கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வாரணாசி மற்றும் சகோதரிகள் கதைகள் பற்றி..

Saturday, June 23, 2018

விகடனில் வந்த நரனின் 'வாரணாசி' கதையை வாசித்தபோது, ஏன் விகடனில் எழுதும்போது, வெளியில் நல்லா எழுதுபவர்களெல்லாம் தேய்வழக்காக அங்கே கதை எழுதுகின்றார்கள் என்று -  முன்னர் குறிப்பிட்ட சலிப்பான குரலே- எனக்குள் ஓடிக்கொண்டிருந்தது. நரனின் கதை பற்றி போகன் சங்கர் எழுதியதில் உடன்பாடிருந்தாலும், வேறொரு இடத்தில் இன்னொரு குழு சுரேஷ் பிரதீப், கே.என்.செந்தில் போன்றவர்கள் போகனைப்போல உரிய விமர்சனத்தை வைத்திருக்கலாமே தவிர,  இந்தளவிற்கு நரனை அவர்கள் சீண்டியிருக்கத் தேவையில்லை எனவே நினைத்தேன்.

கே.என்.செந்தில் போல காலச்சுவடு குழுவிற்குள்ளோ அல்லது சுரேஷ் பிரதீப், கார்த்திக் பாலசுப்பிரமணியம்(?) போன்று விஷ்ணுபுரக் கூட்டத்திற்குள்ளோ நின்று துதிபாடாமல் (அல்லது நமக்கு நாமே துணையென மாறி மாறி தங்களுக்குள்ளேயே எழுத்தில் கொஞ்சம் விமர்சிக்கின்றமாதிரி பாராட்டு மழை பொழியாது) நரன்  எந்தக் குழுவிற்குள்ளும் தன்னை அடையாளப்படுத்தவர் என்று அவர் மீது எனக்குத் தனிப்பட்டு ஒருவித மதிப்பிருக்கின்றது.

சரி, நரனை 'ஓட்டிய' மற்றக்குழுவிடந்தான் என்ன இருக்கின்றதென இப்போது கே.என்.செந்திலின் நெடுங்கதையான  'சகோதரிகளை' வாசித்தால், இப்படி எழுதிக்கொண்டா நரனை 'கலாய்த்தார்கள்' என வியப்புத்தான் வந்தது (கே.என்.செந்திலின் 'அரூப நெருப்பு' மற்றும் 'இரவுக்காட்சி' ஆகிய இரண்டு தொகுப்புக்களையும் ஏற்கனவே வாசித்திருக்கின்றேன்.  ஒரு சில கதைகள் நன்றாக வந்திருந்தாலும், அவை தமிழில்  அதிகம் கவனிக்கத்தக்க தொகுப்புக்களாக என் வாசிப்பில் இல்லை என்பதையும் இங்கே கூறவிழைகின்றேன்).

ந்த 'சகோதரிகள்' கதை ஒரே 'அழுவாச்சிக் காவியமாக' அல்லவா இருக்கின்றது. அதுவும் முதலிரு பகுதிகளிலும்  கதையில் வரும் எல்லாப் பாத்திரங்களையும் அறிமுகப்படுத்த, எனக்கு யார் யார், யாருக்கு யார் உறவு/தொடர்பு என்று அறியவே தலைச்சுற்றல்தான் வந்தது (நெடுங்கதைதானே எழுதுகின்றார், ரஷ்ய பேரிலக்கியம் படைக்கவில்லையே?).  சரி இடிக்கும் தலையை கதையில் வரும் கைலாசம் போலவோ அல்லது விஸ்வம் போல  'வெறியில்லாது நிதானமாய்'  வாசித்தாலும், இந்தக் கதையில் நிறைய 'அங்காடித்தெரு'வும், கொஞ்சம் 'காதலும்' கலந்தல்லவா இருக்கின்றது என்றுதான் மனதிற்குட்பட்டது. ஒரு கதை, நமக்கு கதை போலல்லாது சினிமாப்படங்களைத்தான் ஞாபகப்படுத்துகின்றதென்றால், அந்தக் கதையின் வீரியம் பற்றிச் சொல்லவே தேவையில்லை.

நம் சூழலில் இந்த யதார்த்தப்பாணியில் கதைகள் சொல்கிறோம் என ஏன் எங்களைத் தாங்கள் எழுதும் கதாபாத்திரங்களின் கண்ணீரை விட அதிகம் அழவைக்கின்றார்கள் என்று தெரியவில்லை. சோகத்தைப் பிழி பிழியென்று பிழிந்து நமக்குள் கொஞ்ச நஞ்சமேனும் மிச்சமிருக்கும் மனிதாபிமானத்தை மட்டுமில்லை, வாசிப்பதில் இருக்கும் ஆர்வத்தையும் வாரிச்சுருட்டிக்கொண்டு சென்றுவிடுகின்றார்கள்.
இப்போது ரமேஷ் பிரேதனின் 'ஐந்தவித்தானை' வாசித்துக்கொண்டிருக்கின்றேன். ரமேஷ் தனிப்பட்ட வாழ்வில் படுகின்ற கஷ்டங்களை நாமறிவோம். ஆனால் அவர் கதைகளில் அதையா சொல்லிக் கொண்டிருக்கின்றார். தேவகியும் மாதவனும் சந்திக்கும்  2ம் பாகத்தை வாசித்தால் நமக்கு அந்த எழுத்தின் மீது அப்படியொரு வாஞ்சையல்லவா மேலேறித் ததும்பிக்கொண்டிருக்கும்.

இதற்குச் சமாந்திரமாக சினுவா ஆச்சுபேயின் Things Fall Apart ஐ இன்னொரு முறை வாசித்தும் கொண்டிருக்கின்றேன். அதில் முக்கியபாத்திரமான Okonkwo ஒரு கொலைக்காக தங்களின் tribeற்குத் தரப்பட்ட தானப்பட்ட ஒரு பதின்மப் பையனை, 3 ஆண்டுகள் தனது மகனைப் போல வளர்த்துவிட்டு, காலம் வந்துவிட்டதென பூசாரி சொன்னவுடன் காட்டுக்குள் கொண்டு ஊரவருடன் சேர்ந்து அந்தப் பதின்மனைக் கொல்லும்போது,  அவன் அதை நம்பமுடியாமல் 'அப்பா என்னைக் கொல்கின்றார்கள்' என அடைக்கலந்தேடி வரும்போது  Okonkwo தன் பலவீனத்தைக் காட்டக்கூடாதென்று தனது பாசம் அனைத்தையும் ஒதுக்கிவைத்து அவனுக்கு ஒரு வெட்டுப்போட்டு கொல்வாரே, அந்தக் கணத்தில் நாம் உறைந்தல்லவா போய்விடுகின்றோம். அந்தக் குற்றவுணர்வுதானே நாவல் முழுவதும் ஊடுபாவியபடி வந்தபடியே இருக்கின்றது.

சோகமான நிகழ்வு, யதார்த்தமான கதை சொல்லல் என கே.என்.செந்தில் பயன்படுத்தும் அதே பாணி நடை என்றாலும், ஏன் சினுவா ஆச்சுபே மலையொன்றில் நின்று விகசிக்கின்றார் என்று யோசிக்காதவரையில், இப்படித்தான் அழுவாச்சி காவியம்' சொல்கின்றோம் என்று வாசகருக்குள் இருக்கும் ஒரு துளி கண்ணீரையும் வற்றச்செய்யவேண்டிய அபாயம் வந்துவிடும். சரி இவ்வளவிற்குக் கூடப் போகவேண்டாம், அவரது குழுவை, அவரது பள்ளியைச் சேர்ந்த ஜே.ஜே.சிலகுறிப்புகளிலிருந்து கூட எவ்வளவையோ கற்றுக்கொள்ளலாமே.

'வாராணசி, 'இரு சகோதரிகள்' போன்றவற்றை வாசிக்கும்போது, இந்த மாத தடம், அம்ருதா, காலச்சுவடு போன்றவற்றில் வந்த ஈழ/புலம்பெயர்ந்தவர்களின் கதை எவ்வளவோ பரவாயில்லைப் போலத் தோன்றுகின்றது.

(Jun 05, 2018)

0 comments: