கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வாழை - நடன்ன சம்பவம் (மலையாளம்)

Monday, September 30, 2024

 வாழை


ஒரு திரைப்படம் அது முடிந்தபின்னும் உறைந்தநிலையில் சில நிமிடங்கள் எதுவும் செய்ய முடியாமல் உங்களை இருக்கையில் இருக்கச் செய்கின்றது. இத்தனைக்கும் அத்திரைப்படத்தின் கதையை  ஏற்கனவே ஒரளவுக்கு அறிந்திருக்கின்றீர்கள். ஆனால் அதைத்தாண்டியும் ஒருவரின் autobiography நம் ஆழுள்ளம் வரை தீண்டுகின்றது. ஒரு சிறுவன் வளர்ந்து ஆடவனாகவோ அல்லது வயதுக்கு வரும் (coming of age) திரைப்படமாக அல்லாது, ஒரு சிறுவனின் வாழ்வில் நடந்த முக்கிய சம்பவம் ஒன்றோடு ஒரு திரைப்படத்தை முடியச் செய்வதற்குத் துணிச்சல் வேண்டும். 


இத் திரைப்படத்தினூடாக கடந்தகாலம் மீளுருவாக்கப்படுகின்றது. நடந்த கொடும் சம்பவமொன்று ஒருவனை மீள முடியா மனவடுக்களுள் தள்ளிவிடுகின்றது. அந்தச் சிறுவன் கடந்துவந்த பாதையோ நம்மை மிகுந்த குற்றவுணர்ச்சிக்குள் அமிழ்த்தி, பெரும் பாரத்தை ஏற்றிவைத்தும் விடுகின்றது.

ஒருவரின் உளவடுக்களை/ ஒருவர் இன்னமும் சொல்லாத கதைகளை அறியாது நாம் ஒருவரின் படைப்புக்களை அணுகுவது எவ்வளவு ஆபத்தானதென்பதை இத்திரைப்படம் எடுத்துச் சொல்கின்றது. மேலும் இந்த உண்மைச் சம்பவங்களின் தொகுப்பை, இதைவிட  வேறெந்த வகையிலும் எடுத்துவிட முடியாது என்கின்ற அளவுக்கு போலித்தனமோ உணர்ச்சிக்குவியலோ இன்றி தன்னை அவ்வளவு அசலாக முன்வைக்கின்றது மாரி செல்வராஜ்ஜின் 'வாழை'. 


சமகாலத் தமிழ்த் திரையுலகம் பெருமை கொள்ளக்கூடிய ஒரு படைப்பு இது.



நடன்ன சம்பவம்

 

பலர் இப்போது புகழ்ந்து கொண்டிருக்கும் மலையாளப் படமான 'அடீயோஸ் அமிகோ' என்னை அவ்வளவாகக் கவரவில்லை.   இரண்டு நல்ல மலையாள நடிகர்களையும் வைத்து இன்னும் சிறப்பாக இந்தத் திரைப்படத்தைக் கொண்டுவந்திருக்கலாம் . அதேபோலவே ஸ்டன்டை பிரதான வைத்து எடுக்கப்பட்ட ஆங்கிலப்படமான  The Fall Guy ஐ அண்மையில் பார்த்தபோது, அங்கும் அருமையான நடிகர்களை வீணாக்கிவிட்டார்கள் என்று நினைத்தேன். அதிலும் எனக்குப் பிடித்த எமிலி (Emily Blunt) இப்படி ஓர் 'உப்புச்சப்பில்லாத' பாத்திரத்துக்கு தன்னை ஒப்புக்கொடுத்து இருக்கவே கூடாது.


ஆனால் எனக்கு இன்னொரு மலையாளப் படமான 'நடன்ன சம்பவம்' பிடித்திருந்தது. சமூக வலைத்தளங்களும், மது அருந்துதலும் உறவுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதை சற்று நகைச்சுவை கலந்து இத்திரைப்படம் முன்வைக்கின்றது. தொடங்கியதிலிருந்து முடியும்வரை சுவாரசியமாக கதையை நகர்த்திக் கொண்டு செல்கின்றனர். அதிலும் தொடக்கக் காட்சியில் ஒரு குடும்பத்தின் பிறந்தநாளில் மகிழ்ச்சி இல்லாதிருக்கும் ஒரு பெண், இத்திரைப்படம் முடியும்போது தனது பிள்ளையின் அடுத்த பிறந்தநாளில் எப்படி ஒரு நல்லதொரு முடிவை எடுத்து தன் மகிழ்ச்சியைக் கண்டுகொள்கின்றாள் என்பதை அழகாகச் சொல்கின்றனர். 

 

நாம் எல்லோரும் எதிர்கொள்கின்ற/கடந்துவருகின்ற சமகாலப் பிரச்சினையை மட்டுமின்றி, பெண்களுக்குள் மிக இயல்பாய் விரிந்துகொண்டிருக்கும் சுதந்திர வெளியையும் எவ்வித அலட்டலில்லாமலும் இதில் சித்தரித்திருக்கின்றார்கள்.

 

**************


0 comments: