கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ரமேஷ் பிரேதனின் 'நல்லபாம்பு: நீல அணங்கின் கதை'

Friday, June 01, 2018

"பாம்பாய் வாழ்வதைவிட பாம்பால் வழிநடத்தப்படுவது கொடுமையானது. ஒரு நூறு முகம் கொண்ட ஒற்றைப் பாம்பு. பாம்புடன் வாழும் வலியை சிவனுக்குப் பிறகு செம்புலி மட்டுமே அறிவார். பாம்பை யாராலும் கொல்ல முடியாது; அதன் உயிர் அது பற்றிய கதையில் உள்ளது. கதையைக் கடவுளாலும் கொல்ல முடியாது. கடவுள் கதைக்குள் அடங்கிவிடுவதால், ஆகப்பெரியதாகக் கதையே எல்லையற்று விரிகிறது. செம்புலி நூற்றியெட்டுக் கதைகளால் ஆனவர். ஆனால், எல்லாக் கதைகளுக்குள்ளும் பாம்பு இருப்பதால் அவரால் ஒருபோதும் தனித்து வாழ இயலவில்லை."

(‘நல்லபாம்பு: நீல அணங்கின் கதை’ - ரமேஷ் பிரேதன்)

தார்த்தவாதம் என்ற செத்தபாம்பை இன்னும் சலிக்காது அடித்துக்கொண்டிருக்கும் தமிழ்ச்சூழலிலிருந்து ‘நல்லபாம்பு: நீல அணங்கின் கதை’ என்ற ரமேஷ் பிரேதனின் நாவலை வாசிப்பது என்பது எவ்வளவு அருமையான அனுபவம். யதார்த்தவாதமா, அய்யகோ வேண்டாம் என முகமெல்லாம் சுழித்து ஒதுக்கவேண்டிய மனோநிலை எனக்கில்லையாயினும், யதார்த்தவாதத்தில் மட்டும் கதைசொல்லலே அறமெனவும்/அழகியலெனவும் ஒரு வலிந்த கருத்து கடந்த சில தசாப்தகாலமாய் நம் சூழலில் நிறுவப்பட்டு மற்ற வகையான கதையாடல்களையெல்லாம் ஒதுக்கும் ஒரு புறவயமான சூழ்நிலை உருவாக்கப்பட்டிருப்பதையே சோர்வாகப் பார்க்கவேண்டியிருக்கின்றது. அத்தோடு மாய யதார்த்தமும், தொன்மங்களும் தேடுகின்றோம் என ஒரு குறிப்பிட்டோர் மொழியை இன்னுமின்னும் இயந்திரத்தனமாக்கி வாசிப்பவர்களைப் பயமுறுத்தியதும் இதற்கு வலுச்சேர்த்ததை ஒருவகையில் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

இதிகாசங்களையும், புராணங்களையும், காப்பியங்களையும் மறுவாசிப்புச் செய்வதற்காய் செம்புலி என்கின்ற ஒருவன் இராசராசன் காலத்தில் இருந்து எழுகின்றான். அந்தச் செம்புலி இன்றையகாலத்திலும் பல நூற்றாண்டுகள் தாண்டி நம்மோடு வாழ்கின்றான். அவன் சோழனின் காலத்தில் தன் மனைவியான நல்லதங்கத்தைக் கொலை செய்த கதைகள் பல்வேறு விதமாய், பல்வேறு காலங்களில் சொல்லப்படுகின்றன. நல்லதங்கம் இறந்தாலும் அவள் ஒருபோதும் செம்புலியை விட்டுப் பிரிவதில்லை. நூற்றாண்டு காலங்களாய் ஒரு பாம்பாய் செம்புலியைப் பின் தொடர்கின்றாள்; அவனின் நிம்மதியைக் குலைத்துத் தொந்தரவு செய்கின்றாள். அதுபோலவே அவரது மகன்களை மணம் செய்யும் ஜெயராணியும் கலைராணியும் கூட செம்புலியைப் பாம்புகளாய்/மனிதர்களாய்ப் பின் தொடர்கின்றார்கள்.

அவர்கள் இருவரும் ராணியாகவும், சேடிப்பெண்ணாகவும் வரலாற்றின் ஒருகாலத்தில் இருந்தவர்கள். தன் விருப்பமின்றி கவர்ந்து சென்ற மன்னனை ஜெயராணி நுட்பமாகக் கொலை செய்து, பட்டத்து இளவரசனையும் காமத்தால் வென்று அரியணையைக் கைப்பற்றுகின்றாள்.  தொடர்ச்சியில், சேடிப்பெண்ணோடு ஏற்படும் இழுபறியில் ஜெயராணி கொலை செய்யப்படுகின்றாள். சேடிப்பெண்ணும் தன் தோழியுமான கலைராணியைப் பாம்பாகி வந்து பின்னர் ஜெயராணி பழியும் தீர்க்கின்றாள்.

ன்றைய காலத்தில் அவர்களிருவரும் ஆரிய இனத்தைச் சேர்ந்த அம்பிகாவாவும், திராவிடத் தோன்றலான நல்லதங்கமாகவும் இருக்கின்றார்கள். அவர்கள் தாம் சந்தித்த ஆண்களைப் பேசுகின்றார்கள். ஆண்களை நேசிக்கின்றார்கள்/வெறுக்கின்றார்கள். வத்திக்கான் போல பெண்களுக்கென்றே ஒரு தனித்தேசம் உருவாக்கவேண்டுமென்று கனவுகாண்கின்றார்கள். அந்தக் கனவை எள்ளல் செய்து எட்டி உதைக்கவும் செய்கின்றார்கள். தங்களுக்குள் காமம் கொண்டு உருகுகின்றார்கள். ஒருத்தி இப்ராஹீம் என்கின்ற அல்ஜீரியனைக் கொண்டு தனக்கான குழந்தையைப் பெறப்போகின்றேன் என பிரான்ஸிலிருக்கும் ஸோர்போன் பல்கலைக்கழகத்திற்குப் போகின்றாள். மற்றவளோ பாண்டிச்சேரியின் கடற்கரையில் உலாவியபடியும், செம்புலியோடு உரையாடியபடியும் இருக்கின்றாள்.

இவர்கள் இருவரும் தன்னைப் பழிவாங்க வந்திருக்கும் மருமக்கள் என்று தெரிந்திருந்தும் அவர்களால் தன்னை ஒன்றும் செய்யமுடியாதென்று சிவனுக்கு அடுத்து எப்போது உயிர்த்திருக்கும் செம்புலி நம்புகின்றார். செம்புலியினூடாக பாம்புகளின் கதைகள் பெருகியபடியே இருக்கின்றன. அந்தக் கதைகளை, தன் முன்னால் மனிதர்கள் இருக்கும்போது மட்டுமில்லை, மனிதர்கள் இல்லாதபோதும் செம்புலி சொல்லிக்கொண்டே இருக்கின்றார். அதேபோல ஆயிரம் ஆண்டுகள் உயிரோடு இருக்கும் இரகசியத்தை இந்தப் பெண்களுக்குச் செம்புலி சொல்லத் தொடங்கினாலும், பிறகு இடைநடுவில் நிறுத்திவிடுகின்றார். திருமூலரின் கூடுவிட்டுப் பாய்தலைப் போலத்தான் உயிரைச் சுருக்கி வெவ்வேறு உடல்களிற்குள் பாய்கின்றார் என இந்தப் பெண்கள் சந்தேகிக்கவும் செய்கின்றனர்.

‘நீல அணங்கின் கதை’யில் வள்ளலார் வருகின்றார், சிலப்பதிகாரத்தின் கோவலனும், கண்ணகியும், மாதவியும், மணிமேகலையும் எதிர் பாலின அடையாளங்களை எடுக்கின்றனர். கண்ணனும், மாதவனும் பெண்மை கலந்த அறம் சார்ந்த ஆண்களென கோமுகி மனம் நிறைந்து சொல்கின்றாள். சிவனே நீக்கமற இந்தப் பிரதியில் நிற்கின்றார் என்றாலும், புத்தரும் பிரதியினூடு ஊடாடிக்கொண்டே இருக்கின்றார். இவ்வாறு எத்தனையோ விதமான தொன்மக்கதைகள் இதனூடாக மீள்வாசிப்புச் செய்யப்படுகின்றன. அல்ஜீரியனான இப்ராஹீமின் கோட்பாடுகள் எல்லாம் சிரிக்க மட்டுமல்ல எப்படிப் பெருங்கதையாடல்களை எள்ளல்கள் செய்யலாம் என்பதற்கும் அவை அருமையான உதாரணங்கள்.

ந்த நாவல் முழுதுமே புனிதம் எனக் கற்பிக்கப்பட்ட எல்லாவற்றையும் குறுக்கீடு செய்தபடி இருக்கின்றது. ஆரிய திராவிட மோதல்களுக்கு முன் அழிந்துபோன நாகர் இனம், தூய ஆரிய/வெள்ளை இனத்தை கலப்பினமாக்க முயற்சி செய்யும் வழிகளெல்லாம் வாசிப்பதற்குச் சுவாரசியமானது. புரட்சிக்காரர்கள் மீது அக்கறையை இப்பிரதி கொண்டாலும், அவர்களையும்  ஒருவகையில் எள்ளல் செய்கின்றது. திராவிட இனம் இன்று முன்னிறுத்தும் பெரியாரும் கூட அதிலிருந்து விதிவிலக்காக நிற்கமுடியாதே இங்கே இருக்கின்றார்,

ஒரு எளிய வாசிப்பிற்காய் ‘புனிதங்களைக் கட்டவிழ்த்தல்’ என்று இந்த நாவலை நாம் முன்வைக்கலாம். புனிதமோ, தூயதோ எல்லாமே கட்டமைக்கப்பட்டவையே. இவற்றின் நீட்சியிலிருந்துதான் பாஸிசம் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் வரலாற்றின் ஒவ்வொருகட்டத்திலும் முளைத்தெழும்பியிருக்கின்றது. இதே புனிதம்தான் தங்களை உயர்நிலையாக்க பிறரை மற்றவராக்கியது/அந்நியராக்கியது. இந்த தூய்மைதான் மனிதர்களை இனங்களாகவும், நிறங்களாகவும், சாதிகளாகவும் பிரித்து தங்களுக்குள்ளேயே அடிபடவும், பிளவுபடவும் தொடர்ந்து தூண்டிக்கொண்டிருக்கின்றன.

“நான் ஒரு சாமான்யன். ராசராசனோ பேரரசன். என்னைப் பற்றிய செய்திகளைக் கதைகள் என்றால் பேரரசனைப் பற்றிய செய்திகளை வரலாறு என்பீர்கள். வரலாறு யாரையும் விடுதலை செய்யாது; வரலாற்றிலிருந்து வெளியேறுவதில்தான் விடுதலை வாய்க்கிறது. நான் வரலாற்றிலிருந்து வெளியேறியவன். என்னைப் பற்றிய கதைகளாலானவன். கதைகள் என்றென்றைக்குமான எதிர் வரலாறைக் கொண்டிருக்கும். நான் எது சொன்னாலும் அது புனைவுதான். உண்மையைப் பொய்யென்றாக்கினால் அதன் பெயர் புனைவு. பேரரசன் ஒரு பொய், நான் ஒரு புனைவு. உண்மை என்று ஒன்றுமில்லை."

ஆம், அதுபோலவே நமக்குக் கற்பிக்கப்பட்ட/கற்றுக்கொண்டிருக்கும் வரலாறுகளும், பின்பற்றிக்கொண்டிருக்கும் புனிதங்களும் கூட ஒருவகையில் புனைவுகளே. அதைக் கேள்வி கேட்டு குறுக்கிடுகின்ற ஒரு பனுவலாக இந்த நல்லபாம்பு என்கின்ற நீல அணங்கு இருப்பதால் அது இன்றைய சூழலில் மிக முக்கியமாகின்றது.
............................................................

(நன்றி: 'அம்ருதா' - சித்திரை, 2018)

'நல்லபாம்பு: நீல அணங்கின் கதை' யை இங்கே வாசிக்கலாம்:  https://rameshpredan.blogspot.com/2018/01/nallabambutale-of-blue-goddess-novel.html

0 comments: