கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

நானுன்னை வந்தடையும் பாதைகளை இன்னமும் புதர் மூடிக்கிடக்கிறது!

Monday, August 24, 2015


முகை:

நீ வாசித்துப் புரியா மொழியில் நமக்கான காதலை எழுதிக்கொண்டிருக்கின்றேன். நமக்குப் பொதுவான மொழியில் எழுதினால்தான் என்ன என்கிறாய்.

தனித்திருந்து வாழ்வை, அதன் ஏகாந்தத்தை இரசிக்கத் தெரிந்தவனுக்கு, தன் காதல் உணர்வுகளையும் கட்டாயம் யாருக்கும் சொல்லவேண்டும் என்கின்ற அவசியமில்லை. பிறரோடு பகிராமலே எத்தனை அழகிய காதல்கள் ஒவ்வொருவருக்குள்ளும் முகிழ்ந்திருக்கின்றன, பொழுதுகளைச் சிலிர்க்க வைத்திருக்கின்றன.

எல்லாவற்றிற்கும் ஏதாவது காரணங்களை வைத்திருப்பவன் நீ என்றாய்.

எல்லாவற்றின் மீதும் விமர்சனங்களை வைத்திருக்கும் உன்னை நெருங்கவே முடியாது என்பதன் கடந்தகாலத்தின் எதிரொலியா இது- தெரியவில்லை.

அன்பே, ஒரு முத்தம் சொல்லித்தருவதை விட இந்த மொழி எதைத்தான் நமக்கு கற்பித்துவிடப்போகிறது?


வீ:
{நட்சத்திரவாசி}

அவனுக்குத் தெரிகிறது. அது தானில்லையென, அது தன் இயல்பில்லை என்பது. ஆகக்குறைந்தது அவ்வாறு ஆகவேண்டுமென என்றுமே விரும்பியதில்லை என்பதையும் அவன் நன்கு அறிவான். ஆனால் இது சுழல். பெருஞ்சுழல். எந்தத் திசையில் கைகளை நீட்டி நீச்சலடித்தாலும் மீண்டும் மீண்டும் சிக்கவைக்கும் பெரும் மாயச்சூழல்.

முடியவில்லை. உடலெங்கும் வலிமை குறைந்து மனது அடர்த்தி கூடிக் கனக்கின்றது. சிந்தனைகள் ஒளியின் வேகத்தை விட எகிறிப் பாய்கின்றன. ஒரு அலைக்கற்றையைப் பின்பற்றி பின் தொடர்ந்து செல்வதற்குள் எண்ணற்ற கதிர்கள் குறுக்கு நெடுக்குமாய் வெட்டி வெட்டிப்போகின்றன.

வார்த்தைகளில் சொல்லமுடியா வலி. வார்த்தைகளே வலிகளாய் மாறி இன்னுமின்னும் உருவழித்துக்கொண்டிருக்கின்றன. எங்கேனும் ஒரு சிறு இடம் 'எந்தச் சிந்தனை'யுமில்லாது இருக்கின்றதாவென இப்படி சிந்தித்துச் சிதறிய மனமே இடையில் அவ்வப்போது சிந்திக்கவும் செய்கின்றது.

யாரேனும் அருகிலிருக்க மாட்டார்களா என ஏங்கித் தவிக்கின்ற கணங்கள். எவரோ ஒருவரை அணைத்தும் எதையுமே பேசாது அழுது தீர்த்தால் போதும் போன்ற பெருஞ்சுமை அழுத்துகின்றது நட்சத்திரவாசிக்கு.

இந்தப் பொழுது எப்போதும் தொடரப்போவதில்லை. இது கடந்து போகின்ற மனோநிலைதான் என்றாலும், மீளவே முடியாத சுழலில் சிக்கியதாகவே மனம் திரும்பச் திரும்பச் சொல்கின்றது. இன்னுமின்னும் விம்பங்களை தன்போக்கில் உற்பத்தி செய்தபடியிருக்கிறது. இரவுகளில் தூங்கமுடியாத 'விழித்த' மனதுடன் போராடிப் போராடித் தோற்கவேண்டியிருக்கிறது.

எப்போது உறங்கினான் என்பதை நினைவுபடுத்தவோ அல்லது உறங்கியிருந்தால் கூட அதை ஞாபகப்படுத்தவோ முடியாத ஒரு ஆழ்நிலைக்குள் தான் போய்க்கொண்டிருப்பது நட்சத்திரவாசிக்கு இன்னும் அச்சத்தை ஊட்டுகின்றது. எது நிஜம் எது விம்பம் எது கனவு என பிரித்தறியா முடியா, எல்லாவற்றையும் ஒரு கண்ணாடிக்குவளைக்குள் போட்டு உருட்டியது போன்ற மனோநிலையில் நாட்கள் கழிகின்றன.

இது கடக்கவே முடியா சுழல்தானோ? இதுதான் உயிர்த்திருப்பதற்கான கடைசிக்கணமா? எதுவும் தெளிவாய்த் தெரியவில்லை. அச்சம் மட்டும் ஒவ்வொரு மூச்சிழுப்பிலும் உள்ளும் வெளியுமாக நட்சத்திரவாசிக்குள் அலைந்துகொண்டிருக்கின்றது.

நீ இவ்வாறானவனேதானென ஒரு உருவம், விம்பங்களோடு போராடும் நட்சத்திரவாசிக்கு வேறொருபுறத்தில் கொள்ளிகூட்டி எரித்துக்கொண்டிருக்கின்றது. நான் இவ்வாறானவனாக இருந்தாற்கூட, நான் எவ்வாறானவனாக இருக்க விரும்பியவன் என்பதை நீ மட்டுமே நன்கறிவாய், என் உருப்பெருத்த விம்பங்களுக்கு உன் பொய்மையின் எண்ணையை இன்னுமின்னும் ஊற்றாதே எனக் கெஞ்சுகின்றான்.

இல்லை, உன் சுயமென்பதே இதுதான், உனக்கான தண்டனைகளை அனுபவித்தாகவேண்டுமெனச் சொல்கின்றது அந்த உருவம். தேவதைகள் துர்ச்சாபங்களிடும் சூனியக்காரிகளாக மாறுகிற தருணம் என  நட்சத்திரவாசியின் பிளவுபட்ட மனது நினைத்துக்கொண்டாலும், தேவதைகளையும் சூனியக்காரிகளையும் துவிதங்களாக உருவாக்கியதும் நீயே அன்றி, அவையவை என்றும் அவையவையாகவே இருந்திருக்கின்றென இதயத்தில் ஓரத்திலிருந்து இன்னொரு அசரீரீ எழும்புகின்றது.

குரல்கள். பல நூற்றுக்கணக்கான குரல்கள்.

விம்பங்கள். கண்ணாடியில் சிதறி நூற்றுக்கணக்கான சிதிலமடையும் மாயவிம்பங்கள்

எண்ணங்கள். எண்ணங்களின் பலநூறு உருப்பெருக்கப்பட்ட எண்ணங்கள்.

எல்லாவற்றையும் இந்த மூளை தாங்கவேண்டியிருக்கின்றது. ஒரு குரல்.
 ஒரேயொரு குரல். இது எல்லாம் கற்பனையின் விளைநிலத்திலிருந்து வெளித்தள்ளப்பட்டவை. உனது அசலான குரல் என்ற ஒன்று உள்ளது. அதை இந்தளவு தத்தளிப்புக்களுக்களையும் மீறிக் கண்டுபிடி என கனிந்த குரலொன்று கரங்கள் பற்றிக் கூறவேண்டுமென நட்சத்திரவாசியின் மனம் விரும்புகின்றது.

ஆனால் அது வார்த்தைகளுக்கு அப்பாலான ஒரு புரிதலில் இருந்து எழவேண்டும். ஆதியிலே வார்த்தைகள் தோன்றினவா அல்லது மவுனம் இருந்ததா தெரியாதெனினும் இப்போது போல வார்த்தைகளுக்கு எந்த அர்த்தமில்லாது மட்டும் நிச்சயம் இருந்திருக்காது என நட்சத்திரவாசி நினைத்துக்கொள்கின்றான்.

வார்த்தை, ஆறுதல் வார்த்தை. ஒரு குறுவாளின் மினுமினுப்புடன் மூளைக்குள் இறங்கவேண்டும் போலத் தோன்றுகின்றது.
ஒரு குறுவாள். ஒரேயொரு வார்த்தை.

இப்போது உன்னோடு இருப்பேன். இது கடந்துபோகின்ற ஒரு காலம் - புயல் சுழித்துவிட்டுப் போகின்ற கணம். நீ அவ்வப்போது இவ்வாறானவற்றில் சிக்கிக் கொள்வதும், திணறி வெளியில் வந்து விழுவதும் நானறிவேன். நீ புயலில் இருந்து வெளியே வருவாய். அலைகளின் கனத்தைத் தாண்டி மேலெழுவாய். இன்னும் கொஞ்ச நேரம். இன்னும் கொஞ்சக் காலம் மட்டுமே. நீ வெளியில் வா. நான் உன் இயல்பு அறிவேன். அல்லது ஆகக்குறைந்து நீ எவ்வாறு இருக்கவேண்டுமென விரும்புவன் என்பதையாவது அறிவேன்.

உன் பலங்களினால் உன்னைப் பிறர் அறிந்திருப்பதைப் போலவன்றி, உன் பலவீனங்களால் உன்னை அறிந்தவன்/ள் , அதையும் சேர்த்துத்தான் நானுன்னை நேசித்தேன், இனியும் நேசிப்பேன் என்ற ஒரு குரலுக்காய், காத்திருந்தான் நட்சத்திரவாசி.

இது பெரும்தந்தளிப்பின் போது எழுகின்ற பலநூற்றுக்கணக்கான விம்பங்களின் தெறிந்து எழுந்த இன்னொரு குரலாகக் கூட இருக்கலாம். ஆனால் அது வேண்டியிருந்தது அல்லது அப்படியொரு நம்பிக்கையை வளர்ப்பது அலைகள் சுழற்றியடித்தபோது இதத்தைத் தருவதாயிருந்தது. ஆனால் எல்லோரும்/எல்லாமே கைவிடப்பட்ட வெற்றுவெளியில் விடப்பட்ட ஒரு கொடிய காலமது. நீரேயற்ற பாலைவனத்தில் தண்ணீருக்காய் தவித்து எல்லா நம்பிக்கைகளையும் காற்று எடுத்துச் சென்ற துர்ப்பாக்கிய பருவமது.

யார் யாருக்காக காத்திருப்பது? எவரோ எவருக்காகக் காத்திருப்பது என்பதில் இருப்பது கொடுக்கல் வாங்கல் அல்லவா? நீ உன் மனஅலைகளில் மாட்டுப்பட்டு உன்னைச் சிதைத்து அருகிலிருப்பவர்களையும் சிதைப்பதைப் போல, அதனிலிருந்து நீங்கி விடுபட்டுவரும்போதும் எவரேனும் நேசிக்க இருக்க வேண்டும் என்பதில் இருப்பது சுயநலமில்லையா? எனக் கேட்டதுதான் அசல் குரலாக இருக்கவேண்டும்.

விம்பங்கள் எதையோ எதிர்ப்பார்க்கின்றன. யார் மீதோ பழியைப் போட்டுத் தப்பிவிட்டு ஓடப் பார்க்கின்றன. நீ கருணை வடிவானன், பிறர் துன்பங்களுக்காய் இரங்குபவன், நியாயங்களின் பக்கம் நிற்பவன் என எல்லா முகமூடிகளையும் மாறிமாறிப் போட்டுப் பார்த்து எது உன் அசல் முகமென்பதையே இல்லாமற் செய்துவிட்டது.

அலை. மீண்டும் பெரும் அலை. ஒருபோதுமே ஓய்ந்துவிடாத எண்ணற்ற அலைகள். இனி மீளவேமுடியாதா? எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு போகின்ற கடைசி ஊழிதானா இது.

நட்சத்திரவாசி தனக்குள் இன்னுமின்னும் ஆழத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்குகின்றான். அச்சந் தருகின்ற பயம். எல்லாத் தளங்களிலும் குற்றங்களும், குற்றச்சாட்டல்களும், உரிமை கோரும் சுயநலங்களும் நிறைந்த ஒரு கடும் இருட்பயணம்.

சொல்லிவிட்ட ஒவ்வொரு வார்த்தைகளிலும் எவ்வளவு விஷமிருந்தன. கற்பனைகளை விரிக்கத் தொடங்கிய ஒவ்வொரு சம்பவங்களிலும் எவ்வளவு குரூரமிருந்தன. தன்னை நினைத்து தானே வெட்கி அவமானமடைகின்ற ஒரு நெடும் பயணம். ஆனால் இடையில் நிறுத்தவும் முடியாது. திரும்பிச் செல்லவும் முடியாது. மேலும் மேலும் ஆழத்திற்குப் போகவும் அச்சமாயிருக்கின்றது. சுயம் என்று கட்டிவைத்திருந்த எல்லாக் கோட்டைகளும் மணற்கோட்டைகளாய் உடைகின்றன. உதிர்ந்து போய் எந்த வடிவங்களுமில்லாது சரிகின்றன.

நீண்ட நெடும் யாருமற்ற சாலைகளில் தனிமை இன்னும் மிகப்பெரும் வலியாக நீண்டபடியே வருகின்றது. எங்கேனும் சாலை வளைவில் முடிவில், தன் சுயம் உதிர்ந்து எதுவுமே இல்லாமற்போகப்போகின்றது என்று தெரிந்தாலும், யாரெனும் அந்த வளைவில் நிற்கமாட்டார்களா என்ற பச்சாபமும் வழிந்து பெருகுகின்றது.

ஆனால், இந்தப் பயணத்தைத் தொடர்ந்தாக வேண்டும். பிறர் மீது தான் செலுத்திய எல்லாத் துயர ஊசிகளையும் ஒவ்வொன்றாக பிடுங்கியெடுத்து தனக்குள் குத்தியாகவேண்டும். வேறு வழியில்லை. பாவங்களுக்கான மன்னிப்பு என்பது இழைக்கப்பட்ட பாவங்களை தனக்குள் உள்வாங்கிப் பிறர் வேதனைகளைப் புரிந்துகொள்வதிலிருந்து தொடங்குகின்றது.

மீதிப் பயணத்தையும் தொடர்ந்தாக வேண்டும். குறுக்கு மறுக்குமாய் மில்லியன்கணக்கில் மின்மினிப்பூச்சிகளாய் ஓடும் எண்ணங்களின் ஊடு, எல்லாவற்றையும் திருத்தக் கூடிய மூளையிற்குள் இறங்கவேண்டிய ஒரு குறுவாளுக்காகவும், ஒரேயொரு வார்த்தைக்காகவும் காத்திருக்கவேண்டும் என நட்சத்திரவாசி நினைத்துக் கொண்டான்.


பொம்மல்:

பயணங்களை தனியனாகச் செய்யப் பயந்த காலமென்று ஒன்று இருந்தது. கடக்க முடியாத் துயரங்களை தாண்டிப் போனது போல, தனியாய்ப் பயணிக்கலாம் என்ற தெளிவு வந்தபோது இதுவரை அறிந்த உலகும் கற்ற அறிவும் ஒன்றுமே இல்லை என்பது விளங்கியது. சாதாரண ஒருநாள் என்பது இவ்வளவு அழகும் அதிசயங்களையும் கொண்டிருப்பதை அறிவதற்கு எவ்விதத் திட்டமுமில்லாது அலையவேண்டியிருக்கிறது.

நாம் விரும்பியணிந்த அல்லது திணிக்கப்பட்ட எல்லா அடையாளங்களையும் துறந்துவிட்டு எதுவுமற்ற ஒருவராக அலைவதைப் போல மனதிற்கு நிம்மதி தருவது எதுவுமேயில்லை. அலாரம் அலற, ஒழுங்குகளுக்குள் அடைக்கப்பட்ட வாழ்வைத் தவிர்த்து, இதுவரை நுழைந்துவிடாத ஒழுங்கைகளிற்குள் ஓடிவிடுவதில்தான் எவ்வளவு ஆனந்தமாயிருக்கிறது.

நம்மை நாமே மன்னிக்க மட்டுமில்லை, நடந்த நிகழ்வுகளை, நாமும் பிறரும் நிகழ்த்திப் பார்த்த அபத்த நாடகங்களை கனிந்த மனதுடன் தாண்டிச் செல்ல முடிகிறது. தெரியாத திசைகளைத் தேடிச் செல்வதிலும், நிகழும் தவறுகளுக்கு மன்னிப்பைத் தொடர்ந்து கோருவதிலுந்தான் வாழ்வு ஓடிக்கொண்டிருப்பதாய் நினைக்கும் ஒருவன், ஆழ்ந்த நேசமிருந்தாலும் எழுந்தமானமாய்க் கோபங்கள் எழுவதும், அடிக்கடி சந்திக்க நேரும் சோர்வுகளும் தவிர்க்கமுடியாதென மலையிற்குப் பின்னால் ஒளிரும் நட்சத்திரங்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கின்றான். அந்த மலையைப் பார்க்கப் பார்க்க சொல்லமுடியா உணர்வுகள் பொங்கியெழ, யாருமறியாப் பொழுதில் ஏதேனும் ஒரு குகையொன்றில் ஓடிப்போய் மறைந்துவிடலாமோ என்றும் தோன்றுகிறது.

நீயனுப்புகிறாய் ஒரு செய்தியை. "உன்னை இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. நீயும் அந்தப்பொழுதில் கஷ்டப்பட்டு இருப்பாய்" என்று. அப்போது நான் எந்தப் 'பயணத்தில்' இருந்தேன் என்பது தெரியவில்லை. பயணம் என்பதைவிட தினமும் அகப்பயணத்தில் பல நூறு மைல்களை கடந்துகொண்டிருப்பவன் அல்லவா?

பயணத்தில் இடை வெட்டுகிறது ஒரு காட்சி... 'செகண்ட் கப்'பில் உன்னைப புரிந்து கொள்ளவே முடியாது' என்று நீ கூறிவிட்டு விடுவிடெனப் போனது மங்கலாய்த் தெரிகிறது. 'அப்படி இல்லை உன்னை புரிந்து கொள்ள முயற்சித்துத் தோற்றவன்' எனச் சொல்ல விரும்புகின்றேன், இல்லாவிட்டால் எப்படி இவ்வளவு நேசத்தை வைத்துக்கொண்டு இன்னமும் கடந்தகாலத் தெருக்களில் முடிவற்று அலைந்துகொண்டிருக்க முடியும்? .

நீயுனதான வாழ்வின் அடுத்த கட்டத்தைப் போய்விட்டாய். மன்னிப்பை அளிப்பதற்கு நான் யார்? தினமும் தவறுகளைச் செய்து அதற்காய் ஒவ்வொருநாளும் வருந்திவிட்டு இன்னொரு புதிய நாளை எதிர்நோக்கியிருப்பவனுக்குத் தவறுகள் என்பது தவிர்க்கவும் முடியாதல்லவா?

'முடிவுகளைத் தீவிரமாய் எடுக்கத் தெரியாதவன்' - என நமக்குள் மெல்லிய காதல் அரும்பி, எல்லோரும் எதிர்ப்பார்க்கும் ஒரு 'அழகிய தருணத்தில்' முடியவேண்டுமென நீ விரும்பியபோது, என்னை அச்சுறுத்தியது நான் தாண்டிவரமுடியாக் கடந்தகாலம். எல்லாவற்றையும் எளிதாய் எடுத்து, அதையதை அவையவை நிகழும்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற பிரியத்தின் கள்ளமற்ற மனதை இழந்துவிட்டேன் போலும். தெளிவாய் முடிவெடுத்தேன் என்று நினைத்தவை பிறகு அடியோடு சரித்து வீழ்த்திய அனுபவங்கள் என் முன்னே நிழல்களாய் நின்றும் பயமுறுத்துகின்றன.

அனைத்தும் பற்றி நிறைய யோசிக்கின்றேன். என்னால் எதையும் உடனடியாக முடிவெடுத்துவிடாது தடுக்கின்றது, மார்புக்க்குவட்டில் இன்னமும் உடைத்து வெளியேறிவிடாத கடந்தகாலத்தின் துயரநதி.

இப்போது பார்.

இனி என்னைப் பார்க்கவே மாட்டேன் என்று கூறிப்போந்த உன்னோடு நான் இப்போது மாலை நேர உணவருந்திக்கொண்டிருக்கின்றேன். 'ஒரு சோம்பலான துணைவன் கிடைத்திருக்கின்றான்' என்கிறாய். 'என்னை விடச் சோம்பலாக ஒருவரா?' என்றபோது அதே பழைய அழகான சிரிப்பு.

'நீ என்ன செய்யப்போகின்றாய்? இப்படியே தனியே இருக்கப்போகின்றாயா?' . என்னிடம் எந்தப் பதிலுமில்லை. 'இப்படியே எதையாவது வாசித்துக்கொண்டும், எவருக்கும் விளங்காத மாதிரி கதைத்துக்கொண்டும் இருக்கப்போகின்றாயா?' தெரியவில்லை, ஆனால் திரும்பியே சந்திக்கமாட்டோம் என போர்முனையில் வெஞ்சினம் கொண்டவர்களைப் போல வார்த்தை வாளெடுத்து வீசிக்கொண்ட நம்மைப் போன்றவர்கள் திரும்ப இயல்பாய்க் கதைக்க முடிகின்ற இந்தச் சந்தர்ப்பங்களல்லவா நமக்கு முக்கியம்.

எங்கோ ஒரு முடக்கில் சட்டென்று முடிந்துவிடப்போகும் வாழ்வில் கோபத்தையும் வன்மத்தையும் காவிக்கொண்டு எதைச் சாதித்துவிடப்போகிறோம்? நாமிணைந்து ஒரே அலைவரிசையில் பாடலைக் கேட்கவில்லை என்பதற்காய், நமக்காய் இசைக்கும் வெவ்வேறு பாடல்களில் வர்ணங்கள் இல்லையென்றாகிவிடாது.

தூரதேசத் தொலைபேசிக் குரலுக்காய் ஒருகாலத்தில் தன்னையே தொலைத்தவனுக்கு, முகம் எதுவென்றே தெரியாது நேசத்தில் நீந்தத்தெரிந்தவனுக்கு சும்மா இப்படியே இருத்தலும் அவ்வளவு எளிதல்ல.

மாயச்சுழல் வரைபடங்களுடன் எவரையோ சென்றடையப்போகும் பாதையிற்காய் மீண்டும் மெல்லத் திறக்கின்றன புதர்மூடிய பாதைகள்.


அரும்பு:

எப்போதும் தனிமையிற்குள் புதைய விரும்பும் நான், அந்த மாலையை விரும்பியே உருவாக்கினேன். வருவதற்கு நேரமாகும் என்ற நீ சொன்னபோதும், காத்திருக்கின்றேன் என புத்தகத்தை விரித்து வைத்திருந்தேன்.

இம்முறை செல்லுமிடத்தை என்னைத் தீர்மானிக்கச் சொன்னாய். நாங்கள் அந்த pubற்கு நடந்து போய்க்கொண்டிருந்தபோது மாலைச்சூரியன் உன் பொன்முடிகளில் ஒளிர்ந்துகொண்டிருந்தது. மெல்லிருள் சூழ்ந்த மெல்லிசை கசிந்த இடத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்கின்றோம். உனக்குப் பிடித்தமானது ஷெர்ரி மிதக்கும் cocktails என்றாலும் இன்றென் தேர்வென்பதால் பெருங்குவளை நிரம்ப பியருக்கு ஓடர் கொடுத்தோம்.

உன்னோடு மட்டுமின்றி பிறரோடும் ஒரு எல்லைக்கு மீறி எதுவும் தொடர்ந்து கதைக்கமுடியாது வந்துவிடும் அலுப்பு இன்றும் எட்டிப் பார்த்துவிடுமோ எனப் பயந்துகொண்டிருந்தேன். இப்படி எங்கையோ தொலைந்துவிடுவது என் இயல்பே தவிர, அது எதிரே இருப்பவரின் தவறுகளல்ல.

எமக்குத் தரப்பட்ட குவளைகளில் 'அலெக்ஸாண்டரை' நிரப்பிக் கொள்கின்றோம். மிதமாகப் பொரிக்கப்பட்ட இறால் துணைக்கு வந்து நிற்கின்றன. ஜோர்ஜ் எஸ்ராவின Budapest பாடலின்
"Give me one good reason/ Why I should never make a change/Baby if you hold me/Then all of this will go away" வரிகளில் நின்று நிதானித்து மீள்கின்றேன்.

பெற்றோர் இன்னொரு நாட்டிலிருக்க பதின்மத்தில் இந்நாடு ஏகியவள். இங்கே வந்த தொடக்கத்தில் நெருக்கமாயிருந்த தோழியொருத்தியை நெடுங்காலத்தின் பின் விலத்தவேண்டிய ஊடலைச் சொல்லிக்கொண்டிருந்தாய். நட்பென்பது அவ்வப்போது அடிபடுவதும் பிறகு அரவணைத்துக்கொள்வதுந்தானே.  ஆனால் அதைச் சொல்லாது பியரை அவ்வப்போது நம் கிண்ணங்களில் நிரப்பியபடி பொறுமையாய்க் கேட்டுக்கொண்டிருந்தேன்.

மணித்தியாலங்கள் கழிவது தெரியாது நிறையக் கதைத்துக் கொண்டிருந்தோம். உணவருந்தி வெளியே வந்தபோது இரவு இன்னும் அழகாய்த் தெரிந்தது. பெருநகரத்தில் திசைகள் தொலைந்து சப்வேயைத் தேடி நடந்தபடியே இருந்தோம். ஆனால் அது அலுப்போ சோர்வோ தராத நடை. சிலவேளை இந்தப் பொழுது இப்படியே கைநழுவிப்போய்விடக்கூடாது என்றுதான் திசைகளைத் தொலைத்தமாதிரி அலைந்து கொண்டிருந்தோமோ தெரியாது.

நீ இன்னும் அழகாய் இருப்பதாகவும், நான் இன்று நிறையச் சிரித்துக்கொண்டிருப்பதாகவும் இருவரும் மாறி மாறி நம்மைப் பாராட்டியும் கொண்டோம்.

அன்றைய என் தனித்த சப்வே பயணம் எனக்கு வழமைபோலில்லாது இனிமையாய் இருந்தது. Broadway ஸ்ரேசனைக் கடக்கும்போது ரொறொண்டோவின் அழகை மறைக்கின்றதாய் எரிச்சல் தரும் நெடிதுயர்ந்த கட்டடங்கள் ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை.

என்னிருக்கையிற்கு எதிரே முத்தமிட்டுக் கொண்டிருந்த இணையிற்கு, எப்போதாவது அரிதாய்த் தோன்றும் புன்னகையொன்றைப் பரிசளித்தேன்.
எவரது வெளியையும் எவரும் குறுக்கிடாத, எவர் மீது எவரும் சார்ந்திடாது, இது என்னவகையான உறவென்று தெரியா நேசம் இரவில் ஒரு மின்மினியைப் போல் இன்னமும் பறந்துகொண்டிருக்கின்றது.

இது போல ஒரு பொழுது இனி இப்படி வனப்பாய் அமையுமா தெரியாது. இதே அனுபவம் இன்னொருமுறை வாய்த்தால் இப்படி நிறைவாய் இருக்குமா என்றும் தெரியவில்லை.

நாங்கள் காதலர்களுமில்லை. நாம் காதலர்களாவதற்கான எந்தச் சிறு நிகழ்தகவும் ஒருபோதும் சாத்தியமுமில்லை.
காதலில் மட்டுந்தானா எல்லாம் தொலைந்து பறத்தல் சாத்தியம்?


(நன்றி: 'ஆக்காட்டி', இதழ் 07)

0 comments: