கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஆனி மாத அம்ருதா, காலச்சுவடு, தடத்தில் வந்த மூன்று சிறுகதைகள் குறித்து

Thursday, June 21, 2018

டத்தில் வந்திருக்கும் யதார்த்தனின் 'வாப்பான்ர கொக்கான் கல்லுகள்' ஒரு முஸ்லிம் பெண்ணின் குரலில் கதையைச் சொல்கின்றது. கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற ஒரு பெண், அவளின் வாப்பா/அவள் சந்திக்கும் கிளியண்ணன் போன்றோரின் மீதான நேசமும், பிறகெப்படி அவரது வாழ்வு மூடப்பட்டுக்கொண்டு போகின்றது என்பதையும், இறுதியில் ஒரு சிறுநம்பிக்கையை கொக்கான் கல்லின் மூலம் இன்னொரு தமிழ்ப் பெண்ணுக்கு விதைக்கின்றார் என்பதையும் - ஒரு எளிய சுருக்கமாக வைத்துக்கொள்ளலாம். எங்களுக்கு அடுத்த தலைமுறையில் பரவலான வாசிப்பும், எழுதுதலில் மொழி வசமாகியவர்களும் என நான் நினைக்கின்றவர்களில் அனோஜனும், யதார்த்தனும் முக்கியமானவர்கள் என்று அவர்களின் வெளிவந்த சிறுகதைத் தொகுப்புக்களை முன்வைத்துச் சொல்வேன்.

'மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம்' என்ற தொகுப்பில் அருமையான சில கதைகளை எழுதிய யதார்த்தனின் இந்தக் கதை சாதாரணமானது என்பேன். இந்தக் கதையில் அலுப்பேயில்லாது வாசிக்கும் மொழி வாய்த்தாலும், அவர் தேர்ந்தெடுத்த கதை சொல்லல் முறை
வியாக்கியானத்திற்குட்பட்டது. பின் நவீனத்துவத்தில் நிறையப் பேசப்பட்டுவிட்ட சிக்கலையே இங்கேயே குறிப்பிடவேண்டும்.

அதாவது நீங்களில்லாத மற்றதை உங்களின் குரலில் எடுத்துப் பேசுவதில் நிறைய அவதானமாக இருக்கவேண்டும். இன்னும் குறிப்பாகச் சொல்வதென்றால் ஒரு கதைசொல்லி தானில்லாது, தான் அடையாளப்படுத்த முடியாத ஒரு விடயத்தை வெளியில் இருந்து சொல்வதே நியாயமாகும். இங்கே ஒரு முஸ்லிம் பெண்ணின் குரலில் கதை சொல்கின்றேன் என்று உம்மா, வாப்பா என்று பாத்திரங்களுக்குப் 'பெயரிட்டவுடன்' அது முஸ்லிம் பெண்ணின் கதையாகிவிடும் என்று வாசகரை நம்பச் செய்யமுடியாது. மேலும், உதாரணத்திற்கு இந்தக்கதையில் முஸ்லிம் பெண்ணின் குரலில் அக்கா, தங்கை என்றெல்லாம் குறிப்பிடப்படுகின்றது. இப்படியெல்லாம் அவர்கள் நம்மைப்போலப் பாவிப்பதில்லை.

இன்னுஞ்சொல்லவேண்டுமென்றால் அக்கா, அண்ணா போன்றவற்றுக்குக்கூட வெவ்வேறு பிரதேசங்களுக்கு என் குறைந்த அறிதலில் வெவ்வேறு பெயரிடுதல்கள் இருக்கின்றன (நானா, காக்கா). அதேபோல் இந்தக் கதையில் வரும் உரையாடல் ஒரு அசல் தமிழர் கதைப்பது போலிருக்கின்றதே தவிர, ஒரு முஸ்லிமின் பேச்சு வழக்கைத் துழாவிப்பார்த்தபோதும் கிடைக்கவில்லை. இதே சிக்கலை நான் யதார்த்தனின் தொகுப்பிலும் கண்டிருக்கின்றேன். அங்கே பெண்ணின் குரலில் சொல்லப்பட்ட கதைகளில் கூட ஆண்களின் குரல்களே ஒலிக்கின்ற ஆபத்து இருக்கின்றது. ஆக இப்படி நாம் பிறரை claim செய்யாமல் இயன்றளவு நமக்குரிய அசல் குரலில் இருந்து அவர்களின் கதைகளைக் கூறுவதே அவர்களுக்கு மட்டுமல்ல, எழுதும் கதைகளுக்கும் செய்யும் நியாயமாக இருக்கும். இந்த விடயத்தை யதார்த்தன் இனிவரும் காலங்களில் கவனங்கொள்ளவேண்டும்.


காலச்சுவடில் வந்த ஜே.கே.யின் 'சமாதானத்தின் கதை'யைப் போல நம் சூழலில் நிறைய எழுதப்பட்டிருக்கின்றன. சமாதானம் என்ற பெயர் வந்ததைப் பூடகமாய்ச் சொல்வதற்கே அவர் நிறையப் பகுதிகளை இங்கே செலவழித்திருக்கின்றார். இப்படிப் பட்டப்பெயர்களைப் பூடகமாகப் பலர், தமது கதைகளில் சிறப்பாக எழுதியிருக்கின்றனர். அண்மையில் வாசித்ததில் உடனே நினைவுக்கு வருவது யதார்த்தனின் கதையான 'இலங்கைப்பூச்சி'.

மேலும் 'சமாதானதின் கதை' ஏற்கனவே சொல்லப்பட்டக் கதை என்றாலும் அதிலிருந்து வெளிவந்து வாசகரை வசீகரிக்கக்கூடிய எந்தத் தெறிப்பும் இதில் இல்லை என்பதுதான் பலவீனம். ஜே.கே.யின் அபுனைவுகளில் எனக்கு இருக்கும் ஈர்ப்பைப்போல, அவரது புனைவுகளில் வாசித்தளவில் பெரிதும் இருந்ததில்லை.

அவர் கொஞ்சம் செவிமடுக்கக்கூடியவர் என்றால், அவர் ஒன்று ஜனரஞ்சகமான எழுத்துக்கு (அதில் எந்தத் தவறுமில்லை) முற்றாக நகரவேண்டும் இல்லாவிட்டால் அதன் எதிர்ப்புறத்துக்கு நகரவேண்டும். இரண்டுக்கும் இடையில் அல்லாடும் நிலைமையே அவரது கதைகளில் பொதுவாகக் கண்டுகொண்டிருக்கின்றேன். அது சிக்கலானது. ஒன்றின் கரையின் நின்றுகொண்டு விருப்பமெனில் இன்னொரு கரைக்கு நகரலாம். இல்லை எனக்கு இரண்டு பக்கமும் வேண்டுமென்றால் நாணயம் போல கதைகளில் ஒரு முழுமை ஒருபோதும் வந்துவிடாது என ஒரு வாசகராக அவருக்குச் சொல்லவிரும்புகின்றேன்.


வாசித்த நம்மவர் இருவரின் கதைகளைத்தான் அதிகம் சிலாகித்துச் சொல்லமுடியவில்லை என்றால், அம்ருதாவில் வந்த ருவண் எம். ஜயதுங்கவின் 'வாக்குமூலம்' கதை என்னளவில் முக்கியமானதாக இருந்தது. தமிழில் எம்.ரிஷான் ஷெரிப் அழகாக மொழிபெயர்த்திருக்கின்றார் (வகுப்புவாதம் என்று சில இடங்களில் வருகின்றது அதை வர்க்கமாகவோ அல்லது வர்க்கப்புரட்சியாகவோ தமிழாக்கியிருக்கலாம். இடதுசாரிகள் வகுப்புவாதம் மூலம் ஆட்சியைப் பிடிப்பது என்று சொல்வதில்லை). மனநல மருத்துவரிடம் ஆலோசனைக்குச் செல்லும் ஒருவரின் 'வாக்குமூலமே' இந்தக்கதை.

பல்கலைக்கழகக் காலத்தில் புரட்சியின் மீது கனவு கண்டு அதற்காய் பிறகு கொடும் சித்திரவதைகளை ஒருவர் அனுபவிக்கின்றார். எவரையும் தான் கொலைசெய்யவில்லை என்றாலும், சில 'துரோகி'களைக் கொலை செய்யத்தான் அனுமதித்தாகவும் இவர் மருத்துவரிடம் சொல்கின்றார். இரத்தம், இரத்தத்திற்கு எதிரான இரத்தம் அது ஒரு கொடூர ருசியாகப் போன கடந்தகாலம் வாக்குமூலத்தில் கடந்துபோகின்றது. இறுதியில் இவரை இராணுவம் பிடித்துக் கொடும் சித்திரவதை செய்கின்றது. தோழர்கள் ரயர் போட்டு எரிக்கப்படுகின்றனர். கொடும் வேதனையிலும் தனது தோழர்களைக் காட்டிக்கொடுக்கக்கூடாது என்று உறுதியாக இருக்கின்றார்.

ஒருமுறைதான் சாவு வரும் என்று சித்திரவதை செய்யும் அதிகாரியின் முகத்திற்கெதிராக வைராக்கியமாகக் கூறும் இவரைச் சுட்டுக்கொல்ல கட்டளையிடப்படுகின்றது. கொல்லப்படக் கொண்டுபோகும் இவர் இறுதிநேரத்தில் காப்பாற்றப்படுகின்றார். ஆனால் சாவைவிட இன்னொரு அதிர்ச்சி வருகின்றது. இவர் மிகப்பெரும் தோழராக, தங்களின் சேகுவேரா போன்ற தளபதியாக நினைத்த தோழர் இப்போது இராணுவ உடையோடு அங்கே வருகின்றார். அவரால் இவர் கொலை செய்யப்படுவதிலிருந்து தப்பினாலும், அவர் எதிரணியில் இருப்பதை இவரால் தாங்க முடியாதிருக்கின்றது. அந்தத் 'தோழரோ' எல்லாம் முடிந்துவிட்டது, அனைத்து வாக்குமூலங்களை'யும் கொடுத்துவிடுங்கள் என்கின்றார். 'தோழர்' மீது பெரும் கோபம் வந்தாலும், இறுதியில் தோழரைப் போல தனது தோழர்கள் ஒவ்வொருவரின் இரகசிய இடங்களைச் சொல்லி, இவரும் ஒரே படகில் ஏறிவிடுகின்றார். அதிசயமாகப் பிறகு இந்தக்கதைசொல்லியை சிறையிலிருந்தும் விடுதலை செய்துவிடுகின்றனர்.

ஒரளவு இயல்புநிலைக்கு வந்தபின், இவர் சிவப்பு நிறத்திலிருந்து புத்தமதத்திற்குப் போகின்றார். இலங்கையில் பெளத்தத்தின் ஊடே அரசர்கள் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கின்றார்கள் எனச் சமாதானம் சொல்லியபடி ஓர் இனவாதியாக இவர் மாறிவிடுகின்றார். பிற மதங்கள் மீது, பிற இனங்கள் மீது கடும் காழ்ப்புணர்வைக் கொட்டுகின்றார். ஒருகாலத்தில் தான் தலைமறைவாக இருக்க உதவிய தேவாலயத்தைக் கூட ஒரு கெட்டகனவாக மறந்துவிடத்துடிக்கின்றார் என்றளவிற்கு அவருக்குள் வெறுப்புணர்வு வந்துவிடுகின்றது. இந்த வெறுப்பும், குழப்பங்களும் அவரை இப்போது ஒரு மனநல மருத்துவரை நோக்கிச் செல்ல வைக்கின்றது என்பதோடு இந்தக் கதை முடிகின்றது.

இலங்கையில்  வெவ்வேறு இரு காலப்பகுதியில் புரட்சிகளைச் செய்ய முயன்ற புரட்சிகர இயக்கம்,  இன்று ஜே.வி.பி என்கின்ற இனவாதக்கட்சியாக மாறியிருப்பதை நாம் யதார்த்தத்தில் காணமுடியும். மேலும் ஒருகாலத்தில் புரட்சியின் மீதும், மார்க்ஸிசத்தின் மீதும் நம்பிக்கை கொண்ட பல சிங்கள இளைஞர்கள் பலர் சிங்கள பேரினவாத அரசின் இருக்கைகளை நிரப்பிக்கொண்டிருக்கவில்லையா? அத்தோடு இந்தக்கதையை நமது இயக்கங்களோடு கூட ஒப்பிட்டுப் பார்ப்பதுகூடச் சுவாரசியமான ஒன்று.

நாம் ஒடுக்கப்படுகின்றோம் என்று போராடப்புறப்பட்ட சிலர் இன்று சிங்களப் பெளத்த பேரினவாத்தைத்தூக்கிக்கொண்டும், இன்னொருபுறத்தில் வேறுசிலர் தீவிரத் தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டு பிற இனங்கள் மீது வெறுப்புணர்வை இன்னும் வளர்த்துக்கொண்டும் அல்லவா இருக்கின்றார்கள். சிங்களவர்க்கு மட்டுமில்லை நம் எல்லோருக்கும் பொருந்தக்கூடிய கதை. ருவண்.எம்.ஜயதிலகவின் வேறு சில கதைகளையும் ஏற்கனவே (ரிஷான் ஷெரிப் தமிழாக்கியிருக்கவேண்டும்) வாசித்ததாய் நினைவு. இப்போது கனடாவில் வசிக்கும் ஜயதிலக ஒருகாலத்தில் இராணுவத்தின் மனநலப்பிரிவில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

(ஆனி 03, 2018)

0 comments: