கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 95

Monday, June 02, 2025

 

*நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி
**********


எழுதுவதால் அல்லது ஒரு விடயத்தைப் பதிவு செய்வதால் என்ன பயன் என அடிக்கடி கேட்கப்படுவதுண்டு. எழுத்தை விட செயற்பாட்டில் இருப்பது என்பது கடினமானது. ஆகவேதான் செயற்பாடுக் களத்தில் இருப்பவர்கள் எப்போதும் எனக்குப் பிரமிப்பைத் தருபவர்கள். என்னால் ஒருபோதும் அப்படி களச்செயற்பாட்டில் ஈடுபடமுடியாது. அதற்கு ஓர் அர்ப்பணிப்பும், தொடர் தோல்விகளைகளைத் தாங்கும் உறுதியான மனப்பாங்கும் தேவை. ஆனால் நான் தொடர்ந்து அவ்வாறிருப்பவர்களுடன் உரையாட விரும்புகின்றவன். அவர்களைப் பொதுவெளிக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஆசைப்படுகின்றவன்.

ஒரு பொலிஸ்காரர் ஒரு கொலையைக் கடமையின் பொருட்டு செய்கின்றார். ஆனால் அவருக்கு அந்தக் கொலை தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகின்றது. இதன் நிமித்தம் வரும் குற்றவுணர்ச்சியினால் தொடர்ந்து அந்தக் கொலை குறித்து பேச முயல்கின்றார். ஒருவகையாக கிட்டத்தட்ட 20 வருடங்களின் பின் அந்தக் கொலை குறித்தும் தனது காவல்துறை பணி தொடர்பாகவும் வெளிப்படையாக ஒரு நூலை எழுதுகின்றார்.

இவ்வாறு ஒரு கொலையைப் பொதுவில் எழுதுவதன் மூலம் பொலிஸும் அரசும் தன் மீது குற்றப்பத்திரிகை வாசித்து ஜெயிலுக்கு அனுப்பும் என்று தெரிந்தும் உறுத்தும் மனச்சாட்சியின் காரணமாக உண்மைகளை எழுதுகின்றார். இந்தப் பொலிஸ்காரரின் விருப்பம் ஒன்றே ஒன்றுதான். தான் இதன் பொருட்டு ஜெயிலுக்குப் போகும்போது அந்தக் கொலையைச் செய்த தனது அதிகாரிகளும் தன்னோடு ஜெயிலில் அருகில் இருக்கவேண்டும் என விரும்புகின்றார். ஆனால் துரதிஷ்டவசமாக அது நடக்காமலே அவர் இறந்து போகின்றார். ஆனால் அவர் எழுதிய நூல் பல அதிர்வுகளை ஏற்படுத்தியதோடல்லாது, கொலை செய்யப்பட்டவருக்கான நீதியை நெடுங்காலத்துக்குப் பிறகு கோரி நிற்கும் ஓர் ஆவணப்பிரதியாக மாறியது.

அந்த நூலே 'நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி' என்று ராமச்சந்திரன் நாயர் எழுதிய தன் வரலாற்று நூலாகும். 1970களில் நக்சலைட்டுக்களின் முன்னணித் தலைவரான வர்க்கீஸை கைதுசெய்து அநியாயமாக பொலிஸ் கொலை செய்கின்றது. நிராதயுதபாணியாக கைதுசெய்யப்பட்ட வர்க்கீஸை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் என்று ராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் கைதுசெய்து கொண்டுபோகும்போது, அவர்களின் உயரதிகாரிகளால் இடைநடுவில் திருப்பியனுப்பட்டு ஒரு பாறையின் மீது இருத்தப்பட்டு வர்க்கீஸ் கொல்லப்படுகின்றார். வர்க்கீஸைக் கொன்ற தோட்டாக்கள் ராமச்சந்திரனின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்தவை.

தனது முடிவை முன்கூட்டியே அறிந்துவிட்ட வர்க்கீஸ் ராமச்சந்திரனின் தனக்கு ' மாவோடிஸ்ட்புரட்டி ஓங்குக' என்று முழங்க மட்டும் சாகமுன்னர் அனுமதி தரும்படி கேட்கின்றார். அதைச் சொன்னபடி இறக்கும் 27 வயது வர்க்கீஸுக்கும், ராமச்சந்திரனின் வயதே இருக்கின்றது. இந்தக் குற்றவுணர்வுடன் ராமச்சந்திரன் வாழ்ந்த பொலிஸ் வாழ்க்கையும், அங்கே நிகழும் அனைத்து அட்டூழியங்களையும் ராமச்சந்திரன் சொல்வதே இந்த நூலாகும்.

வர்க்கீஸ் வயநாட்டு ஆதிவாசிகளின் உரிமைகளுக்காகவும் போராடிய ஒரு மாவோயிஸ்ட். அவர் அழித்தொழிப்புகளின் மூலம் நீதியும் நியாயமும் வழங்கமுடிகின்ற போராளி. அவ்வாறு செய்த சில கொலைகளைக் கூட வர்க்கீஸ் ராமச்சந்திரனோடு ஒரு சொற்ப பகல் பொழுதில் ஒப்புக்கொள்கின்றார்.

அவருக்கு அதுவே சரியான வழியாகவும் இருக்கின்றது. ஒரு நாள் விடிகாலை 6 மணியளவில் கைதுசெய்த வர்க்கீஸை அன்றைய மாலை 6 மணியளவில் காட்டுக்குள் வைத்து கொன்றுவிட்டு, வர்க்கீஸ் ஒரு தாக்குதலில் கொல்லப்பட்டவர் என்று அவர் இறந்தபின் அவரின் கையில் ஒரு நாட்டுத்துப்பாக்கியை வைத்துவிட்டு பொலிஸ் வழமையான நாடகத்தை நிகழ்த்தி பொதுவெளிக்கு காட்சிப்படுத்துகின்றது.

வர்க்கீஸைக் கைதுசெய்த 5 பொலிஸ்காரர்களிடம் அவர்களின் மேலதிகாரி யார் வர்க்கீஸைச் சுட்டுக்கொல்ல சம்மதம் எனக் கேட்க, எல்லாப் பொலிஸ்காரரும் கையை உயர்த்துகின்றனர். ராமச்சந்திரன் மட்டும் கையை உயர்த்தாது, இப்படி கைதுசெய்யப்பட்ட வர்க்கீஸை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதுதானே நியாயமானது என்கின்றார். இதனால் கோபமடையும் உயரதிகாரி, "இந்த வேலையை நீதான் செய்ய வேண்டும் அல்லது நக்சலைட்களுடன் நடந்த மோதலில் வர்க்கிஸூடன் மேலும் ஒரு கான்ஸ்டப்பிள் கொல்லப்படலாம்" என்கின்றார். இறுதியில் 'நான் வர்க்கீஸின் முகத்தைப் பரிதாபமாகப் பார்த்தேன். ஒரு நிமிட யோசனை. பிறகு, வர்க்கீஸை நானே கொன்று விடுவதாகத் தீர்மானித்தேன். "செய்கிறேன்", குரலையுயர்த்திச் சொன்னேன். விசையை இழுத்தேன். குண்டு தெறித்தது. மிகச் சரியாக இடதுபுற நெஞ்சில்" என ராமச்சந்திரன் எழுதிச் செல்கின்றார்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு ராமச்சந்திரனுக்கு பதவியுயர்வு வழங்கப்படுகின்றது. ஆனாலும் அவர் வெவ்வேறு காலப்பகுதியில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் வந்தவர் என்றவகையில் பழிவாங்கப்படுகின்றார்; பல்வேறு வகையில் பந்தாடப்படுகின்றார். இவையெல்லாவற்றையும் பார்த்து சகித்தும் தனது வாக்குமூலத்தை எழுதியிருக்கின்றார் என்பதுதான் முக்கியமானது. அது ஒரு தனிமனிதன் தன் மனச்சாட்சிக்கு அடிபணிகின்ற அற்புதமான தருணமெனச் சொல்லலாம்.

இந்த நூலில் ராமச்சந்திரன் தன்னையொரு புனிதனாக முன்வைக்கவில்லை என்பதுதான் ஆறுதளிப்பது. அவர் இலஞ்சம் வாங்குகின்ற ஒரு அடிநிலைப் பணியாளராக இருக்கின்றார். அந்த இலஞ்சத்தின் பெரும்பகுதியை தனது மேலதிகாரிகளுக்குக் கொடுப்பவராக இருக்கின்றார். தனக்குப் பிடிக்காத மக்களை பொதுமக்களை (தமிழர் ஒருவர் உள்ளிட்ட) மீது பொய்வழக்கு போட்டு பழிவாங்குகின்றவராக இருக்கின்றார். அதற்காக வெட்கப்படுகின்றவராகவும் மன்னிப்புக் கோருகின்றவராகவும் இருக்கின்றார்.

அதுபோல பிற்காலத்தில் ஆதிவாசிகளின் பகுதியில் நடக்கும் நிலப்பறிப்பு போராட்டத்தில் காவல் நிற்கும்போது, அவர்களின் சிறுமிகள் உள்ளிட்ட பேரிளம் பெண்கள் வரை பாலியல் அத்துமீறுகின்ற பொலிஸ்காரர்களின் அட்டூழியங்களின் ஒரு மெளன சாட்சியாக இருக்கின்றவராக இருந்ததையெல்லாம் வெளிப்படையாக எழுதுகின்றார். மேலும் பொலிஸ்காரர்கள் அவர்களின் மேலதிகாரிகளுக்கு ஒரு அடிமைபோல அந்த அதிகாரிகளின் வீடுகளில் வேலை செய்வதையெல்லாம் விபரமாக எழுதியிருக்கின்றார். அதன் நிமித்தம் ராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் பொலிஸ்காரர்களுக்கான சங்கம் அமைப்பதற்குப் பாடுபட்டு அதைக் கட்டியமைத்தது பற்றிய முக்கிய விபரங்களை எழுதியிருக்கின்றார்.

இதில் எனக்கு அதிர்ச்சி தந்த இன்னொரு விடயம் என்னவென்றால், ராமச்சந்திரன் போன்றவர்கள் மேற்கு வங்காளத்துக்கு பாதுகாப்புப் பணியாக 70களில் அனுப்பப்படுகின்றார். அப்போது அங்கே நக்சலைட்டுக்கள் உச்சத்தில் இருந்த காலம். எதிர்க்கட்சியாக இருந்த மார்க்ஸியக் கட்சிதடைசெய்யப்பட்ட காலம். இவர்களைப் போன்றவர்களின் வேலை இந்த நக்சலைட்டுக்களைப் பிடித்து சிறையில் அடைப்பது. அதிகமானோர் இடைநடுவிலே கொல்லப்படுகின்றனர். இதில் கொடூரம் என்னவென்றால் அன்றைய காங்கிரஸ் கட்சிக்காரர் தினமும் ஒவ்வொரு பொலிஸ் நிலையத்துக்கும் நக்சலைட்டுக்கள், அவர்களின் ஆதரவாளர் என்ற ஒரு பெரும் பட்டியலே அனுப்புவார்களாம். ராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் அந்தப் பட்டியலை எடுத்துக் கொண்டு போய் நக்சலைட்டுக்களைக் கைதுசெய்வதும், கொல்வதும் என செய்து கொண்டிருக்கின்றனர். ஆக எந்தக் கட்சி அதிகாரத்துக்கு வருகின்றதோ அது தனது கோரமுகத்தைக் காட்டியிருக்கின்றது என்பதற்கு இது மிகச் சிறந்த உதாரணம். எனக்கு இது இலங்கையில் 1983 தமிழர் மீதான படுகொலை கொழும்பில் நடந்தபோது சிங்களக்காடையர் தமிழர்களின் (தேர்தல்) பட்டியலோடு தமிழ் வீடுகளைத் தேடிப் போனதை ஞாபகப்படுத்தியது.

ராமச்சந்திரன் வெவ்வேறு இடங்களில் பொலிஸின் அட்டூழியங்கள் நடந்தபோது, தனது மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்துகின்றார். அவர்கள் இதெல்லாம் பொலிஸ் வாழ்க்கையில் சகஜம். கடந்துபோ' என்கின்றனர். அதையும் தாண்டி சிலவேளைகளில் ராமச்சந்திரன் மொட்டைக்கடிதம் மாதிரி பத்திரிகைகளுக்கு இந்த விடயங்களை எழுதி அனுப்புகின்றார். சிலவேளைகளில் அவை பிரசுரமாகின்றது. சிலவேளைகளில் குளத்தில் எறிந்த கல்லெறிந்தமாதிரி போகின்றது.

Ramachandran
இதை எழுதுவதற்கு ராமச்சந்திரன் ஒரு வறிய நிலையில் இருந்து வந்தது முக்கிய காரணமாக இருக்கலாம். அத்துடன் அவருக்குள் இயல்பாக இருந்த மார்க்ஸிச ஈடுபாடும் இதற்கு உதவி புரிந்திருக்கும். ஓர் அடிநிலைத்தொழிலாளியாக இறப்பர் தோட்டத்தில் பணிபுரியும் ராமச்சந்திரன் பின்னர் பொலிஸ்காரர் ஆகின்றார். வர்க்கிஸைக் கொன்றவுடன் வர்க்கீஸூன் மூலம் சேகுவாரா பற்றிய புத்தகங்களை வாசிக்கத் தொடங்குகின்றார். வர்க்கீஸைக் கைதுசெய்த ராமச்சந்திரன் நல்லதொரு வசதியான குடும்பத்தில் பிறந்த நீயேன் நக்சலைட்டாக மாறினாய் என்கின்றார். அதற்கு வர்க்கீஸ் ஆர்ஜெண்டீனாவில் வசதியாகப் பிறந்து மருத்துவருமான சே, ஏன் கியூபாப் புரட்சியில் பங்குபற்றி பொலிவியாவில் கொல்லப்படுகின்றான். அவனுக்கு இல்லாத வசதிகளா? என்று திரும்பிக் கேள்வி கேட்கின்றார். அதன்பிறகே வர்க்கீஸ் சேயை வாசிக்கின்றார். சிலவேளைகளில் தான் சே பற்றிய நூல்களை ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் வாசித்தேன் என்கின்றார்.

1970களில் கொல்லப்பட்ட வர்க்கீஸின் உண்மை விபரங்கள் வெளிவரவேண்டும் என்று ராமச்சந்திரன் விரும்பினாலும், அவருக்கு அதை எப்படி கொண்டுவருவதென்று தெரியவில்லை. 70களில் அவருக்குப் பழக்கமான ஒரு கம்யூனிஸ்ட் தோழரிடம் (வாசு), வர்க்கீஸுக்கு என்ன நடந்ததென்று எழுதிக் கொடுத்தபோதும் அது எங்கும் பிரசுரிக்கப்பட்டபோதும் அது வெளிவராதது இவருக்கு அதிர்ச்சியாக இருக்கின்றது. கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களின் பின் அந்தக் கடிதம் பிரசுரமாகின்றது. அதைத் தொடர்ந்து 1998இல் ராமச்சந்திரன் வெளிப்படையாக வாக்குமூலத்தைக் கொடுத்து, நூலாகவும் எழுதத் தொடங்குகின்றார்.

இந்த நூல் வெளிவந்து உண்மை வெளிச்சத்துக்கு வந்தபோதும், சுட்டுக்கொல்லப்பட்ட அதிகாரிகள் எவரும் விசாரிக்கப்படாமலே வர்க்கீஸ் 2007 இல் இறந்து போகின்றார்.

இப்போது எழுதுவதால் அல்லது பதிவுசெய்வதால் என்ன பயன் என்ற கேள்விக்கு வருவோம். வரலாறு எப்போதும் அதிகாரவர்க்கத்திற்குச் சாதமாக இருப்பதில்லை. உண்மைகள் என்றோ ஒருநாள் வெளிவந்து தீரும் என்பது தேய்வழக்குச் சொல்லாடலாகிவிட்டாலும், 2010இல் இந்தக் கொலையைச் செய்ய கட்டளையிட்ட பொலிஸ் உயரதிகாரியான இலக்ஷ்மணாவிற்கு ஆயுள்தண்டணை வழங்கப்பட்டிருக்கின்றது.

ஆக, கொலை நடந்த 40 வருடங்களின் பின், இப்போது வர்க்கீஸும், ராமச்சந்திரனும் நிம்மதியடைந்திருப்பார்கள் அல்லவா?

ஒருவருக்கான நீதிக்காக அவரைக் கொலை செய்த இன்னொருவர் எழுதிப் பதிந்துவிட்டுப் போனதால், இன்று நீதி ஏதோ ஒருவகையில் வழங்கப்பட்டிருக்கின்றது. தனது வாழ்க்கைக் காலத்தில் ராமச்சந்திரன் இதை எழுதி வைக்காது போயிருந்தால், வர்க்கீஸுக்கு நீதி மட்டுமில்லை, அவருக்கு இறுதிக்காலத்தில் என்ன நடந்ததென்று எவருக்குந் தெரியாமல் போயிருக்கும். ஆகவேதான் எழுதுவதும்/பதிவுசெய்வதும் முக்கியமென திரும்பச் திரும்பச் சொல்கின்றேன்.

********

* நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி - ராமச்சந்திரன் நாயர், தமிழில் குளச்சல் மு.யூசுப்

(May, 2025)

0 comments: