கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 94

Friday, May 30, 2025

 

ராப் பாடகர் வேடன் குறித்து நானொரு பதிவை எழுதியபின் நண்பரொருவர் மாயா, வேடன், வாகீசன் இராசையா போன்றவர்களின் பாடல்களில், எப்படி  ஈழப்போராட்டம்/ தமிழ் அடையாளம் வெளிப்படுகின்றது என்பதைப் பற்றி விரிவாக எழுத வேண்டுமெனக் கேட்டிருந்தார். சொன்னது மட்டுமில்லாது வாகீசன் இராசையா, இரத்தி அதித்தன் போன்றவர்களின் படைப்புக்களையும் என் பார்வைக்காய் அனுப்பியிருந்தார். அப்படியொரு கட்டுரை எழுதினால் அது பெனடிக் அன்டர்சனின் 'Imagined Communities: Reflections on the Origin and Spread of Nationalism'  இல் விவாதிக்கப்பட்ட, (நாடு கடந்த) தேசியத்தை நோக்கி நகரும் ஒன்றாக அமையவும் கூடும்.

ஆனால் நான் இப்போது இசையுலகை அவ்வளவாகப் பின் தொடர்பவன் இல்லை. இன்று ஈழம்/தமிழகம்/புலம்பெயர்ந்த தேசமென தன்னை ஸ்தாபித்துக் கொண்டிருக்கும் வாகீசனின் ஒன்றிரண்டு 'ரீல்'களை மட்டும் கேட்டவனே தவிர அவரின் பாடல்களில் ஒன்றைக் கூட முழுமையாகக் கேட்டவனில்லை. ஆகவே நான் இதை எழுதுவற்கு பொருத்தமானவனல்ல. இத்துறையில் ஈடுபாடுள்ள எவரேனும் மாயா-வேடன் - வாகீசன் போன்றவர்கள் தமிழ் அடையாளத்தில் இணையும்/விலகும் புள்ளிகளைக் கவனத்தைக் குவித்து ஒரு கட்டுரையை எழுதுவார்கள் என்றால் சுவாரசியமாக இருக்கும்.


என் விருப்பும், ஆர்வமும் எப்போதும் இலக்கியம் சார்ந்ததே. அண்மைக்காலமாக மனதைக் குவித்து வாசிப்பதில்லையென்ற குறையும் எனக்கிருக்கின்றது. அறை முழுதும் அரையும் குறையுமாக வாசித்து புத்தகங்கள் சிதறிக் கிடக்கின்றன. மேலும் தினமும் ஜெயமோகனின் 'காவியம்' நாவலை வாசித்துக் கொண்டிருக்கின்றேன். இப்போது ஒருநாள் விடாது 30 அத்தியாயங்களை அவரின் எழுதும் வேகத்தோடு வாசித்தபடி இருக்கின்றேன். நிழல்களோடு பேசும் இந்தக் காவிய நாவல் காலத்தில் தானும் அமானுஷ்ய உருவங்களோடு இருண்ட மூலைகளுக்குச் செல்வதாக ஒரு பதிவையும் ஜெயமோகன் எழுதியிருக்கின்றார்.  இந்த நாவலின் சில அத்தியாயங்களை  வாசித்தபோது ஒருவர் நாளாந்த வாழ்வுக்குள் இருந்தபடி எழுத முடியாது என்றே எண்ணியிருந்தேன். கிட்டத்தட்ட தொடர்ந்து மூன்று நாட்களாகத் தூங்கமுடியாத அவதியைப் பற்றி  ஜெமோ எழுதியிருந்தார். அது எழுத்து நம்மிடம் கோருகின்ற காணிக்கை. அதைச் செய்யாமல் நாம் விரும்பிய எழுத்தென்பது தோன்றாதென்பதும் உண்மையே. ஜெமோ இதை எழுதும் காலங்களின் இருண்மையிலிருந்து  விரைவில் வெளியே வரட்டுமாக.

நேற்று இங்குள்ள நூலகத்திற்குச் சென்றிருந்தேன். அது தமிழ்ப் புத்தகங்கள் நிறையக் கிடைக்கின்ற நூலகங்களில் ஒன்று. ஆனால் முன்னரில்லாது இப்போது தமிழ்ப் புத்தகங்களுக்கான இடம் குறைந்து கொண்டு இங்கே போவதைப் பார்க்கக் கவலையாக இருந்தது. ஆனால் வாசிப்பவர்களி எண்ணிக்கை குறைந்துபோகின்றதென்ற யதார்த்ததையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மொழிக்கும் அதை வாசிப்பவர்கள் (இரவல் வாங்குபவர்கள்) எண்ணிக்கையைக் கொண்டே இங்குள்ள நூலகங்கள் நூல்களை எடுக்கும். தமிழ் வாசிப்புக் குறைந்து போகையில் அதன் இடமும் குறைவது இயல்பானது. இது சற்றுத் தொலைவான ஒரு நூலகம் என்பதால் போகும் சந்தர்ப்பம் வாய்த்தால் 10-15 தமிழ்ப் புத்தகங்களை இரவல் எடுத்து வருவதுண்டு. இம்முறை அப்படித் தேர்வு செய்து எடுத்தும், என் விருப்புக்கேற்ற 10 புத்தகங்களே வரவில்லை என்பது கவலைதான்.

ஆனால் எனக்குப் பிடித்தமான எஸ்.வி.ராஜதுரையின் 'பார்வையிழத்தலும் பார்த்தலும்' கண்டு அதை எடுத்துக் கொண்டு வந்து வாசிக்கத் தொடங்கினேன். இதை ஏற்கனவே 10 வருடங்களுக்கு முன்பு வாசித்திருப்பேன். தமிழில் வந்த முக்கியமான ஒரு தொகுப்பு என்பேன். எஸ்.வி.ஆர் எழுதிய தனிக்கட்டுரைகள் அல்லாது, புத்தக வாசிப்புக்கள்/அரசியல் விமர்சனங்கள் என்று பல்வேறு நோக்குகள் கொண்ட ஒரு தொகுப்பு. ஹோஸே ஸரமாகோவின் நூல்களைப் பற்றிய அற்புதமான கட்டுரை இதில் இருக்கின்றது. அதுவே இத்தொகுப்பின் தலைப்பும் ஆகவும் உள்ளது. அண்மையில் தனித்து எஸ்.வி.ஆர் ஹோஸே ஸரமாவைப் பற்றி ஒரு தனிப்புத்தகமே வெளியிட்டிருக்கின்றார்.

இது மூன்றாண்டுகளில் (2004-2007) எழுதிய கட்டுரைகளாகும். அதில் இலங்கையில் அப்போது கொல்லப்பட்ட தராக்கி சிவராம் பற்றியும், திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டு சமாதானக் காலம் குழப்பப்படும் நிலைமை பற்றியும், இலங்கை அதிபரின் (மகிந்த ராஜபக்ச) இந்தியா வருகை குறித்தும் என இலங்கை தொடர்பான பல கட்டுரைகளும் உள்ளன. இதே காலகட்டத்தில் எஸ்.வி.ஆர் இலங்கைக்கும் பயணித்தவர் என்பதால், அங்கே அவர் பார்த்த தர்மசிறி பண்டாரநாயக்காவின் நாடகமான  'ட்ரோஜன் கந்தாவோ' என்பதைப் பற்றி 'ஆட்லறிகளுக்கிடையில் ஒரு வெண்புறா' என்ற ஒரு விரிவான கட்டுரையும் எழுதியிருக்கின்றார்.

இதில் முக்கியமானது என்னவென்றால், எஸ்.வி.ஆரின் வழமையான நடையை அவ்வளவாகக் காணமுடியாது. இவை வெவ்வேறு சஞ்சிகைகளுக்கும் பத்திரிகைகளுக்கும் எழுதியவை என்பதோடு எஸ்.வி.ஆர் தனது முன்னுரையில் அவர் இரண்டாண்டுகள் தலித் மக்கள் இருந்த கிராமத்தில் வாழ நேர்ந்த அனுபவம் தன் மொழியை எளிமையாக்கி இருக்கின்றதென்றும் சொல்கிறார். இவ்வாறாக தனக்குள் நிகழ்ந்த மாற்றங்களை எஸ்.வி.ஆர் குறிப்பிட்டுச் செல்வது முக்கியமானது.


இதேவேளை சா.கந்தசாமியின் சிறுகதைகளையும் வாசித்துக் கொண்டிருந்தேன். 'ஆறுமுகசாமியின் ஆடுகள்' என்று நற்றிணை பதிப்பகத்தினூடாக வந்த நூலையும், 'தக்கையின் மீது நான்கு கண்கள்' என்று காலச்சுவடு கிளாஸிக் வரிசையில் வெளியிட்ட நூலையும் மாறி மாறி வாசித்துக் கொண்டிருந்தேன். 'தக்கையின் மீது நான்கு கண்கள்' 70களில் வந்த சா.கந்தசாமியின் முதல் சிறுகதைத் தொகுப்பு என நினைக்கின்றேன். அவரது 25ஆவது வயதில் 'சாயாவனம்' நாவலை எழுதியவர். மு.தளையசிங்கம், எஸ்.பொ போன்றவர்கள் என அன்றைய தலைமுறையைச் சேர்ந்த பலர், அவர்களின் 25வது வயதில் முதல் நாவல்களை எழுதியவர்கள் என்கின்றபோது  வியப்பு வராமல் விடாது.

'தக்கையின் மீது நான்கு கண்கள்' தொகுப்பிலிருக்கும் கதைகளை இப்போதும் -45 வருடங்களுக்குப் பிறகு- சுவாரசியமாக வாசிக்க முடிகிறது. எனக்கு அவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பிலிருந்த 'சாந்தகுமாரி' கதை நன்கு பிடித்திருந்தது. அதில் 'வன்கூவர்' என்றொரு கதையும் கனடாவில் நடப்பதான கதை. அது கடந்தகாலத்தில் உழன்று அம்மாக்களைப் புரிந்து கொள்கின்ற கதை. வன்கூவரின் பயணிக்கும்போது ஒரு தந்தை தனது தாய், அவரின் பாட்டி போன்றவர்களின் கதையைச் சொல்லும்போது, அந்தத் தந்தை தனது மகன் தன் மீது பரிவுடன் நடந்துகொவான் என்று நம்புகின்றார். ஆனால் அவனோ 'அம்மா பாவம்' என்று தனது தாயை நினைத்து வருந்துவான். எல்லா மகன்களுக்கும் அப்பாக்கள் எவ்வளவு பாசத்துடன் இருந்தாலும் அவர்கள் தமது அம்மாக்களையே இறுதியில் தேர்ந்தெடுப்பார்கள் என்று அழகாக இந்தக் கதை முடிந்திருக்கும். சா. கந்தசாமியே ஒரேயொரு முறைதான் நேரில் கண்டிருக்கின்றேன். அப்போது அவரின் பிள்ளைகளில் யாரோ ஒருவர் வன்கூவரில் வசித்துக் கொண்டிருந்ததாகும் நினைவிருக்கின்றது. ஒரு பயணத்தைக் கூட கதையாக மாற்றி அதைக் காலத்தின் ஒரு துளியில் உறைந்துவைக்க முடியுமென்பதற்கு இந்தக் கதை ஒரு சான்று.

ஆக, மீண்டும் எழுத்து/வாசிப்புக்குள் போவது இதமாக இருக்கின்றது. புத்தகங்கள் வாசிப்பதைக் கைவிடாதீர்கள். எழுத முடிந்தவர்கள் எழுதாமல் இருக்காதீர்கள். அண்மையில் புஷ்பராணி காலமானபோது நண்பரொருவர் சொன்னார்; 'புஷ்பராணி வேறு சில பெண்களும் (அங்கயற்கண்ணி,இன்னுஞ் சிலர்) அரசியல் காரணங்களுக்காக கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். மற்றவர்களின் பங்களிப்பு காலத்தில் மறக்கப்பட்டுவிட்டது. ஆனால் புஷ்பராணி 'அகாலம்' எழுதியதால் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கடத்தப்பட்டுவிட்டார், அது முக்கியமான அவரின் பங்களிப்பு' என்றார். எல்லோருக்கும் சொல்வதற்கு பல கதைகள் இருக்கும். எழுதியோ, இசையாகவோ இல்லை வேறெந்த வடிவமாகப் பதிவு செய்யும்போது நமது வாழ்வும் ஏதோ ஒருவகையில் அர்த்தமுறக்கூடுமல்லவா?

****

 

(May 23, 2025)

0 comments: