கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பால் சக்கரியாவின் கதைகள்

Sunday, February 19, 2012

1.
பால் சக்கரியாவின் 'இதுதான் என் பெயர்' கதைகளின் தொகுப்பில் அவரின் பிரபல்யமான இதுதான் என் பெயர் குறுநாவலும் ஏனைய பன்னிரண்டு சிறுகதைகளும் தமிழில் கே.வி.ஜெயசிறியால் 2001ல் மிக அழகாகத் தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கின்றது. 'இதுதான் என் பெயர்' குறுநாவல் கிட்டத்தட்ட இதே காலப்பகுதியில் சுகுமாரனால் மொழிபெயர்க்கப்பட்டு 'அகரம்' பதிப்பகத்தாலும் வந்திருக்கின்றது. காந்தியைக் கொல்கின்ற கோட்சேயின் மனோநிலையை காந்தியின் மரணத்தின் பின்னால் தொடர்ந்து செல்வதே 'இதுதான் என் பெயர்'. வித்தியாசமான நடையிலும் உள்ளடக்கத்தாலும் தமிழில் கூட மிக சிலாகித்துப் பேசப்படும் ஒரு படைப்பாக இக்குறுநாவல் இருந்திருக்கின்றது.

இத்தொகுப்பிலிருக்கும் பன்னிரண்டு சிறுகதைகளிலும் பெண்களே முக்கியபாத்திரங்களாக, அவர்களின் தளங்களில் வைத்துப் பேசப்படுகின்ற கதைகளாக ஜெயசிறியால் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்ச் சமூகத்திற்கென சில உறைந்துவிட்ட அடையாளங்கள் இருக்கின்றன. 'கதறக் கதறக் கண்ணீர்' விடச் செல்லி உணர்ச்சிகளின் குவியல்களுக்குள் அமிழவைத்து தம்மை முன்னிறுத்தும் படைப்புக்கள் அவற்றில் ஒருவகை.

இப்படிக் கதறக் கதற அழவைத்து மனித தரிசனங்களையோ/அறங்களையோ அள்ளித் தருவதை விடுத்து, அதிக உணர்ச்சிக்குவியலில்லாது பால் சக்கரியா தன் கதைகள் மூலம் எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கின்றார் என்பதற்காகவேனும் நாம் இத்தொகுதியை வாசித்தாக வேண்டும். அது மட்டுமில்லை கதைகளின் உள்ளே எளிய வசனங்கள் மூலம் வாசிப்பவரை இன்னும் எவ்வளவு உச்சங்களுக்கு அழைத்துச் செல்கின்றாரென்பதையும் கவனிக்கவேண்டும்.

2.
'யாருக்குத் தெரியும்' கதை, யேசுவின் பிறப்பானது, எரோது அரசனுக்கு கெட்ட காலத்தைக் கொணரும் என காலத்தைக் கணிக்கும் ஒருவன் கூறியதுடன், ஏரோது அரசன் இயேசு பிறந்த அதேகாலத்தில் பெத்லகேமில் பிறந்த குழந்தைகளை எல்லாம் கொல்லச் சொல்கிறான். இக்குழந்தைகளை அளவுக்கணக்கில்லாது கொல்லும் ஒரு படைவீரனுக்கும் ஒரு பாலியல் தொழிலாளிக்கும் இடையில் நடக்கும் கதையேயிது. அந்தத் தொழிலாளி தொடர்ந்து படைவீரனின் மனச்சாட்சியை உலுக்கும்படியாகக் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருக்கின்றார். ஓரிடத்தில் 'நீங்கள் கொன்ற குழந்தைகளுக்கு நீங்கள் அவர்களைக் கொல்லப் போவது முன்பே தெரியுமா?' எனக் கேட்கிறாள். அதற்கு அந்தப் படைவீரன், 'எனக்குத் தெரியாது. குழந்தைகளுக்கு மரணமுண்டா? அவர்களுக்கு மரணத்தைப் பற்றிச் சிந்திக்கத் தெரியுமா?' எனப் பதிலளிக்கிறான்.

இன்னோரிடத்தில் படைவீரன் கூறுகின்ற இடம் மிக நுட்பமானது. யேசுவிற்கான ஒரு விமர்சனமாகக் கூட எடுத்துக் கொள்ளலாம். 'இத்தனை ஆயிரம் குழந்தைகளுடைய குருதியினூடுதான் ஒரு இரட்சகன் வருகின்றானா?' எனக் கேட்கிறான். எவ்வளவு கூர்மையான பார்வை. அதற்குப் பதிலாக இன்னொரு இடத்தில் பாலியல் தொழிலாளி கூறுகிறாள், 'ஓர் இரட்சகன் மகிமையோடுதானே வரவேண்டும்? அந்தக் குழந்தை இந்தக் குருதிச் சிதறல்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாமா? அவன் எப்படி இந்தக் கடனை அடைப்பான்?" என்கிறாள்.

இப்படி நீளுமோர் உரையாடலில், 'அவனை நீங்கள் அடையாளம் கண்டிருந்தீரேனில், நீங்கள் முதல் கொன்றது அவனையாயிருந்தால், மற்றக் குழந்தைகள் சாக நேர்ந்திருக்காது' என அந்தப் பாலியல் தொழிலாளி கூறுகின்றார், அதற்கு அந்தப் படைவீரன், 'ஆனால் அப்போது இரட்சகனின் வரவு சம்பவித்திருக்காது. இனியாவது, சாத்தியமுண்டு அல்லவா' என்கிறான்.

இந்த உரையாடல் இயேசுவின் பிறப்பிற்கு மட்டுமில்லை, இன்னும் எத்தனையோ பேருக்கும் வரலாற்றில் பொருந்தக் கூடியதாகவல்லவா இருக்கிறது. எத்தனையெத்தனை அரசர்கள் தங்கள் பெயரை நிலைநாட்ட தங்களை இரட்சகராக வேடம்பூண எவ்வளவு கொடும் விடயங்களை நிகழ்த்திப் போயிருக்கின்றனர். இந்தக் கதை முடியும் தருணம் கூட ஓர் அற்புதமான இடம். பாலியல் தொழிலாளிகள் தங்களிடம் வைத்து இயேசுவைக் காப்பாற்றித் தப்பச் செய்கின்றனர். தங்களால் பிரதியுபகாரம் செய்யவில்லையே யேசுவின் பெற்றோர் வருந்தும்போது, 'உங்கள் மகன் வளர்ந்து ராஜாவாகும்போது, நாங்கள் வேசிகள் என்றாலும் எங்களையும் காப்பாற்றச் சொல்' என்கின்றாள்.

'மந்திரவாதம்' என்கின்ற கதை மிகுந்த சுவாரசியமானது. பாலக்காட்டிலிருக்கும் அய்யர் குடும்பத்தைச் சேர்ந்த ராமானுஜம் சென்னையில் ஐ.ஐ.டியில் படிக்கப்போய் அங்கும் திறமைச்சித்தி பெற்று அமெரிக்காவிற்கு மேற்படிப்புப் படிக்கப்போகின்றார். சென்னைக்குப் போகும்போது ராமானுஜம், சுகுமாரன் அழீக்கோட்டின் 'தத்வமஸி' படித்துக் கொண்டுபோகின்றார். ராமனுஜத்தின் ஆய்வு கடந்தகாலத்திற்கு சென்று பார்ப்பதும், பிற ஜீவராசிகளுடனும் தொடர்பு கொள்வதும் எப்படியெனப் பார்ப்பது. அமெரிக்காவில் ஒரு யூதப் பெண் ராமானுஜத்துடன் நட்பாகின்றாள். ஒருநாள் அவள் , 'ராமு, நான் என்னுடைய பாப் நடனம் செய்யும் கால் விரல்களால் உன்னுடைய குண்டலினியை உணரவைக்கிறேன். என் அறைக்கு வா, உன்னுடைய லட்சியத்தை அடைய நான் உதவுகிறேன்' என்கிறாள்.உடல் விட்டு உடல் பாய்கின்ற வித்தை தெரிகின்ற மெலிசா, 'டியூனர் நான் தருகிறேன். ரீஸிவராவதற்கான வழி நீ கண்டுபிடி. மந்திரங்களின் நாட்டிலிருந்து வரும் நீதானா ஆத்மீய டியூனர் இல்லையென்று சொல்கிறாய்? ஒரே ஒரு மந்திரம் போதாதா, அடைப்பதற்கும் திறப்பதற்கும், வேறுபடுத்திக் காட்டவும்? அதை நான் உனக்குத் தருகிறேன்!' என்கிறாள்.

ஒருநாள் ராமானுஜத்தால் கடந்தகாலத்திற்குப் போக முடிகிறது: அவன், 'மெலீசா, எனக்குப் பயமாயிருக்கு. நான் பயந்தது சம்பவிக்கத் தொடங்கிவிட்டது. எனக்குள்ளே பாய்ந்து வரும் சப்தங்களின்மீது எனக்கொரு கட்டுப்பாடுமில்லை. இறந்த காலத்திலிருந்தும், நிகழ் காலத்திலிருந்தும் சப்தங்கள், கலைக்கப்பட்ட கூட்டின் தேனீக்களைப் போல என்னைச் சுற்றி அழுத்துகிறது மெலீசா. வெள்ளப் பெருக்கில் ஒழுகிவரும் மரமும், ஜடமும், இலையும், கொடியும், கவிழ்ந்த படகும், தகர்ந்த வீடும் போல அவை வந்து கொண்டேயிருக்கிறது. பிரபாகரனின் கடமையை நிறைவேற்ற சென்ற அந்தப் பெண் மனித வெடிகுண்டு தனக்குள்ளேயே முணுமுணுப்பதைக் கேட்டேன். ஹிட்லர் தற்கொலை செய்வதற்குமுன் தன் நாய் ப்ளோண்டியை வெடிவைத்த போது அவன் காதலி ஈவா ப்ரெளன் விம்மி விம்மி அழுவதைக் கேட்டேன். பாபர் மசூதியின் மகுடத்தைத் தாங்கியபடி ராமர் விக்கிரகத்தின்மீது விழுந்து இறந்த கரசேவகரின் கடைசிக் கூச்சலைக் கேட்டென்...

மரணமடைந்த சிறிகிருஷ்ணனின் மனைவிகளை அர்ச்சுனன் பாதுகாப்பு இடத்திற்குக் கொண்டு போகும்போது, அவர்களைக் காமுகர்களான தஸ்யூக்கள் கவர்வதன் கூச்சலைக் கேட்டேன். வாஸ்கொடகாமா கேரளக் கடற்கரையை வந்தடைந்தவுடன் சிறுநீர் கழிப்பதும், கெட்ட வாயுவை வெளியேற்றும் சத்த்ததையும் கேட்டேன், அப்போது அவர் 'ஈஸ்வரா' என்றார். மார்க்ஸ் வீட்டு வேலைக்காரியிடம், 'வேகம்! வேகம்! அவள் இப்போது வந்திருவாள்' என்று ரகசியமாகச் சொல்வதும் கேட்டேன். இந்திரா காந்தி வெடியேற்றவுடன் சொல்வதைக் கேட்டேன். என்னையா...! என்னையா..! அய்யோ!'

இது மட்டுமில்லை சுவாரசியமான பகுதி, மெலீசா பாண்டிச்சேரியின் அம்மாவின், 'கேள்விகளும் பதில்களும் - 1995' எடுத்து 166ம் பக்கம் வாசித்துப் பார். சரீரத்தை விட்டிறங்கி உலாவினால் பலவற்றையும் பார்க்கலாம் என்று சொல்கிறார்கள்.' என ராமானுஜத்தின் பதற்றங்களுக்கு இப்படிப் பதில் கூறுவதுதான்..

இத்தகைய ஆய்வுகளோடு அமெரிக்காவில் அலையும் ராமானுஜத்திற்கு ஏதோ நடந்துவிட்டதென இந்தியாப் பெற்றோர் அவரை அழைத்து திருமணம் ஒன்றைச் செய்ய முயல்கின்றனர். கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் அலையக்கூடிய மனோநிலையைக் கொண்ட ராமானுஜத்திற்கு மெலீசா சொல்லிக்கொடுத்த மந்திரம் இந்தியா வரும்போது மறந்துவிடுகின்றது. ஒரே சத்தங்களால் நிரம்பி வழிந்துகொண்டிருக்கின்றது ராமானுஜத்தின் உலகம். தனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதென்று மணம் முடிக்கின்ற நாயர் பெண்ணிடம் கூறுகின்றார். அந்தப் பெண்ணோ, 'இந்தப் பைத்தியம் பரவாயில்லை. நான் நினைச்சேன், சில மலையாள ஆம்பிளைகளுக்குள்ள sexual vulgarity ஏதாவதாய் இருக்குமென்று'  எனப் பயப்பிட்டதாய் கூறுகின்றார்.

கட்டிலில் முயங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண் சப்தங்களால் திணறிக்கொண்டிருந்த ராமானுஜத்தைப் பார்த்து ' என் பிரியமான பைத்தியக்காரா, நான் உன்னை sound proof ஆக்குகிறேன்' என்கிறாள். நாங்கள் இருவருமே இப்போது பைத்தியந்தான் இப்போது ஏதும் வித்தியாசமிருக்கா எனச் சொல்லும் அந்தப் பெண் 'இந்த அவஸ்தையை சம்ஸ்கிருதத்தில் என்னவென்று சொல்வாங்க தெரியுமா' என்கிறாள். என்ன என ராமானுஜம் கேட்க, 'தத்வமஸி!' என அவள் கூற இப்போது ராமானுஜம் துள்ளிக் குதிக்கிறான். இதுதான் அவன் மறந்துபோன மந்திரம். மிகுந்த சுவாரசியமான பல விடயங்களை கேள்விக்குள்ளாகும் இந்தக் கதை இத்தொகுப்பிலே பிடித்தமான சிறுகதைகளில் ஒன்று.

3.
'ஒரு கிறிஸ்மஸ் கதை', ஒரு பாலியல் தொழிலாளியைத் தமது அறையிற்கு அழைத்துச் செல்லும் இரு நண்பர்களின் கதை. தன்னைப் புணர்ந்த அவர்களிடம் நான் உங்களுக்கு என்ன அடையாளமாய் த் தெரிகின்றேன் என்கிறாள் அந்தப் பெண். '...நான் வேசி. இதன் அர்த்தம் என்ன? நான் எங்கிருந்தோ வந்து உங்கள் கட்டிலில் படுத்துக் கொண்டிருக்கும்போது நீங்கள் கேட்க வேண்டாமா? இதன் பொருள் என்னவென்று? நான் வேசியாகாதிருந்தால் என்னவாக இருந்திருப்பேன்? எனக்கிது புரியவில்லை. நான் யார்? மனைவியா, மகளா, அம்மாவா, சகோதரியா, அண்ணியா, தங்கச்சியா, காமுகியா, வேசியா? எனக் கேட்க இவ்விரு நண்பர்களும் திணறுகிறார்கள்.

அவளில் பரிதாப்பட்டு 'உன் பெயர் என்ன?' என இவர்கள் கேட்கும்போது, 'இப்போதுதான் என் பெயரை விசாரிக்கத் தோன்றியதா? இவ்வளவு நேரமும் யாருடன் பேசிக் கொண்டிருந்தீர்கள்? யாருடன் படுத்துக் கொண்டிருந்தீர்கள்?' என அந்தப் பெண் கேட்கும் கேள்விகள் கூர்மையானவை. இறுதியில் அந்தப் பெண்ணைப் புணர்ந்தபோது அவள் ஏற்கனவே கர்ப்பமாயிருக்கின்றாள் என உணர்கின்றபோது இவ்விருவர்களுக்கும் குற்ற உணர்வு பெருகத் தொடங்குகின்றது. ஒரு பாலியல் தொழிலாளி எப்போதும் புணர்ந்துகொண்டிருப்பவள் என கட்டியமைத்துக்கொண்டிருக்கும் விம்பங்களுக்கு அப்பால் அவளும் எல்லோரையும் போல சாதாரண இயல்புகளுடைய பெண்தான் என, அந்தப் பெண்ணின் கேள்விகளைக் கொண்டே நுட்பமாய் சக்கரியா எழுதிக்கொண்டுப்போகும் இந்தக் கதை குறிப்பிட்டுச் சொல்லவேண்டியதொன்று.

இன்னொரு கதையான, 'அன்னம்மா டீச்சர்: சில நினைவுக் குறிப்புகளில் அன்னம்மா ரீச்சர் தன் குடும்பத்தைத் தாங்கும் ஒருவராய் தன் 39 வயதுவரை வாழ்வதைக் கூறுகின்றது. இயேசுவே ஒரேயொரு துணையாய் அவருக்கு இருக்கின்றது. 33 வயதைக் கடக்கும்போது அவர் இயேசுவிடம் தன் தம்பியாக இருக்க வேண்டிக்கொள்கிறார். எனெனில் இயேசு 33 வயதில் இறந்துபோகின்றார். இறுதியில் அவர் மரணங்கூட மர்மமாய் முடிந்துபோகின்றது மட்டுமின்றி, இதுவரை அவர் தாங்கிவந்த குடும்பத்திற்கே பெறுமதி இல்லாதவர் போல ஆகிப்போவதை மிக இயல்பாய் சக்கரியா சித்தரித்திருக்கின்றார். அதுவும் இறுதியில் அன்னம்மா ரீச்சரை ஒளிந்திருக்கும் பார்ப்பவர் அன்னம்மா ரீச்சரின் பிரமைக்குள் வரும் இயேசுவா அல்லது ரீச்சரின் சொந்தத் தம்பியா என மயக்கத்தோடு முடித்த இடம் அருமையானது.

இந்தத் தொகுப்பில் 'மந்திரவாதம்' போல குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இன்னொருகதை, 'இரண்டாம் குடியேற்றம்'. இவ்வளவு நுட்பமாய் தாய் வீட்டிலிருந்து மணமாகிப் போகப் போகும் ஒரு பெண்ணின் மனது ஆணொருவர் சித்தரிக்கவில்லையெனத்தான் கூறவேண்டும். மிகுந்த கடவுள் பக்தியுள்ள குடும்பத்தைச் சேர்ந்த ஆஷா மேத்யூ, ஒரு மனோதத்துவ நிபுணருக்கு எழுதும் கடிதமே இந்தக் கதை. எல்லோருக்கும் இனியவராக, எந்தச் சோலி சுரட்டைகளுக்கும் போகாத ஆஷாவிற்கு மாப்பிள்ளை பார்த்து ஒருவரைத் திருமணம் செய்கின்ற காலத்தை நேரும்போதுதான் ஆஷாவிற்கு ஒரு யோசனை வருகிறது. இவ்வளவு காலமும் இருந்த வீட்டைவிட்டு இன்னொரு வீட்டிற்குப் போகும்போது தனக்கு அவர்களைப் பற்றி அந்த வீட்டைப் பற்றி, அங்குள்ள மனிதர்களைப் பற்றி, அவர்களுக்கு பிற ஜீவராசிகளுடன் உள்ள உறவைப் பற்றி என்ன தெரியுமென யோசிக்கிறார்.

அவருக்கு தான் ஏதோ பாதாளத்திலிருந்து விழுவது மாதிரி இதைப் பற்றி யோசிக்கும்போது கனவு வருகின்றது. ஆஷாவின் தாத்தா ஒரு நாத்திகார் ஆயினும், வீட்டிலுள்ள மிகுதி அனைவரும் மிகுந்த கடவுள் பக்தியுள்ளவர்கள். எனவே இவ்வாறு இதுவரை தெரியாத வீட்டில் இனிச் சாகும்வரை வாழவேண்டும் என்றால், திருமணத்திற்கு முன் ஒருமாத காலமாகினும் தான் -திருமணம் செய்யும் ஜோயியின் வீட்டில்- தங்கவேண்டும் என்பதே ஆஷாவின் நிபந்தனை. அதை வீட்டிலிருப்பவர்கள் எல்லாம் கேலி செய்கின்றார்கள். பைத்தியம் பிடித்துவிட்டதென்கிறார்கள். தாத்தா மட்டுமே, 'மகளே நான் உன்பக்கம்தான், ஆனால் உனக்கும் எனக்குமான கால இடைவெளியில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. நான் கிழவனும் நாத்திகனுமாயிருக்கிறேன். உனக்கொரு ரக்ஷா மார்க்கம் சொல்லித்தர என்னால் முடியுமானால் எவ்வளவு நன்றாயிருக்கும். உன்னை ஆண்டவன் காப்பாராக' என்கிறார். ஆண்டவன் பெயரை நாத்திகரான தாத்தா கூறுகின்றாரேயென 'ஆண்டவனா?' என ஆஷா திகைக்க, 'ஆம் மகளே. அந்தக் கடைசி வைக்கோல் துரும்பாவது உனக்கிருக்கட்டும்' எனத்தாத்தா கூறுகின்ற இடம் மிக நெகிழ்வானது. இறுதியில் அந்தக் கடிதத்தில் ஆஷா, 'ரக்ஷா மார்க்கம் உண்டா? என் தேவைகள் தவறானவையா? நானொரு மனநோயாளி தான?' என மனோதத்துவருக்கு எழுதும் கடிதத்தை முடிக்கின்றார். ஆனால் பதில்கள் இன்னும் தெரியாது ஆஷாவைப் போன்ற பலரின் பல்லாயிரக்கணக்கான கடிதங்கள் காற்றில் பறந்தபடியே இருக்கின்றன. இதே போன்ற இத்தொகுப்பிலிருக்கும் 'குழியான்களின் பூந்தோட்டம்' மற்றும் 'கன்னியாகுமரி' கதைகளும் நினைவில் நிற்கக்கூடியவையே. எப்படி ஆண்களின் நிறங்களற்ற வாழ்வைப் பெண்கள் வர்ணமயமாக்கிவிடுகின்றனர் என்பது மிக அழகாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

சக்காரியாவின் இந்தக் கதைகளை வாசிக்கும்போது அவர் மொழியின் மீதும் வரலாற்றின் மீதும் செய்யும் பரிசோதனைகளே மிகவும் ஈர்த்துக்கொண்டிருந்தன. அதற்கோர் எளிய உதாரணமாக 'இதுதான் என் பெயரை' எப்படி எழுதியிருப்பாரென வாசித்துப் பார்த்தாலே நன்கு புலப்படும். மேலும் சக்காரியா தன் கதைகளில் ஒரு தெளிந்த முடிவை அள்ளிக்கட்டிக் கொடுத்து வாசகர்களை இவ்வளவும் போதுமென அனுப்பிவிடுவதில்லை என்பது குறிப்பிடவேண்டியது. மயக்கந்தரும் தொனியில் முடியும் சக்கரியாவின் கதைகள் உங்களுக்குப் பிடித்தமான முறையில் வாசித்தும் ஆய்ந்தும் பார்ப்பதற்கான வெளிகளைத் தருகின்றன. மேலும் பெண்களைப் பற்றி கூறும்போது அவர்கள் இயல்பாய் இருக்கின்றார்கள். அளவுக்கதிகமான உணர்ச்சிக்குவியல்களாகவோ கண்ணீர் சிந்துபவர்களாக சித்தரிக்கப்படாதது நிம்மதியைத் தருகின்றது. இச்சிறுகதைகளில் வரும் ஆண்கள் கூட தங்கள் பாத்திரங்களைத் தாண்டி மனோரதியவெளியில் அவ்வளவாய்ப் பறப்பதுமில்லை. எல்லாவற்றையும் விட பொதுவெளியில் தன் மேன்மையையும் அதிகாரத்தையும், மமதையும் காட்டத் துடிக்கின்ற ஆண்களைக் காமத்தின் கணங்களில் எளிதாய்க் கைப்பற்றி அவர்களை ஒன்றுமே இல்லாமல் ஆக்கிவிடுகின்ற நுட்பமான பெண்களையும் இந்தக் கதைகளில் தரிசித்தும் கொள்ளலாம்.

Feb 18, At 2.12a.m
(நான் கடந்துசெல்லும் கடினகாலங்களில் துணையிருக்கும் நண்பருக்கு...)

1 comments:

மீராபாரதி meerabharathy said...

நட்புடன் இளங்கோ...தமிழா....
பால் சக்கரியாவின் கதைகள் தொடர்பான தங்களது அறிமுகம் அவரை வாசிக்கும்படி இழுக்கின்றன...

"உங்கள் அறிமுகங்கள்" என்னை மீண்டும் இலக்கியங்களை வாசிப்பதற்கு துண்டுகின்றன...
இத் துண்டுதல்கள் ஆரோக்கியமான பாதைக்கு வழிகாட்டட்டும்...

நான் வாசிக்கின்றேனோ இல்லையோ...
பிற நண்பர்களை வாசிக்க துண்டுவதற்காகவும் எனது குறிப்பை எழுதுகின்றேன்...

வான்கோவின் கட்டுரைக்கும் நன்றிகள்...
நட்புடன் மீராபாரதி

2/22/2012 05:10:00 PM