கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

இரட்டை இயேசு - வாசிப்பு

Wednesday, October 09, 2024

விஜய ராவணனின் 'இரட்டை இயேசு' அண்மையில் வாசித்தவற்றில் முக்கியமான சிறுகதைத் தொகுப்பு எனச் சொல்வேன். எனக்கு முன்னரான தலைமுறை 15 சிறுகதைகளைச் சேர்த்துத் தொகுப்புக்களை வெளியிட்டது. 10 வருடங்களுக்கு முன் என்னைப் போன்றோர் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டபோது 12 சிறுகதைகளாவது அதில் இருந்திருக்கின்றன. இப்போது 6 சிறுகதைகளோடும் ஒரு தொகுப்பு வெளியிடலாம் என்பதற்கு 'இரட்டை இயேசு' ஓர் உதாரணமாக இருக்கின்றது.

இதில் 'தங்கமீனும்', 'ஆரஞர் உற்றன கண்'ணும் போர்சூழலின் பின்னணியில் இருந்து வந்தவர்களின் கதைகளைக் கூறுகின்றது. அதிலும் 'தங்கமீன்' மிகத் தத்ரூபமாக எழுதப்பட்டிருக்கின்றது. நேரடியாகச் சொல்லப்படாவிட்டாலும் ஜெரூசலத்துக்காக உரிமைகோரும் பாலஸ்தீனியப் போராளியும், இஸ்ரேலிய இராணுவத்தினனுமே இங்கே முக்கியமான பாத்திரங்கள். தங்கமீன்களைப் பிரசவித்துக் கொண்டிருக்கும் பெண்ணின் ஊடாக சமாதானம் பேசப்படுகின்றது. அதிலும் தங்கமீன்களை காவிக் கொண்டிருப்பவர்க்கு, போரின் மத்தியில் மரணம் நிகழாது என்கின்ற படிமம் என்னை அவ்வளவு கவர்ந்திருந்தது.

அதுபோலவே தங்கமீன்கள் எப்படி ஒரு பாலஸ்தீனியச் சிறுவனிடமிருந்து இஸ்ரேலியச் சிறுவனுக்கு கைமாற்றப்படுகின்றது என்பதைச் சித்தரிக்கும் இடமும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. இறுதியில் தமது பால்யகாலத்தைப் பேசிக் கொண்டிருந்த போராளியும்/இராணுவத்தினனும் பிரிந்துபோகும்போது எடுத்துச் செல்லும் துப்பாக்கிகள் ஒரேயிடத்தில் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பப்பட்டவையாக இருப்பதை ஆசிரியர் உணர்த்துவது இன்னும் சிறப்பானது. எங்கோ தொலைவில் இருக்கும் நாடுகள் தமது பொருளாதாரப் பேராசைக்காக அப்பாவி மனிதர்களைப் பலிவாங்கும் ஆயுதங்களை தொடர்ந்து உற்பத்தி செய்து விற்றுக்கொண்டிருக்கின்றன என்கின்ற அரசியல் இந்தக் கதையில் மிக நுட்பமாக உணர்த்தப்படுகின்றது.

வ்வாறே 'இன்னொருவன்' என்கின்ற கதையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. தனித்து வேலை செய்து கொண்டிருக்கும் ஒருவன் சென்னையில் வசதியான இடத்துக்கு ஒரு புரோக்கரால் குறைந்த வாடகையில் ஒரு இடத்தைப் பெற்றுக் கொள்கின்றான். அந்த வீடும் அதன் சூழலும் ஒருவித மர்மமாக இருக்கின்றது. யாரோ எங்கோ இருந்து தொடர்ந்து பந்தை நிலத்தை எறிந்து சத்தங்களை எழுப்பியபடி இருக்கின்றனர். ஒருநாள் வாடகைக்கு இருப்பவன் சத்தத்தைப் பின் தொடர்ந்து சென்று, ஒரு கண்ணாடிக்குப் பின் உள்ளிழுக்கப்படுகின்றான். அங்கே வேறொரு உலகமும், வேறான மனிதர்களும் இருக்கின்றார்கள். அந்த கண்ணாடிகளிலான உலகில் அவன் தொடர்ந்து இருந்தானா, அதிலிருந்து தப்பி வந்தானா என்பதை சுவாரசியமாக இந்தக் கதை சொல்கின்றது.

இத்தொகுப்பில் 'என்றூழ்' என்கின்ற கதையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று. எப்படி ஒரு அறிவியல் கதை எழுதப்படவேண்டும் என்று முன்னுதாரணமாகக் கொள்ளக்கூடிய கதை. செயற்கை நுண்ணறிவால் இயங்கும் ஒரு ரோபோவுக்கு தன்னியல்பிலே அறிவு வந்து மனிதர்களைப் போல உணர்வுகளும், ஆசைகளும் வந்தால் மனிதர்கள் அதை எப்படி எதிர்கொள்வார்கள் என்பதைச் சொல்கின்ற அருமையான கதை. இதை அறிவியல் சொற்கள் நிரப்பி வாசகர்களைப் பயமுறுத்தாது, மிக எளிமையாக அதை சமயம் அறிவியல் உண்மைகளில் சமரசம் செய்யாது, வாசிப்பில் எவ்விதத் தொய்வுமில்லாது மிக நேரத்தியாக இந்தக் கதை எழுதப்பட்டிருக்கின்றது.

சமகாலத்தில் எழுதப்படும் பெரும்பாலான கதைகளும்/கதைத் தொகுப்புக்களும் ஒருவித சோர்வைத் தருகின்றதாக இருக்கையில், 'இரட்டை இயேசு' தொகுப்பு வாசிப்பில் அவ்வளவு புத்துணர்ச்சியைத் தருகின்றது. புதிதாக எழுத வருகின்றவர்களும், ஒரு சில குறிப்பிட்ட எழுத்தாளர்களை மட்டும் பின் தொடர்கின்றவர்களும் இத்தொகுப்பைக் கட்டாயம் வாசிக்கவேண்டுமெனப் பரிந்துரை செய்வேன். தமிழில் கதைகள் சொல்லும் வெளிகளை இன்னும் எவ்வளவு தூரம் நீட்சித்துப் பார்க்கலாமென்பதற்கும், மொழியில் எப்படி நுட்பமான விளையாட்டுக்களைச் செய்து பார்க்கலாமென்பதற்கும் இத்தொகுப்பில் இருக்கும் கதைகளை முன்வைத்து உரையாடிக் கொள்ள முடியும்.


*************

(Sep 05, 2024)

0 comments: