கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

இளங்கோவின் “பேயாய் உழலும் சிறுமனமே” -மைதிலி தயாநிதி

Wednesday, December 06, 2017

“பேயாய் உழலும் சிறுமனமே” என்று பாரதியின் பாடல் வரியினைத் தனது தலைப்பாக வரித்துக்கொண்ட இளங்கோவின் நூல் அகநாழிகை வாயிலாக 2016 செப்தெம்பரில்  வெளிவந்துள்ளது.  இது 2004 -2014 ஆண்டுகாலப் பகுதியில் பல்வேறு விடயங்கள் பற்றி எழுதப்பட்ட  30 கட்டுரைகளை  ஏறத்தாழ 185 பக்கங்களில்  உள்ளடக்கியிருக்கும் ஒரு கட்டுரைத்தொகுப்பாகும்.  அனுபவம், அலசல், வாசிப்பு, இசை, திரை, புலம்பெயர்வு என்று  ஆறு பகுதிகளாக இக்கட்டுரைகள் வகுக்கப்பட்டுள்ளன.   ஓரிடத்தில் நில்லாது அலைந்து கொண்டிருக்கும் பேய் மனதின் எண்ணக் கருக்களின் சொல்வடிவமே இக்கட்டுரைகள் எனலாம்.   

போரும், அதன் வலியும், வடுவும் நிறைந்த பிள்ளைப்பருவ ஞாபகங்கள் பொதிந்த அனுபவக் கட்டுரைகளை முதலாவது பகுதியாக நூலில் வைத்துள்ளமை, அத்தகைய நினைவுகளினூடாக நூலின் வெவ்வேறு பகுதிகளுக்கிடையிலான தொடர்பையும், அவை ஒவ்வொன்றுள்ளும் உள்ளடக்கப்பட்ட கட்டுரைகளுக்குமிடையிலான தொடர்பையும் கட்டமைத்துக் கொள்ள உதவுகின்றது.    இராணுவ அடக்குமுறையால் ஒடுக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் வதிந்த  நூலாசிரியரின் பால்ய அனுபவங்கள் கனேடிய பல்லின சமூகத்தில்  சமூக, அரசியல் மையங்களினால் ஒடுக்கப்படுபவர்களின்  நிலைப்பாடுகளினை ஆதரித்துக் குரல் எழுப்புவராக அவரைப் பரிணமிக்க வைத்திருப்பதை புலம்பெயர்வு தலைப்பின் கீழ்  உள்ளடக்கப்பட்ட கட்டுரைகள் புலப்படுத்துகின்றன.   தீவிர வாசகராகத் தன்னை அடையாளம் காட்டும் ஆசிரியர், போரை மையமாகக் கொண்டு 2000 ஆம் ஆண்டின் பின்னர் எழுந்த ஈழத்திலக்கியம், போர் குறித்த அபுனைவுப் பிரதிகள் என்பன பற்றி அலசல், வாசிப்பு  பகுதிகளில் பதினொரு கட்டுரைகளைத் தந்திருப்பதுடன், போரினைப் பின்புலமாகக்  கொண்டு சிங்கள-தமிழ் மக்களின் உறவினைச் சித்திரிக்கும் சிங்கள இயக்குனர்களின் திரைப்படங்களுக்கான விமர்சனங்களையும், ஒடுக்கப்பட்டவரின் அல்லது ஒடுக்கப்பட்டோருக்கான இசை பற்றிய அறிமுகத்தையும் (மாயா, ‘ராப்’ பாடல்களினூடு சிறுபயணம் ) எழுதியுள்ளார்.

கவிஞனாயும், (நாடற்றவனின் குறிப்புகள் , 2007), சிறுகதை (சாம்பல் வானத்தில் மறையும் வைரவர் , 2012), பத்தி எழுத்தாளனாயும் விளங்கும் நூலாசிரியருக்கு மொழி வசப்படுகிறது என்பது ஆச்சரியம் அளிக்கும் விடயம் அன்று.  தெளிவு, சொற்றிறம், தடையற்ற மொழி ஓட்டம் எனும் அம்சங்களை இவர் எழுத்தில் அவதானிக்கலாம். மிகுந்த அவதானிப்புகளைப் பிரதிபலிக்கும் இவரின் இளமைப்பருவ வர்ணனைகளில் போர் ஏற்படுத்திய பீதி உறைந்திருப்பினும்,  மகிழ்ச்சியான தருணங்களை நினைவுகூருங்கால் ஏக்கத்தின் (nostalgia)சுவடுகளையும்   காணக்கூடியதாக உள்ளது. இவரின் எனக்கான தெருக்கள் முதலாவது கட்டுரை  மாறுபட்ட பண்பு கொண்ட  இருவகையான தெருக்களை அருகருகே வைத்துப் பேசுதல் (contrast) மூலமாக  போரின் கொடுமையினையும், அவலத்தினையும் வெளிக்கொணர்கிறது.  போரின் வலிகள் எனும் நாரில் இவ்வனுபவக் கட்டுரைகள் கோர்க்கப்பட்டிருப்பினும், போரின் நிழல்படியாத நினைவுக் குவியல்களாக யாழ்ப்பாணத்து அழகிய மழைக்கால வர்ணனை இடம்பெறுகின்றது.   மேலும், வளர்ப்புப் பிராணிகள் மழைக்காலத்தில் வீட்டு விறாந்தைக்கு இடமாற்றப்படுவது பற்றிய குறிப்பு  இக்கட்டுரையில்  காணப்படும் அதே சமயம், கட்டுரையாசிரியர்  குடும்பமே போர் காரணமாக இடம் பெயர்வது குறித்து அடுத்ததாக வைக்கப்பட்டுள்ள வாளின் நுனியில் சிதறும் வாழ்வு எனும் கட்டுரை பேசுகிறது.

வாசித்த நூல்கள், பார்த்த திரைப்படங்கள் என்பன பற்றிய கட்டுரைகளில் அவரின் தர்க்க ரீதியிலான அணுகுமுறையினை அவதானிக்கக்கூடியதாக இருப்பதுடன், சரிசமநிலையுடைய  பார்வையினை  (balanced view) எல்லாக் கட்டுரைகளிலுமே அவர் தர முயன்றிருக்கின்றார்.  விசேடமாக, அசோகஹந்தகமவின்  இனி அவன் என்ற திரைப்பட விமர்சனம், வரலாற்றின் தடங்களில் நடத்தல் எனும் கட்டுரைகளைக் குறிப்பிடலாம்.  பொதுவாக இவர் எழுத்து தன் கருத்தை வலுவாகக் கூறித் தன்பால் வசப்படுத்தும், persuasive எழுத்து. தர்க்கரீதியாக விடயத்தை அணுகினும் விவாதங்களையும், விமர்சனங்களையும் சிலசமயங்களில் உணர்ச்சிகரமான மொழியில் முன்வைக்கின்றார் போல் எனக்குப் பட்டது. இது அவர்  தனது வாசகர் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானமாக இருக்கக்கூடும்.  பலசமயங்களில் வாசகர்களே எழுத்தாளனின் மொழிநடையினைத் தீர்மானிக்கின்றனர்.

அத்துடன்,  இவரது பெரும்பாலான கட்டுரைகளில் இறுதிப் பந்தி மிக முக்கியமானதாக அமைகின்றது.  கட்டுரையில் ஆராயப்பட்ட நூலின் முக்கியத்துவம்,  நூலிலிருந்து வாசகர் பெறக்கூடிய செய்தி, நூல் பற்றிய மதிப்பீடு, அந்நூல் அல்லது அது கூறும் விடயம் குறித்த மறுபார்வை என்பவற்றைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கின்றார்.

இவர் எழுத்துகள் அனைத்திலும் ஊடே ஓடிக்கொண்டிருக்கும், இவரின் கட்டுரைகளினை வழிநடத்தும்  விழுமியங்கள்  இன, நிற, மத, சாதி, வர்க்க, பால், பொருளாதார வேறுபாடுகளுக்கு அப்பால் மனிதரை மதித்தல்,நேசித்தல்,  மனிதரைக் கண்மூடித்தனமாகக் கொன்றொழிக்கும் போருக்கும், எதேச்சாதிகாரத்திற்கும்  எதிரான நிலைப்பாடு,  இயற்கையை ஆராதித்தல், விட்ட பிழைகளுக்கான கூட்டுப்பொறுப்பு  என்பனவாகும். இத்தகைய மானுடம் சார்ந்த விழுமியங்களால் இவர் எழுத்துகள் அடையாளப்படுத்தப்படுகின்றன.
.  
இனி, இவர் நூல் பற்றிய எனது மறுபார்வையச் சுருக்கமாக  இங்கு பதிவு செய்கிறேன்.  முதலாவதாக, கட்டுரைகள்  சிலவற்றினைக் கால ஓட்டத்திற்கேற்ப மீள்பார்வை செய்திருக்கலாம் என்று எண்ணுகிறேன்.  எடுத்துக்காட்டு: சமகால ஈழத்து இலக்கியம் (2010),  சில அரசியல் பிரதிகள் (2012).  

மேலும்,  இந்நூலின் 46-47 ஆம் பக்கங்களில் காணப்படும் A Second Sunrise எனும் தொகுப்பிலிருக்கும் colour எனும் கவிதை பற்றிய நூலாசிரியரின் விமர்சனம் கவனத்தை ஈர்க்கிறது.  இக்கவிதை நிறம் எனும் பெயரில் ஏற்கனவே  மீண்டும் கடலுக்கு எனும் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பே என்கிறார் நூலாசிரியர்.  Colour எனும் ஆங்கிலக் கவிதையை நான் வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டவில்லை.  ஆனால் அது நிறம் எனும் கவிதையின் விசுவாசமான மொழிபெயர்ப்பு எனில், அது வீடற்ற மனிதர்கள் அனைவரையும்  மாறாநிலைப்படுத்துகின்றது  (sterotyping)  என்றோ, வீடற்ற எல்லா விளிம்பு நிலை  மனிதர்கள் பற்றிய விமர்சனமோ என்று கொள்ளத் தேவையில்லை என்று நினைக்கின்றேன்.  

காட்டுப்பச்சை இராணுவத் தொப்பியுடனும், நீலக்கண்களுடன் இருந்த முதிய வீடற்ற தனிமனிதன் ஒருவன் visual minority சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் மீது இனவாத இழிசொல்லொன்றை வீசுகின்றான் என்றே கொள்ளவேண்டியிருக்கின்றது. அந்த வசைச் சொல் நிறத்தை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்ட சமூகங்களை இழிவுபடுத்தும் சொல். ஆனால் அதைக் கூறியவனுக்குக் கவிதையில் விசேட அடையாளங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. எனவே, அவனை வீடற்ற, இரந்து காசு கேட்கும் விளிம்புநிலை மனிதர்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவனாக, அக்கவிதையை மூலமொழியில் வாசிக்கும்போது என்னால் பார்க்கமுடியவில்லை.

அடுத்ததாக,  with you without you   என்ற பிரசன்ன விதானகேயின் திரைப்படம் குறித்து,நூலாசிரியரின் விமர்சனத்திற்குச் சார்பாக ஒரு கருத்தினைக் கூற விழைகின்றேன்.   சூழ்நிலை காரணமாக நடுத்தரவயது சிங்கள அடகுபிடிப்பாளரை மணமுடிக்கும் தமிழ்ப் பெண்ணொருத்தி தற்செயலாகத் தனது கணவனின் கடந்தகாலம் பற்றி அறிகிறாள். இதன்பின்னர்  அவனுடன் சுமுகமாக வாழ்க்கை நடத்தவியலா நிலையில் ’ விபரீத முடிவொன்றினை’ எடுக்கின்றாள்.  இப்படம் பற்றி நூலாசிரியர் “இது இரண்டு தனி மனிதர்களின் சிக்கலான வாழ்க்கை என்பதை விட இன்னும் சற்று விரித்துப் பார்த்தால் இரண்டு இனங்களுக்கிடையிலான முரண்  என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.  இன்று ஈழத்தில் எல்லாவற்றையும் மறந்து விட்டு வாழ்ந்து விடலாம் என்கிற மேலோட்டமான அறைகூவலை எவ்வித பிரசார நொடியும் இல்லாது இந்தத் திரைப்படம் அடித்து நொறுக்கி விடுகின்றது.” என்று கூறுகின்றார்.  

இந்தக் கருத்து எனக்கு உடன்பாடானதே. எனினும், இத்திரைப்படத்தைப் பார்த்த பின்னர் என் மனதில் எழுந்த கேள்வி,  ”அந்த இரு தனி மனிதர்கள் ஏன் சிங்கள ஆணாகவும், தமிழ்ப் பெண்ணாகவும் இருக்கவேண்டும்? சிங்களப் பெண்ணாகவும் தமிழ் ஆணாகவும் ஏன் இருந்திருக்கக்கூடாது?” என்பதுதான்.  சிங்கள-தமிழ் கலப்புத் திருமணம் தொடர்பாக புலமைசார் கட்டுரைகள் யாதேனும் உள்ளனவா என நான் தேடும்போது 2003 இல் வெளியிடப்பட்ட   Feminists under fire: Exchanges across war zones என்ற நூலில் நெலுகா  சில்வா    The politics of intermarriage in Sri Lanka in an era of conflict  (147-156) என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை கிடைத்தது.  ஸ்ரீலங்கா தொலைக்காட்சிநாடகங்களில் சிங்கள-தமிழ் கலப்புத்திருமணம் பற்றிய சித்திரிப்பு பற்றி இதில் இவர் எழுதுகிறார்.  சிங்கள-தமிழ்க் கலப்புத் திருமணம் முதலில் பெரும்பான்மைச் சிங்கள இனத்தவரால் ஆதரிக்கப்படாதிருந்தபோதிலும்,   1998 க்குப் பிற்பட்டு வெளிவந்த  தொலைக்காட்சி நாடகங்களில் அதற்கு முன்னர் இருந்ததிலும் பார்க்க சாதகமான போக்கினை அவதானிப்பதாகக் கூறும் அவர்  இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

அதிகாரபூர்வமான பொதுவெளிச் சொல்லாடல்களிலும் (public discourse), ஊடகங்கங்களிலும் ஆதரிக்கப்படும் இரு இனங்களுக்கிடையிலான தொடர்பின் கூட்டிணைவு பிரச்சினைக்குரிய மாதிரியைப் பின்பற்றுவதுபோன்று தோன்றுகிறது.    ஆராயப்பட்ட தொலைக்காட்சி நாடகங்களில் பெண் சிறுபான்மைத் தமிழ் இனத்தைச் சேர்ந்தவளாகவும்,  ஆண்  பெரும்பான்மைச் சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவனாகவும் விளங்குகின்றான்..  (இதற்கு மாறான நிலை பொதுஅரங்கில் இதுவரை காட்டப்படுவதற்குத் தகைமை வாய்ந்ததாக அமையவில்லை.) சிங்கள ஆணை விவாகம் செய்வதன் மூலம்  தன்னியப்படுத்தல் அரசியல் (politics of assimilation) நிகழ்கிறது.  இப்பெண்கள் தமது அடையாளங்களின் முக்கிய கூறுகளில் ஒன்றான தமிழ்க்குடும்பப் பெயரைக் கைவிட்டு,  ஆணின் சிங்களப் பெயர்களை  ஏற்றுக்கொள்வர் என ஊகிக்கலாம். சுர அசுர தொலைக்காட்சி நாடகத்தில் தனது இனத்துவத்தின் அடையாளமான பொட்டினைத் தொடர்ந்து அணியினும்,  இரஹந்த யத எனும் தொலைக்காட்சி நாடகத்தில் கதாநாயகி பொட்டிடலைத் தவிர்க்கின்றாள். இது அவளின் தமிழினத்துவத்தினை இன்னுமொருபடி சென்று துடைத்தழிக்கின்றது.” (பக்கம் 154) 
என்று கூறும்  நெலுகா சில்வா  சிங்கள ஆணைக் காதலிக்கும் அல்லது  திருமணம் செய்யும் தமிழ்ப்பெண் சிங்கள மொழியில் உரையாடுபவளாகவும், அதே சமயம் ஆண் தமிழில் பேசுதற்கு எவ்வித எத்தனமும் எடுக்காதவனாவனாகவும் காட்டப்படுகின்றான்.  இதை பெரும்பான்மைச் சமூகத்தின் மொழிமேலாண்மைக்குச் சிறுபான்மை இனத்தவர் உட்படுத்தப்படுவதைக் குறிக்கின்றது. தமிழ்ப் பெண்களை திருமணமூலமான உள்வாங்கல்கள் அடிப்படையில் ஒற்றைப்படையான சமூகத்தினை உருவாக்க முடியும் என்ற  பெரும்பான்மையினர்  மத்தியில்  போர்க்காலத்தில் செல்வாக்குப் பெற்ற  கருத்தியலின் பொருத்தப்பாடின்மையையும் with you without you   திரைப்படம் சுட்டிக்காட்டுகின்றது அல்லது தகர்க்கின்றது என்றும் கூறலாம்..

நூலில் இறுதியாக உள்ளடக்கப்பட்டுள்ள நீரிற் கரையும் சொற்கள்  இலக்கிய வாசிப்பும் விமர்சனமும், மனித மனத்தின் விரிதிறம், அன்பை வெளிப்படுத்தல், உயிர்த்திருத்தல்  என்பன குறித்துப் பேசுகின்றன. இலக்கிய வாசிப்பும் விமர்சனமும் குறித்து இளங்கோ இவ்வாறு கூறுகிறார்.

இசையில் ஓவியத்தில் இலக்கியத்தில் அமிழ முன்முடிவுகள் அவசியமற்றவை. ஒருபுத்தகத்தை வாசிக்க ஆரம்பிக்கும்போது, எழுத்தாளரின் பெயரும் அடையாளமும் இன்றி வாசித்தாற்றான் அந்தப் படைப்பில் முற்றாக அமிழ்ந்து போகமுடியும் என்று எப்போதோ வாசித்த கவிதை நினைவிற்கு வருகின்றது.  உண்மையில் இந்தத்தன்மை எனக்குள்ளும் தலைதூக்கியபடிதான் இருக்கின்றது.  விமர்சனங்களை வாசித்து வாசித்து எல்லாவற்றையும் விமர்சனக்கண்ணோடு பார்த்துக் கொண்டு வாழ்வின்/படைப்பின் அரிய தருணங்களைத் தவற விடுகின்றேனோ என்று யோசிப்பதுண்டு. இலக்கியத்தைவிட எத்தனையோ அற்புதமான விடயங்கள் வாழ்வில் இருக்கின்றன. அவற்றில்தான் அதிகம் அமிழ்ந்து போக விரும்புகின்றேன்.  ஒரு பயணியாய் இலக்கியப் படைப்புகளை வாசித்து விட்டு, அவற்றிற்குப் பின்னாலுள்ள அரசியலை உதறித்தள்ளிவிட்டுப் போக விரும்புகின்றேன்.  பிடித்திருந்தால் மனதில் நிறுத்திக்கொண்டும், பிடிக்காவிட்டால் புன்னகைத்தபடியும் வாழ்வில் நகர்தலே சாலச்சிறந்தது. ஆனால் அது எந்தளவில் சாத்தியம்/சாத்தியமின்மை என்பது புரியவில்லை (பக்கம் 184)


ஆசிரியரது இக்குறிப்பு இலக்கியத்திற்கும், விமர்சனத்திற்கும் இடையிலான  மன அசௌகரியமான தொடர்பு பற்றிப் பேசுகிறது.  இது குறித்த எனது கருத்துகளுடன் இக்கட்டுரையை நிறைவு செய்கின்றேன்.  எல்லா இலக்கியப் பிரதிகளுமே அரசியற்பிரதிகள் என்றுதான் நான் கருதுகிறேன். சில  மிக வெளிப்படையானவை. பல தன் சார்பு நிலையை வெளிப்படுத்தாதவை.    இலக்கிய விமர்சனம் என்பது பிரதியின் பலம் பலவீனங்களை மதிப்பிடுவது (evaluation) என்று மிகக் குறுகிய வட்டத்தில் சிந்திக்கின்றோம். வெவ்வேறு கோட்பாடுகளுக்கூடாகப் அப்பிரதியைப் பார்க்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதையும்  மறந்து விடுகின்றோம்.   இலக்கியப்பிரதியின் கர்த்தா, பிரதி எழுந்த சூழல் இவற்றை எல்லாம் புறம் தள்ளி, வெறுமனே பிரதியை மட்டும் மையமாகக் கொண்டெழுந்த விமர்சனமுறையும் உண்டு.  

அது குறித்த கட்டுரைகளை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை வெளியீடான இளங்கதிரில் பேராசிரியர் செல்வநாயகம் எழுதியுள்ளார்.  மேலும், பிரதி எவ்வளவு தூரம் சமூகப்பொறுப்புடையதாக இருக்கின்றது என்பதில் மட்டும் விசேட கவனம் செலுத்தி,  அதன் வடிவம் சார்ந்த அழகியல் அம்சங்களைப் புறக்கணித்து விடுகிறோம்.   ”ஏன் இன்னும் எமது படைப்புகள் தமது தளத்தை உலக அளவிற்கு விசாலிக்கவில்லை என்று யோசிக்கும்போது ஒழுங்கான விமர்சன மரபு தொடர்ச்சியாக வளர்தெடுக்கப்படவில்லை என்பது முக்கிய காரணமாய்த் தோன்றுகின்றது என்று இளங்கோ கூறுவதும் (பக்கம் 43), தமிழிலக்கிய மரபு தனக்கென அழகியலை வளர்த்தெடுத்துக் கொள்ளல் அவசியம் என்று கவிதையியல், அழகியல், சமகாலத்தமிழ்க் கவிதை எனும் கட்டுரையில்  பேராசிரியர் செல்வா கனகநாயகம்  குறிப்பிடுவதும் நமது கவனத்திற்கும் சிந்தனைக்கும் உரியன. 
-------------------------------

(நன்றி: 'பிரதிபிம்பம்')

0 comments: