கனடாப் பாராளுமன்றத் தேர்தல் - 2025
*******
நேற்று நடந்த பாராளுமன்றத் தேர்தல் பல்வேறு ஆச்சரியங்களையும், அதிர்ச்சிகளையும் கனடாவில் உருவாக்கியிருக்கின்றது.
கனடாவில் கடந்த மூன்று தேர்தல்களில் லிபரல் கட்சியினர் வென்றிருந்தனர். உலகின் பலரும் கவனத்தை ஈர்ந்த ஜஸ்டின் ரூடோ இதன் தலைவராகவும், கனடாவின் பிரதமராகவும் கடந்தகாலங்களில் இருந்திருக்கின்றார். ஆனால் அண்மைய சில வருடங்களில் அவரின் செல்வாக்கு பாதாளத்தில் சரிந்து, இனியொரு தேர்தலை லிபரல் சந்தித்தால் படுதோல்வியை அடையுமென்கின்ற நிலையே ஏற்பட்டிருந்தது.
இதன் காரணமாக கடந்த டிசம்பரில் புதிய ஆண்டுக்கான நிதி வரவு செலவு அறிக்கையை ஜஸ்டின் ரூடோ பாராளுமன்றத்தில் சமர்பிக்க வேண்டிய அந்தக் காலையில், கனடாவின் நிதியமைச்சர் தனது ராஜினாமாவைச் சமர்ப்பித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். மேலும் அயல்நாடான ஐக்கிய அமெரிக்காவில் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதால், கனடா பல்வேரு விடயங்களில் நெருக்கடியைச் சந்திக்க வேண்டி வந்தது.
2025ம் ஆண்டானது கனடாவிற்கான பாராளுமன்றத் தேர்தல் நடத்த வேண்டிய காலம். லிபரல் கட்சியின் தேர்தல் தோல்வி ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டும் விட்டிருந்தது. இப்போது அன்று இராஜினாமாச் செய்த நிதியமைச்சர் சொல்வதுபோல, லிபரல் கட்சிக்கு அதன் கட்சி அந்தஸ்துக்கு வேண்டிய 12 இருக்கைகள் கூட கிடைக்குமா என்பது அன்று சந்தேகமாக இருந்தது. கனடாவில் மொத்த பாராளுமன்ற இருக்கைகள் 343. அந்தளவுக்கு மோசமான சரிவை லிபரல் கட்சியினர் கடந்த ஆண்டின் இறுதியில் எதிர்நோக்கியிருந்தனர்.
ஆக, பழமைவாதக் கட்சி பெரும்பான்மை அமைப்பது உறுதி என்றே அனைவரும் மூன்று மாதங்களுக்கு முன்னர் நம்பியிருந்தனர். பிறகுதான் ஆச்சரியங்கள் நிகழத் தொடங்கின. டிரம்ப் ஜனவரியின் ஆட்சிக்கு வந்தவுடன் கனடா மீது மோசமான வரிகளை விதிக்கவும், கனடா அமெரிக்காவின் 51வது மாநிலம் என்றும், கனடாவின் பிரதமர் தங்களின் ஒரு கவர்னர் எனவும் அவர் நாளும் பொழுதும் பிதற்றத் தொடங்கினார்.
இதனால் கனடியர்களுக்கு கொஞ்சம் 'ரோஷம்' வரத் தொடங்கியது. இந்த நேரத்திலேயே ஜஸ்டீன் ரூடோவும் ஒரு நற்காரியத்தைச் செய்தார். அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமாய்ச் செய்தார். ஓர் இடைக்காலப் பிரதமராக மார்க் கார்னி தெரிவு செய்யப்பட்டார்.
டிரம்ப் கனடாவின் இறையாண்மை மீதும், பொருளாதாரத்தின் மீதும் தொடுத்த போர் லிபரல் கட்சியினருக்குச் சாதமாக மாறத் தொடங்கியது. அதுவரை தேர்தலில் பெரும்பான்மையாக வெல்லப்போவதாக இருந்த பழமைவாதக் கட்சியினரின் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக சரியத் தொடங்கியது. லிபரல் கட்சி இதுதான் சரியான நேரமென நினைத்து ஒரு மாதத்திற்கு முன்னர் கனடாப் பாராளுமன்ற தேர்தலை ஏப்ரல்-28இல் நடப்பதாக அறிவித்தனர்.
343 இருக்கைகள் கொண்ட பாராளுமன்றத் தேர்தலில், ஒரு கட்சி பெரும்பான்மை ஆட்சியதிகாரம் அமைக்க வேண்டுமெனில் 172 இருக்கைகள் வெல்லவேண்டும். இம்முறை சில மாதங்களிலேயே மக்களின் ஆதரவு லிபரல் கட்சிக்கு சட்டென்று மாறி, ஒரு பெரும்பான்மை ஆட்சியமைத்து, டிரம்புக்கு 'tough fight' அவர்கள் கொடுப்பார்களென்று நம்பப்பட்டது. ஆனால் லிபரல் கட்சியினர் 4 இருக்கைகள் இல்லாது (168) மீண்டும் ஓர் சிறுபான்மை அரசை கனடாவில் அமைக்கவுள்ளனர்.
கடந்த தேர்தலில் 119 இருக்கைகள் பெற்ற பழமைவாதக் கட்சி இம்முறை அதிக இருக்கைகளை (144) பெற்றிருந்தபோதும், அதன் தலைவரான Pierre Poilievre, அவர் போட்டியிட்ட தேர்தலில் தோல்வி அடைந்திருக்கின்றார். ஒரு எதிர்கட்சித் தலைவர் தனது கட்சியை முன்னின்று நடத்தியபோதும் அவர் தன்னளவில் தோல்வியுற்றது கனடா வரலாற்றில் வியப்பானது.
அதேபோல இதுவரை காலமும் மும்முனைத் தேர்தல் போட்டிகளாக இருந்த நாடாளுமன்றத் தேர்தல் இம்முறை இருமுனைப் போட்டியாக மாறியிருந்தது. மூன்றாவது பெரும்கட்சியாக இருந்த இடதுசாரிச் சார்புள்ள புதிய ஜனநாயக் கட்சி இம்முறை படுதோல்வியை அடைந்திருக்கின்றது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் கிட்டத்தட்ட 25 இருக்கைகளை வைத்திருந்த என்டிபி இம்முறை 7 இருக்கைகளை மட்டுமே பெறமுடிந்தது. அதன் தலைவராக கடந்த இரு தேர்தல்களில் இருந்த ஜஸ்மீட் சிங் தனது தொகுதியிலும் தோல்வியடைந்து இப்போது கட்சித் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமாய்ச் செய்திருக்கின்றார்.
முதன்முதலாக லிபரல் கட்சியில் (முன்னாள்) இருந்து பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜஸ்டின் ரூடோ 10 வருடங்களுக்கு முன் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒரு முக்கிய விடயத்தை முன்வைத்துத்தான் தேர்தலில் வென்றிருந்தார். அதாவது இதுவரை கன்டா தேர்தலில் இல்லாத விகிதாசார வாக்குகளின் அடிப்படையில் இருக்கைகளைக் கொடுப்பதைப் பற்றி பிரச்சாரம் செய்திருந்தார். இது கிட்டத்தட்ட இலங்கை நாடாளுமன்றத்தில் இருப்பதைப் போன்றது. அதாவது ஒவ்வொரு கட்சியும் அது பெரும் மொத்த வாக்குகளின் அடிப்படையில் அவற்றுக்கு உரிய சில இருக்கைகள் பகிர்ந்தளிக்கப்படும்.
இம்முறை லிபரல் கட்சிக்கும் (43.5%) பழமை வாதக்கட்சிக்கும் (41.4%) நாடாளவியரீதியில் கிடைத்த வாக்குகளின் விகிதாசாரத்தின் வித்தியாசம் 2% மட்டுமே. இந்த விகிதாசாரவீதத்தில் இருக்கைகள் பகிர்ந்தளிக்கும் முறையை அன்றே லிபரல்காரர் சட்டத்துக்கு கொண்டு வந்திருந்தால் இம்முறை 3 இருக்கைகளால் பெரும்பான்மை ஆட்சியமைக்க முடியாது திணறும் அவர்கள் எளிதாகப் பெரும்பான்மை அமைத்திருப்பார்கள். ஆனால் இந்தப் புதிய சட்டத்தைப் பேசிய லிபரல்களே பின்னர் தொடர்ந்து பேசாது அதைப் புதைத்துவிட்டு கடந்து சென்றிருந்தனர்.
இதுவரை லிபரல் கட்சியினூடு ஒரெயொரு ஈழத்தமிழரே தொடர்ந்து கடந்த மூன்று தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார். இம்முறை இன்னொரு புதிய பாராளுமன்ற உறுப்பினராக Junaita Nathan தேர்ந்தெடுக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கக் கூடியது. அவர் தனது தொகுதியில் 37,896 வாக்குகளைப் பெற்றிருக்கின்றார்.
இத்தனைக்கும் ஜுவனிட்டா இத்தொகுதிக்குப் புதியவர். அவர் கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக அரசியல் களத்தில் இருந்தாலும், அவர் சேவையாற்றிய தொகுதி வேறிடத்தில் இருக்கின்றது. ஒரு புதிய தொகுதியில் வென்றது மட்டுமில்லாது, அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் 29,000 வாக்குகள் பெற்றபோது, ஜுவனிட்டா 37,000 மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றி வாகை சூடியிருப்பது ஒரு பெரும் பாய்ச்சல் எனச் சொல்லவேண்டும்.
**************
(Apr 29, 2025)
0 comments:
Post a Comment