கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

டாங்கிகளும், போர் எதிர்ப்பும்

Sunday, August 25, 2019

அண்மையில் கிங்ஸ்டன் நகருக்குச் சென்றிருந்தோம். எனக்குப் பிடித்தமான நகர்களில் இதுவுமொன்று. ஆயிரம் குட்டித்தீவுகளும் (Thousand Islands), போர்ட் ஹென்றியும் (Fort Henry), புராதனக் கட்டடங்களும் எனப் பல இருந்தாலும், இங்கேயே கனடிய இராணுவத்தின் பயிற்சி நிலையமும் இருக்கின்றது. ஒவ்வொரு முறையும் இந்த முகாமைக் கடந்துபோகின்றவன் என்கின்றபோதும் இம்முறை காட்சியிற்கு வைத்திருந்த சில டாங்கிகளைக் கண்டுவிட்டு அருகில் போய்ப் பார்த்தோம்.

கூடவந்த நண்பருக்கு போர் பற்றிய அனுபவங்கள் இல்லாததால் அவருக்கு டாங்கிகளுடனான என் அனுபவங்களைச் சொல்லிக்கொண்டிருந்தேன். நேரடியாக முதன்முதலில் டாங்கிகளைக் கண்டதென்றால் இந்திய இராணுவகாலத்தில்தான். இந்திய இராணுவத்தின் டாங்கிகள் தெருக்களில் அடையாளமிட்டுப் போகாத தார் ரோட்டுக்களே அன்றைய கால யாழில் இல்லையெனச் சொல்லலாம்.

எப்போதுமே மிக அச்சமூட்டும் ஒரு விடயமாக டாங்கிகள் இருந்திருக்கின்றன. பிரம்படியில் புலிகளின் முகாமைத் தாக்க பாரசூட்டுக்களில் குதித்த இராணுவத்தைப் புலிகள் சுட்டதையடுத்து, இந்திய இராணுவம் வீதிகளிலும், வீட்டுக்குள்ளும் இருந்த மக்களை தெருவில் படுக்கவைத்து டாங்கிகளினால் சிதைத்துக் கொன்றதை எவராலும் மறக்கமுடியாதது. இந்தியத் தேசியக்கொடியில் சுழன்றுகொண்டிருக்கும் தர்மசக்கரத்திற்கு இதெல்லாம் தர்மசங்கடமாய் ஒருபோதுமாய் இருந்ததில்லை. சில இந்திய இலக்கியவாதிகள் ஈழப்போராட்டம் பற்றி எழுதும்போது வரும் எரிச்சலில் , அட்டூழியங்கள் செய்த இந்திய இராணுத்தையே கட்டிப்பிடித்து முத்தமிடலாம் போலத் தோன்றுவது வேறுவிடயம்.

கூட வந்த நண்பருக்கு போர்க்காலத்தில் நடந்தவற்றை மேலும் பகிர்ந்துகொண்டிருந்தேன்.

இலங்கை இராணுவம் நிலங்களைக் கைப்பற்றுவதற்கு டாங்கிகளை முன்னிறுத்திய காலம் ஒன்றிருந்தது. முந்தைய காலங்களில் யானைப்படை போன்று பின்னாட்களில் டாங்கிகள். இயக்கம் விக்டர் கவச எதிர்ப்பு அணியென்று ஒன்றையே உருவாக்கியிருந்தது. டாங்கிகள் நடத்தும் தாக்குதல் பற்றியும், அவற்றை எதிர்த்து நிகழ்ந்த களங்களையும் வாசிக்க விரும்புபவர்கள் பெண்புலிகள் எழுதித்தொகுத்த 'வேருமாகி விழுதுமாகி' என்ற நூலை வாசிக்கப் பரிந்துரை செய்வேன்.

சமாதான காலம் எனப்பட்ட 2000களின் தொடக்கத்தில் ஆனையிறவில் போருக்குப் பயன்படுத்தப்பட்ட டாங்கி இடைநடுவில் கைவிடப்பட்டிருந்ததை அதைக் கடந்தவர்கள் கண்டிருக்கக்கூடும். அவ்வாறு ஒருமுறை ஆனையிறவைக் கடந்தபோது புகைப்படம் எடுத்திருக்கின்றேன். இப்போது எங்கோ அது தவறிவிட்டது.  கிறிஸ்டோபர் ஒண்டாச்சி எழுதிய 'Woolf in Ceylon'லிலும் இதைப் புகைப்படத்துடன் பதிவு செய்திருப்பார்.

போருக்குள் பிறந்தவர்/வளர்ந்தவர்/அனுபவித்தவர்களுக்கு அதிகாரங்கள் மீது மட்டுமில்லை, இந்த ஆயுத உபகரணங்கள் மீதும் எவ்வளவு வெறுப்பு இருக்குமென்று சொல்லித் தெரியவேண்டியதில்லை. 1989 மாணவர் புரட்சியில் சீனாவில் தியான்மென் சதுக்கத்தில் நிரையாக வந்துகொண்டிருக்கும் டாங்கிகளை எதிர்த்து நிற்கும் ஒரு மாணவனின் புகைப்படம் அத்தகை வலிமை வாய்ந்தது. வரலாறு எவரையும் அவ்வளவு எளிதாய் விடுதலை செய்யாது என்பதற்கு அந்த மாணவனின் தனித்த எதிர்ப்பு எல்லோரையும் இன்றும் தொந்தரவு செய்தபடியிருக்கின்றது. அந்த எதிர்ப்பு நடந்த காலங்களில்தான் இந்திய இராணுவத்தின் டாங்கிகள் எமது நிலத்தை உழுதபடி சென்றுகொண்டிருந்தன.

இராணுவத்தை/ஆயுதங்களை glorify செய்பவர்கள் மீது எப்போதும் எரிச்சலே வந்துகொண்டிருக்கின்றது. இதில் ஏறக்கூடாதென்றார்கள். ஆயுதங்கள் மீதிருக்கும் வெறுப்பில், யாரையோ காவுகொள்வதற்கு குறிபார்த்துக் காத்திருப்பது போல இருக்கும் ஏவுகுழாயின் அருகில் சமாதான சமிக்ஞையைக் காட்டி ஆறுதல்கொள்வதே நமக்கான எளிய வழி.

(Aug 25, 2016)

Ishq (மலையாளம்)

Saturday, August 24, 2019

ளங்காதலர்கள் காரிலேறி ஒருநாளைக் கழிக்கச் செல்கின்றார்கள். இரவில் காரை நிறுத்தி முதல் முத்தம் பெறத் தவிர்க்கின்றபோது, கலாசார காவலர்கள் போலி பொலிஸாக உருவெடுத்து அவர்களைப் பயமுறுத்துகின்றார்கள். அவர்களின் 'பொலிஸ் நாடகத்தில்' ஆணைவிடப் பெண்ணே காரில் வைத்து அதிகம் பயமுறுத்தப்படுகின்றாள். தங்கள்பாட்டில் எவ்விதச் சிக்கல்களுமில்லாது வாழும் ஒரு மத்திய வர்க்க ஆணும், பெண்ணும் முதன்முதலாக அதிகாரத்தின் இன்னொருமுகத்தை கண்டு அதிர்கின்றார்கள். தன் தாயினதும், தமக்கையினதும் அரவணைப்பில் வளர்ந்த ஆண், தன் காதலியை இந்தக் கலாசாரக் காவலர்களின் பிடியிலிருந்து எப்படித் தப்புவிப்பது என்பது புரியாது திகைக்கின்றான். முதல் பாதி அந்த இரவில் தெருவெங்கும் காருக்குள்ளே இரு கலாசாரக் காவலர்களுடன் அவர்கள் அலைவதுடன் முடிகின்றது.

இடைநடுவில் இவனின் காதலியை விசாரிக்கவேண்டுமென்று அவனைத் தூரப்போகச் சொல்லிவிட்டு, காருக்குள் விசாரிக்கப் போகின்றார் ஒரு கலாசார 'பொலிஸ்' காவலர். பூட்டிய கதவுக்குள் என்ன நடந்தது என்பது இந்தக் காதலனுக்குத் தெரிவதில்லை. எல்லாம் முடிந்து அடுத்தநாள் காலையில் காதலியை அவளின் ஹொஸ்டலில் விடும்போது எந்த நிகழ்வையும் விட இவனுக்கு அதுவே அதிகம் தொந்தரவு செய்கின்றது. 'என்ன காருக்குள்ளே நடந்தது' என கேட்கின்றான். 'இவ்வளவு நேரமும் நான் இந்த இரவில் அவர்களோடு கஷ்டப்பட்டதைவிட ஒருவன் என்னை காருக்குள் பூட்டி விசாரித்த கொஞ்ச நேரத்தில் என்ன நடந்தது என்பதுதான் உனக்கு முக்கியமா' எனக் கேட்கின்றாள் காதலி. 'நானொரு ஆண், எனக்கு அது தெரியவேண்டும் என்கின்றான் இவன். 'உனது ஆண்மையைத்தானே நேற்றிரவு பயந்துகொண்டு திரியும்போது பார்த்தேனே' எனக் கோபத்துடன் சொல்லிவிட்டுப் போகின்றாள் காதலி.

இரண்டாம் பகுதி, இந்தக் காதலன் தங்களை வருத்திய கலாசாரக் காவலர்களை எப்படிப் பழிவாங்குகின்றான் என்பது கதை. அதை அவன் அந்தக் கலாசாரக் காவலர்களின் குடும்பத்திற்குள் நுழைந்து நுட்பத்துடன் செய்வது படத்தில் காட்டப்படுகின்றது. முதல் பாதி ஒரு அச்சத்துடன் இளங்காதலர்க்கு ஏதாவது நடந்துவிடுமோ என்ற பதற்றத்துடன் நகர்வதைப் போல, வேறொரு பதற்றத்துடன் பின்பாதி கழிகின்றது. குறிப்பிட்ட சில நாட்களுக்குள் கதையை, ஒரு கையளவு பாத்திரங்களுடன் வைத்து இவ்வளவு இறுக்கமான காட்சிகளுடன் திரைப்படமாக்கியிருக்கின்றார்கள் என்பதைப் பார்க்கும் நமக்கு நிச்சயம் வியப்பு வரும்.

ஆண்கள் எப்போதும் ஆண்களாகவே இருக்கின்றார்கள். அவர்கள் எடுக்கும் பாத்திரங்களுக்கு ஏற்ப வெவ்வேறு முனையில் இருக்கின்றார்களே தவிர, அந்தப் பக்கமுள்ள கோட்டைத் தாண்டி இந்தப்பக்கம் வருவதெல்லாம் பெரிய விடயமில்லை என்று இந்தக் காதலன் என்கின்ற நாயக விம்பத்தைக் கூட படத்தில் உடைப்பதில்தான் இந்தப் படம் இன்னும் நெருக்கமாகின்றது.

எனக்கு காருக்குள் என்ன நடந்திருக்குமென தொந்தரவுக்குள்ளாவதற்கு, ஆணாக இருப்பது என்று சொல்கின்ற நீ, என்னைக் காப்பாற்ற அந்த ஆண்மையை அந்த இரவில் பாவிக்கவில்லையே எனக் கேட்கின்ற அந்தக் காதலிதான், ஒரு பழிவாங்கலை நுட்பமாக நடத்திவந்த காதலனுக்கு நடுவிரலைக் காட்டி இன்னொரு விடயத்தில் அவனைத் தூக்கியெறிகின்றாள், நாம் கட்டமைத்து வைத்திருக்கும் 'ஆண்மை' என்ற விம்பம் உடைந்து நூறாகி நம்மைப் பார்த்துப் பல்லிளிக்கின்றது

(June, 2019)

கலாதீபம் லொட்ஜ்

Friday, August 23, 2019

க இனமொன்றின் மீது  தேவையற்ற காழ்ப்புணர்வுடன் முதல் நாவலை எழுதிய ஒருவர், தனது அடுத்த நாவலில் மீண்டு வருவது என்பது எல்லோருக்கும் நிகழ்வதில்லை. அந்த வகையில் வாசு முருகவேலுக்கு 'கலாதீபம் லொட்ஜ்' மூலம் சாத்தியமாகியிருப்பது சற்று வியப்பாக இருக்கிறது. யாழ்ப்பாணத்தின் தீவுகளில் ஒன்றான நயினாதீவிலிருந்து, போர் நிமித்தம் கொழும்புக்கு வந்து தங்கி கனடாவுக்கு வந்து சேரும் ஒரு குடும்பத்தைப் பற்றிய கதையை, சிறுவன் சந்திரனின் பார்வையிலிருந்து இந்தப் பனுவல் பேசுகிறது. சாதாரண பாதைகளினால் வரமுடியாது, கப்பலினால் திருகோணமலைக்கு சென்று, அங்கிருந்து கொழும்புக்கு வந்து லொட்ஜியில் தங்கிநிற்கும்போது சந்திரனின் அனுபவங்களினூடாக 90களின் பிற்பகுதியிலான ஒரு காலம் இங்கே பேசப்படுகின்றது.

வாசு முருகவேல் 'ஜப்னா பேக்கரியில்' ஒருவித முன்முடிவுகளுடன் சக இனத்தை எதிர்முனையில் வைத்துப் பேசியதைப் போலில்லாமல், இதில் வியாபாரத் தெருக்களில் சந்திக்கும் சிங்களப்பெரியவரையும், கிரிக்கெட் விளையாடும் சிங்களப் பையனையும், விளையாட்டின் நடுவராக இருக்கும் குடு தர்மபாலாவையும் அவர்களின் இயல்பில் பேசவிட்டிருப்பதோடு, பிரேமதாசா எப்படி உழைக்கும் தொழிலாளிகளின் அடையாளமாக அவரின் இறப்பின் பின்னும் இருக்கின்றார் என்பதையும்  பதிவு செய்திருக்கின்றார்.

தாயை இழந்த சிறுவனான சந்திரனுக்கு, அக்காவோடு இருக்கும் நெருக்கமும், கள்ளுக்குடித்து வயிறு வளர்ந்த தன் தந்தையை எள்ளல் செய்வதும் என்று ஒரு சிறுவனின் உலகம் அழகாக இந்த நாவலில் விரிந்திருக்கின்றது. முற்றுமுழுதாக போரின் நிமித்தம் கிராமங்களிடையே அடைபட்ட சிறுவர்க்கு, கொழும்பும் அதனைச் சுற்றிய நகர்களும் எவ்வளவு அதிர்ச்சியையும், வியப்பையும் முதன்முதலில் தரும் என்பதை பதின்ம காலங்களில் போரின் நிமித்தம் கொழும்புக்குச் சென்று வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட என்னைப் போன்றோர் நன்கு அறிவோம். 

வீட்டுக்குள்(லொட்ஜுக்குள்) வந்து  நடக்கும் இராணுவச் சோதனைகள், சுற்றிவளைப்புக்கள், அதிக இடங்களுக்கு வெளியே செல்லமுடியாத புறச்சூழல் என்பவற்றால் கொழும்பு லொட்ஜ் வாழ்க்கை சுருங்கினாலும், சந்திரனும், அவனது சகோதரியான தாரிணியும் அந்த வாழ்க்கையை எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்றும், தோட்டம் செய்து சுதந்திரமாக வாழும் விசாகருக்கு அது எவ்வளவு துயரமாக மாறுகின்றது என்பதுவும் எளிய வர்ணனைகளால் வாசிப்பவருக்கு கடத்தி வரப்படுகின்றது.

சிறுவனின் பார்வையால் விரிகின்றதாலோ என்னவோ, இந்தக் கதையின் மாந்தர்களின் மனிதாபிமான பக்கங்களை, அவர்களுக்கு இருக்கும்/இருக்கக்கூடிய இருண்ட பக்கங்களை விலத்திச் சொல்லப்படுவது வாசிக்கும் நம்மையும் லொட்ஜுக்குள் ஒரு பாத்திரமாக்கின்றது. தற்கொலை குண்டுதாரி, காதல், காதலினால் மூன்றாம் மாடிக்கு அழைத்துச் செல்லப்படல், அப்பாவியாய் மகஸின் சிறைக்குள் அடைப்பட்ட மகன் திரும்பி வந்துவிடுவார் எனத் தேடும் தாயார்,  அவர் தன் துயரை மறைத்து மற்றவர்களுக்கு உதவும் மனிதாபிமானம் என்பவை இந்த நாவலில் இயல்பாக வந்திருக்கின்றது. அநேகமான நம் கதைகளில் எதிர்மறைப் பாத்திரமாக வரும் லொட்ஜ் மானேஜர் கூட ஈரத்தன்மையுடையவராகவே இங்கே இருக்கின்றார்.

கனடாப் பயணங்களுக்குச் செய்யும் சுத்துமாத்துகள். வைத்திய சோதனையில் வைத்தியர்களையே ஏமாற்றும் சாதுர்யம் என்பவை போகின்றபோக்கில் சொல்லப்பட்டாலும், ஒவ்வொரு பயணமும் எவ்வளவு கடுமையானது என்பதை இவ்வாறான அனுபவங்கள் ஏதுமில்லாத ஒருவர் கூட இந்தப் புதினத்தை வாசிப்பதினூடாக உணர்ந்துகொள்ளக்கூடும்.

இப்போது ஈழம்/புலம்பெயர்ந்து எழுதப்படும் நாவல்கள் நூற்றுக்கணக்கான பக்கங்களில் எழுதப்படுவதையும் அதை வாசிக்கும்போது வரும் சோர்வையும் தொடர்ந்து கூறிக்கொண்டிருப்பவன் என்றவகையில் இந்தநாவல் 150 பக்கங்களுக்குள்ளேயே முடிந்திருப்பதும் மகிழ்ச்சி தரக்கூடியது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிகழும் அனுபவங்களுக்கு இதுவே போதுமானது. நம்மவர் பலருக்கு புனைவுகளில் இருக்கும் சிக்கல் என்னவென்றால் தேவையில்லாமலே மொழியைச் சிக்கலாக்குவது. அதைக் கூட வாசு முருகவேல் இதில் தாண்டியிருப்பது குறிப்பிடவேண்டியது.

கடந்த வருடத்தில் வந்த நம்மவரின் புனைவுகள் ஏதும்  குறிப்பிடும்படியாக இல்லை என்ற ஏமாற்றத்தை, ஒரு சிறு வெளிச்சம் போல வந்து 'கலாதீபம் லொட்ஜ்' நம்பிக்கை தருகின்றது. துவேஷம் நிறைந்த முதல் நாவலை எழுதிய ஒருவர் தனது அடுத்த நாவலில் அதைத் தாண்டி வருவது அவ்வளவு எளிதல்ல. வாசு முருகவேல் தனது முதல் நாவலின் சரிவை இதில் ஒரளவு நேர்செய்திருக்கின்றார். இன்னும் அவர் அவரது அரசியல் பார்வைகளை விரித்துச் செல்லும்போது கவனிக்கத்தக்கதொரு எழுத்தாளராகவும் அவர் விரைவில் மாறிவிடக்கூடும்.
.................................

(சித்திரை, 2019)

பயணம்: கேரளா/தமிழகம்

Wednesday, August 21, 2019

சில தெறிப்புகள்

கொச்சியில் இருக்கும் கலைக்கூடங்கள் என்னை எப்போதும் வசீகரிப்பவை. கடந்தமுறை கொச்சியிற்குச் சென்றபோது Kochi-Muziris Biennale நடைபெற்ற காலம் என்பதால் கலைகளின் கொண்டாட்டமாக இருந்தது. இம்முறை அந்தக் காலம் இல்லாதபடியால் நிரந்தரமாக அங்கே இருக்கும் கலைக்கூடங்களை மட்டுமே பார்க்க முடிந்தது. ஒருநாள் முழுதும் அவற்றைத் தேடித் தேடிப் பார்த்தேன். இந்தக் கலைக்கூடங்களில் பொதுவாக முன்பக்கத்தில் இவ்வாறான ஓவியங்கள் பார்ப்பதற்கும்/ (சிலவேளைகளில்)விற்பதற்கும் காட்சிப்படுத்தியிருப்பார்கள். அதைத்தாண்டிச் சென்றால் cafeக்கள் உள்ளே இருக்கும். இந்த இடங்களில் தனியே ஓவியங்கள் என்றில்லாது இசை, இன்னபிற விடயங்களும் நிகழ்ந்தபடி இருக்கும்.

David Hall Art Cafe யில் அற்புதமான வடிவமைப்புடன் பியானோ உள்ளிட்ட வாத்தியங்களுடன் இசை நிகழ்ச்சி நடத்தும் இடமும் இருந்தது. மற்றது கஃபேயில் ஏதும் காசு கொடுத்து வாங்காவிட்டாலும், ஆறுதலாக ஓவியங்களை இலவசமாக இரசிக்கலாம். நான் David Hallற்குப் போனபோது, அதற்குப் பொறுப்பாக இருந்தவர் தானாகவே வந்து இந்த இடத்தின் வரலாறு, இதில் காட்சிக்கு வைத்திருக்கும் ஓவியர்கள் பற்றியெல்லாம் மலர்ந்த முகத்துடன் விளக்கமளித்தார்.

உலகில் ஆயிரத்தெட்டு எரியும் பிரச்சினைகள் இருக்கும்போது கலைகள் அவசியமா என்ற கேள்விகள் இருந்தாலும், இவை நம் உள்மனதின் அந்தரங்கங்களோடு உரையாடுபவை. எப்போதும் எதையோ பெறுவதற்காய் ஓடும் வாழ்க்கையிற்கு கொஞ்சம் 'ஆசுவாசத்தை' த் தருபவை. கடந்தமுறை ஸ்பெயினுக்குப் போனபோது ஒரு மியூசியத்தின் ஒதுக்குப்புறத்தில் சின்னக் கிற்றாரை வைத்துப் பாடல்களைப் பாடிய இசைஞனின் குரலில் என்னோடு கூட வந்த நண்பர் கண்ணீர் விட்டு அழத்தொடங்கினார். Once againல் தனது மகளோடு இசை நிகழ்ச்சி கேட்கும் பெண் சட்டென்று உடைந்து அழுவாரே, அதைவிடவும் அதிகமாகவும். இவற்றுக்கெல்லாம் ஏன் என்று கேட்டால் அவர்களிடம் தெளிவான பதில் இருப்பதில்லை. ஆனால் நம் ஆழ்மனதின் எதையோ கலை தீண்டுகிறது. நாம் அதன் அலைவரிசைக்குப் போகும்போது நம்மை அறியாமலே நமக்குள் இறுக்கிப்பிடித்து வைத்திருக்கும் அழுத்தங்கள் கரைந்துபோகின்றன. நாங்கள் மீண்டும் புத்துணர்ச்சியைப் பெறுகின்றோம்.

வ்வாறே ஒருநாள் மழை பொழிவதும் விடுவதுமாக இருந்த இரவு வேளையில் கொச்சியிலிருந்த பிரின்ஸஸ் வீதியில் நடந்துகொண்டிருந்தேன். திண்ணை வைத்த சிறு காலரியில் நீண்ட தாடி வைத்த, வேட்டியை மடித்துக்கட்டிய ஒரு ஓவியர் தன்பாட்டில் பேசியபடி ஒரு பெரிய கான்வாஸில் வர்ணங்களை விசிறியபடி இருந்தார். நான் அவர் வரைவதை வெளி இருட்டிலிருந்து பார்த்துக்கொண்டிருக்க, எனது மனது என்னையறியாமலே எடையற்றுப் போய்க்கொண்டிருப்பது போல உணர்ந்தேன்.அவரோடு பேச விரும்பியபோதும், அவர் தன் ஓவியத்தோடு தோய்ந்துவிட்ட அந்த மனோநிலையைக் குழப்பிவிடக்கூடாதென்ற கவனத்துடன் அவர் என்னைப் பார்க்கமுன்னரே விலத்திப் போயிருந்தேன்.

உண்மையாகவே கலையில் தோய்ந்த மனங்கள் தம்மை முன்னிறுத்துவதில்லை. தம் கண்களுக்குப் புலப்படாத யாருக்காவோ அவர்கள் வரைந்துகொண்டோ, இசைத்துக்கொண்டோ, எழுதிக்கொண்டோ இருக்கின்றார்கள். அந்த அலைவரிசையை நாம் சரியாகக் கண்டுபிடிக்கும்போது அந்தக்கலை நமக்கான கலையாகவும் ஆகிவிடுகின்றது.

தொடுபுழாவில் நின்றபோது லெவின் என்றொரு நண்பரைச் சந்தித்திருந்தேன். மிகச் சுவாரசியமான மனிதர். எந்த விடயம் கேட்டாலும் அதுபற்றித் தெரிந்திருப்பார். சில ஆண்டுகளுக்கு முன்னர் கார் விபத்தைச் சந்தித்து, அதன் விளைவுகள் உடனே தெரியாதுவிடினும் 6 மாதங்களின் பின் அது நரம்புகளைத் தாக்கியது அறிந்தபோது அவரது இரண்டு கால்களும் பாதிப்புற்றிருப்பது தெரிந்திருக்கிறது. அதனால் இப்போது நடப்பது என்பதே ஒரு பெரும் வேதனையான விடயம் அவர்க்கு. நாங்கள் 1 நிமிடத்தில் நடக்கும் தூரத்திற்கு அவருக்கு ஆகக்குறைந்தது 15-20 நிமிடங்களாவது எடுக்கும். ஒவ்வொரு அடியையும் மிக மெதுவாக எடுக்கவைக்கவேண்டும். எனினும் இவ்வாறு ஆகியதற்கு இப்போது கவலைப்படுவதில்லை எனச் சொல்லும் வாழ்வின் மீதான அளப்பெரும் காதல் கொண்டவர்.

ஏதோ ஒரு பேச்சின்போது கேரளாவில் முதன்முதலில் தமது தாத்தாதான் விதவையான பெண்ணை மறுமணம் செய்துகொண்டவர் என்றும் அதனால் தாம் ஊரிலிருந்து விலக்கப்பட்ட குடும்பம் எனவும் சொன்னார். இப்படிச் செய்ததால் அவரின் பாட்டியும், அவரின் தாத்தாவும் பெரும்பாலானோர்க்குக் கேரளாவில் தெரிந்தவர்கள் என்று அவர்களின் பெயரையும் ஊரையும் சொன்னார், நான்தான் இப்போது அவற்றை மறந்துவிட்டேன்.

நம்பூதிரிகளான அவருக்கு எப்படி லெவின் என்ற பெயரென இன்னொரு கேரள நண்பர் ஆச்சரியப்பட்டார். டால்ஸ்டாயின் அன்னா கரீனாவில் வரும் லெவின் பாதிப்பில் வைத்திருக்கலாமென நான் சும்மா நகைச்சுவைக்காகச் சொன்னேன். ஆம், டால்ஸ்டாயை வாசித்த தனது தாத்தாதான் அந்தப் பெயரைத் தனக்கு வைத்தார் என்று லெவின் சொன்னது இன்னொரு வியப்பு.
அவர்தான் கொச்சினில் நல்லதொரு பிரியாணிக்கடை சொல்லுங்கள் என்றபோது, Kayeesஐ கைகாட்டினார். அங்கே எப்போதும் சனம் குழுமிக்கொண்டிருந்தாலும், பிரியாணி தவிர்ந்து வேறு எந்த உணவும் இல்லை என்பது அந்தக் கடையின் சிறப்பு. ரூபாய் 150ற்கு வயிறு நிரம்பச் சாப்பிடுமளவுக்கு மட்டுமல்ல சுவையாகவும் இருந்தது.

'Oru Visheshapetta Biriyani Kissa' என்ற அண்மையில் வந்த மலையாளத் திரைப்படமும் பிரியாணி பற்றியே பேசுகின்றது. கோழிக்கோட்டிலிருக்கும் ஒரு மசூதியில் ஒவ்வொரு ஞாயிறும் ஒரு ஹாஜியார் இலவசமாக பிரியாணி வழங்குகின்றார். ஊரே அந்தப் பிரியாணிக்கு அடிமையாக இருக்கின்றது. ஊர்ப்பெரியவரான ஹாஜியார் தனது காலமான மனைவியின் பெயரில் இதைப் பல வருடங்களாகச் செய்துவருகின்றபோது, 20 வருடங்களுக்கு மேலாக அங்கே பிரியாணி செய்துகொண்டு இருக்கும் ராஜன் என்ற சமையல்காரர் மரணமடைய, தொடர்ந்து பிரியாணி வழங்குவதில் வரும் சிக்கல்களைப் பற்றிப் பேசும் படமிது. சில வெளிப்படையான குறைகள் இதிலிருந்தாலும் சிரித்தபடி பார்க்கலாம். இறுதியில் அந்தப் பிரியாணி வாசந்தான் ஒரு தற்கொலையைத் தடுக்கிறது, ஊர் மக்களைச் சேர்த்து வைக்கின்றது. முதிய/நடுத்தர வயதில் இருக்கும் இருவர்க்கிடையில் வரும் காதலை ஊருக்குப் புரிந்துகொள்ளவும் வைக்கின்றது.

கொச்சியில்  எழுந்தமானமாக உலாவிக்கொண்டிருந்தபோது Ginger House என்கின்ற மியூசியமும், உணவகும் சேர்ந்திருந்த இடத்துக்குள் நுழைந்திருந்தேன். மழை பொழிந்துகொண்டிருந்த காலம் என்பதால் சனங்கள் உள்ளே அவ்வளவாக இருக்கவில்லை. கப்பச்சினோவைப் பார்த்தபடி சொல்லிவிட்டு  சாம்பல் பூசிக் கிடந்த கடலைப் பார்த்தபடி இருந்தேன்.

புராதனமான பொருட்களை வைத்து இதை அழகுபடுத்தி இருந்தார்கள். அநேகமான பொருட்கள் மரத்தாலேயே செய்யப்பட்டிருந்தன. பிரமாண்டமான நடராஜர் சிலையை 1900களின் நடுப்பகுதியில் யாரோ ஒரு செட்டியார் கோயம்புத்தூரிலிருந்து கொச்சினிலிருந்த யாருக்கோ கொடுத்ததாக அதனடியில் பொறிக்கப்பட்டிருந்தது. உள்ளே நீண்ட கப்பலும் அழகாகப் பராமரிக்கப்படுகின்றது. மிகுந்த மனோரதியத்தையும், அமைதியையும் தரக்கூடிய இடம்.

கொச்சிக்குப் போகின்றவர்கள் இதைத் தவறவிடக்கூடாது என்றால் எவரும் கேட்கப்போவதில்லை என்பதால் அண்மையில் வந்த செல்வராகவனின் NGK படத்தில் 'அன்பே பேரன்பே' பாட்டின் தொடக்கக்காட்சிகள் இங்கேதான் எடுக்கப்பட்டிருக்கிறது, உங்கள் காதலிகளுடன் சென்று பாருங்கள் என்றால்தான் நம் தமிழ் மனதின் ஆழத்திற்குச் சென்று தைக்கும் என்பதால் அதையும் குறிப்பிட்டு விடுகின்றேன்.


துரையிலிருந்த ஆனைமலைக்குப் போவதற்கு என்று தீர்மானித்ததே முக்கியமாய் சமணச் சிற்பங்களைப் (மலையில் குடைந்திருக்கும் தீர்த்தங்கரர்களை) பார்ப்பற்காகவேயாகும். ஆனால் துயரம் என்னவென்றால் நாங்கள் போனபோது அதைப் பார்ப்பதற்குச் செல்லும் வழி பூட்டப்பட்டிருந்தது. சிலவேளைகளில் காலை என்பதால் பூட்டப்பட்டிருக்கலாம், அருகிலிருக்கும் நரசிங்கர் கோயிலை முதலில் பார்த்துவிட்டு வருவோம் என்று போனோம். திருமாலின் உக்கிரவடிவினரான நரசிங்கரைப் பாறையில் வைத்துச் செதுக்கியிருக்கின்றனர். நரசிங்கர் இருப்பது மாதிரி இந்த ஆனைமலையில் இன்னும் நிறைய குடகுக்கோயில்கள் இருப்பதாகவும் அதில் பெரும்பாலானவை சிவனுக்குரியவை என்றும் எங்கையோ வாசித்ததாக நினைவு.சைவமும், சமணமும் தளைத்தோங்கிய ஓரிடத்தில் வைஷ்ணவம் முக்கியமான அடையாளமாக இன்றையகாலத்தில் தன்னை நிலைநிறுத்தியிருப்பதன் வரலாற்றை மதுரையை முன்வைத்து வாசிப்பதுகூட ஒருவகையில் சுவாரசியமாக இருக்கக்கூடும்.

நரசிங்கரைப் பார்த்துவிட்டு வரும்போதும் சமணர் சிற்பங்களைப் பார்க்கும் வழி பூட்டப்பட்டிருந்தது. அருகிலிருந்தவர்களிடம் இது எப்போது திறக்கும் என்று விசாரித்தபோது, யாரோ ஒருவரிடம் திறப்பு இருக்கிறது, அவர் வந்தால்தான் திறப்பார் எனச் சொன்னார்கள். எங்களைக்கூட்டி வந்த வாகன சாரதி, சரி கள்ளழகர் கோயிலைப் பார்த்துவிட்டு திரும்பவும் மாட்டுத்தாவணிக்குப் போகும்போது பார்க்கலாம் என்றார். கள்ளழகரையும், பழமுதிர்ச்சோலை முருகனையும் பார்த்துவிட்டுத் திரும்பியபோதும் அது பூட்டப்பட்டிருந்தது. எனக்கு வந்த ஏமாற்றத்தில், நான் அந்தச் சாரதி அண்ணாவிடம், படலை ஏறித் தாண்டிப் போய்ப் பார்க்கட்டா எனக் கேட்டேன் (படலை தாண்டினாலும் ஒரு அரைமணித்தியாலம் மேலே ஏறினால்தான் அந்தச் சிற்பங்கள் வரும்). இறுதிவரை அங்கிருந்த மகாவீரரையோ, பார்சுவ நாதரையோ, அம்பிகாவையோ பார்க்க முடியாது போனதில் கவலையாகவே இருந்தது.

அதுபோலவே திருமலைநாயக்கர் மஹாலைப் பற்றி வாசித்தும், திரைப்படங்களில் பார்த்தும் மிகப்பெரும் கனவுகளுடன் அங்கே போயிருந்தேன். ஒரளவு கவனமாகப் பராமரித்தாலும் முதன்மை மண்டபத்தில் புறாக்களின் அட்டகாசத்தால் எந்த இடத்திலும் கால் வைக்கமுடியாது இருந்தது. இத்தனைக்கும்  அங்கே துப்பரவு செய்து தொழிலார்கள் அடிக்கடி அதைச் சுத்தப்படுத்தியபடியே இருந்தார்கள். வெளியில் நிறையச் சிலைகள் உடைந்த/உடைக்கப்பட்ட நிலையில் வெயிலில் வாடிக்கொண்டிருக்கையில் நமக்குப் புராதனங்கள் மீது எவ்வளவு 'அக்கறை' என்பது விளங்கியது. உள்ளேயிருந்த ஒரு மண்டபம் மட்டுமே அருமையாகப் பராமரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

சென்னையிற்கு வந்து நின்றபோது, தங்கி நின்ற விடுதியில் அருகில் இருக்கும் இடங்களைப் பார்க்க, நடந்துபோயிருந்தேன். அப்படி உலாப்போனபோது ஏதாவது சுவாரசியமான இடம் இருக்கா என்று தேடியபோது 10 downing street pub இருப்பதாய் கூகிள் ஐயா கூறினார். அட இது நமது சாரு அடிக்கடி போகும் இடமாயிற்றே, அங்கே அவரைச் சந்திக்க முடியாவிட்டால் கூட, நாயோடு நடையுலா வரும் த்ரிஷாவையாவது தற்செயலாகச் சந்திக்கலாம் என்ற பேராசையுடன் வெயிலையும் பொருட்படுத்தாமல் போனேன். துயரம் என்னவென்றால் அந்த இடத்தைச் சுற்று சுற்றிப் பார்த்தபோதும் அது எங்கையோ மறைந்து போயிருந்தது. அருகிலிருந்த மசூதியை, அப்படியே அதற்கருகில் இருந்த தெருக்களில் தொலைந்து குறுகிய 'சந்து'களுக்குள்ளால் போய் ஒரு சிறுதெய்வக் கோயிலை எல்லாம் பார்த்தேன். ஆனால் 10 downing pub மட்டும் drowning ஆகிவிட்டது.

பிறகு திரும்பும் வழியில் 'தானியம்' இயற்கை அங்காடியைக் கண்ட மகிழ்ச்சியில் உள்ளே போய்ப்பார்த்தபோதுதான், இந்த 'கருப்பட்டி கடலை மிட்டயை'ப் பார்த்தேன். இதை அறிமுகப்படுத்திய ஸ்டாலினையும் (குக்கூ ஊடாகவோ அல்லது ஜெயமோகனின் தளத்தின் ஊடாகவோ, எதுவென மறந்துவிட்டேன்), அவர் தன் பொறியியல் தொழிலை விட்டுவிட்டு தனக்குப் பிடித்த விடயமான பனங்கருப்பட்டித் தயாரிப்புக்குத் திரும்பியதையும் வாசித்திருந்தேன்.

வாழ்விலும் (முகநூலிலும்) நிறைய எதிர்மறைகளைப் பார்த்தது, இப்போது அவற்றை இயன்றவரை விலத்தி வரப் பிரயத்தனம் செய்பவன் என்றவகையில் ஸ்டாலின் போன்றவர்களும், நேர்மறையாக வாழ்வைத் தரிசிக்க விரும்பும் அவர்களின் விடாமுயற்சிகளும் வசீகரிக்கின்றன.

--------------------------------------------------------------

நன்றி: 'அம்ருதா' ‍ ஆவணி, 2019

நினைவுச் சுழல்

Thursday, August 08, 2019



சுழி - 01

திங்கள் காலையைக் கடப்பதைப் போல கடினமான பொழுது வாரத்தில் வேறெந்த நாளிலும் வருவதில்லை. இலைதுளிர்காலத்திற்குரிய மழை பொழிந்து கொண்டிருந்ததோடு, எப்பவும் பிடித்தமான சாம்பல் நிறத்தை வானம் போர்த்தியுமிருந்தது. ஒரு அஞ்சலோட்ட வீரனைப் போல முன்னே பாய்ந்து கொண்டிருக்கும் காலத்திடம், எதையோ கொடுத்துவிடும் தவிப்புடன் நின்று நிதானிக்க முடியாது ஓடவேண்டியிருக்கிறது.

வாரவிறுதியில் பின்வளவில் இரைதேடியலைந்த கறுத்த நிற அணிலையும், இரண்டு முயல்களையும் அவதானித்தபடி உன்னோடு பேசிக்கொண்டிருந்தேன். ஒருநாள் தற்செயலாய்க் கரைந்த காகத்தின் ஒலியை மரங்களிடையே தேடித்தேடிப் பதிவு செய்ததைச் சொல்லியபோது, புலூனிக்குஞ்சுகளும் காகங்களும் இணைந்தே குரலெழும்புகின்றவை என எங்கேயோ வாசித்ததையும் நினைவூட்டினாய்.
நெகிழ்வாய் இருக்கும்போதெல்லாம் பனியில் மட்டுமில்லாது மழையிலும் நனைகின்ற மனதுடையவனாக மாறியிருப்பது எனக்கே ஓர் அதிசயந்தான். பின் 'டெக்'கில் தலைசாய்த்துப் படுத்தபடி மரங்களின்/மலர்களின் வாசனையுடன் நிர்மலமான வானத்தில் அலைந்து திரியும் பறவைகளோடு கூடவே சிறகடிக்கும் மனது எப்போது என்றில்லாவிட்டாலும் அவ்வப்போதாவது வாய்த்துவிடுகிறது. நம்மை நாமே மறக்கின்ற நிலைதான் பித்துநிலையெனில் அது நேசத்திலும் இயற்கையிலும் தோய்ந்துவிடுகின்றபோது மின்னலாய் தெறித்துவிடத்தான் செய்கிறது.

வேலையை விரைவில் விட்டுவிடப்போகின்றேன் எனச் சொன்னேன். அதன் பிறகு என்ன செய்யப்போகின்றேன் என நீ கேட்கவுமில்லை, என்ன செய்யப் போகின்றேன் என்று எனக்குந் தெரியாது.

பதினாறு வயதுவரை போரிலிருந்து மீட்சி கிடைக்குமென நம்பியதேயில்லை. புலம்பெயர்ந்த நாடொன்றுக்கு வரும்வரை இன்னொரு வாழ்வு வாய்க்குமென கனவு கண்டதுமில்லை. இனி வீழ்ச்சியில்லை என நம்பிக்கை துளிர்த்த பொழுதில் தற்கொலையோடும் அறிமுகமாக வேண்டியதாயிற்று. ஆக, அனைத்துமே அதன் அதன் இயல்பில் நடக்கவேண்டிய நேரத்தில் நடக்கும்போது எதைத் திட்டமிடுவது? ஒழுங்குகளின் வழியே கட்டமைப்புக்களின் சட்டங்களில் வழியிலேதான் வாழ்வு நகர்கின்றது எனச் சொல்பவர்கள் கொடுத்துவைத்தவர்கள். அதிலிருந்து விலகி அல்லது விலக்கப்பட்டு நகரவிரும்புகின்றவர்களும் இவ்வுலகில் இருக்கின்றார்களில்லையா?

ததும்பி வழியும் உன் பிரியத்தை ஏற்றுக்கொள்வதில் என்னளவில் சில தடங்கல்களும், இன்னமும் கழுத்தை விட்டு அகலாது, நானாய் அருந்திக்கொண்ட விசத்தின் இறுதித்துளியும் மிச்சம் இருக்கிறது. நீ பின் தொடரும் மனுசகுமாரன் சிலுவையில் அறையப்பட்ட நாளில் என் தடுமாற்றங்களையும், துயரையும் கூடவே கரைத்துவிட விரும்புகின்றேன் எனச் சொன்னேன்.
.
நிதானமாய்க் கேட்டபின், “காயப்பட்டவனின் மனசுக்கு... என்றபடி என்னை இறுக்கவணைத்துச் சிரித்தாய். இந்தளவு இயல்பாய் உன்னைப்போல என்னால் கடந்துபோயிருந்திருக்கமுடியாது. ஆகவேதான் அழுக்காறும் அவாவும் உடைய ஆணாக இன்னும் இருக்கின்றேன் போலும்.

தமக்கான சிலுவைகளில் தங்களைத் தாங்களே அறைந்து கொண்ட எத்தனையோ பேரின் பாவங்களை இரட்சிக்கும்பொருட்டு மனுசகுமாரன் மீண்டும் மீண்டும் உயிர்த்த ஞாயிறுகளில் எவரினூடாகவோ தோன்றியபடியிருக்கின்றார்.

என் 'பாடு'களைத் தாங்கியபடி என்னைச் சிலுவையை விட்டு இறக்குபவள் - நீ.


சுழி - 02

தெரிவுகளின்றி ஒருபோதும் வாழ்வு நகர்வதில்லை எனினும் ஏன் தேர்வுகளின்போது எதையோ விலத்திவரவேண்டியிருக்கிறது. எதற்காக எவரையோ காயப்படுத்த வேண்டியிருக்கின்றது. காலம் விந்தைகளை மட்டுமில்லை இவ்வாறான பொழுதுகளில் கடுமையான நெருக்கடிகளையும் மனிதர்க்கு ஏற்படுத்திவிடுகின்றது.

ஒரு பூங்காவிற்கும் இன்னொரு பூங்காவிற்கும் இடையிலிருக்கும் மூன்று கிலோமீற்றர்கள் இடைவெளியில் அடிக்கடி நடந்துபோவதுண்டு. அவ்வப்போது சைக்கிளில் பறப்பதுமுண்டு. எப்போதும் சலசலத்தபடி நகர்ந்துகொண்டிருக்கும் சிற்றாறு மழைபெய்யும்போது பெருகிப்பாய்வதையும், நெடிதுயர்ந்த மரங்களின் பெரும் மெளனத்தையும், நெருக்கமாய் இருக்கும் காதலர்களின் குறுகுறுப்புக்களையும், அவ்வப்போது குறுக்காய்ப் பாயும் முயல்களையும் பார்த்தபடிப் போகும் உலாத்தலின்போது ஒருவர் அறிமுகமானார்.

சிலரோடான உறவுகள் அறிமுகங்களோடு முடிந்துவிடுவதுண்டு. இவரோடு நிறையக் கதைக்கலாம் போல அப்படியொரு வாஞ்சையான முகத்தோடு இருந்தார். உலாத்தியபடியோ அல்லது உட்கார்ந்தோ கதைகள் பல பின்னர் பேசியதுண்டு. 

ஒருநாள் நாங்கள் மனதின் ஆழங்களுக்குள் சொற்களால் இறங்கிக்கொண்டிருந்தபோது, தான் தற்சமயம் இரு பெண்களை நேசித்துக்கொண்டிருப்பதாய்ச் சொன்னார். சாத்தியமா அல்லது சமாளிக்கமுடியுமா என்று நான் கேட்கவில்லை. அவரவர் அவர்க்கான அறத்தை எழுதிக்கொள்வதில் தவறேதுமில்லை.

ஒருத்தி நீ எப்படியென்றாலும் இரு, நான் எப்போதும் நேசிப்பேன்எனச் சொன்னதாய்ச் சொன்னார். இன்னொருத்திநீ என்னைத்தான் எப்போதும் நினைத்துக்கொள்ளவேண்டும்என அடிக்கடி அதட்டிக்கொண்டிருப்பாள் என்றார்.

இரண்டு பேரையும் தனக்கு நன்கு பிடிக்கும். தன் தெரிவுகளின் நிமித்தம் யாரையும் காயப்படுத்த தனக்கு விருப்பமில்லை என்றார். ஒரு காதல் முடிந்துதான் இன்னொருகாதல் வரவேண்டும் என்பது நியதியா? ஒரே நேரத்தில் பல காதல்கள் இருக்கக்கூடாதா என்ன? எவரும் நியாயம் கேட்டு வராதவரைக்கும், நாம் நீதிபதிகளாய் முகமூடிகள் அணியவும் முடியாது.


னிக்காலத்தில் ஒருநாள் நோய்மை பீடித்திருந்தபொழுதில் குளிரை நேரடியாகச் சந்திப்பதே வீரமென எண்ணி இந்த பூங்காக்களுக்கிடையில் மூசிமூசி நடந்தபடியிருந்தேன். தற்செயலாக அதே நண்பர் நாயுடன் நடந்து வந்துகொண்டிருந்ததார். என்னைப் போலவே இந்தக்குளிருக்குள்ளும் நடக்க வேறு சில பைத்தியங்களும் இருப்பதையிட்டு சிரிப்பு வந்தது, அடக்கிக்கொண்டேன்.

'எப்படி உங்கள் காதலிகள் இருக்கின்றனர்?' என்றேன். நமக்குத்தான் பெண்களும் புத்தகங்களும் இல்லாது வேறு உலகம் உருளாதே.

'எனக்கு இப்போது ஒரு புதுக்காதலி கிடைத்துவிட்டார்' என்றார்.

என்னது இவர் மூன்றாவதாக இன்னொருவரையும் சமாந்தரமாக நேசிக்கத்தொடங்கிவிட்டாரோ என்று யோசித்தேன். அவரே தொடர்ந்தார்.

'இவளைக் கண்டவுடன் மற்ற இருவருக்கும் விடைகொடுத்துவிட்டேன்' என்றார்.

எனக்குச் சற்று அதிசயமாக இருந்தது. தேர்வுகளில் நம்பிக்கை இல்லை என்றவர் .எப்படி இது சாத்தியமென 'ஏன்?' எனக் கேட்டேன்.

'
இல்லை. இவளும் இவளின் நான்கு நான்குவயது மகளும் என்னை அப்படிக் கவர்ந்திழுக்கின்றனர். இந்த நேசம் மற்ற எல்லாவற்றையும் எளிதில் விலத்திவைத்துவிட்டது' என்றார்.

'மகளுள்ள பெண்ணை நேசித்தால் உலகில் மாபெரும் தியாகம் செய்ததாய் நினைத்துவிட்டீர்கள் போலும்' என அவரைச் சீண்டினேன்.

'அப்படியேதுமில்லை' என்றார் சற்று தீர்க்கமான குரலில்

'அது சரி எப்படி உங்களின் மற்றக் காதலிகளுக்கு இதைத் தெரியப்படுத்தினீர்கள்'

'
தெரிவுகள் எப்போதும் கடுமையானதுதான். யாரையோ காயப்படுத்தத்தான் வேண்டியிருக்கின்றது. ஆனால் நான் எதையும் சொல்லாமல் அவர்களுக்கு உணர்த்தியது ஒன்றே ஒன்றுதான்'

'
என்னது?'

'
நாளை அவர்களுக்கும் குழந்தைகள் பிறந்து, அவர்களுக்குப் பிரியமான துணைகளைச் சடுதியாய்ப் பிரிந்துபோக நேரிடலாம். அப்படி நிகழ்ந்தாலும் அவர்களையும், அவர்களின் குழந்தைகளையும்  அளவற்று நேசிக்கவும் என்னைப் போல நிறையப்பேர் இந்த உலகில் இருப்பார்கள் என்பதை மட்டும்' என்றார்.

ஒருவகையில் பார்த்தால் அவரின் இரண்டு காதலிகளுக்கும் இதைவிட மிகச்சிறந்த நம்பிக்கையை அவரால் கொடுத்திருக்க முடிந்திருக்காது போலவும் எனக்குத் தோன்றிற்று.


சுழி - 03

'நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது' என்பதுபோல இரண்டாண்டுகளுக்கு மேலாக‌ தன் வாழ்வை தானே தீர்மானித்து, விரும்பியபோது அலைந்தும் திரிந்தவனுக்கு ஒரு அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. வேலையில் மட்டுமல்ல, உறவுகளுக்காய், அவர்களின் பிரியங்களுக்காய் ஓரிடத்தில் தன்னை நிலை நிறுத்திக்கொள்வது கூட கடினமானதுதான்.

நீ வேலை கூட செய்யத்தேவையில்லை என்னோடு எப்போதும் இருந்தாலே போதும், உனக்கான எல்லாவற்றையும் நானே செய்து தருகின்றேன் என்றவளின் நேசத்தைக் கூட இந்த நாடோடியாக அலைகின்ற பெருங்கனவுக்கு முன் விலத்திவிட்டே அவனுக்கு வரவேண்டியிருந்தது. உண்மையிலே இந்தக் கனவு அவனுக்குள் எதனாலும் அணையமுடியாது மூசி எரிகிறதா இல்லை அதை வைத்துப் பாவனைகளைத்தான் செய்கின்றேனோ என அவனுக்குப் பிரியங்களை இழக்கின்ற ஒவ்வொருபொழுதும் தோன்றியிருக்கின்றது.

ஒரு பொழுது அவனின் நாடோடித்தடங்களைப் பின்பற்றியபடி ஒருத்தி வந்தாள். தனக்கு இது வலிகளை ஆற்றுப்படுத்தும் காலம், காதலிப்பதற்கான மனோநிலை இல்லை என்றான் அவன். நான் உன்னிடம் சம்மதங்கேட்டு நேசத்தை யாசிக்கப்போவதில்லை. உன்னை என்றென்றும் என் நித்திய காதலனாக ஆக்கிக்கொள்ளப் போகின்றேன் என்றாள். இவனுக்குத் தமிழ்ச்சூழலில் 'நித்திய காதலர்களின்' தீராத விளையாட்டுக்கள் தெரியும் என்பதால், நித்திய காதலனா என்றொரு எள்ளல் உதடுகளில் எட்டிப்பார்த்தது.

பிறகான காலங்களில் நீ யாரையும் நேசிக்கலாம், எனக்கு அதைச் சொல்லக்கூடத் தேவையில்லை. ஆனால் எப்போதும் உன்னை நேசித்துக்கொண்டிருப்பேன் என்றாள். ஏன் இவ்வளவு பைத்தியக்காரியாக இருக்கின்றாள் என்பதைவிட இப்படியும் ஒருத்தி காதலிக்கமுடியுமா என்பதில் அவனுக்கு வியப்பு வந்தது.

உனக்கு நான் நித்திய காதலனாக இருந்தால், என் வாழ்நாளில் இனி நான் என்றென்றைக்கும் காதல் இல்லாது இருக்கும் காலம் வரவே வராது என‌ நகைச்சுவையாகச் சொன்னான் அவன்.


ருமுறை அவன் 'நான் வேலையை விடுத்து சும்மா என் வாழ்வை வேடிக்கை பார்த்தபடி இருக்கின்றேன்' என்று சொன்னதற்காகவே ஒரு காதல் அவனைத்தேடி வந்தது. பின்னர் இன்னொருமுறை, 'நான் பயணம் செய்வதற்காக வேலை செய்துகொண்டிருக்கின்றேன்' என்று சொன்னதற்காய் வேறொரு நேசம் வந்தது.

எதெதெற்காக எல்லாம் பெண்களுக்கு இன்னொருவர் மீது பிரியம் வருகின்றதென நினைக்க இவனுக்கு இன்னும் குழப்பமாக இருந்தது. எவராயினும் அவர் இயல்பில், அதிகம் நாடகீயத்தன்மை இல்லாது இருந்தால் அவர்களை நேசிப்பதற்கு மனிதர்கள் வருவார்கள் போலுமென நினைத்துக்கொள்வதை விட வேறு பதில்களே இல்லைப்போலும்..

கடக்கக் கடினமான பனிக்காலத்தைக் கடந்த அவன் இந்த வருடத்தில் எவரையும் நேசிப்பதில்லை என முடிவு செய்திருந்தான். எவரையும் நேசிப்பதில்லை என்பதன் மறுபுறத்தில்தானே எல்லோரையும் நேசிக்கலாமென்கின்ற இன்னொரு பக்கமும் மறைந்திருக்கின்றது.

வசந்தகாலம் போல அதன் இயல்பில் மலர்வது நேசம் என்க‌.

மேலும் நினைவில் அவனுக்கு இன்னமும் காடுகள் உள்ளன‌."
……………………………………………………..

ஓவியங்கள்: ஊக்ரா
(நன்றி: 'அம்ருதா' ‍ ஆடி, 2019)