கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பயணக்குறிப்புகள் - 05 (India)

Monday, March 23, 2015

-பரதேசியின் கனவு

கொச்சினில் Paradesi Synagogue என்கின்ற ஓரிடம் இருக்கின்றது. அங்கே பல்வேறு வரலாற்றுப்புகழ் பெற்ற இடங்களும் சம்பவங்களும் புதைந்து இருக்கின்றன. அத்துடன் cobbleகற்கள் பதிக்கப்பட்ட தெருக்களில் கலைப்படைப்புக்கள் காட்சிப்படுத்தல்களையும், விற்பனை செய்வதையும் செய்கின்றனர். நானுமொரு பரதேசி ஆனபடியால் எனக்கு அந்தத் தெருக்களில் நடந்து திரிவது பரவசமான நிலையைத் தந்துகொண்டிருந்தது. ஒருவகையில் கனடாவின் Old Montreal ஐ இது நினைவுபடுத்தியது. அதுவும் கிட்டத்தட்ட இதேமாதிரித்தான், கலரிகளால் நிரம்பியிருக்கும். ஒவ்வொரு கலரிக்கும் உள்ளே போய்விட்டு வரவே நிறைய நேரம் எடுக்கும் என்பதோடு பல்வேறு வகைப் பாணியிலான ஓவியங்களை அருகருகிலேயே கண்டு இரசிக்கவும் முடியும்.

கொச்சினில் சந்துகளில் சுவரோவியங்களை (murals)   இளைஞர்களும், யுவதிகளும் சேர்ந்து உற்சாகமாக வரைவதைப் பார்த்தேன். ஓவியக்கூடங்களில் முன்வாசலில் இருந்து மகிழ்ச்சியாக பலர் கதைத்துக்கொண்டிருந்தார்கள். செதுக்கப்பட்ட சிற்பங்கள் விற்கப்பட்ட கடைகளில் நின்ற பெண்கள் கூட ஒருவகையில் அசைகின்ற கலைப்பொருட்கள் போலவே தென்பட்டனர். புத்தர் சிலைகளை விற்றுக்கொண்டிருந்த ஒருகடையில் நின்றவரைப் பார்த்தபோது "விழிமூடிப் பிரார்த்திக்கும் அழகில்/ துளித்துளியாய்ப் புத்தரின் சாந்தத்தை / மனதிற்குள் இறக்குபவள் நீயல்லவா' என்று எப்போதோ எழுதிய கவிதையொன்றுதான் ஞாபகத்திற்கு வந்தது. அப்படி பொழுதை அழகாக்கிக்கொண்டிருந்தவர்க்கு நன்றி செலுத்தும் விதமான சிற்பமெதுவும் வாங்கமுடியவில்லையென்றாலும், இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட சவர்க்காரத்தை வாங்கி என்னை சமாதானப்படுத்திக் கொண்டேன்.

ரு கண்காட்சியறையில், பல்வேறுபட்ட கலைஞர்களை அவர்களின் சிறுவயது ஊர்கள்/வீடுகளுக்கு அழைத்துச்சென்று படமெடுத்து அவர்களின் நினைவுகளின் வரிகளோடு சில புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. அதிலெனக்கு இருவர் தமது கடந்தகால நினைவுகளைக் கூறியிருந்தது பிடித்தமாயிருந்தன.

எழுத்தாளரான தான்யா ஆபிரகாம், தான் வாழ்ந்த வீட்டைப் பற்றிச் சொல்லும்போது, 'இது ஒரு வரலாற்று வீடு. எனது முன்னோர்கள் நடந்து திரிந்த வீடு, பெற்றோர்கள் (எங்களை) நேசித்த, சகோதரகள் நடனமாடித் திரிந்த வீடு. அவர்கள் அப்படிச் செய்யும்போது, நான் ஒரு மெளனமான இடமாக இதைப் பாவித்துக்கொண்டேன். அங்கே சூரியஒளி ஊடுருவ, தூண்கள் உறைந்திருந்தன. அவற்றோடு சேர்த்து நான் கனவு கண்டேன்.. எப்படி வாழ்வது, சிரிப்பது, நேசிப்பது என்பது பற்றி....இந்தக் கணத்தைப் போல, இப்போதும் எப்போதும்' என்கின்றார்.

ஓடுகளால் வேய்ந்திருந்த அந்த நாற்சார வீட்டில், சூரிய ஒளி ஊடுருவ நிலம் பார்த்து சுருள் சுருளான தலைமயிரோடு தான்யா உட்கார்ந்திருந்த புகைப்படத்தில் நானும் ஒரு நிழலாகி அவரருகில் நிற்பது போன்ற பிரமையே எனக்கு ஏற்பட்டிருந்தது. சிலவேளை சாதாரண ஒரு புகைப்படமாய் தாண்டிப்போயிருக்கக்கூடிய சாத்தியமுள்ள இதை, தான்யாவின் வார்த்தைகள் இன்னும் ஆழமாய் ஊடுருவிச்செல்ல, எழுத்துக்கு இருக்கும் இடம் புரிந்தது.

இவ்வாறு சுவாரசியமான பலரின் புகைப்படங்கள் இருந்தன. சிறுவயதிலிருந்தே மோகினியாட்டம் ஆடுபவர், வீட்டு மரமொன்றின் கதை சொன்ன (அவர் அம்மரத்தின் மேல் ஏறி நின்றே புகைப்படம் எடுத்திருந்தார்) இன்னொருவர் என பல்வகைப்பட்டவர்களின் புகைப்படங்களும், அவை பெருக்கும் நினைவுகளும்.

என்னைக் கவர்ந்த இன்னொரு புகைப்படம் எழுத்தாளரும் கார்ட்டுனீஸ்டுமான பொனி தோமஸ் கல்லறைக்குள் நின்று எடுத்த புகைப்படம். அது என்னைக் கவர்ந்ததற்கு, அவர் மார்குவெஸ்ஸின் தீவிர இரசிகர் என்பதும் ஒரு காரணம். இதில் அவர் மார்குவெஸ்ஸின் நாவலில் நடந்தது எப்படி தனது தீவான ஊரில் நிஜமாக நடந்தது என்பது பற்றிக் கூறுகின்றார்.
மார்குவெஸ்ஸின் Of Love and Other Demons நாவலை வாசித்தவர்களுக்கு தெரியும் அதில் வரும் சிறுமியிற்கு மனப்பிறழ்வு இல்லாமலே பல்வேறு கொடும் சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு எப்படி கஷ்டப்படுத்தப்படுகின்றார் என்றும், இறுதியில் தேவாலயமொன்றில் சிகிச்சை அளிக்கப்படும்போது அங்கிருக்கும் இளம் பாதிரியார் ஒருவருக்கு இப்பிள்ளை மீது மெல்லிய காதல் வருகின்றது என்பது பற்றியும். தேவாலயத்தில் அளிக்கப்படும் 'சாத்தனை விரட்டும்' சிகிச்சையில் ஏற்கனவே பலர் இறந்திருந்தாலும், இப்பிள்ளையும் அச்சிகிச்சையின் மூலம் இறக்கவே போகின்றார் என்று வாசிக்கும் நாம் நினைக்கும்போது, சிகிச்சை நாளுக்கு முன்பாகவே அவர் தலைமயிர் அறுக்கப்பட்டு தூக்கத்தின்போது இறந்திருப்பார். அது இயற்கையான இறப்பா அல்லது கொலையா என்று சந்தேகம் வரும்படியாக மார்க்குவெஸ் எழுதியிருப்பார். ஆனால் அந்தப்பிள்ளை இறந்தபின்னும், அவருக்கு தலைமயிர் வளர்ந்துகொண்டிருப்பதாய், இன்னும் இறக்கவில்லை போன்று ஒருவித மாயயதார்த்ததில் நாவல் எழுதப்பட்டிருக்கும்.

அது போலவே பொனி தோமஸ் தனது தீவிலும் நிலக்கிழாரின் மகளொருவர் இளம்வயதில் இறந்ததாகவும், மிகுந்த தாராளமனதுடைய அந்தப் பிள்ளையின் மரணம் ஊர் மக்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகவும், பிறகு தற்செயலாக அவரின் இறந்த உடல் புதைக்கப்பட்ட இடத்தை சுத்தம் செய்வதற்காய் தோண்டியபோது, அந்தப் பிள்ளையின் உடல் பழுதாகாமல் அப்படியேயிருந்ததாகவும், அவருக்கு தலைமயிர் முளைத்திருப்பதைக் கண்டதாகவும் ஒரு 'செய்தி' தீயாக எங்கும் பரவியதாகக் கூறுகின்றார்.

தனது ஊரில் நடந்த இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட பொனி தோமஸ், பின்னர் 95ல் மார்குவெஸின் Of Love and Other Demons நாவலை வாசிக்கும்போது, கொலம்பியா என்னும் உலகின் இன்னொரு மூலையிலிருந்து மாந்தீரிக யதார்த்தம் என்ற மைதொட்டு எழுதிய மார்கவெஸ்ஸின் கதை உலகின் மறுபக்கத்தில் ஒரு தீவில் நடந்த நிகழ்வாக இருந்திருக்கின்றதே என வியக்கின்றார். எழுத்து என்பதன்  அழகும், ஆழமும் இதுவன்றோ.

இந்தப் புகைப்படங்களைப் பார்த்து மனதை விரிக்கத் தொடங்கியபோது, இவர்களுக்கெல்லாம் எப்போது விரும்பினாலும் திரும்பக்கூடிய ஓரு வீடிருக்கிறதே. எனக்கு நான் சிறுவயதுகளில் வளர்ந்த வீடு முற்றாக அழிவுற்று, மரங்கள் வீட்டின் அத்திவாரங்களுக்கு மேலாய் வளர்ந்து ஒரு ஞாபகமாக மட்டுமே எஞ்சியிருக்கின்றது என்ற சிறுதுயர் எட்டிப்பார்த்தது.

அது சில கணங்கள் மட்டுமே. நாமெல்லாம் பரதேசிகள்; பிறரின் வாழ்வில், கலையில் நமது விம்பங்களைப் பார்த்து மனம் நெகிழ்பவர்கள் அல்லவா? மேலும், அலைந்துகொண்டிருக்கும் வாழ்வென்பது எல்லோருக்கும் வாய்ப்பதுமில்லைத்தானே.

0 comments: