கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

யுவன் சந்திரசேகரின் 'கானல் நதி'யும், 'எண்கோண மனித'னும்

Saturday, December 27, 2025

 


யுவன் ஒரு நேர்காணலில் 'நான் லக்‌ஷ்மண்ஜூலாவிலிருந்து கங்கையைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது லேசாகத் தூறல் போட்டது. அந்தத் தூறலில் கங்கையின் மொத்தப் பரப்பும் சிலிர்த்துக்கொண்டதுபோல ஒரு காட்சி கிடைத்தது. அதில் கரைந்துவிடத் தோன்றியது. மறுபடியும் குடும்பத்துக்குள் போக வேண்டாம், இப்படியே எங்கேயாவது போய்விடலாம் என்றிருந்தது. ஆனால், ஒரு நொடிதான். பிறகு, பிரக்ஞை நம்மைத் திருப்பி இழுத்துக்கொண்டுவந்துவிடும். பிரக்ஞை யின் இந்தக் கட்டளைக்குக் காது கொடுக்காதவன்தான் வேறு ஒன்றாக மாறிவிடுகிறான். இசை என்பது ஒருவர் தனக்குள் மேற்கொள்ளும் பயணம்!' என்று கூறியிருப்பார்.

இதை இன்னும் விரித்துப் பார்த்தால் யுவனின் நாவல்களான 'கானல் நதி'யும், 'எண்கோண மனிதனும்' வந்து சேர்வார்கள். இரண்டுமே பதினைந்து வருடங்கள் வித்தியாசத்தில் எழுதப்பட்டாலும், இவற்றிற்கிடையில் இணைப்புப் புள்ளிகளைத் துழாவிப் பார்ப்பது சுவாரசியமானது. இரண்டுமே இளவயதில் உச்சத்தில் இருந்த இரண்டு கலைஞர்களையும், அவர்கள் பெருஞ்கலைஞர்களாக மாறப்போகின்றார்கள் என்கின்றபோது வீழ்ச்சியடைந்தவர்களாக மாறிவிடுவதையும் பார்க்கின்றோம்.

Uploaded Image

கானல்நதியில் இந்துஸ்தானி இசையில் உச்சத்த்தில் இருக்கும் தனஞ்சய முகர்ஜியும், 'எண்கோண மனிதனில் நாடகம்/சினிமாவில் பிரபல்யமாக இருக்கும் சோமனும் தமக்கான சரிவுகளை தாங்களே விரும்பி ஏற்பவர்களாக இருப்பவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பதுதான் வியப்பானது. தனஞ்சய்யிற்கு ஒரு காதல் முறிவும், கச்சேரிகளில் பழக்கமாகும் மதுவும் அவரின் அழிவுக்கு ஒரு புறக்காரணமாக இருப்பது போல, சோமனுக்கு அவரது பாலினம் சார்ந்து வரும் குழப்பம் ஒரு காரணமாக இருக்கின்றது.

எப்படி ஒரு உச்சத்துக்கு கலைஞர்களாகப் போகின்றார்களோ, அப்படியே அவர்கள் அடையும் வீழ்ச்சியையும் தம்மளவில் ஏற்றுக்கொள்கின்றார்கள். ஏற்றுக்கொள்வது மட்டுமில்லை தம்மை பொதுவெளிகளில் இருந்து முற்றாக இல்லாமலும் செய்கின்றார்கள்.


யுவன் மேற்குறிப்பிட்ட நேர்காணலில் குறிப்பிட்ட -கங்கையைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது குடும்பத்தில் இருந்து காணாமல் போகும் கனவு பெருகியதைப் போல- எண்கோண மனிதனாகிய சோமன் சட்டென்று ரெயினில் ஏறி என்றென்றைக்குமாக காணாமல் போகின்றார். இந்தக் காணாமல் போதல் கானல் நதியில் தனஞ்சய் முகர்ஜிக்கு தெருக்களில் எதுவுமற்று அலைகின்ற நாடோடித்தனத்துக்கு அழைத்துச் செல்கின்றது.

சோமன் மீது அவ்வளவு விருப்புடன் அவரது (இரகசிய ) மனைவியான அலுமேலும், இன்னொருபுறத்தில் அவர் மீது பித்துப்பிடித்தலையும் காதலியான விஜயாவும் (ராதிகா கட்கர்) இருக்கின்றபோதும் சோமன் அவர்களிடமிருந்து தனது காணாமல் போதலைச் செய்கின்றார். அவரது பாலினம் சார்ந்த மாற்றம் மட்டுந்தான் இந்த 'தொலைந்து போதலுக்கு' காரணமாக இருக்காது. ஏனெனில் அவரோடு வாழ்க்கையைப் பகிர்ந்த அலுமேலுவுக்கு சோமனின் இந்த பாலின மாற்றம் ஒருவகையில் புரிகிறதை வாசகர்களாகிய நாம் புரிந்து கொள்கின்றோம்.

யுவனின் இந்த இரண்டு புனைவுகளையும் வாசிக்கும்போது வீழ்ச்சியடைந்தவர்க்கும் இந்த உலகில் இடமிருக்கின்றது என்பதை உணர்கின்றோம். அது அவர்களாக விரும்பி ஏற்றுக்கொண்ட பாதாளத்தில் புரண்டெழும் ஓர் இருண்ட வாழ்க்கையாக இருந்தாலும் நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.

Uploaded Image
யுவனின் நாவல்களில் இருக்கும் ஒரு சிக்கல் என்பது சட்டென்று நுழைந்துவிட முடியாத ஒரு தன்மையாகும். மொழியின் சிக்கலான மொழியில் நடைபெறும் விடயமல்ல இது. யுவனின் கதாபாத்திரங்கள் நிறையப் பேசிக் கொண்டிருப்பார்கள். இதிலென்ன இருக்கின்றது என்று சாதாரணமாக அந்த உரையாடல்களை வாசித்துக் கொண்டிருக்கும்போது சட்டென்று ஒரு நுண்ணிய விடயத்தை அவர்கள் பேசிவிடுவார்கள். அவ்வாறான நுண்ணிய விடயங்கள் சேர்ந்துதான் அவரின் புனைவு என்கின்ற மாயவுலகத்தை கட்டியமைக்கின்றது. ஆகவே ஒரு வாசகர் இது சாதாரண உரையாடல் என்று எழுந்தமானமாக வாசித்துக் கொண்டு போனால்  கடைசியில் யுவன் என்ன இந்தப் புனைவுகளில் சொல்கின்றார் எனச் சலிப்பு வந்துவிடும்.

ஆனால் என்னை இந்த வகை எழுத்தே உள்ளிழுத்துக் கொண்டது. ஏனெனில் பல இடங்களில் குறிப்பிட்டமாதிரி யதார்த்தவகை எழுத்து எனக்கு அலுப்புத் தருபவை. பொங்கும் பூம்பாளம் போல நடையில் வாசகர்க்கு எந்தவகை இடத்தையும் தராது எல்லாந் தெரிந்தது மாதிரி பேசும் புனைவுகள் என்னைப் பொருத்துவரை சலிப்பானவை. அண்மைக்காலத்தில் கூட இப்படிப் பலவற்றை வாசித்திருக்கின்றேன்.

எழுத்தாளர்களின் பெயர்களைக் குறிப்பிடுவதைத் தவிர்க்கின்றேன். ஏனெனில் அந்த படைப்பாளிகள் மனம் வருந்தவோ, அவர்களின் வாசகர்களோ சண்டைக்கு வருவதற்கு இடமுண்டு என்பதால், எண்கோண மனிதனில் வரும் சம்பந்த மூர்த்தி மாமா போல இந்த இடத்தில் இருக்க விரும்புகின்றேன். சம்பந்த மூர்த்தி, கிருஷ்ணனிடம் உயர்வர்க்கத்தினரின் இரகசியக்  கதைகளைச் சொல்லும்போது ஒருபோதும் அவர்கள் யாரென்றோ, அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றோ சொல்வதில்லை. சம்பந்த மூர்த்தியின் கட்சியில் நானும் இந்த விடயத்தில் சேர்ந்துவிடுகின்றேன்.

எண்கோண மனிதனில் சோமன் அவனின் இருபத்தைந்து வயதில் உச்சத்தில் இருந்து தொலைந்து போகின்றான். அவனை சம்பந்த மூர்த்தி அடுத்த இருபது வருடங்களின் பின் தேடத்தொடங்குகின்றார். அப்படி அவர் சோமனோடு சம்பந்தப்பட்டவர்களைச் சந்தித்துப் பேசுவதை காஸெட்டுக்களில் பதிந்து வைத்திருக்கின்றார். அதை சம்பந்த மூர்த்தி இறந்தபின், கோவிட் காலத்தில் கேட்டு கேட்டு நமக்கு ஒரு கதையைச் சொல்லத் தொடங்குகின்றார் கதைசொல்லியான கிருஷ்ணன்.

இதைப் போன்றுதான் கானல் நதியில், தனஞ்சய் முகர்ஜியின் உச்சத்தையும் வீழ்ச்சியையும் ஒரு பத்திரிகையாளராக இருக்கும் கேசவ் சிங் சொல்வதை நாம் பார்க்கின்றோம்.

இவர்கள் இருவரும் தாங்களாகவே விரும்பி தொலைந்து போனவர்கள். ஒருவர் இந்துஸ்தானி இசையிலும், இன்னொருவர் சினிமாவிலும் உச்சத்தைத் தொடப்போகின்றார்கள் என்று நினைக்கும்போது புகழ் வெளிச்சத்தில் இருந்து விலத்திப் போகின்றவர்கள்.

எனக்கு கானல் நதியை வாசிக்கும்போது மைக்கல் ஒண்டாச்சி இப்படி உச்சத்தில் இருந்து வீழ்ச்சிக்குப் போன ஜாஸ் கலைஞனைப் பற்றி எழுதிய நாவலான 'Coming Through Slaughter' ஞாபகத்துக்கு வந்தது.  ஒண்டாச்சியின் நாவல் நேர்கோட்டுக் கதைசொல்லல் முறையில்லாது, கடிதங்கள், கவிதைகள், உரையாடல்கள், வைத்தியசாலை ஆவணங்கள் போன்ற எல்லாவற்றையும் மாறி மாறிக் கலந்து கதை சொல்லப்படுகின்றது. அதில் ஜாஸ் இசையில் உச்சத்தில் இருக்கும்  Buddy Bolden  தனது முப்பத்தொராவது வயதில்  மனப் பிறழ்வுக்குள்ளாகின்றார். அவரேன் அப்படி மனப்பிறழ்வுக்கானார் என்பதற்கோ (குடி/தனிமையொரு காரணமாய் இருக்கலாம் என்றாலும்) , திடீரென்று ஏன் ஜாஸ் இசையில் உச்சங்களைத்தொடும் தூரத்தில் இருக்கும்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டு நகரைவிட்டு ஓடிப்போய்விடுகின்றார் என்பதற்கோ தெளிவான காரணங்கள் நாவலில் குறிப்பிடப்படுவதில்லை. அந்நாவல் போன்றே கானல் நதியில் தனது இந்துஸ்தானி இசை ஞானத்தை ஏன் அவ்வளவு எளிதில் கைவிட்டு ஒரு நாடோடியாக தனஞ்சய் முகர்ஜி அலைகின்றார் என்பதற்கு தெளிவான காரணம் கிடைப்பதில்லை. அதுபோலவே ஏன் எண்கோண மனிதனில் ஒரு சினிமாவின் சூட்டிங் முடிந்தவுடன் ரெயின் ஏறி என்றென்றைக்குமாக சோமன் என்கின்ற நடிகன் ஏன் தொலைந்து போகின்றார் என்பதற்கும் நமக்கு காரணங்கள் துல்லியமாகத் தெரிவதில்லை.

நமக்குத் தெரிவதெல்லாம், இந்த காணாமல் போன கலைஞர்களினூடு பழகிய மற்றவர்களினூடு கிடைக்கும் மனச்சித்திரங்கள் மட்டுமே. ஆகவே இவை ஒருபோதும் ஒரு முழுமையான சித்திரத்தைத் தரப்போவதில்லை. நாம் துண்டுதுண்டாக எமக்கு விரும்பியமாதிரி இந்த கலைஞர்களின் வாழ்க்கையையின் உயர்வையும் வீழ்ச்சியையும் ஓவியமாக்கிப் பார்க்கலாமே தவிர இது அந்தப் பாத்திரங்கள் சொல்லவிரும்பும் கதைகள் அல்ல என்பதும் புரிகிறது. அந்தப் புதிர்த்தன்மையை இந்த நாவல்களை வாசிக்க இன்னும் சுவாரசியமாக்கின்றன.

யுவனின் Alter Ego என ஓர் எளிமைக்காக நான் நினைக்கும் கிருஷ்ணன் என்கின்ற பாத்திரம் முதன்முதலாக சிறுகதைகளிலிருந்து விடுபட்டு எண்கோண மனிதன் என்கின்ற நாவலிற்குள்ளும் நுழைகின்றது. அது யுவனின் கதையை ஒட்டி தனது கதையைச் சொல்வது போல (பிறந்த வருடம், தகப்பனை இழந்த காலம்) இருந்தாலும் அது யுவனின் பாத்திரத்தை அப்படியே பிரதிபலிக்கின்றது என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. வேண்டுமெனில் கங்கைக் கரையைப் பார்த்து எல்லாவற்றையும் விட்டு சுதந்திரமாக ஓட விரும்பிய யுவன் இசைப்பக்கமாகப் போயிருந்தால்  ஒரு தனஞ்சய் முகர்ஜியாகவோ, நடிப்புத் திசையில் போயிருந்தால் ஒரு சோமன் போலவே ஆகியிருக்கலாமென சுவாரசியத்துக்காய் நாம் யுவனைக் கற்பனை செய்து பார்க்கலாம்.

யுவனின் படைப்புக்களை யாரின் தொடர்ச்சியில் வைத்துப் பார்க்கின்றார்களோ தெரியாது. எங்கோ ஓரிடத்தில்  கி.ராஜநாராயணினதும், நாஞ்சில் நாடனினதும் உரையாடல்களினால் கதைசொல்லும் வகைக்காக யுவனை அவர்களின் நீட்சியாக வைக்கலாமென வாசித்தது நினைவிலுண்டு. ஆனால் என் வாசிப்புக்களின் அடிப்படையில் அவரை நான் நகுலனின் நீட்சியில் வைத்துப் பார்க்கவே விரும்புவேன். நகுலனுக்கு என்று ஒரு காலம் இருந்தது என்றால், யுவன் சமகாலத்துக்குரிய நகுலனின் தொடர்ச்சியெனச் சொல்வேன்.

யுவனின் புனைவுகளில் கதாபாத்திரங்கள் நிறையப் பேசிக் கொண்டிருந்தாலும், எனக்கென்னவோ அது யுவன் தனக்குள் பேசிக்கொள்ள விரும்புகின்ற விடயங்கள் போலத்தான் இருக்கின்றது. நகுலனுக்கு ஒரு நவீனன் என்றால் யுவனுக்கு ஒரு கிருஷணன். 'இசை என்பது ஒருவர் தனக்குள் மேற்கொள்ளும் பயணம்' என்று யுவன் சொல்வதைப் போல, யுவனுக்கு எழுத்து என்பது அவர் தனக்குள் மேற்கொள்ளும் பயணங்களாகவே இருக்கின்றது என நினைக்கின்றேன்.

கலை என்பது ஒருபோதும் பாவனை செய்யக்கூடாது என்று உறுதியாக நம்புவதைப் போல, அதே கலை அவ்வளவு நேர்த்தியாக/முழுமையாக எல்லாம் இருக்கத் தேவையில்லை என்பதையும் நம்புகின்றவன் நான். எனவே இந்நாவல்களில் தென்படும் சில பலவீனமான பக்கங்களை, அவை வாசிப்பில் அவ்வளவு உறுத்தாதபோது ஒருபக்கமாய் ஒதுக்கி வைத்துவிடலாம்.

நானும் அகத்தேயும் புறத்தேயும் எனக்கான பயணங்களில் தொலைந்துபோய் அலைக்கழிபவன் என்பதால்,  என்னை யுவனின் இந்த இரண்டு நாவல்களும் வசீகரிக்கின்றன. மேலும் வீழ்ச்சியுற்றவர்களைப் பற்றி ஆதூரத்துடன் அவர்களின் கதைகளைச் சொல்ல யுவனைப் போன்ற படைப்பாளிகள் இருக்கின்றார்கள் என்பது நமக்கு எவ்வளவு இதம் தருகின்றது.

***

நானொரு பெண் வெறுப்பாளன் அல்ல -சார்ள்ஸ் ப்யூகோவ்ஸ்கி

Friday, December 26, 2025

 

தமிழில்: இளங்கோ

******



மேலும் மேலும்
இளம் பெண்களிடம் இருந்து
நிறையக் கடிதங்களைப் பெற்றபடி இருக்கிறேன்

"நான் திடகாத்திரமான 19 வயதுக்காரி
வேலையில் இருக்கும்போது
உங்கள் எழுத்து
என்னைப் பாலியல் நோக்கித் திரும்புகிறது
நானொரு நல்ல பணியாளும் காரியதரிசியும்;
உங்கள் பக்கம் ஒருபோதும்  வரப்போவதில்லை
இத்துடன் எனது புகைப்படத்தை அனுப்ப விரும்புகிறேன்
ஆனால் அது அவ்வளவு மலினமாக இருக்கும் என..."

"எனக்கு வயது 21
நல்ல உயரமும் கவர்ச்சியானவளும் கூட
உங்கள் நூல்களை வாசித்திருக்கின்றேன்
நான் ஒரு வக்கீலாக வேலை பார்க்கிறேன்
எப்போதாவது நீங்கள் என் நகருக்கு வருவீர்களென்றால்
தயவுசெய்து அழைக்கவும்."

"நான் உங்களை
ருவடோரில் கவிதை வாசிப்பை
நீங்கள் முடித்த இரவில்
சந்தித்தது நினைவிருக்கின்றதா
நீங்கள் தொலைபேசியில் அழைத்தபோது
பதிலளித்தவனின் குரல்
அவ்வளவு கடுமையாக இருந்ததென்று நீங்கள் சொன்னவனைத்தான்
நான் திருமணம் செய்திருந்தேன்.
இப்போது விவாகரத்து பெற்றுவிட்டேன்
எனக்கொரு இரண்டு வயது மகள் இருக்கிறாள்
நான் இப்போது
இசை உலகினில் இல்லை
ஆனால் அதையிட்டு ஏங்குகின்றேன்
உங்களை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன்.."

"நான் உங்களது
அனைத்து நூல்களையும் வாசித்துவிட்டேன்
எனக்கு 23 வயது
என்னிடம் அவ்வளவு நல்ல மார்பகங்கள் இல்லை
ஆனால் அருமையான கால்கள் இருக்கின்றன
உங்களிடமிருந்து வரும் வார்த்தைகள் சிலவாயினும்
அது  மிகவும் பெறுமதியாக எனக்கு இருக்கும்..."

பெண்களே
தயவு செய்து
உங்கள் உடல்களையும்
உங்கள் வாழ்வையும்
அதை அனுபவிக்கப் பொருத்தமான
இளைஞர்களிடம் கொடுங்கள்
அத்துடன்
சகிக்கமுடியாத,
அலுப்பான,
அர்த்தமேயில்லாத நரகத்தைக் கொண்டுவரபோகும்
உங்களை நான் ஒருபோதும் என் வாழ்வில் வரவேற்கப்போவதில்லை
மேலும்
படுக்கையிலும்
அதற்கு அப்பாலும்
நீங்கள் மகிழ்வதற்கான
என் வாழ்த்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன்

ஆனால்  என் வாழ்க்கையில் அல்ல.
மிக்க நன்றி.

******

 

திருகோணமலையில் புத்தர் சிலை

Thursday, December 25, 2025

 

இப்போது திருகோணமலையில் மீண்டும் புத்தர் சிலை வைப்பது பேசுபொருளாகியிருக்கின்றது. இதேமாதிரி 2000களின் மத்தியிலும் திருமலையில் புத்தர் சிலையைப் பலவந்தமாக வைத்ததும், 'ஜாதிய ஹெல உறுமய' என்கின்ற இனவாத சிங்களக் கட்சி அதன் முன்னணியில் நின்றதும் பலருக்கு ஞாபகமிருக்கலாம். அந்தப் புத்தர் சிலை அவ்வளவு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் இப்போது நிறுவப்பட்டுவிட்டது. எவ்வளவு காலத்துக்குத்தான் மக்கள் இவ்வாறான ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராகப் போராட முடியும். அதுவும் பெளத்த பீடாதிபதிகளின் கட்டளைகளின் ஒரு சொல்லையேனும் மறுக்காத ஒரு அரசாகவே இலங்கை சுதந்திரமடைந்த 1940களிலே இருந்து சிங்கள அரசுக்கள் ஆட்சிப்பீடமேறியபடி இருக்கின்றன. நாட்டின் பிரதமரையே துப்பாக்கியேந்திய ஒரு புத்தபிக்கு கொன்ற வரலாறு இலங்கையில் இருக்கின்றது.

அண்மையில் இலங்கைக்கு (2023) போனபோதும் திருகோணலையில் இப்படி ஒரு ஆக்கிரமிப்புப் புத்தர் சிலை நெல்சன் தியேட்டருக்கருகில் நிறுவப்பட முயற்சி நடந்ததும், மக்கள் எதிர்ப்பைக் காட்டியதும் ஞாபகத்தில் இருக்கின்றது. நான் அந்த தியேட்டரில்தான் அருகிலிருந்த சித்தி வீட்டிலிருந்து நடந்துபோய் ஒரு தமிழ்த்திரைப்படத்தின் முதல் காட்சி அன்று பார்த்திருக்கின்றேன்

இந்தக் கவிதை 2006இல் நிகழ்ந்த ஆக்கிரமிப்புப் புத்தருக்கு எதிராக எழுதப்பட்டது. பின்னர் எனது கவிதைத் தொகுப்பான 'நாடற்றவனின் குறிப்புகளிலும்' சேர்க்கப்பட்டது.  இருபது ஆண்டுகளாக அதே நிலைமைதான்.  இவற்றுக்கு மெளன சாட்சியமாக இருக்கின்றோம் என்பதைத் தவிர சொல்வதற்கு வேறு எதுவுமில்லை.

*

தீர்வு

***
புறாமலையில்
விஜயனால் தந்திரமாய் ஏமாற்றப்பட்ட வெஞ்சினமும்
தன் மூத்தகுடிகளை நிராதரவாய்க் கைவிட்ட துயரமும்
தோயத் தன்னைச் சிதைத்துக்கொண்டிருந்த
குவேனி
 நகரத்தெருக்களில் கால்களைப் பதிக்க
புழுதி சுழன்றாடி
நகரைக் கனவாய்ப் படர்ந்ததாம் மழை

கடற்கரையில்
கால்கள் நனைத்து சுண்டல் சுவைத்து
நெல்சன் தியேட்டரில் படங்கள் பார்த்து
நீ இன்னவின்ன இனமென்றில்லாது
பொதுச்சந்தையில் கலகலக்கும்
சனங்களின் மொழியில்
தன் துயரினைத் தொலைத்தாள்
குவேனி

கொத்துரொட்டிகளின் தப்பாத் தாளத்திலும்
பஸ்நிலைய பல்லினமொழிக்கீதத்திலும்
தன்னை உயிர்ப்பிக்கையில்
பலவந்தமாய்க் குடிவைக்கப்பட்ட புத்தரைக் கண்டு
இயற்கையை வழிபடும்
குவேனி கோபித்தாளில்லை
அவரையும் நேசிக்கத் தொடங்கினாள்
பேச்சுத்துணையாக்கி.

புத்தரும் குவேனியும்
நேவிக்கப்பல்கள் தொலைவில் மின்னும்
கடற்கரையில் கால்கள் புதைய
கரங்கள் கோர்த்து உலாவுகையில்
கோணேசரும் பத்திரக்காளியும்
காதற்கிறக்கத்திலும் பதட்டத்திலும்
இருப்பது கண்டு புன்னகைப்பதுண்டு

கோணேசர் பாவம்
இராணுவம் சூழவிருக்கும் அவருக்கும்
ஊரடங்குச் சட்டமுண்டு;
பின்னிரவு நீளமுன்னர் தன் தலம்
மீளவேண்டிய அவதி அவர்க்கு

சங்கமித்தா
புத்தரைச் சந்திக்க வந்தவொருபொழுதில்
எல்லாம் தலைகீழாயிற்று
குவேனியுடன் புத்தர் நட்பாயிருப்பதை
சகிக்கா சங்கமித்தா
உறுமய ஜாதிய நரிகளை உசுப்பிவிட
கொந்தளிக்கத் தொடங்கிற்று
மீண்டும் நகர்

அரசமரக் கிளைக்குப் பதிலாய்
சங்கமித்தாவின் கரங்களில்
கொடும் ஆயுதங்கள் முளைக்கத்தொடங்கின
கோணேசரருடன் காதல் சரசமாடிக்கொண்டிருந்த
காளியும் ஆடத்தொடங்கினாள்
தற்காப்பு ஆட்டம்

தம் இயல்பு மறந்து
காளியும் சங்கமித்தாவும்
ஊழிநடனம் ஆடுவது பொறுக்காது
இடைநடுவில் புகும் குவேனியையும்
கொத்துரொட்டித் தகட்டால் குற்றுயிராக்கி
நரிகளுக்கு நிகராய்
விழும் தலைகளுக்காய் தெய்வங்களும் அலைகின்றன
நாக்குகளைத் தொடங்கவிட்டபடி

பிறகு
புத்தர் குவேனி எனும்
இரு சடலங்கள்
காலப்பெருவெளியில் மிதந்து கொண்டேயிருந்தனவாம்
ஒரு சிறுதீவில்
அமைதி வருவது எப்படியெனும்
எளிய சூத்திரங்களைத் தம்முடல்களில்
சுமந்தபடி.

(April 18th, 2006)
***

 

1813 - 1883 ~ சார்ள்ஸ் ப்யூகோவ்ஸ்கி

Wednesday, December 24, 2025

 

(தமிழில்: இளங்கோ)
 

 
வாக்னரைக் கேட்கையில்
வெளியே இருட்டில் காற்று வீசுகிறது
குளிர்ந்த மழை மரங்களை மேவி அசைக்கிறது
விளக்குகள் அணைந்து எரிகின்றன
சுவர்கள் கிறீச்சிடுகின்றன
பூனைகள் கட்டிலின் அடியில் ஓடி மறைகின்றன

வாக்னர் வேதனைகளுடன் போராடுகிறார்
அவர் உணர்ச்சிவசப்படகூடியவர், ஆனால் உறுதியானவர்
அவரொரு மேன்மைமிகு போராளி
குள்ளர்களின் உலகில் அவரோர் இராட்சதன்,
அவர் துயரங்களை நேரடியாக எடுத்துச் செல்கிறார்,
தடைகளை வியக்கத்தக்க சப்தங்களின் சக்தியால்  தகர்க்கிறார்

இங்கிருக்கும் களிப்பாறைகள் எல்லாம்
கடும் சூதாட்டத்தில்.
விதிர்விதிர்க்கின்றன
வளைகின்றன
உடைகின்றன

ஆம், வாக்னரும் புயலும்,
மதுவோடு கலக்கையில்
இந்த இரவுகள்
எனது மணிக்கட்டுக்குள்ளால் ஓடி
என் தலைவரை ஏறி
மீண்டும் குடலுக்குள் இறங்குகின்றன.

சில மனிதர்கள்
ஒருபோதும் இறப்பதில்லை
சில மனிதர்கள்
ஒருபோதும் வாழ்வதில்லை

ஆனால் இன்றிரவு
நாம் அனைவரும்
உயிர்ப்புடன் இருக்கின்றோம்.

***

குறிப்பு: இந்தக் கவிதையில் தலைப்பு (1813-1883) ரிச்சர்ட் வாக்னரின் பிறப்பையும் இறப்பையும் குறிக்கின்றது.

'New Yorker' சஞ்சிகையில் சிறுகதை எழுதிய முதல் தமிழர்

Sunday, December 21, 2025

 

இன்றும் இலக்கிய உலகில் New Yorker சஞ்சிகையில் ஒரு படைப்பு வெளிவருவது என்பது மிகப் பெரும் விடயமாகப் பார்க்கப்படுகின்றது. ஆனால் இன்றைக்கு 70 வருடங்களுக்கு முன்னரே ஓர் ஈழத்தமிழரின் சிறுகதை வெளிவந்திருக்கின்றது என்பதை உங்களால் நம்பமுடியுமா? அதுவும் அந்தக் கதை புலம்பெயர் கதையாக இல்லாது, பூர்வீக மண்ணின் வாசம் வீசும் படைப்பாக இருந்ததும், அதை 'நியூ யோர்க்கர்' ஆசிரியர் குழு தெரிவு செய்து வெளியிட்டிருக்கின்றது என்பதும் அதிசயமானதுதான். 'மாதுளம் மரம்' ('The Pomegranate Tree'/1954) என்கின்ற இந்தக்கதை யாழ்ப்பாணத்தில் அச்சுவேலியில் நடக்கின்றது. அச்சுவேலி மட்டுமில்லை, கீரிமலை, கோப்பாய் என்று பல இடங்களும், தமிழ் வார்த்தைகள் சிலவும் இந்தக் கதையில் குறிப்பிடப்படுகின்றது.
Uploaded Image
இந்த 70 வருடங்களில், ஒரு தமிழரின் சொந்தப் படைப்பு அதன்பிறகு 'நியூ யோர்க்கரி'ல் வந்ததே இல்லையெனச் சொல்லலாம்(?). அண்மையில் அனுக் அருட்பிரகாசத்தின் 'Passage North' இற்கான மதிப்புரை, பெருமாள் முருகனின் 'மாதொருபாகனின்' சர்ச்சை குறித்து இன்னொரு எழுத்தாளர் எழுதிய கட்டுரை என்பவற்றைத்  தவிர எந்த ஒரு தமிழரின் சொந்தப்படைப்பும் (கதை/கவிதை) 'நியூ யோர்க்கர்' வரலாற்றில் இல்லை என்றே நினைக்கின்றேன்.

அப்படியெனில் எப்படி இப்படி ஒரு அதிசயம், 70 வருடங்களுக்கு முன் 'நியூ யோர்க்கரி'ல் நிகழ்ந்திருக்கின்றது? அந்தக் கதையை எழுதியவர் எம்.ஜே. தம்பிமுத்து. தம்பி என்று பலரால் சுருக்கி அழைக்கப்பட்ட தம்பிமுத்து இங்கிலாந்தில் இருந்து அன்று பிரபல்யமான  'Poetry London' சஞ்சிகையை அவரே  தொடக்கி தொடர்ச்சியாக 10 வருடங்கள் வெளியிட்டவர். அன்று மிகப் புகழில் இருந்த எழுத்தாளர்கள் பலரோடு நட்பாக இருந்தவர். எப்போது என்றாலும் T. S. Eliot ஐ சந்தித்துப் பேசக்கூடியவராக தம்பி இருந்திருக்கின்றார். தம்பிமுத்து திருமணமாகிய காலத்தில், எலியட் புதுமணத் தம்பதியினரை அழைத்து தேநீர் விருந்து கொடுக்குமளவுக்க்கு எலியட்டோடு தம்பிமுத்து நெருக்கமாக இருந்திருக்கின்றார். மேலும் அவர் பதிப்பாளராகவும், தொகுப்பாளராகவும், எடிட்டராகவும் பல நூல்களுக்கு இருந்திருக்கின்றார். அப்படி தம்பிமுத்து  பதிப்பாளராக இருந்த Poetry London மூலம் இங்கிலாந்தில்  விளாடிமீர் நபகோவ்வின் நாவலான 'The Real Life of Sebastian Knight' வெளியிட்டிருக்கின்றார் என்பதும் கவனிக்கத்தக்கது.

தம்பிமுத்து பின்னர் இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்குப் போய் நியூ யோர்க்கிலிருந்து, அதே சஞ்சிகையை ''Poetry London- New York' என்ற பெயரிலும் வெளியிட்டவர். அமெரிக்காவில் இருந்து இந்தச் சஞ்சிகையை வெளியிட்டபோது அன்றைய பீட் ஜெனரேஷனைச் சேர்ந்த Jack Kerouac, Allen Ginsberg போன்றவர்களின் படைப்புக்களை வெளியிட்டவர். அலன் கின்ஸ்பேர்க் போன்றவர்கள் தம்பிமுத்துவின் வீட்டு விருந்துகளில் கலந்துகொண்டு இலக்கியம் குறித்து விவாதிக்கின்றவர்களாக இருந்திருக்கின்றனர்.
Uploaded Image
இதைவிட எனக்கு வியப்பாக இருந்த ஒரு விடயம் தம்பிமுத்து அவரது வாழ்க்கைக்காலம் முழுதும் ஒரு முழுநேர இலக்கியவாதியாக இருந்தது. எழுத்தைத் தவிர வேறெந்தத் தொழிலையும் செய்யாது எழுத்தோடு பின்னிப்பிணைந்து கிடந்தவர் தம்பிமுத்து. இங்கிலாந்து/ அமெரிக்காவில் ஒரு முழுநேர எழுத்தாளராக, அதுவும் ஒரு புலம்பெயர் மண்ணிறக்காரர் அந்தக் காலத்தில் இருப்பதைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

அமெரிக்காவிலோ இங்கிலாந்திலோ அங்கே பிறந்து வளர்ந்த ஒருவர் வேண்டுமெனில் முழுநேர எழுத்தாளராக இருக்கலாம், அவர்களுக்கு அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்ய ஏதேனும் பூர்வீகச் சொத்துக்களாவது இருக்கும். ஆனால் தம்பிமுத்து போன்ற ஒருவர் எவருமே ஆதரவு கொடுக்காமல், எவ்வித பூர்வீகச் சொத்தும் இல்லாது, ஒரு முழுநேர எழுத்தாளராக தன் வாழ்க்கைக் காலம் முழுதும் இருந்திருக்கின்றார் .சிலவேளைகளில் ஒரே ஆடையை சில மாதங்களாக அணிந்து திரியுமளவுக்கு வறுமையின் அடிநிலைவரை போயிருக்கின்றார் என்றாலும், பூர்ஷூவா வாழ்க்கையை வெறுத்து, ஒருவகை போஹிமியன் வாழ்வைத் தேர்ந்தெடுத்தவர் தம்பிமுத்து என்பதால் அவருக்கு இது குறித்து எந்த முறைப்பாடுகளும் இருந்ததும் இல்லை.

தம்பிமுத்து அடிப்படையில் ஒரு கவிஞர். அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்தபோதே அவர் கதைகளின் பக்கம் தீவிரமாக இறங்குகின்றார். ஒரு படைப்பாளி நான்கைந்து கதைகளை எழுதியவுடனேயே நியூ யோர்க்கர் அவரின் கதையொன்றைப் பிரசுரிக்க முன்வந்திருக்கின்றது என்பது திகைப்பைத் தரக்கூடியது. ஆனால் தம்பிமுத்து அந்தளவுக்கு திறமையானவராக இருந்திருக்கின்றார்.
Uploaded Image
நியூ யோர்க்கரிலும், ரிப்போர்ட்டரிலும் தம்பிமுத்துவின் ஐந்து கதைகள் வெளிவந்தவுடன், அவரை ஒரு பதிப்பகம் சிறுகதைத் தொகுப்பு வெளியிடுவதற்காக கையெழுத்திடுகின்றது. இன்னும் ஏழு கதைகள் எழுதியவுடன் 12 கதைகளுடன் ஒரு தொகுப்பு வெளியிடுவோம் என்று அந்தப் பதிப்பகம் முன்வருகின்றது. தம்பிமுத்துவின் எழுதப்பட்ட அநேக கதைகள் அச்சுவேலியைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்டதால் அந்தச் செம்பாட்டு மண்ணை முன்வைத்து 'A handful of Red Earth' என்ற தலைப்புக் கூட தெரிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தம்பிமுத்துவுக்கு திரும்பவும் இங்கிலாந்தில் வெளியிட்ட கவிதை சஞ்சிகையை பதிப்பிக்கும் 'பைத்தியம்' பிடித்துவிட, தொடர்ந்து கதைகள் எழுதுவதைக் கைவிட்டு சஞ்சிகை வெளியிடும் வேலையில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்.

இறுதியில் அந்தச் சிறுகதைத் தொகுப்பு வெளிவராமலே போய்விட்டது. ஆனால் நியூ யோர்க்கரில் முதல் சிறுகதையை எழுதிய ஒரு தமிழர் என்ற பெருமையை தம்பிமுத்து அவரையறியாமலே செய்துவிட்டிருந்தார் என்பதுதான் நாம் பெருமைப்படக்கூடிய விடயம்.

***

(மூன்றாவது புகைப்படம்: தம்பிமுத்துவும், அலன் கின்ஸ்பேர்க்கும்)

நியூ யோர்க்கரில் வந்த தம்பிமுத்துவின் சிறுகதை

 

'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்' குறித்து..

Saturday, December 20, 2025


விஜிரூபிணியின் முகநூல் பக்கத்திலிருந்து..

Uploaded Image


நான் உன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்.இலங்கையிலிந்து பறந்து யேர்மனி வந்துள்ளது. திரு இளங்கோவின் எழுத்துருவில் உருவாகிய இந்நூல். தலைப்பை பார்த்ததும் வாசிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியது, அட்டைப்படம் வாஞ்சையை கூட்டியது.அண்மையில் நண்பி ஒருவர் இலங்கை சென்றிருந்தார்,இப்புத்தகம் கிடைத்தால் வாங்கிவரச் சொன்னேன்.இன்று கையில்கிடைத்தது.திரு இளங்கோ அவர்களின் எழுத்துகள் தனித்தன்மையானவை. வாசித்து முடித்ததும் மீண்டும் பகிர்கிறேன்.

(ஆவணி 29,2025)

*
இனிய மாலை வணக்கம்....

தங்களுடைய "நான் உன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்" முற்றுமுழுதாக வாசித்து முடித்தேன். ஒவ்வொரு கதையின் முடிவிலும் ஒரு திரைப்படம் பார்த்த மாதிரியான உணர்வைத் தந்தது. கதாபாத்திரங்கள் இன்னும் உயிர்ப்புடன் மனதில் உருவெடுத்தபடி இருக்கின்றன.

Uploaded Image

எவ்வித மிகைப்படுத்தல்களுமின்றிய வர்ணனைகள், யதார்த்தங்களுக்கு  புறம்பில்லாத எழுத்தாடல் என்று சொல்லிக்கொண்டே போகலாம். 'முள்ளிவாய்க்கால்' கதை மனதை அறுத்துக்கொண்டே இருக்கிறது. இது கதையல்ல நிஜம். எத்தனை எத்தனை நிஜங்கள் புதைந்து போயுள்ளன.

தாங்கள் எழுத்தாளர். நானோ ஒரு வாசகி மட்டுமே. ஏதோ படித்ததைப்  பகிர்ந்துள்ளேன். ஒரு முறை தாங்கள் எழுதியிருந்தீர்கள் எழுத்துக்கள் உங்களுக்கு அந்தரங்கமானவை என்று. அவ்வாறிருந்தாலும்
தங்கள் எழுத்துகள் உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று நிறையட்டும்.

(புரட்டாதி 11, 2025)

***
நன்றி: விஜிரூபிணியின் முகநூல் பக்கம்

 

கார்காலக் குறிப்புகள் - 122

Friday, December 19, 2025

 

நான் மிருதங்கம் பழகப் போனது, என்னுடைய பன்னிரண்டாவது வயதில் என்று நினைக்கின்றேன். எங்கள் ஊரில் இருந்து 6 கிலோமீற்றர் தூரத்தில் எனது மிருதங்க ஆசிரியர் இருந்தார். மிருதங்கம் பழக ஆசை ஏன் வந்ததென்றால் கோயில்களில் மேளச்சமா பார்த்து மேளத்தின் மீது மோகம் வந்தது. மேளத்தின் உயரம் எல்லாம் நமக்குச் சாத்தியமில்லை என்று மிருதங்கம் பழகலாம் என்று விரும்பினேன். ஆனால் அப்போது எங்கள் குடும்பம் கொஞ்சம் கஷ்டத்துக்குள் இருந்தது.

பாடசாலையில் என் வயதில் பெரும்பாலனோர் சாரணர் (Scouts) வகுப்பில் சேர்ந்தபோது என்னால் சிறுவயதில் இணைய முடியவில்லை. சிறுவர்களாக சாரணரில் சேர்பவர்களை குருளைச் சாரணர்கள்  (Cub Scouts) என்று அழைப்பார்கள். ஏன் குவளைச் சாரணராக என்னால் முடியவில்லை என்றால், என்னிடம் சாரணர் அணிவதற்கான சீருடை வாங்குவதற்கான பணம் இருக்கவில்லை. ஆகவே அப்போது குருளைச் சாரணராக ஆக முடியவில்லை. பிறகு 12/13 வயதில் சாரணராகச் சேர்ந்தபோது எனக்கு பக்கத்து வீட்டு அண்ணாவின் சாரணர் சீருடை  இலவசமாகக் கிடைத்திருந்தது. 
 
 
எனவே இப்படியான நிலையில் மிருதங்கம் பழக ஆசை இருந்தாலும் எங்கள் வீட்டு பொருளாதார வசதி சரிப்படுமா என்று கேள்வி இருந்தது.  எனது ஆசையின் காரணமாக அக்கா 'நீ போய் மிருதங்கம் பழகு' என்று தனது செலவில் அனுப்பி வைத்தார். இந்த மிருதங்கம் பழகலை நீண்டகாலம் அப்பாவுக்குத் தெரியாமல் வைத்திருந்தேன். அவருக்குத் தெரிந்தால், இந்த நிலைமையில் மிருதங்கம் ஒரு கேடா என்று கேட்டு என்னை முடக்கியிருப்பார்.

மிருதங்கம் பழகுவது என்று தீர்மானித்தாயிற்று. என் வயதொத்த ஒருவன் மிருதங்கம் பழகுகின்றான் என்பதையும் கண்டுபிடித்தாயிற்று. ஆனால் ஆசிரியர்தான் 6 கிலோமீற்றர் தொலைவில் சுன்னாகத்தில் இருந்தார். அவரிடம் எப்படிப் போவது என்றும் தெரியவில்லை. அப்போதுதான் எங்கள் பாடசாலையில் இருந்த அண்ணா ஒருவர் எனக்கு உதவ முன்வந்தார்.

அவரும் அப்போது அந்த ஆசிரியரிடம் மிருதங்கம் பழகிக் கொண்டிருந்தார். அவர் எங்களுக்கு அடுத்த கிராமமான அளவெட்டியில் இருந்தார். ஒருநாள் அவர் என்னை தனது வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போய்,  தன் சைக்கிளில் ஏற்றிக் கொண்டுபோய் மிருதங்க ஆசிரியரிடம் சேர்த்துவிட்டார்.

Uploaded Image

நான் பிறகு வீட்டில் சைக்கிள் இருக்கும்போது சைக்கிளிலும் இல்லாதவேளைகளில் அந்தத் தூரத்தை நடந்தும் கடந்திருக்கின்றேன். அப்போது மட்டுமில்லை, மிருதங்கம் பழகிய காலம் முழுதும் என்னிடம் ஒரு மிருதங்கம் இல்லையென்பதை நீங்கள் நம்பமாட்டீர்கள். ஆனால் அதுதான் உண்மை. வகுப்புக்காக காசு கொடுக்கவே கஷ்டம் என்கின்றபோது எப்படி ஒரு மிருதங்கம் வாங்க முடியும்?

என் ஆசிரியர், நான் படிக்கும் மேசையின் லாச்சியைத் திறந்துவிட்டு இரண்டு பக்கமும் அடித்துப் பழகு என்று சொல்லித் தந்தார். அந்த மேசை லாச்சியில் அடித்துப் பழகலாம். ஆனால் அதற்கு எங்கே ஆதிதாளம் தெரியப் போகின்றது. தா, தீ, தொம், நம் என்று வெவேறு சப்தங்களில் ஒலிக்கும் இசையின் இலயம் விளங்கப் போகின்றது?

ஆனால் ஓர் ஆர்வமுள்ள மாணவனாக சுன்னாகத்தில் மிருதங்கம் பழகப் போயிருக்கின்றேன். நடந்து வருகின்றபோது யாராவது சிலவேளைகளில் சைக்கிள் 'ride' தருவார்கள். ஒருமுறை அப்பாவின் நண்பர், கேகேஎஸ் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்த எனக்கு அவரின் சைக்கிளில் சவாரி தந்தார்.

எனக்கு இவர் நான் மிருதங்கம் பழகுகின்றேன் என்பதை அப்பாவிடம் சொல்லிவிடுவாரோ என்று பயம் வந்தது. மனுசன் நான் இருக்கும் ரென்ஷன் தெரியாமல், ' 5கிலோ உப்பு ஆறில் கரைந்தால் என்ன மிஞ்சும்?' என்று புத்திசாலித்தனமான கேள்விகளைக் கேட்டுக் குழப்பியது, இன்றும் நினைவிருக்கின்றது. நான் 5 -6, ஆகவே -1 என்று ஏதோ சொல்ல, 'தம்பி ஆற்றில் 5 கிலோ என்ன 50 கிலோ உப்பைக் கரைத்தாலும் ஒன்றும் மிஞ்சாது' என்று சொல்லிவிட்டு சிரித்தார். எனக்கு வந்த கோபத்துக்கு சைக்கிள் மட்காட்டைப் பிடுங்கி ஒன்று அவரின் முதுகில் போட்டால் என்றமாதிரி இருந்தது. ஆனாலும் பொறுத்துக் கொண்டேன்.

இப்படி  மிருதங்க வகுப்புக்குத் தொடர்ந்து போனாலும் எப்படியாவது என் திறமையை நிரூபிக்க வேண்டுமல்லவா? அப்போது வடமாகாண சங்கீத சபை என்று ஒன்றிருந்து. அது, இப்படி இயல் இசை நாடகத்துக்கு பரீட்சைகள் என வைத்து சான்றிதழ்கள் வழங்கும். ஆகவே நான் மிருதங்கப் பரிட்சைக்கு -கொக்குவில் இந்துக்கல்லூரியில் நடந்திருக்க வேண்டும்- சென்றேன்.

ஆனால் பாருங்கள் என்னிடம் ஒரு மிருதங்கம் சொந்தமாக இல்லை. பழகியது எல்லாமே என் மிருதங்க ஆசிரியர் வைத்திருந்த மிருதங்கத்தில் மட்டுமே. அத்தோடு நாங்கள் எங்கள் சொந்த ஊரை விட்டு யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்திருந்தோம். வடலியடைப்புக்குக் கிட்டவாக உள்ளூர் அகதிகளாக இருந்தோம்.

இப்போது அப்பாவுக்கு நான் மிருதங்கம் பழகுவது தெரிந்திருந்தது. ஏனென்றால் இந்தக் காலத்தில் நாங்கள் சங்கானை, அளவெட்டி, வடலியடைப்பு என்று பல இடங்களில் இடம்பெயர்ந்து வாழத் தொடங்கியிருந்தோம்.

எனக்குச் சொந்தமாக மிருதங்கம் இல்லாவிட்டாலும் பரிட்சைக்குப் போவதற்கு ஒரு மிருதங்கம் வேண்டும். அப்பா, யாழ் நகரிலிருந்த யாரோ ஒருவரிடமிருந்து பரிட்சைக்காக மிருதங்கம் ஒன்றை இரவல் வாங்கிக் கொண்டு வந்திருந்தார். பரிட்சை நாளனறு மாமா என்னை சைக்கிளில் முன் பாரிலும், மிருதங்கத்தை பின் கரியரிலும் கட்டி அழைத்துச் சென்றார்.

நான் ஏதோ இதுவரை 'கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் இறக்கி வைக்கும்' மும்முரத்தில் அடிஅடியென்று அடித்தேன். ஆனால் நான் நினைத்த அளவுக்கு ஆதிதாளம் கூட வரவில்லை என்பது வேறுவிடயம்.  பரிட்சையில் தேர்வாவேனோ என்பதே சந்தேகமாக இருந்தது. அதிலும் என்னை பரிட்சிக்க வந்த ஒருவர், 'தம்பி பக்கத்துக் கடையில் எனக்கு கொஞ்சம் வெற்றிலை பாக்கு வாங்கி வா'வென்று அனுப்பிவைத்தார். முன்னர் காலத்தில், ஆச்சிரமத்தில் தங்கி கலைகளைக் கற்கும்போது குருவுக்குப் பணிவிடை செய்வது போல இதுவும் என்று அவருக்கு வெற்றிலை வாங்கிக் கொடுத்தேன். வெற்றிலையின் புண்ணியத்தாலோ என்னவோ நான் ஒருமாதிரியாக முதலாம்தர மிருதங்கப் பரிட்சையில் சித்தியடைந்திருந்தேன்.

ஆனால் எனது கனவு இன்னும் நிறைவேறாமலே இருந்தது. மேளத்தில் 'மாங்குயிலே பூங்குயிலே' போன்ற சினிமாப் பாடல்களை இசைப்பதைப் பார்த்தல்லவா மிருதங்கம் பழக ஆசைப்பட்டவன் நான். அப்படிப் பாடல்களுக்கு அடிக்கப் பழகுவது இரண்டாம் தரத்துக்குப் பிறகுதான் தொடங்கும் என்று சொன்னார்கள்.

இதற்கிடையில் நான் என் மிருதங்க ஆசிரியரோடு, ஆசிரியர் - மாணவர் என்ற உறவைத்தாண்டி எதையும் கதைக்கும் ஒருவனாக மாறியிருந்தேன். நான் ஏதாவது நூலகத்தில் புத்தகத்தை எடுத்துவந்தால் அதைப் பற்றி அவர் கேட்பதும், நான் நூல் குறித்தும் பேசுவதாக, மிருதங்கத்தைத் தாண்டிய உலகிலும் நாம் இருந்தோம். அவரும், 'இவனுக்கும் மிருதங்கத்துக்கும் வெகுதொலைவு, பாவம் அவனுக்குத் தெரிந்த விடயத்தைப் பற்றிப் பேசுவோம்' என்று நினைத்து என்னோடு நூல்களையும், நடப்பு அரசியலையும் பேசும் ஒருவராக மாறியிருக்கக் கூடும்.

இவ்வாறு நான் இரண்டாவது தரம் மிருதங்கம் படிக்கும் காலத்தில் போர் இன்னும் உக்கிரமாகத் தொடங்க வகுப்புக்களுக்குப் போவதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிடத் தொடங்கினேன். அப்போது எங்கள் பாடசாலை மாலைநேரப் பாடசாலையாக இணுவில் சைவமகாஜனாவில் (இப்போது இணுவில் இந்துக்கல்லூரி) இயங்கத் தொடங்கியது. அந்தப் பாடசாலையும் பாவம். அதன் முன்பகுதியில் குண்டுவிழுந்து இடிந்த கட்டடத்தோடே இயங்கியது.

என்னை மிருதங்கம் பழக்குவதற்கு ஓர் அண்ணா கூட்டிச் சென்றார் என்று சொன்னேன் அல்லவா? அவருக்கு என்னை விட மூன்றோ நான்கு வயது கூடவாக இருக்கும். அவருக்கு பாடசாலையில் ஒரு மதிப்பு இருந்தது. நான் போன (அளவெட்டி) லக்கி ரியூட்டரியில் வாணி விழா கோலாகலாமாக இசை நிகழ்வுடன் நடக்கும். அங்கே இந்த அண்ணா ஒருமுறை 'பாதைகள் வளையாது பயணங்கள் முடியாது/ போகுமிடத்தை சேரும்வரைக்கும் எங்கள் பாதை வளையாது' என்ற இயக்கப் பாட்டை மிகுந்த உணர்ச்சிவசமாகப் பாடினார். உண்மையில் அன்றுதான் நான் Goosebumps என்ன என்பதை உணர்ந்தேன் - மயிர்க்கால்கள் சிலிர்த்தெழுந்தன.

அந்த அண்ணாவை நான் இணுவில் மாலைப் பாடசாலைக்குச் செல்லும்போது பாடசாலையின் மதிலடியில் பார்த்தேன். இப்போது அந்த அண்ணா இயக்கத்துக்குப் போய், விடுமுறைக்காக ஊர் திரும்பியிருந்தார். அவர் வயதொத்த நண்பர்கள் எல்லோரும் பாடசாலைக்குள் நுழைந்து கொண்டிருந்தபோது, இந்த அண்ணா ஒருவித ஏக்கத்துடன் வெளியே நின்று பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். 'எப்படியடா நீங்கள் இருக்கின்றீர்கள்?' என்று கேட்டு எனது தலையில் கோதி பாடசாலைக்குள் அனுப்பிவைத்தார்.

இயக்கத்துக்குப் போய்விட்டால் பாடசாலை வளாகத்துக்குள் நுழைய முடியாது என்பது எழுத்தில் இல்லாத கட்டளை. எப்படி இந்த அண்ணா இப்போது வேறொரு அந்நிய ஆளாக மாறிவிட்டார் என்று எனக்குத் திகைப்பாக இருந்தது. சிறந்தொரு பாடகராகவும் அதைவிடச் சிறப்பாய் மிருதங்கம் வாசிப்பவராகவும் இருந்த அந்த அண்ணா இனி பாடவோ மிருதங்கம் அடிக்கவோ மாட்டார் என்பதை என்னால் நம்ப முடியாததாக இருந்தது. என்னை மிருதங்க வகுப்புக்குக் கூட்டிச் செல்வதற்காக தங்கள் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டுபோய் சாப்பாடும் சாப்பிட வைத்த அவரின் அம்மாவின் முகமும் என் நினைவில் நின்றாடியது.

பின்னர் மிருதங்கம் உள்ளிட்ட எமக்குப் பிடித்த எல்லாக் கவின்கலைகளும் எங்களை விட்டு வெகுதொலைவாகச் செல்லத் தொடங்கின. என்னைப் போன்றவர்களும் எங்களின் அப்பாவித்தனத்தைத் தொலைத்த ஒரு தலைமுறையாக விரைவில் மாறிப்போனோம்.

**

(இந்த மிருதங்கம் இப்போது, எனது தோழியொருவர் அன்பளிப்பாகத்  தந்தது. மிருதங்கம் பழகிய அவரின் தம்பி இப்போது என் தோழியைப் போல மருத்துவராகிவிட்டார். எனவே 'எவரும் தொடாமல் மிருதங்கம் வீட்டில் சும்மா கிடக்கின்றது, உனக்கு வேண்டுமென்றால், வந்து எடுத்துக் கொள்' என்றார். பார்த்தீர்களா,  இறுதியில் நான் ஒரு மிருதங்கத்துக்குச் சொந்தக்காரனாகி விட்டேன். வாழ்க்கை விசித்திரமானதுதான் அல்லவா?)

 

ஸ்கார்பரோவில் எழுத்தாளர் இளங்கோவின் 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தார்'!

Thursday, December 18, 2025

 

'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தார்' - இளங்கோவின்  (டிசெ. தமிழன்) புதிய சிறுகதைத்தொகுதி , நேற்று Scarborough Village Receation Centreஎஇல் நடைபெற்றது. கலை, இலக்கிய, சமூக, அரசியற் பிரமுகர்கள் பலர் வந்திருந்தனர்.

நிகழ்வின் ஆரம்பம் போர்ச்சூழலில் , மனித உரிமை மீறல்களில் பலியாகிய அனைவர்தம் நினைவாக ,  மெளன அனுஷ்டிப்புடன் ஆரம்பமாகியது.  'தேசியம்' இலங்காதாஸ் பத்மநாதனின் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.

Uploaded Image

நிகழ்வின் ஆரம்பத்தில் நிரோஜினி றொபேர்ட்  இளங்கோவின் சிறுகதையொன்றின் சில பகுதிகளை வாசித்தார்.  வித்தியாசமான, ஆனால் ஆரோக்கியமான முயற்சி. தொடர்ந்து எழுத்தாளரும், நாடகவியலாளருமான பா.அ.ஜயகரன், முனைவர் மைதிலி தயாநிதி, நம் கலை, இலக்கிய உலகில் நன்கறியப்பட்டவரும், வானொலி, தொலைக்காட்சி ஊடகவியலாளரும், நாடகவியலாளருமான பி.விக்னேஸ்வரனின் இயக்கத்தில் மேடையேறிய இப்சனின் 'பொம்மை வீடு' நாடகத்தில் சிறப்பாக நடித்துப் பலரின் கவனத்தையும் பெற்றவருமான அரசி விக்னேஸ்வரன், 'காலம்' செல்வம் ஆகியோர் நூல் பற்றிய தம் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர். 

ஜயகரன் தனது உரையைப் பொதுப்பட வைத்து, மொழி , சிந்தனை பற்றிய தொடர்புகளை மையமாக வைத்தும் , இடையில் இளங்கோவின் கதைகளைக் குறிப்பிட்டும்  ஆற்றினார். முனைவர் மைதிலி  தொகுப்பின் அனைத்துக் கதைகளையும் வாசித்ததாகவும், ஆனால் அவற்றில் இரண்டைத்  தவிர்த்து , மிகுதிப் பத்துக் கதைகளை மையமாக வைத்தே உரையாற்றப்போவதாகவும், ஜயகரனைப்போல்  பொதுப்பட்டதாகத் தனது உரை இருக்காதென்றும், விரிவாகவே இருக்கும் என்றும்  குறிப்பிட்டுத் தன் உரையினை ஆற்றினார். 

அரசி விக்கினேஸ்வரன் , முனைவர்  மைதிலி தயாநிதி தவிர்த்த இரு கதைகளை மையமாகவே வைத்துத் தனது உரை பெரிதும் இருக்குமென்று குறிப்பிட்டுத் தன் உரையினை ஆற்றினார்.  இறுதியில் வந்த 'காலம்' செல்வம் தனக்கேயுரிய நகைச்சுவை உணர்வு ததும்பத் தன் உரையினை ஆற்றினார். அவ்வப்போது சபையோரைச் சிரித்துக் குலுங்க வைத்தார். அது மேலும் அவருக்கு உற்சாகம் தரவே மேலும் உத்வேகம் மிக்கவராக அவரது உரை தொடர்ந்தது. அவர் தனது உரையில் புதுமைப்பித்தனின் 'கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்' சிறுகதையைக் குறிப்பிட்டு, இளங்கோவின் கதைகளிலும் புதுமைப்பித்தனின் கதைகளில் தென்படும் நுட்பங்கள் சில இருப்பதாகச் சிலாகித்தார்.

Uploaded Image

நிகழ்வின் நடுவில், பாராளுமன்ற உறுப்பினர் ஜுனிதா நாதன் நூலை வெளியிட்டு வைத்ததுடன், எழுத்தாளர் இளங்கோவின் புதிய இணையத்தளத்தையும் அறுமுகம் செய்தார்.  தான் இளங்கோவின் வாசகி என்றார். கூடவே அண்மையில் நடைபெற்றப்  பாராளுமன்றத் தேர்தலில்  தன் நண்பர்களுடன் வந்து ஆதரவு தேடிய இளங்கோவுக்கு நன்றியும் தெரிவித்தார்.  தொடர்ந்து சிறப்புப் பிரதிகளை இளங்கோவின் பெற்றோர்,  எழுத்தாளர் தமிழ்நதி, சமூக, அரசியற் செயற்பாட்டாளர் யோக வளவன், எழுத்தாளர் மணற்காடர் (ராஜாஜி ராஜகோபாலன்), காலம் செல்வம்  உட்படப் பலர் பெற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து தலைமை வகித்த இலங்காதாஸ் பத்மநாதன் நூல் பற்றிய தன் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார், முடிவில் நமக்கெல்லாம் நன்கு அறிமுகமானதும், கேட்கும்போதெல்லாம் உணர்வுடன் ஒன்றி ,இழந்த மண் மீதான ஏக்கத்தை உணரவைக்கும் மலையாளத்திலிருந்து  தமிழுக்கு வந்த பாடலான 'அன்றங்கே ஒரு நாடிருந்ததே; அந் நாட்டில் ஆறிருந்ததே ஆறு நிறைய மீனிருந்ததே' பாடலை உணர்வு பூர்வமாகப் பாடினார் நிரோஜினி றொபேர்ட்.   தொடர்ந்து இளங்கோவின் நன்றி கூறலுடன் நிகழ்வு முடிவுக்கு வந்தது.

Uploaded Image


நிகழ்வின் இன்னுமொரு முக்கிய அம்சம். எழுநா இதழ்களின் வெளியீட்டுக்கு முக்கிய காரணகர்த்தாவான எழுத்தாளர்  'உரையாடல்' நடராஜா முரளிதரனுக்கு ஒரு மேசை வழங்கப்பட்டிருந்தது. எழுநா இதழ்களுடன் அவர் அமர்ந்திருந்தார்.  வழக்கமாக இவ்விதமான இலக்கிய நிகழ்வுகளில்  காலம் செல்வத்தின் வாழும் தமிழ் புத்தகக் கண்காட்சியும் இடம் பெறுவது வழக்கம்.  அவ்விதம் நடக்காததாலோ என்னவோ அவர் நிகழ்வின் முடிவில் பார்க்கிங் லொட்டில் நின்றபடி நூல்களை விற்றுக்கொண்டிருந்தார். அண்மையில் காலநதி மூலம் என் கவனத்தைக் கவர்ந்த எழுத்தாளர் யுவன் சந்திரகேசரின் , எழுத்து வெளியீடாக வெளிவந்திருந்த 'வெளியேற்றம்' நாவலின் பிரதியொன்றினையும் கூடவே வாங்கிச் சென்றேன். 

இளங்கோவின் நூலை இன்னும் வாசிக்கவில்லை. அது பற்றி உரையாற்றியவர்கள் தம் உரைகள் காரணமாக அதனை விரைவில் வாசிக்கும் ஆர்வம் தூண்டி விடப்பட்டுள்ளது. வாசிப்பேன். கருத்துகளையும் பகிர்ந்துகொள்வேன்.

நிகழ்வுக்காட்சிகளை அலெக்ஸ் வர்மா, 'தடயத்தார்' கிருபா கந்தையா ஆகியோர் எடுத்துக்கொண்டிருந்தனர்.  கிருபா கந்தையா நிகழ்வுக் காணொளியையும் எடுத்துக்கொண்டிருந்தார். நானும் சில காட்சிகளை என் அலைபேசிக்குள் அகப்படுத்தி வைத்தேன்.

***
நன்றி: வ.ந.கிரிதரன் முகநூல் பக்கம்

 

சிறுகதைத் தொகுப்பு வெளியீடு குறித்து - தமிழ்நதி

Wednesday, December 17, 2025

 

 
நேற்று (ஜூலை 19, 2025) மாலை, இளங்கோவின் சிறுகதைத் தொகுப்பாகிய 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்'  வெளியீடு ஸ்காபுரோவில் நடைபெற்றது. பா.அ.ஜெயகரன், அரசி விக்னேஸ்வரன், மைதிலி தயாநிதி, இலங்கதாஸ் பத்மநாதன், செல்வம் அருளானந்தம் ஆகியோர் நூல் குறித்து செறிவாக உரையாற்றினர்.   சிறுகதையொன்றின் ஒரு பகுதியை நிரோஜினி வாசித்தார்.  பாராளுமன்ற உறுப்பினர் யுவனிதா நாதன், நூலையும் இளங்கோவின் படைப்புகளைப் பதிவேற்றப்பட்டிருந்த இணையத்தளத்தையும் வெளியிட்டு சிறப்புரையாற்றினார். முதற் பிரதி நூலாசிரியரது பெற்றோருக்கு வழங்கப்பட்டது.
Uploaded Image

நீண்ட நாட்களுக்குப் பிறகு பல நண்பர்களையும் சந்தித்ததில் மகிழ்ச்சி.  'காலம்' செல்வத்தார், சிறுகதை நூலைக் குறித்தல்லாமல் இளங்கோவைப் பற்றியே சிரிப்பலைகளினூடே உரையாற்றிக் கொண்டிருந்தார். நான் நெடுந்தூரம் செல்லவேண்டியிருந்த்தால், இருளத் தொடங்கவும் (ஒன்பது மணிக்கு சாவதானமாக இருள்கிறது) இளங்கோவிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டுவிட்டேன். 

அதன் பிறகாவது செல்வம் அண்ணா புத்தருக்குள் வந்தாரா அறியேன். ஆனால், உரையினிடையில் என்னைப் பற்றி 'புத்தகப் பிசாசு' என்று அவர் குறிப்பிட்டதாக பிறகு கேள்விப்பட்டேன்.  

Uploaded Image

செல்லவேண்டிய பேருந்தை சில நொடி தாமதத்தால் தவறவிட்டு, நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த என்னை நண்பர் மீராபாரதி வ.க.செ யும் அவரது இணையரும் தமது காரில் ஏற்றிக்கொண்டு வந்து வீடு சேர்த்தனர். நன்றி.

மனவருத்தம் என்னவென்றால், "இனிமேல் இங்குதான் இருக்கப்போகிறேன்" என நான் கூறியதை, என்னோடு கதைத்த யாருமே நம்பவில்லை என்பதுதான். 

கேசரியும் வடையும் சுவையாக இருந்தன. கூட்டங்களுக்குப் போய் வெகுநாட்களாகிவிட்டன ஆதலால் அவற்றைச் சாப்பிட இடைவேளை விடுவார்கள் என்பதை மறந்து இடையிலேயே எடுத்துச் சாப்பிட்டுவிட்டேன். இனி கவனமாக இருக்கவேண்டும்.

கூட்டம் முடியும்வரை இருந்திருந்தால் நிரோஜினி (Nirojini Robert)  பாடுவதைக் கேட்டிருக்கலாம்.  'மிஸ்' பண்ணிவிட்டேன்.  இளங்கோவின் புத்தகத்தை விரைவில் வாசித்துவிட்டு அதுபற்றி எழுதுகிறேன்.

***

கார்காலக் குறிப்புகள் - 121

 

வ்வப்போது அரசியல் தளத்திலும்/களத்திலும் ஈடுபடும் நண்பர்களோடு உரையாடும் சந்தர்ப்பம் வாய்ப்பதுண்டு. அது எவ்வகை அரசியல் நம்பிக்கையாக இருப்பினும், அவர்களின் அரசியலை அறிக்கைகளாகவோ/ சிறு பிரசுரங்களாகவோ எழுதவேண்டுமென அவர்களை வற்புறுத்துவேன்.

ஏனெனில் அப்படி வெகுசன அரசியலில் ஈடுபாடுடையவர்கள், அந்த மக்களை நோக்கிப் பேசவேண்டியதும் அம்மக்களுக்குப் பரிட்சயமான  மொழியில் பேசவேண்டியது முக்கியமானது.  இல்லாவிட்டால் வெகுதிரள் அரசியலில் ஒரு அடி கூட முன்னே போக முடியாது.

அதுபோலவே தாம் செய்ய விரும்பும் அரசியல் பற்றிய அறிக்கையை பொதுவெளியில் வைத்து உரையாடும்போது, அதை யதார்த்த களநிலவரங்களுக்கேற்ப விரித்துக் கொண்டு செல்லவும் முடியும். கார்ல் மார்க்ஸ் 'கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை'யை எழுதியபின் அது தொடர்ந்து அவராலும் ஏங்கல்ஸாலும் பல தடவைகள் திருத்தி எழுதப்பட்டிருக்கின்றது என்பதை நாமறிவோம்.

Uploaded Image


நான் வாசிக்க வந்த காலத்தில் அ.மார்க்ஸ் உள்ளிட்ட சிலர் சேர்ந்து 90களில் எழுதிய 'தலித் அரசியல் ஆவணம்' எனக்கு முக்கியமான ஒன்றாகத் தெரிந்தது. அதை ஏற்றும், நிராகரித்தும் பல்வேறு உரையாடல்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்திருக்கின்றன. தலித் அரசியல் அந்த அறிக்கையிலிருந்து எவ்வளவோ முன்னகர்ந்தும் போய்விட்டது.  ஆனால் அந்த அறிக்கை  ஒரு முக்கிய விடயத்துக்கான தொடக்கப்புள்ளி என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.

 அதேபோன்று ஈழத்தில் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாய் அரசியல் கொதிநிலையில் இருக்கும் சூழ்நிலையில், அகிம்சை/ ஆயுதப்போராட்டம் என்று பல்வேறு அரசியல் களங்களில் பயணித்த நம்மவர்களும் நிறைய அறிக்கைகளையும், உரையாடல்களையும் செய்திருக்க வேண்டும். கடந்தகாலங்களில் இப்படி நிகழ்ந்திருக்கும் சாத்தியம் இருந்தாலும், அவற்றை நாம் விரிவாக எழுத்தில் பதிவு செய்யவோ, தொடர்ச்சியாக உரையாடவோ இல்லை என்று நினைக்கின்றேன்.

இலக்கியத்தில் எஸ்.பொ(ன்னுத்துரை) இலங்கையில் இந்திய நூல்களின் தடை வந்தபோது ஓர் அறிக்கையை விரிவாக  70களில் எழுதியிருக்கின்றார். அன்றைய அமைச்சருக்கு  இந்த அறிக்கையை 60 பக்கங்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி சமர்ப்பித்துவிட்டு அதை ஒரு நூலாக அடுத்த நாளே எஸ்.பொவின் நண்பர் எம்.ஏ.ரஹ்மான் 'அரசு' பதிப்பாக வெளியிட்டுமிருக்கின்றார். பின்னர் 2000களின் வெளிவந்த எஸ்.பொவின் 'இனி' என்ற தொகுப்பிலும் இந்த அறிக்கை இருந்தது. அதிலேயே நான் இதை வாசித்திருந்தேன்.

லங்கை கம்யூனிஸ்ட் கட்சி (சீனச் சார்பு)யின் தலைவராக இருந்த நா. சண்முகதாசன் நிறைய நூல்களையும், சிறு பிரசுரங்களையும் எழுதியிருக்கின்றார், வேறொரு தேடலுக்காக நான் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்ககால வரலாற்றை  வாசித்தபோது சண்முகதாசனின் முக்கிய நூலொன்று அகப்பட்டது.

அது 'தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலைப் பாதை எது?' என்கின்ற நூலாகும். இது வெளிவந்து கிட்டத்தட்ட 50 வருடங்களாகிவிட்டது. ஆனால் அதில் சண்முகதாசன் இதுவரை கால இலங்கையின் வரலாற்றை விரிவாகப் பேசிவிட்டு சமகாலத்திற்கு (70களுக்கு) வருகின்றார். அவரது அறிக்கையை ஏற்கவும் நிராகரிக்கவும் நாங்கள் செய்யலாம். ஆனால்  இன்று ஒரு பெரும் ஆயுதப்போராட்டம் முடிந்தபின்னும் நாம் இந்தக் காலத்திலும் இந்த அறிக்கையை முன்வைத்து உரையாட முடியுமளவுக்கு காலத்தில் அழியாமல் இருக்கின்றது.

Uploaded Image


இந்த நூல் வெளிவந்த காலத்தையும் நாம் கவனித்தாக வேண்டும். இது 1976 இல் வெளிவந்திருக்கின்றது. அதே ஆண்டில் சில மாதங்களுக்கு முன்னர்தான் தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்வைத்து தமிழர்க்கு தனிநாடே இனி ஒரே தீர்வு என்று அறைகூவல் விடுத்தனர். அந்த உணர்ச்சிவசப்பட்ட காலத்தில் மிக நிதானமான நடையில் வெளிவந்த சண்முகதாசனின் இந்த அறிக்கை முக்கியமானது. அவரின் கட்சியினரே தொடர்ந்து காலத்துக்கேற்ப இந்த அறிக்கையை விசாலித்தபடி மக்களிடையே கொண்டு சென்றிருந்தால், நாம் வேறு விதமான பாதைகளை அடுத்து வந்த தசாப்தங்களில் தேர்ந்தெடுக்க முடிந்திருக்கலாமோ தெரியாது. ஆனால் அவர்களோ கட்சி தலைமைக்கு யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்றும், மற்றொரு பிரிவினரைத் திரிபுவாதிகள் என்றும் கட்சிக்குள்ளும், வெளியிலும் சமராடிய சோகந்தான் நிகழ்ந்திருக்கின்றது.

இன்றைய அரசியல் கட்சிகள், அரசியல் ஆய்வாளர்கள் மக்களுக்கான அரசியலைச் செய்வதாகச் சொல்லும்போதோ/எழுதும்போதோ நாம் அவர்களிடம் உங்களின் அரசியல் குறித்த அறிக்கையை வெளியிடுங்கள் எனக் கேட்கலாம். உண்மையான மக்கள் நலத்தின் மீது அக்கறையுள்ளவர்கள் எவராயினும் இந்த விடயத்தில் பின்னிற்கப் போவதில்லை என்றே நினைக்கின்றேன்.

ஆனால் எம்மிடையே இப்படி வரலாற்றை விரிவாக அறிந்தவர்களோ, தமது அரசியல் கொள்கைகளைத் தெளிவாக முன்வைக்கக்கூடிய அரசியல்வாதிகளோ, களச்செயற்பாட்டாளர்களோ, ஆய்வாளர்களோ,  மிக அரிது என்பதான் நமது இன்றைய அரசியலில் மிகப்பெரும் பலவீனமும் என்பேன்.

***

(நா.சண்முகதாசனின் தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலைப் பாதை எது? என்ற நூலினை வாசிப்பதற்கான இணைப்பு )