கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பிரிய அடேல்

Thursday, September 18, 2014

நீ அந்தப் பெருமரத்தின் அருகிலிருக்கும் பெஞ்சில் உட்கார்ந்திருந்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிகிறது. சூரிய ஒளி பிரகாசமாகத் தெறிக்கிறது. இலைகள் சிறகுகள் விரித்த சிறுபறவைகள் போல உதிர்ந்து கொண்டிருக்கின்றன. இயற்கையின் அழகோடு ஒன்றிக்க முடியாமல் நீ உன் உணர்ச்சிகளோடு போராடிக் கொண்டிருக்கிறாய். உனதிந்த அப்பாவித்தனத்தை ஏன் காலம் இவ்வளவு விரைவாகப் பறித்துப் போகிறது.  அவ்வளவு எளிதில் எவரையும் கடந்துவிடச் செய்யாத உனது அழகான விழிகளில் ஏன் இவ்வளவு துயரம் ததும்பிக் கிடக்கிறது.

அடேல், உனது அடையாளங்களைத் தேடியலைந்த பதின்மவாழ்க்கையை நீ மட்டுமில்லை, நாமெல்லோருமே வளர்ந்துவிடும்போது தொலைத்து விடுகிறோம் அல்லவா? உனது அவ்வளவு சீர்செய்யப்படாத கேசமென்பது கூட நீ யாரென்பதை அடையாளப்படுத்துகிற ஓரு விடயமில்லையா? நீ பாடசாலை அமைப்பை வெறுத்தபடி, ஆனால் நிறையக் கற்றுக்கொள்வதற்கு அதைத் தவிர வேறெந்த சிறந்த அமைப்புமில்லை என்பதையும் புரிந்து வைத்திருக்கிறாய். உனக்கிருக்கும் ஆகப்பெரும் கனவு, சிறு பிள்ளைகளுக்கு ஆசிரியராக ஆவது அல்லவா? பாடசாலை அமைப்பின் அபத்தத்தை நன்குணர்ந்த உன்னிடம் கற்கும் பிள்ளைகளுக்கு அழகான ஓர் உலகை கையளிப்பாய் என்றெழும் நம்பிக்கையில், உன் கரங்களை மிருதுவாய்ப் பற்றவேண்டும் போலத் தோன்றுகிறது.

ம் எல்லோரினதும் - முக்கியமாய் பதின்மவயதுகளில்- மிகப்பெரும் மூச்சுத்திணறல் என்னவென்றால் எமது அடையாளம் எது என்பது. மேலும் இயல்பாய் எழும் பாலியல் சார்ந்து, எந்த அடையாளத்திற்குள் எம்மை நிலை நிறுத்துவது என்பதும் கூட. பதிமன்ங்களில் எதிர்ப்பால் ஈர்ப்பென்பதே சிக்கலான ஓன்றாகப் பார்க்கப்படும்போது, தற்பால் உறவோ, இருபால் உறவோ இயல்பாய் ஏற்றுக்கொள்வதற்கு இன்னும் எவ்வளவு நீண்ட தூரம் பயணிக்கவேண்டியிருக்கிறது.

ஆண்களை எளிதாய் வசீகரிக்ககூடியவளாய் இருந்தாலும், உனக்கு எதிர்ப்பால் உறவு பொருத்தமானதில்லையென உணர்கிறாய். உன்னுடலைப் பரிசோதனைக் களமாய் அதற்காய் திறந்து வைத்துதும் அதை எளிதாய்ப் புரிந்துகொள்கிறாய். உனக்கான பாலியல்பு சார்ந்து நீ தேடலைத் தொடர்கிறாய். உன்னை விட வயது கூடிய எம்மாவைக் கண்டுகொள்கிறாய். உங்களின் உக்கிரமான காமம் எல்லோரையும் சரசரவென்று பற்ற வைத்துக்கொள்ளக் கூடியது. எம்மா ஓரு ஓவியையாக இருந்தும், அவளது நட்புகள் மிக உயர்ந்த அறிவுஜீவி மட்டத்தில் இருந்தபோதும், நீ அவளின் உயர்வில் உன் மகிழ்ச்சியைக் காண்கிறாய். எம்மாவினதும், அவளின் நட்புக்களினதும் அறிவார்ந்த உரையாடல்கள் உனக்கு அலுப்பைத் தருகின்றன. நீ அதை விரும்பி ஏற்றுக்கொண்டவளில்லை; அது உனக்குரியதல்ல எனவும் கண்டுகொள்கிறாய். எனினும் இவையெல்லாம்  எம்மாவின் மீதிருக்கும் காதலிற்கும் காமத்திற்கும் முன் ஒரு பொருட்டேயல்ல என்பதையும் நீ நன்குணர்ர்ந்தவள்.

எம்மா, உன் தொழில் சார்ந்தில்லாது வேறு விடயங்களிலும் உன்னைக் கவனஞ் செலுத்தச் சொல்கிறாள். உனக்குரிய வாசிக்கும், எழுதும் திறமையைக் கண்டு, கதைகளை எழுதச் சொல்கிறாள். நீயோ அவை என் அந்தரங்திற்குரியது என்கிறாய். என்றாலும் எம்மாவின் மீதிருக்கும் நேசத்தினால், எழுத முயற்சிக்கின்றேன் என்கிறாய்.

உனது உலகும் கனவுகளும் எளிமையானது. எம்மாவோடு மனது நிறையக் காதல் செய்வது. சிறுவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியை ஒருவராக ஆவது.

எந்தக் கணத்தில் உனக்கும் எம்மாவிற்கும் இடையில் விரிசல் வந்ததெனக் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. எம்மா வீட்டிற்கு வரத் தாமதமாகும் பொழுதுகளில் தனிமை உன்னை இராட்சத நிழலாகச் சூழகிறது. யாரெனும் ஓருவர் உனக்கு மனம் விட்டுப் பேச, வெறுமையை விரட்டத் தேவையாயிருக்கிறது. உனது சக ஆண் ஆசிரியரோடு பொழுதுகளைக் கழிக்கிறாய். அது சிலவேளைகளில் உடல் சார்ந்து பகிரும் பொழுதுகளாகவும் ஆகிவிடுகின்றன. நீ உன் தனிமையை விரட்ட உன்னுடலை மீண்டும் பரிசோதனைக் கள்மாக்கிறாய். அது முற்றுமுழுதான பகிரல் இல்லை என்பதும், ஆணுடலால் உனக்கு விரும்பிய நிறைவு கிடைக்காதென்பதும் நீயறிவாய். ஆனால் உனக்கு வேறு வழிகளேயில்லை. எனெனில் நீ தனிமையை இன்னொரு துணையாக உன் பதின்மங்களிலிருந்தே தேர்ந்தெடுத்தவள்.

எம்மா, உனது இருபால் உறவைக் கண்டுகொள்கிறாள். கோபம் மிகக் கொண்டு உன்னை வீட்டிலிருந்து வெளியே போகச் சொல்கிறாள். 'நான் என் தனிமையின் பொருட்டு தவறுகள் செய்துவிட்டேன், என்னை மன்னி...என் காதல் என்பது எப்போதும் உன்னோடு'தான் எனக் கெஞ்சுகிறாய். 'என்னை வெளியே போகச் சொல்லாதே, என்னால் உன்னை விட்டும் எங்கும் போகமுடியாது' எனவும் மன்றாடுகிறாய். ஆனால் எல்லா மன்னிப்புக்கோரல்களும் காற்றில் கரைந்து போகின்றன. நீ வழியற்றவளாய் வெளியே துரத்தப்படுகிறாய்.

ப்போது வருடங்கள் பல கழிந்துவிட்டன. நீ விரும்பியமாதிரி ஆசிரியையாகியும் விட்டாய். இன்னமும் தனித்தே இருக்கிறாய். இடையில் சில உறவுகள்/நட்புகள் வாய்த்தாலும் எதுவும் எம்மாவுடன் வாய்த்ததைப் போல காமமும் காதலும் நிறைந்ததாய் இல்லை.. எனவே அவர்களோடு தொடர்ந்து வாழ்வில் பயணிக்கத் தயங்கி எல்லோரையும் இடைநடுவிலேயே வெட்டியும் விடுகிறாய். வழமை போல நீ விரும்பியோ/விரும்பாமலோ தனிமை உன்னை மீண்டும் நெருக்கமானதாய்த் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது.

நீண்டகாலப் பிரிவின் பின், ஒருமுறை எம்மாவைச் சந்திக்கிறாய். எம்மா இப்போது வேறொரு தளத்தில் இருக்கிறாள். அவளுக்கென்று துணையும், குடும்பமும் வாய்த்துவிட்டன.

உன்னிடம் இப்போதும் அதே அப்பாவித்தனமும், கடந்த காலத்தை அப்படியே நிகழ்காலத்திற்கு இழுத்துக் கட்டிக்கொண்டு வரலாம் என்ற நம்பிக்கையுமிருக்கிறது.

காதலும், காமமும் பொங்கி வழிகிறது. 'நீதான் எனது எல்லாம்' என எம்மாவிடம் சொல்லப் பிரியப்படுகிறாய். அதை ஒருவகையில் எம்மாவிற்கு உணர்த்தவும் செய்கிறாய். ஆனால் எம்மா தனக்கு ஏற்கனவே ஒரு குடும்பமிருப்பதை நினைவுபடுத்துகிறாள். என்றாலும், என் வாழ்வில் உன்னோடிருந்த காலங்களை என்றைக்குமாய் மறக்கமுடியாது, அவ்வளவு இனிமையானது' எனக் கூறி எம்மா உன்னிடமிருந்து என்றென்றைக்குமாய் விடைபெறுகிறாள்.

நீ பதின்மத்திலிருந்த அதே பெண்தான். விழிகள் முழுதும் கண்ணீர் ததும்பி வழிகிறது. அழுவதைத் தவிர இந்த குரூர உலகிலிருந்து தப்புவதற்கு  வழிகள் எதுவுமேயில்லையென மழை பெய்தால் போல அழுகிறாய். உன் கண்ணீர்த்துளிகள் நம் எல்லோரினதும் நெஞ்சை நிரப்பி விடுகின்றன. இரவுகளுக்கெல்லாம் இன்னும் கனம் கூடிவிடுகின்றன. இவ்வளவு வெகுளியான பெண்ணிற்கு அவள் விரும்பியமாதிரியான ஒரு வாழ்க்கை கிடைக்க விடாத காலத்தின் மீது நமக்கும் கோபம் வருகிறது.

பிரிய அடேல், துயரத்தின் நிமித்தம் நடுங்கும் கரங்களோடு நீ பற்ற வைக்கும் சிகரெட்டுக்களைப் போலத்தான் நம் பலரின் வாழ்வும் தினமும் அந்தரத்தில் மிதந்துகொண்டிருக்கின்றன. அளவிறநது பொங்கும் நேசத்தை, நாம் பிரியம் வைக்கும் மனிதர்கள் மீது அப்படியே காட்ட முடியாது தடுக்கும் கண்ணுக்குப் புலப்படாத சக்திகள்தான் என்ன? எல்லா அவமானங்களையும் தாண்டி, சந்தித்த தலைக்குனிதல்களையும் மீறி நீ யாசித்தது, மிக எளிமையான ஓரேயொரு விடயம், காதல் மட்டுமே. ஆனால் அதுவே உனக்கு விரும்பியமாதிரி கையளிக்கபடாது போனதுதான் எவ்வளவு துயரமானது. அது மட்டுமின்றி, உனது தவறுகளைக் கூட மன்னிக்க எம்மாவினால் முடியாதபோது, எல்லாவற்றின்மீது சாபம் போடவே மனது விரும்புகிறது.

அடேல் நீ இப்போதும் அந்தப் பெருமரத்தின் பெஞ்சில், உடலைக் குறுக்கிப் படுத்துக்கொண்டு பரந்த வானத்தை வெறித்துக்கொண்டிருக்கலாம். ஆனால் நான் உனக்கு உதிருமிலைகளை அல்ல, வசந்தகாலத்துப் பசிய இலைகளையும் வர்ணமயமான பூக்களையுமே பிரியங்களோடு தரவிரும்புகிறேன்.

உன் கண்ணீரின் அர்த்தம் விளங்கியவர்கள் இந்த உலகில் இல்லாமலா போய்விடுவார்கள். ஒழுங்காய் வாராப்படாது, தான்தோன்றித்தனமாய் விடப்படும் உன் கேசத்தை அழகெனவும், அதில் தன் முகம் புதைக்கவும் ஒருவர் வருவதை யாரால்தான் தடுக்கமுடியும்?

எவ்வாறாயினும் உன்னில் இருக்கும் அப்பாவித்தனத்தை என்றென்றைக்குமாய் கைவிட்டுவிடாதே. மேலும் செய்த தவறுகள் குறித்தும் அதிகம் கவலைப்படாதே. கடந்துபோனவை கடந்தவைதானல்ல்வா? நம்மால் என்னதான் இனிச் செய்யமுடியும்?  மேலும், நமது தவறுகளே நாம் ஓரிடத்தில் தேங்கியிருக்கவில்லை என்பதை இன்னொருவிதமாய் நமக்கு நிரூபிப்பவை. எனவே பிறர் உன்னை மன்னிக்க மறுத்தாலும் உன்னை நீயே மன்னிக்கக் பழகிக்கொள்.அது போதும்.

கதகதப்பான நிறமென நீலத்தைப் பெயரிட்டுக்கொள்ளலாம்.. ஆனால் வாழ்க்கை என்பது வர்ணங்கள் பலவின் கூட்டுக்கலவையினால் உருவாவது.

சாம்பல் வர்ணத்தை (உன்) அப்பாவித்தனத்தின் நிறமாய் நான் பெயரிட்டுக்கொள்கிறேன்.

ஆம், சாம்பல் வெகுளித்தனத்தின் வர்ணம் என்பேன்.


(Jul 09,2014)
('Blue is the warmest colour' திரைப்படம் பார்த்த பாதிப்பிலெழுதியது)

(நன்றி: 'எனில்' இணைய சஞ்சிகை)

0 comments: