கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

தங்கலான்

Monday, October 07, 2024


மாய யதார்த்த/ஃபாண்டஸி திரைப்படங்கள் எத்தனையோ இருந்தாலும் அகிரா குரோசாவின் 'கனவுகள்', வூடி அலனின் 'பாரிஸில் நள்ளிரவு',  கு(யி)லரமோ டெல் டோராவின் 'பானினுடைய பதிர்வட்டம்' போன்றவற்றை வெவ்வேறு பின்னணிக்காக  உதாரணங்களாக எடுத்துக் கொள்வேன். அப்படி மாய யதார்த்தப் பாணியில் அமைந்த சல்மான் ருஷ்டியின் 'நள்ளிரவின் குழந்தைகள்' நாவலை, திரையில் அதே வனப்புடன் வரையப்படவில்லை. இத்தனைக்கும் இதன் நெறியாளர் தீபா மேத்தாவுடன், ருஷ்டி திரைக்கதையில் இணைந்து பணியாற்றியுமிருந்தார். இவ்வாறு தனது நாவலுக்கு நிகழும் என்று கணித்தபடியால்தான், மார்க்குவெஸ் அவரின் 'தனிமையின் நூறு ஆண்டுகளை'த் திரைப்படமாக்க கேட்டபோதும் 'முடியாது' என்று உறுதியாக மறுத்திருக்கின்றார். அவரின் 'காலராக் காலத்தில் காதல்' கற்பனை வளத்துடன் எடுக்கப்பட்டிருந்தாலும், நாவலின் உள்ளடுக்குகளை அது தவறவிட்டதாக ஓர் எண்ணம் எனக்கிருக்கிறது.


மலையாள சினிமா தன்னை  ஒவ்வொரு காலகட்டத்துக்கும் புதுப்பித்துக் கொண்டிருக்கும். அதற்கான பார்வையாளர்களைத் தயார்படுத்தியபடி நெறியாளர்களும் புதிது புதிதாக வந்துகொண்டிருப்பார்கள். அண்மையில் ஒரு நேர்காணலில் ஃபாகத் பாஸில் 'இப்போது நாம் எல்லாவிதமான பரிசோதனைகளையும் செய்கின்ற காலம் மலையாளத்தில் கனிந்திருக்கின்றது. உங்களுக்குப் பிடித்த திரைப்படங்களை எடுங்கள்' என நண்பர்களுக்குச் சொன்னதாக கூறியிருப்பார். அதேசமயம் ஒரு படம் நன்றாக வந்துவிட்டால், அதே சாயலில் மூன்று நான்கு   எடுத்துவிட்டால், மலையாள இரசிகர்கள் நம்மை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் என பார்வதி ஓரிடத்தில் குறிப்பிட்டிருப்பார்.


ஆனால் தமிழிலோ புதிய சூழலுக்கு/புதிய கதைக்களன்களுக்கு பார்வையாளர்களைத் தயார்ப்படுத்தல்களே இல்லை. ஒரு திரைப்படம் தற்செயலாக வெற்றி பெற்றுவிட்டால், ஒரு பத்து படமாவது அதேபோல எடுத்து முதலில் வந்த நல்ல திரைப்படத்தின் அருமையே இல்லாமற் செய்துவிடுவார்கள். தொடர்ச்சியாக காதல் திரைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்த செல்வராகவன் சடுதியாக 'ஆயிரத்தில் ஒருவனின்' திகைக்க வைத்தார். அன்றைய செல்வராகவனின் படங்கள் மீது விருப்பு வைத்திருந்த நான் 'ஆயிரத்தில் ஒருவனை' முதற்காட்சியாகப் பார்த்தபோது அது ஓர் அற்புதமான அனுபவமாக இருந்தது. அப்போது இத்திரைப்படம் குறித்து எதிர்மறையாக வைக்கப்பட்ட விமர்சனங்களை மறுத்து சிறு சிறு குறிப்புக்களாக நான் எழுதியதும் நினைவிலுண்டு. ஆயிரத்தில் ஒருவனின் பிற்பாதி விளங்கவில்லை/சும்மா பாவனை செய்கின்றது என்றபோது அப்படியல்ல என்று விவாதித்திருக்கின்றேன். மேலும் ஈழத்தில் ஆயுதப்போராட்டம் முடிந்து ஒரு பெரும் வெறுமை சூழ்ந்திருந்தபோது,  2010 இல் வெளிவந்த அத்திரைப்படம் பலருக்கு ஒரு நம்பிக்கை வெளிச்சத்தையும் தந்திருந்தது. இப்போது கிட்டத்தட்ட 14 வருடங்கள் கடந்தபின், செல்வராகவனின் மற்றப் படங்களை விட, 'ஆயிரத்தில் ஒருவனே' அதிகம் சிலாகிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பது ஒரு முரண்நகை..

நேற்று தங்கலானைப் பார்த்தபோதும்  ஆயிரத்தில் ஒருவனைப் போல அது வெளிவந்த காலத்தில் தவறவிடப்பட்டு பின்னரான காலத்தில் அதிகம் உரையாடப்படுமென நினைத்துக் கொண்டேன். ஏனெனில் தங்கலானின் கதைசொல்லல் பாணிக்கு இன்னும் பார்வையாளர்கள் தயார்ப்படுத்தவில்லை என்றே நினைக்கின்றேன். ஏன் பா.ரஞ்சித்தின் 'மெட்ராஸ்', 'காலா', 'சார்பட்டா பரம்பரை' போன்ற திரைப்படங்களைப் பார்த்துக் கொண்டாடிய இரசிகர்கள் கூட, ரஞ்சித் முற்றிலும் 360 கோணத்தில் திரைக்கதையை மாற்றியமைத்த தங்கலானை அந்தளவுக்கு வரவேற்பார்களா என்பதும் உறுதியாகத் தெரியவில்லை.


'தங்கலான்' அதற்குரிய கதைசொல்லல் பலவீனங்களை, தொன்மங்களை எப்படி யதார்த்தத்தோடு இணைப்பதென்ற சிக்கல்களை/ காட்சிப்படுத்தல்களை தன்னகத்தே கொண்டிருக்கின்றது என்பதை மறுக்கத் தேவையில்லை. அது ஒரு நெறியாளர், அதுவரையில்லாத புதுப்பாணியில் சொல்லவரும்போது வருகின்ற குழப்பங்கள் என எடுத்துக் கொள்ளலாம். 


இன்றைக்கு 90 வீதமான தமிழ்ச் சினிமா வன்முறை என்கின்ற 'ஆபாசத்தில்' சிக்கிச் சின்னபின்னாமாகி அதுவே சமகாலத் தமிழ்ச் சினிமாவின் முகமாக கொள்ளப்படுகின்றபோது 'தங்கலான்' எத்தனையோ மடங்கு உயர்ந்த திரைப்படமாகும். கோலார் வயலுக்கு கொத்தடிமைகளாக குடும்பம் குடும்பமாக கூட்டிச்செல்லப்பட்டவர்களின் கதையை ரஞ்சித்தால் யதார்த்தப் பாணி சினிமா மூலம் சொல்லமுடியாதா என்ன? சார்பட்டா பரம்பரை அதற்கொரு மிகச் சிறந்த உதாரணமாக நம்முன்னால் இருக்கின்றது. அப்படியிருந்தும் இந்தக் கதையை ரஞ்சித் அவருக்குள் இருக்கும் கனவான மாய யதார்த்தப்பாணியில் சொல்ல முயன்றிருக்கின்றார். சில இடங்களில் தடுக்கியும் வீழ்ந்திருக்கின்றார். ஆனால் அதை மட்டும் முன்வைத்து இத்திரைப்படத்தை நிராகரித்தல் முறையாகாது. இத்திரைப்படத்தின் அரசியலும், அது காட்சிப்படுத்தப்பட்டு விதமும் நம்மை அத்திரைப்படத்தின் பாத்திரத்திரங்களின் ஒன்றாக எடுத்துச் சென்றதா இல்லையா எனத்தான் பார்ப்பவர்கள் முதல்கேள்வியாக எழுப்பிக் கொள்ளவேண்டும். 


நான் அத்திரைப்படத்தில் உள்நுழைந்தவனாக இருந்தேன். கோலார் தங்க வயலுக்குள் அழைத்துச் சென்றவர்களினூடாக தமிழகத்தில் இருந்து கூலித்தொழிலாளர்களாக/கொத்தடிமைகளாக எங்கோ தொலைவில் இருந்த ஜமேய்க்காவுக்கும், பிஜித்தீவுகளுக்கும், மொரிஸியஸிற்கும் அழைத்துச் செல்லப்பட்டவர்களின் துயரத்தை மட்டுமில்லை, காப்பிக்கும்/தேயிலைக்கும் ஆசைகாட்டி இலங்கைக்கும்/மலேசியாவுக்கும் அழைத்துச் சென்ற விளிம்புநிலைமனிதர்களின் வாழ்வியலைக் கண்டேன். ஏன் என்னைப் போன்றவர்களின் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வின் தெறிப்பைக் கூட இதில் கண்டு சற்றுக் கலங்கியிருக்கின்றேன். 


அவர்களுக்கு வறுமையும், சாதி ஒடுக்குமுறையும் இவ்வாறான இடம்பெயர்தலுக்குக் காரணமெனில் நமக்கு போர் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் எல்லாப் புலம்பெயர்வுகளுகு அப்பால் அது எத்தகைய வாழ்வாக இருந்தாலும், சொந்த மண்ணை விட்டு வலுக்கட்டாயமாகப் பிரிவதென்பதுதான் எத்தகை துயரமானது. 


அதனால்தான் தங்கலான் 'எனது மண் எமது உரிமை' என்று கடைசிவரை போராடுகின்றான். அதன்மூலமே தனது ஒடுக்குமுறைகளில் இருந்து விடுபடமுடியும் என்று உறுதியாக நம்பி, அதை மறுக்கும் எவராயினும் ‍அவர்கள் நல்லவர்களாக‌இருந்தாலும்- ‍அவர்களுக்கு எதிராகப் போராடுவதில் தங்கலான் பின்னிற்பதில்லை. இறுதியில் அவன் அடைகின்ற புரிந்துணர்வும்/இலக்கும் தற்காலிகமாக இருந்தாலும், அதுவும் முக்கியமானதே. 


இவ்வாறு பலரின் இடைவிடாத போராட்டங்களின் மூலந்தான் இன்று இந்த நிலைக்கு வந்து நாம் வாழ/சிந்திக்க முடிகின்றது. அத்துடன் எவ்வகையான ஒடுக்குமுறை என்றாலும் அதற்கு எதிராகக் குரல் கொடுக்க மட்டுமின்றி, நாம் ஒடுக்குமுறையாளராக மாறக்கூடிய ஒவ்வொரு தருணங்களிலும் நம்மை கவனமாக அவதானிக்கவும் இவ்வாறான படைப்புக்களே நம்மை உந்தித்தள்ளுகின்றன.


**************
(நன்றி: 'அம்ருதா' - ஐப்பசி)

0 comments: