கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஒரு சைக்கிள் பயணமும், துணைவந்த நிலவும்

Sunday, June 03, 2018

நேற்று சைக்கிளில்  இதுவரை போகாத பாதையொன்றைத் தேர்ந்தெடுத்தபோது, வழியில் ஒரு மான் பயமின்றி நிற்பதைக் கண்டபோது வியப்பாயிருந்தது. இன்று  உடலில் சாம்பல் புள்ளிகள் கொண்ட முயல்குட்டியொன்று சென்ற வழியில் சுழித்தோடியது, வரவர 'இயற்கை'யிற்கு என்மீது பாசம் ஏதோ ஒருவகையில் கூடிவிட்டதென்பதில் சிறு சந்தோசம் எட்டிப் பார்த்தது.

ஒளி குறைந்து இருள் கூடிக்கொண்டு போன தருணத்தில் நிலவு அடர்ந்தமரங்களுக்கிடையில் எழுந்த காட்சி அற்புதமானது. இன்றைய பெளர்ணமியை எப்படியேனும் படம்பிடித்துவிடவேண்டுமென வீடு வந்து பார்த்தபோது வானில் மிக மேலேறி சிறுவட்டமாய் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது. அழகான காட்சிகளோ/அனுபவங்களோ மீண்டும் நிகழ்வதில்லை என்பதைப் போல அந்த 'நிலவு' அந்தத் தருணத்துக்குரியது என மகிழ்ச்சி கொள்ளவேண்டியதுதான் .

இப்படி 'தவறவிட்ட' நிலவை நினைத்துக்கொண்டு வந்தபோது அறையில் உடனே கண்ணுக்குப் புலப்பட்டது எம்.டி.எம்மின் 'நிலவொளி எனும் இரகசிய துணை' என்ற 'கட்டுரைகளும் கட்டுரைகள் போலச் சிலவும்' என்கின்ற தொகுப்பு. இந்நூலை எத்தனை முறை இதுவரை வாசித்திருக்கின்றேன் என்பதற்கப்பால்,  வேறு எதையாவது வாசிக்கும்போது சோர்வு வரும்போது, சட்டென்று இந்நூலில் ஏதாவது ஒரு பக்கத்தைப் புரட்டி வாசிக்கத் தொடங்கிவிடுவேன். அந்தளவிற்கு எனக்கு நெருக்கமான ஒரு தொகுப்பு.

வாசித்தவை book shelf ற்குள் போய்க்கொண்டிருப்பதைப் போல, இது இன்னும் அடியில் போகாமல் என் பக்கத்திலேயே இருப்பதற்கு, இது எண்ணற்ற திசைகளில் விரிக்கும் சிறகுகள் மட்டுமல்ல, சிலவற்றை ஒவ்வொருமுறை வாசிக்கும்போதும் திறந்துவிடுகின்ற புதிய ஊற்றுக்களும் ஒரு காரணம்.

நிலவைப் பற்றி அல்லவா பேசிக்கொண்டிருந்தேன். இது எம்.டி.எம்மின் 'நிலவொளி எனும் இரகசிய துணை'யில் இருந்து...

"இன்மை என்பது வெறுமை அல்ல; அது புத்தனின் புன்னகை போல ஆசையோ துக்கமோ மகிழ்ச்சியோ இல்லாத சாந்தம். அனைத்தும் இயக்கத்தில் இருக்கின்றன; அனைத்துமே இயக்கமற்றும் இருக்கின்றன என அறிவது. இன்மையை உணர்தலை என் கனவுகளின் வழி மட்டுமே நான் சொல்ல முடியும் என்று நான் நினைப்பதுண்டு.
...............
...............
உண்மையில்  இன்மையின் இருப்பினை (sensing the presence of emptiness) உணரும் தருணங்களை நீட்ஷேயும் பௌத்த கவிகளும் மட்டுமேதான் அதிகமும் எழுதியிருக்கிறார்கள். நீட்ஷேயும் பௌத்த கவிகளுமே இன்மையை உணரும் கணத்தில் துணை நிற்பது நிலவொளியே என்று எழுதியிருப்பதும் இன்னொரு ஆச்சரியகரமான ஒற்றுமையாகும். ஆனால் நீட்ஷேக்கும் பௌத்த கவிகளுக்கும் இடையில் இன்மையை அறுதி உண்மையாக உணர்வதில் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. 
இன்மையை உணரும் தருணம் நீட்ஷேக்கு பௌத்த கவிகளின் அனுபவம் போல அமைதியானதாக இருப்பதில்லை; கொந்தளிப்பின் உச்சகட்டங்களில் அதுவும் ஒன்று. துணையாக ஒளிரும் நிலவு பௌத்த கவிகளுக்குத் தரும் ஆசுவாசத்தை நீட்ஷேக்குத் தருவதில்லை" 

இதனோடு ஓஷோ நிலவொளி பற்றியும் நீட்ஷே குறித்தும் கூறியவற்றையும் நீட்சித்து வைத்துப் பார்க்க விரும்புகின்றேன்.

ஆம், இன்மை என்பது வெறுமை அல்ல. ஆனால் எனக்கு இன்னமும் -பெளத்த துறவிகளுக்கு வாய்ப்பதைப் போன்ற- சாந்தம் கிடைத்ததில்லை. பல தடவைகள் நீட்ஷேவைப் போல கொந்தளிப்பின் தளும்பல் நிலைகளையே சென்றடைந்திருக்கின்றேன்.

என்றாலும் என்ன....

'நிலவொளி என்னும் இரகசிய துணை' யை ஏதோ ஒருவகையில் இன்று உணரவும் அது குறித்து  யோசிக்கவும் முடிந்திருக்கின்றதே.
இப்போதையிற்கு அது போதும்.

(Jun 02, 2015)

0 comments: