Tourist Family திரைப்படம் வந்தவுடனேயே பார்த்திருந்தேன். எந்த ஒரு படைப்பும் - அது இலக்கியமாக இருந்தாலென்ன, திரைப்படமாக இருந்தாலென்ன- அது முதலில் நம்மை உள்ளிழுக்க வேண்டுமென நினைப்பேன். அப்படி இருந்தால்தான் நாம் அந்தப் படைப்பைப் பேச எம்மை உந்தித் தள்ளும். நம்மை வெளியில் தள்ளும் திரைப்படங்களை (அண்மைய உதாரணம் Retro) எளிதாக நாம் கடந்து போய்விடுவோம்.
இத்திரைப்படத்துக்காக அவர் மேலோட்டமாக இலங்கை நிலவரத்தையோ,பண்பாட்டு/கலாசார விடயங்களையோ எடுத்துக் கொள்ளவில்லை என்பது நிம்மதி தருவது. மற்றது இந்த நெறியாளர் 25 வயதில் இருப்பவர். அவருக்குரிய வயதுக்கு மேலான முதிர்ச்சியில் அணுகியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஏதோ ஒரு நேர்காணலில், இதை தெனாலி-02 மாதிரியாக நினைத்து எழுதியிருப்பேன் எனச் சொல்லியிருந்தார். ஆனால் தெனாலி ஈழத்தமிழரை நகைச்சுவையென்ற போர்வையில் கீழிறக்கியது போல அல்லாது, நேர்மையாக ஒரு ஈழக்குடும்பத்தை அணுகியிருக்கின்றது.
மேலும் இதில் நகைச்சுவையாக்கிய காட்சிகளுக்குப் பிறகும் யதார்த்தமாக அந்த விடயத்தை காட்ட நெறியாளர் எடுத்த உழைப்பைச் சுட்டிக்காட்ட வேண்டும். உதாரணமாக அந்த பதின்மத்தில் இருப்பவன் ஈழத்தில் விட்டுவந்த காதலி திருமணம் செய்வதை நகைச்சுவையாக்கியபோது, பிறகு அந்தக் காதலியை இழந்த இந்த இளைஞன் தந்தையோடு உரையாடுவதைச் சொல்லலாம். ஆகவே அதில் நகைச்சுவையைத் தாண்டி யதார்த்தைத் தரிசிக்கும் இடங்களும் இருக்கின்றது.
இந்தக் கதை போல நிகழ்தல் சாத்தியமா இல்லையா என்பதை நாம் இவ்வாறான திரைப்படங்களில் பார்க்க முடியாது. ஒருவகையில் யதார்த்தை மீறிய மீயதார்த்தமெனச் சொல்லலாம். ஆனால் திரைக்கதை இறுக்கமாக எழுதப்பட்டிருந்தால் அது பிற விடயங்களை யோசிக்காது நம்மை கதைக்குள் இருத்தி வைத்திருக்கும்.
இதற்கான உதாரணமாக நான் அடிக்கடி என் சிறுவயதுகளில் பார்த்து 'புது வசந்தத்தை'ச் சொல்வதுண்டு. நான்கு நண்பர்களோடு அந்நியோன்னியமாக இருக்கும் ஒரு பெண் ஒருநாள் திருமணம் செய்து கொள்கின்றாள். வருகின்ற கணவன் இந்த நட்பை சந்தேகப்படுகின்றான். அவள் இறுதியில் தன் திருமண வாழ்வை முறித்து, இந்த நான்கு நண்பர்களோடு சேர்ந்து வாழத் திரும்ப வருவதாக முடிகின்றது. இது அந்தக் காலத்து (இந்தக் காலத்திலும்) தமிழ்ச்சூழலில் சாத்தியம் இல்லை என்று தெரியும். ஆனால் திரைக்கதை நம்மை அது நடக்கமுடியும் என்று நம்பவைப்பதற்கான இழைகளுடன் அருமையாக அமைக்கப்பட்டிருக்கும்.
அவ்வாறு இந்தத் திரைப்படத்திலும் இப்படி ஒரு தெரு இந்த 'பொருளாதார அகதி' குடும்பத்தை அரவணைத்து பராமரிக்குமா? ஒரு இலங்கை குடும்பத்தை சுற்றியிருக்கும் அயலவர்கள் மட்டுமில்லை, பொலிஸ்/அரசு போன்றவையும் காப்பாற்றுமா என்றால் யதார்த்தில் சாத்தியமில்லை என்பதற்கு எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன. ஆனால் நாங்களும்/ நீங்களும் வேறு வேறில்லை. நமக்கிடையே நிலங்களோ/பண்பாடோ வேறாக இருந்தாலும் மொழி நம்மை இணைக்கின்றது என்பதை அழகாகச் சொல்கின்றது.
இந்த படம், அதுவும் இந்த Good/Bad/Ugly, Retro போன்று நம் கழுத்தை நாமே அறுக்கவைக்கும் திரைபடங்கள் வந்துகொண்டிருக்கும்போது முக்கியமான வரவு என்பேன். இதன் கதை மட்டுமில்லை, திரைக்கதையை executive செய்த விதமும் சிறப்பானது. பலரிடம் நல்ல கதைகள் இருந்தாலும், அதை காட்சியாக்கும்போது சறுக்கிவிடுவார்கள். அந்தவகையில் ஒரு 25 வயது இளைஞன் மிகுந்த பொறுப்புணர்வுடன் எடுத்திருப்பது அவருக்கு கலை மீதான நேசிப்பில்லாது இது சாத்தியமில்லை.
இப்போது வேறோரு திசையைப் பற்றியும் யோசித்துப் பார்க்கலாம். ஈழத்தில் இருந்து யுத்தம் காரணமாகவோ (அல்லது இப்போது பொருளாதா நிலைமை காரணமாகவோ) புறப்பட்ட மக்களை தம் நாட்டில் உள்ளிழுத்த ஐரோப்பா/அமெரிக்க/ஆஸ்திரேலியா கண்டத்து நாடுகளை போலவன்றி, 'தொப்பூழ்கொடி' என்று அரவணைத்துக்கொள்கின்ற மக்கள் இருக்கின்ற நாடும், மக்களும், அங்கே 30 வருடங்களாக இருக்கும் மக்களை இன்னும் அகதிகளாகவே வைத்திருக்கின்றது. அவர்களுக்கு எந்த உரிமைகளும் வசதிகளும் மற்றவர்களைப் போல இல்லை. அவர்கள் இன்னமும் தத்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்தத் துயரங்களோடே வாழ்வை எதிர்கொண்டபடி இருக்கின்றார்கள். அவற்றை எளிதாக மறைத்து வேறொரு கதையை இது சொல்கின்றதெனும் விமர்சனக் குரல்களையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு திரைப்படம் எல்லா அரசியலையும் சொல்லவேண்டும் என்றில்லை, ஆனால் அதைப் பேசுவதும் முக்கியமானது என்பதையும் இத்திரைப்படத்தின் உரையாடல்களின்போது நாம் தொடர்ந்து கவனப்படுத்துவதையும் நிச்சயம் செய்யவேண்டும்.
மற்றும்படி இந்த வருடத்தில் வந்தவற்றில் ஒரு முக்கிய திரைப்படம். அதுவும் 25 வயது இளைஞன் மனிதாபிமானத்தை முக்கியப்படுத்தி மென்னுணர்வுகளால் நம்மோடு உரையாடுவது என்பது அவ்வளவு எளிதானதில்லை. ஏனென்றால் அவரின் வயதொத்தவர்கள் மட்டுமில்லை, அவருக்கு முன்னால் இருக்கும் எல்லா நெறியாளர்களும் வெட்டும் குத்தும், இரத்தமும், கொலையுமாக இருக்கும்போது, அவற்றிலிருந்து முற்றிலும் விலகி இப்படியான ஒரு கதையைச் சொல்ல வந்ததை நாம் மனமுவந்து பாராட்ட வேண்டும்.
****
(May 10, 2025)
0 comments:
Post a Comment