கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சிவா சின்னப்பொடியின் 'நினைவழியா வடுக்கள் '

Friday, March 13, 2020

ரு புத்தகம் பிடித்துவிட்டதாயின் புறச்சூழலையும் பொருட்படுத்தாது அதில் மூழ்கி வாசித்து முடித்துவிடுவது என் இயல்பு. 'நினைவழியா வடுக்கள்' அவ்வளவு முக்கியமான கடந்தகால அனுபவங்களைக் கொண்ட நூல் என்றாலும் மிக ஆறுதலாகவே வாசித்தேன். இவ்வாறு வாசித்த இன்னொருநூல் ச.பாலமுருகன் எழுதிய 'சோளகர் தொட்டி'. நினைவழியா வடுக்களில் கூறப்படும் ஒவ்வொரு சம்பவங்களும் மனதை எங்கெங்கோ அலையவைத்து தொடர்ந்து வாசிக்க முடியாது செய்துவிடுகின்றது.

இன்று கடந்தகால நூல்களைப் பதிப்பிக்கின்றவர்களும், ஆய்வுகளைச் செய்பவர்களும் இந்த நூலை நிச்சயம் வாசிப்தோடு நின்றுவிடாது, இந்த நூலில் குறிப்பிடப்படும் அருமையான மனிதர்களையும் சம்பவங்களயும் மீள் வாசிப்பது/பதிப்பிப்பதன் ஊடாகத்தான் நமது வரலாற்றை சரிவரச் சொல்லமுடியும் என்பதை அறியவேண்டும்.

ஆறுமுகநாவலர்களும், இராமநாதன்களும், பொன்னம்பலங்களையும் விட, விபுலானந்தர்களும், ஹண்டி பேரின்பநாயங்களும், பொன்.கந்தையாக்களும், கந்த முருகேசனர்களும், (தேவராளி இந்துக்கல்லூரி) சூரன்களுமே நமக்கு முக்கியமானவர்கள். இந்த மனிதர்களின் வரலாற்றைப் பேசுவதன் மூலமே நாம் நமது கடந்தகாலக் கறைகளைக் கொஞ்சமாவது நீக்கமுடியும். தமிழகத்தில் அயோத்திதாச பண்டிதர் போன்றவர்கள் போல, இவர்களை மீளக் கண்டுபிடிப்பதன் மூலமே  நாம்  உண்மையான செயற்பாட்டாளர்களாகவும், சமூகநீதி நோக்கிப் பயணிப்பவர்களாகவும் மாறமுடியும்.

இந்த நூலில் வரும் ஒன்றிரண்டு சம்பவங்கள்:

(1) சிவா சின்னப்பொடி பாடசாலைக்குப் படிக்கப்போகும்போது ஆதிக்கசாதி மேசை/வாங்கில் இருந்துபடிக்கும்போது, இவர்களைப் போன்ற தாழ்த்தப்பட்டவர்கள் நிலத்தில் இருந்து படிக்க வேண்டிய சூழல். புதிய சீருடை அணிந்து போகும் சிவா சின்னப்பொடி, நிலத்தில் அப்படியே இருந்து படித்தால் பேப்பரைக் கொண்டுபோய்ப் படிக்கின்றார். அது அங்கே படிக்கும் ஆசிரியருக்குப் பிடிக்கவில்லை. வாழைமட்டையால் விளாசுகிறார். அடிவாங்கியதைவிட தனது புதிய சீருடையில் 'கயர்' பிடித்துவிட்ட்து என்பது இன்னும் கவலையாக இருக்கின்றது.

ஒருநாள் ஆதிக்கச்சாதி மாணவன் வராதபோது, அந்த மாணவனின் மேசை,வாங்கில் வழமையாக நிலத்தில் அமர்ந்து படிக்கும் இவர் அமர்ந்துவிடுகின்றார். மற்ற மாணவர்கள் இவருக்கு அடி உதை கொடுத்து, அந்த கொடுமைக்கார ஆசிரியரைக் கூட்டிவர, ஆசிரியர் இவரின் தலையை சுவரில் மோதி அடிக்க, நெற்றி வெடித்து  இரத்தம் வரத்தொடங்குகின்றது. அந்தக் கோபத்தில் இவர் சிலேட்டை ஆசிரியர் மீது எறிந்துவிடுகின்றார்.

இது பிறகு பொலிஸ் கேஸாகி, இவரைப் பொலிஸ் கைது செய்வது வரை போகின்றது. இது நடக்கும்போது இவருக்கு 8 வயது. ஆசிரியர் எவ்வளவு சாதி வெறியராக இருந்தாலும் அதைக் கவனிக்காத பொலிஸ்/பாடசாலை இனி இவர் எங்கும் கல்விகற்கமுடியாத நிலையை ஏற்படுத்துகிறது. அதிலிருந்து மீண்டு எப்படி பாடசாலைக்குப் படிக்கப் போகின்றார் என்பதை ஒவ்வொருவரும் நிச்சயம் வாசித்துப் பார்க்கவேண்டும்.

(2) 1920களில் தாழ்த்தப்பட்ட பெண்கள் இரவிக்கையோ, உள்ளாடைகளோ அணியமுடியாது. சேலையை குறுக்குக்கட்டாகத்தான் கட்டவேண்டும்.  அதை உடைப்பதற்கான ஒரு போராட்டம் நடக்கிறது. முதன்முதலில் இந்த ஊர் பெண்கள் இரவிக்கை அணிந்து வல்லிபுரம் கோயிலுக்குப் போகின்றார்கள் (1960 வரை வல்லிபுரம் கோயில் உட்பட பெரும்பான்மையான கோயில்களுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் நுழையமுடியாது என்பது வேறுகதை). வெளிவீதியில் இரவிக்கை போட்டு கும்பிடும் பெண்களை சாதி இந்துக்கள் தாக்குகின்றனர். பலரின் ஆடைகள் கிழிக்கப்பட்டு அம்மணப்படுத்தப்படுகின்றார்கள். தான் நிர்வாணமாக்கப்பட்ட துயரந்தாங்காத ஒரு 15 வயதுச் சிறுமி குளத்தில் விழுந்து தற்கொலை செய்கின்றார்.

திரும்ப 1960களில் வல்லிபுரக் கோயிலுக்குள் நுழைய தாழ்த்தப்பட்ட மக்கள் கம்யூனிஸ்ட் தோழர்களின் துணையுடன் திட்டமிடுகின்றார்கள். அதற்கான ஆயத்தப்படுத்தல்கள் நிகழும் முதல்நாள் மாலையில், சிவா சின்னப்பொடியும் அவரையொத்த சிறுவர்களும் (10 வயதுக்குள்தான் ) இவர்கள் தமது மாட்டுவண்டியில் தொட்டதால் 'தீட்டுப்பட்டுவிட்டது' என்று சொல்லி மற்றவர்களைக் கொண்டு அடித்துத் துவைக்கும் கோயில் ஐயரின் மாட்டுவண்டிலுக்குப் போய் தீ மூட்டிவிடுகின்றனர். அதைச் செய்துவிட்டு ஓடிவருகையில் சிவா சின்னப்பொடியின் நண்பன் ஒருவர் பிடிபட்டுவிடுகின்றார்.

எப்படியும் சந்திரனை வழமைபோல கட்டிவைத்து அடித்துவிட்டு, விட்டுவிடுவார்கள் என்று இந்தச் சிறுவர்கள் நம்புகின்றார்கள். இப்படி ஒரு சம்பவத்தை தாங்கள் செய்ததை அறிந்தால் பெற்றோர் அடித்துத் துவைத்துவிடுவார்கள் என்பதால் தீ வைத்த சம்பவத்தையோ, நண்பன் பிடிபட்டுவிட்டதையோ எவருக்கும் சொல்லாமல் வீட்டுக்குள் பதுங்குகின்றனர். அன்று விடிகாலையில் சந்திரன் கிணறொன்றில் பிணமாக மிதக்கின்றார். ஒரு சிறுவன் என்றும் பாராது, கொலையைச் செய்ததும் நம் 'மான'த் தமிழரேதான்.

(3) சிவா சின்னப்பொடி பிறந்து 10 வருடங்களுக்குப் பிறகு இவருக்கு ஒரு தங்கை பிறக்கின்றார். பிரசவம் பார்க்க இணுவிலுக்குச் செல்கின்றார்கள். அங்கே ஒரு உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு கை கழுவும்போது அங்கே இருக்கும் ஒருவர் சிவா சின்னப்பொடியின் தந்தையின் கையில் இருக்கும் பனையேறும் சிராய்ப்புக் காயத்தைக் கண்டுவிட்டு இவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியினர், எப்படி சரிக்குச் சமானமாய் எங்களோடு இருந்து சாப்பிடமுடியும் என்று அலற, அந்த உணவகத்து முதலாளி உட்பட எல்லோரும் என்ன திமிருந்தால் இப்படிச் செய்வாய் என என்று அடித்து உதைக்கின்றார்கள்.

அதுமட்டுமில்லாது ஒரு டிரக்டர் அளவிருக்கும் விறகை வெட்டிக்கொடுத்தால்தான் இவர்கள் இருவரையும் விடுவோம் என்கின்றார்கள். ஏற்கனவே அடிவாங்கி வேட்டி உருவப்பட்ட தகப்பனும், இவருமாக அதை மணித்தியாலக்கணக்காய்ச் செய்கின்றார்கள். களைப்பின் மிகுதியில் சிறுவனான சிவா சின்னப்பொடி ஓய்வெடுக்கும்போது, அப்படி இருக்கமுடியாது என அவரை உதைக்கின்றனர். தடுக்கவரும் தகப்பனையும் மீண்டும் தாக்குகின்றனர். தன் தகப்பன் முதன்முறையாக (அவர் ஒரு கம்யூனிஸ்ட்காரர், பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்) அழுவதை அன்றுதான் பார்த்தேன் என்கின்றார். எந்தத் தகப்பனும் தன் பிள்ளையின் முன் அழ விரும்புதில்லை, அதுமட்டுமின்றி தன் பிள்ளையை இந்தச் சாதி வெறியர்களிடம் இருந்து காப்பாற்ற முடியாத துயரமும் சேர்ந்து அதன்பிறகு தகப்பன் மனம்/உடல் உடைந்துவிடுகின்றார்.  இன்னொரு பொழுதில் ஊரில் சாதிச் சண்டியர்கள் முகத்தை மறைத்து, சிவா சின்னப்பொடியின் தகப்பனைத்தாக்கி அவரின் காலை முறிக்கின்றனர்.

இவ்வாறான அனுபவங்களைப் பெற்ற  ஒரு மனிதர் எவ்விதக் காழ்ப்புணர்வும் இல்லாது எழுதுகின்றார் என்பதை யோசிக்கும்போது வியப்பாகத்தான் இருந்தது. நினைவழியா வடுக்களை நான் இந்த வருடத்தில் வாசித்த நூல்களில்  அதிகம் பாதித்த நூலெனச் சொல்வேன்.

மீண்டும் சொல்ல விரும்புவது இதைத்தான். சமூக செயற்பாட்டாளர்களாகவும், சமூகத்தில் மாற்றங்களைச் செய்ய விரும்புகின்றவர்களாகவும் இருக்கும் எவரும் தவற விடாது வாசிக்கவேண்டிய நூல் இது .  இற்றைவரை எல்லா அடையாளங்களையுன் உதறவிரும்பினாலும் மொழி என்பதில் மிகப்பெரும் காதல் கொண்டவனாகவே இருக்கின்றேன் (அதனால்தான் பெரியார் எல்லா அபிமானங்களையும் விட்டுவிடச் சொல்கின்றபோது, மொழியையுமா கைவிடவேண்டும் என யோசிப்பதுண்டு). ஆனால் இதில் சிவா சின்னப்பொடி தன்னைவிட தனது பிள்ளைகள் இந்தச் சாதியைத்தாண்டுவார்கள், பேரப்பிள்ளைகள் இன்னும் முன்னே போவார்கள் என்கின்றபோது, (அவர் நம் தாய்மொழியைக் கைவிடவேண்டும் என்று சொல்லாதபோதும்) சாதி ஒட்டிக்கிடக்கும் மொழியின் மீதான அபிமானத்தையும்  நாம் கைவிட்டால்தான் என்னவென்று தோன்றியது.
.......................................................

(Dec 09, 2019)


0 comments: