கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வாசிப்பெனும் பாய்மரக்கப்பலில்..

Wednesday, October 17, 2018

1.

ஜீ.முருகனின் கதைகளை (’ஜீ.முருகன் சிறுகதைகள்') அண்மையில் வாசித்து முடித்திருந்தேன். இத்தொகுப்பில் 50 கதைகள் இருக்கின்றன. சில வருடங்களுக்கு முன் ஜீ.முருகனின் ‘மரம்’ குறுநாவலைத் தற்செயலாகக் கண்டெடுத்து வாசித்ததுபோது வியப்பேற்பட்டது போலவே இப்போது முழுத்தொகுப்பாய் அவரின் கதைகளை வாசிக்கும்போதும் வசீகரிக்கின்றது.

பெருந்தொகுப்புக்களின் முக்கிய சிக்கலென்பது வாசிப்பில் நம்மை ஏதோ ஒருவகையில் அலுப்படையச் செய்துவிடும். ஆகவேதான் எனக்குப் பிடித்த படைப்பாளிகளாயினும், அவர்களின் பெருந்தொகுப்புக்களை வாங்கிவிடவோ வாசிக்கவோ தயங்கிக்கொண்டிருப்பேன். ஆனால்  ஜீ.முருகனின் இந்தத் தொகுப்பு அலுப்பே வராமல் என்னை  வாசிக்கச் செய்திருந்தது.  நமது சூழலில் இவ்வாறு நறுக்காகவும், நுட்பமாகவும் எழுதும் ஜீ.முருகன் இன்னும் அதிகம் கவனிக்கப்பெற்றிருக்கவேண்டுமே என்ற எண்ணமும் இன்னொருதிசையில் போய்க்கொண்டிருந்தது.

இவ்வாறு இன்னும் பல எழுத்தாளர்கள் கவனிக்கப்படாமலே இருக்கின்றார்கள். வாசிப்பின் சுவாரசியம் என்பதே, ஒரு பெரும் திரள் ஓடிக்கொண்டிருக்கும் திசைக்கு இன்னொரு திசையில் எமக்குப் பிடித்தமானவற்றை நாமே கண்டுபிடித்து நமக்கு நெருக்கமாக்கிக்கொள்வதுதான். அந்த உருசியை அறிந்துகொண்டபின் ‘பரப்பியசத்திற்குள் விட்டில் பூச்சியாக விழாது/மயங்காது’ மேலும் மேலும் நம் சிறகுகளை விரித்துச் செல்லமுடியும். இவ்வாறுதான் அண்மையில் நண்பரொருவருக்கு ரமேஷ் பிரேதனை அறிமுகப்படுத்தியிருந்தேன். ரமேஷின் ‘ஐந்தவித்தானை’ வாசித்தபின் ஒரு புதிய வாசிப்புத் திசை தெரிந்ததில் அவர் மகிழ்ந்துகொண்டிருந்தார்.

எழுத்தை செய்நேர்த்தியாக – ஒருவகை தொழில்நுட்பத்துடன்’– அதில் ஒருகுறிப்பிட்ட காலம் ‘உழல்கின்ற’ எவராலும் செய்யமுடியும். ஆனால் மனம் ஊறி எழும் எழுத்துக்கள் அரிதாகவும், இலைமறை காய்களாகவுமே பெரும்பாலும் இருக்கும். ஆகவேதான் என் வாசிப்பில் தொடக்கத்தில் பெரும் அதிர்வை உண்டாக்கிய 'ஜே.ஜே.சிலகுறிப்புகளை' இன்று மீள வாசிக்கும்போது அதன் ‘செய்நேர்த்தி’யை மட்டும் வியக்கவும், அதேகாலகட்டத்தில் எழுதப்பட்ட, சாவை நோக்கி தொடர்ந்து கேள்வி எழும்புகின்ற சம்பத்தின் 'இடைவெளி'யை இப்போது நெருக்கமாகவும் கொள்ளவும் முடிகின்றது. இதன் அர்த்தம் ‘இடைவெளி’, ‘ஜே.ஜே.சிலகுறிப்புகளை’ தாண்டிவிட்டதென்பதல்ல. 'இடைவெளி' அதனளவில் முழுமையடையாது இருப்பினும், அது எழுப்பிய கேள்விகள் உண்மையிலே சாவு குறித்து என்னவென்று அறிய விரும்பிய மனத்தின் தேடல் என்றவகையில் என்னால்  இடைவெளியைக் கொண்டாடவும் முடிகின்றது.

அதேபோன்றுதான் அநேகர் வியக்கின்ற சு.வேணுகோபாலை முதன்முதலாக அவர் யாரென்று தெரியாமலே 2000களின் தொடக்கத்தில் கிளிநொச்சியில் ‘அறிவமுதில்’ வாங்கி வாசித்தபோது மட்டுமல்ல, இப்போதும் ஒரு வாசிப்பிற்காய் அவரின் ‘களவு போகும் புரவிகளை’ மீண்டும் புரட்டும்போதுகூட தொலைவிலேயே நின்று புன்னகைக்கின்றார். ஆனால் 2000களின் தொடக்கத்தில் இளம் எழுத்தாளராக நாஞ்சில் நாடனால் அறிமுகப்படுத்தப்படுகின்ற எம்.கோபாலகிருஷ்ணனின் (சூத்ரதாரி) ‘பிறிதொரு நதிக்கரை’ என்னை எளிதாக உள்ளிழுத்துக்கொள்கின்றது.

ஜீ.முருகனைப்போல, சூத்ரதாரியைப் போல அதிக ஆர்ப்பாட்டமில்லாது எழுதிக்கொண்டிருக்கும் பலர் நம்மிடையே இருக்கக்கூடும். அவ்வாறானவர்களை நாமாகத் தேடிக்கண்டுபிடிக்கும்போது கிடைக்கும் வாசிப்பின் சுவை என்பது அலாதியானது. எல்லோருக்கும் வாசிக்கின்றார்களே என ஒரு படைப்பாளியை, கும்பலோடு சேர்ந்து தேடியோடாமல் நமக்குரிய வாசிப்பின் ஊற்றுக்களைக் கண்டுபிடிப்பதே – முக்கியமாய் நிறையப் படைப்புக்கள் வெளிவரும் இன்றையகாலகட்டத்தில்- வாசிக்கும் நமக்குத் தேவையாக இருக்கின்றது. அவ்வாறாக நமக்குரிய படைப்பாளிகளை/படைப்புக்களை நெருக்கமாக்கிக்கொள்ளும்போது சிலவேளைகளில் அது நமது அலுப்பான பொழுதுகளைக் கூட சிலிர்ப்படையச் செய்துவிடக்கூடும்.


2.

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்ஜின் ’துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ அண்மையில் வந்த சிறுகதைத் தொகுப்புக்களில் விலகி நிற்கும் தனித்துவமான பனுவலாகும். வாசிப்பவர் கதைகளின் ஏதேனும் ஒரு குவிமையத்தில் நிலைகுத்துவதைத் தவிர்த்து, பல்வேறு திசைகளில் வாசிப்பில் உடைப்புக்களைச் செய்து சிதறவிடுவதை இத்தொகுப்பின் சிறப்புக்களில் ஒன்றாகச் சொல்லலாம். இவ்வாறான நீண்ட வாக்கியங்களில் கதை சொல்வதில் இருக்கும் அழகும் ஆபத்தும் என்னவென்றால் வாசிப்பவருக்கு அலுப்புவராமல் நகரச் செய்வது என்பதேயாகும். அந்தவகையில் மட்டுமில்லாது, நிறையக் கதைகளைச் (9 கதைகள் மட்டுமே) சேர்க்காமலும் இத்தொகுப்பு கச்சிதமாக வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது.

‘தந்திகள்’ மற்றும் ‘உடைந்துபோன ஒரு பூர்ஷ்வா கனவு’ வேலை இழந்துபோன ஒருவனின் கதையைச் சொல்கின்றது. தகவல் தொழில்நுட்பத்தில் வேலை செய்பவன் திடீரென்று வேலையிலிருந்து அனுப்பப்படுவதால் அவனது வாழ்வு குலைக்கப்படுகின்றது என்பதை வழமையாக அலுப்பாகச் சொல்லப்படும் மொழியிலிருந்து விலகிச் சொல்வதால் இவ்விரு கதைகளும் பிடித்துப்போகின்றது. 'தந்திகள்' கதை, வேலை இழந்தவன் பத்து மாதங்களாகியும் இன்னொரு வேலையை எடுக்கமுடியாது திண்டாடுவதால் அவனது மனைவி அவனை விட்டு விலகிப்போக, ஒரு இறந்துபோன –உடல்கெட்டுப்போகாத- பூனையோடு வாழ்பவனின் கதையென்றால், மற்றக் கதையில் வாடகைக்கொடுக்கப் பணமில்லாததால் தம்பதியினர் தேடி வாங்கிய பச்சைவர்ண ஸோஃபாவை விற்று, தமது 2வது ஆண்டு திருமணநாளுக்கு நண்பர்கள் என்ன பரிசைக்கொண்டு வருவார்கள் என்று யோசிப்பதில் போகும் நாட்களைப் பற்றியது. இரண்டிலும் வேலை இழப்பைப் பற்றிச் சொன்னாலும், இன்னொருவகையில் வேலையில்லாத் துயரத்தை விட, வேலையில்லாத நாட்களில் வாழ்க்கையை இரசிப்பவனின் பொழுதுகள் ஊடுபாவாக மறைந்துகிடப்பதையும் வாசிப்பவர்கள் உணர்ந்துகொள்ளமுடியும்.

இந்தத் தொகுப்பில் எனக்கு மிகப் பிடித்த கதைகளாக ‘நாளை இறந்துபோன நாய்’, ‘வலை’, ‘உடற்பயிற்சி நிலையத்துக்குச் செல்பவர்கள்’ மற்றும் ‘தந்திகள்’ போன்றவற்றைச் சொல்வேன்.

ஹருக்கி முரகாமியின் கதைகளை வாசிக்கும்போது ஒரே ஒரு பாத்திரம் அல்லது அதன் சாயல்கள்தான் அநேக கதைகளில் தொடர்ந்து வருகின்றனவோ என நினைத்துக்கொள்வேன். அவ்வாறுதான் இத்தொகுப்பிலும், ராக் இசை கேட்கும், நீட்ஷேயை/காப்ஃகாவை/போர்ஹேஸை நிறைய வாசித்த, துணையோடோ/துணையின்றி இருந்தாலோ தனிமைக்குள் அமிழ விரும்பும் ஒருவனே பாலசுப்ரமணியன் பொன்ராஜ்ஜின் எழுத்தில் இருந்து எழுந்து வருகின்றாரோ என நினைக்கத் தோன்றுகின்றது.

யதார்த்தக் கதைசொல்லல்களின் சோர்விலிருந்து விடுபடவும், நமது மனது எண்ணற்ற திசைகளில் சிந்திப்பதைப் போல எழுத்துக்களினூடாக ஒரு வாசிப்பைச் செய்ய விரும்புவர்களும், இத்தொகுப்பை துணிந்து வாசிக்கத்தொடங்கலாம்.
------------------------------------

(நன்றி: 'அம்ருதா' - ஐப்பசி, 2018)


0 comments: