கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

குவளைப்பூ குறிப்புகள்

Tuesday, May 10, 2016

The Purple Rose of Cairo

நீங்கள் ஒரு திரைப்படத்தைப் பார்க்கின்றீர்கள். உங்களுக்கு அப்படத்தில் வரும் ஒரு கதாபாத்திரம் பிடித்துவிடுகின்றது. அதற்காகவே மீண்டும் மீண்டும் அத்திரைப்படத்தைப் போய்ப் பார்க்கின்றீர்கள். திரையில் தோன்றும் அப்பாத்திரம் உங்கள் தீவிரத்தை உணர்ந்து ஒருநாள் திரையில் இருந்து வெளியே வந்து உங்களோடு உரையாடத் தொடங்கினால் எவ்வாறு இருக்கும்?

The Purple Rose of Cairoவில் ஒரு பெண்ணுக்காய் திரையிலிருந்து ஒரு பாத்திரம் நழுவி வருகின்றது. ஏற்கனவே திருமணமான பெண் என்றபோதும் அந்தப் பெண்ணை இந்தத் திரைப் பாத்திரம் நேசிக்கத் தொடங்குகின்றது. இப்போது ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் அடுத்த காட்சியிற்குப் போகமுடியாது தேங்கிவிடுகின்றது. பார்வையாளர்கள் குழம்புகின்றார்கள். திரையிற்குள் இருக்கும் மற்றப் பாத்திரங்கள் தங்களால், வெளியேறிச் சென்ற பாத்திரம் இல்லாது தொடர்ந்து நடிக்கமுடியாதென அப்படியே நின்று விடுகின்றார்கள்.
ஒரு நகரத்தில் இப்பாத்திரம் வெளியேறிவிட்டதை அறிந்ததும், இப்படம் திரையிடப்பட்ட மற்ற நகரங்கள் சிலதில் இருந்தும் இப்பாத்திரம் வெளியேறிவிடுகின்றது. இந்த விடயம், இப்படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநனருக்கும் மிகச் சிக்கலை ஏற்படுத்துகின்றது. எனெனில் திரையிலிருந்து வெளியேறிய இப்பாத்திரம் யதார்த்ததில் என்ன செய்தாலும் - அது கொலையோ, திருட்டோ என்ன செய்தாலும்- இவர்களே அதற்கு முழுப் பொறுபேற்கவும் வேண்டும்.

இவை எல்லாவற்றையும் விட இப்பாத்திரத்தில் நடித்து மெருகேற்றிய நடிகருக்கு இது பெரும் பிரச்சினையாக மட்டுமில்லாது, அவரின் நடிப்புத் தொழிலையே தொடர்ந்து செய்யமுடியாது போய்விடுகின்றது. எனெனில் அவரைக் கொண்ட உருவாக்கிய பாத்திரம் வெளியேறியதால், இனி அவர் நடிக்கும் புதிய படங்களிலிருந்தும் அவரது பாத்திரங்கள் வெளியேறாது என்பதற்கும் எந்த உத்திரவாதம் இல்லை. நடிகரும் தயாரிப்பாளர்களும் வெளியேறிய பாத்திரத்தை மீண்டும் திரைக்குள் நுழைத்துவிட்டு, நட்டமேற்பட்டாலும் எல்லாத் திரையரங்குகளிலிருந்து திரைப்படத்தை நிறுத்தி முழுப் பிரிண்டையும் அடையாளமின்றி எரித்துவிடுவது என்று தீர்மானிக்கின்றார்கள்.

திரைப்பாத்திரம் வெளியேறிய நகருக்கு அப்பாத்திரத்தில் நடித்த அசல் நடிகர் போகின்றார். வெளியேறிய பாத்திரத்தைச் சந்தித்து மீண்டும் திரைக்குள் போகச் சொல்லி மன்றாடுகின்றார். திரைப்பாத்திரமோ நான் இப்பெண்ணின் மீது காதலில் இருக்கின்றேன் திரும்பமுடியாது என அடம்பிடிக்கின்றது. இதற்கிடையில் அசல் நடிகருக்கும் இந்தப் பெண் மீது காதல் வந்துவிடுகின்றது.

ஏற்கனவே திருமணமாகி உறவு சுமுகமில்லாது இருந்த பெண் 'சென்ற வாரம் வரை காதல் எதுவுமின்றி இருந்தேன், இப்போது ஒரேமாதிரியான இரண்டு பேரின் காதல்களில் எதைத் தேர்ந்தெடுப்பதெனக் குழம்புகின்றேன்' என்கின்றார்..இறுதியில் அந்தப் பாத்திரம் மீண்டும் திரைக்குள் போகின்றதா? இந்தப் பெண் எந்தக் காதலை/காதலனை தெரிவுசெய்கின்றார் என்பதோடு வாழ்வின் இருத்தல்/இருப்பு பற்றிய கேள்விகளும் எழுப்பப்படுகின்றது.

இது எண்பதுகளில் எடுக்கப்பட்ட வூடி அலனின் திரைப்படம். இவ்வாறு நடக்குமா/நடக்காதா என்ற கேள்வியே பார்வையாளருக்கு எழாதவண்ணம் மிக அருமையாக திரைக்கதை இப்படத்தில் கொண்டு செல்லப்படுகின்றது, அதேபோன்று நடிக்கும் நடிகர்களும் மிகத் திறமையாகச் செய்திருக்கின்றார்கள்.

ஒருவேளை திரையில் தோன்றும் நமக்குப் பிடித்த பாத்திரங்கள் நம்முடைய நிஜவாழ்விற்குள் வந்துவிட்டால் என்னவெல்லாம் நிகழுமென எண்ணிப்பார்ப்பதே ஒரு வித்தியாசமான அனுபவமாய் அல்லவா இருக்கும்?

Borders

மாயா (M.I.A ) தனது Bordersஐ Apple Music ஊடாக வெளியிட்டாலும், சிலவேளை அதை எல்லோராலும் பார்க்க/கேட்க முடியாதென்பதால் யாரோ ஒருவரால் Youtubeல் பகிரப்பட்டிருக்கின்றது. விடீயோ வெளிவந்து மூன்றுநாட்களுக்குள் Youtubeலே கிட்டத்தட்ட 460,000 பார்வையாளர் பார்த்திருக்கின்றனர் என்றபோதும் அங்கே எழுதப்பட்டிருக்கும் பின்னூட்டங்கள் அநேகம் மாயா மீதும் அகதிகள் மீதான பெரும் வெறுப்பில் எழுதப்பட்டிருக்கின்றன. அகதிகள் 'கரப்பான்பூச்சி'கள் என்பது தொடக்கம், மாயா 'அகதிகள்' என்ற லெபிளை வைத்து பணம் சம்பாதிக்கின்றார்வரை எல்லாவிதமாகவும் காழ்ப்புணர்வில் எழுதப்பட்டிருக்கின்றது.

ஏற்கனவே இன்னொரு பதிவில் குறிப்பிட்டமாதிரி, மேற்குலகில் பலருக்கு அகதிகளாக வந்தவர்கள் தங்களுக்கு நிகராக வாழ்வதை அநேகபொழுதுகளில் ஏற்றுக்கொள்ள இலகுவாக இருப்பதில்லை. இந்தப் பாடல் வந்ததன் பிறகு மாயா, ஒரு நேர்காணலில் தனது மாமனார் பாலாவிற்கு நன்றி கூறியிருக்கின்றார். அவரின் உதவியில்லாவிட்டால் தான் இங்கிலாந்திற்கு வந்திருக்கமுடியாது என்கின்றார். இன்றைய வாழ்விற்கு அவரே முக்கிய காரணம் என தான் வந்த கதையை, உதவிய மனிதர்களை நன்றியுடன் அதில் நினைவுகூர்கின்றார். சிலவேளைகளில் மேற்குநாடுகளில் ஏற்கனவே வாழ்ந்துகொண்டிருப்பவர்களால் மட்டுமில்லை, முன்னொருகாலத்தில் 'அகதி'களாக வந்த பலருக்குக் கூட தங்கள் பழைய கதைகளை மறந்துவிட்டு புதிய அகதிகளை வெறுப்பதை ஒதுக்கிவைப்பதை அவதானிக்கமுடியும்.

தற்செயலாக எங்கோ ஒதுங்கியிருந்த 'அம்ருதா' வை இன்று கண்டடைந்தேன். 2010ல் அம்ருதாவில் 'மாயா' அல்பம் வந்தபோது எழுதிய பதிவு இது. அத்தோடு அவ்வளவு எளிதில் உட்பக்கங்களில் வர்ணப்பக்கங்கள் வராத 'அம்ருதா'வில் மாயாவின் வர்ணப்படமும் வெளிவந்திருக்கின்றது. இலக்கியச் சூழலில் ஒருகாலத்தில் பார்த்துப் பிரமித்தவர்கள் பலர் பின்னர் தடம்புரண்டபோது கோபத்தைவிட சலிப்பே வந்ததுண்டு. அவ்வாறான ஒரு சோர்வைத்தராத, மாயாவின் முதல் அல்பத்திலிருந்து, அவரது நேரடி இசை நிகழ்ச்சியைப் பார்த்ததிலிருந்து இற்றைவரை சரியான ஒருவரைப் பின் தொடர்ந்து வந்திருக்கின்றேன் என்பது மாயாவின் 'எல்லைகளை'ப் பார்க்கும்போதும் அவரின் நேர்காணல்களைப் படிக்கும்போதும் உற்சாகம் வருகின்றது.
(Nov 28,2015)

Lean On

'Clouds of Sils Maria' வைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, படத்தில் 'இழந்த அப்பாவித்தனத்தை இன்னொரு காலகட்டத்தில் மீளப்பெற முடியாது' என்று ஓரிடத்தில் வரும். அதுபோலவே, இசையிலும் இனி அசலான குரல்களைக் கேட்கமுடியாது போல தொழில்நுட்பம் ஒவ்வொரு குரல்களையும் கட்டுப்படுத்தவும், செதுக்கவும் தொடங்கி நீண்டகாலமாயிற்று இவ்வாறு 'செதுக்கப்பட்ட' குரலாயிருந்தாலும், இந்தப் பாடலை('Lean On') எப்ஃ எம்மில் கேட்டபோது பிடித்திருந்தது. எந்தப் பொழுதாயினும் தோளில் சாய்வதற்கு நமக்கெல்லாம் யாரோ தேவையாயிருக்கின்றார்கள் அல்லவா? 'எமக்கு வயதாகும்போது நாமென்ன செய்வோம்/ நாங்கள் அதே பழைய பாதைகளில் நடப்போமா/ நீ எனக்கு அருகாமையில் இருப்பாயா/ அலைகள் திரண்டு வரும்போது உறுதியாய் (எதிர்த்து) நிற்பாயா?' என்ற பாடல்வரிகளில் உருகாமல் இருக்க முடியுமா என்ன?

பிறகு பாடலை காணொளியாய்ப் பார்த்தபோதும் இந்தியாவில் பாடல் பாடமாக்கியது சற்று ஈர்த்திருந்தது. எனினும் திரும்பச் சில தடவைகள் பார்த்தபோது இன்னொரு கலாசாரத்தின் மீதான exploitation எல்லாவற்றையும் மீறி உறுத்தத்தொடங்கியது. வாழ்க்கையில் அப்பாவித்தனத்தோடு எல்லாவற்றையும் இரசிக்க முடிவது எத்தகை அற்புதமானது. ஆனால் நாமெல்லாம் அந்த அப்பாவித்தனத்தை மீளவும் பெறமுடியாத ஒரு காலகட்டத்திற்கல்லவா நகர்ந்துவிட்டோம்?
(Oct 03, 2015)

0 comments: