கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஒரு யாழ்ப்பாணியின் சோக‌ வாக்குமூல‌ம்

Thursday, April 15, 2010

-நெடுங்க‌தை-

1.
அவ‌ளைக் காண‌வில்லை என்று தெரிந்த‌போது நான் பெரிதாக‌ முத‌லில் எடுத்துக்கொள்ள‌வில்லை. வ‌குப்பு முடிந்த‌வுட‌ன் வ‌ழ‌மையாக‌ச் ச‌ந்திக்கும் இட‌த்தில் அவ‌ள் இல்லாத‌போது வேறெத‌னும் வேலையாக‌ப் போயிருப்பாள் -தாம‌த‌மாக‌ வ‌ரலாம்- என்று காத்துக்கொண்டிருக்க‌த் தொட‌ங்கினேன். கோடை கால‌த்தில் இந்த‌ வ‌ளாக‌த்தைச் சுற்றி ஓடும் ந‌தியிற்கு அதிக‌ வ‌ன‌ப்பு வ‌ந்துவிடுகின்ற‌து. ப‌டிக்கும் நாங்க‌ள் ப‌ல்வேறு தாய்மொழிக‌ளைப் பேசிக்கொண்டு திரிவ‌துபோல‌ ந‌தியும் க‌ல‌க‌ல‌ப்பாக‌ப் ப‌ல‌மொழிக‌ளைப் பேசிக்கொண்டு ந‌க‌ர்வ‌து போல‌ப்ப‌ட்ட‌து.

இய‌ற்கைச் சூழ‌லை இர‌சிக்க‌த்தொட‌ங்கிய‌தில் நான் எத‌ற்காய் இங்கு வ‌ந்து காத்துக்கொண்டிருக்கின்றேன் என்ப‌தும் ம‌ற‌ந்துபோய்விட்ட‌து. ஒருக்காய் முறிக‌ண்டிப்ப‌க்க‌ம் போய் த‌லையைக் காட்டிவிட்டு வ‌ர‌லாம் என்றாலும், இவ‌ள் அத‌ற்குள் வ‌ந்துவிட்டாள் என்றால் பெரும் பிர‌ச்சினையாகிவிடும். 'ஏன் அந்த‌ப் ப‌க்க‌ம் போனாய்' என்று அவ‌ள் எழுப்பும் கேள்வியோடு புகையைத் தொட‌ங்கும் ச‌ண்டையின் பெருநெருப்பை, மூன்று கிலோமீற்ற‌ர் தூர‌த்திலிருக்கும் க‌னேடிய‌ பிர‌த‌ம‌ர் வாச‌ல்த‌ல‌த்தால் கூட‌ தீர்த்துவைக்க‌ முடியாது. க‌ன‌டாவில், அதுவும் அத‌ன் த‌லைந‌க‌ரில் முறிக‌ண்டி எப்ப‌டி வ‌ந்த‌து என்று நீங்க‌ள் உங்க‌ள் மூளையைத் திருகு திருகென்று திருக‌வும்கூடும். முறிக‌ண்டி ம‌ட்டுமில்லை, க‌ன்னிய‌ர் ம‌ட‌ம், வ‌ழுக்கையாறு என்ப‌தெல்லாம் கூட‌ எங்க‌ளின் வ‌ளாக‌த்தில் இருக்கின்றன. முறிக‌ண்டி என்ப‌து நீங்க‌ள் எங்க‌ள் வ‌ளாக‌த்தின் சுர‌ங்க‌ப்பாதைக்குள்ளால் ந‌ட‌ந்துபோனால் வ‌ருகின்ற‌ ஒரு முச்ச‌ந்திப் பிர‌தேச‌மாகும். முச்ச‌ந்தியில் ஒருபுற‌ம் கோப்பிக்க‌டையும், இன்னொரு ப‌க்க‌ம் Barம் இருக்கும். வ‌ளாக‌த்துக்கு வாற‌ போற‌ பெட்டைய‌ள் ஏதோ ஒரு வ‌குப்புக்காக‌வேனும் அந்த‌ முச்ச‌ந்தியைக் க‌ட‌ந்துபோய்க் கொண்டிருப்பார்க‌ள் என்ப‌தால் அது ஒரு கேந்திர‌ முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌ இட‌மாய் மாறிவிட்ட‌து. என‌க்கென்ன‌வோ இந்த‌ப் பொடிச்சிக‌ள், தாங்க‌ள் அன்ற‌ன்றைக்கு செய்கின்ற‌ அல‌ங்கார‌த்தைப் பெடிய‌ங்க‌ளுக்குக் காட்சிப்ப‌டுத்தி பாராட்டைப் பெறுவ‌த‌ற்காய்த்தான் அடிக்க‌டி முறிக‌ண்டிப் ப‌க்க‌மாய் ந‌டைப‌வ‌னி செய்கின்றார்க‌ளோ என்கின்ற‌ ஒரு சந்தேகமும் உண்டு. அத்தோடு ப‌க்க‌த்திலை ஒரு பாரும் இருக்க‌ அதுக்குள்ளை தாக‌ந் தீர்க்க‌, இங்காலை க‌ண்ணுக்கு குளிர்ச்சிக்கென‌ இர‌வு ஒன்ப‌து ப‌த்து ம‌ணிவ‌ரை ச‌ன‌ம் நிறைய‌ப் புழ‌ங்கிக்கொண்டிருக்கிற‌ இட‌மாய்தான் முறிகண்டியிருக்கும். இப்ப‌டி வெளியிலை வெயிலுக்குள்ளை நிண்டு என‌க்கும் ஒரே தாக‌மாய்தானிருக்கிற‌து, முறிகண்டிச் ச‌ந்திக்குப் போய் வாயைக் கொஞ்ச‌ம் ந‌னைச்சுட்டு வ‌ந்திட‌லாம் என்றால் இவ‌ளொருத்தி வ‌ருவ‌தாய்ச் சொன்ன‌து நினைவுக்கு வ‌ந்து ப‌ய‌முறுத்துகிற‌து

ஒருமுறை இப்ப‌டித்தான் முத‌லாம் ஆண்டு பெட்டையொருத்திக்கு ஒற்றை ரோஸ் கொடுத்து காத‌லைச் சொல்ல‌ ந‌ண்ப‌ரொருவ‌ன் முறிக‌ண்டியில் காத்துக்கொண்டிருந்தான். அவ‌னும் ரிப்ரொப்பாய் வெளிக்கிட்டு, ரென்ச‌னைக் குறைக்க‌ கொஞ்ச‌ம் 'வாசித்து'விட்டு சுதியாய்த்தான் நின்றான். அந்த‌ப் பெட்டை வ‌ருகின்ற‌ நேர‌ம‌ள‌வில் ஒற்றை ரோஸை எங்க‌ள் கையில் த‌ந்துவிட்டு, த‌ன்ரை ரென்ச‌னைக்குறைக்க‌ பாத்ரூம் போய்விட்டு வ‌ந்திருந்தான். பெட்டை முறிக‌ண்டியைக் க‌ட‌க்கையில் 'உங்க‌ளோடு கொஞ்ச‌ம் க‌தைக்க‌வேண்டும்' என்று ஒர் ஓர‌த்தில் கூப்பிட்டு அந்த‌மாதிரி ரொமாண்டிக்காய் முழ‌ங்காலிட்டு I love you என்ற‌ப‌டி ஒற்றை ரோஸைக் கொடுத்தான். அந்த‌ப் பெட்டைக்கு கொஞ்ச‌ம் அதிர்ச்சி என்றாலும், இப்ப‌டி ஒருத்த‌ன் ரொமாண்டிக்காய் இருக்கின்றானே என்ப‌தில் ஒரு நெகிழ்ச்சி வ‌ர‌ ரோஸையும் வாங்கிவிட்டாள். ஆனால் ரோஸை அவ‌ள் முக‌ர்ந்து பார்த்த‌தில்தான் எல்லாப் பிர‌ச்சினையும் தொட‌ங்கிய‌து. 'You bloody drinker, அவ்வ‌ப்போது நீ குடிக்கிற‌தென்றால் கூட ப‌ர‌வாயில்லை, அத‌ற்காய் ப்ர‌போஸ் ப‌ண்ணுகிற‌ கேர்ளிற்குத் தருகிற‌ ரோஸைக் கூட‌ குடிக்க‌ வைத்துத் த‌ந்திருக்கிறாயே, உன்னையெல்லாம் ந‌ம்பி நான் எப்ப‌டிக் காத‌லிக்க‌ முடியும்' என்று ந‌ல்லாய்த் திட்டிவிட்டு ரோஸையும் குப்பைத்தொட்டிக்குள் எறிந்துவிட்டு அவ‌ள் ம‌றைந்துவிட்டாள். ந‌ண‌ப‌னுக்கோ என்ன‌ ந‌ட‌ந்த‌தென்று பெருந்திகைப்பாக‌ இருந்த‌து. நாங்க‌ள்தான் கொடுப்புக்குள் ந‌முட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தோம். கையில் கொஞ்ச‌ நேர‌ம் வைத்திருக்க‌ச் சொன்ன‌ ரோஸை பிய‌ர் பிச்ச‌ருக்குள் அமிழ்த்தி எடுத்த‌து நாங்க‌ள்தான்.. பெட்டை முறிகண்டிக்கு வாற‌ ரென்ச‌னிலை ந‌ண்ப‌னால் ரோஸிலிருந்த‌ வ‌ந்த‌ 'ந‌றும‌ண‌ம்' ஒன்றையும் இன‌ம்பிரித்த‌றிய‌ முடிய‌வில்லை.

இங்கே முன்னே ஒடிக்கொண்டிருக்கிற‌ ரீடோ ஆற்றுக்கு நாங்க‌ள் இட்ட‌பெய‌ர்தான் வ‌ழுக்கையாறு. ஆறே இல்லாத‌ யாழ்ப்பாண‌த்திலை ம‌ழை நிறைய‌ப் பெய்து வெள்ள‌வாய்க்காலுக்குள்ளாலை நீரோடும்போது அது வ‌ழுக்கையாறாக‌ மாறிவிடுவ‌துண்டு. நானொரு அச‌ல் த‌மிழ‌ன். என்ன‌ தான் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ மைல்க‌ள் தாண்டி க‌ன‌டாவுக்கு வ‌ந்தாலும் எங்க‌டை ஊர்க‌ளை ம‌ற‌க்க‌க்கூடாதுதான். சில‌வேளை என்ரை பெட்டை வாய் த‌வ‌றி ரீடோ ஆற்றுப்ப‌க்க‌மாய்ச் ச‌ந்திப்போம் என்றாலும், நான் 'வ‌ழுக்கையாறு என்று சொல்லும்' என்று திருத்த‌ ஒருபோதும் ம‌ற‌ப்ப‌தேயில்லை. ஈழ‌த்தில் பாளியாறு ப‌த‌வியா ஆறு, ம‌காவ‌லியாறு என்று எத்த‌னையோ ஆறுக‌ளிருக்க‌ இப்ப‌டியொரு போலி ஆற்றின் பெய‌ரைத் தேர்ந்தெடுத்த‌துதான் ஒரு யாழ்ப்பாணிக்குரிய‌ சாம‌ர்த்திய‌ம்.

2.
இவளை ஏன் இன்ன‌மும் காண‌வில்லை. வ‌ழுக்கையாற்ற‌டிக்கு வ‌ந்தே கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரு ம‌ணித்தியால‌த்திற்கு மேலே ஆகிவிட்ட‌து. இத‌ற்கிடையில் நாலைந்து முறை அவ‌ளை செல்போனில் அழைத்தும் பார்த்துவிட்டேன், ஒரு ப‌திலையும் காண‌வில்லை. காத‌லுக்காய் த‌மிழ்ப்ப‌ட‌ங்க‌ளில் வ‌ருகின்ற‌ கதாநாய‌க‌ன்க‌ள் போல‌ என்னால் இனியும் காத்துக்கொண்டிருக்க‌ முடியாது. அவ‌ர்க‌ளுக்காவ‌து காத‌லி வ‌ந்துவிட்ட‌த‌ன்பிற‌கு கொஞ்ச‌ம் கோபித்து, கொஞ்ச‌ம் செல்ல‌ம் கொஞ்சி, பிற‌கு ஏதாவ‌து வெளிநாடொன்றுக்குப் ப‌ற‌ந்து டுய‌ட் ஆட‌வாது முடிகின்ற‌து. என‌க்கு இஃதொன்றும் நிக‌ழ‌ப்போவ‌தில்லை. இப்ப‌டி நீண்ட‌நேர‌க் காத்திருப்ப‌தாலேயே ஒரு க‌டுப்பு வ‌ந்துவிட்டிருக்கும். இவ‌ள் வ‌ந்த‌வுட‌னே அது எள்ளும் கொள்ளுமாய் வெடிப்ப‌தாய்த்தான் முடியும். பிற‌கு ச‌ண்டை, க‌ண்ணீர், கெஞ்ச‌ல், ஆற்றுப்ப‌டுத்த‌ல் என ஒருவார‌ம் இருவ‌ரும் ம‌ன‌ உளைச்ச‌ல்க‌ளோடுதான் இருக்க‌வேண்டியிருக்கும். எத‌ற்கு இந்த‌ப் பொல்லாப்பு. 'என்னால் இனியும் காத்திருக்க‌முடியாது நான் வீட்டை போகின்றேன்' என்றொரு ரெக்ஸ் மெஸேஜ் அனுப்பிவிட்டுப் போக‌வேண்டிய‌துதான்.

இப்போது இர‌வு எட்டு ம‌ணியாகிற‌து. ம‌த்தியான‌ம் இவ‌ளைச் ச‌ந்திக்காம‌ல் வீட்டை வ‌ந்து ந‌ன்கு நித்திரை கொண்டு எழும்பியாகியும் விட்டாச்சு. ஒருமுறை அவ‌ளை செல்போனில் அலைத்துப் பார்ப்போம். ம‌த்தியான‌ம் காத்திருந்த‌ அலுப்பை கொஞ்ச‌மாக‌வேனும் காட்டாம‌ல், காத‌லில் உருகி எப்ப‌டிக் க‌தைப்ப‌து என்று ஒருமுறை என‌க்குள் ஒத்திகை செய்துகொண்டேன். காத‌லிக்கும்போது எப்போதும் மிக‌வும் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு ந‌ல்ல‌ ப‌க்க‌ங்க‌ளை ம‌ட்டுமே காட்ட‌வேண்டும் என்று எங்கையோ வாசித்த‌து இந்த‌ச் சூழ‌லுக்கு எவ்வ‌ள‌வு பொருந்துகிற‌து பாருங்க‌ள். ஏன் இவ‌ள் தொலைபேசியை எடுக்கிறாளில்லை. என்ன‌ ந‌ட‌ந்த‌து இவ‌ளுக்கு? சில‌வேளை என்னை வெட்டிவிட்டு வேறு யாரைவ‌து பிடித்துவிட்டாளா? சீ...ஏன் என்னைப் போல‌வே அவ‌ளையும் நினைக்கிறேன். வேறு ஒருத்த‌னைப் பிடிக்க‌வேண்டியிருந்தால் இந்த‌ இர‌ண்டு வ‌ருச‌த்துக்குள்ளையே எத்த‌னையோ ச‌ந்த‌ர்ப்ப‌ம் அவ‌ளுக்கு வாய்த்திருக்கும். அதையெல்லாம் ம‌றுத்த‌ப‌டிதானே என்னோடு இருந்த‌வ‌ள். அப்ப‌டியேதும் ந‌ட‌ந்திருக்காது. அப்ப‌ ஏன் இப்ப‌ தொலைபேசியை எடுக்கிறாளில்லை. ச‌ரி எத‌ற்கும் அவ‌ளின் அறைத்தோழிக்கு அழைத்துப் பார்க்க‌வேண்டிய‌துதான். 'என்ன‌ அவ‌ள் கால‌மை வ‌ளாக‌த்து வெளிக்கிட்ட‌த‌ற்குப் பிற‌கு இன்னும் அறைக்கு வ‌ர‌வில்லையா?' எங்கை போய் இவ‌ள் தொலைந்துவிட்டாள். இத‌ற்கு முன் இப்ப‌டியேதும் நிக‌ழ்ந்து இல்லையே. வேறெங்காவ‌து இப்ப‌டி போவ‌தாய் இருந்தால் கூட‌ தொலைபேசியில் அழைத்தோ, ஈமெயிலிலோ அல்ல‌து ரெக்ஸ் மெஸேஜ் செய்துவிட்டோதானே போகின்ற‌வ‌ள். என்ன‌வாயிற்று இவ‌ளுக்கு.

இவ‌ளுக்கு இங்கை இர‌ண்டு அண்ணாமார் இருக்கின‌ம். ஒருத்த‌ர் ப‌க்க‌த்திலை இருக்கிற‌ ம‌ற்ற‌ யூனிவ‌(ர்)சிற்றியில் ப‌டிக்கிறார். ம‌ற்ற‌வ‌ர் ப‌டித்துமுடித்துவிட்டு ஜேடிஎஸ்சில்தான் வேலை செய்கின்றார். இவ‌ளுடைய‌ அண்ணன்மாருக்கு எங்க‌டை விச‌ய‌ம் சாடைமாடையாய்த் தெரியும். இவ‌ளென்னைக் காத‌லித்துக்கொண்டிருப்ப‌து அவ‌ர்க‌ளுக்கு அவ்வ‌ள‌வு விருப்ப‌மில்லை என்ப‌தும் என‌க்கு ந‌ன்கு தெரியும். இப்ப‌த்தையான் நிலைமையில் க‌வுர‌வ‌ம் அது இதென்டு ஒன்றையும் பார்த்துக்கொண்டிருக்க‌ முடியாது. சில‌வேளை அவ‌ர்க‌ளோடுதான் இவ‌ள் நிற்கிறாளோ தெரியாது. ஒருக்காய் அவ‌ர்க‌ளுக்கும் அழைத்துப் பார்க்க்க‌வேண்டிய‌துதான். என்ன‌து அங்கையும் இவ‌ள் போக‌வில்லையா? இந்த‌ விச‌ரி எங்கைதான் போய்த்தொலைந்தாளோ?

3.
ந‌ள்ளிர‌வு ப‌ன்னிரெண்டும் ஆகிவிட்ட‌து. இனி இப்ப‌டியே வீட்டிலிருந்து சும்மா பார்த்துக்கொண்டிருக்க‌முடியாது. இவ‌ளுடைய‌ அண்ணன்மார் இருவ‌ரும் என்ரை அப்பார்ட்மெண்டிற்கும் வ‌ந்துவிட்டின‌ம். இவ‌ளுக்குத் தெரிந்த‌வ‌ர் எல்லோரையும் விசாரித்தாயிற்று. என‌க்கு ஒரே ப‌ய‌மாய்க் கிட‌க்கிற‌து. எல்லாச் சுத‌ந்திர‌மும் இருக்கிற‌தென்று பீத்திக்கொள்கின்ற‌ க‌ன‌டாவில் எல்லாவற்றையும் செய்வ‌த‌ற்கான‌ சுத‌ந்திர‌மும் இருக்கிற‌து என்ப‌தையும் ம‌ற‌ந்துவிட‌முடியாது. இவ‌ளுக்கு ஏதாவ‌து ந‌ட‌ந்திருக்குமா என்று வ‌ருகின்ற‌ எண்ண‌த்தை இலையான் க‌லைக்கிற‌ மாதிரி துர‌த்திக்கொண்டேயிருந்தேன். 'இனியும் இப்ப‌டியே வாளாவிருக்க‌ முடியாது, வாருங்க‌ள் போவோம்' என்று இவ‌ளுடைய‌ அண்ணன்மாரையும் அழைத்துக்கொண்டு பொலிஸில் புகார் கொடுக்க‌ வெளிக்கிட்டோம்.

பொலிஸ்கார‌ன்க‌ள், ஒன்றும் ந‌ட‌ந்திருக்காது, தாங்க‌ளும் தேடுகிறோம், யாருடைய‌ வீட்டிலையாவ‌து போய் நிற்க‌க்கூடும், நாளைக்கு வ‌ந்திருவா என்று சொல்லுறாங்க‌ள். எங்க‌டை த‌மிழ்ச்ச‌மூக‌த்திற்குள்ளை குடும்ப‌ங்க‌ளுக்குள் ஏதாவ‌து பிண‌க்குப்ப‌ட்டு, ம‌னுசிமார்க‌ள் கோப‌த்தில் சொல்லாம‌ல் கொள்ளாம‌ல் யாருடைய‌ வீட்டிலையாவ‌து போய் இர‌வில் நின்றுவிட்டு, கால‌மைக‌ளில் 'க‌ல்லானாலும் க‌ண‌வ‌ன் புல்லானாலும் புருச‌ன்' என்ற‌ தத்துவ‌ ஞான‌ம் கிடைத்து க‌ண‌வ‌ன்மாரோடு போய்ச் சேர்ந்துவிடுவ‌துண்டு. இவ்வாறான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளிலும் சில‌வேளைக‌ளில் ம‌னுச‌ன்மார் ம‌னுசியைக் காண‌வில்லை என்று ம‌னுக்கொடுப்ப‌துண்டு. இப்ப‌டிப் புகார் கொடுப்ப‌து, உண்மையில் ம‌னுசி காண‌வில்லை என்ப‌தால் வ‌ந்த‌ அக்க‌றையாலையா அல்ல‌து நாளை மனுசிக்கு ஏதும் ந‌ட‌ந்தால் பொலிஸ் த‌ன்னைச் ச‌ந்தேக‌த்தில் பிடித்துவிட‌க்கூடும் என்ற‌ முன் எச்சரிக்கையாலையா என்ப‌து புகார் கொடுக்கும் ம‌னுச‌ன்மார்க‌ளின் ம‌ன‌தைப் பொறுத்து வேறுப‌ட‌க்கூடிய‌து. இவ்வாறான‌ கார‌ணங்க‌ளால் இந்த‌ப் பொலிஸ்கார‌ன்க‌ள் உண்மையான‌ அக்க‌றையோடு இவ‌ளைத் தேடுவான்க‌ளோ என்ப‌தில் என‌க்கு ஐமிச்ச‌ம் இருந்த‌து.

அடுத்த‌ நாள் ம‌த்தியான‌ம் போல‌ வ‌ளாக‌த்திற்கு பொலிஸ் வ‌ந்து இவ‌ளைப் ப‌ற்றிய‌ விப‌ர‌ங்க‌ளை இவ‌ளின் ந‌ண்ப‌ர்க‌ள், பேராசிரிய‌ர்க‌ளிட‌ம் விசாரித்த‌போது ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் முழுதும் இவ‌ளைக் காண‌வில்லை என்ற‌ செய்தி ப‌ர‌விவிட்ட‌து. அத்தோடு இவ‌ள் காணாம‌ற்போன‌து வ‌ளாக‌ச் சுற்றாட‌லுக்குள்தான் என்ப‌தை இவ‌ள‌து அறைத்தோழியும் தெளிவாக‌ச் சொல்லியிருக்கிறாள். எனென்றால் நேற்றுக் காலை இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரும் சேர்ந்துதான் அறையிலிருந்து வ‌குப்புக்க‌ளுக்காய் வெளிக்கிட்டிருக்கின‌ம். இவ‌ள் காணாம‌ற் போயிருந்த‌து வ‌ளாக‌த்திற்குள் என்ப‌தால் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ நிர்வாக‌த்திற்கும் பெரும் பிர‌ச்சினையாகிவிட்ட‌து. என்னிட‌ம், ந‌ண்ப‌ர்க‌ளும் பொலிஸும் அடிக்க‌டி வ‌ந்து விசாரித்துக்கொண்டிருந்தார்க‌ள். எங்க‌ளுக்குள்ளை ஏதாவ‌து பிர‌ச்சினைப்ப‌ட்டுத்தான் அவ‌ள் காணாம‌ற்போய்விட்டாளா என்று தொட‌க்க‌த்தில் பொலிஸுக்கு என்னிலை ஒரு ச‌ந்தேக‌மிருந்த‌து. நான் தான் ஏதோ இவ‌ளுக்குச் செய்துவிட்டு காண‌வில்லையென்று நாட‌க‌ம் ஆடுகின்றேனோ என்று அவ‌ர்க‌ளுடைய‌ வ‌ழ‌மையான‌ பொலிஸ் புத்தி சிந்தித்திருக்கின்ற‌து. ஆனால் கிட்ட‌த்த‌ட்ட‌ இவ‌ள் காணாம‌ற்போயிருந்த‌ நேர‌த்தில் நான் வ‌குப்பொன்றுக்குள் இருந்த‌து தெளிவாக‌ நிரூபிக்க‌ப்ப‌ட்ட‌தால் வேறு யாரோதான் இவ‌ள் காணாம‌ற்போன‌த‌ற்கு கார‌ண‌மாயிருக்க‌வேண்டுமென‌ப் பொலிசுக்கு பிற‌கு தெரிந்துவிட்ட‌து. என்றாலும் என்னையும் எப்போது தாங்க‌ள் தொட‌ர்புகொண்டாலும் பொலிஸ் நிலைய‌த்திற்கு வ‌ர‌வேண்டுமென‌ அறிவுறுத்தியிருந்தார்க‌ள்.

இவ‌ள் காணாம‌ற்போய் மூன்றாவ‌து நாளாகியும் விட்ட‌து. இவ‌ளின் அண்ண‌ன்மார் ம‌ற்றும் ரொர‌ண்டோவிலிருந்த‌ இவ‌ள‌து பெற்றோர் என‌ எல்லோரும் ஒரேயிட‌த்தில்தான் நிற்கிறோம். எல்லோர் முக‌ங்க‌ளிலும் சோக‌மும் சோர்வும் அப்பிக்கிட‌க்கிற‌து நானும் என‌து மூளையைக் கச‌க்கி அவ‌ளின் நினைவின் மிட‌றுக‌ளிலிருந்து அவ‌ள் தொலைந்துபோயிருக்க‌க்கூடிய‌ இட‌ங்க‌ளைப் ப‌ற்றி வ‌டிக‌ட்டிக்கொண்டிருக்கின்றேன். இப்போதுதான் இந்த‌ விட‌ய‌மொன்று நினைவுக்கு வ‌ருகின்ற‌து. இவ‌ள் சொல்லுவாள், மார்க்க‌மிலிருக்கிற‌ ம‌ச்சான் முறையான‌ ஒரு பெடிய‌னுக்கு தான் உய‌ர்க‌ல்லூரியில் ப‌டித்துக்கொண்டிருக்கிற‌ பொழுதிலிருந்தே த‌ன்னில் விருப்ப‌மென்று. அடிக்க‌டி த‌ங்க‌ளின் பாட‌சாலைக்கு வ‌ந்து த‌ன்னை 'நேசியும‌ன் நேசியுமன்' என்கின்ற‌ அவ‌னின் தொல்லை தாங்காது த‌ன் அண்ணாமாரிட‌ம் சொல்ல‌, அவ‌ர்க‌ள் அவ‌னைக் கூப்பிட்டு இதெல்லாம் ச‌ரியில்லையென‌ எச்ச‌ரித்துவிட்டிருக்கின்றார்க‌ள் என்று சொல்லியிருக்கிறாள். ஆனால் இப்ப‌ இவ‌ள் வ‌ளாக‌ம் வ‌ந்த‌ன்பிற‌கு கூட‌, யாரிட‌மிருந்தோ தொலைபேசி எண்ணெடுத்து ம‌ச்சான் த‌ன்னை நேசிக்கும்ப‌டி அவ்வ‌ப்போது வ‌ற்புறுத்திக்கொண்டிருப்ப‌தாய் சொல்லியிருந்தாள். 'நீரென்னை நேசித்துக் கொண்டிருப்ப‌தாய் சொல்ல‌வில்லையா' என்று அவ‌ளிட‌ம் ஒருமுறை கேட்ட‌போது 'அதையும் அந்த‌ விச‌ர‌னுக்குச் சொன்ன‌னான். ஆனால் அவ‌ன் நீர் பொய்சொல்கின்றீர். நீரில்லாவிட்டால் உயிர் வாழ‌வே மாட்டானென‌ உறுதியாய்க் குர‌லில் கூறினான்' என்றாள். 'இந்த‌ நாச‌மாய்ப் போன‌ த‌மிழ்ப்ப‌ட‌ங்க‌ளைப் பார்த்து பார்த்து இவ‌ங்க‌ள் சரியாகக் கெட்டிட்டாங்க‌ள், உருப்ப‌ட‌வே மாட்டாங்க‌ள்' என்று ஓர் அறிவுஜீவியின் பாவ‌னையில் நான் கூறிய‌தும் என‌க்கு நினைவுண்டுதான்.

4.
எத‌ற்கும் ஒருக்காய் இவ‌ளின் இந்த‌ ம‌ச்சானை விசாரித்துப் பார்த்தால் என்ன‌ என்று இவ‌ளின் அண்ணாவிட‌ம் சொன்னேன். த‌க‌வ‌ல் பொலிசுக்கும் தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து. நாங்க‌ள் அவ‌னின் தொலைபேசி இல‌க்க‌த்தை அழைத்த‌போது அவ‌னும் எடுக்கிறானில்லை. அவ‌னொரு வீட்டின் நில‌வ‌றையில் தான் வ‌சித்துவ‌ந்தான். பொலிஸ் போய் வீட்டைத்த‌ட்டிய‌போது அவ‌ன் திற‌க்க‌வில்லை என்ற‌போது பொலிசுக்கு ச‌ந்தேக‌ம் வ‌ந்துவிட்ட‌து. க‌த‌வை உடைத்துப் பார்த்த‌போது, அங்கே இவ‌ளை அறைக்குள் பூட்டிவைத்திருந்த‌து தெரிந்த‌து. ஆம் ந‌ண்ப‌ர்க‌ளே, உங்க‌ளுக்கு ந‌ம்புவ‌த‌ற்குக் க‌டின‌மாயிருந்தாலும் காத‌லுக்காய் ஒரு க‌ட‌த்த‌ல்தான் க‌னடாவில் நிக‌ழ்ந்திருந்த‌து. எங்க‌ள் எல்லோருக்கும் அப்பாடா இவ‌ள் ஒரு பிர‌ச்சினையுமில்லாம‌ல் கிடைத்துவிட்டாள் என்ப‌தில் பெரிய‌ நிம்ம‌தி. இப்போது இவ‌ளுக்கு மூன்று நாட்க‌ளுக்கு முன் என்ன‌ நிக‌ழ்ந்த‌தென்ற‌ விட‌ய‌ம் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் ப‌னிக்கட்டியொன்று உருகிய‌மாதிரித் தெரிய‌த்தொட‌ங்கிவிட்ட‌து. இவ‌ள் அன்றைக்கு வ‌குப்பு முடிந்துவ‌ந்த‌போது இந்த‌ ம‌ச்சான்கார‌னும், அவ‌னுடைய‌ இர‌ண்டு ந‌ண்ப‌ர்க‌ளும் காரில் காத்துக்கொண்டிருக்கின்றார்க‌ள். இவ‌ளுக்கும் இவ‌ர்க‌ளைக் க‌ண்டு பெரிய‌ அதிர்ச்சி. 'வாருங்க‌ள் காருக்குள் இருந்து க‌தைக்க‌லாம்' என்று இவ‌ளை கூட்டிக்கொண்டுபோய் அப்ப‌டியே மார்க்க‌த்திற்கு அவன்கள் க‌ட‌த்திக்கொண்டு போய்விட்டார்க‌ள். காத‌லிப்ப‌து பிழையில்லைத்தான். . ஆனால் இப்ப‌டிக் க‌ட‌த்திக்கொண்டு போய் த‌னியே வீட்டில் வைத்திருந்தால் இவ‌ளுக்குக் காத‌ல் வ‌ந்துவிடும் என்றோ அல்ல‌து இவ‌ளை அவ‌னுக்கு க‌லியாண‌ஞ் செய்துவைத்துவிடுவார்க‌ள் என்றோ ஒரு த‌மிழ்ப்ப‌ட‌த்துக்கு நிக‌ராய் அவ‌ன் யோசித்த‌துதான் பெரும் சிக்க‌லுக்கு வ‌ழிவ‌குத்துவிட்ட‌து.

ஒன்ற‌ரை ம‌ணித்தியால‌ம் ஓட‌க்கூடிய‌ ஓர் ஆங்கில‌த் திரில்ல‌ர் மாதிரி இந்த‌ மூன்று நாட்க‌ளில் ந‌ட‌ந்த‌ இவ‌ளின் க‌தை இருந்தாலும், பிற‌குதான் என‌க்கும் இவ‌ளுக்கும் இடையில் எல்லாம் புகைய‌த் தொட‌ங்கின‌. இப்ப‌டி மூன்று நாட்க‌ள் ஒரு பெடிய‌னின் வீட்டில் வைக்க‌ப்ப‌ட்ட‌வ‌ள் ப‌ற்றி உற‌வுக‌ளும் ச‌முக‌மும் 'என்ன‌ க‌தைக்கும்' என்ப‌து புரிய‌க்கூடிய‌தாக‌ இருந்தாலும், என்னுடைய‌ நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ள் கூட‌ நான‌றிய‌க்கூடிய‌தாக‌ இந்த‌ விட‌ய‌ம் ப‌ற்றியும் இவ‌ளைப் ப‌ற்றியும் அப்ப‌டியும் இப்ப‌டியுமாய்க் க‌தைத்துக் கொண்டு திரிந்த‌தைத்தான் தாங்க‌முடியாதிருந்த‌து. அதிலும் ஒருத்த‌ன், 'எப்ப‌டி மூன்று பெடிய‌ங்க‌ள் இருக்கைக்கே காருக்குள் ஏறி இவ‌ள் க‌தைக்க‌ப் போன‌வ‌ள்' என்று கேட்டான். இன்னொருத்த‌ன் 'என்ன‌தான் இருந்தாலும், இவ‌ளின் ச‌ம்ம‌த‌மில்லாம‌ல் அவ‌ங்க‌ள் மார்க்க‌ம் ந‌க‌ருக்குக் கொண்டுபோய் இருக்கமாட்டார்க‌ள் என்றான். என்னுடைய‌ நெருங்கிய‌ தோழி கூட‌, 'அவ‌ள் ந‌ல்ல‌வ‌ள் என்று இனியும் ஏமாளியாக‌ இருக்காதே, ஒரு யாழ்ப்பாண‌த்துப் பெடிய‌னாக‌ அடுத்தென்ன‌ செய்வ‌தென்று யோசி' என்று அறிவுரையை க‌ன்னிய‌ர் மட‌த்தில் வைத்துச் சொன்னாள். என‌க்கு எல்லாம் ஒரே குழ‌ப்ப‌மாக‌ இருக்கிற‌து. ஒருத்தியை அவ‌ளின் விரும்பமின்றி ஒருத்த‌ன் கொண்டுபோய் வைத்துவிட்டான் என்ப‌த‌ற்காய் இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ள் நேசித்த‌து எல்லாம் பொய்யாகிவிடுமா என்ன‌?  இத்த‌னை அல்லாட‌ல்க‌ளுக்குமிடையில், இவ‌ள் த‌ன்னைக் க‌ட‌த்திக்கொண்டு போன‌வ‌ர்க‌ளின் மீது வ‌ழ‌க்கு ப‌திந்துவிட்ட‌து, இனி அவ‌ன்க‌ளின் வாழ்க்கை முற்றும் பாழென்று புல‌ம்பிக்கொண்டிருந்தாள். இவ‌ள் த‌ன‌து ம‌ச்சானின் வாழ்க்கை நாச‌மாகிவிட்ட‌தென‌ இர‌க்க‌ப்ப‌டுகின்றாளா அல்ல‌து ம‌ச்சான் மீதான் த‌ன‌து காத‌லை ம‌றைமுக‌மாய் என‌க்குக் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றாளா என்று நான் யோசித்துப் பார்த்த‌தில் என‌க்கு த‌லையிடிதான் வ‌ந்து சேர்ந்த‌து.

5.
இப்ப‌டியாக‌ நாட்க‌ள் போக‌ப்போக‌ எங்க‌ள் உற‌வில் எங்க‌ளைய‌றியாம‌லே விரிச‌ல் வ‌ந்துவிட்ட‌து. இவ‌ளுக்கு அந்த‌க் க‌ட‌த்திப் போன‌ பெடிய‌ன் மீது ஏதோ ஈர்ப்பிருந்திருக்கிற‌தோ என்ற‌ எண்ண‌ம் அடிக்க‌டி வ‌ருவ‌தை என்னால‌ த‌டுத்து நிறுத்த‌வும் முடிய‌வில்லை. ச‌ந்தேக‌ம் போன்ற‌ வியாதி ரொர‌ண்டோவில் வ‌ந்த‌ SARSஐ விட‌ அபாய‌க‌ர‌மான‌து. எந்த‌ ம‌ருந்து கொடுத்தாலும் அவ்வ‌ள‌வு கெதியாய் மாறிவிடாது. இந்த‌ முறை கோடை வ‌குப்புக்க‌ள் எதுவும் எடுப்ப‌தில்லையென‌ முடிவுசெய்து ரொர‌ண்டோ மாந‌க‌ரில் பொழுதை க‌ழிப்ப‌தென‌ முடிவு செய்தேன். த‌ன‌க்குச் சில‌ பாட‌ங்க‌ள் எடுக்க‌விருக்கிற‌தென‌ இவ‌ள் வ‌ளாக‌த்திலேயே த‌ங்கிவிட்டாள். ரொர‌ண்டோ வ‌ந்த‌த‌ன்பிற‌கும் என்னால் இவ‌ள‌து விட‌ய‌த்தில் தெளிவான‌ ஒரு முடிவுக்கு வ‌ர‌ முடியாம‌ல் இருக்கிற‌து. ப‌ல‌ர‌து பேர‌ன்புக்கும் பெரும‌திப்புக்குமுரிய‌ சிறி ராம‌பிரானே -எல்லாம் அறிய‌க்கூடிய‌ க‌ட‌வுளாய் இருந்தும்கூட‌- சீதா தேவியை நெருப்பில் நீந்த‌ச்சொல்லி ஏற்றுக்கொண்ட‌போது சாமானிய‌னாய் -அதுவும் யாழ்ப்பாண‌ம் என்னும் பூகோள‌த்தில் சிறு புழுக்கை போன்ற‌ ஊரிலிருந்து வ‌ந்த‌- நான் என்ன‌தான் செய்ய‌முடியும்? இப்ப‌டியிருக்கும்போதுதான் ஸகாபுரோவில் எக்ளின்ட‌ன் வீதியிலுள்ள‌ சிறில‌சிறி ஆதி ர‌ம்பா ஆச்சிர‌ம் ப‌ற்றி ந‌ண்ப‌ரொருவ‌ன் குறிப்பிட்டு, ஆதி ர‌ம்பாவிட‌ம் போனால் உன‌து ம‌ன‌ச்ச‌ஞ்ச‌லம் -ம‌ழை காணா ம‌ண்ணில் மூத்திர‌ம் பெய்தால் த‌ட‌மின்றிப் போவ‌துபோல‌- தூசாய்ப் ப‌ற‌ந்துபோய்விடுமென‌ புத்திம‌தி சொன்னான்.

ஆதி ர‌ம்பா அவ‌ர்க‌ள் சாத்திர‌ம் பார்ப்ப‌திலிருந்து தியான‌ம் போன்ற‌ ப‌ல‌வ‌ற்றில் தேர்ந்த‌ வித்த‌கியாக‌ இருந்தார். ஆதி ர‌ம்பாவின் பூர்வீக‌ம் தெலுங்கு தேச‌மாயிருக்க‌வேண்டும், ஆனால் ச‌ன் ரீவி நிக‌ழ்ச்சித்தொகுப்பாள‌ர்க‌ளைப் போல‌ 'ந‌ன்கு த‌மிழ்' பேச‌க்கூடிய‌வ‌ராக‌ இருந்தார். வ‌ய‌தும் அவ்வ‌ள‌வு ஒன்றும் பெரிதாக‌ இல்லை. இந்த‌ வ‌ய‌திலும்...... வேண்டாம் இத‌ற்கு மேல் ஏதும் விப‌ர‌ங்க‌ள் த‌ந்தால் நீங்க‌ள் பிற‌கு சிறில‌சிறி ஆதி ர‌ம்பாவை ம‌ற‌ந்து ந‌டிகை ர‌ம்பாவை நினைக்க‌த் தொட‌ங்கிவிடுவீர்க‌ள் என்ப‌தால் நிறுத்திக்கொள்கின்றேன். என‌து கையைத் த‌ன‌து ம‌டியில் வைத்துப் பார்த்த‌ப‌டி 'த‌ம்பி நீங்க‌ள் ச‌ரியான குழ‌ப்ப‌த்தில் இருக்கின்றீர்க‌ள்?' என்று கூறினார். இந்த‌ உல‌க‌த்தில் குழ‌ப்ப‌மில்லாத‌ மனுச‌ர் என்று எவ‌ரேனும் இருக்கின்றார்க‌ளா என்ன‌ என்று கேட்க‌ விரும்ப‌மிருந்தாலும், ஆதி ர‌ம்பா அவ‌ர்க‌ள் என் கைக‌ளை வ‌ருடிய‌ப‌டி சாத்திர‌ம் கூறும் இத‌மான‌ அனுபவ‌த்தைக் குலைக்க‌ நான் விரும்ப‌வில்லை. இவ்வாறாக‌ நான் சிறில‌சிறி ஆதி ர‌ம்பாவின் ஆச்சிர‌ம‌த்தில் அதிக‌ள‌வு பொழுதைக் க‌ழிக்கும் ஒரு ப‌க்த‌னாய் மாறிவிட்டேன். அங்கே செய்ய‌ப்ப‌ட்ட‌ தியான‌மும் ப‌ஜ‌னையும் புத்துண‌ர்வைத் த‌ந்த‌தோ இல்லையோ என்னால் இவ‌ளைப் ப‌ற்றிய‌ குழ‌ப்ப‌ங்க‌ளிலிருந்து ஒரளவுக்காவது த‌ப்பித்திருக்க முடிந்திருந்த‌து. தியான‌ம் ப‌ஜ‌னைக‌ளின்போது ஒரேயோரு தொந்த‌ர‌வு ம‌ட்டுமேயிருந்த‌து. ஆச்சிர‌ம‌த்திற்கு அடுத்த‌தாய் இருந்த‌ க‌டையிலிருந்து க‌ம‌க‌ம‌க்க‌ வ‌ந்துகொண்டிருக்கின்ற‌ த‌ந்தூரி சிக்க‌ன் வாச‌ந்தான் என்னை அடிக்க‌டி தியான‌த்திலிருந்து -இப்போது கோழியின் எந்த‌ப் பாக‌ம் பொரிந்துகொண்டிருக்கும்- என்று ம‌ன‌தின் திசையை மாற்றிக்கொண்டிருந்த‌து.

இப்ப‌டி என்னைப் போல‌வே சிறில‌சிறி ஆதி ர‌ம்பா அவ‌ர்க‌ளின் ஆச்சிர‌ம‌த்திற்கு ப‌ஜ‌னைக்கென‌ அடிக்க‌டி வ‌ந்துபோய்க்கொண்டிருக்கின்ற‌ ஒருத்தியை அவ‌தானித்துக்கொண்டிருந்தேன். அவ‌ள் என்னை ஈர்த்த‌ற்கு அதிக‌ கார‌ண‌ம், இடைவ‌ரை நீண்டிருந்த‌ அவ‌ள‌து கூந்த‌லும், காதில் தொங்கிக்கொண்டிருந்த‌ நீண்ட‌ சிமிக்கித் தோடுக‌ளுந்தான். நான்கு மாத‌ங்க‌ளே கோடை வ‌ருகின்ற‌ க‌ன‌டா போன்ற‌ நாட்டில் இடுப்பு வ‌ரை நீண்ட‌ கூந்த‌லைப் ப‌ராம‌ரிப்ப‌து என்ப‌து எவ்வ‌ள‌வு க‌டின‌மான‌ காரிய‌ம் என்று எவ‌ருக்கும் சொல்லித்தான் தெரிய‌வேண்டுமென்ப‌தில்லை. அத்தோடு என்னைப் போல‌ யாழ்ப்பாண‌ க‌லாசார‌த்தைக் கைவிட‌க்கூடாதென்ப‌தில் பிடிவாத‌மாய் அவ‌ளிருக்கிறாள் என்ப‌தை அவ‌ளுட‌ன் பேசும்போது தெரிந்த‌து. இங்கு வ‌ந்த‌த‌ன் பிற‌கு கூட‌ ரெக்ஸோனா சோப்பும் பேபி ப‌வுட‌ரும் போடுவ‌தை இத்த‌னை ஆண்டுகளானபின் கூட‌ அவ‌ள் ஒதுக்கிவிட‌வில்லை என்றால் பாருங்க‌ள். அன்றைக்கொரு நாள் ப‌ஜ‌னை முடிந்து எல்லாவ‌ற்றையும் சுத்த‌மாக்கி முடிந்த‌போது நேர‌ம் ப‌த்து ம‌ணியாகிவிட்ட‌து. அவ‌ளுக்கு நான் தான் என்னுடைய‌ காரில் ride கொடுத்தேன். பேசிக்கொண்டு போகும்போது தான் வீட்டிலை மூன்று பெடிய‌ங்க‌ளுக்கு ஒரு பெட்டை என்றாள். யாழ்ப்பாண‌த்திலையே ந‌ல்ல‌ தென்ன‌ஞ்சோலையுள்ள‌ இர‌ண்டு வீடுக‌ள் த‌ங்க‌ளுக்கு இருக்கிற‌தென்றும் ஓர் உப‌குறிப்பாய்ச் சொன்னாள். கொண்டுபோய் அவ‌ளை வீட்டில் இற‌க்கிய‌போது இப்போது இங்கையிருக்கிற‌ வீடும் ந‌ல்ல‌ வ‌ச்தியாக‌த்தான் தெரிந்த‌து. வீட்டுக்கு முன் ஒரு Lexusம் BMWம் நின்ற‌து. இவ்வ‌ள‌வு கார்க‌ள் வீட்டிலிருந்தாலும் ப‌ஜ‌னைக‌ளுக்கு வ‌ரும்போது என்னுடைய‌ காரிலேயே வ‌ர‌ விரும்புகின்ற‌வ‌ளாய் அவ‌ள் இருந்தாள். அவ‌ள‌து வீட்டிலும் நான் யாழ்ப்பாண‌த்தில் எந்த‌ ஊர்க்கார‌ன் என்றும், அந்த‌ ஊரில் எந்த‌த் திசையில் எங்க‌ள் வீடு இருந்த‌தென்ப‌தையும் 'விசாரித்து' ஏற்க‌ன‌வே அறிந்து வைத்திருந்த‌தால், அவ‌ர்க‌ளுக்கு அவ‌ள் என்னோடு காரில் வ‌ருவ‌தில் பெரிய‌ பிர‌ச்சினையிருக்க‌வில்லை. அத்தோடு சிறில‌சிறி ஆதி ரம்பாவின் தீவிர‌ ப‌க்த‌னாக‌ நான் இருப்ப‌தும், ஒரு கும‌ர்ப்பெட்டையை என்னோடு த‌னியே விடுவ‌தில் வ‌ர‌க்கூடிய‌ த‌டையை உடைத்திருக்க‌வேண்டும்.

6.
கோடை முடிந்து இலையுதிர்கால‌ம் ஆர‌ம்பிக்க‌, நான் ரொர‌ண்டோவை விட்டு நீங்கி வ‌ளாக‌ம் போக‌வேண்டியிருந்த‌து. ரொர‌ன்டோவிலிருக்கும்போது அவ்வ‌ப்போது -க‌ட‌த்தப்ப‌ட்ட‌ இவ‌ளோடு- தொலைபேசியில் க‌தைத்துக்கொண்டிருந்தாலும் முன்புபோல‌ அவ்வ‌ள‌வு ஈடுபாட்டோடு க‌தைப்ப‌தில்லை. இவ‌ளுக்கும் நானும் ஏதோ சில‌ கார‌ணங்க‌ளுக்காய் த‌ன்னைவிட்டு வில‌கிப்போய்க்கொண்டிருப்ப‌தாய்த் தோன்றியிருக்க‌க் கூடும்.

இலையுதிர்கால‌ம் என்றாலும் இன்ன‌மும் கோடை மிஞ்சியிருந்த‌து: மிதமான‌ வெப்ப‌நிலை இருந்த‌து. நீண்ட‌ மாத‌ங்க‌ளுக்குப்பிற‌கு இவ‌ளை முத‌ன் முத‌லில் பார்த்த‌போது மிகுந்த‌ அதிர்ச்சியாக‌ இருந்த‌து. ப‌ளீரென்ற‌ வெள்ளை சோர்ட் ஸ்கேர்ட்டை முழ‌ங்காலுக்கு ஒரு சாண் மேலே நிற்க‌க்கூடிய‌தாக‌ அணிந்த‌ப‌டி வ‌ந்துகொண்டிருந்தாள். என‌க்கென்றால் வான‌த்திலை இருக்கிற‌ சூரிய‌ன், கையிலை எட்ட‌க்கூடிய‌ தூர‌த்தில் இருந்தால் அதைப் பிடுங்கி எறிந்து இவ‌ளை எரித்துவிட‌லாமோ என்ற‌ள‌வுக்கு கோபம் கொப்ப‌ளிக்க‌த் தொடங்கிய‌து. என்னோடு இருந்த‌ இவ்வ‌ள‌வு கால‌மும் இப்ப‌டி shortயாய் எதுவும் போட்ட‌தேயில்லை. இதெல்லாம் இவ‌ளின் க‌ட‌த்திப்போன‌ ம‌ச்சான் கொடுத்த‌ ஊக்குவிப்பாய்தான் இருக்க‌வேண்டும். அத்தோடு முந்தி தோள்வ‌ரை நீண்டு கிட‌ந்த‌ கூந்த‌லை இன்னும் குட்டையாக‌ வெட்டி 'பொப்' ஆக்கியுமிருந்தாள். இவ‌ள் என்னுடைய‌ ஆண்மைக்கு ச‌வால் விடுவ‌த‌ற்கு என்றே இதையெல்லாம் வேண்டுமென்றே செய்திருக்கின்றாள் போல‌ப்ப‌ட்ட‌து. ஆண்மைக்கு ச‌வால் விட்டால் கூட‌ப்ப‌ர‌வாயில்லை, நான் இவ்வ‌ள‌வு கால‌மும் க‌ட்டிக்காத்துக்கொண்டிருந்த‌ யாழ்ப்பாண‌த்துக் க‌லாசார‌த்தையே காலில் போட்டு மிதிக்கின்ற‌ பாவ‌னையில் அல்ல‌வா ந‌ட‌ந்து வந்து கொண்டிருக்கிறாள். இப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ளை நான் நாளைக்கு க‌லியாண‌ங்க‌ட்டினால் எங்க‌டை யாழ்ப்பாண‌த்துச் ச‌ன‌ம் போற‌ வாற‌ இட‌ங்க‌ளுக்கு எந்த‌ முக‌த்தோடு நான் கூட்டிக்கொண்டு போக‌ முடியும்? இப்ப‌வே முடிவெடுத்துவிட்டேன். இனி இவ‌ளைக் கைக‌ழுவிவிட்டு விட‌வேண்டும். இராம‌பிரானுக்கு அனுமான் நின்று வ‌ழிகாட்டிய‌து போல‌ என‌க்கு சிறில‌சிறி ஆதி ர‌ம்பாவும் அவ‌ர‌து அணுக்கப் ப‌க்தை அனுவும் இருக்கும்போது நான் ஏன் இவ‌ளை என்ரை த‌லையில் க‌ட்டி வைத்துக் க‌ஷ்ட‌ப்ப‌ட‌வேண்டும். அந்த‌க்கால‌த்திலை 'க‌ற்பு' ப‌ற்றிய‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்த‌போது நெருப்பில் குதிக்கத் த‌யாராக‌ அல்ல‌வா சீதையை எல்லாம் வ‌ள‌ர்த்திருக்கின்றார்க‌ள். இப்போது க‌ற்பிலோ பிற‌வ‌ற்றிலோ ச‌ந்தேக‌ம் வ‌ருகிற‌தென்று கேட்டால் -இப்ப‌டி குட்டையாய் பாவாடை அணிகின்ற‌வ‌ள்- பாவாடையை உய‌ர்த்திப்பிடித்து பின்ப‌க்க‌த்தைக் காட்டிப் ப‌ழித்துவிட்டுப் போனாலும் போய்விடுவாள். பிற‌கு என‌க்குத்தான் அசிங்க‌மாய்ப் போய்விடும். .

நான் இப்ப‌டியான‌ கோல‌த்திலை இவ‌ளைக் க‌ண்ட‌த‌ன்பிற‌கு அவ்வ‌ள‌வாய் இவ‌ளோடு க‌தைக்க‌ விரும்பவில்லை. வேறு வேலையிருக்கிற‌தென்று வ‌ழுக்கையாற்ற‌டியிலிருந்து ந‌ழுவிப்போயிருந்தேன். பிற‌கு வேண்டுமென்றே அவ‌ள‌து தொலைபேசி அழைப்புக்க‌ளையும் நேர‌டிச் ச‌ந்திப்புக்க‌ளையும் த‌விர்க்க‌த் தொட‌ங்கினேன். இதெல்லாம் போதாத‌து என்று அவ்வ‌போது என்னுடைய‌ ந‌ண்ப‌ர்க‌ள், 'என்ன‌டா உன்ரை ஆள் அந்த‌ மாதிரி உடுப்புப் போட்டுக்கொண்டு இப்ப‌ திரிகிறா' என்று நாளாந்த‌ வ‌ர்ண‌னை செய்துகொண்டிருந்தார்க‌ள். என‌க்கென்றால் நான் இவ்வ‌ளவு கால‌மும் இவ‌ளுக்குக் க‌ற்றுக்கொடுத்த‌தெல்லாம், ம‌ழைநீரில் க‌ரைகின்ற‌ ம‌ண்ணாங்க‌ட்டியாய் போய்க்கொண்டிருக்கின்ற‌தே என்கின்ற‌ க‌வ‌லைதான் வ‌ந்த‌து.

ஒரு நாள் பின்னேர‌ம் எக்க‌னாமிக்ஸ் வ‌குப்பு முடிந்து முறிக‌ண்டிச் ச‌ந்திய‌டிக்கு கிட்ட‌ வ‌ந்துகொண்டிருந்த‌போது இவ‌ள் என்னை வ‌ழிம‌றித்தாள். 'உங்க‌ளோடு பேச‌வேண்டும் கொஞ்ச‌ நேர‌ம் நிற்க‌ முடியுமா?' என்று கேட்டாள். நான் இன்றைக்கும் இவ‌ள் ஷோர்ட் ஸ்கேர்ட் ஏதாவ‌து போட்டிருக்கின்றாளா என்றுதான் முத‌லில் ப‌ரிசோதித்துப் பார்த்தேன். அப்ப‌டி எதுவும் போடாத‌ப‌டியால்தான் ஆறுத‌லாக‌க் க‌தைப்ப‌த‌ற்கு ஒத்துக்கொண்டிருந்தேன். 'என்ன‌ ந‌ட‌க்கிற‌து எங்க‌ளுக்குள்ளை?' என்றாள். நான் என்னுடைய‌ குழ‌ப்ப‌ங்க‌ளை எல்லாம் சொன்னேன், ஆனால் புத்திசாலித்த‌ன‌மாய் சிறில‌சிறி ஆதி ர‌ம்பா ஆச்சிர‌ம‌த்தில் ச‌ந்தித்த‌ அனு ப‌ற்றிய‌ விப‌ர‌ம் எதையும் சொல்ல‌வில்லை. இவ‌ள் க‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ அந்த‌ மூன்று நாட்க‌ளில் என்ன‌ நிக‌ழ்ந்திருக்குமென்ப‌து என‌க்கு பெர்மூடா முக்கோண‌ம் போல‌ ஒரே ம‌ர்மமாய் இருக்கிற‌தென்றேன். இவை எல்லாவ‌ற்றையும் விட‌ முக்கிய‌மாய் எங்க‌ள் யாழ்ப்பாண‌த்துக் கலாசார‌த்தைக் குலைக்கிற‌ மாதிரி இப்ப‌டி இவ‌ள‌ ஆடைக‌ள் போடுவ‌து என‌க்கு அதிக‌ம் தொந்த‌ர‌வாய் இருக்கிற‌தென்றேன்.

தான் ஆடைகள் அணிவதற்கான சுத‌ந்திர‌ம் த‌ன‌க்கு ம‌ட்டுமே உரிய‌தென்று உய‌ர்த்திய‌ குர‌லில் சொன்னாள். பின், 'இப்ப‌டியெல்லாம் க‌தைக்கும் நீர், என்னைக் க‌லியாண‌ங்க‌ட்டிய‌ பிற‌கு புண‌ர்ச்சியின்போது கூட‌, ஆடைக‌ளோடு சேர்த்துத்தான் புண‌ருவீரா?' என்றாள். என்னால் இத‌ற்கு மேலும் பொறுமையாக‌ இருக்க‌முடிய‌வில்லை. 'You are a bitch, நீரொரு அச‌ல் யாழ்ப்பாண‌த்தியாய் இருந்தால் இப்ப‌டியெல்லாம் க‌தைத்திருக்க‌ மாட்டீர். உம்மை இப்ப‌ பார்க்க‌ யாரோ என்ரை உட‌ம்பிலை எண்ணெய் ஊற்றி எரிக்கிற‌மாதியான‌ உண‌ர்வுதான் வ‌ருகிறது. இப்ப‌டியெல்லாம் நீர் க‌தைப்பீர் என்று தெரிந்துதான் நான் ரொர‌ண்டோவில் நின்ற‌ நேர‌ம் யாழ்ப்பாண‌த்துக்காரி ஒருத்தியை ப்ர‌போஸ் செய்துவிட்டேன். இனி நீரும் உம்ம‌டை ல‌வ்வும், ஒரு மண்ணாங்கட்டியும் என‌க்கு வேண்டாம்' என்றேன். இஃதொரு பெரிய‌ அடியாக‌ அதிர்ச்சியாக‌ இவ‌ளுக்கு இருக்க‌ப்போகின்ற‌தென‌ இவ‌ள‌து எதிர்வினைக்காய்க் காத்துக்கொண்டிருந்தேன். எந்த‌ அதிர்ச்சியும் இல்லாது மெல்லிய‌ புன்முறுவ‌லோடு, 'நீரொரு அச‌ல் யாழ்ப்பாணி என்றென‌க்கு ந‌ன்கு தெரியும். இன்னொருத்தியைக் காத‌லிக்கின்றேன் என்ப‌தைக் கூட‌ நெஞ்சுக்கு நேரே சொல்ல‌ முடியாத‌ கோழையைத்தான் இவ்வ‌ள‌வு கால‌மும் நேசித்திருக்கின்றேன் என்ப‌தைய‌றியும்போது என‌க்குத்தான் வெட்க‌மாயிருக்கிற‌து. உங்க‌ளுக்கு எல்லாம் எத‌ற்கு வாய்? அது நேர்மையாக‌ இருக்கின்ற‌வ‌ன்க‌ளுக்குத்தான் தேவையாயிருக்கும். நீங்க‌ளெல்லாம் குண்டியால் குசுகுசுக்கொண்டிருக்க‌த்தான் பொருத்த‌மான் ஆட்க‌ள்' என்று கூறிவிட்டு ச‌ட்டென்று அந்த‌ இட‌த்திலிருந்து போய்விட்டாள்.

இவ்வ‌ள‌வு தெளிவாய் என்னை எடுத்தெறிந்து பேசிவிட்டு ஒரு துளி க‌ண்ணீரோ, அதிர்ச்சியோ இல்லாம‌ல் இவ‌ள் போன‌து கூட‌ அவ்வ‌ள‌வு பெரிய‌ விட‌ய‌மில்லை. ஆனால், நான் போற‌ வாற‌ பெட்டைய‌ளின்ரை குண்டிக‌ளைப் பார்த்துக்கொண்டிருந்த‌து, ஒரு த‌மிழ்ப்பெட்டையான‌ இவ‌ளுக்கு எப்ப‌டியோ தெரிந்துவிட்ட‌தே என்ப‌துதான் எல்லா அவ‌மான‌ங்க‌ளுக்கும் மேலான‌ அவ‌மான‌மாய் என‌க்குத் தோன்றிய‌து. ஒரு அச‌ல் யாழ்ப்பாணியான‌ என் மீது விழுந்து விட்ட‌ இந்த‌க்க‌றையை, நான் வ‌ங்க‌க்க‌ட‌லையெடுத்து என் மீது வாரியிறைத்துக் கொட்டினால் கூட‌ என்றைக்கும் அக‌ற்ற‌முடியாது போல‌த்தான் தெரிகிற‌து..

(2008)
(ந‌ன்றி: கால‌ம் ‍-34)

நாம் இருக்கும் கனடாவில்...

Friday, April 02, 2010

(1)
பெப்ரவ‌ரி மாத‌ம் வெளியிட‌ப்ப‌ட்ட‌ ஆய்வ‌றிக்கை ஒன்றின்ப‌டி, ரொறொண்டோவிலுள்ள‌ காவ‌ற்துறையால், 'க‌றுப்பின‌த்த‌வ‌ர்க‌ளைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் வெள்ளையின‌த்த‌வ‌ர்க‌ளைச் சேர்ந்த‌வர்க‌ளை விட‌ மூன்று ம‌ட‌ங்கு நிறுத்த‌ப்ப‌ட‌வும், அடையாள‌ அட்டைக‌ளைக் கேட்க‌வும் செய்ய‌ப்ப‌டுகின்றார்க‌ள்' என்று கூறப்படுகின்ற‌து. இத்த‌கைய‌ நிற‌வேறுபாடு ரொறொண்டோ பொலிசிட‌ம் இப்போதுதான் அடையாள‌ங் காண‌ப்ப‌டுகிற‌து என்ப‌த‌ல்ல‌. கிட்ட‌த்த‌ட்ட‌ எட்டு வ‌ருட‌ங்க‌ளிற்கு முன்னும் இவ்வாறு காவல்துறையினர் நிற‌வேறுபாடு காட்டுகின்றார்கள் என‌ச் சுட்டிக்காட்ட‌ப்ப‌ட்டிருக்கிற‌து. வ‌ழ‌மைபோல‌ அப்போது பொலிஸ் உய‌ர‌திகாரிக‌ள் இது குறித்து க‌வ‌னிக்கிறோம் என்று கிட‌ப்பில் போட்டிருக்கின்றார்க‌ள் போலும். இல்லையெனில் எட்டு வ‌ருட‌ங்க‌ளின் பின் செய்ய‌ப்ப‌ட்ட‌ இந்த‌ ஆய்வு இன்னும் நிற‌வெறி இருக்கிற‌து என்று விரித்துக் கூறியிருக்காது. மிகுந்த‌ அதிகார‌ம் குவிக்க‌ப்ப‌ட்டிருக்கும் பொலிஸ் குறித்து வெளியிட‌ப்ப‌டும் பிற‌ குற்ற‌ச்சாட்டுக்க‌ள் (இல‌ஞ்ச‌ம் வாங்குத‌ல்/போதைம‌ருந்துக் க‌ட‌த்த‌லிற்கு உட‌ந்தையாக‌ இருத்த‌ல்) போன்ற‌வை கூட கடந்தகாலத்தில் சாதார‌ண‌ எடுத்துக்கொள்ள‌ப்ப‌ட்டு 'காவ‌ற்துறையின் க‌ண்ணிய‌ம்' காக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து.

இன்னும் முக்கிய‌மாய், இந்த‌ அறிக்கையில் பொலிஸால் 'ம‌ண்ணிற‌' நிற‌முடைய‌வ‌ர்க‌ளும் இவ்வாறு க‌றுப்பின‌ ம‌க்க‌ளைப் போல‌ நிறுத்த‌வும் அடையாள‌ அட்டைக‌ள் காட்ட‌வும் கேட்க‌ப்ப‌டுகின்றார்க‌ள் என்ப‌து க‌வ‌னிக்க‌த்த‌து. இந்த‌ 'ம‌ண்ணிற‌'வ‌கைக்குள் அட‌க்குப‌வ‌ர்க‌ளில் நாங்க‌ளும் இருக்கின்றோம் என்ப‌தை நினைவூட்ட‌த்தேவையில்லை. மேலும் பொலிஸ் ஒருவ‌ரை நிறுத்தி விசாரிக்கும்போது அவ‌ர்க‌ளிற்கு உரிய‌ ஒரு புத்த‌க‌த்தில் விசாரிக்க‌ப்ப‌டும் ந‌ப‌ர் நிற‌ம், பெய‌ர், முக‌வ‌ரி, உட்ப‌ட‌ அவ‌ர் விசாரிக்க‌ப்ப‌டுவ‌த‌ற்கான‌ கார‌ண‌மும் எழுத‌ப்ப‌ட‌வேண்டும் என்று அறிவுறுத்த‌ப‌ப‌டுகின்ற‌து. ஆனால் த‌னிம‌னித‌ருக்குள்ள‌ உரிமையில், த‌டுத்து நிறுத்தி விசாரிக்க‌ப்ப‌டும் ஒருவ‌ர், த‌ன‌து சுய‌விப‌ர‌ங்க‌ளை (பெய‌ர், முக‌வ‌ரி) என்ப‌வ‌ற்றை பொலிஸிட‌ம் கொடுக்காது இருக்க‌முடியுமெனச் சட்டம் கூறுகின்றது. அதேச‌ம‌ய‌ம் பொலீஸ் இவ்வாறு விப‌ர‌ங்க‌ளைக் கேட்கும்போது ஒருவ‌ர் கொடுக்க‌ மறுத்தால், அவ‌ரைச் 'ச‌ந்தேக‌த்திற்குரிய‌ ந‌ப‌ர்' என்ற‌ வ‌கைக்குள் அட‌க்கி மேலும் தீவிர‌மான‌ விசார‌ணைக்கு உட்ப‌டுத்தும் அபாய‌மும் இருக்கிற‌து என்று இந்த‌ ஆய்வு க‌வன‌த்திற்கு உட்ப‌டுத்துகிற‌து.

பொலிஸ் அதிகார‌த்தை துஷ்பிர‌யோக‌ம் செய்வ‌தைக் குறைக்கும்பொருட்டு, பொலிஸின் த‌வ‌றான‌ விசார‌ணைக‌ளை நாம் ந‌ம‌து தொகுதிக‌ளில் நாம் தேர்ந்தெடுக்கும் க‌வுன்சில‌ர்க‌ள், எம்பிமார்க‌ளின் க‌வ‌ன‌த்திற் கொண்டுவ‌ர‌லாம். பொலிஸ் என்ப‌து ந‌ம‌து வ‌ரிப்ப‌ண‌த்தில் ந‌ம‌க்காக‌ ந‌ட‌த்த‌ப‌டுகின்ற் ஒரு அமைப்பே த‌விர‌, அவ‌ர்க‌ள் கூறும் அனைத்தையும் நாம் கேட்டுக்கொள்ள‌ வேண்டும் என்ற‌ அவ‌சிய‌மும் இல்லை என்ப‌தை நாம் நினைவில் இருத்தியாக‌ வேண்டும். மேலும் சிறுபான்மையாக‌வுள்ள‌ (minorities) ப‌ல்வேறு ச‌மூக‌ங்க‌ளிலிருந்து காவ‌ற்துறைக்கு ஆட்க‌ளைச் சேர்க்க‌வேண்டும் என்று நாம் பொதுவெளியில் வ‌லியுறுத்த‌ வேண்டும். ஒரு குறிப்பிட்ட‌ ச‌மூக‌த்தை, நிற‌த்தைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் அதிகார‌த்தை ஆக்குப‌வ‌ர்க‌ளாக‌வும், காவ‌ற்துறையில் நிறைய இடங்களில் இருப்பவர்களாகவும் இருக்கும்போது அவ‌ர்க‌ளால் 'ம‌ற்ற‌வ‌ர்களை' (சிறுபான்மையினரை) அவ்வ‌ள‌வு எளிதாக‌ விள‌ங்கிக்கொள்ள‌ முடியாது.


(2)
இதேபோன்று ரையசன் (Ryerson) பல்கலைக்கழகத்தை முன்வைத்து வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றையும் நாம் கவனிக்கவேண்டும். ஒராண்டு காலமாய் பல்கலைக்கழகத்தின் பல்வேறு மட்டத்தில் கலந்துரையாடியும், திறந்தவெளியில் கருத்துக்கேட்டும் வெளியிட்டப்பட்ட இவ்வறிக்கை ரையசன் வளாகத்தில் நிறவெறி உயர்மட்டத்தில் அதிகம் நிலவுவதாகக் கூறுகின்றது. முக்கியமான பல்கலைக்கழக அலுவலக உயர்மட்டத்தில் வெள்ளையினத்தவர் அல்லாத சிறுபான்மையினர் மிக்ககுறைவாக உள்ளதாகக் கூறுகின்றது. அத்துடன் சில பேராசிரியர்கள் மற்றும் பணிபுரிவோர் போன்றோர் பிற சிறுபான்மையினரைக் கவனத்திற்கொள்ளாது வகுப்பில் பகிடிகள் விடுவதாகவும், பிற மாணவர்கள் இவ்வாறு சிறுபான்மையினரை வகுப்புக்களில் கேலிசெய்யும்போது உரிய நடவடிக்கைகள் எடுப்பதில்லையெனவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. ரையசனில் படிக்கும் பூர்வீகக்குடியைச் சேர்ந்த ஒருவர் 'வீடற்றவர்' (homeless) என அடையாளப்படுத்தப்பட்டு வளாகத்தின் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இவ்வறிக்கையை எழுதியவர்கள், நிறவெறிக்கு எதிரான, காலனியாதிக்கத்திற்கு எதிராக, முஸ்லிம் வெறுப்புணர்வுக்கு எதிராக, யூதர் வெறுப்பு எதிராக பல்வேறு பாடங்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவேண்டுமெனப் பரிந்துரைந்திருக்கின்றது. மேலும் கறுப்பின மற்றும் பூர்வீகக்குடியைச் சேர்ந்த மாணவர்கள் தங்களைப் போன்ற சிறுபான்மை சமூகங்களிலிருந்து இன்னும் நிறையப் பேராசிரியர்களை வேலைக்கு அமர்த்தவேண்டுமென எதிர்பார்ப்பதாய்க் கூறியிருக்கிறார்கள். இவ்வறிக்கையை அடுத்து பல்கலைக்கழகத்தின் தலைவர், ஒரு குழுவை அமைத்து இவ்வாறான விடயங்கள் தொடர்ந்து நிகழாது பல்வேறுமட்டங்களில் விழிப்புணர்வு செய்யப்படுமெனக் கூறியிருக்கின்றாரெனப் பத்திரிகைச் செய்தியொன்று கூறுகின்றது.


(3)
ஜனவர் மாதத்தில், ரெண்டனில்(Trenton) இருக்கும் விமானப்படைத்தளத்தின் ஒரு பகுதியிற்குப் பொறுப்பாக இருக்கும் கேணல் ரஸல் வில்லியம்ஸ் (Russell Williams) இரண்டு பெண்களைக் கொன்ற குற்றத்திற்காய் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் இரண்டு பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்றார். ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்கா, கனடாப் படைகள் செய்யும் அட்டூழியங்கள் நாம் அறியாததுமல்ல. அண்மையில் ஆப்கான் சிறைச்சாலைகளில் மிகக்கொடூரமாய் கனேடிய படைகள் நடந்துகொண்டிருக்கின்றன என்று அறிக்கையை வைத்து பாராளுமன்றத்தில் விவாதம் செய்வதைத் தவிர்ப்பதன் பொருட்டே கனேடிய பிரதமர் ஹார்ப்பர் பாராளுமன்றத்தை நீண்டகாலத்திற்கு ஒத்திவைத்திருக்கின்றார் என்பதை அனைவரும் அறிவார்கள். கனடாப் படைகளுக்கு இழப்புக்கள் ஏற்பட்டாலும், ஆக்கிரமிப்பு நிலங்களில் இருப்பதை வலதுசாரி பிரதமரும் அவரின் கட்சியைச் சேர்ந்தவர்களும் விரும்புகின்றார்கள் என்பது உண்மையே. ஆனால் தேசியம் என்ற பெயரால் கனேடிய படைகள் செய்யும் துஷ்பிரயோகங்களையும் பாலியல் வன்புணர்ச்சிகளை மூடிமறைக்கத் தெரிந்த அரசுக்கு இப்படி ஒரு கேணல் தரத்தைச் சேர்ந்தவர் இரண்டு பெண்களைக் கொன்றதும், மேலும் இரு பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததையும் மறைக்கமுடியாது விழிபிதுங்கி நிற்கவேண்டியிருக்கிறது. எந்த நாட்டு அரசும் தனது அதிகாரவர்க்க காவலாளிகளான இராணுவம் பொலிஸ் என்பவற்றை -அவை எந்தத் தவறைச் செய்தாலும்- விட்டுக்கொடுக்க அனுமதிப்பதில்லை. நாட்டின் இறையாண்மையைக் காரணங்காட்டி இவற்றை 'சாதாரண' விடயமாக்கிவிடுவார்கள்.

ஏன் இவ்வளவு குற்றச்சாட்டுக்கு உள்ளான கேணல் கூட இன்னும் சில வருடங்கள் சிறையிலிருந்து வெளியே வந்துவிடவும் கூடும். இராணுவம், பொலிஸ் என்ற அதிகார மையங்கள் எப்போதும் அப்பாவிகள் மீதே தனது பலத்தை நிரூபித்து தாம் தமது கடமைகளைச் செய்துகொண்டிருப்பதாய்க் கூறிக்கொண்டிருப்பார்கள். இந்தக் கேணலின் விவகாரத்தோடு, புதிய ஜனநாயக் கட்சியினர் (NDP) இராணுவ உயர்மட்டங்களில் என்ன நடக்கிறது என்பதை அறியவும், அதிகாரங்கள் குவிந்து துஷ்பிரயோகமும் செய்வதைத் தவிர்ப்பதன் பொருட்டும், இராணுவம் சாராத மக்களிலிருந்து தெரிவுசெய்யப்படும் அலுவலகர் ஒருவர், இவ்வாறான இராணுவமையங்களில் அமர்த்தப்படவேண்டும் என்று ஒரு வேண்டுகோளை வைத்திருக்கின்றார்கள். முன்னர் சோமாலியாவில் கனேடியப் படைகள் இவ்வாறான துஷ்பிரயோகம் செய்த காலங்களில் இவ்வாறான ஒரு சிவில் அலுவலகர் நியமிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது. ஆனால் மக்கள் நலன் சார்ந்து தொழிற்படும் ஒரு அரசாக அல்லாத வலதுசாரிகளைத் தேர்ந்தெடுத்துள்ள நிலையில் இவ்வாறான கோரிக்கைகள் எல்லாம் வலதுசாரி அரசின் காதில் ஏறுமா என்பதும் சந்தேகமே.



எழுதுவதற்கு உதவிய இணைப்புக்கள்:
(1) www.thestar.com/news/gta/article/761551--when-good-people-are-swept-up-with-the-bad
(2) www.thestar.com/news/gta/education/article/762011--ryerson-told-to-crack-down-on-racist-chill
(3) www.thestar.com/news/ontario/article/762152--cfb-trenton-chief-charged-with-murder-of-two-women

(நன்றி: வைகறை, Mar, 2010)

(அமெரிக்க) இராணுவ‌த்தில் ஓரின‌ப்பாலின‌ர்

Monday, March 29, 2010

சுருக்க‌மான‌ வ‌ர‌லாறு
இராணுவ‌த்தில் ஓரின‌ப்பாலின‌ர்

By: Kayla Webley
தமிழாக்க‌ம்: டிசே த‌மிழ‌ன்

அமெரிக்க இராணுவ‌த்தில் ஆண்/பெண் ஓரின‌ப்பாலர் ம‌ற்றும் இருபாலின‌ர் என‌ கிட்ட‌த்த‌ட்ட‌ 660,000 பேர் த‌ம‌து பாலிய‌ல் சார்பை (sexual orientation) ப‌ல‌வ‌ந்த‌மாக‌‍ ம‌றைத்து வேலை செய்துகொண்டிருக்கின்றார்க‌ளென‌ அண்மைக்கால‌ ஆய்வொன்று கூறுகின்ற‌து. பெப்ர‌வ‌ரி 02ல், 17 வ‌ருட‌ங்க‌ளுக்குப் பிற‌கு, அமெரிக்க ஜ‌னாதிப‌தி ஓபாமா 'த‌ம‌து நாட்டை நேசிக்கும் ஓரின‌ப்பாலார், அமெரிக்க இராணுவ‌த்தில் வேலை செய்வ‌தை ம‌றுக்கும் ச‌ட்ட‌த்தை' ப‌ற்றி விவாதிக்க‌ வேண்டியிருக்கிற‌து எனப் பேர‌வையில்(Congress) பேசியிருப்ப‌தைக் குறிப்பிட்டாக‌ வேண்டும்.

பழ‌ங்கால‌ கிரேக்க‌த்தில் இது(ஓரின‌ப்பால்) ஒரு முக்கிய‌ விட‌ய‌மே அல்ல‌. பிளேட்டோ படையினரிடையே ஓரின‌ப்பாலை ஊக்குவிப்ப‌தால் படைகள் ப‌ல த‌டைகளைத் தாண்ட‌முடியுமென‌ எழுதினார்; 'காத‌ல் பிர‌யோச‌ன‌ம‌ற்ற கோழைக‌ளைக் கூட‌ உத்வேக‌முள்ள‌ வீர‌ர்க‌ளாக‌ மாற்றிவிடுகிற‌து' என்கிறார். ஆனால் ப‌ல‌ நூற்றாண்டுக‌ளாக‌ பெரும்பாலான‌ ம‌ற்றைய‌ ப‌குதிக‌ளில் இது ம‌றுக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. நெப்போலிய‌னின் போர்க்கால‌ங்க‌ளில் இவ்வாறான‌ ந‌ட‌த்தைக‌ளுக்காய் ப‌ல‌ர் தூக்கிலிட‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள். 1778ல் ஜென‌ர‌ல் ஜோர்ஜ் வாசிங்ட‌ன், ஒரு இராணுவ‌ வீர‌னை த‌ற்பால் ந‌ட‌த்தைக்காய் இராணுவ‌த்திலிருந்து நீக்கியிருக்கிறார்.

1916ல் ஜ‌க்கிய‌ அமெரிக்கா, ஓரின‌ப்பாலின‌ர் இராணுவ‌த்தில் ப‌ணியாற்றுவ‌தை த‌டை செய்திருக்கின்ற‌து. இர‌ண்டாம் உல‌க‌ ம‌கா யுத்த‌த்தின்போது, படையில் சேர்ப‌வ‌ரின் ந‌ட‌த்தைக‌ளையும், உட‌ல் உறுப்புக்க‌ளையும் அவ‌தானித்தே இராணுவ‌த்தில் சேர்க்க‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள். விய‌ட்னாம் போர்க்கால‌த்தில் சில‌ர் ஓரின‌ப்பாலின‌ருக்கான‌ ந‌ட‌த்தைக‌ளைக் காட்டிய‌தால் சேர்க்க‌ப்ப‌டுவ‌து த‌விர்க்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து எனினும் எல்லாப்பொழுதும் இத‌னால் ப‌டையில் சேர்க்க‌ப்ப‌டாம‌ல் த‌விர்க்க‌ப்ப‌ட்ட‌துமில்லை; 1968ல் பெர்ரி வோக்கின்ஸ் என்ற‌ வோஷிங்ட‌ன் ந‌க‌ரைச் சேர்ந்த‌ 19 வ‌ய‌து இளைஞ‌ன் 'த‌ற்பால்சார்பு ந‌ட‌த்தையுடைய‌வ‌ராக‌' இருந்த‌போதும் 16 வ‌ருட‌ங்க‌ள் இராணுவ‌த்தில் ப‌ணிபுரிய‌ அனும‌திக்க‌ப்ப‌ட்டிருக்கின்றார். பிற‌கு இவ‌ரின் பாலிய‌ல் சார்பால் இவ‌ர் இராணுவ‌த்திலிருந்து நீக்க‌ப்ப‌டடதற்காய் நீதிம‌ன்ற‌த்தில் வ‌ழ‌க்குத் தொடுத்து 1990ல் அவ்வ‌ழ‌க்கில் வென்றுமிருக்கின்றார்

ஜ‌னாதிப‌தி பில் கிளிங்ட‌ன் 1993ல் ப‌த‌வியேற்ற‌போது, இராணுவ‌த்தில் சேரும்போது 'கேட்காதே, சொல்லாதே' (Don't ask, Don't tell) என்ற ச‌ட்ட‌த்தை இராணுவ‌ அலுவ‌ல‌ர்க‌ளின‌தும், பொதும‌க்க‌ளின‌தும் எதிர்ப்புக்க‌ளிடையே கொண்டு வ‌ந்தார். இம்முய‌ற்சி ஒர‌ள‌வு வெற்றி பெற்ற‌து. பேர‌வை இத‌ற்குப் ப‌திலாக‌, அமெரிக்க‌ இராணுவ‌த்தில் த‌ம‌து பாலிய‌ல் சார்பை வெளிப்ப‌டையாக‌ ஒருவ‌ர் அறிவிக்காத‌வ‌ரை அவ‌ர் இராணுவ‌த்தில் ப‌ணியாற்ற‌முடியும்' என்ற‌ இன்னொரு ச‌ட்ட‌த்தைக் கொண்டுவ‌ந்த‌து. ஆனால் பென்ர‌க‌ன் ஒருவ‌ரை இராணுவ‌த்தில் சேர்க்கும்போது அவ‌ர‌து பாலிய‌ல் சார்பைக் கேட்ப‌தை நிறுத்தினாலும், இராணுவ‌த்தில் ப‌ணிபுரிப‌வ‌ர்க‌ளிடையே தொட‌ர்ந்தும் (இவ்வாறான‌ ந‌ட‌த்தைக‌ளுக்கான‌) விசார‌ணைக‌ளை ந‌ட‌த்திக்கொண்டிருக்கின்ற‌து. 1994 ஆண்டிலிருந்து கிட்ட‌த்த‌ட்ட‌ 12, 000 இராணுவ‌த்தின‌ர் அவ‌ர்க‌ளின் பாலிய‌ல் சார்பினால் இராணுவ‌த்திலிருந்து நீக்க‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள்.

ந‌ன்றி: TIME
(Timeல் வந்த இக்கட்டுரையை ஸ்கான் செய்து அனுப்பிய 'வைகறை'  ரவிக்கும் நன்றி)

புத்தரும், அவனும் - 01

Saturday, February 20, 2010

நீண்ட‌நாள் காணாம‌ற் போயிருந்த‌ புத்த‌ரை இன்று மீண்டும் அவன் தன‌து க‌ண‌னி மேசைக்க‌டியில் ஒளிந்திருப்ப‌தைக் க‌ண்டான். ப‌னிக்கால‌ம் தொட‌ங்கி அறையெல்லாம் சில்லிட்டுக்கொண்டிருக்க‌ புத்த‌ர் ந‌டுந‌டுங்கிய‌ப‌டி இருந்தார். காடு, ம‌லை, ம‌ழை எல்லாவ‌ற்றையும் புறக்கணித்து நெடுந்தூர‌ம் அலைந்து திரியும் புத்த‌ர் இப்ப‌டிப் ப‌ய‌ந்து ஒடுங்கிய‌ப‌டி அவனது அறைக்குள் இருந்த‌த‌ற்கு இந்த‌ப் பனிக்கால‌ம் ம‌ட்டும் கார‌ண‌மாயிருக்காது என்ப‌து தெளிவாக‌ப் புரிந்த‌து.

புத்த‌ரை இறுதியாய்ச் ச‌ந்தித்த‌ பின்பான‌ இடைவெளியில், நிக‌ழ்ந்த‌ எத்த‌னையோ விட‌ய‌ங்க‌ளை அவ‌ரிட‌ம் ப‌கிர்வ‌த‌ற்கு தன்னிடம் இருக்கின்ற‌து என்ற‌ எண்ண‌ம் அவனுக்குள் நிறைந்து வ‌ழிய‌ ஆர‌ம்பித்த‌து. எனினும் வ‌ழ‌மைபோல‌ அவன‌து வீட்டுக்கு வ‌ருகைத‌ருப‌வ‌ரைப் போல் இன்று புத்த‌ர் இருக்க‌வில்லை.... அது ஏன் என்ற‌ கேள்வி அவனுக்குள் ச‌ஞ்ச‌ல‌த்தை உருவாக்க‌த் தொட‌ங்கியிருந்த‌து. வ‌ருகின்ற‌ வ‌ழியில் எங்கையேயாவ‌து ஆற்றில் அவனுக்காய் வெள்ளைத் தாம‌ரைக‌ளை ஆய்ந்து வ‌ர‌ புத்த‌ர் ஒருபோதும் ம‌ற‌ப்ப‌தேயில்லை. இன்றைய‌ நாளில் அவனுக்காய் எந்த‌ப் பூவையும் கொண்டுவ‌ர‌வில்லை என்ப‌தோடு அவர‌து க‌ர‌ங்க‌ள் சிவ‌ப்பு நிறமாய்க் க‌ண்டிப்போய் இருந்த‌தைப் பார்க்கும்போது ம‌ன‌திற்குள் சிறுவ‌லி மின்ன‌லாய் வெட்டிவிட்டுப்போயிருந்த‌து.

அவன‌து சகோதரர்களின் பிள்ளைக‌ள் ஓடிப்பிடித்து விளையாடும்போது மேசைக்க‌டியில் ஒளிந்திருப்ப‌துபோல‌ புத்த‌ரும் க‌ண்ணை மூடிக்கொண்டு இருந்த‌து அவனுக்கு ஒருமாதிரி இருந்த‌து (க‌ண்ணை மூடினால் எவ‌ரும் க‌ண்டுபிடிக்காமாட்டார்க‌ள் என்ப‌து குழ‌ந்தைக‌ளின் ம‌ன‌த்துணிபு). சிறிய‌வ‌ர்களோடு என்றால், அவ‌ர்க‌ள் ஒளிந்திருக்கும் இட‌த்தைக் க‌ண்டுபிடித்தாலும், காணாத‌துமாதிரி ந‌டிக்க‌முடியும், ஆனால் புத்த‌ரோடு அப்ப‌டியெல்லாம் விளையாட‌முடியாது அல்ல‌வா? இந்தத் த‌ருண‌த்தை எப்ப‌டி எதிர்கொள்வ‌து என்ற‌ ஒரு திணறல் ப‌னிக்கால‌த்தில் உரிய‌ ஆடைக‌ளை அணியாது வெளியே போன‌து போன்ற‌ நிலைக்கு நிகராய் அவனுக்குள் உருவாகக‌த் தொட‌ங்கிவிட்ட‌து

சாதார‌ண‌மாய் ச‌ந்திக்கும் புத்த‌ர் என்றால் இப்போது கிண்ண‌ங்க‌ளில் வைனையோ அல்ல‌து கிழ‌க்காசியாவிலிருந்து பிர‌த்தியேக‌மாக் புத்த‌ர் த‌ன‌து காவித்துணியில் ம‌டித்துக்கொண்டுவ‌ரும் தேயிலையையோ வைத்து.... உருவாக்கிய‌ தேநீரையோ அருந்திக்கொண்டு உரையாடிக்கொண்டிருப்பார்கள். திர‌வ‌ங்க‌ள் நிறைந்த‌ கிண்ண‌ங்க‌ள் காலியாக‌ ஆக‌ ம‌ன‌தும் விருப்பு வெறுப்பும‌ற்ற ஒரு வெற்றிட‌மாய் மாறிக்கொள்ள‌த் தொட‌ங்கும். பிற‌கு எல்லாமே புதிதாய்த் தோன்றுவ‌துமாதிரியும் எதையும் எதிர்கொள்ளலாம் என்ற‌ தெம்பும் அந்த‌க்க‌ணங்க‌ளில் பொங்கித் த‌தும்ப‌த் தொட‌ங்கியிருக்கும். ஆனால் இப்போது புத்த‌ரின் நிலைமையைப் பார்த்தால் அத‌ற்கான‌ சாத்திய‌மே எதுவும் இல்லாத‌து போல‌த் தோன்றிய‌து..

புத்த‌ர் நிறைய‌ விட‌ய‌ங்க‌ளை க‌ற்பிக்கின்றோம் என்ற‌ பிர‌க்ஞையில்லாது அவனுக்குள் ஊட்டியிருக்கின்றார். அவன் க‌ண்ட‌ க‌ன‌வுக‌ளைக் கூட‌ சில‌ இட‌ங்க‌ளில் நிஜ‌மாக்கியிருக்கின்றார். ஒரு ம‌ழைநாளில் வ‌ந்த‌ புத்த‌ரோடு உரையாடிக்கொண்டிருந்த‌போது முளைத்த‌, க‌ண‌வ‌னால் கைவிட‌ப்ப‌ட்ட‌ பெண்ணையும் அவ‌ளின் குழ‌ந்தையும் நிஜ‌மாக‌வே -3 வ‌ருட‌ங்க‌ளின் பின்- அவன் தன் வாழ்வில் ச‌ந்தித‌த‌போது அவனுக்கு மிக‌வும் விய‌ப்பாயிருந்த‌து. இன்று அவ‌ளும் அவ‌ள் குழ‌ந்தையும் துய‌ர் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளைக் க‌ட‌ந்து ஒரு இள‌வேனிலுக்காய்க் காத்திருக்கின்றார்க‌ள் என்ப‌தைப்ப‌ற்றியும் புத்த‌ருட‌ன் ப‌கிர‌வேண்டும் என‌ நீண்ட‌நாட்க‌ளாய் நினைத்துக்கொண்டிருந்தான்.


புத்த‌ருட‌ன் ஓர் இர‌வு
-இளங்கோ

மழைத்தூறல் ஓய்ந்து
ஈரம் இரவை
சிறகுகளால் கோதிக்கொண்டிருந்தபோது
வீட்டுக்கு வந்திருந்தார்
புத்தர்

Santa மட்டுமே
புகைக்கூண்டுக்குள்ளால் இறங்குவார்
என்றெண்ணிய
என் நான்கு வயது மகளுக்கு
கோடையில்
சாம்பர் பூத்திருந்த அடுப்பிலிருந்து
தூசி தட்டியபடி
புத்தர் வந்தது வியப்பாயிருந்தது

நான் அருந்துவதற்கு
மிதமாய் கலந்துவைத்திருந்த
வோட்காவை பகிர்ந்தபோது
ஒவ்வொரு மிடறும்
தாகத்திற்கு இதமாய் இருக்கிறதென்றார்

அரசியல் சினிமா
ஜென் செக்ஸ் என
ஒரு பட்டத்தைப்போல
திசையில்லாது உரையாடல் அசைந்துகொண்டிருக்கையில்
புத்தர் திடீரென வினாவினார்
கடந்துபோன காலத்தில்
நீ இழைத்த தவறுகளுக்கு
வருத்தம் கூற விரும்புகின்றாயாயென

நான்
பாவங்கள் விளைவித்த
மனிதர்கள் நிரையாக நிற்க
வெட்கிக் குனிந்தபடி
நடுங்கும் குரலில்
கோருகின்றேன் மன்னிப்பு

இப்போது
மனது மேகமாய் மிதந்து
குதூகலம் மழைநீராய் திரண்டபோது
DJ drop the s*** என்றலறியபடி
ராப் பாடலுக்கு ஆடத்தொடங்குகின்றோம்
நானும் புத்தரும்

நேரம் நள்ளிரவைக்கடந்தபோது
வெறுமையான மதுக்கோப்பைகளையும்
சில நட்சத்திரங்களையும்
துணைக்கு விட்டுவிட்டு
புத்தரும்
எனது நான்குவயது மகளும்
காணாமற்போயிருந்தனர்.

2.
மதியவுணவு
இடைவெளிகளின்போதுதான்
முகையவிழ்த்திருந்தது அவளுடனான நட்பு

அவளையும் இரண்டுவயதுக் குழந்தையையும்
சில மாதங்களுக்கு முன் கைவிட்டு
இன்னொரு பெண்ணுடன்
தன் துணைவன்
வாழத்தொடங்கியிருக்கின்றான்
என்றாள் விழிநீரைத்துடைத்தபடி

எனக்கு வாய்த்ததைப் போல
புத்தர்
அவள் வீடு தேடி
ஓர் இரவில் போகக்கூடும்
அல்லது
அவளிடமும் அவள் குழந்தையிடமும்
நான் புத்தரையும்
காணாமற்போன என் நான்கு வயதுக்குழந்தையும்
என்றேனும் ஒருநாள்
அடையாளம் காணவும்கூடும்.

(Aug 25/2005)

ந‌ன்றி: வைக‌றை (தை, 2010)

நீ இன்னும் அழ‌வில்லை

Friday, February 12, 2010

1.
நேச‌த்தின் க‌ச‌ப்பு
ம‌ர‌ங்க‌ளில் துளிர்த்து
நில‌வொன்று த‌ன்னை
தீமூட்டிக் கொன்ற‌ க‌ரிய‌விர‌வொன்றில்
இத்தெருக்க‌ளின் விளிம்புக‌ளில் தொலைந்திருக்கிறேன்
புராத‌ன‌த்து ம‌ண‌த்தை
*வ‌ளாக‌த்துப் புறாக்க‌ள் சிற‌க‌டித்து ப‌ர‌ப்பிய‌
தேவால‌ய‌த்தின் வாச‌லில்
நாட‌ற்ற‌வ‌னாக‌வும்
ஒருத்தியின் வெறுப்புக்குரிய‌வ‌னாக‌வும்
ஒருபொழுதில் கிட‌ந்துமிருக்கிறேன்.

த‌ன் மூதாதைய‌ர் நெய்துகொடுத்த‌
போர்வையைப் ப‌கிர்ந்த‌ பூர்வீக‌க்குடி
த‌ங்க‌ளின் க‌ள‌வாட‌ப்ப‌ட்ட‌ நில‌ங்க‌ளின்மேல்
க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ இப்பெருந‌க‌ர‌த்தின
வ‌ர‌லாற்றைத் துப்புகையில்
சூரிய‌ன் யாரையோ தொலைவில்
சுட்டுவிட்டு த‌லைம‌றைவாவ‌து தெரிந்த‌து
வான‌ம் க‌ருஞ்சாம்ப‌லைப் போர்த்திய‌ப‌டி
கொல்ல‌ப்ப‌ட்ட‌ உட‌லைத்தேடி
ப‌க‌லில் இர‌க‌சிய‌மாய் அலைந்த‌து

இன்ன‌மும் உல‌ர்ந்துவிடாத‌
உயிர்த்த‌லுக்கான‌ ப‌ச்சைய‌த்தை
நேசமாயொருத்தி ப‌கிர வ‌ந்த‌போது
நாட‌ற்ற‌வ‌ர்க‌ளான நாமிருவ‌ரும்
இன்ன‌முமித்தெருக்க‌ளில்
திசைக‌ள‌ற்று அலைவ‌த‌ற்கான‌
ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ள் விழித்திருக்கின்ற‌தென்ற‌ப‌டி
விடைத‌ந்தார் பூர்வீக‌க்குடி

2.
இன்று
நிக‌ழ்கின்ற‌ ஊழிப்பெருங்கூத்தில்
நின்று அழுவ‌த‌ற்கான‌ கால‌ங்கூட‌ இல்லை
விழி நிர‌ப்புகின்ற‌ க‌ண்ணீர்த்துளிக‌ளை
குர‌ல்க‌ளிலும் ப‌தாதைக‌ளிலும்
ம‌றைத்து வைத்து
எவ‌ருமே செவிம‌டுக்காத‌ சூனிய‌த்தில்
எங்களைக் காப்பாற்றுங்க‌ளென‌க் கெஞ்சுகின்றோம்

ப‌‌டுகொலைக‌ளை நிறுத்த‌ச்சொல்லி
எங்க‌ளோடு கூட‌வே
உர‌த்துக் க‌த்தும் 9 வ‌ய‌து கீர்த்தி
த‌மிழ் ம‌க்க‌ளைக் காப்பாற்ற‌
ஏனோர் சீன‌ப்பெருஞ்சுவ‌ர் க‌ட்டியிருக்க‌க்கூடாதென்கிறான்
சிறுவ‌ர்க‌ளுக்கு க‌ட‌ந்த‌ கால‌மோ
யார் ந‌ல்ல‌வ‌ர் கெட்ட‌வ‌ரென்ற‌
ப‌குப்பாய்வுக‌ளுக்கோ அவசிய‌மிருப்ப‌தில்லை
இருள்கின்ற‌ இக்க‌ண‌த்து வான‌த்திலிருந்து
தெறிக்குமொரு மின்ன‌லைப்போல‌
இற‌ந்த‌வ‌ர்க‌ள் நாளை உயிர்ப்பார்க‌ளென‌
க‌ன‌வு காண்கிறார்க‌ள் அவ‌ர்க‌ள்

பிரிய‌ கீர்த்தி,
என்றேனும் ஒருநாள்
எல்லோரும் நிதான‌மாய்க் கேட்க‌க்கூடிய‌
உன‌க்கதிகார‌முள்ள‌ ச‌பையிலிருந்து...
நெடுஞ்சாலையில் வாத்துக்க‌ள் ந‌ட‌ந்துபோனாலே
கார்க‌ளை ம‌ணிக்க‌ண‌க்கில் நிறுத்தி
வ‌ழிவிடும் இம்ம‌க்க‌ள்
ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கானோர் அழிவின்போது
ம‌வுன‌ம் சாதித்து த‌ங்க‌ளை நிர்வாண‌மாக்கிய‌தையும்
எங்க‌ளைப் ப‌க‌டைக‌ளாக்கி
சூதாடிய‌ வ‌ல்ல‌ர‌சுக‌ள் அடையாள‌மின்றி
உடைந்து போன‌தையும்
என் க‌ல்ல‌றை முன்வ‌ந்து செப்பு

அப்போது ஓர் ஊற்றாய் அழுது தீர்க்கிறேன்
ஏன் சிச்சியா
எல்லோரும் அழும்போதும்
நீயின்னும் அழ‌வில்லையெனும் உன் கேள்விக்கு.


May 10, 2009
*Toronto Campus

(அர‌சிய‌ல் முர‌ண்க‌ளிற்கு அப்பாற்ப‌ட்டு,  தீக்குளித்த‌ முருக‌தாச‌னின் ஓராண்டு நினைவுக‌ளிற்கு Feb 12, 2009)

'ஏலாதி' விருதிற்கான‌ ஏற்புரை

Monday, February 01, 2010

பொய்த்துப் போன பருவங்கள்

'...சிறுவர்கள்
தொலைந்துகொண்டிருக்கும் நாட்டை
பூர்வீகமாய்க் கொண்டவர்க்கு
நேசித்தல் என்பது கூட
நம்மை நாமே சிதைத்து உருவழிப்பதுதான்...'


சிறுவ‌ய‌திலேயே உயிருக்காய் த‌ப்பியோடி ஓடி அக‌தி வாழ்க்கை ப‌ழ‌க்க‌மாயிற்று விட்ட‌து. ப‌தினமூன்று வ‌ய‌துக்குப் பிற‌கு முற்றாக‌ நான் வாழ்ந்த‌ ஊருக்குப் போக‌ முடியாத‌ அள‌வுக்கு போர் மிக உக்கிர‌மாகியிருந்தது. அவ்வ‌ப்போது 'ச‌மாதான‌ச் சூழ‌ல்' வ‌ந்து ஆக‌க்குறைந்த‌து தாம் வாழ்ந்த‌ இருப்பிட‌த்தைப் பார்க்கும் ச‌ந்த‌ர்ப்ப‌ம் ப‌ல‌ருக்கு வாய்த்தாலும் என்னைப் போன்ற‌வ‌ர்க‌ளுக்கு, இராணுவ‌ உய‌ர்பாதுகாப்பு வ‌ல‌ய‌ம் (High Security Zone) ப‌குதிக்குள் வ‌ருவ‌தால் ஒருபோதும் ஊரையோ வாழ்ந்த வீட்டையோ பின்னாட்களில் பார்க்க‌ முடிந்ததில்லை. இஃதொரு பெரிய‌ இழ‌ப்புமில்லை. இன்றைய‌ கால‌க‌ட்ட‌த்தில் போர் ‍ -நான் ஈழ‌த்தில் வாழ்ந்த‌ கால‌க‌ட்ட‌த்தைவிட‌ - இன்னும் ப‌ல‌ம‌ட‌ங்கு உக்கிர‌மாய் ப‌ல நூற்றுக்க‌ண‌க்கான‌வ‌ர்க‌ளை ப‌லி கொண்டும், இட‌ம்பபெய‌ர்க்க‌வும் செய்து கொண்டிருக்கும்போது என‌க்காய் விதிக்க‌ப்ப‌ட்ட‌ அகதி வாழ்வில் நான் ஒர‌ள‌வு 'ஆசிர்வ‌திக்க‌ப்ப‌ட்ட‌வ‌ன்' என்றுதான் சொல்ல‌வேண்டும். ஏனெனில் இன்று ஆக‌க்குறைந்த‌து, உயிருக்காவ‌து உத்த‌ர‌வாத‌ம‌ளிக்கும் ஒரு நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்க‌ முடிகிற‌து; எறிகணை வீச்சினதோ, விமானத்தாக்குதலினதோ அச்சமில்லாது விரும்புகின்றபோது அவ்வவ்போது எழுதிக்கொண்டிருக்க முடிகின்றது.

போரிற்குள் சிறுவ‌ய‌திலிருந்து வாழ்ந்ததாலோ என்ன‌வோ, மூர்க்க‌மாய் விம‌ர்ச‌னங்க‌ளை வைக்க‌வும் எதிர்கொள்ள‌வும் ப‌ழ‌கிய‌ அள‌வுக்கு பாராட்டுக்க‌ளையோ வாழ்த்துக்க‌ளையோ எப்ப‌டி ஏற்றுக்கொள்வதென்று தெரிய‌வில்லை. எழுதிய‌ ஒரு ப‌டைப்புக்கு எப்போதாவது சிறு பாராட்டுக் கிடைக்கும்போது மிகுந்த‌ ப‌த‌ற்ற‌ங்க‌ளோடே அதை உள்வாங்கிக்கொள்ள‌ முடிகின்ற‌து.

எழுதுவ‌தில் பிரிய‌முடைய‌ ஒருவ‌ருக்கு தான் எழுதிக்கொண்டிருப்ப‌து ம‌லையிடுக்குக‌ளில் ச‌ல‌ன‌ம‌ற்றுப் போய்க்கொண்டிருக்கின்ற‌தோ என்ற‌ நினைப்பை, எவ‌ரின‌தோ க‌டுமையான‌ விம‌ர்ச‌ன‌மோ, சிறு பாராட்டோ நெகிழ‌ச் செய்துவிடுகின்ற‌து. பிற‌ர் த‌ன‌து எழுத்தைக் க‌வ‌னிக்கின்றார்க‌ள் என்ற‌ நினைப்பு தொடர்ந்து பொறுப்பாக‌ எழுதுவதற்கான ஒருவிதமான மனோநிலையைத் தரத்தான் செய்கின்றது.

ஒரு புதிய‌வ‌னுக்கு, அவ‌ன் யாரென்று அவ‌ன‌து பின்புல‌ங்க‌ள் அறியாது, அவ‌ன‌து ப‌டைப்பை ம‌ட்டுமே முன்னிறுத்தி வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் ஒரு விருது என்ற‌வ‌கையில், த‌மிழ்நாட்டு க‌லை இல‌க்கிய‌ ம‌ன்ற‌ம் - தக்கலை சார்பாக‌ ந‌ண்ப‌ர்க‌ள் நீங்க‌ள் என‌து தொகுப்பான‌ 'நாட‌ற்ற‌வ‌னின் குறிப்புகளுக்கு' வ‌ழ‌ங்கும் 'ஏலாதி இலக்கிய விருதை' ஏற்றுக்கொள்கின்றேன். இவ்விருதை என‌க்கான‌ அங்கீகார‌மாய் அல்லாது, இனி எழுதுகின்ற‌போது பொறுப்போடும், முதிர்ச்சியை நோக்கி செல்வ‌துமாக‌ எழுத‌வேண்டுமென்ற‌ நினைவூட்ட‌வே -இவ்விருதை- ஏற்றுக்கொள்கின்றேன் என‌க் கூறிக்கொள்ள‌ விரும்புகின்றேன்.

இவ்விருதை வ‌ழ‌ங்கும் ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் தேர்வுக் குழுவிற்கும் ந‌ன்றி சொல்கின்ற‌ அதேவேளை 'அடையாள‌ம்' சாதிக்கிற்கும் என‌து த‌னிப்ப‌ட்ட‌ நன்றியைச் சொல்ல‌ப் பிரிய‌ப்ப‌டுகின்றேன். எழுதுகின்ற‌ ஒருவ‌னுக்கு ஒரு ந‌ல்ல‌ ப‌திப்பாள‌ர் ‍அதுவும் த‌மிழ்ச்சூழ‌லில் கிடைப்ப‌து அரிது. எவ்வ‌ள‌வோ தொலைவிலிருந்தாலும், என‌து க‌விதைக‌ளைத் தொகுப்பாக்க‌ வேண்டுமென்று பிரிய‌ப்ப‌ட்ட‌போது, எந்தத் தயக்கமுமில்லாமல் வெளியிட முன்வந்தவர் சாதிக். அது ம‌ட்டுமில்லாது, இவ்விருதுக்கும் பிர‌திக‌ளை எனது அனுமதியிற்குக் காத்திருக்காது, தனது சுயவிருப்பில் அனுப்பியும் வைத்து உதவியவர். இவ் இனிய கணத்தில் சாதிக்கின‌தும், உங்க‌ள் அனைவ‌ரின‌தும் க‌ர‌ங்க‌ளை நெகிழ்வுட‌ன் ப‌ற்றிக்கொள்கின்றேன். இறுதியாக‌, நான் சிறுவ‌ய‌தில் அக‌தியாய் அலைந்ததைவிட‌ மிக‌க் கொடுமையான‌ சூழ்நிலைக்குள் இன்று ஈழ‌த்திலும் உல‌கெங்கிலும் சிறார்க‌ள் அக‌திக‌ளாக்க‌ப்ப‌ட்டுக் கொண்டிருக்கின்றார்க‌ள். அகதிகளாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அச்சிறார்களுக்கு இவ்விருதைச் சமர்ப்பிக்கின்றேன். இன்னும் இவ்விருதுட‌ன் வ‌ழ‌ங்கும் பணமுடிப்பைத் த‌மிழ‌க‌த்திலுள்ள‌ ஆத‌ர‌வ‌ற்ற‌ குழ‌ந்தைக‌ள் காப்ப‌க‌ம் ஏதாவ‌தொன்றுக்கு வ‌ழ‌ங்குமாறு என் சார்பின் இவ்விருதைப் பெற்றுக்கொள்ளும் 'அடையாள‌ம்' சாதிக்கிடம் கேட்டுக்கொள்கின்றேன். ந‌ன்றி.

(Aug 15, 2008)

*ச‌ந்தோச‌ம்; ஆனால் யாருக்கும் தெரியாம‌ல்.

Friday, January 29, 2010

1.
ந‌ம்மைப் போல‌ ச‌க‌ ம‌னித‌ரையும் நேசித்த‌ல் என்ப‌து அற்புத‌மான‌ ஒரு விட‌ய‌ம். ந‌ம‌க்குள்ள‌ எல்லாச் சுத‌ந்திர‌ங்க‌ளும் பிற‌ருக்கும் வேண்டும் என்று அவாவி நிற்ப‌து போல்,. ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் த‌னிம‌னித‌ உரிமைக‌ள் பாதிக்க‌ப்ப‌டும்போது ந‌ம‌தான உரிமைக‌ள் பாதிக்க‌ப்ப‌டுகின்ற‌ என்றரீதியில் குர‌ல்கொடுக்கின்ற‌வ‌ர்க‌ள்தான் உண்மையான‌ ம‌னிதாபிமானிக‌ள். ஆனால் உல‌கம் இவ்வாறு அழ‌காய், எல்லோரும் ச‌ம‌ உரிமைக‌ளுட‌ன் வாழ்கின்ற‌ ஒரு நில‌ப்ப‌ர‌ப்பாய் விரிந்திருக்க‌வில்லை என்ப‌துதான் ந‌ம் கால‌த்தைய‌ சோக‌ம். மைய‌வோட்ட‌த்திலிருந்து வில‌க்கி விளிம்புக‌ளாக்க‌ப்ப‌ட்டு, ப‌ல்வேறுப‌ட்ட‌ ம‌க்க‌ள் திர‌ள் இருப்ப‌தைப் பார்த்துக்கொண்டு நாம் 'இவ்வுல‌க‌ம் மிக‌ அழ‌கான‌து' என்று கூறுவ‌து ந‌ம்மை நாமே ஏமாற்றுவ‌துதான்.

புல‌ம்பெய‌ர் தேச‌ங்க‌ளில் ந‌ம‌து நிற‌ம்/நாம் பின்ப‌ற்றும் ம‌த‌ம்/ந‌ம் க‌லாசார‌ப் பின்புல‌ங்க‌ள் என்ற‌ ப‌ல்வேறு வ‌கைக‌ளை முன்வைத்து ஒடுக்க‌ப்ப‌டுகின்றோம் என்று உண‌ர்கின்ற‌ நாமே எம் ச‌மூக‌த்திலேயே சாதி, பாலின‌ம், பிர‌தேச‌ங்க‌ள் போன்ற‌வ‌ற்றை முன்வைத்து ப‌ல‌ரை விளிம்புநிலை ம‌னித‌ர்க‌ளாக்கி வைத்திருக்கின்றோம். இது குறித்து சிறிதும் அவ‌மான‌ப்ப‌டாது பிற‌ரை குற்ற‌ஞ்சாட்டுவ‌தில் ம‌ட்டும் கால‌ங்கால‌மாக‌ ந‌ம‌து த‌மிழ‌ர் 'பெருமை'க‌ளைப் ப‌றைசாற்றிக் கொண்டிருக்கின்றோம்.

'ஒடுக்க‌ப்ப‌டுகின்ற‌வ‌ர்க‌ளின் போராட்ட‌ங்க‌ள் ஒருபோதும் முடிவ‌தில்லை'என்ற‌ரீதியில் ப‌ன்முக‌வெளியில் ட‌்ன்ஸ்ர‌னின் உரை தொட‌ங்கிய‌து. டன்ஸ்ர‌ன் த‌ன்னை வெளிப்ப‌டையாக‌ ஓரின‌ப்பாலின‌ராக‌(gay) அறிவித்த‌ ஒருவ‌ர். 'சிநேகித‌ன்' என்ற‌ ஓரின‌ப்பாலின‌ருக்க்கான‌ ஓர் அமைப்பை ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் சேர்ந்து ந‌ட‌த்திவ‌ருப‌வ‌ர். (எளிய‌ புரித‌லிற்காய் நான் இங்கே ஓரின‌ப்பாலின‌ர் அமைப்பு என்று குறிப்பிட்டாலும் அவ‌ர்க‌ள் LGTTIQQ2S என்ற‌ வ‌கைக்குள் வ‌ரும் அனைவ‌ரையும் உள்ள‌ட‌க்குகின்ற‌ன‌ர் என்ப‌தைத் த‌ய‌வுசெய்து க‌வ‌ன‌த்திற் கொள்ளவும்).

நாம் விளிம்பு நிலையாக்க‌ப்ப‌ட்ட‌ ம‌னித‌ர்க‌ளாய் இருந்தாலன்றி, அவர்க‌ளின் ஒடுக்க‌ப்ப‌டும் வ‌லிக‌ளைப் ப‌ற்றியோ அத‌ற்கெதிரான‌ போராட்ட‌ங்க‌ள் ப‌ற்றியோ முழுதாய் விள‌ங்கிக்கொள்ள‌ முடியாது. ஆனால் அவ‌ர்க‌ள் பேசுவ‌த‌ற்கு வேண்டிய‌ வெளிக‌ளைத் திற‌ந்துவிடுவ‌தில்.., அவ‌ர்க‌ளை வெளிப்ப‌டையாக‌ பேச‌விடுவ‌தென.., ஆரோக்கிய‌மான‌ உரையாட‌ல்க‌ளைத் தொட‌ர்வ‌தில் அக்க‌றையாக‌ நாம் ப‌ங்குபெற‌முடியும். சாதி நிலையில் தான் ஒடுக்க‌ப்ப‌டுவ‌தை, ஒருவர் ஒரு பொதுவெளியில், ம‌ட்டுப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ ம‌ணித்தியால‌ங்க‌ளில் த‌ன‌து முழுக்க‌தையையோ வ‌லியையோ/ த‌த்த‌ளிப்புக்க‌ளையோ கூறிவிடுவார் என்று எதிர்ப்பார்க்க‌முடியாது. முத‌லில் தான் அவ்வாறு உரையாடுவ‌தை -தானாய் அல்லாத பிற‌ர்- எவ்வாறு எடுத்துக்கொள்வார் என்ற‌ ப‌ய‌ங்க‌ள் விளிம்புநிலையின‌ருக்கு ஏற்ப‌டுவ‌தும், தாம் சொல்லும் நிகழ்வுக‌ளைக் கொண்டு பிற‌கு த‌ன்னை அடையாள‌ப்ப‌டுத்தி, த‌ம்மை மேலும் ஒடுக்குவ‌த‌ற்கு கார‌ணிக‌ளாக‌ இவைக‌ள் அமைய‌க்கூடும் என்ற‌ நினைப்பும் ஒருவ‌ருக்கு ஏற்ப‌டுத‌ல் இய‌ல்பான‌து. நியாய‌மான‌தும் கூட‌.

ஆக‌வே இவ்வாறு விளிம்புநிலையில் உள்ளவர்களின் வாழ்வை அறிந்துகொள்ள‌ அக்க‌றைகாட்டாத‌ ச‌மூக‌த்தில், த‌ன‌து அடையாள‌த்தை வெளிப்ப‌டையாக‌ அறிவித்து ஒருவ‌ர் பொதுவெளியில் உரையாட‌த் த‌யாராகுகின்றார் என்றால் அது கூட‌ மிக‌ப்பெரும் போராட்ட‌த்தின்பின் வ‌ந்திருக்கக்கூடிய‌து என்ப‌தை நாம் முத‌லில் விள‌ங்கிக்கொள்ள‌ வேண்டியிருக்கின்ற‌து. மேலும் ஒடுக்க‌ப்ப‌ட்டு ச‌மூக‌த்திலிருந்து வில‌த்தி வைக்க‌ப்ப‌டும் ஒருவர் தான் க‌ட‌ந்துவ‌ந்த‌ பாதை முழுதையும் பொதுவெளியில் வைக்கும் சாத்திய‌ங்க‌ளும் மிக‌க்குறைந்த‌தாக‌ இருக்கின்ற‌து என்ப‌தையும் நாம் நினைவில்கொள்ள‌ வேண்டும். இவ்வாறான‌ புரித‌ல்க‌ளுட‌னேயே நாம்  விளிம்புநிலையிலிருப்ப‌வ‌ர்க‌ளுட‌னான‌ எம‌து உரையாட‌ல்க‌ளைத் தொட‌ங்க‌வேண்டும். அவ்வாறில்லாது ந‌ம‌க்கு இருக்கும் 'வெளி' அனைத்தும் அவ‌ர்க‌ளுக்கும் இருக்கிற‌து என்று சிறுபிள்ளைத்த‌ன‌ங்க‌ளுட‌ன் உரையாட‌ல்க‌ளை ஆர‌ம்பித்தால் நாம் இன்னும்  அவர்களை ஒடுக்குப‌வ‌ராய் ஆகிவிடும் ஆப‌த்துக்களுண்டு.

2.
பிற‌ அம‌ர்வுக‌ளைப் போலன்றி -தாம் பேச‌ ச‌பையிலிருப்ப‌வ‌ர்க‌ளைச் செவிம‌டுக்க‌ச் செய்யாது- ச‌பையிலிருப்ப‌வ‌ர்க‌ளையும் ப‌ங்குபெற‌ச் செய்யும் நோக்குட‌ன் டன்ஸ‌ர‌ன் அம‌ர்வை மாற்றிய‌மைத்து வித்தியாச‌மாக‌ இருந்த‌து. மூன்று கேள்விக‌ள் கொடுக்க‌ப்ப‌ட்டு ஒவ்வொரு குழுவின‌ரின‌தும் ப‌தில்களை அறிந்து, அத‌ன் மூல‌ம் ஒரு க‌ல‌ந்துரையாட‌ல் உற்சாக‌மாய்த் தொட‌ங்க‌ப்ப‌ட்ட‌து. இதுவே பொதுவெளியில்(த‌மிழ‌ர் ம‌த்தியில்) செய்யும் முத‌ல் அம‌ர்வு என்ப‌தால் எளிதான‌ கேள்விக‌ளை முன் வைத்திருக்கின்றோம் என்ற‌ன‌ர் ட‌ன்ஸ்ர‌னும் அவ‌ருட‌ன் வ‌ந்திருந்த‌ பிற‌ நண்பர்களும்..

முத‌ற்கேள்வியாக‌ Gay, Lesbian என்ப‌வ‌ற்றிற்கு த‌மிழில் எவ்வாறான‌ சொற்க‌ள‌ ப‌ய‌ன‌ப‌டுத்த‌ப்ப‌டுகின்ற‌ன‌ என்று கேட்க‌ப்ப‌ட்ட‌து. சில‌ர் ஓரின‌ப்பாலின‌ர்/ த‌ற்பால் சேர்க்கையாள‌ர் என்றும் வேறு சில‌ர் ஆண் ஓரின‌ப்பாலார், பெண் ஓரின‌பாலார் என்றும் கூறினர். இன்னொரு குழு ஓரின‌ப்பாலினருக்கு எவ்வாறான வ‌சைச்சொற்க‌ள் நம் சமூகத்தில் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டுகின்ற‌ன‌ என்று அச்சொற்க‌ளையும் குறிப்பிட்டார்க‌ள். எங்க‌ள் குழுவில் இருந்த‌ ந‌ண்ப‌ரொருவ‌ர் த‌மிழ‌ர் ப‌ண்பாட்டில் ஆதிகால‌த்திலிருந்தே ஓரின‌ப்பால் இருந்து வ‌ந்த‌தென‌வும், ஆனால் ச‌ங்க‌ம் ம‌ருவிய‌ கால‌ங்க‌ளில் ம‌த‌ங்க‌ளின் ஆதிக்க‌த்தால் அவ‌ர்க‌ள் ஒடுக்க‌ப்ப‌ட்டார்க‌ள் என‌வும், ஆக‌வே ஓரின‌ப்பாலின‌ருக்குப் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ ப‌ழைய‌ சொற்க‌ளை நாம் மீட்டெடுப்ப‌த‌ன் மூல‌ம் வ‌ர‌லாற்றை மீள‌க் க‌ண்டுபிடிப்ப‌தாய் இருக்குமென்ற‌ க‌ருத்தை முன்வைத்தார். மேலும் இன்றும் த‌மிழ‌க‌த்திலிருக்கும் (இந்தியா) ப‌ல‌ சிற்ப‌வேலைப்பாடுக‌ளில் த‌ற்பால்சேர்க்கை சித்த‌ரிக்க‌ப்ப‌ட்டிருப்ப‌து முக்கிய‌ சாட்சிய‌ம் எனவும் சொன்னோம். அத்துடன் வ‌ர‌லாற்றிலிருந்து புழ‌ங்கிய‌ ஒரு சொல்லை எடுத்தாளும்போது 'இப்போதுதான் இந்த‌ மாதிரியான‌ உறவு/சேர்க்கை' என்று பாசாங்குகாட்டும் ம‌னித‌ர்க‌ளிற்கு உறுதியான‌ எதிர்வினை கொடுக்க‌ உக‌ந்த‌மாதிரியாக‌வும் இருக்கும் என்றும் கூறினோம்.

எல்லாக் குழுக்க‌ளின் க‌ருத்துக்க‌ளை தொகுத்து ட‌ன்ஸ்ர‌ன் த‌ன‌து சில‌ க‌ருத்துக்க‌ளையும் சேர்த்து LGTTIQQ2Sக்கு விரிவான‌ விள‌க்க‌ம் கூறியிருந்தார். தான் 90களில் அமைப்பாயிருக்கையில் LGBT ம‌ட்டுமே இருந்த‌தாக‌வும் இப்போது இன்னும் ப‌ல‌ விளிம்புநிலையின‌ரை உள்ளட‌க்கி தாமொரு உறுதியான‌ அமைப்பாக‌ மாறிவ‌ருகின்றோம் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதேவேளை எல்லாப் பிற‌ அமைப்புக்களிற்கும் இருப்ப‌தைப் போல‌ தாங்களிற்கும் ப‌ல‌ பிள‌வுக‌ள் இருக்கின்ற‌ன‌ என‌வும் அவ‌ற்றோடும் போராடவேண்டியிருக்கிற‌து என்றும் குறிப்பிட்டார். முக்கிய‌மாய் த‌ங்க‌ள் 'சிநேகித‌ன்' அமைப்பில் அதிக‌ இல‌ங்கைய‌ர்க‌ள் இருப்ப‌தால் தென்னிந்தியாவைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் தாங்க‌ள் அதிக‌ம் க‌வ‌னிக்க‌ப்ப‌டாது இருக்கின்றோம் எனறு நினைக்கும் நிலை இருக்கிற‌து என்றார்.

இர‌ண்டாவது கேள்வியாக‌ என்ற‌ எப்ப‌டி த‌மிழ்ப்ப‌ட‌ங்க‌ளில் Gay, Lesbians சித்த‌ரிக்க‌ப்ப‌டுகின்றார்க‌ள் கேள்வி கேட்க‌ப்ப‌ட்ட‌து. த‌மிழ்ப்ப‌ட‌ங்க‌ளே எங்க‌ள‌ ச‌மூக‌த்தின் முக‌ங்க‌ளாக‌ (அதாவ‌து அதிகமானோர் பார்ப்ப‌வ‌ர்க‌ள் என்ற‌வ‌கையில்) இருப்ப‌த‌னால் இந்த‌க்கேள்வி கேட்க‌ப்ப‌ட்ட‌தாய்க் கூற‌ப்ப‌ட்ட‌து. அரவாணிக‌ள்/திருந‌ங்க‌ளைக‌ள் போல‌ எவ்வித‌ மாற்ற‌முமின்றி மிக‌க்கேவ‌ல‌மான‌ முறையிலேயே அனைத்து விளிம்புநிலையின‌ரும் சித்த‌ரிக்க‌ப்ப‌டுகின்றார்க‌ள் என்ப‌தே ப‌ல‌ரின் பொதுக்க‌ருத்தாய் இருந்த‌து 'வேட்டையாடு விளையாடு'வில் வ‌ரும் வில்ல‌ன்க‌ளை ஓரின‌ப்பாலாக்கி ந‌கைச்சுவை என்ற‌ பெய‌ரில் அது வ‌ன்ம‌மாய் வெளிப்ப‌ட்ட‌து ப‌ல‌ரால் இங்கே சுட்டிக்காட்ட‌ப்ப‌ட்ட‌து. அதேபோன்று இவ்வாறான‌ விளிம்புநிலையின‌ரை இய‌ல்பாய்காட்டும் எந்த‌ சாத‌க‌மான‌ முய‌ற்சியும் த‌மிழ்ச்சூழ‌லில் காட்ட‌ப்ப‌ட‌வில்லை என்ப‌தையும் குறிப்பிட்டிருந்தோம்.

மூன்றாவ‌து கேள்வியாக‌, க‌ன‌டாவில் ஓரின‌ப்பாலின‌ர் திரும‌ண‌ம் செய்வ‌தை ஏற்றுக்கொள்ளும் ச‌ட்ட‌ம் குறித்து என்ன‌ நினைக்கின்றீர்க‌ள்? என‌க் கேட்க‌ப்ப‌ட்ட‌து. அனைவ‌ரும் இச்ச‌ட்ட‌ம் ஏற்றுக்கொள்ள‌க்க்கூடிய‌து; வ‌ர‌வேற்க‌த்த‌க்க‌து என்று கூறினோம். அதேச‌ம‌ய‌ம் இந்த‌ச் ச‌ட்ட‌ம் இவ்வாறானவ‌ர்க‌ளை ச‌மூக‌த்தில் இய‌ல்பான‌வ‌ர்க‌ளாய் ஏற்றுக்கொள்ளாது அடையாள‌ப்ப‌டுத்தி வேறுப‌டுத்தி வைத்திருக்கும் அபாய‌முண்டு . என‌வே இவ்வாறான‌வ‌ர்க‌ளை இய‌ல்பாய் பொதுச்ச‌மூக‌ம் ஏற்றுக்கொள்ளும்வ‌ரை தொட‌ர்ச்சியான‌ போராட்ட‌ங்க‌ள் நிக‌ழ்த்த‌ப்ப‌டுத‌ல் அவ‌சிய‌மான‌து என்றும் க‌வ‌ன‌ப்ப‌டுத்தினோம். எனெனில் இனி ஓரின‌ப்பாலின‌ருக்கான‌ உரிமைக‌ளையோ அல்ல‌து அவ‌ர்க‌ள் ஒடுக்கப்ப‌டுவ‌தையோ குறிப்பிட்டால் 'அதுதானே ஏற்க‌ன‌வே ச‌ட்ட‌மிருக்கிற‌து;அது பார்த்துக்கொள்ளும் ' என்று -தொட‌ர்ச்சியாய் செய்ய‌வேண்டிய‌ போராட்ட‌த்தை- அட‌க்கிவிடும் வாய்ப்பு அதிகார‌வ‌ர்க்க‌ங்க‌ளிற்கும், ம‌த‌ம்சார்ந்த‌ அமைப்புக்க‌ளிற்கும் பொதுப்புத்தியிற்கும் ஏற்பட்டுவிடும் என்ற‌ அபாய‌த்தைச் சுட்டிக்காட்டினோம்.

3.
இக்கேள்விக‌ளுக்குப் அப்பால் பிற‌கு இன்னொரு கேள்வி டன்ஸ்ர‌னின் ந‌ண்ப‌ர்க‌ளால் முன்வைக்க‌ப்ப‌ட்ட‌து. அதாவ‌து பெற்றோராக‌ இருக்கும்/இருக்க‌ப்போகும் நீங்க‌ள் உங்க‌ள் ம‌க‌னோ/ம‌க‌ளோ தான் த‌ற்பாலின‌த்த‌வ‌ர் என்று கூறினால் உங்க‌ள‌து எதிர்வினை எப்ப‌டியிருக்கும் ?‌. ப‌ல்வேறு க‌ருத்துக்க‌ள் இக்கேள்வியை முன்வைத்துச் சொல்ல‌ப்ப‌ட்ட‌ன‌. சில‌து மிகுந்த‌ அபத்த‌மாக‌வும் இருந்த‌ன‌. அதைத் த‌னிம‌னித‌ர்க‌ளின் க‌ருத்து என்றில்லாது பொதுப்புத்தி சார்ந்த‌ க‌ருத்துக்க‌ள் என்ற‌வ‌கையிலும் த‌ம‌து ம‌ன‌தில் உள்ள‌த்தை வெளிப்ப‌டையாக‌ச் சொல்கின்றார்க‌ள் என்ற‌வ‌கையிலும் அவ‌ற்றை ட‌ன்ஸ்ர‌னும் அவ‌ரின் ந‌ண்ப‌ர்க‌ளும் எடுத்துக்கொண்டாலும் என‌க்கு -த‌னிப்ப‌ட்ட‌வ‌ளவில்- எரிச்ச‌லாக‌வே இருந்தது. முக்கிய‌மாய் ஒருவ‌ர், சிறார்க‌ளாய்/ப‌தின‌ம‌ங்க‌ளில் இருக்கும்போது த‌ற்பால் சேர்க்கையில் க‌ட்டாய‌மாய் ஈடுப‌டுத்த‌ப்ப‌டுவ‌தால் அவ‌ர்க‌ள் பிற்கால‌த்தில் அப்ப‌டியாகிவிடும் அபாய‌ம் இருக்கிறது என்றார். இதை ம‌றுத்து சும‌தி அதை பாலிய‌ல் துஷ்பிர‌யோக‌மாக‌வே (sexual abuse) எடுக்க‌வேண்டுமே த‌விர‌ ஒரு உற‌வாய் எடுக்க‌வேண்டிய‌தில்லை என‌க்குறிப்பிட்டார். நானும் அதேயே ஆண்க‌ள்/பெண்க‌ள் த‌னியே விடுதிகள்/சிறைக‌ள் போன்ற‌வ‌ற்றில் இருக்கும்போது த‌ற்பால் உற‌வில் ஈடுப‌டுகின்றார்க‌ள். அது நிச்சய‌ம் பாலிய‌ல் வ‌ற‌ட்சியால் (sexual starvation) ஏற்ப‌டுவ‌தே த‌விர‌,இய‌ல்பான‌ ஓரினபாற் சேர்க்கையாய் இருப்ப‌தில்லை. எனெனில் பிற‌கு பொதுவெளிக்குள் அவ‌ர்க‌ள் வ‌ரும்போது த‌ம‌து பாலிய‌ல் உற‌வை இய‌ல்பாய்த் தேர்ந்தேடுக்கின்றார்க‌ள். ஆகவே பாலிய‌ல் வ‌றட்சியால் வ‌ரும் த‌ற்பால் உற‌வுக‌ளையும், இய‌ல்பாய் வ‌ரும் த‌ற்பால் உற‌வுக‌ளையும் ஒன்றாய்ச் சேர்த்துக் குழ‌ப்ப‌க்கூடாது என்றும் குறிப்பிட்டேன். அவ்வாறு பார்த்தால் ஆண்கள்/ பெண்க‌ள் என‌த் தனித்த‌னியே ஹொஸ்ட‌ல்க‌ளில் த‌ங்கியிருந்த‌வ‌ர்க‌ளில் பெரும்பாலானோர் பிற்கால‌த்தில் த‌ற்பால் சேர்க்கையாள‌ராக‌ இருக்க‌வெண்டும். ஆனால் அவ்வாறான‌ விகித‌ம் அதிக‌ம் இருப்ப‌த‌ற்காய் எந்த‌த் த‌ர‌வையும் நான் அறிந்த‌தில்லை என‌வும் குறிப்பிட்டேன் (நிகழ்வில் நான் சொல்ல‌வ‌ந்த‌தைச் ச‌ரியாக‌க் குறிப்பிட்டேனோ தெரிய‌வில்லை)

உரையாட‌லின் முடிவில், ட‌ன்ஸ்ர‌ன் த‌மிழ்ச்ச‌மூக‌த்தில் ஓரின‌ப்பாலின‌ராய் இருப்ப‌த‌ன் அவ‌திக‌ளையும் ப‌த‌ற்ற‌ங்க‌ளையும் முன்வைத்து சில‌ விட‌ய‌ங்க‌ளையும் கூறினார். உதார‌ண‌மாய் நான்கு ச‌கோத‌ர‌க‌ளுட‌ன் பிற‌ந்த‌ த‌ன‌க்கு த‌ன்னை த‌ற்பால் சேர்க்கையாள‌ர் என‌ பொதுவெளியில் அடையாள‌ப்ப‌டுத்த‌ல் (ஒர‌ள‌வு) எளிதாய் இருப்ப‌தைப் போன்று, ச‌கோத‌ரிக‌ளுட‌ன் பிற‌ந்த‌ ஒரு த‌ற்பால் சேர்க்கையாள‌ருக்கு எளிதாக‌ இருப்ப‌தில்லையென்றார். எனெனில் 'உன‌து ச‌கோத‌ர‌ர் த‌ற்பால்சேர்க்கையாள‌ர்' என்று அச்ச‌கோத‌ரிக‌ளின் திரும‌ண‌வாழ்வு ந‌ம் ச‌மூக‌த்தில் குழ‌ப்ப‌டும் சாத்திய‌ங்க‌ள் நிறைய‌ உள்ள‌தென‌க் குறிப்பிட்டார். மேலும் த‌மிழில் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும் உற‌வு முறை அழைப்புக்க‌ளிலும் சிக்க‌ல்க‌ள் த‌ங்க்ளைப் பொறுத்த‌வ‌ரை உள்ள‌தென்று குறிப்பிட்டார். உதார‌ண‌மாய் த‌ன‌து ச‌கோத‌ர‌ரின் ம‌க‌ன் த‌ன்னைச் சித்த‌ப்பா என்று அழைக்கின்ற‌வ‌ர். ஆனால் த‌ன‌து துணையை ச‌கோத‌ர‌ரின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போகும்போது எவ்வாறு அவ‌ரை அழைப்ப‌து போன்ற‌ சிக்க‌ல்க‌ள் இருக்கின்ற‌தென்றார். சிறிய‌ விட‌ய‌ங்க‌ளாய் நாம் க‌வ‌னிக்காத‌ இம்மாதிரியான‌வை பெரும் 'அர‌சிய‌லாய்' இருப்ப‌தை நாம் உண‌ர்ந்துகொள்ள‌லாம். இவ‌ற்றுக்கு எல்லாம் தீர்வுக‌ளை அடைவ‌த‌ற்கு ஓரின‌பாலாருக்கு ம‌ட்டுமில்லை அவ‌ர்க‌ளைப் புரிந்துகொள்ள அக்க‌றைப்ப‌டும் ந‌ம‌க்கும் இருக்கின்ற‌து என்ப‌தை ஒருபோதும் ம‌றந்துவிட‌முடியாது.


புகைப்ப‌ட‌ங்க‌ள்: சென்ற‌வ‌ருட‌ம் (2009) றொறொண்டோவில் ந‌ட‌ந்த‌ Pride Week ன்போது எடுக்க‌ப்ப‌ட்ட‌வை

*ட‌ன்ஸ்ர‌னும், அவ‌ரின் ந‌ண்ப‌ர்க‌ளும் இத் த‌லைப்பிலேயே த‌ம‌து அம‌ர்வைச் செய்திருந்த‌ன‌ர்

(ந‌ம் சூழ‌லில் இவ்வாறான‌ விட‌ய‌ங்க‌ள் விரிவாக‌ உரையாட‌ப்ப‌டுவ‌தில்லை என்ற எண்ண‌த்தாலேயே நிக‌ழ்வில் நிகழ்ந்த‌ அனைத்தையும் இய‌ன்ற‌வ‌ரை தொகுத்திருக்கின்றேன்)

சாந்தனின் படைப்புலகம்

Monday, January 04, 2010

'விளிம்பில் உலாவுதல்' குறுநாவல்களின் தொகுப்பை முன்வைத்து
1.

ஈழ‌த்துப் ப‌டைப்பாளிக‌ளில் முக்கிய‌மான‌ ஒருவ‌ரான‌ சாந்த‌ன் நெடுங்கால‌மாக‌ எழுதி வ‌ருகின்ற‌வ‌ர். ஈழ‌த்தில் முற்போக்கு அலை, வீச்சுட‌ன் இருந்த‌ எழுப‌துக‌ளில் அத‌னுள் எற்றுப்ப‌ட்டுப்போகாம‌ல் த‌ன‌க்குரிய‌ கதை சொல்லும் முறையை இவர் த‌னித்துவ‌மாய்க் கொண்ட‌வ‌ர். சாந்த‌னின் தொட‌க்க‌ கால‌ க‌தைக‌ள் ‍‍-அவ‌ரே ஓரிட‌த்தில் ‍குறிப்பிடுவ‌தைப் போல‌-பேருந்துக‌ளிலும் புகைவ‌ண்டிக‌ளிலும் நிக‌ழ்ப‌வை. எளிய‌ ம‌னித‌ர்க‌ளும், சாதார‌ண‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளும் சாந்த‌னின் க‌தையுல‌க‌த்தில் பெரும்பாலும் நுழைந்தாலும் அவ‌ர்க‌ளை/அவ‌ற்றை ம‌ற‌க்க‌முடியாத‌வ‌ர்க‌ளாய் மாற்றிக்கொள்வ‌தில்தான் சாந்த‌ன் என்னும் ப‌டைப்பாளி முக்கிய‌ம் உடைய‌வ‌ராக‌விடுகின்றார். சாந்த‌ன் த‌ன‌து பாத்திர‌ங்க‌ளின் வ‌ர்ண‌னைக‌ளுக்கு அதிக‌ இட‌ம் எடுத்துக்கொள்வ‌தில்லை. பெரும்பாலான அவரது க‌தைக‌ள், ஏதோ இர‌ண்டு ம‌னித‌ர்க‌ள் க‌தைத்துக்கொண்டிருக்கும்போது -இடையில் நுழைகின்ற‌ மூன்றாவ‌து ம‌னித‌ன் எப்ப‌டி உரையாட‌லில் ப‌ங்குகொள்வானோ- அப்ப‌டியே ச‌டுதியாக‌ க‌தைக‌ள் ஆர‌ம்பித்து அதிக‌ம் அல‌ட்ட‌லில்லாது சொல்ல‌ வ‌ந்த‌தைக் கூறிவிட்டு அதேவேக‌த்தில் முடிந்தும்விடுகின்ற‌ன‌. அத‌னாலேயே அவ‌ர‌து அதிக‌ சிறுக‌தைக‌ள் ஒரு சில‌ ப‌கக‌ங்க‌ளிலோ (சிலவேளைக‌ளில் ஒரு ப‌க்க‌த்தில் கூட‌) முடிந்துவிடுகின்ற‌வையாக‌ இருக்கின்ற‌ன‌. குறுநாவ‌ல்க‌ளின் அத்தியாங்க‌ளுக்குக் கூட‌ அதிக‌ ப‌க்க‌ங்க‌ளைச் செல‌வ‌ழிக்க‌ விரும்புவ‌தில்லை சாந்த‌ன். அதனால் என்ன‌, குறைந்த‌ ப‌க்க‌ங்க‌ள் கொண்ட‌ க‌தைக‌ள் என்றாலும் சாந்த‌னின் க‌தைக‌ள் சுரீரென்று எங்கோ ம‌ன‌தில் குத்திவிட்டு ந‌க‌ர‌த்தான் செய்கின்ற‌ன‌.

ஒரு ப‌டைப்பாளி என்ப‌வ‌ர் எப்போதும் விசால‌மான‌ ம‌ன‌தோடு இருக்க‌வேண்டும். தொட‌ர்ச்சியாக‌ சுற்றியிருப்ப‌வை குறித்து அவதானித்து, வேண்டிய‌வ‌ற்றை எடுத்தும் வேண்டாத‌வ‌ற்றை வ‌டிக‌ட்டிய‌ப‌டியும் இருக்க‌வேண்டும். ப‌டைப்பாளிக‌ள் ப‌ல்வேறு மொழிக‌ளை அறிந்துவைத்திருப்ப‌தும், வித்தியாச‌மான‌ க‌லாசார‌ப்பின்ன‌ணிக‌ளில் வாழ‌ நேர்கின்ற‌போதும், ப‌டைப்புக்க‌ள் ப‌ன்மைத்துவ‌மாய் முகிழும் ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ள் அதிக‌ம் இருக்கின்ற‌ன‌ சில‌ர் எங்குபோனாலும் கிண‌ற்ற்துத‌வ‌ளையாக‌ த‌ம‌து க‌லாசார‌மும் மொழியும் ம‌ட்டுமே உய‌ரிய‌து என்று க‌த்திக்கொண்டிருப்பார்க‌ள், அவ‌ர்க‌ளை இப்போதைக்கு மறந்து விடுவோம். சாந்த‌னுக்கு த‌மிழ், சிங்க‌ள‌ம், ஆங்கில‌ம் ஆகிய மூன்று மொழிக‌ளில் ந‌ன்கு தேர்ச்சி இருக்கின்ற‌து; இர‌ஷ்ய‌மொழியை விரும்பிக் க‌ற்றுமிருக்கின்றார். அத‌ன் நிமித்த‌ம் மொஸ்கோவுக்கு -சோவிய‌த்து ஒன்றிய‌த்தின் அழைப்பின்பேரில்- ப‌ய‌ணித்துமிருக்கின்றார். 1966 - 1980 வ‌ரை க‌ட்டுப்பெத்தை, கொழும்பு, திருக்கோண‌ம‌லை போன்ற‌ யாழ்ப்பாண‌த்தைத் தாண்டிய நகரங்களில் வாழ்ந்த‌ சாந்த‌னின் அனுப‌வ‌ங்க‌ளும், ஆர‌ம்ப‌கால‌ங்க‌ளில் அவருக்கு அதிக ஈர்ப்பிருந்த‌ மார்க‌சிச‌மும் அவ‌ர‌து ப‌டைப்புல‌கிற்கு இன்னும் வளத்தைக் கொடுக்கின்றன சொந்தமண்ணைவிட்டுப் பிரிவதில்லையென்ற வைராக்கியத்தில். -1980க‌ளின் பின் யாழை விட்டு வெளியேற‌விட்டாலும்- அவ‌ரால் ஈழ‌த்தில் எல்லா ம‌க்க‌ளையும் ப‌டைப்பின் மூல‌ம் நேசிக்க‌ முடிகின்ற‌து.


'விளிம்பில் உலாவுத‌ல்' என்கின்ற‌ இத்தொகுப்பில் சாந்த‌னின் அய்ந்து குறுநாவ‌ல்க‌ள் இருக்கின்ற‌ன‌. அவை 1984 லிருந்து 2007 வ‌ரை ப‌ல்வேறு கால‌ க‌ட்ட‌ங்க‌ளில் எழுத‌ப்ப‌ட்ட‌வை. எந்த‌ ஒரு ப‌டைப்பும் அது சார்ந்த‌ நில‌ப்ப‌ர‌ப்பையும் க‌தைக்கான‌ ச‌முக‌ அரசிய‌ல் கார‌ண‌ங்க‌ளையும் நேர‌டியாக‌வோ அல்ல‌து ம‌றைமுக‌மாவோ உண‌ர்த்திக்கொண்டேயிருக்கும். புனைவுக‌ளினூடாக‌க் கூட, ஒரு கால‌க‌ட்ட‌த்தின் வ‌ர‌லாற்றைப் ப‌டிக்க‌லாம் என்று சில‌ சிந்த‌னையாள‌ர்க‌ள் குறிப்பிடுகின்றார்க‌ள். இன்றைய‌ சில‌ ஈழ‌த்து/புலம்பெய‌ர் ப‌டைப்பாளிக‌ள் நில‌த்தில் காலூன்றா வான‌த்துப் ப‌ற‌வைக‌ளாகிவிடுகின்ற‌ன‌ர் என்ப‌தும் ஒருவ‌கை அவ‌ல‌மே.

சாந்த‌னின் க‌தைக‌ளில் வ‌ரும் சாதார‌ண‌ ம‌னித‌ர்க‌ளினூடாக‌ அந்த‌க்கால‌ அர‌சிய‌ல் சூழ‌ல்க‌ளும், நிக‌ழ்த்த‌ப்ப‌டுகின்ற‌ நில‌ப்ப‌ர‌ப்புக‌ளும் துல்லிய‌மாக‌க் காட்ட‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஏற‌த்தாழ அரை நூற்றாண்டுக‌ளாய் அரசிய‌ல் ப‌த‌ற்ற‌ங்க‌ளோடேயிருக்கும் ஈழ‌த்தில் ஒவ்வொரு பிர‌தேச‌மும் அத‌ற்குரிய‌ அர‌சிய‌லைக் கொண்டிருக்கின்ற‌ன‌. யாழ்ப்பாண‌த்தில் இருப்ப‌வ‌ர்க‌ளும் கொழும்பில் இருப்ப‌வ‌ர்க‌ளும் வெவேறு சூழ‌லில் வாழ்ந்துகொண்டிருப்பார்க‌ள். அதேபோன்று யாழில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கும் ம‌ட்ட‌க்கிள‌ப்பில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்குமான‌ சூழ‌ல் வெவ்வேறு வ‌கையான‌து. யாழ்ப்பாண‌த்தில் ஒருகால‌க‌ட்ட‌த்திற்குப் பிற‌கு முற்றுமுழுதாக‌ த‌மிழ‌ர்க‌ள் ம‌ட்டுமே வாழ்ந்து வ‌ந்திருக்கின்ற‌ன‌ர். ம‌லைய‌க‌ப் ப‌குதிக‌ளிலும், கொழும்பிலும் பெரும்பான்மை சிங்க‌ள ச‌மூக‌த்தோடு வாழ்ப‌வ‌ர்க‌ளுக்கான‌ சூழ‌ல் முற்றிலும் வேறுவித‌மான‌வை. ம‌ட்ட‌க்கிள‌ப்பு, திருக்கோண‌ம‌லை, அம்பாறை போன்ற‌ எல்லைக் கிராம‌ங்க‌ளிலும், குடியேற்ற‌த்திட்ட‌ங்க‌ளோடும் வாழ்ப‌வர்க‌ளுக்கான‌ சூழ‌ல் இவையெல்லாவ‌ற்றையும் விட‌ இன்னும் வித்தியாச‌மான‌வை. யாழில் நிறைய‌க் கால‌ம் வாழ்ந்தாலும்,வெவ்வேறு பிர‌தேச‌ங்க‌ளில் வாழ்நதிருந்ததால் சாந்த‌னின் க‌தைக‌ள் அவை சொல்ல‌ப்ப‌டுகின்ற சூழ‌லில் காலூன்றியே கதை சொல்கின்றன.

2.
இத்தொகுப்பிலுள்ள‌ முத‌ற்க‌தையான‌ 'ஆரைக‌ள்' கொழும்பின் பின்புல‌த்தில் நிக‌ழ்கின்ற‌து. 1977 க‌ல‌வ‌ர‌ம் முடிந்து மீண்டு வந்து வேலை செய்யும்போது த‌மிழ‌ர்க‌ளுக்கிடையில் இருக்கும் சாதி பார்த்து ப‌ழ‌கும்/ கூட‌ச்சேர்ந்து தேநீர் குடிக்கும் ப‌ழ‌க்க‌ங்க‌ளை இன‌ங்காட்டுகின்ற‌து இக்க‌தை. எத்த‌கைய‌ அசாத‌ர‌ண‌ சூழ்நிலையாய் இருந்தால் என்ன, தொழில்ச‌ங்க‌ அமைப்புக்க‌ளாய் இருந்தால் என்ன‌, இவ‌ற்றை மீறி ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் ம‌ன‌ங்க‌ளிடையே ஊடுருவியுள்ள‌ சாதி ஒருபோதும் ம‌றைவ‌தேயில்லை என்பதை மறைமுகமாய் உணர்த்துகின்றது. நான்கு வ‌ருட‌ங்க‌ளாய் ஒரே அலுவ‌ல‌க‌த்தில் வேலை செய்தும் கதைசொல்லியைப் பார்த்து சிறிதும் புன்ன‌கைக்காத‌ த‌ன‌பால் இறுதியில் க‌தைக்க‌த் தொட‌ங்குகின்றார். அத‌ற்கு அவ‌ர் கூறும் கார‌ண‌ம் 'க‌ன‌நாளைக்குப் பிற‌கு இவ‌ன் மூர்த்திதான் சொன்னான், எட‌ போய்யா, அவ‌ன் சுண்டியெடுத்த‌ வெள்ளாள‌ன் எல்லோ எண்டு'. ஒரு உய‌ர்ந்த‌ சாதிக்கார‌ன் இன்னொருவ‌னோடு உரையாடுவ‌த‌ற்கான‌ முன் நிப‌ந்த‌னையாக‌ இருக்க‌வேண்டிய‌து, ம‌ற்ற‌வ‌ரும் உய‌ர்ந்த‌ சாதிக்கார‌ராய் இருக்க‌வேண்டும் என்ப‌தை நினைத்து, க‌தை சொல்லி ஏள‌னமாய்ச் சிரித்துக்கொள்வதோடு கதை முடிந்துவிடுகின்றது.

இர‌ண்டாவ‌து க‌தையான‌ 'உற‌வுக‌ள் ஆயிர‌ம்' ர‌ஷ்யாவில் நிக‌ழ்கின்ற‌து. க‌தை சொல்லி, கொழும்பிலிருந்த‌ கால‌த்தில், விருப்பின்பேரில் ர‌ஷ்ய‌ மொழி க‌ற்க‌, அவ‌ரை ர‌ஷ்யாவைச் சுற்றிப் பார்க்க‌ அழைக்கின்றார்க‌ள். ஈழ‌த்தில் இளைஞ‌ர்க‌ள் இய‌க்க‌ங்க‌ளாய்த் த‌ங்க‌ளை த‌க‌வ‌மைத்துக் கொள்கின்ற‌ கால‌க‌ட்ட‌ம் அது. மிக‌வும் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு வேலையிலிருந்து விடுமுறை எடுத்து க‌தைசொல்லி ர‌ஷ்யாவுக்குப் ப‌ய‌ணிக்கின்றார். அங்கே ப‌ல்வேறு நாடுக‌ளிலிருந்து வ‌ந்த‌ ப‌ல்வேறும மொழிக‌ளைப் பேசுப‌வ‌ர்க‌ளோடு ப‌ழ‌கும் ச‌ந்த‌ர்ப்ப‌ம் வாய்க்கிற‌து. அந்த‌வேளையில் கேர‌ளாவிலிருந்த‌ வ‌ந்த‌ கீதாவுக்கும் க‌தை சொல்லிக்கும் இடையில் மெல்லிய‌ காத‌ல் முகிழ்வ‌து அழ‌காக‌ச் சொல்ல‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. ஆனால் வெளிநாட்டுப்ப‌ய‌ண‌த்தைக் கூட‌க் குதூக‌லிக்க‌ முடியாது இடையில் இல‌ங்கையிலிருந்து ஒரு செய்தி(வ‌த‌ந்தி) ப‌ர‌வுகின்ற‌து. க‌ட்டுநாய‌க்காவில் போய் இற‌ங்குகின்ற‌ த‌மிழ‌ர்க‌ளையெல்லாம் இல‌ங்கை அர‌சு பிடித்துக்கொண்டு போய் சிறையில் அடைக்கிற‌தென்று. அந்த‌ அவ‌திக‌ளினால் க‌தைசொல்லியின் காத‌ல் கைந‌ழுவிப் போவ‌தையும் எப்ப‌டி க‌தைசொல்லி போய் க‌ட்டுநாய‌க்காவில் இற‌ங்க‌ப்போகின்றார் என்ற‌ ப‌தைபதைப்ப‌தையும் இக்க‌தை ப‌திவுசெய்கின்ற‌து. இக்க‌தையை வாசிக்கும்போது ச‌ட்டென்று ம‌ன‌தில் வ‌ந்து தோன்றிய‌து அசோக‌மித்திர‌னின் 'ஒற்ற‌ன்' நாவ‌ல். எங்கிருந்தோ வ‌ந்து புதிய‌ சூழ‌லில் கொஞ்ச‌கால‌ம் ந‌ட்பாய்ப் ப‌ழ‌கி, பிற‌கு என்றென்றைக்குமாய் அவ‌ர்க‌ளில் ஒருவ‌ரையும் பார்க்க‌முடியாது பிரிகின்ற சூழ‌ல் மிகுந்த‌ நெகிழ்ச்சி த‌ர‌க்கூடிய‌து. அசோகமித்திர‌னின் 'ஒற்ற‌னும்', சாந்த‌னின் 'உற‌வுக‌ள் ஆயிர‌மும்' வெவ்வேறு க‌தைப் ப‌ர‌ப்பைக் கொண்டிருந்தாலும், இர‌ண்டிலும் க‌தைசொல்லிக‌ள் த‌ங்க‌ளுக்கு இதுவ‌ரை ப‌ழ‌க்க‌ப்ப‌டுத்தாத‌ புதிய‌ நாடொன்றுக்கு முத‌ன்முறை போகின்றனர். அத்தோடு தாங்க‌ள் இதுவ‌ரை பார்த்த‌றியாத‌ ம‌னித‌ர்க‌ளையும், க‌லாசார‌ங்க‌ளையும் த‌ங்க‌ள் பார்வையிலிருந்து பார்த்து எந்த முன்முடிவுகளும் எடுக்காது, அம்ம‌னித‌ர்க‌ளை அவர்களின் இயல்புகளோடு ஏற்றுக்கொள்வ‌துமென‌வும்... ஒத்த‌ த‌ன்மையுடைய‌வ‌னாய் இருக்கின்றன. தஸ்தயேவ்ஸ்கியின் 'வெண்ணிற‌ இர‌வு'க‌ளை வாசித்த‌ நில‌ப்ப‌ர‌ப்புக்கு தாங்க‌ள் உண்மையில் நிக‌ழ்கால‌த்தில் இருக்கின்றோம் என்று கீதாவும் க‌தைசொல்லியும் உரையாடும் பகுதியும், கீதா காத‌லுடன் ஒரு ம‌லையாள‌ப் பாட‌லை குழுவாய் இருக்கும்போது பாடுவ‌தை அப்ப‌டியே என்றென்னைக்குமாய் கதைசொல்லி நினைவில் வைத்திருப்ப‌துமான பகுதியும் வாசிப்பவருக்கு நெகிழ்ச்சி த‌ர‌க்கூடிய‌வையாகும்.

'ம‌னித‌ர்க‌ளும் ம‌னித‌ர்க‌ளும்' என்கின்ற‌ க‌தை 1977ம் ஆண்டு க‌ல‌வ‌ர‌ம் நிக‌ழும்போது கொழும்பில் சிக்கிக்கொண்ட‌ சில‌ குடும்ப‌ங்க‌ளின் க‌தையை அந்த‌ப் ப‌த‌ற்ற‌ங்க‌ளோடு முன்வைக்கின்ற‌து. கொழும்பில் இருப்ப‌து சாத்திய‌மில்லை என்கின்ற‌ நிலையில் அங்கிருக்கும் த‌மிழ்ம‌க்க‌ள் த‌ங்க‌ள் சொந்த‌ இட‌ங்க‌ளுக்கு புற‌ப்ப‌ட‌த்தொட‌ங்குகின்றார்க‌ள். அவ்வாறான‌வ‌ர்க‌ள் முத‌லில் அக‌தி முகாமில் த‌ங்க‌வைக்க‌ப்ப‌ட்டு க‌ப்ப‌லில் ஏற்றிச் செல்ல‌ப்ப‌டுகின்றார்க‌ள். அஃதொரு நெடிய‌ ப‌ய‌ண‌ம். இவ்வாறு போவ‌தை விரும்பாத‌ சில‌ குடும்ப‌ங்க‌ள் புகைவ‌ண்டியில் போவ‌த‌ற்குத் தீர்மானிக்கின்ற‌ன‌ர். இர‌விலிருந்து விடிகாலை வ‌ரை ஊர‌டங்குச் ச‌ட்ட‌ம். இவற்றினூடாக‌ க‌தைசொல்லியும் அவ‌ர‌து ம‌னைவியும் இன்னொரு குடும்ப‌மும் த‌ப்பிப் போகின்றார்க‌ள் என்ப‌தைப் ப‌ற்றிய‌தே இக்க‌தை. க‌தையில் இத்த‌கைய‌ அவ‌திக‌ளுக்குள்ளும் த‌ங்க‌ளைக் காப்பாற்றும் ஒரு சிங்க‌ள ஆட்டோக்கார‌ருக்கும் அவ‌ரின் உத‌விக்குமாய் க‌தை சொல்லி நெகிழ்வ‌து மொழிக‌ளையும், இன‌ங்க‌ளையும் தாண்டிய‌ ம‌னித‌ர்க‌ளுக்குள்ள காருண்ய‌த்தைத் தெளிவாக‌க் காட்டுகின்ற‌து

'எழுத‌ப்ப‌ட்ட‌ அத்தியாய‌ங்க‌ள்' குறுநாவ‌ல் சுதும‌லையில் புலிக‌ளின் த‌லைமையை இந்திய‌ இராணுவ‌ உல‌ங்குவானூர்த்திக‌ள் ஏற்றிச்செல்வத‌ற்கான‌ காத்திருப்பில் தொட‌ங்கும் க‌தை க‌ட‌ந்த‌ கால‌த்தையும் நிகழ்காலத்தையும் நோக்கி முன்/பின்னாக ந‌க‌ர்கின்ற‌து. அவ்வ‌வ்போது வ‌ந்து போகும் ச‌மாதான‌ முயற்சிகளில் ம‌க்க‌ள் ந‌ம்பிக்கை கொள்வ‌தையும், இவ்வாறான‌ வானூர்த்திக‌ளே த‌ன‌க்கு நெருக்க‌மான‌வ‌ர்க‌ளை முந்தைய ஆண்டுக‌ளில் ப‌லியும் எடுத்தும் இருக்கின்ற‌து என்ப‌தையும் கதைசொல்லி நினைவுகூர்கிறார். காத்துக்கொண்டிருக்கும்போது வ‌ழ‌மைபோல‌ அர‌சிய‌லும் பேச‌ப்ப‌டுகின்ற‌து. ஒரு கால‌த்தில் ந‌ம்பிக்கை த‌ர‌க்கூடிய‌தாய் இருந்த‌ இட‌துசாரி இய‌க்க‌த்தில் தான் இணைந்த‌தையும், அதிலிருந்த‌ சில‌ அர்ப்ப‌ணிப்புள்ள‌ த‌லைவ‌ர்க‌ளைப்ப‌ற்றியும் க‌தைசொல்லி அசைபோடுகின்றார். வ‌ட‌க்கு கிழ‌க்கிற்கு இணைப்புக்கு ஒரு ம‌க்க‌ள் வாக்கெடுப்பை வைப்ப‌துபோல‌ ஏன் வ‌ட‌க்கும் கிழ‌க்கும் முழு இலங்கையிலிருந்து பிரிந்துபோவ‌த‌ற்கான‌ ஒரு தேர்த‌லை இவ‌ர்க‌ள் ந‌ட‌த்த‌க்கூடாதென‌ ஒரு இட‌துசாரி வினாவ‌ச் செய்ததை கதை சொல்லி அசைபோடுகின்றார். இந்த‌ ச‌ம‌ய‌த்தில் ஒருவ‌ர் 'நீங்க‌ள் யாரோடு?' என்று கேட்கும்போது க‌தைசொல்லி 'நான் ச‌ன‌ங்க‌ளோடு' என்று கூறுவ‌தோடு ம‌க்க‌ள் ம‌ய‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட‌வேண்டிய‌ போராட்ட‌ம் இடைந‌டுவில் சிதைந்துபோன‌து குறித்தும் கவலைப்படுகின்றார். ஈழ அரசியலில் உன‌து நிலைப்பாடு என்ன‌வென்கின்ற‌போது, 'ச‌ன‌ங்க‌ள் எதைத் தீர்மானிக்கின்றார்க‌ளோ, அதுதான். என்னைப் பொறுத்த‌ளவிலை த‌மிழ‌ர்க‌ள் ஒரு த‌னித் தேசிய‌ இன‌ம். அவ‌ர்க‌ளுடைய‌ சுய‌நிர்ண‌ய‌ உரிமை ம‌றுக்க‌ப்ப‌டமுடியாதது. எந்த‌வித‌ சுர‌ண்ட‌ல்க‌ள் பாகுபாடுக‌ள், அட‌க்குமுறைக‌ள், அடிமைத்த‌ன‌ங்க‌ளுக்கும் ஆளாகாம‌ல் இறைமையோடும் கெள‌ர‌வத்தோடும் நாங்க‌ள் வாழ‌ ஏற்ற‌ வ‌ழி எந்த‌ வ‌ழி ஏற்ற‌து என்ப‌தைத் தெரிவு செய்கிற‌ சுத‌ந்திர‌ம் அவ‌ர்க‌ளுக்கு உண்டு. எந்த‌ வித‌த்திலென்றாலும் அவ‌ர்க‌ளுக்கு நியாய‌மும் பாதுகாப்பும் இருக்க‌வேண்டும். பிர‌ச்சினை தீர‌வேண்டும் அதுதான் முக்கிய‌ம்' என்று கதைசொல்லும் ப‌குதி இன்றைய‌ கால‌த்திற்கும் பொருந்த‌க்கூடிய‌தே.

'அடையாள‌ம்' என்கின்ற‌ க‌தை, நீண்ட‌ கால‌ம் க‌தைசொல்லி யாழ்ப்பாண‌த்தில் இருந்துவிட்டு ந‌ண்ப‌ரொருவ‌ரின் அழைப்பின்பேரில் இந்தியாவுக்கு ஒருவார‌ம் செல்கின்ற‌தைப் ப‌ற்றிய‌ க‌தை. யாழ்ப்பாண‌த்திலிருந்து கொழும்புக்கு வ‌ரும் க‌தைசொல்லிக்கு கொழும்பு மிகுந்த‌ ப‌த‌ற்ற‌த்தைத் த‌ருகின்ற‌து. பொலிஸ் ப‌திவு, பாதுகாப்புச் சோத‌னைக‌ள் போன்ற‌வ‌ற்றையெல்லாம் மிகுந்த‌ பய‌த்துட‌னேயே எதிர்கொள்கின்றார். வீதியில், லொட்ஜில் ச‌ந்திக்கும் த‌மிழ‌ர்க‌ளெல்லாம் த‌ன‌து ப‌ழைய‌கால‌த்தை நினைவுப‌டுத்தி பொலிசில் சிக்க‌வைத்து வைத்துவிடுவார்க‌ளோ என்ற‌ ப‌த‌ற்ற‌ம் தொட‌ர்ந்த‌ப‌டியே அவருக்கு இருக்கின்ற‌து. என்றாலும் கிட்ட‌த்த‌ட்ட‌ ப‌தினைந்துவ‌ருட‌ங்க‌ளுக்குப் பிற‌கு ச‌ந்திக்கும் சிங்க‌ள் ந‌ண்ப‌ர் எவ்வித‌ மாற்ற‌மில்லாது ந‌ட்புட‌ன் இருப்ப‌து க‌தைசொல்லிக்கு நிம்ம‌தியாக‌ இருக்கிறது.

இந்தியாவிலிருக்கும் சொற்ப‌ வார‌த்திலும் எப்போது கொழும்புக்குத் திரும்பிப் போவ‌து.., அங்கே என்ன‌ ந‌ட‌க்கின்ற‌து என்று அந்த‌ர‌த்தோடே க‌தைசொல்லி ஓடிக்கொண்டிருக்கின்றார். அந்த‌ப்ப‌ய‌ண‌த்தின்போது நீல‌ ப‌த்ம‌நாப‌ன், அருந்த‌தி ரோயையெல்லாம் ச‌ந்திப்ப‌தாக‌க் கூற‌ப்ப‌டுகின்ற‌து. க‌ட்டுநாய‌க்காவில் வ‌ந்து இற‌ங்கும்போது இவ‌ரை ஏற்றிச்செல்ல‌ எவ‌ருமில்லாது ஓட்டோவொன்றில் செல்லும்போது க‌தைசொல்லிக்கும், ஒரு சிங்க‌ள முதிய‌வ‌ருக்கும், இவ‌ர் முத‌ன்முத‌லான் சுவைக்கும் பிய‌ருக்கும் இடையில் நிக‌ழும் உரையாட‌ல் நினைவில் நிற்க‌க்கூடிய‌து. த‌ன்னையொரு த‌மிழ‌னாக‌ சோதனைச்சாவடிகளில் காட்டாதிருக்க‌ பிய‌ரைக் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் குடித்துக்கொண்டு இருப்பது காப்பாற்றும் என்று இவர் ந‌ம்புகின்றார். இறுதியில் பார்த்தால் அந்த‌ பிய‌ர் கானில் 'ப்ளு ரைக‌ர்' என்ற பெய‌ருட‌ன் புலிப்ப‌ட‌மொன்றும் இருக்க‌ த‌ன‌து அச‌ட்டுத்த‌ன‌ம் க‌தைசொல்லிக்கு புரிகின்ற‌மாதிரி க‌தை முடியும்.

சாந்த‌ன் இதுவ‌ரை த‌மிழில் 15 தொகுப்புக்க‌ளையும், ஆங்கில‌த்தில் 4 தொகுப்புக்க‌ளை வெளியிட்டிருக்கின்றார். சாந்த‌னின் எழுப‌துக‌ளின் வ‌ந்த‌ தொகுப்பைப் பார்க்கும்போது அங்கே வ‌ரும் க‌தைசொல்லிக‌ள் ப‌ய‌ண‌த்தை உற்சாக‌மாய் மேற்கொள்ப‌வ‌ர்க‌ளாய்... நினைத்த‌ நேர‌த்தில் கொழும்பிலிருந்து யாழுக்கும், திரும‌லைக்கும் போக‌க்கூடிய‌வ‌ர்க‌ளாய் இருக்கின்றார்க‌ள். ஆனால் இறுதியாய் வ‌ந்த‌ இததொகுப்பில் உள்ள கதைகளில் (80க‌ளின் ந‌டுப்ப‌குதிக்கு பின்) இப்ப‌ய‌ண‌ங்க‌ள் எவ்வ‌ளவு அல்ல‌ல்க‌ளுக்கும் ப‌தற்றங்க‌ளுக்குமிடையில் நிக‌ழ்கின்ற‌து என்ப‌தை விள‌ங்கிக்கொள்ள‌ முடியும். உண்மையில் இந்த‌ப் 'ப‌யண‌ங்க‌ளின் க‌தை'க‌ளினூடாக‌க் கூட‌ நாம் ஈழ‌த்தின் அர‌சியல் நில‌வ‌ர‌ங்க‌ளைப் புரிந்துகொள்ள‌ முடியும். எவ்வாறு த‌மிழ‌ர்க‌ளுக்கான‌ அர‌சிய‌ல் சூழ‌ல் ஈழத்தில் மாறிக்கொண்டிருந்த்ன என்பதை சாந்த‌னின் 70க‌ளின் கொழும்புச் சூழ‌லை முன்வைத்து எழுத‌ப்ப‌ட்ட‌ க‌தைக‌ள் முக்கிய‌ சாட்சிக‌ளாகும். சாந்த‌னின் யாழுக்கு அப்பால் வாழ்ந்த‌ சூழ்நிலை சிங்க‌ள ம‌க்க‌ளை வெறுத்தொதுக்காம‌ல் த‌மிழ‌ர்க‌ளின் மீதான‌ பேரினவாதத்தின் ஒடுக்குமுறையை மட்டுமே கூற‌க்கூடிய‌தாக‌ இருப்பது கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும்.

இந்த‌ அய்ந்து குறுநாவ‌ல்க‌ளில் -சாந்த‌னின் ஏனைய‌ அநேக‌ சிறுக‌தைக‌ளைப் போல‌வே- எந்த‌ப் பிர‌ச்சார‌த்தொனியும் புல‌ப்ப‌ட‌வில்லை. 'எழுத‌ப்ப‌ட்ட‌ அத்தியாய‌ங்க‌ள்' கதையில் கூட‌ அர‌சிய‌ல் வெளிப்ப‌டையாக‌ப் பேச‌ப்ப‌டுவ‌து, யாழ் சூழ‌லில் அவ்வாறு மக்கள் இருப்பது இய‌ல்பான‌ ஒன்றென‌க் காட்சிப்ப‌டுத்துவ‌த‌ற்கேயாகும். 1977ம் இன‌க்க‌ல‌வ‌ர‌த்தில் த‌ப்பிப்போவ‌த‌ன் ப‌த‌ற்ற‌த்தைத் 'ம‌னித‌ர்க‌ளும் ம‌னித‌ர்க‌ளும்' கதையில் த‌க்க‌வைத்திருந்தாலும் புகைவ‌ண்டியில் ஏறுவ‌தோடு க‌தையை சாந்தன் முடித்துவிடுகின்றார். தேவைக்க‌திம‌காய் புகைவ‌ண்டிப்ப‌ய‌ண‌த்தில் என்ன‌வெல்லாம் நிக‌ழ்ந்திருக்கும் என்றேல்லாம் விப‌ரிக்க‌வில்லை. அநேகமான கதைகளில் சாந்தன் வாசிப்பவருக்கான வெளியை கதை முடிந்தபின்னும் தருகின்றார். உதாரண்மாய் 'உறவுகள் ஆயிரம்' கதையில், கதை சொல்லி கட்டுநாயக்காவில் போயிறங்கும்போது என்ன நிகழப்போகின்ற பதற்றத்தை வாசிப்பவரிடையே படியவிட்டாலும், கதை மொஸ்கோவில் விமானம் ஏறுவதோடு முடிந்துவிடுகின்றது. கட்டுநாயக்காவில் என்ன நிகழ்ந்திருக்கும் என்ற வெளி வாசகருக்கு திறந்துவிடப்படுகின்றது. கட்டுநாயக்காவில் இறங்கி எளிதாக வெளியேறியவர் ஒருமாதிரியும், அங்கே சோதனைக் கெடுபிடிகளால் சிக்குப்பட்டு அல்லற்பட்டவர் வேறொரு மாதிரியுமாய் இக்கதையை வாசித்து முடிப்ப‌த‌ற்கான‌ வெளி தரப்படுகின்றது.

'உற‌வுக‌ள் ஆயிர‌ம்' க‌தையில் க‌றுப்பின‌த்த‌வ‌ர்க‌ளை 'நீக்ரோக்க‌ள்' என்று ஓரிட‌த்தில் குறிப்பிடுகின்ற‌து.இன்றைய‌ வ‌ழ‌க்கில்லாத‌, ஒரு இன‌த்துவேச‌ வார்த்தையாக‌ ம‌திப்பிட‌ப்ப‌டுகின்ற‌ இவ்வார்த்தையை சாந்த‌ன் அடுத்த‌ ப‌திப்பிலாவ‌து திருத்திக்கொள்ள‌வேண்டும். அத்தோடு 'ஆரைக‌ள்' க‌தையில் கொழும்பு போன்ற‌ பல்லின‌ச்சூழ‌லில் இருந்துகொண்டு, க‌ல‌வ‌ர‌த்தால் பாதிக்க‌ப்ப‌ட்டும் சாதி பார்ப்ப‌தை சாந்த‌ன் கேலி செய்தாலும், அதை முழுமையாக‌ தெளிவாக‌ ம‌றுக்காம‌ல் இவ்வாறான‌ விட‌ய‌ங்க‌ளை ஒரு ஏள‌ன‌ப் புன்ன‌கையால் எளிதாக‌க் க‌ட‌ந்துவிட‌முடியுமா என்ப‌தும் கேள்விக்குரிய‌து.  எனெனில் நாம் சாதி குறித்த‌ க‌தையாட‌ல்க‌ளில் மிக‌த் தீவிர‌மாக‌வே எதிர்வினையாற்ற‌ வேண்டியிருக்கிற‌து.

ஏறத்தாழ 40 வருடங்களுக்கு மேலாய் யாழ் சூழலில் இருந்து எழுதிக்கொண்டிருக்கும் சாந்தனுக்கு உரிய அங்கீகாரம் தமிழ்ச்சூழலில் கொடுக்கப்படவில்லையெனவே எண்ணத்தோன்றுகின்றது. சனங்களுக்கான கதையை அந்தச் சனங்களில் ஒருவராய் போர்ச்சூழலுக்குள் நின்று எழுதிக்கொண்டிருப்பவர்களை நமது தமிழ் கூறும் நல்லுலகம் அதிகம் கவனித்ததாய் வரலாறுகளும் இல்லை என்பதும் உண்மையே. ஈழத்தின் அரசியல் வரலாற்றை -புனைவுக‌ளினூடாக‌- அறிந்துகொள்ள விரும்புவர்கள், 1970களிலிருந்து 2000 வரையான‌ சாந்த‌னின் கதைகளை வாசித்தால் தமிழர்கள் எவ்வாறு வரலாற்றில் நுட்ப‌மாய் திட்ட‌மிட்டு ஒடுக்கப்பட்டு வந்திருக்கின்றார்கள் என்பதையறிய முடியும். அதேபோன்று தமிழர்களின் அரசியல் வரலாற்றில் விடப்பட்ட தவறுகளும், இழைக்கப்பட்ட துரோகங்களும் கூட சாந்தனின் கதைகள் பூடகமாய் பதிவுசெய்வதையும் நாம் கவனிக்கவேண்டும். சாந்தனைப் போன்ற பல்லின மொழி மக்களோடு பரிட்சமுடைய படைப்பாளிகளின் குரல்களை இலங்கை அதிகார வர்க்கங்களோ, தமிழ்ப்போராட்ட இயக்கங்களோ அதிகம் செவிமடுத்திருந்தால் நாம் இன்றைய பேரழிவுக்கு வந்திருக்கமாட்டோமோ என்ற ஆதங்கம் எழுவதைத் த‌விர்க்க‌வும் முடிவதுமில்லை. சாந்தனின் கதைகள், பிறரை நேசிப்பதற்கான விசாலமனதையும், எதிர்க்கருத்தாய் இருந்தாலும் செவிகளைத் திறந்து வைத்துக் கேட்பதையும்தான் வேண்டி நிற்கின்ற‌ன‌ போல‌த் தெரிகின்ற‌து.

இக்க‌ட்டுரைக்காய் மேல‌திக‌மாய் உத‌விய‌வை:
காலங்கள் (1984)
ஒரே ஒரு ஊரிலே (1975)

விக்கிபீடியா (சாந்த‌னின் புகைப்ப‌ட‌ம்)

(கூர் 2010ம் ஆண்டு தொகுப்பிற்காய் எழுதிய‌து)

இரண்டு உலகங்களுக்கு இடையில்

Sunday, January 03, 2010

-விமுத்தி ஜெயசேகராவின் In Between Two Worldsஐ முன்வைத்து-

1.
திரைப்ப‌ட‌ங்க‌ள் என்ப‌து பொழுதுபோக்கிற்கான‌து மட்டுமே என்றொரு விம்ப‌ம் த‌மிழ்ச்சூழ‌லில் பொதுப்புத்தியில் ப‌திந்திருக்கின்ற‌து. அவ்வாறான‌ சூழ‌லிலிருந்து வ‌ரும் நெறியாள்கையாள‌ர்க‌ளும் பொதுப்புத்தியைத் த‌விர்த்து புதிய‌ க‌ள‌ங்க‌ளில் த‌மிழ்த்திரைப‌ட‌ச்சூழ‌லை ந‌க‌ர்த்துவ‌த‌ற்கு அக்க‌றை கொள்வ‌துமில்லை.. ஆக‌வேதான், வ‌ழ‌மைக்கு மாறாய் ஆடல், பாட‌ல், ச‌ண்டைக்காட்சிக‌ள் குறைவாக‌ வ‌ரும் திரைப்ப‌ட‌ங்க‌ளைக் கொண்டாட‌வேண்டிய‌ அவ‌ல‌ச்சூழ‌ல் த‌மிழில் இருக்கிற‌து. எனினும் இவ‌ற்றுக்கு அப்பால் இவ்வாறான‌ திரைப்ப‌ட‌ங்க‌ளில் கூட‌ த‌லித்துக்க‌ள், பெண்க‌ள், அர‌வாணிக‌ள் போன்ற‌ விளிம்புநிலை ம‌னித‌ர்கள் ப‌ற்றிய‌ சித்த‌ரிப்புக்க‌ள் மிக‌ மோச‌மாக‌ நுண்ணிய‌த‌ள‌த்தில் இய‌ங்கிக்கொண்டிருப்ப‌தை நாம் அவ‌தானிக்க‌ முடியும்.த‌மிழ்ச்சூழ‌லோடு ஒப்பிடும்போது மிக‌ச்சிறிய‌ பார்வையாள‌ர் வ‌ட்ட‌த்தையும் மோச‌மான‌ த‌ணிக்கைச் சூழ‌லையும் கொண்ட‌ சிங்க‌ள‌த் திரைப்ப‌ட‌ச்சூழ‌லிலிருந்து அற்புத‌மான‌ திரைப்ப‌ட‌ங்க‌ள் ப‌ல்வேறு பின்புல‌ங்க‌ளை முன்வைத்து வ‌ர‌த்தொடங்கிவிட்ட‌ன‌. அதிகார‌த்தின் அமைப்புக‌ளுக்கு அறைகூவ‌ல் விடுத்தப‌டி ப‌ல இளைய‌ நெறியாள்கையாள‌ர்க‌ள் த‌ம‌க்கான‌ -முக்கிய‌மாய் போருக்கும்/அர‌ச அதிகார‌ங்க‌ளுக்கும் எதிரான‌ க‌தைக‌ளைத் துணிவுட‌ன்- திரைப்ப‌ட‌மாக்க‌த் தொட‌ங்கிவிட்ட‌ன‌ர். இன்று ப‌ல்வேறு நாடுக‌ளில் நிக‌ழும் திரைப்ப‌ட‌ விழாக்க‌ளில் சிங்க‌ள‌ப்ப‌ட‌ங்க‌ள் திரையிட‌த் தேர்ந்தெடுக்க‌ப்ப‌டுவ‌தும், விருதுக‌ளைப் பெறுவ‌தும் புதிய‌ க‌ள‌ங்க‌ளைப் ப‌ரீட்சித்துப்பார்த்த‌ சிங்க‌ள‌த்திரைப்ப‌ட‌ச்சூழ‌லிற்குக் கிடைத்த‌ அங்கீகார‌மென‌ எடுத்துக்கொள்ள‌லாம்.

அவ்வாறான‌ சிங்க‌ள‌ நெறியாள்கையாளர்களில் ஒருவ‌ராக‌, த‌ன‌து இருபத்தேழாவது வ‌ய‌தில் The Forsaken Land திரைப்ப‌ட‌த்தை இய‌க்கிய‌த‌ன் மூல‌ம் பல‌ர‌து க‌வ‌ன‌ததைத் திருப்பிய‌ ஒருவ‌ர் விமுக்தி ஜெய‌சேக‌ரா. இல‌ங்கையின் தென்ப‌குதியில் பிற‌ந்த‌ விமுக்தி திரைப்ப‌ட‌த்துறை சார்ந்த‌ க‌ல்வியை இந்தியாவில் புனேயிலும், பின்ன‌ர் மேற்படிப்பை பிரான்சிலும் மேற்கொண்ட‌வ‌ர். இப்போது மீண்டும் -நான்கு வ‌ருட‌ இடைவெளியின்பின்- த‌ன‌து இர‌ண்டாவ‌து ப‌ட‌மான‌ Between Two Worlds என்ற‌ ப‌ட‌த்தோடு வ‌ந்திருக்கின்றார்.. ஏற்க‌ன‌வே வெனிஸ் திரைப்ப‌ட‌ விழாவில் திரையிட‌த்தெரிவான‌ இத்திரைப்ப‌ட‌ம் இமமாத‌ம் ரொற‌ண்டோவில் நிக‌ழ்ந்த‌ ச‌ர்வ‌தேச‌த் திரைப்ப‌ட‌விழாவிலும் தெரிவு செய்ய‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. .மிக‌க் குறைவான‌ உரையாட‌ல்க‌ளையும், நிறைய‌ப் ப‌டிம‌ங்க‌ளாலான‌ கவித்துவ‌க்காட்சிக‌ளையும் கொண்ட‌ விமுத்தியின் ப‌ட‌ங்க‌ளில் சாதார‌ண‌மாய் ஒருவ‌ரால் அவ்வ‌ள‌வு எளிதில் நுழைந்துவிட‌முடியாது..மிக‌ மெதுவாக‌வும், நேர்கோட்டுத்த‌ன்மை அற்ற‌ காட்சிக‌ள் ஒன்றுக்கு ஒன்று தொட‌ர்பில்லாது அடிக்க‌டி மாறிக்கொண்டிருக்கும் இத்திரைப்ப‌ட‌ங்களைப் பார்க்க‌த் த‌ன்னைத் த‌க‌வ‌மைத்துக்கொள்ளாத‌ ஒரு பார்வையாள‌ரை இத்திரைப்ப‌ட‌ங்கள் த‌ம்மிலிருந்து வெளியே எற்றி எறிந்துவிட‌வே செய்யும். Between Two Worlds என்கின்ற இத்திரைப்ப‌ட‌ம் தொட‌ங்குவ‌த‌ற்கு முன், ஒரு சிறு அறிமுக‌த்தை விமுக்தி த‌ரும்போது, "ஏற்க‌ன‌வே இப்ப‌ட‌த்தைப் பார்த்த‌ ப‌ல‌ர் விள‌ங்குவ‌த‌ற்குக் க‌டினமான‌ ப‌ட‌ம் என்றே கூறியிருக்கின்றார்க‌ள். இது ப‌ல‌ puzzleக‌ளைக் கொண்ட‌ ஒரு திரைப்ப‌ட‌ம். ப‌ட‌ம் முடியும்போது நீங்கள் puzzleளைப் பொருத்தி உங்க‌ளுக்கான‌ ஒரு க‌தையை உருவாக்க‌ முடியும்" என்றிருந்தார். உண்மையில் இந்த‌ப்ப‌ட‌ம் பார்வையாள‌ருக்குரிய‌ திரைப்ப‌ட‌ம்; .puzzleக‌ளை மாற்றி மாற்றி அடுக்குவ‌த‌ன் மூல‌ம் பார்ப்ப‌வ‌ர் த‌ன‌க்கான‌ ஒரு க‌தையை உருவாக்க‌ முடியும். ஒருவ‌ர் உருவாக்கும் க‌தையும், ப‌ட‌த்தைப் பார்க்கும் ம‌ற்றொருவ‌ர் உருவாக்கும் க‌தையும் ஒன்றாய் இருக்கவேண்டும் என்ற‌ எந்த அவ‌சிய‌மும் இல்லை. இதை இன்னொருவித‌மாய் இது த‌ன்ன‌ள‌வில் பார்ப்ப‌வ‌ரின் சூழ‌லுக்கும், அனுப‌வ‌ங்க‌ளுக்கும் ஏற்ப‌ க‌ண‌ந்தோறும் மாறிக்கொள்ளும் பிர‌தியென‌ எடுத்துக்கொள்ள‌லாம். ஆனால் ஒற்றைத்த‌ன்மையிலும், நேர்கோட்டுக்க‌தைச் சொல்ல‌லிலும் ஊறியிருக்கும் ந‌ம்மில் எத்த‌னைபேர் இத்திரைப்ப‌ட‌ம் த‌ரும் சுத‌ந்திர‌த்தை அனுப‌விக்க‌த் த‌யாராக‌ இருக்கின்றோம்? கட்டற்ற சுத‌ந்திர‌ம் என்ப‌து சில‌ருக்குப் பிடிக்காதுபோல‌ இத்திரைப்ப‌ட‌ம் எடுக்க‌ப்ப‌ட்ட‌வித‌மும் ப‌ல‌ருக்குப் பிடிக்காது போக‌வும் கூடும்.

2
ஒருவ‌ன் ம‌லையுச்சியிலிருந்து க‌ட‌லுக்குள் வீழ்வ‌துட‌ன் ஆர‌ம்பிக்கும் முத‌ற்காட்சி, அவ‌ன் திரும்ப‌வும் ம‌லை மீதேறி ந‌க‌ருக்குள் நுழையும்போது ந‌க‌ர் க‌ல‌வ‌ர‌த்தின் அந்த‌ர‌த்தில் மித‌க்க‌த் தொட‌ங்கியிருக்கின்ற‌து. தெருவில் போகின்ற‌வ‌ர்க‌ளை அடித்துத் துவைத்து க‌டைக‌ளையெல்லாம் நொறுக்கிய‌ப‌டி குழுக்குழுவாய் இளைஞ‌ர்க‌ள் கூக்குர‌லிட்ட‌ப‌டி இருக்கின்றார்க‌ள். க‌ல‌வ‌ர‌த்தின் ந‌டுவில் ப‌யந்து ந‌டுந‌டுங்கிய‌ப‌டி ஒரு பெண்ணிருப்ப‌தைப் பார்த்து, க‌ட‌லில் விழுந்து ந‌க‌ர் மீண்ட‌ இளைஞ‌ன் அவ்ளைக் காப்பாற்றுகின்றான். சீன‌ச்சாய‌லுடைய‌ பெண்ணை இவ‌ன் (திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்திற்கு பெயர் எதுவும் இருக்காததால் அந்தப் பாத்திரத்தை 'இவன்' எனக்குறிப்பிடுகின்றேன்) இன்னொருத்த‌னின் வானில்(Van) ஏற்றிய‌ப‌டி நீண்ட‌வீதியினூடாக‌ கிராம‌ப்புற‌த்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றார்க‌ள். 'உன்னை வ‌ன்புண‌ர்ந்த‌வ‌ர் யாரென்று தெரியுமா' என அந்த‌ப் பெண்ணிட‌ம் கேட்கும்போது, 'உன்னைப் போன்ற‌ சாய‌லுடைய‌ ஒருவ‌ன்' என்கிறாள் அந்த‌ப்பெண். வானிற்குள் வைத்து -காப்பாற்றிப்போகும்- பெண்ணை வ‌ன்புண‌ர‌ இவ‌ன் துடிக்கின்ற‌போது, வானை ஓட்டிக்கொண்டு வ‌ருகின்ற‌வ‌ர் அதற்கு இடைஞ்ச‌லாய் இருப்ப‌து புரிகின்ற‌து. இப்ப‌ய‌ண‌த்தின்போது சீனாவில் ஒரு நகரில் ப‌ல‌ தொலைத்தொட‌ர்புச்சாத‌ன‌ங்க‌ளைத் த‌க‌ர்த்த‌ப‌டி போராளிக‌ள் முன்னேறிக்கொண்டிருக்கின்றார்க‌ள் என்றொரு செய்தி -வானின் வைத்து கேட்க‌ப்ப‌டும் வானொலியில்- சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து (ம‌றைபொருளாய் இல‌ங்கையிலிருக்கும் போராளிக‌ள் என்றும் அர்த்த‌ம் கொள்ள‌லாம்). ப‌ய‌ண‌த்தின் ந‌டுவில், இவ்வாறு காம‌த்துட‌ன் பித்தேறியிருக்கும் இவ‌னை அடித்துப்போட்டுவிட்டு அந்த‌ப்பெண்ணும், சார‌தியும் வானில் ஏறித் த‌ப்பிப்போகின்றார்க‌ள்.

இவ‌ன் மீண்டும் த‌ன‌து கிராம‌த்திற்குப் ப‌ஸ்சில் போகின்றான். ஊரிலிருப்ப‌வ‌ர்க‌ள் 'ஊருக்கு ஏன் இவ்வ‌ளவு விரைவில் திரும்பி வ‌ந்தாய்?' என்று கேட்டு, 'தெருவில் திரியாதே அவ‌ர்க‌ள் சுட்டுப்போட்டுவிடுவார்க‌ள், காட்டுப் பாதையால் போய் எங்கையாவ‌து ஒளிந்துகொள்' என்கின்றார்க‌ள். அவ‌னைப் போன்ற‌ ப‌ல‌ இளைஞ‌ர்க‌ள் அதிகார‌ அமைப்பின் வ‌ன்முறைக்குப் ப‌ய‌ந்து ஊரைவிட்டு ஒதுங்கி காட்டுப்ப‌க்க‌மாய் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்க‌ள் என்ப‌தை ஒரு சிறுவ‌னின் துணைகொண்டு இவ‌ன் அறிகின்றான். .தானும் அவ‌ர்க‌ளோடு ப‌துங்கிவாழ‌ இவ‌ன் த‌யாராகின்ற‌போது, தான் வ‌ந்த‌ வான் குள‌மொன்றில் க‌விழ்வ‌தைக் காண்கின்றான். இவ‌ன் விரைவாக‌ ஓடிப்போய் குள‌த்தைப் பார்க்கின்ற‌போது அங்கே வான் விழுந்த‌த‌ற்கான‌ எந்த‌ அடையாள‌மும் இல்லை.. குள‌த்தினுள் குளித்துக்கொண்டிருக்கும் ஒரு முதிய‌வ‌ரிட‌ம் இது குறித்துக் கேட்கும்போது, 'வான் எதுவும் குள‌த்தினுள் இப்போது விழ‌வில்லை. ஆனால் முன்னோர் கால‌த்தில் இப்ப‌டியோரு ச‌ம்ப‌வ‌ம் நிக‌ழ்ந்திருக்கின்ற‌து. க‌ட‌ந்த‌கால‌த்தில் நிக‌ழ்ந்த‌து எதுவும் இனி நிக‌ழாது என்றும் அறுதியிட்டுக் கூற‌முடியாது' என்கிறார். இப்போது அடுத்த‌ காட்சி மாறுகின்ற‌து.

3.
ஒரு முதியவ‌ரும் இளைஞ‌னும் ந‌ல்ல‌ வெறியில் க‌ட‌லையொட்டிய‌ குன்றொன்றில் அம‌ர்ந்திருக்கின்றார்க‌ள். முதிய‌வ‌ர் க‌தையொன்றைச் சொல்ல‌ப்போவ‌தாய்க் கூறுகின்றார். ஆனால் க‌தையின் ந‌டுவில் எதுவும் கூறி க‌தையை வேறு வித‌மாக‌ மாற்றக்கூடாது என்று இளைஞ‌னை எச்ச‌ரிக்கின்றார். க‌தை: ஒரு நாட்டின் அர‌ச‌னுக்கு இர‌ண்டு ம‌க‌ன்க‌ளும் ஒரு ம‌க‌ளும் இருக்கின்றார்க‌ள். எதிர்கால‌த்தில் இந்த‌ அர‌ச‌னின் ம‌க‌ள் திரும‌ண‌ஞ்செய்து அவளுக்குப் பிற‌க்கின்ற‌ ஆண் குழ‌ந்தை, அவ‌னின் இரு மாம‌ன்க‌ளையும் கொன்றுவிட்டு அரசாட்சியைக் கைப்ப‌ற்றுவான் என்று சோதிட‌ர்க‌ள் எச்ச‌ரிக்கின்றார்க‌ள். இத‌ன் நிமித்த‌ம், எவ‌ரையும் திரும‌ண‌ஞ்செய்து குழ‌ந்தை பெறாதிருக்கும் நோக்கில், அரச‌னின் ம‌க‌ள் ஒரு தீவின் ந‌டுவில் சிறைவைக்க‌ப்ப‌டுகின்றாள். ஆனால் ஏதோவொரு வ‌கையில் அவ‌ள் கர்ப்ப‌ம‌டைந்து ஒரு ஆண் குழ‌ந்தையைப் பெற்று விடுகின்றாள். வ‌ள‌ர்ந்துவ‌ரும் அந்த‌ இள‌வ‌ர‌ச‌னைக் கொல்ல‌ இர‌ண்டு மாம‌ன்க‌ளும் முய‌ல்கின்றார்க‌ள். இறுதியில் அந்த‌ இள‌வ‌ர‌ச‌ன் கொல்ல‌ப்ப‌ட்ட‌ விதம் ப‌ற்றிப் ப‌ல‌ க‌தைக‌ள் கூற‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஒன்று: இள‌வ‌ரச‌ன் குறித்த‌ ச‌ரியான‌ அடையாள‌ந்தெரியாத‌தால், அந்நாட்டிலுள்ள‌ அவ‌ன் வ‌ய‌தொத்த‌ அனைத்து இளைஞ‌ர்க‌ளையும் கொலைசெய்ய‌ அவ‌ன‌து மாம‌ன்மார்க‌ள் க‌ட்ட‌ளையிட்டார்க‌ள் என்று க‌தை சொன்ன‌ முதிய‌வ‌ர் கூறுகின்றார். அதைக் க‌தை கேட்ட‌ இளைஞ‌ன் ம‌றுத்து, அந்த‌ இள‌வ‌ர‌ச‌ன் த‌ன‌து தோழ‌ர்க‌ளுட‌ன் நீராடிக்கொண்டிருந்த‌போது அவ‌ர்க‌ள் சுற்றிவ‌ளைக்க‌ப்ப‌ட்டு கொல்லப்படுகின்றார்கள், எனினும், இள‌வ‌ர‌ச‌ன் தப்பிப்போய் ஒரு ம‌ர‌ப்பொந்தில் போய் ஒளிந்துகொள்கின்றான் என‌வும், அவ‌ன் இன்ன‌மும் அந்த‌ ம‌ர‌ப்பொந்தில் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கின்றான் என்று ந‌ம்ப‌ப்ப‌டுகின்ற‌து என்றும் க‌தையை வேறுவித‌மாய் முடிக்கின்றான்.

4.
இதற்கு அடுத்து வரும் காட்சியில், . காட்டுக்குள் த‌ன் வ‌யதொத்த‌ -ப‌துங்கியிருக்கும்- இளைஞ‌ர்க‌ளைத் தேடும் இவ‌ன், த‌ன‌து அண்ணியின் வீட்டுக்குள் வ‌ருகின்றான். க‌ண்ணில் காய‌ம் ஏற்ப‌ட்டு ஒரு விழி திற‌க்க‌முடியாத‌ இவ‌னுக்கு அவ‌ர் முலைப்பால் விட்டு காய‌ம் ஆற்றுகின்றார். இடையில் இவ‌னுக்கு அண்ணி மீது உட‌ல்சார்ந்த‌ ஈர்ப்பு வ‌ர‌ அண்ணி அவ‌னை உத‌றித்த‌ள்ளுகின்றார். 'என‌து ராஸ்க‌ல் அண்ண‌ன் இனியும் திரும்பி வ‌ருவான்?' என்று நீங்க‌ள் நினைக்கின்றீர்க‌ளா என்று வினாவுகிறான். பின்னொரு பொழுதில் அண்ணி இவ‌னோடு ப‌ற்றைக‌ளுக்கிடையில் கூடுகின்றார். மீண்டும் இவ‌ன் சிறுவ‌னின் துணையுட‌ன் ஒளிந்திருக்கும் இளைஞ‌ர்க‌ளைத் தேடிப் போகின்றான். சிறுவ‌ன் ஒரு ம‌ர‌ப்பொந்தைக் காட்டுகின்றான். அருகே போகும்போது வெடிச்ச‌த்த‌ங்க‌ள் கேட்கின்ற‌ன‌. இவ‌ன் சிறுவ‌னின் ம‌ன்றாட்ட‌த்தையும் அல‌ட்சிய‌ம் செய்து ம‌ர‌த்த‌டிக்குப் போகின்றான். அந்த‌ ம‌ர‌ம் இள‌வ‌ர‌ச‌ன் தான் கொல்ல‌ப்ப‌டுவ‌திலிருந்து த‌ப்ப‌ ஒளிந்து கொள்வ‌தாய்த் தொம‌க்க‌தையில் குறிப்பிட‌ப்ப‌டுகின்ற‌ ம‌ர‌ம்.

இத‌ற்கிடையில் கிராம‌ம் எங்கும் கைக‌ள் ம‌ட்டும் வெளியே தெரியும் உட‌ல‌ங்க‌ள் தென்ப‌ட‌த்தொட‌ங்குகின்ற‌ன‌. கிராம‌த்துக் குழ‌ந்தைக‌ளும், பெண்க‌ளும் பீதியுட‌ன் உறைந்த‌ நிலையில் இவ‌ற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கின்ற‌ன‌ர். நாய்க‌ள் மாடுக‌ள் எல்லாம் கூட‌வே சுட‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஒரு முழு மாட்டைக் கோர‌மாய் கிழித்துண்ணும் க‌ரிய‌ நாய் சூழ‌லின் கொடூர‌த்தை ந‌ன்கு புல‌ப்ப‌டுத்துகின்ற‌து.. கிராம‌த்தில் எல்லா இய‌ல்ப‌ற்றுப் போய்க்கொண்டிருக்கின்ற‌ன‌. இளைஞ‌ர்க‌ள் காணாம‌ற்போய்க்கொண்டிருக்கின்ற‌ க‌தையை வெளியே சொல்ல‌முடியாத‌ க‌ன‌த்த‌ சோக‌த்தை த‌ங்க‌ள் தொண்டைக்குழிக‌ளுக்குள் அட‌க்கிய‌ப‌டி கிராம‌த்த‌வ‌ர்க‌ள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்க‌ள்.அதேவேளை கிராம‌த்த‌வ‌ர்க‌ளின் நீர்த்தேவைக‌ளைப் பூர்த்திசெய்யும் குள‌மும் ந‌ஞ்சூட்ட‌ப்ப‌டுகின்ற‌து. பதுங்கியிருக்கும் இளைஞ‌ர்க‌ள் வெளியே வர, இவனும் அந்த இளைஞ‌ர்க‌ளும் ஒன்றுசேர்ந்து அக்குள‌த்தைச் சுத்திக‌ரிக்கும் ப‌ணியில் இணைந்துகொள்கின்றார்கள். ஒரு இயக்கமாய்ச் சேர்ந்து. குள‌த்தைச் சுத்திக‌ரித்து வெற்றியைக் கொண்டாடும்போது குதிரைக‌ளில் ஆயுத‌ங்க‌ளுட‌ன் வ‌ருப‌வ‌ர்க‌ள் கூடி நிற்கும் இளைஞ‌ர்க‌ளைத் அடித்தும் சுட்டும் கொல்ல‌த்தொட‌ங்குகின்றார்க‌ள். எல்லோரும் கொல்ல‌ப்ப‌ட‌ இவ‌ன் ம‌ட்டும் த‌ப்பிப்போய் ம‌ர‌ப்பொந்தில் ஒளிந்துகொள்கின்றான். காணாமற்போன‌ இவ‌னைத் தேடி சிறுவ‌னும், இவ‌ன‌து அண்ணியும் அலைய‌த்தொட‌ங்குவ‌துட‌ன் ப‌ட‌ம் முடிவுபெறுகின்ற‌து.

காட்சிக‌ளை அப்ப‌டியே ப‌திவாக்குவ‌து என்றால் இப்ப‌டித்தான் இத்திரைப்ப‌ட‌த்தின் க‌தையிருக்கும். விமுத்தி குறிப்பிட்ட‌துபோல‌ பார்ப்ப‌வ‌ர் இந்த‌ puzzleக‌ளை எப்ப‌டி அடுக்கித் த‌ன‌க்கான‌ ப‌ட‌த்தை உருவாக்குகின்றார் என்ப‌தில்தான் ப‌ட‌த்தின் முழுமை த‌ங்கிருக்கிற‌து. திரையிட‌லின் பின் ப‌ட‌ம் குறித்த‌ கேள்விக‌ளுக்கு, 'இந்த‌ப்ப‌ட‌த்தின் மூல‌ம் எந்த‌க் க‌தையைச் சொல்ல‌ விரும்புகின்றீர்க‌ள்?' என்று பார்வையாள‌ரிடையே இருந்து வினாவ‌ப்ப‌ட்ட‌போது, 'நீங்க‌ள் யோசியுங்க‌ள் இப்போதில்லாவிட்டாலும் இன்னும் ஒருவார‌த்தில் உங்க‌ளுக்கான‌ ஒரு க‌தை உருவாகியிருக்கும்' என்று விமுத்தி ப‌தில‌ளித்திருந்தார்.. 'சில‌வேளைக‌ளில் இந்த‌ப்ப‌ட‌த்தை த‌ங்க‌ளின் ஜ‌தீக‌க் க‌தைக‌ளோடு இணைத்துப் பார்த்து இல‌ங்கைய‌ர்க‌ளால் விள‌ங்கிக்கொள்ள‌ முடியும், அத‌னாற்றான் எங்க‌ளால் விள‌ங்குவ‌த‌ற்குக் க‌டின‌மாய் இருக்கிற‌தா?' என்றொருவ‌ர் கேள்வி எழுப்பிய‌போது, 'இதில் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌ க‌தை ம‌காவ‌ம்ச‌த்தில் வ‌ருகின‌ற‌து. ஆனால் ம‌காவ‌ம்ச‌த்தை வாசித்தால்தான் இந்த‌ப் ப‌ட‌ம் விள‌ங்கும் என்ப‌த‌ற்கு எந்த‌ அவ‌சிய‌மும் இல்லை' என்றும் விமுக்தி க‌வ‌னப்ப‌டுத்தியிருந்தார்.. ஒரு நேர்கோட்டு முறையில் சொல்லும் வ‌ர்த்த‌க‌ ஹொலிவூட் ப‌ட‌ங்க‌ளுக்கு தான் எதிரான‌வ‌ன் என்ப‌தை விமுக்தி ப‌திவு செய்த‌போது, அப்ப‌டியாயின் இத்திரைப்ப‌ட‌த்திற்கான‌ பார்வையாள‌ர்க‌ள் யாரென‌ வினாவ‌ப்ப‌ட்ட‌போது, 'அது குறித்து நான் அக்க‌றைகொள்ளவில்லை. என்ன‌ளவில் எத்த‌கைய‌ ச‌ம‌ர‌ச‌த்திற்கும் த‌யாரில்லை. ஆக‌க்குறைந்து அய்ந்துபேர் பார்த்தாலே போதுமான‌து' என்று விமுத்தி தெளிவாக‌வே கூறியிருந்தார்.

5.
இனி, என‌க்கு விள‌ங்கிய‌மாதிரி உருவாக்கிக்கொண்ட‌ க‌தை: இர‌ண்டுவித்தியாச‌மான‌ உல‌கு என்ப‌தை விமுக்தி ய‌தார்த்த‌திற்கும் புனைவுக்குமான‌ உல‌க‌ம் என்று குறிப்பிட்டிருந்தார். நான் இன்னும் எளிதாக்கி இது க‌ன‌வுக்கும் ந‌ன‌வுக்கும் இடையிலான‌ உல‌க‌ம் என்று பொருள் கொள்கின்றேன். உண்மையில் இந்த‌ க‌ன‌வு X ந‌ன‌வு என்கின்ற‌ இர‌ண்டு உல‌கை அவ்வ‌ளவு எளிதாக‌ எவ‌ராலும் வித்தியாச‌ப்ப‌டுத்த‌ முடியாது. நாம் ய‌தார்த்த்தில் இருக்கும்போதே ச‌ட்டென்று க‌ன‌வுல‌க‌த்திற்குப் போய்விட‌முடியும். இங்கே த‌ன்னை த‌டுத்துநிறுத்த‌ முய‌ல்கின்ற‌ சிறுவ‌னை இவ‌ன் த‌ரையில் அடித்துக்கொள்வ‌தும், த‌ன‌க்கு புண‌ர‌ முத‌லில் ச‌ம்ம‌த‌ம் த‌ராத‌ அண்ணியை க‌ல்லொன்றால் ச‌த‌க் ச‌த‌க் என்று இர‌த்த‌ம் பீறிட இவன் கொல்வ‌துமான‌ காட்சி யதார்த்த‌தில் நிக‌ழ்வ‌துபோல‌க் காட்ட‌ப்ப‌ட்டிருந்தாலும் இவைய‌னைத்தும் இவ‌னின் உள்ம‌ன‌தில் உருளுகின்ற‌ உல‌கில் வ‌ருப‌வையே. எனெனில் இறுதிக்காட்சிக‌ளில் இவ‌ன் பொந்தில் இருக்கின்ற‌போது தேடி உயிருட‌ன் மீள‌ வ‌ருப‌வ‌ர்க‌ள் இச்சிறுவ‌னும் அண்ணியுமே ஆகும். விமுத்தியிற்கு ப‌டிம‌ங்க‌ளைக் காட்சிப்ப‌டுத்துவ‌தில் பெருவிருப்ப‌ம் உள்ள‌தென்ப‌தால் எதையும் நேர‌டியாக‌ச் சொல்வ‌தற்காய் அதிக‌ நேர‌ம் செல‌வ்ழிப்ப‌தில்லை. அவ‌ர‌து முத‌ற்ப‌டமான‌ Forsaken Land லிலேயே, போரைப் ப‌ற்றிச் சொல்ல‌ப்பட்டாலும் போரின் நேர‌டி அழிவுக‌ளை எந்த‌வொரு காட்சியிலும் காட்சிப்ப‌டுத்தியிருக்க‌ மாட்டார்.. அதுபோல‌ அந்த‌ப்ப‌ட‌த்தில் அடிக்க‌டி ஒரு ப‌டிம‌மாய் வ‌ரும் க‌வ‌ச வாக‌ன‌மும் (ராங்கியும்) அது குறிப்பார்க்க‌த் திருப்புகின்ற‌ நீண்ட‌ குழாயும், 'ச‌மாதான‌ கால‌ம்' என்று சொல்ல‌ப்ப‌டுகின்ற‌ கால‌த்திலும் போர் வாச‌ற்ப‌டியில் நின்று, எப்போதோ மீண்டும் நிக‌ழ‌த் த‌யாராகின்ற‌தென‌ நாம் எடுத்துக்கொள்ள‌லாம். இந்த‌ப் ப‌ட‌த்திலும் அவ்வாறான‌ ப‌டிம‌ங்க‌ளையே விமுக்தி ப‌ய‌ன்ப‌டுத்தியிருப்பார். உண்மையில் இந்த‌ப்ப‌ட‌த்தில் வ‌ரும் இவ‌ன் ஒரு முன்னோர் கால‌த்தில் நிக‌ழ்வ‌தாய்க் கூற‌ப்ப‌டுகின்ற‌ க‌தையில் வ‌ருகின்ற‌ இள‌வ‌ர‌ச‌னின் இன்னொரு ப‌டிம‌மே. இங்கே வ‌ரும் அண்ணியும் கூட‌. அவர் மூன்றாம் முறையாக‌ இவ‌ன‌து காய‌த்தை ஆற்றுவ‌த‌ற்காய் த‌ன‌து முலைப்பால் கொடுக்கும்போது, இவ‌ன் கேட்கின்றான் எப்ப‌டி 'உங்க‌ளுக்குப் பிள்ளையில்லாம‌லே முலை சுர‌க்கிற‌து?' என்று. இதை நாம் அந்த‌ ஜ‌தீக‌க் க‌தையில் தீவின் ந‌டுவில் சிறைவைக்க‌ப்ப‌ட்ட‌ இளவ‌ர‌சி எவ‌ருமேயின்றி எப்ப‌டி ஒரு ஆண் குழ‌ந்தைக்குத் தாயாகின்றாள் என்ப‌தோடு பொருத்திப் பார்க்க‌லாம். அதே மாதிரி இள‌வ‌ர‌ச‌னின் தோழ‌ர்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்ட‌தைப் போல‌ நிக‌ழ்கால‌த்தில் இவ‌ன‌து ஊரைச் சேர்ந்த இளைஞ‌ர்க‌ள் கொல்ல‌ப்ப‌டுகின்றார்க‌ள். ஒரு கிள‌ர்ச்சி/க‌ல‌க‌ம் அழிக்க‌ப்ப‌ட்டுவிட்ட‌து என்று அதிகார‌த்திலிருப்ப‌வ‌ர்க‌ள் கொண்டாடுகின்ற‌போதும், இவ‌ன் பொந்தில் இருப்ப‌து என்ப‌து, போராட்ட‌த்திற்கான‌ கார‌ணி இன்ன‌மும் அழிந்துவிட‌வில்லை என்ப‌தைக் குறியீடாக‌க் கொள்ள‌லாம். இந்த‌த் திரைப்ப‌ட‌த்தை ஈழ‌த்தில் ந‌டைபெற்ற‌ இர‌ண்டுவித‌மான‌ உள்நாட்டுப் போர்க‌ளோடு ஒப்பிட்டுப் பார்க்க‌லாம்.. திரைக்க‌தை மேலோட்ட‌மாய் த‌னியொருவ‌னின் க‌தையைச் சொல்வ‌தாக‌ இருந்தாலும், அது ஒரு போராடிய ச‌மூக‌த்தின் க‌தையைத்தான் சொல்கின்ற‌து என்ற‌ நுட்பமான பார்வையை நாம் வ‌ந்தடைய‌ முடியும். ஈழ‌த்தில் ந‌டைபெற்று முடிந்த‌ த‌மிழரின் ஆயுத‌ப்போராட்ட‌ம், சிங்க‌ள இளைஞ‌ர்க‌ளின் 'சே குவேரா' (ஜேவிபி) கிள‌ர்ச்சிக‌ளுட‌ன் நாம் இணைத்துப் பார்க்கலாம். என்னைப் பொருத்த‌வ‌ரை அதிக‌மாய்ப் பொருந்திப் போவ‌து ஜேவிபியின் கிள‌ர்ச்சிக்கால‌ம் என்றே சொல்வேன். பிரேமதாசா ஜ‌னாதிப‌தியாக‌ இருந்த‌போது ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ சிங்க‌ள இளைஞ‌ர்க‌ள் மிக‌ மிலேச்ச‌த்த‌ன‌மாய் எந்த‌வித‌ சாட்சிக‌ளோ விசார‌ணைக‌ளோ இன்றி கொல்ல‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள். இல‌ங்கையின் தென்பாகம் எங்கும் ச‌ட‌லங்க‌ள் க‌ட‌லில் மித‌ந்த‌தாக‌வும் அரைகுறையாய் புதைக்க‌ப்ப‌ட்ட‌தாக‌வும் பின்வ‌ந்த‌ க‌தைக‌ள் சாட்சிய‌ம் கூறியிருக்கின்ற‌ன‌. இன்றைய‌ த‌மிழின‌ அழிப்பில் எவ்வாறு இந்தியாவின் கொடூர‌க்க‌ர‌ங்க‌ள் இருந்த‌ன‌வோ அதேபோல் சிங்க‌ள இளைஞ‌ர்க‌ளின் கிள‌ர்ச்சிக்கால‌த்தை ஒடுக்க‌வும் இந்தியாவின் இர‌த்த‌க்க‌ர‌ங்க‌ள் நீண்டிருந்த‌ன‌ என்ப‌தை நாம‌னைவ‌ரும் அறிவோம்.

மானுட‌ விடுத‌லைக்கான‌ கல‌க‌ங்க‌ள் எவ்வ‌ளவு கொடூர‌மாய் அதிகார‌த்தின் க‌ர‌ங்க‌ளால் ஒடுக்க‌ப்ப‌ட்டாலும் அவை என்றேனும் ஒருகால‌த்தில் மீண்டும் திரும்பி வ‌ருவ‌த‌ற்கான‌ நிக‌ழ்த‌க‌வுக‌ள் இருக்கின்ற‌ன‌ என்ப‌தையே இப்ப‌ட‌ம் உள்ளுறை உவ‌மமாக‌க் கூறுவ‌தாக‌த் தோன்றுகின்ற‌து.. இப்ப‌ட‌த்தில் ஒரு முதிய‌வ‌ர் அடிக்க‌டி வ‌ந்து வ‌ர‌லாற்றில் நிக‌ழ்வுக‌ள் அடிக்க‌டி மீள‌ நிக‌ழ‌க்கூடிய‌வை என்ப‌து இச்சாராம்ச‌த்தோடு இணைந்துபோக‌க்கூடிய‌துதான். விமுத்தியின் Forsaken Landயாய் இருந்தால் என்ன‌, இந்த‌ப் ப‌ட‌மாய் இருந்தாலென‌ன‌ அவ‌ருக்கு மிக‌ப்பெரும் வெளியைக் காட்சிப்ப‌டுத்துவ‌து பிடித்திருக்கின்ற‌து. Forsaken Landல் பொட்ட‌ல் வெளி என்றால், இங்கே காடு சார்ந்த‌ பெரு நில‌ப்ப‌ர‌ப்பு. அத்தோடு அதிக‌ காட்சிக‌ளில் க‌மரா அப்ப‌டியே அசையாம‌ல் ச‌ல‌ன‌ம‌ற்றிருக்கின்ற‌து; அது காட்டுகின்ற‌ வெளியில் ம‌னித‌ர்க‌ள் வ‌ருகின்றார்க‌ள், பிற‌கு ம‌றைந்தும் போய்விடுகின்றார்க‌ள்.. அக‌ண்ட‌காட்சிகளாய் விரியும் ப‌ல‌ காட்சிக‌ளில் வ‌ந்துபோகின்ற‌ ம‌னித‌ர்க‌ள் மிக்ச்சிறிதாக‌த் தெரிகின்றார்க‌ள். இந்த‌ப் ப‌ட‌க்காட்சிக‌ள் ந‌ம‌து ம‌ன‌தோடு ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய‌வை. நம‌து வாழ்வில் எத்த‌னையோ ம‌னித‌ர்க‌ள் வ‌ருகின்றார்க‌ள் போகின்றார்க‌ள், ஆனால் ந‌ம‌து வாழ்வு தொட‌ர்ந்து ஒரேயிட‌த்தில் நின்று இவை எல்லாவ‌ற்றையும் ச‌ல‌ன‌ம‌ற்றுப் பார்த்துக்கொண்டிருக்கின்ற‌துபோல‌.

விமுக்தியின் பட‌ங்க‌ளை -ஏற்க‌ன‌வே குறிப்பிட்ட‌தைப் போன்று- சாதார‌ண‌ப் ப‌ட‌ங்க‌ளை பார்க்கும் வேக‌த்திலோ, அதிர‌டியான‌ திருப்ப‌ங்க‌ளையோ எதிர்பார்த்தோ பார்க்க‌ முடியாது. முத‌ல் வ‌ரும் காட்சிக்கும் அடுத்த‌ காட்சிக்கும் க‌ட்டாய‌ம் தொட‌ர்பு இருக்க‌வேண்டும் என்ற‌ அவ‌சிய‌த்தையெல்லாம் விமுத்தி உடைத்துத்த‌ள்ளும் அதேவேளை சில‌ காட்சிக‌ள் மிக‌ மிக‌ மெதுவாக‌ ந‌க‌ர்கின்ற‌போது ச‌ற்று அலுப்பு வ‌ர‌ச்செய்வ‌தையும் குறிப்பிட்டாக‌ வேண்டும். இன்று விமுத்தியின் ப‌ட‌த்தை பார்த்து ஒரு க‌தையை உருவாக்கும் ஒரு பார்வையாள‌ர் நாளை அத‌ற்குத் தொட‌ர்பில்லாத‌ இன்னொரு க‌தையைத் த‌ன்ன‌ளாவில் உருவாக்கிக்கொள‌ள‌வும் முடியும். நாம் வாசிக்கும் ஒரு பிர‌தி வாசிக்கும் க‌ண‌ந்தோறும் த‌ன‌க்கான‌ க‌தையை மாற்றிக்கொள்ளும் மாய‌த்தை உள்ள‌ட‌க்கினால் எப்ப‌டியிருக்குமோ அப்ப‌டியே விமுத்தியின் இப்ப‌ட‌மும் ஒவ்வொரு காட்சியிலும் புதிர்க‌ளின் குறுக்குவெட்டுக்க‌ளால் புதிய கதைகளைப் புனைந்துகொள்ள‌ முனைகின்ற‌து. இந்த‌க் மாய‌ வித்தை சில‌ருக்கு வ‌ன‌ப்பூட்ட‌லாம், வேறு சில‌ருக்கு அலுப்பூட்ட‌லாம். அது க‌தைசொல்லியின் த‌வ‌றும‌ல்ல‌, க‌தைகளைச் ச‌துர‌ங்க‌க் க‌ட்ட‌த்தில் ந‌க‌ர்த்த‌ விரும்பும்/விரும்பாத‌ ந‌ம‌து த‌னிப்ப‌ட்ட‌ விருப்புக‌ள் சார்ந்த‌வை.

நன்றி: உன்னதம் & வைகறை

*பால‌ஸ்தீன‌ எதிர்ப்பிசையின் இல‌ய‌ங்க‌ள்

Sunday, November 15, 2009

பாலஸ்தீன எதிர்ப்பு இசை
-அஹமட் ஹபீப்

தமிழாக்கம்: டிசே தமிழன்

திரைப்பட இயக்குநரும், நெறியாளருமான, ஜாக்கி ரீம் சலூம், பாலஸ்தீனக் கலைகளை உலக அளவில் எடுத்துவருவதில் முக்கியமான ஒருவராக இருந்து வருகின்றார்.

பாலஸ்தீன மற்றும் சிரியாப் பெற்றோருக்கு, டியபோர்ன் மிக்சிக்கனில் பிறந்த சலூமின் கலைப்படைப்புக்களில் ஒரு புலம்பெயர்ந்த அரபு இளம்பெண்ணுக்குரிய பாதிப்பு இருக்கின்றது. சலூம் தனது பதின்ம இறுதிகளில், நியூயோர்க் பல்கலைக்கழகத்திலுள்ள கலைக் கல்லூரியில் படித்திருக்கிறார்.

2005ம் ஆண்டில் சண்டான்ஸ் திரைப்படவிழாவில், 'அரேபியர்களின் உலகம்' என்கின்ற ஒன்பது நிமிடப் படத்தை சலூம் தயாரித்து அளித்திருக்கிறார். இப்படம் எப்படி அரேபியர்கள் ஊடகங்களில் சித்தரிக்கப்படுகின்றார்கள் என்பதைக் காட்சிப்படுத்துகிறது. எனினும், சலூம் அவரது அண்மைய படமான 'slingshot hip hop' மூலமாக அதிக கவனத்தைப் பெற்றதுடன், இப்படம் ரொறொண்டோவில் நிகழ்ந்த பாலஸ்தீனியத் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டிருக்கிறது.

இந்த 80 நிமிட ஆவணப்படத்தில், சலூம் எவ்வாறு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் பாலஸ்தீன ஹிப் ஹொப் கலைஞர்களின் வாழ்வும் கலையும் இருக்கிறது என்பதைக் கவனப்படுத்துகின்றார்.

இஸ்ரேலுக்குள் இருக்கின்ற DAM மற்றும் Lyd போன்ற குழுக்களும், காஸாவில் இருக்கின்ற P.R போன்ற குழுக்களும் தங்கள் இசையை ஒரு கலாசார எதிர்ப்பாய் அறிமுகப்படுத்துகிறார்கள்.

அல்ஜீசிராவிற்காய் இந்நேர்காணலைக் கண்டவர்: அஹமட் ஹபீப்

அஹமட் ஹபீப்: ஏன் நீங்கள் உங்கள் திரைப்படத்தை ஒருவிதமான எதிர்ப்பு எனக்கூறிக்கொள்கின்றீர்கள்?

சலூம்: அர‌புக்கார‌ர் ஒருவ‌ர், பொதுப்புத்தி ம‌ற்றும் அர‌சு/ வெளிநாட்டுக் கொள்கைக‌ளை எதிர்க்கும் ஒரு ப‌டைப்பைக் கொண்டு வ‌ருதலோ அல்ல‌து எங்க‌ள் க‌லாசார‌த்தையும் வ‌ர‌லாற்றையும் பிர‌திப‌லிக்கும் ப‌டைப்புக்க‌ளை உருவாக்குவது என்பதோ, ஒரு எதிர்ப்பினூடாக‌வே நிக‌ழ்த்த‌வேண்டியிருக்கிற‌து.

இந்த‌த் திரைப்ப‌ட‌த்தை தொட‌ர்ச்சியாக‌ உல‌கின் ப‌ல்வேறுபகுதிக‌ளிலுள்ள‌ திரைப்ப‌ட‌ விழாக்க‌ளில் திரையிடும்போது, ப‌ல‌ ம‌க்க‌ள் முத‌ற்த‌ட‌வையாக‌ பால‌ஸ்தீனர்க‌ளையும், பால‌ஸ்தீனம் பற்றிய படிமங்களையும் பார்க்கின்றார்க‌ள்.இப்ப‌ட‌த்தில் வ‌ருகின்ற‌ ராப் பாட‌க‌ர்க‌ள், பால‌ஸ்தீனர்க‌ளின் வாழ்க்கையில் புதிய‌ ய‌ன்ன‌ல் ஒன்றைத் திற‌ந்துவிடுகின்றார்க‌ள்.

இன்னொருவ‌கையில் இந்த‌ப்ப‌ட‌ம் க‌ற்பித்தலிற்கான ஓர் உப‌க‌ர‌ண‌மும் கூட‌. அமெரிக்காவிலுள்ள‌ ப‌ல‌ உய‌ர்க‌ல்லூரிக‌ள் மற்றும் க‌ல்லூரிக‌ளின் பாட‌விதான‌த்தில் இந்த‌ப்ப‌ட‌ம் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டுகின்ற‌து.

ப்ரோக்ளின் போன்ற‌ ப‌குதிக‌ளிலிருந்து வ‌ரும் மாண‌வ‌ர்க‌ள் ‍-முக்கிய‌மாய் க‌றுப்பின, இல‌த்தீனிய‌ இனத்தைச் சேர்ந்தவர்கள்- பால‌ஸ்தீன்ர்களின் போராட்ட‌த்தினால் க‌வ‌ர‌ப்ப‌ட்ட்டிருக்கின்றார்க‌ள். இவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் பிர‌ச்சனைக‌ளுக்கும், ஆக்கிரமிக்கப்பட்ட பால‌ஸ்தீனத்திலும், இஸ்ரேலிலும் இருந்து பாலஸ்தீன ராப் பாடகர்கள் பாடும் த‌ங்க‌ளின் வாழ்வு ப‌ற்றிய‌ கதைகளுக்கும் இடையில் தொட‌ர்புக‌ளைக் க‌ண்டுபிடிக்கின்ற‌ன‌ர். அமெரிக்காவிலிருக்கும் சில மாண‌வ‌ர்க‌ள், பால‌ஸ்தீன ராப் பாட‌க‌ர்க‌ளைக் க‌வுர‌ப்ப‌டுத்தும் முக‌மாய் ஹிப் ஹொப் பாட‌ல்க‌ளை அர‌பு-அமெரிக்க‌ க‌ல‌ப்பு இசையில் எழுதியுமிருக்கின்றார்க‌ள்.

இந்த‌ப்ப‌ட‌ம் ஒருவ‌கையான‌ 'எதிர்ப்பு' என்று கூறுவ‌த‌ற்கு இவ்வாற‌ன‌வை ஒரு சில‌ உதார‌ண‌ங்க‌ளாகும்.

அஹமட் ஹபீப்: : எவ்வாறான‌ த‌டைக‌ளை இப்ப‌ட‌த்தை உருவாக்கும்போது ச‌ந்தித்திருந்திருந்தீர்க‌ள்?

சலூம்: நான் இத்திட்ட‌த்திற்காக‌ ப‌ண‌த்தைச் சேக‌ரிக்க‌த் தொட‌ங்கிய‌போது, இப்ப‌ட‌ம் பால‌ஸ்தீனர்க‌ளின் ஹிப் ஹொப் இய‌க்க‌ம் ப‌ற்றிய‌து என்ப‌தை எப்போதும் நினைவுப‌டுத்திக்கொண்டு இருக்க‌வேண்டியிருந்த‌து.

அநேக‌மான‌வ‌ர்க‌ள் இப்ப‌ட‌ம் இஸ்ரேலிய‌ர்க‌ளும், பால‌ஸ்தீனர்க‌ளும் எப்ப‌டி ஹிப் ஹொப்பால் இணைகின்றார்க‌ள் என்ப‌தாக‌ இருக்குமென‌ நினைத்தார்க‌ள். ஆனால் இது பால‌ஸ்தீனிய‌ர்க‌ளைப் ப‌ற்றிய‌து மட்டும் என்று அவ‌ர்க‌ள் உண‌ர்ந்த‌போது, அவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் இந்தத் திட்டத்தில் ஈடுபாட்டைக் காட்ட‌வில்லை.

இறுதியில், என்னிட‌மிருந்த‌ ப‌ண‌ம் அனைத்தும் செல‌வழிந்து என‌து பெற்றோருட‌ன் திரும்பச்சென்று வாழ‌ வேண்டிய‌ நிலை ஏற்ப‌ட்ட‌து. அங்கே என‌து பெற்றோருக்குச் சொந்த‌மான‌ ஜ‌ஸ்கிறிம் க‌டையில் வேலை செய்திருக்கின்றேன். இவ்வாறாக‌ வேலை செய்துகொண்டு, இர‌வில் படத்தை எடிட் செய்வ‌துமாய் இருந்தேன். ஐஸ்கிறிம் பார்ல‌ரினால் வ‌ந்த‌ லாப‌ம் எல்லாவ‌ற்றையும் இந்தப்படத்திற்காய்ச் செல‌வ‌ழித்தேன்.

அத‌னால் தான், இப்ப‌ட‌ம் முடியும்போது, 'குளிர்ச்சியான ஜ‌ஸ்கிறிம் த‌யாரிப்புக்க‌ளுக்கு' என்று ச‌ம‌ர்ப்பித்திருப்ப‌தை நீங்க‌ள் காண்பீர்கள்.

இவையும், ச‌மூக‌த்தின‌தும் ம‌ற்ற‌ க‌லைஞ‌ர்க‌ளின் உத‌வி இல்லாதிருந்துவிட்டால் இப்ப‌ட‌த்திற்கு நிதியே வ‌ந்திருக்காது.

அத்தோடு இப்ப‌ட‌த்தை இஸ்ரேலில் எடுத்துக்கொண்டிருந்த‌போது, ப‌ல‌வித‌ த‌டைக‌ளைச் ச‌ந்தித்திருந்தேன். ஓர் அர‌பு அமெரிக்க‌ராய், ரெல் அவிவிலுள்ள‌ பென் குரிய‌ன் விமான‌ நிலைய‌த்திற்குப் போவ‌தென்ப‌தும் எப்போதும் மிக‌ப்பெரும் ச‌வாலான‌ அனுப‌வ‌மாக‌வும் அதைவிட‌ காஸாவிற்குள் நுழைவ‌து என்பது இன்னும் க‌டின‌மானதாக‌வும் இருந்திருக்கின்ற‌து.

நானொரு பால‌ஸ்தீனிய‌ப் பின்புல‌த்தில் இருப்ப‌தை அவ‌ர்க‌ள் அறியும்போது இது இன்னும் மோச்மாக இருந்தது. என்னை ஒவ்வொருமுறையும் விசாரணைக்காக தடுத்தி நிறுத்தி வைத்திருந்திருக்கின்றார்கள், சில‌ நேர‌ங்க‌ளில் ஏழு ம‌ணித்தியால‌ங்க‌ளுக்கு மேலாக‌வும்.

இன்ன‌மும் ம‌ன‌அழுத்த‌ம் இருப்ப‌து எங்கே என்றால், நான் (இஸ்ரேலின்) உள்ளே அனும‌திக்க‌ப்ப‌டுவேனா என்ப‌தை அறிய‌முடியாம‌ல் இருக்கும்போது; எனெனில் என‌க்குத் தெரிந்த ப‌ல‌ அர‌பு ந‌ண்ப‌ர்க‌ளுக்கு இஸ்ரேலின் உள்ளே பிர‌வேசிக்கப்ப‌டுவ‌து ம‌றுக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. ஒருமுறை இஸ்ரேலிய‌ அதிகாரிக‌ள் என‌து க‌ம‌ராவைத் திருப்பித் த‌ருவ‌த‌ற்கு முன் உடைத்திருக்கின்றார்க‌ள். அத‌ன் பின், நான் டேப்புக்க‌ளையோ, உப‌க‌ர‌ண‌ங்க‌ளையோ ப‌ய‌ணிக்கும்போது கொண்டு செல்வ‌தில்லை.

நாங்க‌ள் இஸ்ரேலின் இவ்வாறான‌ செய்கைக‌ள் குறித்து எந்த‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளையும் ஒருபோதும் கேட்ட‌தில்லை. ராச்ச‌ல் கோரி போன்ற‌ அமெரிக்க‌ குடியுரிமையுள்ள‌வர்கள் இஸ்ரேலிய‌ புல்டோச‌ர்க‌ளால் கொல்ல‌ப்ப‌ட்ட‌போது கூட‌, இஸ்ரேலின் செயற்பாடுகளை -அவ‌ர்க‌ள் காஸாவிலுள்ள 'தீவிர‌வாதிகளிற்கு' எதிராக‌ச் ச‌ண்டைபிடிக்கின்றார்க‌ள் என்ற‌வ‌கையில் ஊட‌க‌ங்க‌ளினால் நியாய‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌.

அஹமட் ஹபீப்: : எவ்வாறான உற‌வுக‌ள் பால‌ஸ்தீன ம‌ற்றும் இஸ்ரேலிய‌ ராப் பாட‌க‌ர்க‌ளுக்கிடையில் இருக்கிற‌து?

சலூம்: நான் பால‌ஸ்தீனர்க‌ளும் இஸ்ரேலிய‌ர்க‌ளும் எப்ப‌டி ராப் பாட‌ல‌களினுடாக‌ ஒற்றுமையாக‌ சேர்ந்து வ‌ருகின்றார்க‌ள் என்ப‌தைப் ப‌ற்றிப் ப‌ட‌ம் எடுக்க‌வில்லை எனெனில் ய‌தார்த்த‌தில் அவ்வாறான‌ ஒரு நிலை ஹிப் ஹொப்பில் அங்கே இருக்க‌வேயில்லை.

அத்துட‌ன் குறிப்பிடும்ப‌டியான‌ ஒருங்கிணைவு பால‌ஸ்தீன ம‌ற்றும் இஸ்ரேல் ராப்ப‌ர்க‌ளிடையே இருக்க‌வில்லை. மிக‌வும் பிர‌ப‌ல்ய‌மான‌ இஸ்ரேலிய‌ ஹிப் ஹொப் க‌லைஞ‌ரே ஒரு வ‌ல‌து சாரி சியோனிஸ்டாக‌ இருப்ப‌தோடு, அர‌புக்க‌ளை கொல்லுமாறுதான் த‌ன‌து நிக‌ழ்வுக‌ளில் இர‌சிக‌ர்க‌ளுக்குப் பாடிக்கொண்டிருக்க்கின்றார்.

பால‌ஸ்தீன ராப்ப‌ர்க‌ளும் அவ‌ர்க‌ள‌து இர‌சிக‌ர்க‌ளும் ஒருபோதும் இஸ்ரேலிய‌ர்க‌ளையோ யூத‌ர்க‌ளையோ கொல்ல‌ச் சொல்லிப் பாடுவ‌தில்லை.

ஒரு சில‌ இஸ்ரேலிய‌ ராப்பர்க‌ள் மித‌வாதிக‌ளாக‌வும், பால‌ஸ்தீனர்க‌ளின் ஹிப் ஹொப்பிற்கு ஆத‌ர‌வாக‌வும் இருப்ப‌தோடு, டாம் ம‌ற்றும் அர‌பு‍-இஸ்ரேலிய‌ ராப்ப‌ர்க‌ளோடு சேர்ந்து வேலை செய்ப‌வ‌ர்க‌ளாக‌வும் இருக்கின்றார்க‌ள்.

என்கின்ற‌போதும், இவ்வாறான மிக அரிய ஒன்றிணைவுகள் எதுவும் அவ்வ‌ள‌வாய் மைய‌நீரோட்ட‌த்திலுள்ள‌ இஸ்ரேலிய‌ ஹிப் ஹொப் உல‌கில் பிர‌திப‌லிப்ப‌தில்லை.

அஹமட் ஹபீப்: : அர‌புப் பெண்க‌ள் க‌லைக‌ளில் அதிக‌ம் ஈடுப‌ட‌வேண்டும் என்று நீங்க‌ள் அழைப்பு விடுத்துள்ளீர்க‌ள்?

சலூம்: பெண்க‌ளின் குர‌ல்க‌ள் எல்லா இட‌ங்க‌ளில் கேட்க‌ப்ப‌ட‌வேண்டும் என்ப‌து எப்போதும் மிக‌ முக்கிய‌மான‌து.

இளைய‌ அர‌புக்க‌ளுக்கு அவ‌ர்க‌ள் ஆண்க‌ளாய் இருந்தாலென்ன‌ பெண்க‌ளாய் இருந்தாலென்ன‌ இவ்வாறான‌ க‌லை ச‌ம்ப‌ந்த‌மான‌ விடய‌ங்க‌ளில், தங்களுக்கு ஈடுபாடு இருக்கிறது என்பது ப‌ற்றித் த‌ம‌து குடும்ப‌ங்க‌ளுக்குக் கூறுவது என்ப‌து மிக‌வும் க‌டின‌மாயிருக்கிற‌து.

வீட்டிலிருக்க‌வும், ச‌மைக்க‌வும் சுத்த‌ம் செய்ய‌வும் வேண்டிய‌வ‌ர்க‌ள் பெண்க‌ள் என்கின்ற‌ க‌ருத்துக்க‌ளுக்கு எதிராக‌ இவ்வாறான‌ விட‌ய‌ங்க‌ளில் ஈடுப‌டுவ‌து என்ப‌து ய‌தார்த்த‌தில் பெண்க‌ளுக்கு இன்னும் மிக‌வும் க‌டின‌மாயிருகிற‌து. நான் என‌து பெற்றோருக்கு க‌லைப்ப‌டிப்பு ப‌டிக்க‌ப்போகின்றேன் என்று கூறிய‌போது, அவ‌ர்க‌ள் வேண்டாம், ஒரு பார்ம‌ஸிக்காரியாகவோ நூலகக்காரியாகவோ ஆகத்தான் ப‌டிக்க‌ச் சொன்னார்க‌ள்.

அவ‌ர்க‌ளைச் ச‌ம‌ர‌ச‌ம் செய்வ‌த‌ற்காய் கிராபிக் டிசைனை தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அத‌னால் அவ‌ர்க‌ள் என்னை ஊக்குவித்தார்க‌ள். ஆனால் நான் தொடர்ச்சியாக ஓவிய‌ங்க‌ளை வ‌ரைந்து அது ஊட‌க‌ங்க‌ளின் க‌வ‌ன‌த்தையும் பெற்ற‌போது அவ‌ர்க‌ள் (பெற்றோர்) என்க்கு மிக‌ உத‌வியாக‌வும் பிற‌ அர‌புப் பெற்றோர்க‌ளுக்கும் அவ‌ர்க‌ளின் பிள்ளைக‌ளை ஓவிய‌ர்க‌ளாக‌, இய‌க்குந‌ன‌ர்க‌ளாக‌, பாட‌க‌ர்க‌ளாக‌ வ‌ர‌ ஊக்குவிக்க‌ச் சொல்லிக் கூறியிருந்தார்கள்.

பால‌ஸ்தீனக் க‌லைஞ‌ராக‌ இப்ப‌ட‌த்தில் வ‌ருகின்ற‌ அபீர், மேடைக‌ளில் ஏறிப்பாடும்போது த‌ன‌து உற‌வின‌ர்க‌ளின் ப‌ய‌முறுத்த‌ல‌க‌ளுக்கு எதிராக‌ப் போர‌ட‌வேண்டியிருந்த‌து. அதிக‌மான‌ வேளைக‌ளில் பாடுவ‌தை இர‌க‌சிய‌மாக‌ச் செய்ய‌வேண்டியிருந்த‌து.

இவை எல்லாவ‌ற்றுக்கும் அப்பால், அபீர் எது த‌ன‌க்க்கு அதிக‌ம் பிடித்த‌தாக‌ இருந்த‌தோ அதைத் தொட‌ர்ந்து செய்துகொண்டிருந்தார்.... அது தானே பாட‌ல்க‌ளை உருவாக்கிப் பாடுவது என்பதாக இருந்தது.

ஜோர்டான், லெப‌னான், பால‌ஸ்தீனம் ம‌ற்றும் அமெரிக்காவில் இப்ப‌ட‌ம் திரையிட‌ப்ப‌ட்ட‌திலிருந்து ப‌ல‌ இளம் பெண்க‌ள் அபிரூக்கு த‌ங்க‌ள் ஆதரவையும், அபீர் செய்யும் பணிக்கான கவுரவத்தையும் மின்ன‌ஞ்ச‌ல்க‌ள் மூல‌ம் கூறிக்கொண்டிருக்கின்றார்க‌ள். அவ‌ர்க‌ளில் அநேக‌ர் தாங்க‌ளும் அபீரைப் போல‌வே ப‌ல‌வேறு ச‌வால்க‌ளைச் ச‌ந்தித்துக்கொண்டிருப்ப‌தாக‌க் கூறியிருக்கின்றார்க‌ள். அபீருக்கு பால‌ஸ்தீன ராப்ப‌ர்க‌ளிட‌மிட‌மிருந்தும் அதிக‌ அதரவு கிடைத்திருக்கின்ற‌து. அவ‌ர்க‌ள் த‌ம‌து திட்ட‌ங்க‌ளிலிருந்து அபீரை அக‌ற்றுவ‌தை ம‌றுத்த‌துட‌ன், அர‌புச் ச‌மூக‌ங்க‌ள் பெண்க‌ளை ந‌ட‌த்தும் வித‌த்தையும் விம‌ர்சித்தும் இருக்கின்றார்க‌ள்.

அர‌பு உல‌கிலுள்ள‌வ‌ர்க‌ளுக்கு, அபீர், அரிய‌பெய‌ட் போன்ற‌ இள‌ம் பெண்க‌ளைக் காட்ட‌வேண்டும் என்ப‌திலும், ஹிப் ஹொப் உல‌க‌ம் என்ப‌து அமெரிக்கா மற்றும் அர‌பு நாடுக‌ளிலிருந்து வ‌ரும் இனிப்பு பூச‌ப்ப‌ட்ட‌ பொப் இசை போன்ற‌த‌ல்ல‌ என்ப‌தை உண‌ர்த்த‌வேண்டும் எனவும் நான் மிகவும் விரும்பினேன்.

அஹமட் ஹபீப்: : இந்தப் படத்தை தயாரித்துக்கொண்டிருந்தபோது, எவ்வகையான மறக்கமுடியாத் தருணங்களைச் சந்தித்திருந்தீர்கள்?

சலூம்: மேற்குக் கரையில் எப்போதும் எங்கள் உறவினர்கள் வாழ்ந்துகொண்டிருந்தார்கள் என்பதனால் எனக்கு ஆக்கிரமிப்பு வாழ்வு மிகவும் பழக்கப்பட்டதாக இருந்தது.

இஸ்ரேலியர்களுடான தொடர்பு என்பது எனக்கு காவலரண்களைத் தாண்டும்போதோ, விமான நிலையத்தால் வரும்போதோ தான் இருந்திருக்கின்றது. இல்லாதுவிட்டால் அவர்கள் டாங்கிகளில் வரும்போதோ அல்லது சினைப்பர் ர(ட)வர்களில் இருக்கும்போதுதான் அவர்களைச் சந்திக்கவேண்டியிருந்தது. எனினும் இந்தப்படம் எனக்கு இஸ்ரேலியர்களின் 1948ம் ஆண்டு ஆக்கிரமிப்பின்பின் பாலஸ்தீனர்கள் தங்கள் நிலங்களில் எவ்வாறு வாழ்கின்றார்கள் என்ப‌தை அறிமுகப்படுத்தியது.

இஸ்ரேலிய குடியுரிமை இருந்தும் கூட மக்கள் மிகவும் மோசமான ஒடுக்குதலுக்கும், புறக்கணிப்புக்கும் இஸ்ரேலில் உள்ளாகின்றார்கள் என்பது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

முக்கியமாக பலவேறு நிலைகளில் பாலஸ்தீனர்கள் என்ற ஒரு பொது அடையாளத்திற்குள் அடைக்கப்பட்ட்டு ஒருமைப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். சில இளையவர்களை நான் சந்தித்தபோது அவர்களுக்கு தமது பாலஸ்தீன அடையாளம் குறித்த குழப்பம் இருந்ததுடன், த்ங்களை எவ்வாறு அடையாளப்படுத்துவது என்பதும் தெரியாமல் இருந்தது.

இவையெல்லாம் சேர்ந்து ஆக்கிரமித்த மக்களைப் பல்வேறு வழிகளில் பிரிக்கின்றது. அத்துடன் மேற்குக் கரையிலும், இஸ்ரேலிலும், காஸாவிலும் வாழும் பாலஸ்தீனர்களுக்கு ஒருவரை ஒருவர் சென்று பார்ப்பது எனபது மிகவும் சிரமமாக இருக்கின்றது.

இந்தப்புள்ளியில்தான் ஹிப் ஹொப் இசை பாலஸ்தீன இளையவர்களை ஒன்றாகக் கொண்டுவருவதில் முக்கியம் பெறுகின்றது.

அஹமட் ஹபீப்: நாங்கள் உங்களின் அடுத்த திட்டமாய் எதை எதிர்ப்பார்க்கலாம்?

சலூம்: இந்தப் படத்திற்காய் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களைச் செலவழித்திருக்கின்றேன். Slingshot hip hop படம் வெளிவந்துவிட்டதால் அதன் வெற்றிக்காக உழைக்க விரும்புகின்றேன்.

இறுதியாய், நான் அரபு கலைஞர்களின் வீடியோ இசை ஆல்பங்களில் வேலை செய்ய விரும்புகின்றேன். என்னால், தரப்படும் மூன்று நிமிடங்களுக்குள் ஒரு கதையைப் பாடலில் சொல்லமுடியுமென நினைக்கின்றேன்.

இன்றையநாட்களில் பாடல்களில் ஆக்கிரமித்திருக்கும் மெழுகுவர்த்திகள், நீர் மற்றும் பெண்களைப் பயன்படுத்தும் சூத்திரங்கள் என்பவற்றுக்கு மாற்றாய் வித்தியாசமாய் செய்ய நான் விரும்புகின்றேன்.

நன்றி: அல் ஜீசிரா
(உன்னதம், Nov, 2009)

*த‌லைய‌ங்க‌த்தைப் பொருத்த‌மாய் த‌மிழாக்கித்த‌ந்த‌ வ‌ள‌ர்ம‌திக்கு ந‌ன்றி.