிவு எடுக்கிறான்) ச‌ந்தித்த‌பின்னும் த‌ன‌து புர‌ட்சிக்க‌ன‌வைக் கைவிடாத‌ப‌டியால்தான் பொலிவியாவிற்குள் நுழைகின்றான். சேயை புர‌ட்சியின் நாய‌க‌னாக‌ப் பார்ப்ப‌தைவிட‌, உய‌ர்ந்த‌ ந‌ம்பிக்கைக்காய் த‌ன்னையே இழந்த‌ வீழ்ச்சியின் நாய‌க‌னாய்ப் பார்ப்ப‌தே என‌க்குப் பிடித்திருக்கிற‌து. எனெனில் வெற்றி கொண்ட‌வ‌ர்க‌ளுக்கு மேலே செல்ல ஏதுமில்லை. தோற்றுக்கொண்ட‌வ‌ன் த‌ன‌க்கான‌ வெற்றியை அடையும்வ‌ரை முய‌ற்சித்துக்கொண்டேயிருப்பான‌ அல்ல‌வா. என‌வே சேயை வீழ்ச்சியின் நாய‌க‌னாக‌ நினைவுகொள்ளும்போது -அவ‌ன் ஒடுக்குமுறைக‌ள் உள்ள‌ எல்லா வெளிக‌ளிலும் வ‌ழிகாட்டியாக‌ வ்ந்துவிட‌ச் செய்கின்றான்.

சேயினைப் ப‌ற்றி இர‌ண்டு பாக‌ங்க‌ளாய் எடுக்க‌ப்ப‌ட்ட‌ Steven Soderbergன் இந்நீள‌த்திரைப்ப‌ட‌ம் ஐந்து ம‌ணித்தியால‌ங்க‌ளுக்கு ஓட‌க்கூடிய‌து. முத‌லாவ‌து பாக‌ம் சே ஃபிட‌லைச் ச‌ந்திப்ப‌திலிருந்து தொட‌ங்கி, சேயின‌து பிர‌சித்துபெற்ற‌ சான்ரா கிளாரா இராணுவ‌ வெற்றியுட‌ன் ஹ‌வானாவை நோக்கி ந‌க‌ர்வ‌துட‌ன் முடிகின்ற‌து. இர‌ண்டாம் பாக‌ம் சே பொலிவியாவில் நுழைவ‌தில் தொட‌ங்கி சேயின‌து இற‌ப்பில் நிறைவுபெறுகின்ற‌து. ஏற்க‌ன‌வே கூறிய‌துபோல‌ இது சேயின‌து முழு ஆளுமையை காட்சிப்ப‌டுத்தும் ஒரு ப‌ட‌ம‌ல்ல‌. சேயின‌து வாழ்வும் ஒரு திரைப்ப‌ட‌த்தில் அட‌ங்க‌க்கூடிய‌தும‌ல்ல‌.

முத‌லாம் பாக‌ம் தொட‌ங்கும் காட்சி சுவார‌சிய‌மான‌து. சே அமெரிக்காவில் (ஐநா ச‌பையில்) அமெரிக்காவின் ஏகாதிப‌த்திய‌த்தின் முக‌த்திரையை கிழிப்ப‌துட‌ன் ஆர‌ம்பிக்கின்ற‌து. அமெரிக்காவில் கூட‌ சேயைக் கொல்வ‌த‌ற்கான‌ சில‌ முய‌ற்சிக‌ள் ந‌டைபெறுகின்ற‌ன‌. ச‌ந்திக்கும் சென‌ட்ட‌ர்க‌ளுட‌ன், அமெரிக்கா இன்னும் Bay of Pigsஐ ம‌ற‌ந்துவிடவில்லைத்தானே என‌ சீண்டிப்பார்க‌வும் செய்கின்றார். அங்கிருந்து தொட‌ங்கும் காட்சிக‌ள் பிற‌கு பின்னோக்கி கியூபாவின் புர‌ட்சியின் ஆர‌ம்ப‌க்க‌ட்ட‌ங்க‌ளுக்கு ந‌க‌ர‌த்தொட‌ங்குகின்ற‌து. ஒரு ம‌ருத்துவ‌ராக‌ இருக்கும் சே எப்ப‌டி போராளியாக‌ மாறுகின்றார் என்ப‌தையும், சேயின‌து அந்நிய‌த்த‌ன்மையைக் க‌ளைக்க‌ எப்ப‌டி ஃபிட‌லும் ராகுலும் முய‌ற்சிக்கின்ற‌ன்ர் என்ப‌தும் க‌வ‌ன‌த்திற்குரிய‌து (இந்த‌ அந்நிய‌த்த‌ன்மையே ஏற்றுக்கொள்ள‌ உள்ளூர் ம‌க்க‌ள்/போராளிக‌ள் விரும்பாத‌தாலேயே பொலிவியாவில் சேயின‌து வீழ்ச்சி மிக‌விரைவாக‌ நிக‌ழ்கிற‌து என்ப‌தையும் நாம் நினைவுப‌டுத்திக்கொள்ள‌ வேண்டும்). சான்ரா கிளாராவில் ஆயுத‌த்த‌ள‌பாட‌ங்க‌ள் ஏற்றிவ‌ரும் புகைவ‌ண்டியைத் த‌க‌ர்ப்ப‌த‌ன் மூல‌ம் சே ஒரு சிறந்த‌ கெரில்லாத‌ த‌ள்ப‌தியாக‌ மாறுகின்றார். அதேவேளை குடிம‌க்க‌ளை சித்திர‌வ‌தை செய்யும்.., பெண்க‌ளைப் பாலிய்ல் வ‌ன்புண‌ர்சியிற்கு உள்ளாக்கும்... போராளிக‌ளுக்கு க‌டுமையான‌ த‌ண்ட‌னைக‌ளையே -ம‌ர‌ண‌த‌ண்ட‌னை உட்ப‌ட- கொடுக்கின்றார்.

இர‌ண்டாம் பாக‌ம் தொட‌ங்கும்போது சேயின‌து பொருளாத‌ராச் சீர்திருத்த‌ங‌கள் தோற்ப‌து குறித்தோ, ஃபிட‌லுக்கும் சேயுக்குமிடையில் முகிழும் சோவிய‌த்து X சீன‌ க‌ம்யூனிச‌ விரிச‌ல் குறித்தோ எதுவுமில்லாது ப‌ட‌ம் உட‌னேயே பொலிவியாவுக்கு பாய்ந்துவிடுகின்ற‌து. முதலாம் பாக‌த்தில் ஒரு வெற்றிக‌ர‌மான‌ கெரில்லாத் த‌ளப‌தியாக‌ இருக்கும் சே, இர‌ண்டாம் பாக‌த்தில் வீழ்ச்சிக்குரிய‌ நாய‌கனாக‌ ஆகிக்கொண்டிருப்ப‌து காட்சிப்ப‌டுத்த‌ப்ப‌டுகின்ற‌து. சேயைக் காய‌ங்க‌ளுட‌ன் பொலிவியா-சிஜ‌ஏ கூட்டில் கைதுசெய்யும்போது, 'நான் சே என்னைக் கொல்வ‌தை விட‌க் கைது செய்வ‌து ப‌ல‌ம‌ட‌ங்கு பிர‌யோச‌ன‌மான‌து' என்று உறுதியுட‌ன் கூறுவ‌தெல்லாம் ப‌ட‌த்தில் இல்லை. கொல்ல‌ப்ப‌டுவ‌த‌ற்கு முன்ன‌ர் அங்கிருக்கும் உள்ளூர் ஆசிரியையுட‌ன் சே உரையாடும்போது, இத்த‌கைய‌ ப‌டுமோச‌மான‌ வ‌குப்புக்க‌ளிலிருந்தா பிள்ளைக‌ள் க‌ல்விக‌ற்கின்ற்ன‌ர்.... இவ்வாறான‌ ஏற்ற‌த்தாழ்வுக‌ளுக்காய்த்தானே நாம் போராட் விரும்பினோம் என்று கூறுவ‌து நெகிழ்ச்சித‌ர‌க்கூடிய‌து. சேயின் பிர‌சித்த‌ம் பெற்ற‌ இறுதிவாக்கிய‌மான‌ நீங்க‌ள் என்னைக் கொல்லலாம் ஆனால் புர‌ட்சி ப‌ற்றிய‌ என‌து ந‌ம்பிக்கையை என்றைக்கும் கொல்ல‌முடியாது என்ப‌தன் சாட்சியாகத்தான் சே இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்.

ப‌ட‌மாக‌ப் பார்க்கும்போது ப‌ல‌ போதாமைக‌ளை இத்திரைப்ப‌ட‌ம் கொண்டிருக்கின்ற‌து. அதில் முக்கிய‌மான‌து மிக‌ ஆறுத‌லாக‌ ந‌க‌ரும் திரைக்க‌தை. புர‌ட்சியின் துளி ப‌ட்டிடாத‌ மோட்டார் சைக்கிள் ட‌ய‌ரி அழ‌காக‌ப் ப‌ட‌மாக்க‌ப்ப‌ட்ட‌ வித‌த்தில் சேயின‌து புர‌ட்சி பற்றிய‌ இத்திரைப்ப‌ட‌ம் எடுக்க‌ப்ப‌ட‌வில்லை என‌த்தான் கூறவேண்டியிருக்கிற‌து. ஆனால் சேயாக‌ ந‌டித்த‌ Benicio del Toro சேயை ந‌ன்றாக‌ப் பிர‌தியெடுத்து ந‌டித்திருக்கின்றார். முக்கிய‌மாய் ஆஸ்மாவால் க‌ஷ்ட‌ப‌ப‌டும் சேயின் காட்சிக‌ள் மிக‌த் த‌த்ரூப‌மாய் இருக்கின்ற‌ன‌. சேயைப் ப‌ற்றி எத்த‌னை கோண‌த்திலும் பட‌மாய்ப் பார்த்தாலும் ஒருபோதும் அலுக்க‌ப்போவ‌தில்லை. எனெனில் உண்மையான‌ போராளிக‌ளின் வாழ்க்கை ஒரு திரைப்ப‌ட‌த்திற்குள் என்றுமே அட‌ங்குவ‌தில்லை.


(அருண்மொழிவ‌ர்ம‌னுக்கு...)
ப‌ட‌ங்க‌ள் - உரிய‌த‌ள‌ங்க‌ளுக்கு ந‌ன்றி