கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 70

Wednesday, February 05, 2025

 

மலரவனின் 'போர் உலா'வை முன்னிட்டு சில நினைவுகள்..

1.


மலரவன் எழுதிய 'போர் உலா'வை மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றேன். இதை எனது பதின்மத்தின் தொடக்கத்தில் தமிழில் வந்தபோது வாசித்திருக்கின்றேன். அப்போது யாழ்ப்பாணம் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. 'போர் உலா'வை சுன்னாகம் பேருந்து நிலையத்துக்கருகில் இருந்த புத்தகசாலையில் வாங்கி  வாசித்திருக்கின்றேன். 13/14 வயதுகளில் கையில் காசு புழங்குவதே அரிதென்பதால், புதுப் புத்தகங்களை வாங்கி வாசிப்பதென்பது பெரும் சாதனை போல அன்று இருக்கும். அப்படி காசு கொடுத்து  புதிதாய் வாங்கிய இன்னொரு புத்தகம் புதுவை இரத்தினதுரையின் ' பூவரம் வேலியும், புலுனிக் குஞ்சுகளும்' என்ற கவிதைகளின் பெருந்தொகுப்பு.



இப்போது 'எழுநா'வில் எழுதுவதற்காக ஆங்கிலத்தில் வந்த 'போர் உலா'வை மீண்டும் வாசிக்கின்றேன், இந்த நூலை தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மாலதியை நான் வன்னியில் நேரில் சந்தித்திருக்கின்றேன்.
முப்பது வருடங்களுக்கு மேல் நியூசிலாந்தில் வசித்துவிட்டு மீண்டும் தாய்நிலம் திரும்பியிருந்தார். மனிதவுரிமைகள் சம்பந்தமாக செஞ்சோலைக்கு  வந்து பேசிக் கொண்டிருந்தார். மாலதி, செஞ்சோலைக்குப் பொறுப்பான ஜனனி அக்காவிடம், 'இப்படி அநாதரவராக இருக்கும் பெண்பிள்ளைகளை, இயக்கப் போராளிகளான நீங்கள் வளர்ப்பதால் அவர்களும் இயக்கத்தில் இயல்பாக சேர்ந்து விடுவார்களே, இது சரியில்லை அல்லவா?' எனக் கேட்டபோது நானும் சாட்சியாக இருந்திருக்கின்றேன்.

அதனால்தான் அவர்களை இப்போது உள்ளே வைத்து படிப்பிக்காமல், மற்றவர்களும் போகும் சாதாரண பாடசாலைகளுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றோம் என்று பல உதாரணங்களை ஜனனி அக்கா சொல்லிக் கொண்டிருந்தார். நானும் பின்னர் அங்கிருந்த பெண் போராளிகளிடம், இங்கே வளரும் பிள்ளைகள் இயக்கத்தில் போய்ச் சேர்வதில்லையா எனக் கேட்டேன். அவர்கள் அப்படிச் சேர நாங்கள் இயக்கத்தில் விடுவதில்லை. என்றாலும் சில பேர் அப்படி இங்கிருந்து தப்பியோடி வேறு பெயரில் இயக்கத்தில் இணைந்திருக்கின்றார்கள் என்றும், அவர்களை மீண்டும் இங்கே மீட்டுக் கொண்டு வந்திருக்கின்றோம் என்றும் சொன்னார்கள். அப்படி ஓடிப்போய் இயக்கத்தில் சேர்ந்து திரும்பி வந்த சிலரை செஞ்சோலைக்குள் சந்தித்திருக்கின்றேன். 


இவற்றையெல்லாம் ஏன் சொல்கின்றேன் என்றால் புலிகளை விளங்கிக் கொள்வதென்பது மிகச் சிக்கலான விடயம். அதுவும் 30 வருடங்களுக்கு மேலாக இயங்கிய, தம்மை மீறி எவரையும் இயங்க விடாத ஓர் இயக்கத்தை ஒற்றைப்படையாக வைத்து எதையும் எளிதில் விளங்கிவிடவும் முடியாது.  எனவேதான் இப்போது புலிகளை ஆதரித்தோ, எதிர்த்தோ மிகைப்படுத்தி வரும் படைப்புக்களை மெல்லிய புன்முறுவலோடு விமர்சிக்கக்கூட விருப்பில்லாது கடந்து போய்விட முடிகின்றது.

மனிதவுரிமைகள் சம்பந்தமாக பேசிக்கொண்டிருந்த இதே மாலதி வன்னிக்குள் இறுதியுத்தம் முடியும்வரை புலிகளின் சமாதானக் காரியாலத்தில் இயங்கியிருக்கின்றார் என்பதைப் பின்னர் அறிந்துகொண்டேன். யுத்தம் மிக மோசமாக நடந்த காலங்களிலேயே, வேறு எதுவும் செய்வதற்கு வழியற்றபோது, மாலதி இந்தநூலை அங்கிருந்தபடி தமிழுக்கு ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருக்கின்றார் என்ற குறிப்பு இந்த ஆங்கில நூலில் இருக்கின்றது.
 

இறுதி யுத்தம் அவரை அதிர்ஷ்டவசமாக  உயிர் தப்ப விட்டிருக்கின்றது. அதனால்  மலரவனின் 'போர் உலா'வை நாங்கள் ஆங்கிலத்திலும் இப்போது வாசிக்க முடிகின்றது. ஆங்கிலப் பதிப்பை பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கின்றது.



2.

ஈழப் போராட்ட வரலாற்றிலே 'போர் உலா' மிக முக்கியமான பிரதி. மாங்குளம் இலங்கை இராணுவம் முகாமை அழிக்க, மணலாற்றில் இருந்து (இப்போது சிங்களக்குடியேற்றம் நிகழ்ந்து வெலிஓயா என அழைக்கப்படுகிறது), மாங்குளம் செல்லும் பயணத்தையும், அம்முகாம் மீட்கப்பட்டதையும் மலரவன் இதில் லியோ என்கின்ற கதாபாத்திரத்தினூடாக எழுதுகின்றார். மணலாற்று காட்டிலிருந்து தொடங்கும் பயணம் இறுதியில் மாங்குளம் இராணுவத் தகர்ப்புடன் முடிவடைகின்றது. ஆனால் அந்தப் பயணத்தில் லியோ என்கின்ற பாத்திரம் சந்திக்கும் மக்கள், வறுமை/சாதியப் பெருமிதங்கள், இராணுவத்தால் கொல்லப்பட்ட மனிதர்களின் உறவுகள் என்று பலவற்றை அவர் தொட்டுச் செல்கின்றார். 

 

ஒருவகையில் இது அந்தக்காலத்தைய வன்னி மக்களின் வாழ்க்கையை சொல்லும் ஒரு முக்கிய ஆவணமாகவும் ஆகின்றது. மேலும் அவர் மக்களை/போராட்டத்தை/யுத்தத்தை மட்டுமில்லாது மிக நிதானமாக இயற்கையை விவரித்துச் செல்வது அவ்வளவு அருமையாக இருக்கின்றது. இதைவிட வியப்பாக இருப்பது, மலரவன் போர் உலா'வை எழுதும்போது அவருக்கு 18 வயதுதான். இத்தகைய ஓர் உண்மை கலந்த புனைவை ஒருவர் தனது பதின்மத்திலேயே எழுதிவிட்டார் என்கின்றபோது ஒரு வியப்பு வருகின்றது.


மலரவன் இதன் பிறகு இரண்டு வருடங்களில், அதாவது அவரது 20 வயதில் பலாலியில் நடந்த முக்கிய தாக்குதலில் இறந்துவிடுகின்றார். அந்தப் பலாலி தாக்குதல் என் நினைவில் நன்கு இருக்கின்றது. ஏனெனில் எங்கள் கிராமங்களை அச்சுறுத்தும் முக்கிய இராணுவ/விமானத் தளமாக பலாலி அன்று இருந்தது. அந்தத் தாக்குதலில் இயக்கத்தின் முக்கியமானவராக இருந்த சிலர் உள்ளிட்ட 50இற்கும் மேற்பட்ட போராளிகள் இறந்திருந்தனர். எனினும் அப்போது லியோ என்கின்ற மலரவன் இறந்தார் என்பதை அறிந்தவனில்லை.


இந்தப் பிரதி மலரவன் இறந்தபின்னே  அவரது உடமைகளோடு கண்டுபிடிக்கப்பட்டு இயக்கத்தால் வெளியிடப்படுகின்றது.
இந்த  போர் உலா என்கின்ற பிரதியை மலரவன் எழுதுகின்றபோது அவருக்கு 18 வயதேதான். நம்பவே முடியாதிருக்கின்றது அல்லவா?  அதன் பின் 20 வயதில் களத்தில் நின்றபோது விழுந்த ஷெல் தாக்குதலால் ஏற்பட்ட காயத்தால் மரணமடைந்தாலும், அதற்கு முன்னரான ஒரு சமரில் காயமடைந்து அவரது சிறுநீரகம் ஒன்றையும் இழந்திருக்கின்றார்.

இருபது வயதுக்குள் உக்கிரமான சமர்க்களத்தில்  களமாடியபடி மலரவன் தனியே 'போர் உலா' மட்டும் எழுதவில்லை. 'புயல் பறவை' என்ற நாவலையும், வேறு பல கவிதைகளையும் எழுதியிருக்கின்றார். அவரின் ஒன்றிரண்டு  நாவல்கள் கிடைக்காமலே அழிந்து போயிருக்கின்றன எனச் சொல்லப்படுகின்றது. 'போர் உலா' முடியும்போது அவர் அடுத்து பங்குபற்றிய சிலாவத்துறை  இராணுவ முகாம் தாக்குதல் பற்றியும் எழுத இருப்பதான குறிப்பையும் பார்க்கின்றோம். அதை எழுத முன்னர் மலரவன் காலமாகிவிட்டார் என்பது துயரமானது. அந்தச்  சிலாவத்துறை சமரில் மலரவன் படுகாயமுற்று தனது சிறுநீரகம் ஒன்றையும் இழக்கின்றார்.

 

'புயல் பறவை' நூல், பின்னர் மலரவனின் தாயால்  வெளியிடப்பட்டிருக்கின்றது. 'புயல் பறவை' நூலில் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து இயக்கத்துக்குப் போகின்றவர்களையும், இயக்கத்தில் பெண்களைச் சேர்ப்பது குறித்த உரையாடல்களும் இருக்கின்றன என அறிகின்றேன். (இந்நூல்களைத் தேடுபவர்க்கு, 'போர் உலா', 'புயல் பறவை' இரண்டையும் 'விடியல்' பதிப்பகம் இப்போது வெளியிட்டிருக்கின்றது).

மலரவன் சிலாவத்துறை சமரில் (சிறுநீரகம் இழந்தபோது) காயங்களை ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்தபோது அவரின் தாயாரோடு இந்தப் பிரதிகளைப் பற்றிப் பேசியும், திருத்தங்களும் செய்திருக்கின்றார் என்று அவரது தாயான எழுத்தாளர் மலரன்னை ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கின்றார். மலரவன் இயக்கத்தில் இருந்தபோது அப்போது முக்கிய ஒரு படைத்துறையாக வளர்ந்து கொண்டிருந்த பசீலன் 2000 பீரங்கிப்படையில் முன்னணிப் படைவீரராக இருந்தவர். இது இயக்கத்தின் உள்ளூர்த் தயாரிப்பு மோட்டார்களைக் கொண்டிருந்தது. யாழ் கோட்டையை அன்று இயக்கம் கைப்பற்றியதில் இந்தப் படையணியின் பங்கும் அளப்பரியது என்பதை அன்றையகாலத்தில் யாழில் இருந்தவர்க: அறிவர். பசீலன் என்பவர் வன்னி மாவட்டத் தளபதியாக இருந்து இந்திய இராணுவ காலத்தில் கொல்லப்பட்டவர். அவர் நினைவாக இந்தப் படையணி தொடங்கப்பட்டது.


போர் உலாவிலும் மலரவன் இந்தப் படையணியின் ஒருவராகவே தாக்குதலுக்கு வருகின்றார். மணலாற்றில் இருந்து பீரங்கிகளையும் நகர்த்த வேண்டும். அதேசமயம் இலங்கை இராணுவத்தின் விமானங்களின் கண்களுக்கும் தெரியக்கூடாது. இதை நகர்த்தும்போது சாதாரண மக்களும் காணக்கூடாது. இல்லாவிட்டால் ஒரு தாக்குதல் நடக்கப்போகின்றது என்ற செய்தி பரவி, முழுத்தாக்குதலுமே தோல்வியில் முடியும் ஆபத்தும் இருக்கின்றது. 



3.


மலரவன், மாங்குளம் முகாமில் பங்குபற்றியபின், அவருக்கு இருந்த எழுத்துத் திறமையால் புலிகள் அவரை ஒவ்வொரு சண்டையின்போதும் நடப்பவற்றையும், அதை ஆராய்ந்து எழுதுவதற்குமென நியமித்திருக்கின்றனர். அவர் எழுதிய முக்கிய இன்னொரு சண்டை அனுபவம், அவரின் பொறுப்பாளராக  அப்போது இருந்த தமிழ்ச்செல்வனால் பாராட்டப்பட்டபோதும், நிறைய இராணுவ இரகசியங்கள் அதில் இருந்ததால் அது பிரசுரிமாகாமலேயே போய்விட்டது. அதுவும் வெளிவந்திருந்தால் இன்னொரு 'போர் உலா' போல  முக்கியமான படைப்பாக ஆகியிருக்கும்.


மாங்குள முகாம் தகர்ப்பு பெரும் செய்தியாக எங்களின் காலத்தில் பேசப்பட்டது. அதில்தான் புலிகளின் முக்கியமான ஒருவராக இருந்த லெப்.கேணல் போர்க் தற்கொலைப்போராளியாக சென்று முகாம் தகர்ப்பைத் தொடக்கி வைத்தவர். எங்கள் காலத்தில் ஒருவருக்கு லெப்.கேணல் என்ற பதவி கொடுக்கப்பட்டால், பின்னரான காலத்தில் கேணல் போன்ற பெரும் தளபதிக்காக நிகர்த்தவர். புலிகளின் மாவட்டப் பொறுப்பாளர்களாக இருந்த தளபதிகளான ராதா, விக்டர் போன்ற மிகச் சிலருக்கே இந்த லெப்.கேணல் பதவி அப்போது கொடுக்கப்பட்டிருந்தது. (முதலாவது கேணல் பட்டம் பின்னர் கிட்டுவோடு தொடங்கியிருக்க வேண்டும்). போர்க்கின் புகைப்படத்தோடு வந்த மாங்குளம் முகாம் தகர்ப்பை அவ்வளவு பதைபதைப்புடன் அன்று வாசித்ததும் நினைவில் இருக்கின்றது.

இந்த வாழ்க்கைதான் எவ்வளவு விசித்திரமானது. அதுபோல இன்னொரு சுவாரசியமான (அப்படிச் சொல்லலாமோ தெரியாது) விடயமும் நினைவுக்கு வருகின்றது. வன்னியில் இருந்த சமயம், எனக்கு பால்ராஜோடு பேசும் ஒரு சந்தர்ப்பம் நண்பர்களோடு வாய்த்தது. அப்போது பிரிகேடியர் தரத்தில் இருந்த பால்ராஜ், தற்செயலாக மாங்குளம் முகாம் தகர்ப்புப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். மலரவன் எழுதிய போர் உலாவில் வந்த தாக்குதலை  முன்னின்று நடத்திய தளபதியாக பால்ராஜே இருந்தவர்.. 


பால்ராஜ் அங்கே நடந்த தாக்குதலையோ, அவருக்கு நெருக்கமாக இருந்த போர்க் தற்கொலைப்போராளியாகப் போனது பற்றியோ எதுவும் பேசவில்லை. அவர் எங்களுக்கு அந்த சமரில் களமாடிய வீரமிக்க இலங்கை இராணுவ மேஜர் ஒருவரைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். அந்த மேஜர்தான் அந்த இராணுவ முகாமிற்குப் பொறுப்பாக இருந்தவர்களில் ஒருவர். புலிகள் கிட்டத்தட்ட முகாமைத் தகர்த்து வெல்லும் நிலை வந்துவிட்டது. அந்த  இராணுவ மேஜர் உயிரோடு இருந்த மற்றவர்களையெல்லாம் தப்பிப் போகச் சொல்லிவிட்டு, அந்த முகாமைவிட்டு வெளியேறாமல் இறுதிவரை சண்டையிட்டு உயிர் நீத்தவர் என்று சொல்லிக் கொஞ்சம் இடைவெளி விட்டு, 'அவன் ஒரு மரியாதைக்குரிய வீரன்' என்றார். அப்போது நான் பார்த்தது எதிர்த்தரப்பின் வீரத்தை மதிக்கும் ஓர் உயரிய தளபதியின் ஆளுமையை.



4.


மலரவன் போல அன்றைய காலங்களில் பல போராளிகள், படைப்பாளிகளாகவும் பரிணமித்தார்கள். மேஜர் பாரதி, கப்டன் கஸ்தூரி, 2ம்.லெப்.வானதி, பின்னர் மலைமகள் என பெண்களிடையேயும் வீரியமிக்க பல படைப்பாளிகள் தோன்றினார்கள். அவர்களின் பெரும்பாலான படைப்புக்கள் அன்றைய காலங்களில் தொகுப்புக்களாகியபோதும் இப்போதைய தலைமுறைக்குக் கிடைப்பதில்லை. இந்தப் பெண்களின் சிலர் இயக்கம் படுமோசமாக முதலில் தோற்ற ஆனையிறவு முகாம் ('ஆகாய கடல் வெளி சமர்') தகர்ப்பில் இறந்துபோனவர்கள்.

இன்று சிலர், தாம் ஒன்றிரண்டு வருடங்கள் இயக்கங்களில் இருந்து தம்மைத் தொடர்ந்து  முன்னாள் போராளிகளாக முன்வைக்கும்போது, மேலே குறிப்பிட்டப்பட்டவர்கள் போராளிகளாகவும் படைப்பாளிகளாகவும் இருந்து மரணித்தவர்கள் என்பதை நாம் நினைவில் இருத்தவேண்டும். அவர்கள் மிகுதி அனைவரையும் விட போராளிப் படைப்பாளிகளாக முன்னிலைப்படுத்தப்பட வேண்டியவர்கள்.  

ஒருவர் தன்னை கடந்தகாலத்தில் போராளியாகவோ அல்லது ஆதரவாளராகவோ முன்வைத்து பொதுவெளியில் பேசினால், அவர்கள் எந்தக்காலத்தில், எப்போது அப்படி இருந்தார்கள் என்பதை தமது நூல்களில் தம்மைப் பற்றிய அறிமுகத்தில் முன்வைக்க வேண்டியது குறைந்தபட்ச அறமாகும். ஏனெனில் அதுவே தமது முழு வாழ்க்கையையே களத்தில் காவுகொடுத்த மலரவன், பாரதி, கஸ்தூரி, வானதி, மலைமகள் என்கின்ற எண்ணற்ற போராளிப் படைப்பாளிகளுக்கு நாம் கொடுக்கக்கூடிய குறைந்தபட்ச மரியாதையாக இருக்கும்.

*****************

 

(நன்றி: உதயன் 'சஞ்சீவி')



கார்காலக் குறிப்புகள் - 69

Monday, February 03, 2025

 

 நர்மியின் 'கல்கத்தா நாட்கள்'
**************


எனக்குப் பயணங்கள் மீது விருப்பு வந்ததற்கு பயணித்தவர்கள் இணையத்தளங்களில் எழுதிய பயணக்கட்டுரைகளாலும், நூல்களாலும் என்று சொல்வேன். 10/15 வருடங்களுக்கு முன் இப்போது போல காணொளிகள் பிரபல்யம் ஆகவில்லை. மேலும் காட்சிகளை விட, எழுத்துக்களை வாசித்து எனக்கான உலகை அதனூடு கற்பனை செய்வது எனக்கு எப்போதும் பிடித்தமானதாக இருக்கிறது.

பிறகு பயணங்களைச் செய்யத் தொடங்கியபோதும், பயணிக்காத காலங்களிலும் என்னை இவ்வாறான பயண நூல்களே பயணங்கள் பற்றிய ஆசைகளை பெருக்கி வைத்திருக்கின்றன. மேலும் ஆண்களை விட, பெண்கள் எழுதிய பயண நூல்களே என்னை அதிகம் கவர்பவை. அவர்கள் சிறு விடயங்களைக் கூட மிகுந்த நுண்ணகியலோடு நேரமெடுத்து விபரிப்பது எனக்குப் பிடித்தமானது. ஆண்களுக்கு இந்த சின்ன விடயங்களின் அழகியல் அவ்வளவு எளிதில் பயண நூல்களில் கைவருவதில்லை.

பயணங்களைப் பற்றி தமிழில் இப்போது நிறைய எழுதப்படுகின்றது. ஆனால் அந்தக் கலை கைவரப் பெற்றவர்கள் மிக அரிதே. பலர் பயணிக்கும் இடங்களைப் பற்றி விரிவான தகவல்களாகத் தர முயல்கின்றார்களே தவிர, அதை ஒரு தனிப்பட்ட அனுபவமாக மாற்றமுடியாது திணறுகின்றனர். வேறு சில மிக எளிய மேலோட்டமான பயணக் குறிப்புகளாகத் தேங்கி விடுகின்றன. குமரி மாவட்டதை விரிவாக அறியலாமென ஆர்வமாக வாசிக்கத் தொடங்கிய 'ஊர் சுற்றிப் பறவை', அதை விட வாசிக்காமலே இருந்திருக்கலாமென்று நினைக்க வைக்குமளவுக்கு அதில் இருந்து புதிதாக அறிய ஒன்றுமில்லாது இருந்தது.. அவ்வாறே தமிழில் வெளிவந்த வெளிநாட்டுப் பயணங்களைப் பற்றிய நூல்கள் பலதை உதாரணங்களாகச் சொல்லலாம்.

இவற்றிலிருந்து விதிவிலகாக இருந்தது நர்மியின் 'கல்கத்தா நாட்கள்'. ஏனெனில் நர்மி இந்தப் பயணங்களை தனது தனிப்பட்ட அனுபவங்களாக மாற்றுகின்றார். அதேவேளை கல்கத்தாவின் அசலான முகத்தையும், அத்தனை வறுமையையும், குப்பை கூளங்களையும், பாழடைந்த புராதன் வீடுகளையும் நமக்கு விபரித்தபடியே செல்கிறார். ஒரு நகர் அது காட்ட விரும்பாத பக்கங்களைக் காட்டியபின்னும், அந்த நகர் நம்மைச் சென்று பார்க்க வசீகரிக்கின்றதென்றால் அது எழுத்தால் மட்டுமே சாத்தியமானது.

நர்மி தனியே கல்கத்தாவின் புகழ்பெற்ற் இடங்களை மட்டுமில்லை, வங்காளத்தின் பூர்வீகக் குடிகளை, தெருவோரக் குழந்தைகளை, பூக்கள் விற்பவர்களை, சாய்வாலாக்களை, பிச்சைக்கார்களை, கஞ்சாக் குடிக்கிகளை.. என விளிம்புநிலை மனிதர்களாக கைவிடப்பட்டவர்களை நெருங்கிப் பார்க்கின்றார். அவர்களுக்குள் இத்தனை அவதிகளுக்குள்ளும் இயங்கிக் கொண்டிருக்கும் அழகான வேறொரு உலகைக் காட்சிப்படுத்துகின்றார்.

ஒரு அத்தியாயம் முழுதும் தேநீர் (சாய்) குடிக்கும் இடங்களைப் பற்றி விபரித்து எழுதிக் கொண்டே போகின்றார். நீங்கள் என்னோடு (எழுத்தில்) வந்தால் சாய்களின் சுவையை அனுபவிப்பீர்களென்று நம் கைகளைப் பற்றி ஒவ்வொரு இடங்களுக்கும் அழைத்துச் செல்கின்றார். அவ்வாறே டார்ஜிலிங்கில் மலையில் தங்கியிருந்த மழைநாட்களில் தினம் தனக்கான பூக்களைப் பறித்துச் சென்று அழகு பார்க்கும் ஒரு நுண்ணுணர்வுள்ள பெண்ணாக நர்மி மாறுவதோடு அங்கேயிருக்கும் நேபாளியப் பின்புலமுள்ள பிள்ளைகளோடு பழகி அவர்களின் வாழ்க்கையையும் நமக்கு அறிமுகப்படுத்துகின்றார்.

வங்காளத்தில் நடக்கும் காளி பூஜைக்கும் துர்க்கா பூஜையும் எப்படி கிராமங்கள்/நகரங்களுக்கேற்ப வேறுபடுகின்றது என்று அப்பூஜை நிகழ்வுகளுக்கு சென்று விபரிக்கின்றார். முதல் தடவை பரவசத்துடன் காளி பூசை பார்த்தற்கும் அதற்கு அடுத்த வருடத்தில் நிதானமாக அதே நிகழ்வைப் பார்த்தற்குமான வித்தியாசங்களை எல்லோரும் எடுத்து சொல்லிக் காட்டப்போவதில்லை. ஆனால் நர்மி அதைச் செய்கின்றார். ஒருவகையில் இந்த பயணங்களை மிக நிதானமாக (slow travel) செய்வதால் இடங்களை மட்டுமில்லை, அங்கிருக்கும் மனிதர்களையும் ஆழமாகப் புரிந்து கொள்ள நர்மி முயற்சிக்கின்றார்.

தாகூர்பாரியையும், சாந்திநிகேதனையும் பற்றி வெவ்வேறு இரண்டு அத்தியாயங்கள் எழுதப்பட்டாலும், தாகூரின் காதம்பரிக்கு அன்று என்று நடந்திருக்கும் என்ற கேள்விகளை நர்மி எழுப்பச் செய்கின்றார். தாகூரினதும், விவேகானந்தரினதும் வரலாற்று இடங்களை அப்படியே பராமரிக்காது நவீனத்துக்கு மாற்றிவிட்டார்கள் என்றும் அவர் கவலைப்படுகின்றார். தாகூர் இறுதிமூச்சை விட்ட அறையினுள் நின்று கொண்டு, இன்னமும் திறக்கப்படாத காதம்பரி தற்கொலை செய்த அறை மட்டும் என்றேனும் ஒருநாள் திறக்கப்பட்டால், அங்கேதான் தாகூர் வாழ்ந்த அசலான வாழ்க்கையின் சுவடுகள் மிஞ்சியிருக்கும் எனவும் எழுதிச் செல்வது அருமையானது.

எப்படி கல்கத்தாவின் ஒருபக்கத்து வறுமையையும், வெயிலையையும், அழுக்குகளையும், பாழடைந்த வீடுகளையும் சொல்கின்றாரோ அதுபோல வங்காளம் தனித்து வங்காளிகளின் முகத்தை மட்டும் கொண்டதல்ல என்கின்ற அவதானத்தையும் முன்வைக்கின்றார். வங்காளம் வெவ்வேறு குடியேறிகளால் (பீகாரிகள்) மட்டுமில்லை கொஞ்சம் கிராமங்களுக்கு உள்ளே சென்றாலே அங்குள்ள பழங்குடிகள் வேறு மொழியில் பேசி வாழ்ந்து கொண்டிருப்பதையும் அவர்களையும் உள்ளடக்கியதுதான் வங்களாத்தின் அசல் முகம் என நமக்குக் காட்டுகின்றார்.

மேலும் இதையெல்லாம் விட ' சனநெரிசலில் இந்த இந்திய ஆண்கள் ஏதோவெல்லாம் ஜாலவித்தை காட்டிவிட்டு மறைவார்கள். நாக்கை நீட்டி ஏதோ அருவருப்பான சைகைகளை எல்லாம் செய்வார்கள். போகின்றபோக்கில் பெண்களின் குண்டிகளைத் தட்டுவதற்காகவே விரைவாக போவதைப் போல பாசாங்கு செய்வார்கள். இல்லையோ, அவர்களது கைகள் மார்பை உரசுவதைப் போல போவார்கள். இந்திய பயணங்கள் முழுதும் நான் எதிர்கொண்ட நெருக்கடி இது' என்று பெண்கள் பயணங்களிடையே எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் உள்ளபடி சொல்கின்றார்.

அதுபோல விஷ்ணுபூருக்கு கோயில்களைப் பார்க்கச் சென்றபோது ஆண்களின் வெறித்தனமான பார்வையில் சிக்குக்குப்பட்டு, உரிய அடையாள அட்டைகள் இல்லாது (நர்மி இலங்கையிலிருந்து மேற்படிப்புக்காக கல்கத்தா சென்றவர்) ஒரு அறை எடுத்துக்கூட தங்க விடாது வெளியேற்றப்பட்டு, நள்ளிரவு 2 மணிக்கு நெரிசலில் ரெயிலில் பீரியட்ஸும் தொடங்க நடந்த பயணத்தை அவர் விபரிக்கும்போது ஆண்களாகிய நமது privileges குறித்து வெட்கப்பட மட்டுமில்லை, 'இந்தப் பெண்கள் எல்லாவற்றுக்கும் முறைப்பாடு செய்கின்றார்கள், இங்கே எல்லாமே அவர்களுக்கு சமனாக இருக்கின்றது/கொடுக்கப்படுகின்றதுதானே' என்று எடுத்தவுடனே முன்முடிவுகளை எழுதுபவர்கள் தங்களைத் தாங்களே ஒருகணம் நிதானித்துப் பார்க்கவும் நர்மியின் இந்த 'கல்கத்தா நாட்கள்' சொல்கின்றது.

இவ்வாறு யதார்த்தத்தின் இருட்டுத் தன்மையுடன், ஆனால் அதேசமயம் பயணம் மீதான பித்தையும் ஒரு பிரதிக்குள் கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல. மேலும் நானும் கல்கத்தா பற்றி எதிர்மறையான அனுபவங்களையே நிறையப் பேர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். இலக்கியம் சார்ந்ததல்ல, பயணங்களைப் பற்றி எழுதும்போது ஒரு நிதானத்துடன் எழுதக்கூடிய ஜெயமோகனே மேற்கு வங்காளம் ஒரு அசிங்கமான நகர் என்று எழுதியது உள்ளிட வேறு சில நண்பர்கள் அங்கே பயணித்துச் சொல்லியவை அவ்வளவு நேர்மறையானவையல்ல. இவற்றையும் மீறி நர்மியின் இச்சிறு நூலை நான் வாசித்தபோது என்னையறியாமலே என்றேனும் ஒருநாள் கல்கத்தாவுக்குப் பயணிக்கவேண்டும் என்ற பெருவிருப்பு எழத் தொடங்கியது (அதை என் நண்பருக்கும் உடனே சொன்னேன்). மேலும் இந்த நூலில், நர்மி சில்வியா பிளாத், கமலா தாஸ், ஜோவே கிமெரஸ் ரோஸா, கலீல் ஜிப்ரான், தாகூர் என பல படைப்பாளிகளின் எழுத்துக்களை நமக்கு நினைவூட்டிச் செல்வது எனக்கு மிக நெருக்கமாக இருந்தது.

இச்சிறு நூலை வாசிக்கும்போது, நர்மி இதை விரிவாக எழுதுவதற்கான அனுபவங்களும், களங்களும் அவருக்குள் ஊறிக்கிடக்கின்றது என்று அறிந்து கொள்ள முடிகின்றது. இனி வரும் பதிப்பில் அவர் இவற்றை விரித்து எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும். தமிழில் நீண்டகாலத்துக்குப் பேசக்கூடிய பயண நூலாக அது மாறவும் கூடும். அதுபோலவே இவ்வளவு அழகாக கல்கத்தாவின் இருளையும்-ஒளியையும் விவரித்துக் கொண்டுவந்த நர்மி இறுதி அத்தியாயத்தின் ஒரு துர்நினைவோடு முடித்திருக்கத் தேவையில்லை. அது இந்த நூலை ஒரு அந்தரத்தில் அல்லது கல்கத்தாவுக்குப் பயணம் செய்வது பாதுகாப்பானதா என்ற கேள்வியோடு நிறுத்திவிடுகின்ற ஆபத்தும் இருக்கின்றது. நிச்சயமாக அது நர்மியின் விருப்பாக இருக்காது என்பதைப் பயணங்கள் மீது பிரியமுள்ள நானறிவேன். ஆனால் ஆரம்பப் பயணிக்கு - முக்கியமாக பெண்களுக்கு- அச்சத்தின் நிமித்தம் கல்கத்தாவிற்கான நுழைவாயிலை சிலவேளைகளில் மூடிவிடவும் கூடும்.

இன்றைக்கு தமிழில் எழுத்தென்பது புனைவாக மட்டுமே குறுகிய எல்லைக்குள் பார்க்கப்படும்போது நர்மி போன்றவர்களின் அல்புனைவுகளை நாம் கவனித்துப் பேசுவதன் மூலம் தமிழில் புதிய செல்நெறிகளைத் திறக்கமுடியும். என் தனிப்பட்ட வாசிப்புத் தேர்வாக நம்மவர்களாகிய நர்மி, பிரசாந்தி (சேகரம்), றின்னோஸ்ஸா, ஷர்மிளா ஸெய்யத் (அவர் புனைவுகள் எழுதினால் கூட) போன்ற பலரின் அல்புனைவுகளை விருப்புடன் வாசித்துக் கொண்டிருக்கின்றேன். மேலும் அவர்களின் எழுத்துக்களை பெண் எழுத்து என்றெல்லாம் சுருக்கிவிடத் தேவையுமில்லை.

நர்மியின் இந்த 'கல்கத்தா நாட்களின்' நீட்சிதான், அவரை அண்மைக்காலத்தில் இலங்கையில் பலர் கவனிக்கத் தவறிய இடங்களுக்குச் சென்று விரிவான பயணக்கட்டுரைகளாக எழுதிக் கொண்டிருக்கும் திறப்பைச் செய்திருக்கலாமென்று நான் நம்புகின்றேன். பயணத்தை ஒரு மோஸ்தராக்கி அதை எழுத்தில் வைப்பவர்களே இங்கு பெரும்பான்மையினரே. ஆனால் நர்மி போன்றவர்கள் அதை தம் வாழ்வின் பகுதியாக, தமது சந்தோசத்தின், நிம்மதியின், விடுதலையின்,ஆற்றுப்படுத்தலின் ஒரு பாதையாக ஆக்கிக் கொள்வதை அவர்களின் எழுத்தினூடு நாமும் ஒரு பயணியாக மாறும்போது அறிந்து கொள்ள முடியும்.

**********


(Jan 17, 2025)

பனிக்காலத் தனிமை - 05

Friday, January 31, 2025

 

 1.

 
கடந்தகாலத்தினதும். எதிர்காலத்தினதும் பொறிகளில் அடிக்கடி அகப்படாதவர் மிகச் சிலரே. அதை எப்படி எதிர்கொள்வது என்பதற்கு, இந்தப் பூமியில் மனிதர்கள் வாழாது, தாவரங்களும், விலங்குகளும் மட்டும் இருந்தால் கடந்தகாலம்/எதிர்காலம் என்பது இருக்குமா? என்று யோசித்துப் பார்க்கலாம். அதாவது 'நேரம்' என்பதை அர்த்தமுள்ள முறையில் பேசமுடியுமா? இப்போது என்ன நேரம் என்றோ அல்லது என்ன திகதி என்றோ பேசுவதற்கு அர்த்தம் ஏதுமிருக்குமா? ஒரு மரத்திடமோ அல்லது ஏதேனும் விலங்கிடமோ, 'என்ன நேரம்?' என்று கேட்டால், அவை இந்த நேரம் என்பது இப்போதுதான் (Now), வேறென்னவாக இருக்கப் போகின்றது? என்றுதானே சொல்லக்கூடுமே தவிர, கடந்தகாலம்/நிகழ்காலத்தை முன்வைத்து காலத்தை நம்மைப்போலக் கணிக்கப் போவதில்லை.

இந்த உலகில் நாம் இயங்குவதற்கு மட்டுமே இந்த மனதும், நேரமும் அவசியமாக இருக்கின்றது. மேலும் நம் மனமானது எம்மைக் கட்டுப்படுத்துவதற்காய் தொடர்ந்து நிகழ்காலத்தை கடந்தகாலத்தோடும், எதிர்காலத்தோடும் தொடர்புபடுத்திக் கொண்டிருக்கின்றது. இதன் மூலம் நாம் நிகழில் இருக்கமுடியாது எமது அசலான 'மனதை' இழக்கின்றோம். இவ்வாறு நிகழில் இல்லாது அலைபாய்ந்து கொண்டிருப்பதால்தான் எமது எல்லாக் கடந்தகாலத் துயரங்களும், எதிர்கால ஏக்கங்களும் தொடங்குகின்றன.

ஸென்னில், நீங்கள் பிறப்பதற்கு முன் உங்கள் அசலான முகம் எதுவாக இருந்தது என்று ஆழமான கேள்வியொன்று இருக்கின்றது. இந்தக் கேள்வி நேரடியாகப் பதிலை அறிவற்குக் கேட்கப்படுவதில்லை. காலம்/வெளி என்கின்றவற்றை ஊடறுத்து நம்மை இந்தக் கணத்தில் இருக்க வைப்பதற்காய் நம்மிடம் கேட்கப்படுவது. இவ்வாறு கேட்பதன் மூலம் நாம் தன்னிலை உணர்தலையும் அடையமுடியும் என்று ஸென் கூறுகின்றது. இந்தக் கேள்வியுடன் தமது அசலான முகத்தைத் தேடத் தொடங்கி ஞானமடைந்தவர்களின் எழுநூறுக்கும் மேற்பட்ட கோவன்கள் (Koans) ஸென் மரபில் இருக்கின்றன .

ஒருவர் ஆறுவருடங்களில் பனி மலைகளில் தியானம் இருந்தவர் ஒருநாள் விடிவெள்ளியைப் பார்க்கும்போது ஞானமடைகின்றார். இன்னொருவர் பனியில் உறைந்துபோன கையை வெட்டும்போது ஞானமடைகின்றார். அவரே போதிதர்மரின் சீன மரபில் வரும் ஸானில் இரண்டாம் பரம்பரை ஆசிரியராக இருக்கின்றார். இன்னொருவர் தனது முகத்தின் விம்பத்தை நீரில் பார்க்கும்போது தன்னிலை அடைகின்றார். இவ்வாறு எண்ணற்ற கதைகள் அசல் முகம் எதுவாக பிறப்பதற்கு முன் இருந்தது எனத் தேடியபோது நடந்தவையென ஸென் மரபில் இருக்கின்றன.

எனக்குக் காலத்தை ஒரு நேர்கோட்டில் வைத்துப் பார்க்கும் கற்பனைகள் அடிக்கடி வருவதுண்டு. அதாவது கடந்தகாலத்தில், நிகழ்காலத்தில், எதிர்காலத்தில் தோன்றிய/தோன்றும்/தோன்றபோகும் அனைவரையும் ஒரு நேர்கோட்டுத் தெருவில் நடந்துபோகின்றவர்களாகக் கற்பனை செய்வதுண்டு. கடந்தகாலத்தில் காலமாகிப் போனவர்கள் இப்போதும் நடந்து கொண்டிருப்பார்கள் என்றும், இப்போது நடக்கும் நாங்கள் அவர்களைச் சந்திக்க முடியாவிட்டாலும் அதே பாதையில் நடமாடிக் கொண்டிருப்பதாகவும் நினைப்பதுண்டு.

மேலும் காலம் உறைந்து போகுமா அல்லது காலம் என்னவாகும் என்ற கேள்வியை சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சத்திரசிகிச்சைக்காக மயக்கத்தில் ஆழ்த்தியபோது எனக்குள் எழுந்திருந்தது. சில மணித்தியாலங்கள் என்னை மயக்கத்தில் ஆழ்த்தி சத்திரசிகிச்சை செய்தபோது எழுப்பியபோது, அப்போது எனக்குரிய காலம் என்னவாக இருந்தது. எனக்கு அப்போது இந்த உலகத்தில் நிகழ்ந்தது எதுவுமே தெரியாது. அப்போது எனக்குரிய காலம் என்னவாக இருந்தது. அந்த மணித்தியாலங்களில் எனக்கு கடந்தகாலமோ நிகழ்காலமோ, ஏன் நிகழ் என்பது கூட என் மனதுக்கு இருந்திருக்காது. அதை ஒரு 'பற்றற்ற மனோநிலை' எனச் சொல்லலாமா?

சிலவேளைகளில் ஞானமடைந்தவர்கள் இவ்வாறு ஒரு கடந்தகால/எதிர்காலமற்ற ஓர் அந்தரமான வெளியில்தான் தமது நிகழ்காலத்தைத் தரிசிப்பார்களோ என்று அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு. நான் மீண்டும் 'மயக்க நிலையில் இருந்து மீள்வேன்' என்பதால் எவ்வித பதற்றமுமில்லாது என் சுயம் உறக்கத்திலிருந்தோ, அப்படித்தான் மரணத்தின்போதும் -இந்த வாழ்வை முழுமையாக ஏக்கங்களோ/ஏமாற்றங்களோ இல்லாது வாழ்ந்துவிட்டுப் போனால் - மரணங்கூட இப்படியான நிம்மதியான நிலையாயிருக்குமோ என்று எண்ணுவதுண்டு.



2.

எனக்குத் தெரிந்த சிலர் அவர்களுக்குத் தமது கடந்தகால வாழ்வு நன்கு தெரியும் என்று சொல்வார்கள். எனது நண்பர் ஒருவர் தான் கடந்த பிறப்பில் ஒரு வண்ணத்துப் பூச்சியாக இருந்தேன் என்று உறுதியாகச் சொல்வார். அவர் எங்கே வண்ணத்துப்பூச்சியைக் கண்டாலும் ஆழமாக அவற்றை இரசிக்கத் தொடங்கி விடுவார். நான் யாரென்றோ, எங்கே இருக்கின்றேன் என்ற பின்புலமோ தெரியாமலே அவர் என்னோடு முதன்முதலாகப் பேசத் தொடங்கியதே, ஒரு வண்ணத்துப்பூச்சியை நான் எடுத்த புகைப்படத்தின் மூலந்தான். 


அவர் கடந்த பிறப்பில் வண்ணத்துப்பூச்சியாக இருந்திருப்பின், என்னுடைய அசல் முகம் அப்போது எதுவாக இருந்திருக்கும்? அதை நான் அவ்வப்போது அவரோடு பழகிய காலங்களில் என்னிடமே கேட்டதுண்டு. அந்தக் நண்பருக்கு வண்ணத்துப்பூச்சி மட்டுமல்ல, அவரின் இளவயதில் இறந்துபோன அம்மா கூட ஒரு மரமாகக் காட்சியளிப்பார். அந்த மரத்தை நானும் நன்கறிவேன். நாங்கள் அதைக் கடந்துசெல்லும்போது அவர் அதனோடு (உள்மனதில்) பேச நிறைய நேரமெடுத்துக் கொள்வார். அந்த மரத்தைப் பார்த்து மனம் நெகிழ்ந்து கண்ணீர்விடக்கூடியவராகவும் அவ்வளவு நெருக்கமானவராக அதனோடு இருந்திருக்கின்றார்.

எனக்கும் இப்படியான பல 'பைத்தியக்காரத்தனங்கள்' இருப்பதால் அவரை எளிதாகப் புரிந்துகொள்ள முடிந்தது. பின்னர் ஒருநாள் அவரது துணைவரோடும், குழந்தையோடும் நடந்து போனபோது அந்த மரத்தைக் கண்டு நெகிழ்ந்ததைப் பற்றி என்னோடு பகிர்ந்திருந்தார். அவர்களுக்கு அது சற்று வியப்பாக இருந்ததாகவும், அந்த மரத்தை தான் அணைத்துக்கொண்டதைப் புரிந்துகொள்ளக் கடினமாகவும் இருந்தது என்றும் சிரித்தபடி சொன்னார்.

அவரைப் போன்றவர்கள் எளிதில் தியானத்தில் அமிழமுடிவதையும் அவதானித்திருக்கின்றேன். அவரோடு பழகிய காலங்களில் அவருக்கு அறிமுகமான ஒரு தியான நிலையத்துக்கு என்னைக் கூட்டிச் செல்வார் (அதன் பெயர் வேண்டாம்). அவர்கள் கடவுள் என்ற எதையும் அடையாளப்படுத்திச் சொல்வதில்லை. தியானத்தின்போது மெளனமாகச் சுவரைப் பார்த்து இருக்க வேண்டியதுதான். ஆனால் தியானம் முடிந்தபின் வெவ்வேறுவகையான பின்-தியானச் செயற்பாடுகள் இருக்கும். அதில் ஒன்று வட்டமாக சுற்றி நடந்தபடி ஒவ்வொருவரின் முகத்தைப் பார்ப்பது.

சும்மாவே எனக்கு எவரின் கண்களை நேரடியாகப் பார்க்கும் சிக்கல் சிறுவயதுகளில் இருந்தே இருக்கின்றது. அதுவும் அறிமுகமற்ற மனிதர்களின் முகத்தை உற்று சில நொடிகள் பார்ப்பதும் பிறகு நடப்பதும் என்றால் எவ்வளவு கடினமாக இருக்கும்? ஆனால் இந்தப் பயிற்சியின்போது என் நண்பரின் முகத்தை நேரடியாகப் பார்க்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் என்னையறியாமலே சிரிப்பு வந்துவிடும் (நம்புங்கள் நண்பர்களே, சும்மா பொழுதில் சிரிக்கவே அடம்பிடிப்பவனுக்கு அப்போது சிரிப்பு நிறைய வந்தது). இதையேன் சொல்கின்றேன் என்றால், தியானத்தை விட, தியானத்துக்குப் பிறகான செயற்பாடுகளில் நான் நிகழில் நிறைய இருந்திருக்கின்றேன் என்று குறிப்பிடுவதற்காகத்தான்.



3.

நாம் கடந்தகாலத்தைக் காவிக் கொண்டிருவதால், நிகழ்காலத்தில் இருந்துகொண்டு, எதிர்காலத்தை பற்றித் திட்டமிடுகின்றோம். ஆகவேதான் தேவையற்ற நிறைய விடயங்களைக் கற்பனை செய்து கொள்கின்றோம். ஒருவகையில் நமது கடந்தகாலம் நம்மை எச்சரிக்கையாக இருக்கச் சொல்லும் பாடங்களைக் கற்பிப்பதாக மனம் நினைத்துக் கொள்கின்றது.

எனது ஆசிரியரான தாயிடம் இளவயதில் சென்று இப்போது பிரான்சிலிருக்கும் மடாலயத்தை நடத்தி வருபவர்களில் முதன்மையானவர் Brother Phap Huu. அவர் கனடாவுக்கு தப்பிவந்த வியட்னாமிய அகதிகளின் மகன். நான் இருக்கும் நகரிலேயே வளர்ந்தவர். அவர் தாயிடம் சேரும்போது, தொடக்க காலங்களில் தான் அவ்வளவு விரைவாகவும் நிறையவும் சாப்பிடுவேன் என்று சொல்லியிருக்கின்றார்.

எல்லா ஸென் இடங்களைப் போல, சாப்பிடுவது கூட தாயினுடைய இடத்தில் ஒரு தியானம் போன்றது. அவ்வளவு மெதுவாகவும், அமைதியாகவும் சாப்பிடவேண்டும். இது Phap Huuவை மிகக் கஷ்டப்படுத்துகின்றது. அவர் எவ்வளவு தன்னால் முயன்றபோதும் நிதானமாகச் சாப்பிட முடியவில்லை என்கின்றார். பின்னர் அவர் இதை ஆழமாக யோசித்தபோதுதான், அது தனது பெற்றோரிடமிருந்து வந்ததென்று கண்டுபிடிக்கின்றார். போர்க்காலத்தில் விரைவாகவும், நிறையச் சாப்பிடுவதும் முக்கியமானது. நாளைக்கு உணவிருக்குமா இல்லையா என்பதே பெரிய கேள்வியாக அங்கே இருக்கும். அதுவே தாங்கள் கனடாவுக்கு வந்தபோதும் விரைவாகவும், நிறையச் சாப்பிடுவதற்கும் முக்கிய காரணமாக இருந்தது என்கின்றார். ஒருவகையில் உணவென்பது போரின் மிச்சங்களைக் காவிக் கொண்டிருக்கின்றது; அதைக் கண்டுபிடிக்க தனக்கு நிறைய நாட்கள் எடுத்ததென்கின்றார்.

இவ்வாறு நாம் பல கடந்தகால விடயங்களை அச்சத்தினால் பாதுகாப்பு என்ற பெயரில் காவிக் கொண்டிருக்கின்றோம். ஈழத்தமிழர்களாகிய நம்மில் பலர் கையில் சிறு சேமிப்பு கூட இல்லாது போரின் காரணமாகப் புலம்பெயர்ந்துவிட்டு, அந்த அச்சம்/எதிர்காலப் பாதுகாப்புக் காரணங்களுக்காக இப்போது தமது வாழ்நாளையே பணம் சம்பாதிப்பதற்காக அர்ப்பணித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். இந்த நாட்டில் ஒரளவு உழைப்புடன் எளிய வாழ்வை - நாம் யுத்ததில் இருந்ததைவிட நிம்மதியாக- வாழலாம் என்றாலும் எங்களில் பெரும்பாலானோர்க்கு அது முடிவதில்லை. எங்களில் பலர் நாளைக்கு நாம் எமக்கு விருப்பமான வாழ்வை வாழமுடியும் என்று கனவுகளுடன் இன்றைய பொழுதுகளை தமக்குரியதாக வாழமுடியாது அந்தரப்பட்டு வாழ்ந்து கொண்டு இருப்பதையும் அறிவேன். இன்றில் வாழமுடியாது போனால், நாளை நமக்கு எதனைத்தான் அப்படி அர்த்தமுள்ளதாகக் கொண்டுவரப் போகின்றது?

ஆகவே நாமெல்லோரும் 'எமது அசலான முகம் நாம் பிறப்பதற்கு முன் எதுவாக இருந்தது?' என்று கேட்டுப் பார்ப்பது நல்லது. அது நம்மை மீண்டும் மீண்டும் நிகழுக்குக் கொண்டு வந்து சேர்க்கும். இந்த உடலும் மனமும் இந்தக் கணத்துக்குரியதே. இந்தப் பொழுதில் நாம் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் இருக்கின்றோமா அல்லது நிம்மதியும் சந்தோசமும் நாளை வந்துவிடும் என்று கற்பனை செய்துகொண்டிருக்கின்றோமா அல்லது கடந்தவந்த காலங்கள் பொற்காலமென ஏங்கிக் கொண்டிருக்கின்றோமா என்று நிகழில் நின்று நிதானித்துப் பார்ப்பது அனைவர்க்கும் நன்மை பயக்கக் கூடியது.

***********


(Jan 07, 2025)

வாசகர் கடிதம்

Thursday, January 30, 2025

இறுதியில் எழுதிய பதிவான (மழைக்காலத் தனிமை - 04) இற்கு ராஜேஷ் அருமையான பின்னூட்டமொன்றை எழுதியிருந்தார். அதை இங்கே தனியே பதிந்து விடுகின்றேன். அந்தப் பதிவை எழுதி முடிக்கும்போது கிட்டத்தட்ட காலை மூன்று மணி. எனினும் நான் நினைத்ததை எழுத முடிந்ததா என்ற சந்தேகம் இருந்தது. இந்தக் காலையில் இதை வாசிக்கும்போது சிறு நிறைவு. மிக்க நன்றி ராஜேஷ்.
*******************

“நான் மிகச் சரியாக உங்களை என் சகனாக கண்டடைந்தேன்..நீங்கள், நான் தொகுக்க முயலாத, (உண்மையில் விரும்பாத) என் சில அக அனுபவங்களை எளிதாக வார்த்தைகளாக்குகிறீர்கள், மேலதிகமாக உங்களுக்கு ஒரு பரந்த தத்துவ மற்றும் இலக்கிய வாசிப்புத் தளமும், பயணமும், தீராத மெய்த் தேடலும் உள்ளது, மேலும் மிகவும் அச்சுறுத்தும் அல்லது வாழ்விலிருந்து கசப்பும், நொய்மையும் மட்டுமே எஞ்சும் ஒரு பின்புலம் கொண்டவராகிலும், வாழ்வின் மீது இன்னும் தீராத காதலும் கொண்டவராக உங்களைப் பார்க்கும் பொழுது சமயங்களில் எனக்கு அன்பு கலந்த பொறாமையுணர்வும் எழுகிறது.

மேலும், முகநூல் போன்ற எந்த உள்ளார்ந்த தனிநபர் அனுபவமும் மலினப்பட்டுவிடும் அவசர கதி ஊடகங்களில், யாதொன்று குறித்தும் அலட்டிக் கொள்ளாமல் உங்கள் மனதை முன் வைக்கும் திடம் நிச்சயம் என்னை பொறாமை கொள்ளச் செய்கிறது.

மனம், எண்ணம், வெறுமை, சுயம் போன்றவற்றை மிகச் சிரமப்பட்டு மறக்க விழைபவன் என்ற வகையில், நியாயமாக நான் உங்களை வாசிப்பதைத் தவிர்க்க வேண்டும்.ஏனோ, மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன்.

குறிப்பாக நீங்கள் இன்று குறிப்பிட்ட Eckart Tolle யுடைய Power of Now புத்தகத்திலிருந்த அவரது அனுபவம், இந்த தவிப்பும், தனிமையும் கொண்டு ஒரு குருவைத் தேடி, கண்டடைந்தும் அவர்களிடம் தம் கேள்வியை முழுமையாகக் கூட முன் வைக்க முடியாமல் மருகும் பல Seekers அவர்களது அனுபவங்களை படிக்கும் பொழுதும் பார்க்கும் பொழுதும், சாமத்தில் தேம்பும் சிசுவுக்கு என்ன ஆறுதல் சொல்ல முடியும் போன்ற சுய பச்சாதாபத்தை அடைந்திருக்கிறேன்.

இது ஒரு சுழல், ஒரு வழிப்பாதை, நீங்கள் ஒன்று கண்டடைய வேண்டும், அல்லது அதன் யத்தனத்தில் காணாமல் போக வேண்டும்.இடையில் எஞ்சும் அனுபவங்களை எழுதி வைத்தால், யாருக்காவது உதவக் கூடும்.

நான் எதேச்சையாகக் கண்டடைந்த Wayne wirs என்ற நாடோடி வெகு நாட்கள் என்னை அலைக்கழித்தார்.

மெல்ல மெல்ல அத்வைதம் அல்லது Non Duality குறித்து அறிந்து கொண்டேன்.ரமணர் எனக்கு நெருக்கமாக இருந்தார்..ஒரு மாபெரும் தொடர்ச்சியை அவர் உருவாக்கியிருந்தார் என பின் அறிந்து கொண்டேன்.ஓஷோ ரமணர் குறித்து ஏதோ ஒரு உரையில் குறிப்பிட்டிருந்தார். ஆன்மீகத்தை ஏதோ ஒரு மலையுச்சி மூடு மந்திரமாக அன்றி, இயல்பான வாழ்கை முறையாக பகிர்ந்து கொள்ளும் பல விழிப்புணர்வு பெற்ற ஞானிகள் இக்காலத்திலும் இருக்கவே செய்கின்றனர்.

இப்பொழுது மனம் கொஞ்சம் ஓய்வில் இருக்கிறது.ஒருவகையில் இது கற்றதை மறக்கும் கால இடைவெளி, அந்த பேய் திரும்பும் நாள் குறித்த அச்சம் இன்னமும் இருக்கிறது..அது என்னை அல்லது நானென நான் நம்பிக் கொண்டிருக்கும் எதையும் இழப்பது குறித்த அச்சம்.

ஞானமடைந்த இருவர் சந்தித்துக் கொண்டால், அவர்கள் என்ன பேசிக் கொள்வார்கள் என அவ்வப்போது நினைப்பேன்..

சமீபத்தில் எம்.டி.எம்மின் ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொள்ளும் கவிதைத் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன். மற்றொரு அச்சமூட்டும் அழகான தொகுப்பு.”


******

(Jan 05, 2025)

கார்காலக் குறிப்புகள் - 68

Wednesday, January 29, 2025

 

கலை அழைத்துச் செல்லும் பாதை
***************

உஷா ஜேயைப் (Usha Jey) பற்றி பலர் அறிந்திருப்பீர்கள். பரத நாட்டியத்தை ஹிப் ஹொப்போடு கலந்து Hybrid Bharatham என்கின்ற புதிய வகை நடனத்தை அறிமுகம் செய்கின்றார். அண்மையில் அவர் மும்பையில் கொடுத்த TedTalk ஐ பார்த்திருந்தேன். தானொரு தமிழர், யாழ்ப்பாணத்தில் பிறந்து பிரான்சில் வசிக்கின்றார் என்று ஓர் அறிமுகத்தைக் கொடுக்கின்றார். உஷா இந்த நடனங்களின் புகழால் பல முன்னணி நிறுவனங்களின் (Elle, Levis, Converse) விளம்பரங்களில் வந்திருக்கின்றார். ஒரு புலம்பெயர்ந்த அகதி வாழ்வில் தனது சொந்தத் திறமையால் ஒருவர் இந்தளவு உயரத்துக்கு பறப்பது அவ்வளவு எளிதல்ல.. நாம் இவ்வாறான இடங்களை அடைவதற்கு நமக்கு எந்த முன்னோடிகளும், பின்புலங்களும் இல்லை என்பதை அறிவோம் இல்லையா?

சில வருடங்களின் முன், இங்கிலாந்தில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு நிகழ்விலும் இவர் நடனம் ஆடியிருக்கின்றார். ஆங்கிலேயர் தம் காலனித்துவ பெருமைகளோடு இன்னுமிருக்கும் நாட்டில் தமிழ்க்கலாசாரத்தை பிரதிபலிக்கும் குத்துப்பாட்டுக்கு ஆடியதுதான் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது.

எனக்குத் தெரிந்து உஷா ஜே, நவனீ (Navz-47), ஷோபியா அக்கரா போன்ற பல பெண்கள் தங்களுக்கு முன்னோடி என்று மாயா அருட்பிரகாசத்தை (M.I.A) குறிப்பிடுகின்றார்கள். உஷா, நவனீ போன்றவர்கள் மாயாவின் இசை நிகழ்விலும் இப்போது பங்குபற்றியும், மாயாவோடு உரையாடல்களையும் செய்து கொண்டிருப்பார்கள். ஒரு பெண் (மாயா) முன்னோடியாகச் சென்று திறப்பைச் செய்யும்போது எத்தனை பேருக்கு அவர்களின் கதவுகள் திறக்கின்றன என்பது எவ்வளவு அருமையானது.

இதனோடு இன்னொரு புறமாக நோர்வேயிலிருந்து '9 Grader Nord' குழுவை உருவாக்கி நம்மிரு பெண்கள் பாடி நோர்வேயின் மிகப்பெரும் விழாவில் (அவர்களின் கிராமி போன்றது) வென்றிருக்கின்றனர். அத்தோடு நவனீ, 9 Grader Nord போன்றவர்கள் தனித்து தமிழில் பாடுபவர்கள். தமிழில் பாடிக்கொண்டு தமிழ் பேசாத அந்நிய நிலங்களில் தமது வேர்களை ஊன்றிக்கொள்வதென்பது எவ்வளவு அற்புதமானது.

எமது தமிழ்ச் சூழலில் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிக்கும்போது out of box ஆக நினைப்பது வெகு அரிது. வைத்தியர்களாகவும், பொறியியலாளர்களாகவும் விரும்பியவர்கள் வரட்டும். அதுவும் தேவையானதுதான். ஆனால் அதைத்தாண்டி வளரும் பிள்ளைகளை நாம் எந்தளவுக்கு ஒரு சமூகமாக ஆதரிக்கின்றோம் என்று யோசிக்க வேண்டும். எந்தப் பிள்ளைக்குத் திறமையிருந்தாலும் ஒருகட்டத்தில் அவர்களைத் தாங்கிக்கொள்ளும் சமூகப்பாதுகாப்பும், பொருளாதார நிலைமையும் வேண்டியிருக்கும். நாம் அந்தச் சமூகக்கட்டமைப்பை இத்தனை காலத்துக்குப் பிறகும் அவர்களுக்காக உருவாக்கவில்லை என்பதுதான் பெருஞ்சோகம் .

அவர்களாகவே எல்லாவற்றையும் தாங்கி, அடிபட்டு மேலோங்கி வரும்போது மட்டும் ஆகா ஓகோவென்று புகழ்கின்றோமே தவிர, அவர்களின் கலை சம்பந்தமான வளர்ச்சிப்பாதையில் சமூகமாக நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்று யோசிக்க வேண்டும். மாயா இசையில் செய்ததைப் போன்று இப்போது மைத்திரேய் ராமகிருஷ்ணன் ('Never Have I Ever:) ஒரு பெரும் உடைப்பை திரையில் செய்திருக்கின்றார். அவரை முன்னோடியாகக் கொண்டும் ஒரு தலைமுறை இனி திரையை நோக்கி ஆர்வமாக உழைக்கும் என்று நம்புகின்றேன்.

*******

(Jan 11, 2024)

பனிக்காலத் தனிமை - 04

Monday, January 27, 2025


1. 


ல வருடங்களுக்கு முன் தியானத்துக்காக ஸென் நிலையம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். காலையில் தியானப்பயிற்சியை ஓர் ஆசிரியர் தந்துகொண்டிருந்தார். ஒரு எண்ணத்துக்கும் இன்னொரு எண்ணத்துக்குமான இடைவெளியைக் கவனிப்பதன் அவசியம் பற்றி அவர் தியான வகுப்பின் பின்னரான கேள்வி-பதிலில் சொல்லிக் கொண்டிருந்தார். இலட்சக்கணக்கில் மின்னல்களாய் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்களை 'உறையவைத்தால்', எழுதுவதில் விருப்பமிருக்கும் என்னால் எப்படி எழுதமுடியும் என்று அப்போது திகைப்பாக இருந்தது. அதை அவரிடம் கேட்கவும் செய்தேன். ஓரு படைப்பாளி வாசித்து, நினைவில் வைத்து, அலசி ஆராய்ந்து என்று, எண்ணங்களோடுதானே எப்போதும் விளையாடிக் கொண்டிருக்கவேண்டும் என்று அப்போது நினைத்தேன்.

நாம் எண்ணம் (thought) என்று நினைக்கும் ஒன்றுக்கு அப்பால் ஆழமான சுயமொன்று (self) இருக்கின்றது. அதை அறிந்துகொள்ளல் அவ்வளவு எளிதுமல்ல. எண்ணங்களின் கூட்டுத்தொகைதான் சுயமென்று தவறாக விளங்கிக் கொள்ளக் கூடாது.

நமக்குள் எண்ணம் ஒன்று உதிக்கும்போது, நாம் அந்த எண்ணத்தை மட்டும் கவனிப்பதில்லை. அத்துடன் அந்த எண்ணத்தை கவனிக்கும் இன்னொருவராகவும் (watcher) இருப்பதைச் சிலவேளைகளில் பார்த்திருப்போம். இங்கேதான் பிரக்ஞையின் (consciousness) புதிய பரிணாமம் வந்து சேர்கின்றது.

நீங்கள் உங்கள் எண்ணத்தை உற்றுக் கவனிக்கும்போது, பிரக்ஞையின் இருப்பை உணர்ந்திருக்கலாம். பிரக்ஞையானது, எண்ணத்தை விட, இன்னும் ஆழமான ஓரிடத்திலோ அல்லது அதற்கு அப்பாலோ இருக்கும்.

மேலும் கடந்த காலத்துக்கும், எதிர் காலத்துக்கு அலைந்து கொண்டிருக்கும் எண்ணங்களே, எங்களை நிகழ்காலத்தில் இருக்க முடியாது செய்கின்றன. ஆனால் இந்த எண்ணம் தோன்றும்போது, நாம் பிரக்ஞையின் இருப்பை அதேகணத்தில் உணர்ந்தால், எண்ணமானது தனது வலுவை இழக்கின்றது.

அப்படி எண்ணமானது வலுவிழக்கும்போது, நமது உளவோட்டத்தில் (mental stream) தொடர்ச்சியில்லாது போகின்றது. அப்போது நாம் முதன்முறையாக மனமில்லாத (no-mind) இடைவெளியை உணர்கின்றோம். முதலில் இந்த இடைவெளி எண்ணங்களிடையே சிறியதாக இருக்கக்கூடும். பின்னர் தியானம் போன்ற பயிற்சிகளின் மூலம் அந்த இடைவெளியை இன்னும் அதிகரித்தும் செல்லலாம். இந்த 'மனமற்ற' இடைவெளியில் நிசப்தமும் அமைதியும் உங்களுக்குள் ஊடுருவதை உணரமுடியும்.

இதை இவ்வாறு வார்த்தைகளில் எளிதில் சொல்லிவிட முடியும். ஆனால் இதை உணர்வதற்கான அல்லது தெளிவதற்கான பயணம் என்பது நீண்டது.

2.

பு
த்தரின் சூன்யம் என்பது பலவிதங்களில் புரிந்து கொள்ளமுடியும். மேற்கில் ஸென் வந்தபோது வெறுமையும், சூனியமும் ஒன்றைப் போல பல இடங்களில் புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றது. சூன்யம் என்பது எதுவோ, ஆனால் நிச்சயம் வெறுமையோ/வெற்றிடமோ அல்ல. புத்தர் ஞானமடைதலை துன்பத்திலிருந்து விடுதலை (no suffering) என்று சொன்னவர். ஆனால் துன்பத்திலிருந்து விடுதலையான பின் அந்த நிலை எப்படியென்று அவர் வெளிப்படையாகச் சொல்லியவரல்ல. அந்த இடத்தில் -புத்தர் எப்படி இறப்பின் பின் என்ன நடக்கும் எனக் கேட்கும்போது அமைதி காத்தாரோ- அப்படியே துன்பத்திலிருந்து விடுதலையடைந்த பின் அது எப்படியிருக்கும் என்பது குறித்தும் அமைதி காத்தவர். அந்த நிலை புத்தரால் விபரிக்க முடியாதது என்றல்ல அர்த்தம்.

துன்பத்திலிருந்து விடுதலை என்பதை என்னவென்பதை நீங்களே உங்கள் இயல்பிலே அறியுங்கள் என்றே அது குறித்துப் பேசாது அமைதி காத்தவர். இல்லாவிட்டால் நாங்கள் எப்படி புத்தரை திருவுருவாக்கி, அவரில் அடையாளங்களையும்/குறியீடுகளையும் சுமத்தி கடவுளாக்கிவிட்டோமோ, அப்படியே 'ஞானமடைதலும்' வெறும் வெற்று வார்த்தைகளுக்குள் எவ்வித அர்த்தமோ/விடுதலையோ தராது சொற்களிலும்/பேச்சிலும் அர்த்தமில்லாது உறைந்து போயிருக்கும்.

இவ்வாறு எண்ணங்களை அவதானிக்கும் ஒரு கவனிப்பாளராக (watcher) மாறி, நமது பிரக்ஞையை அறிவதைப் போல, இன்னொரு விதமாகவும் நாம் இந்த எண்ணங்களிலிருந்து விடுதலை அடையவும் முடியும். அது நாம் தொடர்ந்து நிகழில் இருந்து கொண்டிருப்பது. அப்படி நிகழில் இருக்குந்தோறும் நாம் மனதில் ஒரு இடைவெளியை எண்ணங்களிடையே உருவாக்க முடியும். இதற்கான முக்கிய ஒரு பாதையாக தியானம் இருக்கின்றது. எந்த ஒரு வேலையைச் செய்தாலும் வேறு எந்த எண்ணமும் இல்லாது நிகழிலேயே திருப்ப திருப்ப இருப்பது.

மனமானது நம்மைக் காப்பாற்றும் ஒரு இயந்திரம் எனச் சொல்லலாம். அது மற்ற மனங்களைத் தாக்குவது, தற்காப்புச் செய்வது என்பதோடு (தகவல்களை) பல இடங்களில் இருந்து சேர்த்து, பின்னர் சேமித்து வைத்து அலசி ஆராயச் செய்கின்றது. அது ஒருவகையில் நல்லது, ஆனால் அது சிருஷ்டிகரமானது அல்ல.

எண்ணங்களின் இடைவெளியை காண்பதென்பது, சிந்திப்பதை நிறுத்தி வைப்பது போல் ஆகாதா என்றொரு கேள்வி நமக்குள் எழக்கூடும். எப்படி நான் தியான வகுப்பிற்குப் போனபோது எண்ணங்கள் இல்லாது எழுத முடியுமா என்று எனக்குச் சந்தேகம் வந்ததோ, அது போல உங்களுக்கும் தோன்றலாம். எண்ணமானது நம்மை எப்போதும் ஆக்கிரமித்திருப்பதால்தான் நமக்கு பல பிரச்சினைகள் வருகின்றன. பிரக்ஞையை நாம் உணரும்போது, எண்ணமானது அதன் ஒரு பகுதியாகின்றது.

எண்ணமானது ஒருபோதும் பிரக்ஞையாவது இல்லை ஆனால் பிரக்ஞையின் ஒரு பகுதியாக எண்ணம் மாறக்கூடியது. ஆகவே நாம் விழிப்புடன் இருக்கும்போது, பிரக்ஞையின் மூலம் எண்ணங்களை வேண்டியபோது மட்டும் 'பயன்படுத்தி'க் கொள்ளலாம். மற்ற நேரங்களில் எப்போதும் அலட்டிக் கொண்டிருக்கும் எண்ணங்களை 'சற்று அமைதியாய் இரும் பிள்ளாய்' என ஓரு மூலையில் வைத்துக் கொள்ளலாம்.

இப்படி எழுதுவதெல்லாம் குழப்பமானது என்பதும் எனக்குப் புரிகிறது. அதைவிட புத்தரைக் கடவுளாக்கி வணங்கும் பெளத்தர்களில் பெரும்பாலானோர் கூட, புத்தரைப் போல தங்களால் இந்தப் பிறப்பில் ஞானமடைதல் முடியாது என்றுதான் நம்புகின்றார்கள் எனச் சொல்லப்படுகின்றது. ஒருவகையில் இது புத்தர் கற்பித்தவற்றைக்கு நேரெதிர் திசையில் செல்வதைப் போன்றது.

மதம் என்ற கற்பிதம் மனிதரால் உருவாக்கப்பட்டது என்பதை உணராததால்தான் ஒவ்வொரு மதமும் தானே சிறந்ததெனச் சொல்லி சர்ச்சரவுகளில் ஈடுபடுகின்றது. இவற்றையெல்லாம் கண்டு வெறுத்துத்தான் நீட்ஷே போன்றவர்கள் கடவுள் இறந்துவிட்டார் என்று அறிவித்து புதிய பாதைகளைத் தேட முனைந்திருந்தார்கள்.

எல்லா அசலான கலைஞர்களும், படைப்பாளிகளும், அவர்கள் உணர்ந்தோ அல்லது உணராமலோ இந்த மனதைத்தாண்டிய, மனமில்லாத (no mind) வெற்றிடத்தில் வந்த அமைதியை உணர்ந்திருப்பார்கள். அதுவே அவர்களது சிறந்த படைப்புக்களைச் சிருஷ்டிக்க வைத்திருக்கவும் கூடும். பல எழுத்தாளர்கள் தமது எழுத்துக்கள் தம்மையறியாமல் எழுதிச் சென்றது என்று சொல்வதைக் கேட்டிருப்போம்.


உண்மையில் அவர்கள் அந்த சிருஷ்டியில் இருக்கும்போது, எண்ணங்களின் உலகிற்கு அப்பாலான மனமற்ற வெளியில் (no mind) அலைந்திருக்கின்றனர். அதுவே அவர்களின் மாபெரும் படைப்புக்களை உருவாக்க உதவியிருக்கின்றது. மிகச் சிறந்த உதாரணமாக இளையராஜாவிடம் எப்படி இந்த இசையை அமைத்தீர்களென்று பலர் அவரிடம் வியந்து கேட்கும்போது, அவர் சொல்கின்ற பதில் அவர் அந்த 'மனமற்ற வெளி'யில் அலைந்தபோது உருவாக்கிய இசைக்கோர்ப்புகள் என்பதை நாம் எளிதில் உணரமுடியும். அதை ஏதோ ஒருவகையில் அவரும் அனுபவிப்பதால்தான் ஒரு வெளிநாட்டு நிகழ்வொன்றில், நான் நாளை இல்லாமல் போனாலும் என் பாடல்கள் உங்களுக்காக ஒலிக்கும் என்று சொல்லிவிட்டு, சட்டென்று இனி எனக்கு இன்னொரு பிறப்பு இல்லை என்றும் தெளிவாகச் சொல்கின்றார்.

தன்னிலை உணர்தல் (self realization) இந்த வாழ்க்கைக் காலத்தில் நிகழுமா, நிகழாதா என்பதைவிட, அப்படி நம்மை உணரும் சாத்தியம் எப்போதேனும் இருக்கலாமென்ற சுவாரசியத்துடன், இந்தப் பயணத்தைச் செய்து பார்த்தல் எனக்குப் பிடித்தமானது என்பதையும் இந்தக்கணத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.



3.

 
ருவருக்கு முப்பதாவது பிறந்தநாள் வருகின்றது. அதுவரை அவர் மிகுந்த பதகளிப்புடன் வாழ்ந்து வருகின்றார். அத்தோடு அவருக்கு அடிக்கடி தற்கொலை செய்யும் எண்ணங்களும் வந்து கொண்டிருக்கின்றன. ஒருநாள் காலையில் எழும்பும்போது இந்த வாழ்வின் வெறுமை அவரைத் துரத்தியடிக்கின்றது. அவர் இனி வாழ்வது அர்த்தமில்லை என்று நினைக்கின்றார். அந்நியமாதலின் பெரும் அவஸ்தையை அன்று அவர் உணர்கின்றார்.

'என்னால் இனி ஒருபோதும் என்னுடன் வாழ முடியாது' ('I cannot live with myself any longer') என்கின்ற எண்ணம் திருப்பத் திருப்ப அவரின் மனதில் சொல்லப்படுகின்றது. அப்போது அவருக்குள் எங்கிருந்தோ ஓர் எதிர்பாராத சிந்தனை வருகின்றது. இப்படி ஒரு குரல் சொல்லிக் கொண்டிருந்தால், 'நான் ஒருவரா அல்லது இருவரா? நான் என்னோடு வாழ முடியாது என்று சொன்னால், நிச்சயமாக அது நான் ஒருவரல்ல, இருவர்' என நினைக்கின்றார். 'நான்' (I) மற்றும் 'சுயம்' (Self) இங்கே இருப்பின், யாரோ ஒன்றுதான் அசல் என்று மேலும் யோசிக்கின்றார்.

இந்த 'தன்னிலை உணர்ந்த' அந்தப் பொழுதில் தனது மனது நிறுத்தப்பட்டதை அவர் அவதானிக்கின்றார். 'நான் அவ்வளவு விழிப்புடன் இருந்தேன், எந்த எண்ணமும் எனக்கு அப்போது இருக்கவில்லை' என்கின்றார். அந்த நேரத்தில் ஒரு வித்தியாசமான சக்தி தன்னுடலில் மெதுவாக ஆரம்பித்து வேகமடைவதை அவர் பார்க்கின்றார். அது என்னை மிகவும் அச்சுறுத்தியது. என் உடல் அதிர்வில் நடுநடுங்கத் தொடங்கியது. அப்போது 'ஒன்றையும் எதிர்க்காதே' என்கின்ற வார்த்தைகளைத் திருப்பத் திருப்பக் கேட்டேன், அது யாரோ என் நெஞ்சுக்குள் இருந்து பேசுவதைப் போல இருந்தது. நான் ஒரு பெரும் வெற்றிடத்தால் உறிஞ்சப்படுவதை உணர்ந்தேன். அந்த வெற்றிடமானது வெளியில் இருந்தது அல்ல, எனக்குள் இருந்த வெற்றிடத்தாலேயே நான் இழுக்கப்பட்டேன். சட்டென்று எனது எல்லாப் பயங்களும் இல்லாது போயின. நான் அந்த வெற்றிடத்திற்குள் என்னை விழ அனுமதித்தேன். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று எந்த நினைவும் தனக்கு இல்லை என்கின்றார்.

பிறகு சுயநினைவு வந்தபோது, நான் பறவைகளின் கீச்சிடலைக் கேட்டேன். ஆனால் அப்படியொரு குரலை நான் இதுவரைக்கும் கேட்டதில்லை. நான் அப்போதும் கண்ணை மூடியபடியே இருந்தேன். எனக்கு ஒரு வைடூழியத்தின் காட்சி தோன்றியது. ஏதோ வைரம் சத்தம் போட்டதுபோல அந்தப் பறவைகளின் குரல் கேட்டது.

அந்த நாளில் மட்டுமில்லை, பிறகு கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் இப்படியான மனோநிலையில் நானிருந்தேன். எல்லாமே மிகத் துல்லியமாகத் தெரிந்தன, கேட்டன. எந்தத் தொந்தரவுமில்லாது அந்தக் காலங்களில் நான் அமைதியையும், பேரின்பத்தையும் அனுபவித்தேன். அதன்பிறகு அந்த அனுபவம் இல்லாது போயிருக்கலாம் அல்லது அதுவே என் இயல்பான நிலையாக இப்போது மாறியுமிருக்கலாம் என்கின்றார்.

இப்படிச் சொல்கின்றவர் பின்னர் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் அவ்வளவு மகிழ்ச்சியுடன் பூங்காவின் பெஞ்சுகளில் இருந்து காலத்தைக் கழித்தேன் என்கின்றார். எனக்கு இந்த உலகில் எதுவுமே அப்போது தேவையாக இருக்கவும் இல்லை. அந்த வெறுமனே வேடிக்கை பார்த்த அந்த 2 வருடங்களில், எனக்கு எந்த உறவும் இல்லை, எந்த வேலையும் இல்லை, எந்த வீடும் இல்லை, சமூகம் சொல்லும் எந்த அடையாளமும் எனக்கிருக்கவில்லை, ஆனாலும் மகிழ்ச்சியாக இருந்தேன்' என்கின்றார்.

தனக்குள் ஏதோ ஒரு வித்தியாசமான மாற்றம் நடந்தது என்பதை அறிந்தபோதும், அது என்னவென்று விளங்கிக்கொள்ள பல வருடங்கள் ஆனது என்றும், அதை தனது ஆன்மீக ஆசிரியர்களும், ஆன்மீகப் பிரதிகளும் பின்னர் விளங்கப்படுத்தின/ர் என்கின்றார். இவ்வாறு சொல்கின்றவரே இன்று முக்கியமான ஒரு ஆன்மீக ஆசிரியராக இருக்கும் Eckhart Tolle. அவர் தற்போது கனடாவின் கிழக்குப் பகுதியான வன்கூவரில் வசித்துக் கொண்டிருக்கின்றார்.

இவர் சொல்லும் அனுபவத்துக்கு நிகரானதை விசிறி சாமியார் என அழைக்கப்படும் யோகி ராம்சுரத்குமாரின் வாழ்க்கை வரலாற்றை வாசித்தபோதும் அறிந்திருக்கின்றேன். விசிறி சாமியாருக்கு ஒரு கட்டத்தில் பைத்தியம் பிடித்துவிட்டதென்று அவரை வைத்தியசாலையில் கூட அவரின் குடும்பத்தினர் அனுமதித்திருக்கின்றனர். நம்மைப் போன்றவர்கள் பிறந்த நாடுகளில் 'விழிப்பு' வந்தவுடன் அலைவதைப் போல, மேற்கில் 'தன்னிலை உணர்தல்' நிகழ்ந்தாலும் பரதேசிகளாக அலையமுடியாது. அதனால்தான் இரண்டு வருடமாக பூங்காக்களில் இருந்து இந்த அனுபவத்தை தன்னியல்பிலே எச்கார்ட் அனுபவித்தாரோ தெரியவில்லை.

இது ஒருவரின் அனுபவம். அவரின் பாதையில் அல்லது அவருக்கு சட்டென்று (ஸென் ஆசிரியர்கள் பலருக்கு நிகழ்ந்ததுபோல) தன்னிலை உணர்தல் போல நமக்கும் நடந்துவிடும் என்று நம்பத் தொடங்கினால் அதை போல அபத்தம் இல்லை. இவ்வாறானவர்களின் அனுபவம்/ வாழ்க்கை எல்லாம் நமக்கும் இவை சாத்தியம் என்பதற்காகவே நினைவில் வைத்திருக்கலாமே தவிர, நாம் ஒவ்வொருவரும் நடக்கவேண்டிய பாதை நமக்கு மட்டுமே உரியது. அதனால்தான் புத்தர் துயரங்கள் முடிந்த நிலை எப்படியிருக்கும் என்பது குறித்து எதுவும் பேசாது அமைதி காத்தவர்.

ஒரு எண்ணமும் அதற்கு அடுத்த எண்ணமும் தோன்றும் இடைவெளியைக் கவனிப்பதிலிருந்து எல்லாமே ஆரம்பிக்கின்றது. அப்படி ஒரு எண்ணத்தைக் கவனித்து அனுப்பினாலும், அடுத்த எண்ணம் பின் வீட்டால் நுழையவும் செய்யும். அதையும் 'ஓ.. இது இன்னொரு எண்ணத்தின் சித்து விளையாட்டு' என்று கவனிக்கத் தெரிந்தால் நாம் கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாகத் தொடங்கிவிடுவோம், வாழ்க்கை குறித்த தேவையற்ற பயங்களும் குறையத் தொடங்கிவிடும் என நினைப்பதும் இந்த மனம் செய்யும் குறளி வித்தையா அல்லது அதைத்தாண்டிய வேறு எதுவோ?

***************

(எழுத உதவிய நூல் 'The Power of Now')

 

கார்காலக் குறிப்புகள் - 67

Friday, January 24, 2025

 

பேருந்தில், புகையிரதத்தில், புல்வெளியில் புத்தகங்களை வாசிக்கும் பெண்கள் அவ்வளவு அழகாக இருக்கின்றார்கள். அவர்கள் புத்தகங்களில் அமிழ்ந்தபடி அவ்வப்போது சரிந்துவீழும் தலைமயிரை நீவிவிடும்போது நீர்வண்ண ஓவியங்களைப் போல மாறிவிடுகின்றார்கள். அவர்களுக்கு முன்னால் மயில்கள் தோகை விரிப்பதையும், அன்னங்கள் நீந்துவதையும், மான்கள் துள்ளிக்குதிப்பதையும் காண்கின்றேன். நகரம் என்னும் கட்டடக் குவியல்களினிடையே மூச்சுத்திணறும் எனக்குள் ஒரு பெருங் காட்டை வளர்த்து, புத்தகங்களை வாசிக்கும் அவர்களே என்னை நீலவானில் சிறகடிக்க வைக்கின்றார்கள்.

எந்த புத்தகத்தை அவர்கள் வாசிக்கின்றார்கள் என்பதை அறியும் ஆவலை விட, அவர்கள் இப்போது என்ன வகையான உலகில் மிதந்து கொண்டிருப்பார்களென்பதே என் கற்பனையின் நதியிலோடும். ஒரு நூலிற்குள் அவர்கள் அமிழ்ந்து விட்டார்களென்றால், அவர்களையறியாமல் தவழும் புன்னகையிலும், கண்ணிமைகளின் அசைவிலும் எளிதில் கண்டுகொள்ள முடியும். அந்த வாசிப்புப் போதையில் இருந்து அவர்கள் அவ்வளவு எளிதில் இறங்கி நிலத்தில் கால் பாவமாட்டார்கள், தமக்கான தரிப்பிடங்கள் வந்தாலன்றி!

புத்தகங்களை வாசிக்கும் பெண்ணை நேசிக்கும் ஒருவன் அந்தப் பெண்ணை மட்டுமில்லை, அவளோடு சேர்ந்து அவன் இதுவரை அறியாத உலகையும் தரிசிக்கின்றான். அப்போது அவள் மாயக்கம்பளத்தில் அவனை ஏற்றி, மந்திரவாதிகள் மறைத்து வைத்திருக்கும் ஏழு கடல்களையும் ஏழு மலைகளையும் தாண்டி ஒரு இருண்ட குகையில் சிறு சுடரில் ஒளிரும் வாசித்தபடியிருக்கும் அருமருந்தன்ன கிளியொன்றைக் காட்டுகின்றாள். அந்த 'வாராது வந்த மாமணி'க் கிளியைக் கண்டவர்களால் பிறகு புத்தகங்களை நேசிக்காமல் இருக்கவும் முடியாது

புத்தகங்களை வாசிக்கும் பெண்ணொருத்தியைக் காதலிப்பவன், இடையில் பிரிவைச் சந்தித்தாலும், அந்தப் பெண்ணை சுடுசொல் பேசி, ஆழுள்ளத்தால் ஒருபோதும் வெறுக்க முடியாது. அவள் அழைத்துச் செல்ல புத்துலகங்களின் நிமித்தம் ஆராதிப்பவனாக மட்டுமின்றி, அவளின் மீதி வாழ்வையும் ஆசிர்வதிப்பவனாகவும் மாறிவிடுகின்றான்.


புத்தகங்களை வாசிக்கும் பெண்களே இவ்வுலகின் பேரழகிகளென உறுதியாக நம்பும் ஒருவனை நானறிவேன். அவனது ஒவ்வொரு காதலிகளும் புத்தகங்களின் வாசிப்பாலே அவனுக்கு அறிமுகமானவர்கள். பலருக்கு பாடல்களின் மூலம் அவர்களின் கடந்த காதல்களின் நினைவுகள் வருவதைப் போல, இவனுக்கு தன் காதலிகள், அவர்களுக்கு மிகப் பிடித்த புத்தகங்களினூடாக நனவிடை தோய்தலில் இனிபவர்கள் எனச் சொல்வான்.

ஒரு காதலிக்கு வாசிப்பதில் இருக்கும் ஆர்வம், வாசித்ததை எழுதுவதற்குஇருப்பதில்லை. அவள் வாசித்த புத்தகங்களைப் பற்றிய அனுபவத்தைச் சொல்லச் சொல்ல அவன் தட்டச்சு செய்திருக்கின்றான். தஸ்தயேவ்ஸ்கி கூட அன்னாவை தொடக்கத்தில் சம்பளம் கொடுக்கும் ஊழியக்காரியாக வீட்டுக்கு அழைத்து வாழ்க்கைத் துணையாக்கியவர், எனக்கோ அந்தக் கொடுப்பினை கூட இல்லை என்று சலித்தபடி தட்டச்சுச் செய்வான். அதற்கான ஊதியத்தை அவள் பின்னர் தன் விலைமதிப்பற்ற முத்தங்களால் நிகர் செய்வாள்.

இன்னொருத்தியோ நான் எவ்வளவு முக்கியமான நூலை உனக்காக வாசித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றேன். முட்டாளே உனக்கு கொஞ்சம் கூட ரொமான்டிக்கா இருக்க தெரியாதா, தூங்கிவிட்டாயே என்று வாசித்த புத்தகத்தாலேயே அவனுக்கு அடித்ததிருக்கின்றாள். அவள் அப்போது வாசித்துக் காட்டிக் கொண்டிருந்த புத்தகம், Fifty Shades of Grey.

வேறொருத்தியோ தன் உடலை புத்தகங்களால் மட்டும் மூடி, இந்தப் புத்தகங்களின் கதையைச் சரியாகச் சொன்னால் தனது உடலைத் திறக்கும் மர்மத் தாழ்ப்பாள்கள் திறக்கும் என்று சுவாரசியமான வேறொரு பயணத்துக்கு அவனை அழைத்துச் சென்றிருக்கின்றாள்.

புத்தகங்கள் என்ன பிராண வாயுவா? அவையில்லாது உங்களால் வாழ முடியாதா என வாசிக்கும் எந்தப் பெண்ணிடம் அசட்டுத்தனமாய் வினாவாததால்தான் பெண்களில் பலர் அவனுக்கு நெருங்கிய தோழிகளாகவும் ஆகியிருக்கின்றனர் என அவன் சொல்லியிருக்கின்றான்.


நான் இப்போது இவளுக்கு இதைச் சொல்லிக் கொண்டிருந்தேன். எழுதிய படைப்பாளியும், அதில் சம்பந்தப்பட்ட பெரும்பாலானவர்களும் மறைந்துவிட்டது மட்டுமில்லை காலம் கூட எங்கையோ நகர்ந்துவிட்டது. ஆனால் மூன்று தசாப்தங்களுக்கு முன் எழுதப்பட்ட ஒரு புத்தகத்திலிருந்து கடந்தகால வரலாறு விரிகின்றது என்கின்றேன். வாழும் மனிதர்கள் அழிவார்கள், அவர்கள் நம்பிய மாபெரும் கனவுகள் கலையலாம்., ஆனால் நம் கைகளில் இருக்கும் புத்தகத்திலிருந்து கடந்தகாலத்து வாழ்வின் பாடல்கள் உயிர்த்தபடியிருக்கின்றார்கள் என்றேன்.

மேலும், இந்நூலோடு சம்பந்தப்பட்ட பல விடயங்களோடு அதை வாசித்த என் பதின்மத்திலிருந்து நானும் ஏதோ ஒருவகையில் சம்பந்தப்பட்டிருக்கின்றேன் என இவளிடம் வியந்து கொண்டிருந்தேன். வாசித்த அந்தப் புத்தகம், அந்தப் படைப்பாளி சாவெய்திய காலத்தில் அதே நிலத்தில் இருந்தது, இந்தக் கதையோடு சம்பந்தப்பட்ட முக்கிய ஒருவரைச் சந்தித்தது, 20 வருடங்களுக்கு பின் இந்நூலை மொழிபெயர்ப்பப் போகின்றவருடன் பழகியதென, இப்போது ஆறுதலாக இருந்து இந்த ஒவ்வொரு கண்ணியையும் இணைத்துப் பார்க்க அவ்வளவு வியப்பாக இருக்கின்றது என்றேன்.

சிலவேளைகளில் நாம் சில விடயங்களுக்காக நம்மையறியாமலே தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்போம் (chosen one). இப்போது இந்த புள்ளிகளை எல்லாம் காலத்தின் வெவ்வேறு அடுக்குகளில் வைத்து இணைத்துப் பார்க்கும்போது நீ இந்தப் புத்தகத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன் போலத் தெரிகிறாய் என்றாள்.

ஒரு புத்தகம் நம்மைத் தேர்ந்தெடுக்குமா தெரியாது. ஆனால் அப்படித் தேர்ந்தெடுத்தால் அது அழைத்துச் செல்லும் பாதைகள் என்பது முடிவுறா புதிர் வட்டங்களாய் திகைக்கவே வைக்கும்.

இப்போது, 'புத்தகங்களை வாசிக்கும் பெண்களை மட்டுமே நேசிக்க முடியும்' என்று சொன்னவனை என்னால் நன்கு புரிந்து கொள்ள முடிகின்றது.

அந்தப் பெண்களுக்கு, புத்தகங்களைப் போல அவனும் அப்போது சிறந்த தெரிவுகளில் ஒன்றாக (அல்லது chosen one ஆக) இருந்திருக்கக் கூடும். மேலும் சுவாரசியமாக ஒரு புத்தகத்தைப் போல, அவன் இருந்தவரை அவனை அவர்கள் ஆழமாக நேசிக்கவும் செய்திருக்கக் கூடும்.

எல்லாப் புத்தகங்களும் என்றைக்குமாக வாசிப்பில் நீடித்து நிலைப்பவையும் அல்ல. அப்படி காலம் முழுதும், பெண்களுக்கு பிடித்த ஒரேயொரு புத்தகமாக ஒருவன் மாறுவது என்பது அரிதாக நிகழக்கூடிய ஓர் அதிசயம்.

அதனாலேயே அந்த அதிசயங்களை நிகழ்த்தக்கூடியவர்களை, 'புத்தகம் வாசிக்கும் பேரழகிகள்' என்று நானும் சொல்லிக் கொள்ளப் பிரியப்படுகின்றேன்.

**************

ஓவியம்: இயல்

(Jan 10, 2024)

 

 

பனிக்காலத் தனிமை - 03

Thursday, January 23, 2025

 

ஸென் மரபை ஒரளவு பின் தொடர்பவர்க்கு அது தனக்கான சில வழிமுறைகளை இறுக்கமாக வைத்திருப்பதை அறிவார்கள். அப்படியிருந்தும் அங்கிருந்து விதிவிலக்கான பலர் தோன்றியிருக்கின்றனர். இதில் ஜப்பானில் தோன்றிய ஸென் துறவியான இக்யூ ஸோயுன் சுவாரசியமான ஒருவர். அவர் அன்றைய ஜப்பானிய அரசனுக்கு முறைதவறிப் பிறந்தவர் எனச் சொல்லப்படுகின்றது. இதனால் அவரின் தாயார் ஸோயுனை ஸென் மடலாயத்தில் அவரின் ஐந்து வயதில் ஒப்படைத்துவிட்டுப் போய்விடுகின்றார்.

ஸோயுன் ஸென் மரபுக்குள் கட்டுப்படாத குழப்படிக்கார ஒருவராக மாறுகின்றார். அவரின் பதின்மங்களில் இந்த மடலாயங்கள் பெண்கள் பற்றியும், உடலுறவு குறித்தும் வைத்திருந்த கருத்துக்களை எதிர்க்கின்றார். மேலும் அன்றைய காலங்களில் இப்படி ஸென் கட்டுக்கோப்பாகவும், அதைப் பின்பற்றுவர்கள் இறுக்கமான பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று சொல்லும் ஸென் ஆசிரியர்களின் சிலர் மடலாயங்களின் கடைகோடியில் இரகசியக் காதலிகளை வைத்து உடல்சார்ந்து உறவில் ஈடுபடுவது ஸோயுனுக்கு உவப்பில்லாது இருக்கின்றது.

ஸோயுனைப் பொருத்தவரை இயல்பான ஸென் வாழ்க்கையென்பது மது, தியானம் மட்டுமின்றி பெண்களோடும், ஆண்களோடும் உடலுறவு என்பதாக இருக்கின்றது. ஸென்னில் எதையும் discriminate செய்யக்கூடாதென்பது அடிப்படையான விதிகளில் ஒன்று. அதையதை அப்படியே பார்ப்பதும், ஏற்றுக்கொள்வதும்தான் ஸென் என்கின்றபோது ஏன் இந்த ஸென் ஆசிரியர்கள் இரட்டை வாழ்க்கையை வாழ்கின்றார்கள் என்று எரிச்சலுற்று ஒரு நாடோடி ஸென் ஆசிரியராக ஸோயுன் பிற்காலத்தில் மாறுகின்றார்.

ஸோயுன் ஞானமடைந்து ஒரு ஸென் ஆசிரியராக ஆனபோது அவரின் சீடர்களான பிக்குகள் மட்டுமில்லை, பாலியல் தொழிலாளர்கள், குற்றவாளிகள், கவிஞர்கள், ஓவியர்கள் என்று பலவகைப்பட்டவர்கள் இருந்திருக்கின்றனர்.

இவ்வாறு ஞானமடைவதற்கு முன், அவர் பல்வேறு ஸென் குருக்களிடம் கற்றிருக்கின்றார். கற்கும் இடமெங்கும் முரண்பட்டு வெளியேறும் ஸோயுன் இறுதியின் தனித்து இருக்கும் ஸென் ஆசிரியரான கீனோவிடம் சென்று சேர்கின்றார். கீனோவுக்கு இவர் மட்டுமே ஒரு சீடன். ஸோயுன் இவரோடு இருக்கும்போது ஞானமடைகின்றார்.

குருவோ, இவரைத் தன்னுடைய ஸென் பரம்பரையைக் கொண்டு செல்லவேண்டுமென விரும்புகின்றார். இவரோ ஞானமடைந்ததற்காகக் கொடுத்த தாளை எரித்துவிட்டு மடலாய வாழ்விலிருந்து விடுபட்டு ஒரு நாடோடி ஸென் ஆசிரியராக மாறுகின்றார்.

ஸோயுன் அன்றைய மத்தியகால ஜப்பானுடைய மிகச்சிறந்த புல்லாங்குழல் கலைஞரென மதிப்பிடப்படுகின்றார். அது மட்டுமின்றி ஜப்பானிய தேநீர்க்கலையை மாற்றியமைத்ததோடு, ஒரு கவிஞராக இருந்து பல ஓவியக்கலைஞர்களில் செல்வாக்குச் செலுத்திய ஒருவரெனவும் நினைவு கூரப்படுகின்றார். இவரின் இந்த அலைந்து திரியும் வாழ்க்கை, அவருக்கு 'பைத்தியக்கார மேகம்' (Crazy cloud) என்கின்ற பட்டப்பெயரையும் அவருக்குக் கொடுத்திருந்தது.

ஸோயுன் என்ற பெயரையுடையவர் ஞானமடைந்தபோதே இக்யூ என்ற பெயர் வழங்கப்பட்டிருக்கின்றது. இக்யூ என்பதை 'இடைநிறுத்தல்' அல்லது 'அமைதியடைதல்' ( One Pause) என்று அர்த்தம் கொள்ளலாம். இவ்வாறு அலையும் நாடோடியாக இருந்த இக்யூ இதுவரை எவரும் ஸென்னைக் கற்பிக்காத இடங்களுக்குச் செல்வேன் என்று கூறி, பாலியல் தொழில் செய்யப்படும் இடங்களுக்கும், மதுபான விடுதிகளுக்கும் சென்று, அன்றைய காலத்தைய மரபான் ஸென் மடலாயங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தவர்.

அதுமட்டுமின்றி ஸென் மடலாயங்கள் மிக இறுக்கமாகப் பின்பற்றிய பிரமச்சாரியத்தைத் தகர்ந்தெறிந்தவர். கவிதைகள் எழுதும் ஆற்றல் இருந்த இக்யூ அப்படி explicit ஆக உடல் குறித்தும் உடலுறவு குறித்தும் எழுதியிருக்கின்றார்.

'
ஒரு மனிதனின் வேர்' என்கின்ற கவிதை இப்படியாக இருக்கும்.

"
எட்டு அங்குல உறுதி. இது எனது விருப்பமான பொருள்;
நான் இரவில் தனியே இருப்பேன் என்றால், நான் அதை முற்றுமுழுதாக அள்ளிக்கொள்வேன் -
ஒரு அழகான பெண்ணால் நீண்டகாலமாகத் தொடாமல் இது இருக்கின்றது,
என்னுடைய உள்ளாடைக்குள், ஒரு முழுதான பிரபஞ்சம் உள்ளது!"

என்கின்றது அந்தக் கவிதை.

இன்னொரு கவிதையான ' ஒரு பெண்ணின் முயங்கல்' இல்,

'
இதற்கு அசலான வாய் உள்ளது, ஆனால் இருந்தும் பேசமுடியாது
இது மகத்தான வட்டத்தில் மயிர்களால் சூழப்பட்டிருக்கிறது.
ஐம்புல உயிரிகள் முற்றுமுழுதாக இதற்குள் தொலைந்து போவார்கள்
ஆனால் பத்தாயிரம் உலகங்களிலுள்ள அனைத்துப் புத்தர்களினதும் பிறப்பிடமாகவும் இது இருக்கின்றது.'

என்று எழுதியிருக்கின்றார்.

இவ்வாறு உடல்களின் மீது பித்துப்பிடித்திருந்த இக்யூ அவரின் இறுதிக்காலத்தில் மோரி என்கின்ற இளம்பெண்ணின் மீது உக்கிரமான காதல் கொள்கின்றார். மோரியோடு சேர்ந்து வாழ்ந்தே இக்யூ இறுதியில் காலமாகியும் போகின்றார். மோரிக்காக உற்சாகம் ததும்பும் நிறைய காதல் கவிதைகளை இக்யூ எழுதியிருக்கின்றார்.

'
சீமாட்டி மோரிக்கு ஆழ்ந்த செய்ந்நன்றியுடன்"
******
'
மரங்கள் இலைகள் உதிர்க்கையில் நீ எனக்கு ஒரு புதிய வசந்தத்தைக் கொண்டு வந்தாய்.
நீண்ட பசுமைத் துளிர்கள், மலர்ச்சியான பூக்கள், புத்துணர்வான உறுதிமொழி.
மோரி, நான் எப்போதாவது உனக்கான நன்றியை மறப்பேன் என்றால்,
என்றென்றைக்குமாக என்னை நரகத்தில் எரிய விடு.'

ஸென் ஆனது எப்போதும் இயல்பான மனிதராக நம்மை இருக்கச் சொல்லி அடிக்கடி நினைவூட்டுவது. நாங்கள் தவறுகளைச் செயதிருக்கலாம், கோபப்பட்டிருக்கலாம், பதற்றங்களோடு இருந்திருக்கலாம், ஏன் முட்டாள்தனமான செயல்களைச் செய்தும் இருக்கலாம். அதேவேளை ஸென்னைப் பின் தொடர்பவர்களாக இருந்தால், இவற்றையெல்லாம் தியானத்தின்போது நேரடியாகச் சந்தித்து, நாங்கள் இதிலிருந்து விடுபட்டு சுதந்திரத்தையும் பெறமுடியும் என்பதுதான் ஸென்.

ஒருவகையில் இக்யூவின் வாழ்க்கை நமக்கு சித்தர்களின் வாழ்க்கையை நினைவுபடுத்துகின்றது. மரபான முறைமைகளிலிருந்து வெளியேறிய கலகவாதிகளாக மட்டுமின்றி அலைபவர்களாகவும் அவர்களில் பலர் இருந்திருக்கின்றனர். மேலும் பின்னரான காலத்தில் தோன்றிய ஜே.கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் எப்படி நிறுவனங்களையும், நிறுவனமயப்படுத்துவதையும் விட்டு வெளியேறி நமக்கு ஞானமடையும் பாதைகளைக் காட்டினார்களோ அப்படியே இக்யூவும் மடாலயத்தை விட்டு விலகிய ஒருவராக முன்னொருகாலத்தில் இருந்திருக்கின்றார்.

இக்யூவிடம் நூற்றுக்கணக்கான சீடர்கள் இருந்தாலும் அவர்கள் எவரையும் தனது பரம்பரையைப் பின் தொடர வேண்டுமென என முன்னிறுத்தியது இல்லை. இதனால் இக்யூவிற்குப் பின் அவரின் தலைமுறை என்ற சீடர் பரம்பரை ஒன்று வரலாற்றில் இருக்கவில்லை.

இக்யூ காலமாவதற்கு முன்னர், 'எனது மரணத்தின்பின் உங்களில் சிலர் தியானம் செய்வதற்காக காடுகளையும், மலைகளையும் தேடிச் செல்லக்கூடும், மற்றவர்கள் மதுவருந்தியும், பெண்களின் நெருக்கத்தில் மகிழ்ந்து கொள்ளவும் கூடும். இந்த இரண்டு வகையான ஸென்னும் எனக்கு உவப்பானதே, ஆனால் யாரேனும் மதகுருவாக மாறி, 'ஸென் ஒழுக்கமான பாதை' என உளறினால், நான் எவருக்கும் இப்படிச் சொல்ல அனுமதி கொடுக்கவில்லை என்பதோடு, இப்படி யாரேனும் உளறினால் தயவு செய்து அவர்களை உடனே துரத்தி விடுங்கள்' என்று தனது மாணவர்களிடம் சொல்லியிருக்கின்றார்.

வாழும் காலத்தில் மட்டுமில்லை, மரணத்தைக் கூட , ஸென் காலங்காலமாக கற்பித்திருந்தத அதன் சட்டகங்களைத் தாண்டிப் பார்க்கச் சொன்னவர் இக்யூ.

சிலவேளைகளில் 'என்னை நீங்கள் தெருவில் சந்தித்தால் கொன்றுவிடவேண்டும்' எனச் சொன்ன புத்தர், இக்யூவைப் பார்த்து நான் கூறியதைப் புரிந்துகொண்ட ஓர் அசலான ஞானி இவன் என்று அவரை அரவணைத்து இருக்கக்கூடும். மேலும் ஞானமடைந்தவர்கள் ஒருபோதும் மீண்டும் தோன்றுவதில்லை என்பது ஸென் கூறும் எளிய உண்மையல்லவா?

*********

(
எழுத உதவிய நூல்: 'Zen in the age of anxiety')


பனிக்காலத் தனிமை - 02

Thursday, January 16, 2025

 

ரடி பின்னே வைப்பதென்பது ஒரு அடி முன்னே செல்வதற்கானது
**********************

தாவோயிஸத்தில் ஓர் உரையாடல் தாவோவைப் பற்றி ஆசிரியர் மாணவருக்கிடையில் நிகழ்ந்திருக்கும்.

மாணவர்: தாவோ என்றால் என்ன?
ஆசிரியர்: சாதாரண மனமே தாவோ.
மாணவர்: அப்படியெனில், நாங்கள் அதை நோக்கிப் போகவேண்டுமா அல்லது போகத் தேவையில்லையா?
ஆசிரியர்: நீங்கள் அதை நோக்கிச் சென்றீர்களென்றால், அது உங்களை விட்டு விலகிப் போய்விடும்.
மாணவர்: நாங்கள் முயற்சிக்கவே இல்லையென்றால், பிறகு அதுதான் தாவோ என்பதை, எப்படி அறிவது?
என அந்த உரையாடல் மேலும் நீளும்.

இப்படி தாவோவை அறிவதற்கு எதனையோ இலக்காக வைத்து அதை அடையவேண்டும் என்று இந்த மாணவர் கேட்பது போல, நாமும் எமது வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலக்குகளை நிர்ணயம் செய்து அதை அடைய முயன்றிருப்போம்.  அத்துடன், எமக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில், நாம் எமக்கான இலக்குகளைத் தயார்ப்படுத்தி, அதற்காக கடுமையாக முயற்சிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்படும்போது, எவ்வித குறிக்கோள்களும் இல்லாது ஒரு வாழ்வை வாழ்வதென்பது மிகுந்த அபத்தமாக அல்லவா தெரியும்?

ஆனால் ஸென் நம்மை மாற்றிச் சிந்திக்கச் சொல்கின்றது. ஒன்றை அடைவதற்காய் நீங்கள் எங்கும் செல்லவேண்டியதில்லை என்று ஒவ்வொருபொழுதும் ஞாபகப்படுத்துகிறது. ஸென்னின் அடிப்படைப் பயிற்சியே நமக்குள்ளே இருக்கும் இடைவெளிகளையும், நமக்கும் மற்றவருக்கும் இருக்கும் இடைவெளிகளையும் குறைப்பதாகும் (It is about closing gaps, the gaps between yourself and your Self, between you and me).

இறுதியில் அந்த தாவோ ஆசிரியர், 'தாவோ ஒருபோதும் எதுவென்று அறிவதையோ அல்லது எதுவென்று அறியாதிருப்பதையோ தனக்குரியதாகக் கொள்வதில்லை' என்கின்றார்.

அப்படியெனில் தாவோ என்பது என்னதான் என்று எமக்கு இப்போது இன்னும் குழப்பம் கூடுகின்றது. இதையிதைச் செய்தால் அல்லது இப்படியிப்படிப் போனால் உங்கள் இலக்குகள் அடையப்பட்டுவிடும் என்றோ அல்லது அறிந்துவிடலாமோ என்றோ தாவோயிஸமோ/ஸென்னோ சொல்வதில்லை.

உங்களால் ஒவ்வொரு கணத்திலும் மூழ்கமுடியுமென்றால், நீங்கள் தேடும் புதையல் இங்கேயே இருக்கின்றது. நீங்கள் இதற்காக எங்கேயும் போகத்தேவையில்லை, உங்களுக்கான பொக்கிஷம் உங்கள் வெறும் காலுக்கு அடியில் இருக்கின்றது என்று ஸென் சொல்லும்.

இது உங்களுக்கு பாவ்லோ கொய்லோ எழுதிய 'இரசவாதி'யை (Alchemist) ஞாபகப்படுத்தலாம். அதாவது 'புதையலை' ஒரு பொருளாக/செல்வமாகக் கொண்டீர்கள் எனில்!

ஸ்பெயினின் ஆண்டலூசியாவில் இருந்து எகிப்துக்கு புதையலைத் தேடிச் செல்லும் சாந்தியாகோ இறுதியில் அந்தப் புதையலை எங்கே கண்டடைகின்றான் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

ஸென் சொல்லும் நாம் தேடும் 'பொக்கிஷம்' பொருளை அடிப்படையானதல்ல என்பது உங்களுக்குப் புரியும். இதையே எனது ஆசிரியான தாய், 'I've arrived, I'm home' என்று நாம் தியானம் செய்கையில் மனம் அலைவுறும் ஒவ்வொரு தருணமும் சொல்லி நம்மை நினைவூட்டிக் கொள்ளச் சொல்வார்.

'நூற்றுக்கணக்கான மலர்கள் வசந்தகாலத்திலும், நிலவு இலையுதிர்காலத்திலும், மென்குளிர் காற்று கோடையிலும், பனி குளிர்காலத்திலும் இருக்கும்போது, உங்கள் மனதை எந்த ஒரு மேகமும் மூடவில்லையெனில், உங்களுக்கு அதுவே மிகச் சிறந்த பருவம்' என்கின்ற ஒரு கவிதை ஸென் பிரதிகளில் இருக்கின்றது.

அதாவது நீங்க எந்த குறிக்கோள்களையோ, அவை அடையும் எல்லைகளையோ உங்களுக்குள் இழுத்து அடைத்து வைத்திருக்கவில்லையெனில், அந்த நாள் மிக நல்ல நாளாக ஆகிவிடுகின்றது.

ஒருநாளில் அதற்கான குறிக்கோள் இல்லாது எப்படி இருப்பது? என்று நீங்கள் கேட்கலாம். அப்படியிருப்பது நமக்கு அச்சமும் ஊட்டக்கூடும். சரி வேண்டுமானால் ஒரு நாளுக்கான இலக்குகளை வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் அதை எப்போதும் காவிக் கொண்டிருக்கத் தேவையில்லை என ஸென் நமக்கு இன்னொருவகையான சுதந்திரத்தைத் தருகிறது. அத்துடன் எந்தவகையான இலக்காயினும் தன்னியல்பிலே நடந்து நிறைவேறிவிடும். நீங்கள் அதை உங்கள் மனதுக்குள் ஒவ்வொரு பொழுதும் திட்டமிட்டுக் கொண்டிருக்கத் தேவையில்லை என்கின்றது.

எங்களில் பலர் காலையில் எழுந்தவுடனேயே, அப்படியே 'வேலைக்குச் செல்லும்' மனநிலைக்குச் சென்றுவிடுவோம். அது அவ்வளவு நல்லதில்லை, உங்களை கொஞ்சம் நிதானமாக்குங்கள் எனச் ஸென் சொல்கிறது. உதாரணத்துக்கு நாங்கள் சில நாட்களோ/வாரங்களோ வேலையிலிருந்து விடுமுறை எடுத்துப் போகும்போது, நாங்கள் விடுமுறை முடிந்து மீள வரும்போது நிறைய வேலை சேர்ந்திருக்குமே, நிறைய மின்னஞ்சல்கள் திறக்கப்படாமல் இருக்குமே, நிறைய முக்கிய தொலைபேசி அழைப்புக்களைத் தவறவிட்டிருப்போமே எனப் பதற்றம் வந்தால், நாம் எங்கோ தவறிழைத்துக் கொண்டிருக்கின்றோம் என்று அர்த்தமாகும்.

நாங்கள் ஒவ்வொரு நொடியையும் அதை இழக்கவிடாது வாழ்ந்து கொண்டிருப்போம் என்றால், இப்படி இவற்றைத் 'தவறவிடுகின்றோம்' என்று எண்ணமுடியும்? விடுமுறைக்காகச் சென்றாலும் நாம் வேலை என்கின்ற கடந்தகாலத்திலும், திரும்பி வரும்போது என்னவெல்லாம் செய்ய இருக்கும் என நினைத்து எதிர்காலத்திலும் இருக்கின்றோமோ தவிர நாம் இந்தக் கணத்தில் இல்லை என்றுதானே பொருள். அப்படியெனில் நாம் உண்மையில் விடுமுறையில்தான் போயிருக்கின்றோமா எனக் கேட்க வேண்டியிருக்கும்.

ஸென் எங்கள் மனதுக்கு மட்டுமில்லை, எமது உடலுக்கும் கவனத்தைக் கொடுக்கச் சொல்கின்றது. எமது மனம் தன்னியல்பிலே பல்வேறுபட்ட எண்ணங்களாலும், தேவையற்ற முணுமுணுப்புக்களாலும் நிறைந்திருப்பது. இந்த இரைச்சல் எப்போது அமைதியடைகின்றது அல்லது நம் கவனத்தில் இருந்து இல்லாது போகின்றது? நமக்குப் பிடித்த ஒரு விளையாட்டை விளையாடும்போதோ, ஒரு நடனத்தை ஆடும்போதோ அல்லது ஒரு நல்ல புத்தகத்தையோ வாசிக்கும்போதோ நாம் ஒரு பயிற்சியைச் செய்து பார்க்கலாம். அதாவது நாம் அந்தச் செயற்பாட்டில் இரண்டறக் கலந்திருக்கின்றோமா அல்லது அடுத்து என்ன செய்வது/நிகழும் என்று எம் 'மனம்' சிந்திக்கின்றதா என்று அவதானிக்கலாம். உங்கள் கைகளும், கால்களும் எங்கேயிருக்கின்றன என்று எப்போதும் யோசித்துக் கொண்டா இருக்கின்றீர்கள்? இல்லைத்தானே!

தாவோ அதைத்தான் எளிமையாக, ஆனால் பூடகமாகச் சொல்கிறது. 'சாதாரண மனமே தாவோ' என்கின்றது. அதுவே பாதை. எந்த ஒன்றையும் நீங்கள் அடையவோ, எதனோடும் ஒப்பிடவோ, எவரோடும் போட்டியிடவோ தேவையில்லை என்கின்றது.

இன்னொருவகையில் நீங்கள் உங்கள் அளவில் முழுமையானவர். அந்த முழுமையை நீங்கள் உணர்கின்றபோது நீங்கள் ஞானமடைகின்ற நிலையை அடைகின்றீர்கள். புத்தரும், நீங்கள் யாரென்று அறியாத அளவுக்கு உங்களுக்குள் நிறைய தூசி பெரும்படையாகச் சேர்ந்துவிட்டது, அந்தத் தூசியைத் துடைத்து நீங்கள் யாரென்ற கண்ணாடியைப் பாருங்கள் என்றுதான் சொல்கின்றார்.

நாம் எதையும் அடையவோ அல்லது எதனோடும் போட்டி போடத் தேவையில்லை என்றாலும், நமக்குள்ளிருக்கும் 'பசித்த பேய்கள்' எம்மை எளிதில் விடாது. எங்களை இன்னும் இலக்குகளில் கவனம் குவிக்கவும், வெற்றிகளின் மீது வெறிபிடித்து அலையவும், இதன் நிமித்தம் இன்னும் கடினமாக உழைக்கவும் இந்தப் பேய்கள் உந்தித் தள்ளும். உங்களால் அவ்வளவு இலகுவில் இந்த பசிப்பேய்களிடமிருந்து தப்பிவிடமுடியாது.

அது இன்னும் நிறைய மணித்தியாலங்கள் வேலை செய், நிறையப் பணத்தை ஈட்டு என்று எங்களைத் துரத்தும். அப்படி எல்லாவற்றையும் செய்தால் கூட ஏதோ ஒன்று எமது வாழ்க்கையில் கிடைக்காமல் இருக்கின்றதே என்கின்ற வெறுமையில் நெஞ்சம் அவ்வப்போது எடைகூடிப் போகும்.

ஆகவே கொஞ்சம் உங்களை நிறுத்தி நிதானியுங்கள். பசிப்பேய்களோடு நண்பர்களாகி உரையாடுங்கள். உனக்காக எந்த நேரமும் தீனியிட்டுக் கொண்டிருக்க முடியாது என்று இந்தப் பேய்களை நீங்கள் தியானத்தில் அமரும்போது அழையுங்கள். அவற்றைக் கொஞ்சம் அமைதிப்படுத்துங்கள்.

ஒரு நாள், மேலதிக மணித்தியாலங்கள் வேலை செய்யாமலோ அல்லது அரைநாளில் விடுப்பு எடுத்து நீங்கள் வீடு திரும்பும்போது, உழைக்கும் பணத்தில் கொஞ்சத்தை இழக்கலாம். ஆனால் அதேசமயம் அந்த நேரத்தை உங்களுக்காகவும், உங்களுக்குப் பிரியமானவர்களுடன் செலவழிப்பதாகவும் அமையக்கூடும். ஆகவே ஓரடி பின்னால் எடுத்து வைப்பதென்பது, ஓரடி முன்னே வைப்பதற்காகவும் இருக்கும். பல பொழுதுகளில் எதையோ இழந்துதான் எதையோ பெறவேண்டியிருக்கின்றது. ஆனால் நாம் பெறுபவை நமக்கு அதிகம் நிம்மதியையும், மனநிறைவையும் தந்தால், நமக்கு இழந்தவைகள் ஒரு பொருடாக இருக்கப் போவதில்லையல்லவா.

****************

(எழுத உதவிய நூல்: "The Book of Householder Koans')

 

யுவான் ரூல்ஃபோ (Juan Rulfo)

Monday, January 13, 2025

 

 1. பெத்ரோ பராமோ (திரைப்படம்)

காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் தொடக்கத்தில் சில நூல்களை எழுதிவிட்டு எழுத்தின் உறங்குநிலைக்குப் போகின்றார். அப்போதுதான் மெக்ஸிக்கோவில் அவர் யுவான் ரூல்ஃபோவின் (Juan Rulfo),  ‘பெத்ரோ பராமோ’ நூலை வாசிக்கின்றார். இந்நூலின் ஈர்ப்பினால் மார்க்வெஸ் அந்த நாவலை ஓர் இரவில் இரண்டுமுறை வாசிக்கின்றார். பிற்காலத்தில் என்னால் முன்னுரை தொடக்கம் இந்நாவலின் இறுதிப் பக்கங்கள்வரை அப்படியோ ஒப்புவிக்க முடியும் என்று மார்க்வெஸ் குறிப்பிட்டிருக்கின்றார். அந்தளவுக்கு மார்க்வெஸ் இந்த நாவலுக்குள் மூழ்கியவர். இந்த நாவல் கொடுத்த பெரும் ஈர்ப்பினால்தான், மார்க்வெஸ் தனது 'நூற்றாண்டு காலத் தனிமை'யை எழுதுகின்றார்.

யுவான் ரூல்ஃபோ 'பெத்ரோ பராமோ'வை 1955 இல் எழுதிவிட்டார். நாவலின் கதைசொல்லியான யுவான் , இறந்துவிட்ட தனது தாய் சொன்னதிற்கு இணங்க, அவரது தந்தையைத் தேடி கோமாலா நகருக்குச் செல்கின்றார். இதுவரை நேரில் பார்த்திராத தனது தந்தையான பெத்ரோவை யுவான் பல்வேறு பாத்திரங்களினூடாக அறிகின்றார். பெத்ரோ இப்போது உயிருடன் இல்லை. அவரின் கதை சொல்பவர்களில் பெரும்பாலானோர் கூட இறந்துவிட்டனர். காலமாகியவர்கள் எப்படி கதை சொல்கின்றார்கள், எவ்வாறு யுவனின் வாழ்க்கையில் குறுக்கிடுகின்றார்கள் என்பதுதான் இந்த நாவலின் சுவாரசியமான பகுதிகளாகும்.

இதையே இலத்தீன் அமெரிக்காவில் இருந்து முகிழ்ந்த 'மாய யதார்த்த' கதை சொல்லல் முறைக்கான முதல் புதினம் எனச் சொல்கிறார்கள். இது 120 பக்கங்களுக்குள்ளே அடக்கி விடக்கூடிய ஒரு புனைவு. ஆனால் இவ்வளவு குறுகிய பக்கங்களில் கிட்டத்தட்ட அன்றைய கால மெக்ஸிக்கோவின் நிலவியல், அரசியல், கலாசாரம், புரட்சி எனப் பல விடயங்களைத் தொட்டுச் செல்கின்றது. பெத்ரோ பராமோ வன்முறையின் மூலம் ஒரு நிலச்சுவாந்தர் ஆகின்றார். அவர் காதல் செய்யும் பெண்களும் அவருக்கு ஒரு பொருட்டேயல்ல. அதனால் எண்ணற்ற பெண்களோடு மோகிக்கின்றார். அவர்களை எளிதில் கைவிட்டு தன் வாழ்க்கையில் நகர்ந்தபடியும் இருக்கின்றார்.

இந்த நாவலின் கதைசொல்லியான யுவானே ஒரு தற்செயலான நிகழ்வால் பெத்ரோவிற்குப் பிறக்கின்றவர். மதத்திற்கு எதிரான புரட்சியும், பிறகு அந்தப் புரட்சிக்கெதிரான தேவாலயங்களின் போராட்டமும், நிலப்பிரத்துவ இறுதிக்கட்டமும், அதிகாரம் எதுவுமற்ற பெண்களின் நிலையும் என பல்வேறு நிகழ்வுகளை பெத்ரோ பராமோ நமக்குக் காட்சிகளாக விரித்துக் காட்டுகின்றது.

இவ்வாறான ஒரு நேர்கோட்டுத் தன்மையில்லாத எழுத்தில் கடந்தகால நினைவுகளும், பேய்களும்,  பாதாள உலகும், கல்லறைக்குள் இருப்பவர்களும் பேசும் ஒரு நாவலைக் காட்சித் திரையாகக் கொண்டுவருவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் 'பெத்ரோ பராமோ' திரைப்படத்தில் அவ்வளவு நேர்த்தியாக - மாய யதார்த்தமும் குலைந்துவிடாது- கொண்டு வந்திருக்கின்றனர். பெத்ரோ பராமோ ஒரு துன்பியல் முடிவை நோக்கிச் செல்கின்ற நாயகனின் கதை என ஓர் எளிமைக்காகச் சொல்லலாம். மார்க்வெஸ்ஸின் 'கொலாராக் காலத்தில் காதல்' நாவலில் வருகின்ற நாயகன் 80வயதுவரை தனது முதல் காதலுக்காகக் காத்திருப்பதைப் போல, 'பெத்ரோ பராமோ'வில் பெத்ரோ தனது பதின்மக் காதலியான சூசனாவுக்காய்க் காத்திருக்கின்றான். அவள் கிட்டத்தட்ட 30 வருடங்களின் பின் பெத்ரோவிடம் திரும்புகின்றபோது அவள் இளமையில் பெத்ரோவை விட்டுச் சென்ற சூசனா அல்ல. அவள் வேறொருத்தியாக,கண்களுக்குத் தெரியாத உருவங்களோடு (இறந்துவிட்ட கணவனோடு) உரையாடும் ஒருத்தியாக இருக்கின்றாள்.

அவளின் வரவோடு பெத்ரோவின் வீழ்ச்சி ஆரம்பிக்கின்றது. தனது காதலி சூசனா இறக்கும்போது அந்தத் துக்கத்தை அசட்டை செய்து, இந்த நகர் தன்பாட்டில் விழாக் கொண்டாட்டத்தில் திளைக்கின்றதா என பெத்ரோ கோபமுறுகின்றான். அத்தோடு அவன் அந்த ஊரைக் கைவிடத் தொடங்குகின்றான்.

பாழாய்ப்போன ஊரிலிருந்து மறைந்துவிட்ட அந்த ஊரவர்கள் யுவானின் தந்தையை யுவானுக்கு நினைவுபடுத்துவதற்காய் மீண்டும் அந்த நகரிலிருந்து எழுகின்றார்கள். இவர்கள் அசலான மனிதர்கள்தானா என ஒவ்வொருத்தரையும் பார்த்து யுவான் திகைத்து அவர்களைக் கரம்பற்ற விழைகின்றபோது அவர்கள் இறந்துவிட்ட மனிதர்கள் என்பதை அறிகின்றான்.

இறுதியில் கதைசொல்லியான யாவனே காலமாகிவிட்ட ஒருவனாக நமக்குத் தெரிகின்றான். அப்படியாயின் நாம் பெத்ரோ பராமோவில் இறந்துபோன ஆவிகளின் கதைகளைத்தானா கேட்டிருக்கின்றோம்? அவர்களோடுதான் இவ்வளவு நேரமும் உலாவிக் கொண்டிருந்தோமா எனத் திகைக்கவும் செய்கின்றோம்.



2. யுவான் ரூல்ஃபோவுடன் நூறு வருடங்கள் (ஆவணப்படம்)


‘பெத்ரோ பராமோ’ திரைப்படத்தைப் பார்த்தபின், யுவான் ரூல்ஃபோ பற்றிய 'One Hundred Years with Juan Rulfo' என்கின்ற ஆவணப்படமொன்றைப் பார்த்தேன். யுவான் அவரது வாழ்க்கைக்காலத்தில் இரண்டே இரண்டு நூல்களை மட்டுமே வெளியிட்டவர். அவை தமிழிலும் ஏற்கனவே 'பெத்ரோ பரோமா' (குறுநாவல்) எனவும் 'எரியும் சமவெளி' (சிறுகதைகள்) எனவும் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த ஆவணப்படம் யுவான் எழுத்தாளர் என்பதற்கு அப்பால் எவ்வாறு மெக்ஸிக்கோவில் வாழ்ந்தார் என்பதை ஒரளவு அடையாளம் காட்ட விழைகின்றது எனச் சொல்லலாம்.

யுவான் மிகச்சிறந்த ஒரு புகைப்படக் கலைஞர். அவர் புகைப்படங்களுக்காய் மெக்ஸிக்கோவின் பல்வேறு நிலப்பரப்புக்களைத் தேடி அலைந்திருக்கின்றார். அத்தோடு அவர் மிகத் துல்லியமாக மெக்ஸிக்கோவின் புவியல் வரைபடத்தை (Map) வரைந்தும் வைத்திருக்கின்றார். இந்த ஆவணப்படத்தில் யுவானின் நண்பரொருவர் அந்த வரைபடம் அவ்வளவு நேர்த்தியாக மெக்ஸிக்கன் அரசு வெளியிட்ட வரைபடத்தை விட இருந்தது. ஆனால் அரசு யுவானின் வரைபடத்தை வெளியிட அனுமதிக்க விரும்பவில்லை என்கின்றார்.

யுவான் தனது பெற்றோரை அவரது பத்து வயதுக்குள் இழந்துவிடுகின்றார். தந்தை 1920களில் நடந்த மெக்ஸிக்கன் உள்ளூர் யுத்தத்தில் இறந்திருக்கின்றார். இதன் பின்னர் யுவான் அவரின் தாத்தா-பாட்டிகளோடு வளந்தவர். அத்தோடு பதின்மத்தில் அவர் ஒரு பாடசாலைக்கு, ஹொஸ்டலில் தங்கிப்படிக்க அனுப்பப்படுகின்றார். அது கிட்டத்தட்ட ஒரு ஜெயில் அனுபவம் போன்றதென யுவான் ஒரு நேர்காணலில் கூறுகின்றார்.

யுவான் பின்னர் ஒரு டயர் நிறுவனத்தில் வேலை செய்கின்றார். அதன் நிமித்தம் மெக்ஸிக்கோவின் பல்வேறு நிலப்பரப்புகளுக்கு பயணித்திருக்கின்றார். இந்த வேலையில் அவருக்காகக் கொடுக்கப்பட்ட காரில் ஒரு ரேடியோ போட்டுத்தரவேண்டும் என்று கேட்டதை நிறுவனம் மறுத்ததால் அந்த வேலையை இராஜினாமாய்ச் செய்தார் என்கின்ற ஒரு சுவையான கதையும் இருக்கின்றது.

யுவானின் எழுத்து உச்சத்தில் இருந்தது அவர் சில வருடங்கள் எழுத்துக்கான நிதியைப் பெற்றிருந்தான காலமான 1952-54களெனச் சொல்லலாம். இந்த இரண்டு ஆண்டுகளில்தான் அவர் தனது இரு நூல்களையும் எழுதி வெளியிட்டார். இவ்விரு நூல்களின் புகழ் யுவானை அவரது வாழ்வின் இறுதிக்காலம் வரை அடுத்த புத்தகங்களை எப்போது எழுதுவார் என எல்லோரையும் தொடர்ந்து கேட்க வைத்திருக்கின்றது. ஒருபொழுது மெக்ஸிக்கன் ஜனாதிபதியே யுவானிடம் ஒரு விருந்தில் இதை நேரடியாகக் கேட்கின்றார் என்றளவுக்கு இந்தத் தொந்தரவு அவரைத் தொடர்ந்து துரத்தியிருக்கின்றது. இறுதியில் அவரது சக எழுத்தாளர் ஒருவர், தயவு செய்து யுவானை அவரின் போக்கில் விட்டுவிடுங்கள், அடுத்து ஒன்றை எழுதுங்கள் எனக்கேட்டு சித்திரவதைப்படுத்தாதீர்கள்' என்ற ஒரு கட்டுரையை பத்திரிகையொன்றில் எழுதுகின்றார். யுவான் மெக்ஸிக்கோ இலக்கியத்துக்காய் இரண்டு படைப்புக்களைத் தந்திருக்கின்றார் அதுவே போதும் என்று அந்தக் கட்டுரை முடியும்.

யுவான் ஏன் தொடர்ந்து எதையும் பிரசுரிக்கவில்லை என்பதற்கான காரணத்தை, அவர் கொடுத்த சொற்ப நேர்காணல்களில் கூட தெளிவாகச் சொல்லவில்லை. ஆனால் அந்த நேர்காணல்களில் தான் பிரசுரிக்கவில்லையே தவிர, எழுதாமல் இருக்கவில்லை என்று அர்த்தமில்லை என்று கூறுகின்றார். யுவான் பிரசுரித்த இந்த இரண்டு படைப்புக்களுக்கு முன் கூட, மெக்ஸிக்கோவைப் பின்புலமாகக் கொண்ட ஒரு பெரும் நாவலை சில வருடங்களாக எழுதியிருக்கின்றார். ஆனால் அவருக்கு அது திருப்தியைக் கொடுக்காததால் முற்றாக அழித்திருக்கின்றார். இதைப் பற்றி ஒரு நேர்காணலில் கேட்கும்போது, ‘அது குறித்து கவலை ஏதுமில்லை, அவ்வளவு மோசமான நாவல்' என்று அந்தப் பதிலை எளிதில் முடித்துவிடுகின்றார்.

இந்த ஆவணப்படத்தில் பெரும்பகுதி அவர் எடுத்த புகைப்படங்களின் நிலப்பரப்பைத் தேடிப் போகின்ற பயணமாக இருக்கின்றது. இதில் யுவானின் மகன்களில் ஒருவரும் இருக்கின்றார். யுவான் மிகக்கடினமான மலையில் ஏறி காட்சிதரும் இடத்தைத் தேடி இந்த ஆவணப்படக்குழு ஏறுகின்றது. இந்தக் காலத்திலேயே அவ்வளவு கடினமாக இருக்கும் மலையில் அன்று யுவான் ஏறியிருக்கின்றார், அதைப் புகைப்படமாக்கியிருக்கின்றார் என்பது வியப்பாக இருக்கின்றது.

யுவான் தொடர்ச்சியாக எழுதவில்லையே தவிர அவர் மெக்ஸிக்கோவின் மிக முக்கியமான இன்னொரு பகுதியை ஆவணமாக்கியிருக்கின்றார். மெக்ஸிக்கோவின் பூர்வீகக்குடிகளின் 200இற்கு மேற்பட்ட நூல்களை எடிட்டராக இருந்து தொகுத்துக் கொடுத்திருக்கின்றார். மானுடவியல் அன்று அவ்வளவு மதிப்பு வாய்ந்த துறையாக இல்லாதபொழுதுகளில் யுவான் செய்த இந்த தொகுப்புக்கள் அவ்வளவு முக்கியம் வாய்ந்தவையாகும்.

யுவான் இப்படி தன் வாழ்நாள் காலத்தை பூர்வீகக்குடிகளோடு இணைத்துக்கொண்டு சென்றதற்கு அவரின் வேலை நிமித்தம் ஒரு ஆற்றைத் தடுத்து அணைக்கட்டு கட்டப்பட்டபோது அந்த ஆற்றோடு வாழ்ந்த பூர்வீகக்குடிகளின் கிராமங்கள் அழித்துச் செல்லப்படுவதைப் பார்த்தது ஒரு முக்கிய காரணம் என்கின்றனர். இவ்வாறு ஓர் அழிவைப் பார்த்துவிட்டு ஒரு படைப்பாளி அந்த மக்களுக்காய் தனது வாழ்வின் பெரும்பகுதியைக் கொடுப்பது என்பது விதந்துரைக்கப்பட வேண்டியதல்லவா?

யுவான் தனது 69 வயதில் 1986இல் காலமாகியவர். அவரின் மரணத்தின் பின் 'The Golden Cockerel' என்றொரு நூல் வெளிவந்திருகின்றது. எப்போதும் ஒரு படைப்பாளி இறந்தபின் வெளிவருவது அவர்களின் விருப்பத்துக்குரியவையா என்ற கேள்வி இருக்கின்றது. மார்க்வெஸ் இறந்தபின் அவர் பிரசுரிக்க விரும்பாத 'Until August' அண்மையில் வெளிவந்ததை நாமறிவோம். அவ்வாறே ரொபர்தோ பொலானாவோவின் '2666', 'The Salvage Detectives' போன்றவை வெளிவந்து புகழ்டைந்தபின், அவரின் கணணியில் சேகரமாக இருந்த எல்லா படைப்புக்களும் வெளிவரத் தொடங்கின. எனவே ஒரு படைப்பாளியின் இறப்பின் பின் வெளிவருவதை அவர்களின் பிற படைப்புக்களோடு வைத்து ஒப்பிடமுடியுமா போன்ற சந்தேகங்களும் இருக்கின்றன.

எனக்கு இன்றுவரை தொடர்ச்சியாக எழுதுவதும் வாசிப்பதும் பிடிக்கும். அதேவேளை சில எழுத்தாளர்கள் ஓரிரு சிறந்த படைப்புக்கள் எழுதிவிட்டு உறங்குநிலைக்குப் போனாலும் அவர்களையும் மிகவும் பிடிக்கும். ஆங்கிலத்தில் ஹார்ப்பர் லீ எழுதிய 'To Kill a Mockingbird’, தமிழில் 'புயலிலே ஒரு தோணி' எழுதிய பா.சிங்காரம் என்று எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன. ஈழச்சூழலிலும் கிட்டத்தட்ட 30 வருடங்களுகளாகியும், எந்தத் தொகுப்பும் வெளியிடாத ரஞ்சகுமாரின் 'மோகவாசல்', அருளரின் 'லங்காராணி', கோவிந்தனின் 'புதியதொரு உலகம்' என்று எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன.

யுவான் ரூல்ஃபோ இரண்டே இரண்டு நூல்களைத்தான் எழுதினார் என்றாலும், அவை எழுதப்பட்டு 75 ஆண்டுகளாகின்றபோதும் இன்னும் நாம் பேசிக் கொண்டிருக்கின்றோம். மேலும் இந்தப் படைப்புக்கள் தனியே மெக்ஸிக்கோவின் அடையாளமாக இல்லாது, முழு இலத்தீன் அமெரிக்க இலக்கியத்துக்குமான முன்னோடியாகவும் ஆகியிருக்கின்றது. யுவானின் 'பெத்ரோ பராமோ'வின் புனைவு மொழியால் எண்ணற்ற இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் மட்டுமில்லை, ஆங்கிலத்திலும் பிறமொழிகளிலும் எழுதும் எழுத்தாளர்கள் பலரும் ஈர்க்கப்பட்டிருக்கின்றார்கள். இதைத் தவிர ஒரு படைப்பாளிக்கு மிகச்சிறந்த அங்கீகாரம் கிடைக்கப்போவதில்லை. அந்தவகையில் மிகச் சொற்பமாக எழுதிய யுவான் ரூல்ஃபோ ஆசிர்வதிக்கப்பட்டவர்.

*************

(நன்றி: 'அம்ருதா' - தை/2025)