கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

‘வன்னி’ கிராபிக் நாவலை முன்வைத்து

Monday, June 30, 2025

 

 Vanni: A Family Struggle through the Sri Lankan Conflict  

 by Benjamin Dix & Lindsay Pollack

 

1.

வன்னி' (Vanni: A Family Struggle through the Sri Lankan Conflict) என்கின்ற கிராபிக் நாவல் ஈழத்தில் நடந்த இறுதி யுத்ததைப் பற்றிப் பேசுகின்றது. செம்பியன்பற்றில் சூனாமியால்  2004 இல் பாதிக்கப்படும் ஒரு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த அன்ரனிதான் இதில் முக்கிய பாத்திரம். அவரின் குடும்பத்தினரும், அயலவரான சுஜி/நளாயினி குடும்பத்தினரும் செம்பியன்பற்றில் இருந்து பரந்தன், கிளிநொச்சி,விசுவமடு, No Fire Zone 1, No Fire Zone 2 என்று இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து இறுதியில் முள்ளிவாய்க்கால் வரை போவதுவரை இந்த நூல் விவரிக்கின்றது.

 

இதைக் கதையாக எழுதிய எழுதிய பெஞ்சமின், வன்னிக்குள் சூனாமி பேரழிவோடு சென்று, இறுதியில் யுத்த வலயத்துள் இருந்து வெளியேற்றப்பட்ட ஐ.நாவின் பணியாளராக இருந்தவர். அரச சாரபற்ற நிறுவனங்கள் வன்னிக்குள் இருந்து அரசால் கடைசியாக வெளியேற்றப்பட்ட 2008, செப்ரெம்பர் 16, காலை 10.45 எனத் துல்லியமாகச் சொல்கிறார் பெஞ்சமின். ஏனென்றால் அவ்வாறு வெளியேற்றப்பட்ட  இறுதிப் பணியாளர்களில் ஒருவராக அவர் இருந்திருக்கின்றார்

 

பெஞ்சமின் மீண்டும்  தனது சொந்தநாடு திரும்பியபோது, போரை நேரடியாகப் பார்த்ததால் PTSD யினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்.  அந்தப் பாரத்தை ஏதோ ஒருவகையில் இறக்கிவைக்காவிட்டால், உளவியல் சிக்கலுக்குள் மூழ்கிவிடக்கூடுமென்ற அச்சத்திலே 'வன்னி'யை எழுதத் தொடங்கியிருக்கின்றார். 

 

பெஞ்சமின் கிளிநொச்சியில் இருந்து  பலவந்தமாக வெளியேற்றப்பட்டபோது, ஒரு கட்டுரையை போர் நடந்து கொண்டிருந்த அன்றைய காலத்தில் (2009) அநாமதேயமாக எழுதியிருக்கின்றார். அது அன்று தெல்ஹா (Telka) பத்திரிகையில்  'இரண்டு இராணுவங்களுக்கு இடையில்' (In between two armies) என்று தலைப்பில் பிரசுரிக்கப்பட்டுமிருந்தது.

 

பெஞ்சமின் வன்னிக்குள் நின்ற இறுதிக்காலங்களில் இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சிலிருந்து தப்ப, பதுங்குகுழிக்குள் இருந்த நாட்களில் வாசித்த பாலஸ்தீனியம் (Palestine) பற்றியதும், யூதப் படுகொலை (Maus) பற்றியதுமான கிராபிக் நாவல்களே Vanni  நாவலுக்கு உந்துசக்தியெனச் சொல்கிறார்.

 

2.

அன்ரனியின் தகப்பனும், அன்ரனின் சகோதரனும் கொழும்பிற்குச் செல்லும்போது, 1983 இனக்கொலைகள் நடக்கின்றது. அதில் அன்ரனியின் தகப்பன் கொல்லப்பட்டு, அதிஷ்டவசமாக அன்ரனியின் சகோதரனான ரஞ்சன் தப்பி ஊர் திரும்புகின்றார். எனினும் படுகொலைகளை நேரடிச் சாட்சியமாகப் பார்த்த ரஞ்சன் ஒரு விடுதலைப்புலிப் போராளியாக மாறுகின்றார்.  ரஞ்சன் விடுமுறையின்போது வீட்டுக்குத் திரும்பும்போது அவரின் பெறாமக்களான மைக்கலும், தீபாவும் அவரோடு அன்பு பாராட்டுகின்றனர். போர் தீவிரமாகும் அன்ரனியின் பக்கத்து வீட்டு சேகரும் புலிகளின் இணைகின்றார். இவர்கள் இருவரும் இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடையும்போது இராணுவத்தால் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டு, கண்கள் துணியால் கட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்படுகின்றார்கள்.

 

இவ்வாறே புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பில் பலவந்தமாகச் சேர்க்கப்பட்ட ரஞ்சனின் மனைவியின் சகோதரியான பிரியாவும், அவரது தோழியான கவிதாவும் (இவர்கள் இருவரும் புலிகளின் மருத்துவப்பிரிவில் வேலை செய்கின்றனர்) போரின் இறுதிக்கட்டத்தில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு 'காணாமற்' போகின்றனர்.

 

அன்ரனும் ரஞ்சனியும் காதலித்துத் திருமணம் செய்திருந்தாலும், வெவேறு சமூகப்பின்னணியில்  இருந்து வந்தவர்கள். ஈழநிலாவை அன்ரனின் தாயான ஈழநிலாவால் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இவ்வாறு ஈழத்தில் சமூகங்களிடையே இருந்த ஏற்றத்தாழ்வுகளும் இந்த கிராபிக் நாவலில் சுட்டிக்காட்டப்படுவது முக்கியமானது. அன்ரனுக்கும் ரஞ்சனிக்கும் மைக்கல், தீபா என்கின்ற இரு குழந்தைகள் இருக்கின்றனர். இறுதி யுத்தம் முடியும்போது இவர்கள் தமது குழந்தையான மைக்கலையும், பாட்டியான ஈரநிலாவையும் இழக்கின்றனர்

 

அன்ரனின் சகோதரரும் (ரஞ்சன்), மச்சாள் (பிரியா) புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் என்பதால், இராணுவத்தில் சரணடைந்த அன்ரனை இராணுவம் கொடுமையான சித்திரவதைகள் செய்கின்றது. ஒரு கட்டத்தில் முள்வேலி முகாமில் தங்கியிருந்த அன்ரனின் மனைவியான ரஞ்சினியும், மகள் தீபாவும் இராணுவத்துக்கு -அவர்களின் உறவினர் ஒருவரால்- இலஞ்சம் கொடுக்கப்பட்டு முகாமிலிருந்து வெளியே கொண்டு வரப்படுகின்றனர். அவ்வாறே ஒரு கட்டத்தில் மிகப்பெரும் பணம் கொடுத்து அன்ரனும் அகதி முகாமில் இருந்து வெளியில் தப்பிவருகின்றார்.

 

இவர்கள் பின்னர் கொழும்பிற்குச் சென்று, தமிழகத்துக்குத் தப்பிப் போகின்றனர். அங்கேயும் உரிய ஆவணம் இன்றி தமிழகப் பொலிஸின் கண்காணிப்பில் சிக்குகின்றனர். ஒருவழியாக அன்ரன் உறவினர் ஒருவரின் உதவியால் இங்கிலாந்துக்கு வந்து, தனது துயரக் கதையை இங்கிலாந்து குடிவரவு அதிகாரியிடம் சொல்கின்றார். இறுதியில் ரஞ்சனியும் தீபாவும் இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு வந்து அன்ரனோடு சேர்வதோடு இந்த கிராபிக் நாவல் முடிகின்றது

 

அன்ரன் இப்போது இலண்டனில் வாகனச்சாரதியாக வேலை பார்க்கின்றனர். அவர் இலங்கையைப் பூர்வீகமாக கொண்டவர் என அவரது காரில் ஏறும் பயணியொருவர் அறியும்போது, ‘இலங்கை நல்ல காலநிலையையும், அழகான கடற்கரைகளும் ஒரு நல்ல நாடு. நான் கூட விரைவில் இலங்கைக்குப் போக இருக்கின்றேன், நீ இலங்கைக்குப் போகவில்லையா என அந்தப் பயணி கேட்கின்றார். அதிலிருந்து அன்ரனின் கடந்தகாலக் கதை துயரக்கதை வாசகர்களாகிய நமக்கு எடுத்துரைக்கப்படுகின்றது

 

3.

ஈழப் போரின் கொடூரத்தைப் பதிவு செய்யவேண்டுமென சிறு காமிக்ஸ் புத்தகமாக 40 பக்கங்கள் அளவில் செய்யப் புறப்பட்ட இந்தத் திட்டம், பின்னர் கிட்டத்தட்ட 250 பக்கங்களில் கிராபிக் நாவலாக விரிந்திருக்கின்றது. இதை முன்வைத்தே பெஞ்சமின் தனது மானிடவியலுக்கான PhDயையும் செய்திருக்கின்றார். இந்த நாவலுக்காய், வரைபடக் கலைஞரான லிண்ட்சேயுடன் இலங்கைக்கு மீண்டும் திரும்ப விரும்பியிருக்கின்றார். நாட்டின் நிலைமைகள் காரணமாக, 2012ல் இவர்கள் இருவரும் பின்னர் தமிழ்நாட்டுக்குச் சென்று அங்கிருக்கும் அகதி மக்களோடும், பிறரோடும் கள ஆய்வுகளைச் செய்திருக்கின்றனர். மேலும் இங்கிலாந்திலும், சுவிஸிலும், பிரான்சிலும், கனடாவிலும் போரில் தப்பிய ஈழத்தமிழர்களை இவர்கள் இந்த நாவல் தொடர்பாய்ச் சந்தித்திருக்கின்றனர். இவர்கள் இருவரும் பாத்திரங்களாய் வருவதை, இலண்டனில் அன்ரனியின் கதையைக் கேட்கும் பக்கங்களில் நாங்கள் பார்க்க முடியும்

 

பெஞ்சமின் மீண்டும் 2017 இல் இலங்கை போய், அவர் பணியாற்றிய .நா கட்டட்டத்தை கிளிநொச்சியில் பார்க்கின்றார். போருக்கு முன்பும் பின்புமாக இருந்த வன்னியைப் பற்றி ஒரு விரிவான கட்டுரையை இந்த கிராபிக் நாவலின் பின்னிணைப்பாக பெஞ்சமின் எழுதியிருக்கின்றார். மேலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு அகதியும், தாங்கள் போருக்குள் இருந்ததைப் போன்ற பதற்றங்களோடே தமது அகதி மனுக்கோரிக்கைகள் ஏற்கப்படுமா நிராகரிக்கப்படுமா என்று இருக்கின்றார்கள் என்ற தனது ஆய்வின் அடிப்படையை வைத்துச் சொல்கின்றார். அவ்வாறு அகதிக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு தற்கொலைக்கு முயன்ற சிலரைக் கூட தான், இந்த நாவல் எழுதுவதன் பொருட்டு சந்தித்திருப்பதாகச் சொல்கின்றார்

 

மேலும் அன்ரனியைப் போன்று யுத்த்த்தால் பாதிக்கப்பட்டு வேறு நாடுகளுக்கு அகதிகளாக வந்தவர்க்கு அவர்களின் வாழ்வை மீண்டும் மீண்டும் கட்டியெழுப்புவதைத் தவிர வேறு எந்த வழிகளும் இல்லையென்கின்றார். இவர்கள், ஓர் அந்நிய கலாசாரத்தில், புதிய மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டியிருப்பதையும், அவர்களுக்கு பழக்கமற்ற அந்தந்த நாட்டு பண்பாட்டு விழுமியங்களை அறிந்து கொள்ள அவதிப்படுவது பற்றியும் பெஞ்சமின் இங்கே கவனப்படுத்துகின்றார். அன்ரனியைப் போன்றவர்கள் தமது இழந்த வீடுகளை மட்டுமல்ல, போரில் இறந்த தம் உறவுகள்/நண்பர்களின், நினைவுகளையும் தாங்கி உளவியல் சிக்கல்களில் இன்னமும் போர் முடிந்தபின்னும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களென இதில் அடையாளப்படுத்துகின்றார்

 

பிபிஸியின் இலங்கைக்கான செய்தித் தொடர்பாளரான பிரான்ஸிஸ் ஹாரிசன், ஈழப்போர் தொடர்பாக 'Still Counting the Dead' என்ற நூலை எழுதியிருந்தார். அதன் அறிமுகநிகழ்வு கனடாவில் நடந்தபோது, பிரான்ஸிஸ், ஈழப்போரின்போது நடந்த மனிதவுரிமை மீறல்கள் குறித்து வெவ்வேறு கலைவடிவங்களில் வெளிப்படுத்த முயற்சிக்கவேண்டுமெனக் கூறியிருந்தார். ஏனெனில் இந்த உலகுக்கு, நேரடிச் சாட்சிகளாய் நடந்தவைபற்றி புகைப்படங்களாகவும், காணொளிகளாகவும் அறிய நிறைய இருந்தாலும், அங்கே நடந்த படுகொலைகள் பற்றி எவரும் அக்கறைப்படுவதாக காணவில்லை. எனவே நாம் வெவ்வேறு ஊடகங்கள்/தளங்கள் மூலம் வெளிப்படுத்த கவனம் செலுத்தவேண்டுமெனக் கூறியிருந்தார்

 

அந்தவகையில் இந்த 'வன்னி' என்னும் கிராபிக்ஸ் நாவல் வித்தியாசமான முயற்சி எனலாம். இதனூடாக போருக்கு முன்பான அமைதியான வாழ்க்கை மட்டுமின்றி, இறுதிப்போரின் உக்கிரமான ஒவ்வொரு காலகட்டமும் வரைகலை ஓவியங்களாக மாற்றப்பட்டு, மறக்கப்பட முடியாத நினைவுத்தடங்களாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

 

***********

 

( நன்றி: 'எழுநா' - பங்குனி, 2025)

 

 

 

 

0 comments: