கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மரணத்திலும் வாழ்ந்திருந்தோம்

Friday, February 11, 2005

{ஊர்: நினைவின் கருக்கலில்}

என்னோடு படித்த நண்பனொருவனைப் பற்றிய செய்தியொன்றை விகடனில் சிலநாட்களுக்கு முன் வாசித்ததிலிருந்து, ஊர்பற்றிய ஞாபகங்கள் எனக்குள் விதையென ஊன்றி அரும்பி, கிளைத்து பரவத்தொடங்கிவிட்டது. அவனும் நானும், இன்னும் சில நண்பர்களும் ஊரில் செய்த குழப்படிகளும் கும்மாளங்களும் கணக்கிலடங்காதவை.

நான் படித்த பாடசாலை எங்கள் வீட்டுக்கு மிக அருகில்தான் அமைந்திருந்தது. இரண்டு மணிகள் அடித்துத்தான் பாடசாலை ஆரம்பிக்கும். இரண்டுக்குமிடையில் ஜந்து நிமிட இடைவெளி என்றாலும், முதலாவது மணிச்சத்தத்தோடு பாடசாலைக்கு புறப்பட்டேன் என்றால், இரண்டாம் மணி அடிக்கமுன்னர் பாடசாலைக்குள் இருப்பேன். நான் படித்த பாடசாலை mixed (கலவன்?) பாடசாலை என்பதால் சுவாரசியங்களுக்கும், குழப்படிகளுக்கும் குறைவேயில்லாதது.

ஒவ்வொரு நாளும் பிரார்த்தனை என்று பாடசாலை கோயிலுக்கு முன் கொண்டுபோய் நிறுத்திவிடுவார்கள். அதுவும் வெள்ளிக்கிழமை என்றால் முழு சிவபுராணத்தையும் எல்லோரும் சேர்ந்து பாடி முடிக்கவேண்டும். வெயிலுக்குள் இப்படி நிற்பது கடவுளுக்கு பிடிக்காமலோ என்னவோ பாடல் முடியமுன்னரே பெண்கள் மயங்கி விழுவது அடிக்கடி நிகழும். ஒவ்வொரு நாளும் இரண்டு மாணவர்கள் பிரார்த்தனைக்குப் போகாமல் அவரவர் வகுப்பறையில் நின்று வகுப்பை துப்பரவாக்கவேண்டும். எவரெவர்க்கு எந்த நாள் என்று ஒரு அட்டவணை இருந்தாலும், என்னைப்போன்றவர்களுக்கு இந்த வெள்ளிக்கிழமை விடயம் பெரிய அலுப்புத்தந்ததால், பிறருடைய நாள்களை நாங்கள் அடிக்கடி திருடிக்கொள்வது நிகழும். பெடியங்களிடம் கெஞ்சி மன்றாடிக்கேட்டாலும், பரிதாபப்பட்டு தந்துவிடுவாங்கள், ஆனால் எங்கடை கேர்ல்ஸ்டிடம் இந்தக் கெஞ்சல் எல்லாம் சரிப்படாது. ஆனால் அதற்கு ஒருவழியை என்னைப்போன்றவர்கள் கண்டுபிடித்திருந்தோம். யார் அந்த நாளில் நிற்கின்றார்களோ, அவர் உத்தியோகபூர்வமாக கையில் தும்புக்கட்டையை வைத்திருக்கவேண்டும். தும்புக்கட்டை ஒருவரின் கையில் இருந்தால் அவருக்கு அன்று வகுப்பில் நிற்கும் அதிகாரம் வந்துவிடும் என்பது எங்களிடையே இருந்த எழுதாத விதி. தும்புக்கட்டை சண்டை எங்கள் வகுப்பில் மிகப்பிரல்பல்யமானது. தும்புக்கட்டைக்காய் பல தடவைகள் பெண்களிடம் சண்டைபிடித்திருக்கின்றோம். இரண்டொருமுறை சண்டையின் அதிதீவிரத்தில் தும்புக்கட்டையை இழுபறிச்சண்டையில் நா(ன்)ங்கள் உடைத்துக்கூட இருக்கிறோம் (ம்..முந்தி தும்புக்கட்டையை எல்லாம் உடைக்கிற அளவிற்கு எல்லாம் பலமானவனாய் இருந்திருக்கிறேன் என்பது எவ்வளவு சந்தோசமான விடயம், யாராவது ஏன் இப்படி ஒல்லியாக இப்போது இருக்கின்றேன் என்றால், இந்த விடயத்தை இனி அவர்களுக்கு சொல்லலாம்). சிலவேளைகளில் தும்புக்கட்டை விவகாரம் வகுப்பு வாத்தி வரைபோய் அடியெல்லாம் வாங்கிவிட்டு வகுப்புக்கள் முடியும்வரை வெளியே நிறுத்தப்பட்டிருக்கின்றோம். வெளியே நின்று உறுமிக்கொண்டிருக்கும் என்னைப்போன்ற பெடியளையும் பொம்பிளைப்பிள்ளைகளையும் கண்டு கீரியும் பாம்பும் கூட வெளியே வரப்பயந்துபோய் புற்றுக்குள் இருந்திருக்கக்கூடும்.

கேர்ல்ஸ்டோடு சண்டை வருகின்ற இன்னொரு விசயம், தவணைப் பரீட்சைகள். மிச்ச எல்லா வகுப்பிலும் பொம்பிளைப்பிள்ளைகள் படிப்பில் கோலோச்சிக்கொண்டிருக்க எங்களின் வகுப்பில் பெடியள் சிலபேர்தான் முதல் மூன்றுக்குள் தொடர்ந்து வந்துகொண்டேயிருப்போம் (முதல் மூன்றுபேருக்கு assembly hallல் வைத்து பாராட்டி தேர்ச்சி அட்டை தருவார்கள்). முக்கியமான core பாடங்கள் இருந்தாலும், சில electives, நடனம்/சங்கீதம்/சித்திரம் போன்ற பாடங்களும் உண்டு. என்னைப்போன்றவர்கள் சித்திரம் போன்ற பாடத்தைத்தான் எடுத்துக்கொண்டிருந்தோம். தென்னை மரம் கீறச்சொன்னால், அதில் இருக்கின்ற தென்னோலை எல்லாம் மீன் முள்ளு மாதிரி வரைகின்றளவிற்கு நான் சிறப்பாக சித்திரத்தில் தேர்ச்சி பெற்றிருந்தேன். வீட்டில் இதைப்பார்த்துவிட்டு யாராவது நக்கலடித்தால், நான் கீறின தென்னை மரத்திலை காகம் மீனைத்தின்றுவிட்டு மீன்முள்ளைப்போட்டபடியால்தான் அப்படித் தெரிகிறது என்று நியாயம் சொல்கின்றனான். சித்திரத்தில் என்னைப்போன்றவர்களின் புள்ளிகளைபார்த்துவிட்டு, எங்களை வீழ்த்த நடனம்/சங்கீதத்தில் கூடிய புள்ளியெடுத்தால் போதும் என்று பெண்கள் திட்டம்போடுவார்கள். அத்தோடு 'ரீச்சர், சித்திரம் எடுக்கின்ற ஆக்கள் முதல் மூன்றுக்குள் வந்தால் உங்களுக்கெல்லோ மரியாதையில்லை' என்று நடன/சங்கீத ரீச்சர்மார்களை உசுப்பேத்தி அளவுக்கதிகமாக மார்க்ஸ் எல்லாம் பெண்கள் வாங்கிவிடுவார்கள். என்னதான் தும்புக்கட்டைக்காகவோ, மார்க்ஸிற்காகவோ சண்டைபிடித்தாலும், எங்களின் வகுப்பு பெண்கள் எங்களை வேறு வகுப்பு மாணவர்களுடனோ அல்லது வேறு பாடசாலை ஆக்களோடு கதைக்கும்போதோ ஒருபோதும் விட்டுக்கொடுப்பதில்லை.

பிறகு பிரச்சினைகள் உக்கிரமாக, எங்களைப்போலவே பாடசாலையும் இடம்பெயரத்தொடங்கியது. கிட்டத்தட்ட ஏழெட்டு மைல்கள் சைக்கிள் உழக்கி பாடசாலைக்கு போன காலமது. அதுவும் மத்தியானத்திற்கு பிறகுதான் பாடசாலை தொடங்கும். காலையில் வேறொரு பாடசாலை இயங்கிக்கொண்டிருக்கும். ஏழெட்டு மைல்கள் சைக்கிள் உழக்கினாலும், காலையில் நடக்கும் பாடசாலை ஒரு மகளிர் கல்லூரி என்பதால் என்னைப்போன்ற பெடியளுக்கு நல்ல சந்தோசம். அவையளைப் பார்க்கிறதென்பதற்காகவே அரை மணித்திலாயம் பாடசாலை தொடங்க முன்னர் போய் காத்துக்கொண்டிருப்போம். ஆனால் அந்தப்பெண்களோ முறைத்துக்கொண்டோ உதாசீனப்படுத்திக்கொண்டேதான் செல்வார்கள். பரவாயில்லை எறும்பூரக் கற்குழியும் என்ற பழமொழியை அந்த வயதிலையே கற்றிருந்ததால் முயற்சியைக் கைவிட்டதில்லை. எனினும் ஒருபொழுதில் இதுவெல்லாம் சரிப்படாது என்று ஞானோதயம் வந்தபின், 'எண்டாலும் எங்கடை பள்ளிக்கூட கேர்ல்ஸ் தேவதையள்' என்று சமாதானப்படுத்திக் கொண்டோம்.

இப்படி ஏழெட்டு மைல் சைக்கில் பிரயாணம் செய்தாலும் எங்கடை வகுப்பு கேர்ல்ஸ்டோடு குழப்படி செய்துகொண்டேயிருப்போம். வேண்டுமென்று கேர்ல்ஸ் சைக்கிள்களில் வரும்போது நாங்கள் நாலைந்து நண்பர்கள் சமாந்தரமாய் சைக்கிளை ஓட்டியபடி வீதி முழுவதையும் மறைத்தபடி போவோம். எங்கடை கேர்ல்ஸ் பின்னுக்கு வருகிறார்கள் என்று கண்டுவிட்டால், சும்மா சைக்கிள் உழக்கிற வேகத்தைவிட இன்னும் மெதுவாக உழக்குவோம். இப்படி தெருவை அடைச்சுக்கொண்டு போவதற்காய் பலமுறை வெளியாக்களிடம் பேச்சு வாங்கியிருக்கின்றோம், ஆனால் எங்கள் பழக்கத்தை ஒருபோதும் இதற்காய் விட்டதில்லை. ஒருமுறை இப்படி தெருவை மறைத்துக்கொண்டு சைக்கிள்களில் செல்கையில், எங்களின் வகுப்பு வாத்தி பின்னாலே வந்துவிட்டார். அந்த வாத்தியிடம் நான் வாங்கிய அடிகளையும் அதற்கான சம்பவங்களையும் நினைத்துப்பார்த்தால் ஒரு குறுநாவலே எழுதிவிடலாம். சரி வாத்தி எங்கடை குழப்படியைக் கண்டுவிட்டார். நிச்சயம் பிடிபட்டால் அந்தாள் நடுரோட்டிலேயே நிற்கவைத்து, வீதியோரத்திலிருக்கும் பூவரசிலிருந்து தடியுருவி அடிக்காமல் விடமாட்டார் என்று புரிந்துவிட்டது. 'ஓடுவமடா' என்று ஒரு நண்பன் சொன்னதுதான் தாமதம் நாங்கள் சைக்கிளில் உருவத்தொடங்கிவிட்டோம். ஆனால் பாருங்கோ, எங்கடை வாத்தியும் sweet 16 மாதிரி இளமை திரும்பி எங்களை விடாமல் துரத்தத்தொடங்கிவிட்டார். எவ்வளவு தூரத்துக்கென்று களைக்காமல் சைக்கிளை உழக்குவது? கடைசியாய் இயலாமல் ஒரு அம்மன் கோயிலடியில் சரணாகதியடைந்தோம். அம்மனின் அருளோ என்னவோ தெரியாது, 'நாளைக்கு வகுப்புக்கு வாங்கோடா அங்கை கவனிக்கின்றேன்' என்று துரத்தி வந்த வாத்தி சொல்லிவிட்டு போய்விட்டார். அதன்பிறகு இப்படி நாங்கள் தெருவை அடைத்துக்கொண்டு பெண்களை முந்தவிடாமல் செய்தால், 'எடியே எங்கடை சேர் பின்னாலை வாறார் போல' என்று சொல்லி கேர்ல்ஸ் எங்களை அடிக்கடி பயமுறுத்துவார்கள். நாங்களும் உண்மைதானோ என்று பதட்டப்பட்டு சைக்கிளை ஒருபக்கமாய் ஒதுக்கினால் அடிக்கடி அவை ஒன்றோடு ஒன்று கொளுவுப்பட்டு அடிப்பட்டு விழுந்துவிடும். சைக்கிள் கீழே கிடந்தாலும், கையிலை காலிலை நோ இருந்தாலும், இரத்தம் வடிந்தாலும் பெரிய வீரர்கள் போல எழும்பி நிற்போம். கேர்ல்ஸ் சிரித்துக்கொண்டும் நக்கலடித்துக்கொண்டும் எங்களைத்தாண்டி போவார்கள். அவர்கள் கொஞ்சம் தூரம் போனாப்பிறகுதான், 'அய்யோ நோகுதே', 'விசரா உனக்கு சைக்கிள் ஓட்டத்தெரியாது' என்று மாறி மாறி திட்டுவதும் நடக்கும். இப்படி நாங்கள் கேர்ல்ஸிற்கு குழப்படி செய்வதுபோல அவர்களும் எங்களுக்கு செய்வார்கள். நான் இப்படிப் பலதடவைகள் தனியாய் மாட்டுப்பட்டிருக்கின்றேன். அந்த சமயங்களில் அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து என்னை முந்தவிடாமல் ரோட்டை அடைத்தபடி போய்க்கொண்டிருப்பார்கள். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்கின்றமாதிரி, இந்த நேரத்தில் துணைக்கருகில் இல்லாத பெடியன்களைத்திட்டியபடி காய்ச்சல் கண்ட கோழிமாதிரி தலையைத்தொங்கப்போட்டபடி அவர்கள் பின்னாலே போயிருக்கின்றேன்.

எத்தனைகாலம்தான் கேர்ல்ஸ்லோடு சண்டை போடுவது என்று யோசித்து ஒன்பதாம் வகுப்பில் சமாதானக்கொடியைப் பறக்கவிடுவோம் என்று முடிவுசெய்தோம். இன்னொரு காரணம் ஹோர்மான்களின் சித்து விளையாடும் கூட. நானும் இன்னும் சிலநண்பர்களும் சேர்ந்து யார் யாருக்கு யார் துணை என்று பட்டியலிட்டோம். எனக்கும் என் நண்பனுக்கும் ஒரு பெண்ணிடம் ஈர்ப்பிருந்தது. அதற்குக்காரணம் அவர் சரியான வாயாடி மற்றும் தும்புக்கட்டைச் சண்டைகளில் பெண்களின் தரப்பில் அவர்தான் அங்கே முக்கிய தளபதி. ஆனால் இறுதியாய் நண்பனுக்காய் அவரை விட்டுக்கொடுக்கவேண்டியதாயிற்று. அவரவர் அவரவர்க்கு சேர்த்து வைக்கப்பட்டிருந்த பெணகளைத் தவிர மிகுதி அனைவருடனும் கதைத்துக்கொண்டிருந்தோம். நாங்கள் இப்படி சோடி சேர்த்த அடுத்த நாளிலேயே பெண்கள் இதைக்கண்டுபிடித்துவிட்டதன் இரகசியம் எனக்கு இன்றும் புரியவில்லை. இப்படி சோடி சேர்த்ததில் எனக்கு ஒரு சிக்கல் வந்தது. எனக்குச் சோடி சேர்த்த பெண் நான் போகும் ரியூசனுக்கு வருவதில்லை. எந்த நேரமும் பார்த்துக் கொண்டிருந்தால்தானே காதல் வரும்? ஆனால் எனக்கு வராது போல இருக்கிறதே என்று கவலையுடன் நண்பர்களுக்குச் சொன்னபோது நண்பன் ஒருவன் நல்ல யோசனை சொன்னான். 'டேய் ரியூசனில் வருகின்ற ஒருபெண்ணை அங்கேயிருக்கும் நேரத்தில் சோடிசேர்த்து வைத்திரு, பாடசாலைக்கு இவா உன்ரை சோடி' என்று. ஆகா இதுவும் நல்லாய்த்தானிருக்கிறது என்று, பாடசாலைக்கு ஒருவர், ரீயுசனிக்கு ஒருவர் என்று இரண்டு பேருக்கு துணையாக இருந்தேன் (இதற்கு இன்னொரு காரணம், செருப்பால் அடிவாங்கும்போது ஒரு செருப்பால் அடிவாங்கினால், சோடியாக இருக்கும் மற்றச் செருப்பு கோபிக்கக்கூடும். ஆகவே இரண்டு செருப்பாலும் அடிவாங்குவது உத்தமம் என்ற psychological காரணமாய் இருந்திருக்கக்கூடும் என்று இப்போது யோசிக்கின்றேன்). பகடி என்னவென்றால், ஏதோ நாங்கள்தான் இப்படி பாடசாலைக்கு ஒருவர், ரீயுசனிற்கு ஒருவர் என்று சொல்லிக்கொண்டு திரிந்தோம் என்றால், எங்கடை பெண்களுக்கும் எங்களில் சில பேர் ரீயூசனுக்கு ஒன்று பாடசாலைக்கு ஒன்று என்று இருந்திருக்கின்றோம் என்று பிறகு தெரியவந்தது.

இப்படி சோடி சேர்த்தபின் எங்களுக்கு ஒரு பிரச்சினை வந்தது. பாடசாலையில் அடிக்கடி தமிழ்த்தினம், ஆங்கிலதினம் என்று சொல்லி எழுத்துப்போட்டி, பேச்சுப்போட்டி, சங்கீத/நடனப்போட்டி என்று நடைபெறும். அதில் யாராவது எங்களின் சோடி சேர்த்த பெண்கள் வென்றால், ட்ரீட் அவரிற்கு சோடி சேர்க்கப்பட்ட பெடியன் வாங்கிக்கொடுக்கவேண்டும். ஓசியில் கிடைக்கிற வடையையும் வாய்ப்பனையும், ரீயையும் ருசிகண்டவர்கள் சும்மா சும்மா எல்லாத்துக்கும் ட்ரீட் வையென்று கேட்கத்தொடங்கிவிடுவாங்கள். அதுவும் பெண்கள் கேட்டால் ஒன்றும் சொல்லமுடியாது. 'உங்களுக்கில்லாததா வாங்கித்தாறோம்' என்று சிரித்தபடி சொல்லிக்கொண்டு மனதிற்குள் திட்டிக்கொண்டிருப்போம். சில பெண்கள் வேணுமெண்டு எங்களை வெறுபேத்துவதற்கு நடக்காத விழாக்களில் எல்லாம் நமது சோடிப்பெண்களுக்கு பரிசுகள் கிடைத்ததாய் சொல்லி ட்ரீட் கேட்பார்கள்.

இப்படியே போனால் எங்கடை அப்பர்மாற்ரை சம்பளக்காசே அப்படியே வாங்கிக்கொண்டு வந்தால்தான் காணும் என்று ஒருமாதிரி நிலைமை கவலைக்கிடமாகப்போக மீண்டும் ஆலோசனைக்கூட்டத்தைக் கூட்டினோம். இறுதியில் இரண்டு முடிவுகளுக்கு வந்தோம். முதலாவது, இதுவரை சோடி சேர்க்காது தனிய இருப்பவர்களை சோடிசேர்த்து எங்களின் சுமையைக் கொஞ்சம் குறைப்பது. மற்றது, ஓசியிலை வெட்டுகின்ற ஆக்களுக்கு அவர்களின் சோடிக்கு இதிலை பரிசு அதிலை பரிசு என்று சொல்லி அவர்கள் ஏவின நாகாஸ்திரத்தை திருப்பி அவர்களுக்கே ஏவி விடுவது.

என்னதான் ஆண்கள், பெண்கள் என்று ஆரோக்கியமாய் பழகினாலும், எங்களின் ஆசிரியர்கள் பலருக்கு அதைப் புரிந்துக்கொள்ளமுடியாததாகவே இருந்திருக்கிறது. அநேகமாய் ஊர்ப்பாடசாலைகளில் O/L பரீட்சை எடுத்தாப்பிறகுதான் கொஞ்சம் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவார்கள் என்று நினைக்கின்றேன். நாங்கள் ஒன்பதாம் வகுப்பிலே இப்படி சகஜமாகப்பழகியதை இயல்பாய் எடுக்கமுடியாத ஆசிரியர்களிடம் இப்படி இருந்தற்காய் பலமுறை அடிகள் வாங்கியிருக்கின்றோம். என்றாலும் என்ன நல்ல விடயங்களுக்காய் சிலவற்றை சகிப்பது பெரிய விசயமல்ல.பிறகொருபொழுதில், புலமைப்பரிசிலை காரணங்காட்டி, யாழ்நகரின் பெரிய பாடசாலை ஒன்றுக்குப்போய் அங்கே பெடியள் மட்டும் இருப்பது கண்டு சகிக்கமுடியாமல், திரும்பி நான் படித்த பாடசாலைக்கு ஓடியப்போயிருக்கின்றேன். காசும் கொடுத்து, கஷ்டப்பட்டு அனுமதியும் எடுத்து அங்கே படிக்கவிட்டால் திரும்பி வந்துவிட்டான் என்று அப்பா அடிக்கடி கூறிக்கொண்டபோதும் பழைய பாடசாலையிலே தொடர்ந்து படிப்பது எனக்குப்பிடித்திருந்தது.
........
ஒரு பொழுதில் ஊரும் போய், பாடசாலையும் போய் இனியிருப்பதற்கு என்னவிருக்கிறது என்று காலத்தை நொந்து சமுத்திரங்கள் தாண்டியும் வந்தாயிற்று. வயதுப்பிரச்சினையால் இலட்சங்களில் கொடுத்து எல்லை கடந்ததால் எனக்குப்பிடித்த நண்பர்களிடமோ, பிரியமான தோழிகளிடமோ முறையாக விடைபெறவில்லையென்ற உறுத்தல் தசாப்தம் தாண்டி இன்னமும் இருக்கிறது. காடு போல் மரங்களும், கொடிகளும், மிதிவெடிகளும் புதையுண்டுபோய் ஊராரை விரட்டிவிட்ட நிலத்தை இனி ஊரென்று அழைக்கமுடியுமா? இல்லை பத்து வருடங்களுக்கு முன்பான வாழ்வை, பாடசாலை நாள்களை, நண்பர்களை, குறும்புத்தனம்மிக்க தோழியரை, ஊரவர்களை, உயிரிழந்துபோனவர்களை, காணாமற்போனவர்களை எவர்தான் மீட்டுத்தரக்கூடும்?

சக்கரவர்த்தி, ஷோபாசக்தி, சில அவதானங்கள்

Wednesday, February 02, 2005

புலம்பெயர்ந்து எழுதுகின்றவர்களில் என்னை அதிகம் வசீகரித்த படைப்பாளிகள் யார் என்றால் ஷோபாசக்தியையும், சக்கரவர்த்தியையும் தயங்காமல் உடனே சொல்வேன். படைப்புக்களில் மட்டுமில்லாது அவர்களின் பிற செயற்பாடுகளாலும் என் கவனத்தை ஈர்ந்தவர்கள் இந்த இருவரும். சக்கரவர்த்தி, யுத்தசந்நியாசம் என்ற கவிதைத் தொகுப்பையும், யுத்தத்தின் இரண்டாம் பாகம் என்ற சிறுகதைத் தொகுப்பும் எழுதியுள்ளார். யுத்தத்தைத் தின்போம் என்ற மூன்று கவிஞர்களின் கவிதைத் தொகுப்பிலும், இவரும் ஒரு படைப்பாளி. ஷோபாசக்தி, கொரில்லா, ம் என்ற இரண்டு நாவல்களையும், தேசத்துரோகி என்றொரு சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.

சக்கரவர்த்தி முழக்கம் பத்திரிகைக்கு ஒருமுறை கொடுத்த நேர்காணல் இங்கே பல சர்ச்சைகளை உருவாக்கியிருந்தது. வெள்ளாளர்களையும், ஆறுமுகநாவலர், இராமநாதன் என்ற சனாதனவாதிகளையும் கிழிகிழியென்று அந்த நேர்காணலில் கிழித்திருந்தார். இதற்கு எதிர்வினையாக, ஆறுமுகநாவலரை இந்துசமயத்தின் (?) காவலராய் இன்னொரு பத்திரிகையான முரசொலி புகழ்ந்து எழுத, சக்கரவர்த்தி அந்தப் பத்திரிகையிலே பொய்யான தகவல்களை எல்லாம் திரித்து வேறொரு பெயரில் எழுத அதையெதுவுமே சரிபார்க்காது அப்படியே அந்தப் பத்திரிகை பிரசுரித்திருந்தது. பிறகு சக்கரவர்த்தி தாந்தான் (கணபதிப்பிள்ளை என்ற பெயர் என்று நினைக்கின்றேன்) சும்மா பொய்யான தகவலகளுடன் எழுதினேன் என்று முழக்கத்தில் தெரியப்படுத்த, முரசொலி பத்திரிகை மூக்குடைந்து போய் செய்வதறியாது திகைத்து நின்றது. அதே மாதிரி, கனடாவிற்கு வந்த வைரமுத்துவின், கவியரங்கிலும் கவிதை பாடி சர்ச்சைக்குள்ளாகி, அடுத்த நாள் நடைபெற இருந்த கவிதா நிகழ்வும் நிறுத்தப்பட்டிருந்தது. கலகக்காரர்கள் என்று சொல்லில் மட்டுமில்லாது செயலில் செய்து காட்டியிருந்தது சக்கரவர்த்தியின் மீது மேலும் மதிப்பு ஏற்பட்டது.

ஷோபாசக்தியும், பிறரைப் போல நடுநிலையாளர்கள் என்று பிரகடனப்படுத்தி புலி எதிர்ப்பு மட்டும் செய்துகொண்டிருக்காதிருந்தது பிடித்திருந்தது. புலிகளை 100% எதிர்க்கிறேன். ஆனால் 200% இலங்கை அரசாங்கத்தின் பயங்காரவாதத்தை எதிர்க்கின்றேன் என்று சொன்னதோடு மட்டும் நில்லாமல், தனது பிரதிக்குள்ளேயும் இதை நிகழ்த்தியும் காட்டியவர்/காட்டுபவர். ஷோபாசக்தியின் நேர்காணல்களை வாசித்தபோது பிடித்த விடயம் என்னவென்றால், அவர் எந்தப்படைப்பாளியையும் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி திட்டியதில்லை. ஏதோ ஒரு நேர்காணலில் உங்கள் நண்பர்கள் கற்சுறா, சாருநிவேதிதா எல்லாம் உங்கள் கதைகளை நிராகரிக்கின்றார்களே என்றபோது, அது அவரவர்களின் கருத்து. அவர்களுக்கு அதை முன்வைக்கும் சுதந்திரம் உண்டு என்று நிதானமாய்த்தான் பதிலளித்திருந்தார். அவன் என்னண்டு இப்படிச்சொல்லுவான் என்று முண்டாதட்டாதது ஆறுதலாயிருந்தது. புலம்பெயர் படைப்புக்களுக்கு ஒரு களமாய் இருந்த எக்ஸில் சஞ்சிகை, பிறகு எக்ஸில், உயிர்நிழல் என்று தமிழகத்து இலக்கிய அரசியலின் பாதிப்பில் தேய்ந்து கட்டெறும்பானது அநேகருக்குத் தெரிந்திருக்கும். நேர்காணலின்போது, பின்னோக்கி பார்க்கும்போது, சின்ன விடயத்தை பெரிதுபடுத்தி வீணாய் சண்டைபிடித்துவிட்டோம் என்று மனவருந்தி ஷோபாசக்தி இதுகுறித்து கூறியிருந்தார். ஷோபாசக்தி எக்ஸிலிருந்து பிரிந்து பிறகு அம்மாவில் கூட ஆசிரியர்களில் ஒருவராய் இருந்திருக்கிறார் என்று நினைக்கின்றேன்.

இவர்களின் அரசியல், படைப்புக்கள் என்று பலவிடயங்களில் எனக்கு முரண்பாடிருக்கும்போதும் (ஜெயமோகன் -சூர்யா தவிர அனைவரும் எங்கோ ஓரிடத்தில் வித்தியாசப்படவே செய்வோம்), இவர்களது படைப்புக்களும், ஆளுமைகளும் என்னை கவருகின்றன. சிலவேளைகளில் இவர்கள் தங்களவில் நேர்மையாக இருப்பதால் இன்னும் கூடுதல் ஒட்டு வருகின்றதோ என்றும் நினைப்பதுண்டு. இந்தச் சமயத்தில்தான், ஈழத்து இலக்கியம் பற்றிய பதிவுகள் விவாதத்தில் ஜெயமோகன், ஈழத்தில் யார் நல்ல சிறுகதைகள் எழுதுகின்றார்கள் என்ற பதிலுக்கு நான் சக்கரவர்த்தியையும் ஒரு உதாரணமாகச் சொல்லியிருந்தது ஞாபகம் வருகின்றது. அந்தப்பொழுதில் சக்கரவர்த்தியின் சில சிறுகதைகளை வாசித்திருந்தாலும், யுத்தத்தின் இரண்டாம் பாகம் தொகுப்பு வாசித்திருக்கவில்லை. அதையும் இப்போது வாசித்தபின் நான் சொன்னதில் தவறில்லை என்றுதான் நினைக்கின்றேன். ஆடு புலி புல்லுக்கட்டு, மற்றும் படுவான்கரையும் மிகச் சிறந்த படைப்புக்கள். வழமைபோல் ஜெயமோகன் அதை நிராகரித்திருந்தாலும் (அவருக்கு அ.முத்துலிங்கத்தைத் தவிர வேறொருவரும் கதை எழுதுவதில்லை என்று ஒரு நினைப்பு) அது குறித்து நான்(ம்) அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. ஜெயமோகனைப் போன்றவர்களுக்கு அ.முத்துலிங்கம் போன்றவர்களைப் பிடிப்பதற்கு அ.முத்துலிங்கம் எந்த அரசியலையும் தனது படைப்புக்களில் முன்வைப்பதில்லை. ஆனால் புலம்பெயர்ந்த 99%மான ஈழத்தமிழர்களுக்கு அரசியலைத் தவிர்த்து வாழ்வென்பது கிடையாதென்றுதான் நினைக்கின்றேன். அ.முத்துலிங்கம் எந்த அரசியலையும் வெளிப்படையாக வைக்காததால் எல்லா தமிழகத்துப் பத்திரிகைளும் எந்தப்பிரச்சனையுமின்றி அவரது படைப்புக்களை வெளியிடுகின்றன (இதனால் நான் அ.முத்துலிங்கத்தின் அனைத்துப் படைப்புக்களை நிராகரிக்கின்றேன் என்று அர்த்தமல்ல). இனி புதிதாய் வாசிக்கத்தொடங்கும் எந்த வாசகரும் அ.முத்துலிங்கத்தின் படைப்புக்களை மட்டும் புலம்பெயர்ந்த படைப்பாய் முன்னுதாராணம் கொள்ளும் அபாயம் வரக்கூடும். சக்கரவர்த்தியின் சில கதைகள் கூட, அந்நியச்சுழலை முற்றுமுழுதாக முன்வைத்து எழுதப்பட்டிருக்கின்றன (EX-அழகி, நானும் ஓகஸ்டீனாவும் ஒரு பந்தயக்குதிரையும்). ஆனால் சக்கரவர்த்தி ஏனைய 99% ஈழத்தமிழர்களைப்போல அரசியலைத் தவிர்த்து பேசமுடியாதவராகையால், இந்தப்படைப்புக்கள் கூட கவனத்தில் இல்லாமற்போய்விட்டன.

இந்தக்கணத்தில்தான் ஜெயமோகன் போன்றோர் முன்வைக்கும் நுண்ணரசியல் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். புலம்பெயர் எழுத்துக்கள் என்றால் அ.முத்துலிங்கத்தையும் , தலித் படைப்புக்கள் என்றால் *பூமணியையும், சோ.தருமனையும் ஏன் இவர்கள் முன்வைக்கிறார்கள் என்றால், அவர்களின் கதைகளோ அல்லது அவர்களோ ஏற்கனவே வழிமொழியப்பட்ட இலக்கியத்தளத்தை அடைய முயற்சிப்பவை. அ.முத்துலிங்கம் எப்படி தனது அரசியலை மறைக்கின்றாரோ அப்படியே *பூமணி போன்றவர்கள் தமது தலித் அடையாளங்களை மறந்து மேல்வர்க்கங்களோடு சமரசம் செய்து போக விரும்புகின்றவர்கள். முரணான விடயம் என்னவென்றால், அழகியல் பற்றி பேசுகின்ற விமர்சகர்கள், அழகியல் என்று ஒன்றிருந்தால் அழகியல்Xஎதிர் அழகியல் என்பது இருப்பதை இலகுவாக மறைத்துவிடுகிறார்கள். இந்த எதிர்அழகியல்தான் தமிழக தலித்துக்களிடம், ஈழத்தமிழர்களிடமும் வெளிப்படுகின்றது என்பதைப் புரிந்துகொள்ளத்தவறும் இவர்களது அழகியலரசியல் நமக்கொன்றும் புதியதுமல்ல.

வைரமுத்துவின் தலைமையில் நடந்த கவியரங்கில் சக்கரவர்த்தி வாசித்த சர்ச்சைக்குள்ளான கவிதையிலிருந்து சில பகுதிகள்...

....
சிலுவைகள் கிளை உடைய
சிறகுகள் இப்போது
சுமையாகிப் போயின.
நான் என் தேசம் மீளல் வேண்டும்
தேசம் மீதான பசலை நோய்
தேகத்தில் படர
தேசம் பற்றிய கனவு
நமக்கிப்போது பிணியாகிப் போனது.

துப்பாக்கிகள் எப்போது துருப்பிடிப்பது.
நாம் எப்போது
நம் தேசம் மீள்வது?
நான்கு புறமும் அலைகள்
நடப்பதென்னவோ கொலைகள்.
...........
87 இல்
நம் சகோதரிகளை
விரட்டி விரட்டி
கற்பழித்த ஹிந்தியன்
இன்று நம் வீட்டு அயல் வீட்டுக்காரன்

துரத்தி துரத்தி
முலைகடித்த சீக்கியன்
இன்று நம் எதிர்வீட்டுக்காரன்.
எதிரி எனப்பட்டவன்
எதிர்க்க இருந்தும்
இன்று நாம் அவனை புன்முறுவலுடன் சிநேகிக்கவில்லையா?
என்ன ஆயிற்று நம் கோபம்
என்ன ஆயிற்று நம் மானம்?
எங்கே போயிற்று
தமிழ் மறவர் வீரம்?
..................
இனச்சுத்தம் இனச்சுத்தம்
எனச் சொல்லி
சோனகரை எல்லாம்
ஒற்றை நாள் இடைவெளியில்
நாட்டைவிட்டு நாம் விரட்டியடித்தோம்.

நாமென்ன நாசிகளுக்கா பிறந்தோம்?
நம் பூர்வீகம் என்ன ஜேர்மனியா?

தூக்கிச் செல்ல மனச்சுமையும்
ஜநூறு ரூபாயையும் மட்டுமே
அனுமதித்த நாம் ஏன் மறந்தோம்,
பாட்டன் முப்பாட்டன் பரம்பரையாய்
சோனகரே ஆயினும்
அவனும் தமிழன் என்பதை ஏன் மறந்தோம்?

காலத்தின் கட்டாயத்தை
இப்போது இங்கே பாருங்கள்
இனச் சுத்தம் பேசும் நம் பரம்பரையின்
பிள்ளைகள் இன்று
கறுப்பின ஆபிரிக்கருடன் சல்லாபிக்கும்
காலத்தின் கட்டாயத்தைப் பாருங்கள்!
கறுப்பருடன் சல்லாபித்து விட்டு
வெள்ளைத்தோல் அமெரிக்கருக்கு
பிள்ளை பெற்றுக் கொள்ளும்
காலத்தின் தீர்ப்பை யார் மறுப்பார்!
..............
ஜயாயிரம் மைல்களுக்கப்பால்
சிவனே என்றிருக்கும் நயாகராவைப் பாடும்
சிகரங்களைத் தொட்ட
எங்கள் வைரமுத்து ஜயா(?) அவர்கள்
கூப்பிடு தூரத்தில் அழுகை ஒலி கேட்பதைப் பற்றி
அலட்டிக் கொள்வதில்லை?

வயாகரா மீது இருக்கும் அக்கறை
அக்கரையில் இருக்கும்
ஈழத்தின் மீது ஏன் இல்லை?

போகட்டும்

வெல்லத்தானே வீரம்
கொல்வதற்கு இல்லை.
கவியரசு ஜயா!
நீங்கள் சொன்னதாகத் தான் சொல்கிறது
பாட்டுப் பெட்டி.

யுத்தம் ஒன்றைத் தவிர
வேறொன்றும் தெரியாதென்னும்
எம் தேசம் நோக்கி
கொல்லாமல் வெல்வது எப்படி
என்றாவது சொல்லுங்கள்....
............


* பூமணி பற்றி இப்படி எனக்கு ஒரு விமர்சனம் இருப்பினும், அவர் நல்ல நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதியிருக்கின்றார் என்பதில் மறுபேச்சுக்கு இடமில்லை.

ஷோபாசக்தியின் 'கொரில்லா'

Tuesday, February 01, 2005

நாவலிருந்து சில பக்கங்கள்

5. குஞ்சன்வயல் கடக்கரையே ரெத்த வெடில் பிடிச்சுது. ஒவ்வொரு வாகனமாய் ஓடி ஓடி ரொக்கிராஜ் பிரேதங்களைப் பார்த்தான். அவனால நிலத்தில நிக்கக் கூட ஏலாமலுக்கு தலை சுத்தி அப்பிடியே ரோட்டில் இருந்திற்றான். குழந்தை, குஞ்சு, குருமான், ஆம்பிளையள், பொம்பிளையள் எண்டு எல்லாமாய் ஐம்பத்து சொச்சப் பிரேதங்கள்.

6. எல்லோரையும் வெட்டித்தான் கொலை செய்திருக்கிறாங்கள். கையில்லாமல், காலில்லாமல், தலையில்லாமல், கைக்குழந்தையைக் கட்டிப்பிடிச்சுக்கொண்டு கிடந்த பிரேதங்களை தோணிகளில ஏத்தினாங்கள். தோணியள் நாவாந்துறையைப் பார்த்து போகுது. நாவாந்துறையில் இருந்து பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டு போறதுக்கு அங்கயும் வாகனங்கள் றெடியாய் நிக்குதெண்டு செய்தி கிடைச்சுது. குஞ்சன்வயல் சனங்கள் ஒரே ஆத்திரமும், அழுகையுமாய் பிரேதங்களை தோணியில ஏத்திறதுக்கு உதவி செய்தவை.

7. காலையில வழமை போல நெடுந்தீவிலையிலிருந்து குமுதினி லோஞ்சு வெளிக்கிட்டிருக்கு. அது நேராய் புங்குடுதீவு குறிகட்டுவான் ஜெற்றிக்கு வரவேண்டும். ஆனால் இப்ப அப்படி வர ஏலாது. இடையில பாதையை மாத்தி நயினாதீவு நேவிகாம்புக்கு போகவேணும். நேவி செக் பண்ணி பிடிக்கிற பொடி பொட்டையளை பிடிச்சுக்கொண்டு விட்டாப்பிறகுதான் குறிகட்டுவானுக்கு வர ஏலும். எப்பிடியும் காலையில பத்து மணிக்குப் பிந்தாமல் குமுதினி லோஞ்சி குறிகட்டுவான் ஜெற்றிக்கு வந்திரும்.

8. ஆனால் அண்டைக்கு குமுதினி நயினாதீவு நேவிக் காம்புக்கு வரமுன்னமே நேவிக்கப்பலுகள் குமுதினியை தேடிப்போய் நடுக்கடலில் மறிச்சுப் பிடிச்சுக்கொண்டுதுகள்.

9. ஒரு பச்சப்பாலகனுக்கு - பிறந்து ஆறு மாசம் கூட இருக்காது- நெஞ்சில வாளல குத்தி அந்தப் பிள்ளையின்ரை வாயுக்குள்ள ஆணுறுப்பை அடைஞ்சு வைச்சிருக்கிறாங்கள். லோஞ்சியல பயணம் செய்த ஒருத்தரும் உசிரோடு தப்பயில்ல. எல்லாரையும் வெட்டிச் சரிச்சுப் போட்டுத்தான் போயிருக்கிறாங்கள்.

10. பத்து மணிக்கு வரவேண்டிய குமுதினி வரயில்ல. அது மத்தியானத்துக்குப் பிறகு குறிகட்டுவான துறையில நிண்ட சனங்களின்ர கண்ணில தெரிஞ்சுது. குமுதினி ஜெற்றியைப் பார்த்து வராமல் கடலுக்குள்ளேயே அலையிறதைக் கண்டு போட்டு துறையிலயிருந்த சனம் வள்ளத்தில ஏறிப்போய் குமுதினியைப் பார்த்தால் இந்தக் கொடூரம். ஒரு மாதிரி போன ஆக்கள் குமுதினிய ஜெற்றிக்கு கொண்டுவந்து சேர்த்திச்சினம்.

11. எல்லாப் பிரேதங்களையும் தோணியில ஏத்தி அனுப்பினாப் பிறகு அப்படியே கடலுக்குள்ள இறங்கி எல்லாப் பொடியளும் கால், முகம் கழுவிச்சினம். பிறகு, ஓஷிலா "நேவிக்கு அழிவு காலம் கிட்டுது" எண்டு சொன்னான்.

12. பொடியள் சொன்ன மாதிரி செய்து காட்டினாங்கள். ஒருநாள் நயினாதீவு நேவியின்ர ஜெற்றியையும் ஜெற்றியில நிண்ட வள்ளங்களையும் வேரோடும் வேரடி மண்ணோடும் கிளப்பினாங்கள்.

13. "எல்லாம எத்தின நேவி முடிஞ்சிருப்பாங்கள்?" எண்டு ரொக்கிராஜ் கேட்கவும் ஓஷிலா ஒர் செக்கன் கண்ணை மூடித் திறந்து போட்டு "கிட்டத்தட்ட கணக்கு சரியா வந்திருக்கும்" எண்டான்.

14. "அண்ணே நாங்கள் கதைக்கிறது பிழையோ? இது கணக்குப் பார்க்கிற காரியமில்லை" எண்டு சடாரெண்டு ரொக்கிராஜின்ர வாயில் வந்திற்று. ஓஷிலா ஒரு மாதிரி சொண்டைச் சுழித்துக் கொண்டே ரொக்கிராஜைப் பார்த்து, "எனக்கே அரசியலா?" எண்டு கேட்டான். சுத்தி நிண்ட பொடியள் சிரிச்சாங்கள்.

(பக்கம் 90 -93)

சிறு குறிப்பு: இந்தப்பக்கத்தில் நிலாந்தனின் குமுதினி சம்பவம் பற்றிய 'கடலம்மா' என்ற கவிதை தரப்பட்டிருந்தது. நேரங்கிடைத்தால் அந்தக் கவிதையை பிறிதொருபொழுதில் பதிவிலிடுகின்றேன்.

ஒரு கதையும் சில குறிப்புக்களும்

Monday, January 24, 2005

சுமதி ரூபனின் இந்தக்கதை, புலம்பெயர்தேசத்திலிருந்து எழுதப்பட்டதில் நான் அண்மையில் வாசித்த சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று என்பேன். சுமதி ரூபன் புலம்பெயர்ந்து எழுதுகின்றவர்களின் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டியவர். சிறுகதைகள், கவிதைகள் எழுவதோடு மட்டுமல்லாமல், சிறந்த நடிகையாகவும், நல்லதொரு இயக்குநனராகவும் பல குறும்படங்களை இயக்கியுள்ளார். வாழ்வதற்கான முயற்சிகளிலே தோற்றுக்கொண்டு, அதற்காய் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையில், இவ்வாறு படைப்பு முயற்சிகளில் தீவிரமாய் இயங்கிக்கொண்டிருப்பவர்களை அவதானிக்கும்போது நான் வியப்பதுண்டு. சுமதி ரூபனின் கவிதைகளில் எனக்கு அவ்வளவு ஈடுபாடில்லாதபோதும் (கிட்டத்தட்ட ஒரே விடயத்தைப் பேசுவதால் அப்படி இருக்கலாம்), அவரது பல சிறுகதைகள் என்னைக் கவருபவை. சில சிறுகதைகள் ஒருவித அதிர்ச்சியாக எழுதப்பட்டது போன்ற பாவனையில் இருந்தாலும், அதையும் மீறிய பல நல்ல கதைகளை என் வாசிப்பனுபவத்தில் பெற்றிருக்கின்றேன். அண்மையில் கூட, மித்ர பதிப்பகம் மூலம் சுமதி ரூபனின் சிறுகதைகள் தொகுப்பாய் வந்ததாய் அறிய முடிகிறது.

இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்தற்கு என்ன காரணம் என்று முதலில் யோசிக்கும்போது, எனக்கு பரீட்சயமான (புலம்பெயர்) சூழலில் இந்தக் கதை பின்னப்பட்டிருக்கிறது. அதில் வரும் பாத்திரங்கள் கூட மிகுந்த நம்பகத்தன்மையை உடையதாக படைக்கப்பட்டிருக்கிறது.

அநேக கதைகளில் வருவதைப்போலன்றி, இந்தக் கதையில் வரும் பாத்திரம் வசந்தமலருக்கு காரணம் எதுவுமில்லாமலே (கணவனை கெட்டவனாக காட்டவில்லை) தன்னிலும் வயது குறைந்த பையனோடு உறவு ஏற்படுகிறது. இயல்பு வாழ்க்கையில் பல சமயங்களில் பலவிடயங்கள் இவை ஏன் நிகழ்கின்றன என்பதே புரியாமலே நிகழ்ந்துவிடுகின்றன. எத்தனை ஏன் போட்டுப்பார்த்து வலைவிரித்தாலும் பதில்கள் சிக்குவதில்லை. அவ்வாறுதான் வசந்தமலரும், முகுந்தனிற்கும் தனக்கும் எப்படி உறவு முகிழ்ந்தது என்று எண்ணி வியப்படைகின்றார், வாசிக்கும் நாமுந்தான்.

அதைவிட நுட்பமான பகுதி இதுதான்...
“தாலிக்கொடிய கழட்டுங்கோ” அவன் பார்வையில் பாசிஇ திடுக்கிட்ட வசந்தமலர்.. “என்னடா சொல்லுறாய்.. இந்த வெளிலிய காருக்க..ஜயோ நான் மாட்டன்”
உறவில் மரபை மீறும் இருவருக்குமே தாலிக்கொடி பெரிய விடயமாகிறது. மேற்கத்தைய கலாச்சாரத்தில் முற்றாக மூழ்கி இருக்கின்றவனுக்கும், தாலிக்கொடியுடன் உறவு கொள்வது உறுத்துகிறது. வசந்தமலருக்கும், தனது கணவன் கட்டிய தாலியைக் கழட்ட மனம் மறுகுகிறது. இந்த முக்கியமான விடயத்தை சுமதி ரூபன் கதையின் ஓட்டத்தில் நாசுக்காய் சொல்லிப்போகிறார். நானறிந்தவரையிலும், தமிழே தெரியாத (அல்லது ஒன்றிரண்டு வார்த்தை) பேசுபவர்கள கலாச்சாரத்தில் பலவிடங்களில் மிக ஊறிப்போயிருப்பதைக் கண்டிருக்கின்றேன். இப்படியானவர்களிலிருந்து வந்த சாதியின் நாற்றமும், மதம் மீதான் கண்மூடித்தனமான நம்பிக்கையும் பலவேளைகளில் என்னை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

அற்புதமாகப் போகின்ற கதை முடிவில் கொஞ்சம் சாதாரணமாகிப் போய்விடுவது மாதிரித்தோன்றியது. ஆனால் வசந்தமலரின் கணவன் குமார் வீசும் ஏளனச்சிரிப்பும், கண்களிலுள்ள வன்மமும் ஏதோ தவறுதலாக நடைபெற்று முடிந்துவிட்டது என்பதை வாசகரிடையே விட்டுச்செல்கிறது. அந்த மர்மப்புன்னகை இரண்டுவிதமாய் யோசிக்கவைக்கிறது. பார்த்தியா எனக்கு எல்லாம் நீஙகள் பொத்தி பொத்தி ஒளித்துவைத்திருந்த உறவு ஏற்கனவே தெரியும். வசந்தமலர் விபத்தில் செத்துவிட்டார் இனியென்ன செய்வாய் என்ற ஏளனம் மிதப்பது மாதிரி ஒரு புறமும், மறுபுறம் இப்படி ஒரு உறவு இருப்பதைக் கண்டுபிடித்து, விபத்து என்று சோடித்து வசந்தமலரின் கணவரே வசந்தமலரைக் கொலையும் செய்திருக்கலாம் என்று இருபிரிவாக நினைக்க வைத்தது முடிவு.

(அவசரத்தில் எழுதுகின்றேன். என் வாசிப்பில் பிழையிருந்தால் சுட்டிக்காட்டவும்)

மன்னிக்க வேண்டுகின்றேன்!

Sunday, January 23, 2005

பொடிச்சி மற்றும் நண்பர்களுக்கு,
நான் தவறு செய்து விட்டேன் என்று நினைக்கின்றேன். எழுதிய நண்பர் தனிப்பட்டமுறையில் மிகநெருக்கம் என்பதாலும், இதைப் பிரசுரிப்பதால் ஒன்றும் சொல்ல மாட்டார் என்று தெரிந்தாலும், அது அறம் சேர்ந்த விடயம் என்பதால் தவறிழைத்திருப்பதாய்தான் தெரிகிறது. எனெனில் அவரோடு இப்போது சிறிதுகாலமாக தொடர்பில்லாததால் அவரின் அனுமதியைப் பெறமுடியவில்லை. இந்தக்கடிதத்தில் அவரது சில தனிப்பட்ட விபரங்களைத் தவிர்த்தே பிரசுரித்துள்ளேன். எனினும் அவரால் விவாதத்தில் பங்குபெற முடியாதிருப்பதால் இதைப் பிரசுரித்தது பிழைதான். அந்த நண்பரிடம் இனி நேரில் காணும்போது மன்னிப்பையும் இந்தப்பதிவை அவரின் அனுமதி பெறும்வரை இங்கிருந்து அகற்றியும் விடுகின்றேன். மனதிற்கு மிகச் சங்கடகமாயிருக்கிறது.எல்லாம் சொதப்பி விட்டேன். மிகவும் மன்னிக்கவும்.

'ம்'

Friday, January 21, 2005

நாவலிருந்து சில பகுதிகள்

"...இனி நான் எழுதப்போவதைப் படிக்கும்போது நீங்கள் சலிப்படையக்கூடும். சாவை வாசிப்பதால் நீங்கள் சலிப்படைகின்றீர்கள். நீங்கள் புத்தகத்தைத் தூக்கி வீசுவதாலோ இனி வரும் சில பக்கங்களை படிக்காமல் தள்ளிவிடுவதாலோ ஒரு காலத்தைக் கடந்து விடமுடியுமென்று நினைக்கின்றீர்களா? அந்தக்காலத்தில் திரும்பவும் திரும்பவும் 'ஜெயவாவோ' முழக்கம் எங்களைச் சூழ்ந்து எழுந்தது. சிங்களத்தில் வெறிக்கூச்சல் வெலிகட முழுவதும் பரவிற்று.

நீளமான விசில்கள் சாவை ஒலித்தன. வெள்ளை நிறத்தில் 'ப்ப்ளின்' துணியில் முழங்கால்களை முட்டும் முழங்கால்களை முட்டும் காற்சட்டைகளும் மேற்சட்டைகளும் அணிந்திருந்த கைதிகள் வை.ஓ கட்டடத்தின் முகப்பிலிருந்த கம்பிகளால் பின்னப்பட்ட பிரதான கதவை உடைக்கத் தொடங்கினர். அவர்களில் முதலாவதாக சேபால ஏக்கநாயக்கா கோடரியால் கதவைக் கொத்தினான். வை.ஓ கட்டடத்தைச் சூழ்வும் சிங்கள்க் கைதிகள் சுவர்களில் தொற்றி ஏறினார்கள். அவர்கள் தங்களின் கைகளில் சசிறையின் கிடாரத்தில் சோறு கிளறும் இராட்சத அகப்பைகள், சிறைத் தச்சுத் தொழிற்சாலையில் இருந்து எடுக்கப்பட்டிருக்கக்கூடிய உளிகள், மரம் அரியும் வாட்கள் கோடரிகள் போன்றவற்றை வைத்திருந்தார்கள். எங்களின் சிறைக்கூண்டுகள் அதிரலாயின. ஜெயவோவா!
(ப 98-99)

"...அவர்கள் மேலும் சில 'செல்'களை உடைத்துவிட்டார்கள். ஒருவர்ன் ஒரு முழுக்கையை இரத்தம் சொட்ட சொட்ட, தரையில் இழுத்துச் சென்றான். நவரத்திணசிங்கம் வெட்டப்படுகிறார். ரொபேர்ட்டின் உடல் அவர்களால் அலவாங்கால் புரட்டிப் போடப்படுகிறது. 'சிவசுப்பிரமணியத்தையும் கொன்று விட்டார்கள்' என்ற அலறல் கேட்கிறது. ஓவ்வொரு கோடரி வீச்சுக்கும் ஒவ்வொரு உளிக்குத்துக்கும் ஒவ்வொரு அலவாங்கு அடிக்க்கும் ஒரு ஜெயவேவாச் சத்தம் எக்காளத்தோடு எழுகிறது.

சிறையின் தரை முழுதும் உதிரச் சகதி. அந்தச் சகதியில் கொலைக்காரர்கள் நடக்கவும் முடியாமல் ஓடவும் முடியாமல் திரும்பத் திரும்பக் கால்கள் வழுக்கி விழுந்தார்கள் என்பதை உங்களால் நம்பமுடிகிறதா? அதை நான் என் கண்களால் கண்டேன். எங்கள் செல்லின் கதவை உடைக்க முயன்றவர்கள் இரத்தத்தில் நிற்கமுடியாமல் தடுமாறினார்கள். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் தடுமாறி விழுகின்றார்கள்..."
(பக 95-96)

"....மாதா எங்கள் எல்லோரையும் பார்த்துச் சொன்னான். 'கிட்டு மாமாக்கு உங்களின் ஆட்கள் குண்டு வீசியிருக்கிறார்கள்' என்று மறுபடியும் பக்கிரியை எழுந்திருக்கச் சொன்னான். பக்கிரியின் முகம் விகாரமாய்க் கிடந்தது. அவரின் வாயில் நீர் வடிந்தது.

மாதா தன் கையிலிருந்த துப்பாக்கியை நீட்டி அதன் குழலால் பக்கிரியின் முகத்தைத் தொடப்போனான். பக்கிரி 'Fucking Weapons' என்று கூறியவாறே அந்தத் துப்பாக்கிக் குழலை தன் கையால் பற்றி மெல்ல புறத்தே தள்ளிவிட்டார். எங்கள் பதின்நான்கு பேரினதும் கண்களின் முன்னே எதிரே அன்று அவர்கள் பக்கிரியின் வாயைக் கைகளால் கிழித்தே அடித்தே பக்கிரியைக் கொலை செய்தார்கள்..."
(ப 158)

......
ரோசாவசந்த் இந்த நாவலிருந்து சிலபகுதிகளைப் பதிந்ததைப் பார்த்த ஆவலில் நானும் சிலதைப் பதிகின்றேன். பொடிச்சி, மு.மயூரன், வெங்கடேஷ் (சூனாமியிற்கு நன்றியை இன்னமும் எடுக்கவில்லையா? hrrrr) போன்றவர்கள் வாசித்த தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்திருக்கின்றார்கள்.

சாரு நிவேதிதா....இன்னும் கொஞ்சம்!

Thursday, January 20, 2005

இன்று நண்பர்களுக்கு எழுதிய, நண்பர்களாய் எழுதப்பட்ட பழைய கடிதங்களை எனது கணணியின் பதுங்குகுழியிலிருந்து எடுத்து வாசித்துக்கொண்டிருந்தேன். பழைய கள்ளைப் போல பழைய கடிதங்களும் மிகவும் ருசியானவை என்று புரிந்தது. தற்செயலாய் நான்கு வருடங்களுக்கு முன்பு நண்பரொருவருடன் சாரு நிவேதிதாவின் படைப்புக்கள் குறித்து விவாதித்தபோது நண்பர் ஒருவர்(பெயர் குறிப்பிட பிரியமெனினும் அவரது தொடர்பு இப்போது இல்லாததால், அனுமதி வாங்கமுடியவில்லை) எழுதிய கடிதத்தின் பகுதி மிக அருமையாக இருந்தது. அதை இங்கே பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.

"...சாருவின் நாவல்பற்றி நீங்கள் வைத்திருக்கும் அபிப்பிராயத்திலிருந்து முற்றிலும் மாறானது என் கருத்து. பாலியல் விடயங்களை இவரல்ல முதலில் தமிழில் சொன்னது. அதற்கு கு.ப.ரா, ரகுநாதன், ஜி.நாகராஜன், ஜானகிராமன் என்று நீண்ட வரலாறு இருக்கின்றது. ஜி.நாகராஜன் வெளிக்கொணர்ந்த இருண்டபகுதிகள் தமிழிலக்கியத்திற்கு முக்கியமானவை. அவரது நாளை மற்றுமொரு நாளே என்ற நாவலில் ஒரு நாளின் பரப்பிற்குள், கசடையும், அன்பையும், கற்பையும், பிறள்வையும் அழகாக சொல்லியிருந்தார். குபராவின் ஆற்றாமை சிறுகதையில் ஒரு பெண்ணினது மனம் கற்பு என்ற கோட்டில் நின்று கொண்டு கடக்க விரும்பியும் கடக்க முடியாமல் ஊசலாடுவதை எடுத்துக்காட்டி, விடியுமா சிறுகதையில் கணவன் இறந்தபின்னர் ஒரு பெண்ணுக்கு விடிந்துபோவதாகக் காட்டி இருந்தார். இந்த விடிவு எதனைக் குறிக்கிறது என்பதே அந்தச் சிறுகதை இன்றும் சிரஞ்சீவியாக இருப்பதற்கான காரணமாக இருக்கிறது.

ஜானகிராமனின் அம்மா வந்தாள், அமிர்தம், மரப்பசு போன்ற நாவல்கள் எல்லாம் இதே உள்ளுடனைக் கொண்ட சிறந்த படைப்புகள்தான். மரப்பசுவில் அம்மணி எல்லோரையும் தொடவிரும்புகிறாள். வைப்பாட்டியாக வாழ்கிறாள். அம்மா வந்தாளில் அலங்காரத்தம்மாள் சின்னவீடு வைத்திருக்கிறாள். கணவனுக்கும், பரபுருசனுக்குமாக ஒவ்வொரு பிள்ளை பெறுகிறாள். பின்னர் பிராயச்சித்தம் செய்ய பரபுருசனின் மூலம் பிறந்த அப்புவை வேதம் படிக்க அனுப்புகிறாள். இவை அந்தக்காலத்து மீறல்களும், அதற்காக கழுவாய் தேடிய நல்ல மனிதர்களின் உதாரணங்களுமாகும். காலத்தோடு ஒட்டிப் பார்க்கும்போது மேற்படி படைப்பாளிகள் சாருவைவிட உயர்ந்த கலைஆளுமை உடையவர்களாகவும், சமூக உய்வையும் விரும்பியவர்களாகவும் தெரிகிறார்கள்.

மேலே குறிப்பிட்டவர்களது காலம், பண்பாடு- வார்த்தைகளில் மிகவும் காப்பாற்றப்பட்ட காலம். இன்று சாருவிற்கு இந்த இறுக்கம் தேவைப்படாத அளவிற்கு சினிமாவும், தொலைக்காட்சிகளும், சர்வதேச வர்த்தக விரிவாக்கம் மூலம் உள்நுழைந்து கொண்ட பிற காலாச்சார அறிமுகங்களும் தளர்த்தி விட்டிருக்கின்றன. வார்த்தைக்கு வார்த்தை இன்று தூசணம் ஆங்கிலத்திலும், தமிழிலும் சர்வ சாதாரணம். ஆகவே தூசணத்தை இலக்கியத்தில் கொண்டு வருவதால் எந்தவிதமான சாதனையும் சாரு செய்துவிடப் போவதில்லை. உள்ளடக்கம் பாலியல் கெடுபிடியை, மரபை மீறுவதாக அமைந்து அதன் பாசையும் வெளிப்படையான பாசையாகி, மீறலை நிகழ்த்துமாகில் சாருவின் சேவையை பாராட்டலாம். ஆனால் புதிது செய்து முகத்தில் வெளிச்சம் விழவேண்டுமென்பதற்காக வலிந்து இழுத்து உள்ளுடனையும் வெளிப்பாட்டையும் புரட்சிகரமானது என்ற பொய்ச் சவடால் விட்டு குரல் காட்டுவது காலத்தின் முன் காணாமல் போய்விடும். இவர் இந்த ரகம். ஒரு பெண்ணின் விரகதாபம் எப்படி இயல்பாகக் கிளம்பி இயல்பான சுய வடிசல்கள் மூலம் நிறைவு காண முடியும் என்ற அறிவே இவரிடம் இல்லை. இதற்கு மேற்படி நாவலில் சில அத்தியாயங்களே சாட்சி. அவற்றை விலாவாரியாக எடுத்துச் சொல்ல நான் விரும்பவில்லை.

இவரது முதல்நாவல் வெளிவந்தபோது உங்கள் வயதுதான் எனக்கும். அன்று அதை வாசித்தபோது மிகவும் புரட்சிகரமாகவும், இப்படிப் பச்சையாக தமிழ்நாவலில் முன்னெப்போதும் (அப்போது சடங்கு படித்திருக்கவில்லை) காணமுடியாத எழுத்துக்கள் இளவயதிற்கு பிரியமாகவும் இருந்தது. ஆனால் நாவலின் முடிவில் வேறெதாவது காத்திரமான விடயம் மனதில் மிஞ்சியதா என்றால் ஒன்றும் இல்லை. ஆனால் பாருங்கள், ஜானகிராமனையும், குபராவையும், சாருவின் எக்ஸிஸ்டென்சியலிசமும் ·பான்சி பனியனும் படிப்பதற்கு முன்பே படித்திருந்தேன். இன்று இதை ரைப்பண்ணும்போது மீட்டுப்பார்க்கும்போது ·பான்சி பனியனில் சூரியா கண்டடைந்த ஞானங்கள் எதுவுமே ஞாபகத்திற்கு வரவில்லை. மாறாக, குபராவும், திஜாவும் படைத்த பாத்திரங்களும், அவற்றின் விடயங்களும் ஞாபகத்திற்கு வருகின்றன. ஆகவே நிலையான பாதிப்புக்களை நல்ல படைப்புக்கள்தானே தோற்றுவிக்கும்.

சாருவின் கலகக்குரல்கள் தமிழிற்கு தேவையான ஒன்றுதான். ஆனால் அதற்கு அவர் (ஜெயமோகன் போல) தனக்குத்தானே சூட்டிக்கொள்ளும் முதன்மந்திரி வேசங்கள்தான் அருவருப்பானவை. மற்றும், இன்றைய தலித் படைப்பாளிகள் நுழைந்து வரும் பகுதிகள் பல, பாலியலின் வன்கதவை உடைக்கின்றனவே? சிவகாமியின் இரண்டு நாவல்கள் இதற்கு நல்ல உதாரணங்கள். மற்றுமொரு விசயம்- சாரு பாலியல் விடயங்களை எழுதுகிறார்தான் ஆனாலும் அவரது உள்மனம் சுத்த சுயம்புவான ஆண்மனம். பெண்ணை அவளது யோனியுடன் சேர்த்து சொத்தாக பெரிதுவக்கும் வியாபாரியின் புத்தி இவருடையது. இந்த நாவலைப் படித்து முடியும்போது நீங்களே புரிந்து கொள்வீர்கள்...."
..............
சாரு நிவேதிதாவின் போலித்தனம் பற்றி ரோசாவசந்த் விரிவாக எழுதியுள்ளார். நான் நேரடியாக அறிந்த இரண்டு விடயங்களைப் பதிவு செய்துவிடலாம் என்று நினைக்கின்றேன். முதலாவது சாருநிவேதிதா தனது கோணல்பக்கத்தில் ஜெயமோகனின் கனடாக் கூட்டத்தின்போது கவிஞர் சக்கரவர்த்தி மேளதாளத்துடன் இந்துத்துவா அடையாளங்களுடன் வந்து ஜெயமோகனை கிண்டல் செய்திருந்தார் என்று எழுதியிருந்தார். சக்கரவர்த்தி கூட்டத்திற்கு வரும்போது நானும் இன்னும் சில நண்பர்களும் வாசலில் நின்றிருந்தோம். சக்கரவர்த்தி கைகள், முகம் போன்றவற்றில் சந்தனம் இட்டிருந்ததைத் தவிர அவர் வேறொன்றிடனும் வரவில்லை. இது குறித்த,சாரு நிவேதிதாவின் கோணல்பக்கத்தை வாசித்தபோது எனக்கே வியப்பாயிருந்தது. என்னடாப்பா நானே நேரில் கண்டனான் இந்தாள் இப்படி எழுதுகிறதே என்று. சிலவேளை நான் ரோட்டில் போய்க்கொண்டிருந்த பெண்களை இரசித்துக்கொண்டிருந்ததால் மேளச்சத்தம் கேட்கவில்லையோ என்று நினைத்து, கூட்டத்தில் கலந்துகொண்ட இன்னொரு நண்பருக்கும் மெயில் போட்டு இப்படி ஏதாவது நடந்ததா என்று கேட்டேன். நான் பெண்களை இரசித்துக்கொண்டிருந்தாலும் சக்கரவர்த்தியின் வரவையும் அவதானித்திருக்கின்றேன் என்பதற்குச் சாட்சியாக நண்பரும் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று உறுதிப்படுத்தியிருந்தார்.

இரண்டாவது சம்பவம். சாரு நிவேதிதா தனது கோணல்பக்கத்தில் குறிப்பிட்டிருந்த கனடாத் தோழி பற்றியது. தற்செயலாய் ஒரு நிகழ்விற்கு (இலக்கியம் சம்பந்தமானது அல்ல) சென்றபோது அறிமுகமாகி அவரது பெயர் ஏதோ என் மூளையில் க்ளிக்காக நீங்கள் இலக்கியத்தில் ஆர்வமுள்ளவராய் என்று கேட்க, வாசிப்பேன் என்று சொன்னபோது, உங்களையா சாருநிவேதிதா குறிப்பிட்டு எழுதினார் என்று வினாவ, கொஞ்சம் தயக்கத்துடன் ஒப்புக்கொண்டார். பிறகு அவ்வபோதைய தொலைபேசி/நேரடி உரையாடல்களின்போது, சாரு நிவேதிதாவுடனான நட்பு பற்றி தானாகவே கூறத்தொடங்கினார். அண்மையில் கூட ட்சூனாமி நிதிசேகரித்தலின்போது எங்களுடன் வந்திருந்தார். அந்த தோழிபற்றி சாருநிவேதிதா தனது பத்தியில் எழுதியபோது 6-7 மணித்தியாலங்கள் தொலைபேசியில் தொடர்ந்து கதைத்தது என்றெல்லாம் கூறியதாய் ஞாபகம். ஆனால் தோழி சொன்னதோ ஆகக்கூடியது 1 அல்லது 1 1/2 மணித்தியாலங்களே பேசியது என்று.
.....
கதைகளில் நாவல்களில் எதையும் புனைந்துகொள்ளலாம். உண்மை சம்பவங்கள் என வாசகரை நம்பவைத்து தனது பங்கிற்கு கற்பனையை எல்லாம் சாருநிவேதிதா கலந்தடிப்பதை எப்படியென்று சொல்வது?

சாருநிவேதிதாவின் படைப்புக்கள்

Tuesday, January 18, 2005

'என் வாழ்வைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் என் எழுத்தைப் பார்க்காதே. என் எழுத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் என் வாழ்க்கையைப் பார்க்காதே. என் எழுத்து வேறு. என் வாழ்க்கை வேறு'
-in Zero Degree Novel


மேற்கூறப்பட்ட வார்த்தை எந்தளவிற்கு தமிழ்ச்சூழலிற்கு பொருந்துமோ தெரியாது. ஆனால்,அண்மைய கோணல் பக்கத்தில் கூட தனது படைப்புக்களில் அநேகமானவை சுயவரலாற்றுத்தன்மை கொண்டதே என்பதை சாருநிவேதிதாவே ஒப்புக்கொள்ளும்போது, சாருநிவேதிவாவின் படைப்புக்களை இந்த அளவுகோலை வைத்து அளக்கமுடியாதென்றே எனக்குத் தோன்றுகிறது.

சாரு நிவேதிதா முதலில் பிரான்சிலிருந்து வெளிவந்த (வெளிவந்துகொண்டிருக்கிறதா இன்னும்?) உயிர்நிழலின் (பிறகு எக்ஸிலில்)கோணல்பக்கங்களில் மூலமே எனக்கு அறிமுகமானார். கோணல்பக்கங்களில் பரவிக்கடந்த எள்ளல்தொனியும் எதற்கு பயப்பிடாத விமர்சனப்பாங்கும் அவரில் ஒரு மதிப்பு வரவைத்தது. பிறகு அவரது படைப்புக்கள் என்று தேடத்தொடங்கியபோது நேநோவை ஒரு புத்தக்கண்காட்சியில் கண்டு வாங்கினேன். டெல்கியைச் சுற்றி புனையப்பட்ட கதைகள் அதிகம் இருந்தாலும் அதில் பல சிறந்த கதைகள் இருப்பதை தயக்கமின்றி ஒத்துக்கொள்ளுவேன். இப்போது இந்தப்பதிவை எழுதுவதற்காய் மீண்டும் (நான்கு வருடங்களுக்கு பிறகு)இன்று அந்தத் தொகுப்பை எடுத்து வாசித்தபோதும் என் முன்னைய புரிதலில் பிழையில்லை என்றே நினைக்கிறேன். எள்ளலும் எக்காளமாய் சாருநிவேதிதாவைப் போல எழுதுகின்ற தமிழ் எழுத்தாளர்கள் மிகக்குறைவே. இந்திரா காந்தியின் மரணத்தின்பின் கொல்லப்பட்ட அப்பாவி சீக்கியர்களைப் பற்றிக் கதைக்கும், 'பிளாக் நம்பர்: 27 திரிலோக்புரி', சாதியின் குறுக்குவெட்டுச் சொல்லும், 'உடல்', பிரியமுள்ள சித்தியின் கோரமரணத்தைச் சொல்லும்,'பிள்ளைப்பூச்சி', கதை என்று ஒன்று இல்லாமலே நம் மனதில் தனிமையின் வாதையை படியவிடும், 'கண்ணிநுண் சிறுத்தாம்பு' என்று பல கதைகள் எனக்குப் பிடித்திருந்தன. சாருநிவேதிதாவின் நகைச்சுவையை, 'பிரஸ்சில் இருக்கிறது' என்ற கதையை வாசித்துப்பாருங்கள். புரியும். இன்றும் அதை வாசித்து வயிறு குலுங்கச்சிரித்தேன்.

நேநோவின் வாசித்தபின், சாருநிவேதிதாவின் 'ஜீ(சீ)ரோ டிகிரி' நாவலையும் வாசிக்கவேண்டும் என்று தேடத்தொடங்கியபோது, ஒரு நண்பர் மூலம் கிடைத்தது. இந்த நாவல், மையமற்ற பல கதைகளைச் சொல்லிச்செல்கிறது. சிலவேளைகளில் ஒரு டயரியின் பக்கங்களோ என்று யோசிக்கவும் வைப்பவை. ஒரு நேரத்தில் வாசிக்கும்போது அற்புதம் என்றும், இன்னொருபொழுதில் அசிங்கம் என்றும் இரண்டு பிளவாய் என்னை எண்ண வைப்பது இந்த நாவல். முதலில் இந்த நாவலை வாசித்தபோது நாவலில் வெளிச்சமாக எழுதப்பட்ட பாலியல் விவகாரங்கள் சற்று திகைக்க வைத்தன. தமிழில் இதற்கு முன் இப்படி அப்பட்டமான விவரிப்புக்களை முக்கியமாய் oral sex & sexual positions விபரிக்கப்பட்டதை வாசிக்கவில்லையாதலால் சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தன.

கிட்டத்தட்ட இதுவும் ஒரு சுயவரலாற்றுத்தன்மை கொண்டது என்பதை, இந்தக்கதையை சாருநிவேதிதாவின் கோணல்பக்க எழுத்துக்களுடடன் ஒப்புநோக்கும் எவரும் இலகுவில் அறிந்துகொள்ளலாம். முக்கியமாய் பிற்பகுதியிலுள்ள அவந்திகாவின் கடிதங்களும், மகளுக்கான கடிதங்களும் கவிதைகளும். நாவலை இரண்டு மூன்று வாசித்தபின்னும் என் மனதில் தங்கி நிற்பவையும் இந்த இரண்டுந்தான். இந்த நாவலில் பல ஆண்பாத்திரங்கள் (சூர்யா, முனியாண்டி, கதைசொல்லி, etc) வருகின்றன. ஆனால் அவை எல்லாமே ஒரு மனிதனின் பல்வேறு பட்ட நான்களே.

சாரு நிவேதிதாவின் 'எக்ஸ்ஸ்டென்சியலிஸமும் ஃபேன்சி பனியனும்', கொழும்பில் நின்றபோது அக்காவின் புத்தக்கப்பரணிலிருந்து கண்டெடுத்து வாசித்தேன். அதில் சொல்வதற்கு பெரிதாய் ஒன்றுமில்லை. பாத்திர்ங்கள் பக்கங்களைப் போல விரிவடைந்துகொண்டேயிருக்கின்றனர். ஆர்த்தி பற்றி வரும் பகுதிகளைத் தவிர இன்றைய பொழுதில் அந்த நாவலை(?) வாசிக்கும்போது நினைவில் எதுவும் வரவில்லை.

எனது வாசிப்பு சாருநிவேதிதாவின் அண்மைக்கால படைப்புக்களிலிருந்து பின் நோக்கிச் செல்வதாய் உள்ளது. ஆனால் கால வரிசைப்படி வசித்திருக்கும் ஒருவர், 'எக்ஸ்டென்சியலிஸமும் ஃபேன்சி பனியனில்' வரும் சூரியாவையும், 'நேநோவைவில்' வரும் முனியாண்டியையும், நேநோவையும் , 'ஜீரோ டிகிரி' நாவலில் தரிசிக்கமுடியும்.

சாருநிவேதிதாவின் நாவல்கள்/கதைகள் பலவகைகளில் விமர்சிக்கப்பட்டுள்ளன. நேநோவில் இருக்கும், 'சிதைவு' கதை நடமாடும் பல உண்மையான மனிதர்களைப் பேசுகின்றது (சிலரை என்னால் அடையாளம் கண்டு கொள்ளமுடிகிறது). அவ்வாறு அந்தக்கதை எழுதப்பட்டதாலே பல பிரச்சினைகள் எழுந்ததாகவும் அறிகின்றேன். மற்றும் சாரு நிவேதிதாவின் எழுத்து நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கிய, ஆபிதின் பற்றியும் அவரது கதைகள் பற்றியும் நேநோவில் குறிப்பிடப்படுகின்றது. இன்னமும் களவாடி எழுதிய கதைகள் பற்றி விளக்கமாக சாருநிவேதிதா எதுவும் கூறாது மெளனங்காப்பது கீழ்த்தரமானது. எத்தனையோ ஆண்டுகாலமாய் ஆபிதின் மற்றும் அவரின் உறவுகளுடனான இருந்த நல்ல நட்பை சாரு நிவேதிதா இதன் மூலம் கேவலப்படுத்துகிறார் என்பதே என் தனிப்பட்ட கருத்து. அதனால் சாருநிவேதிதா தனது நட்பை நண்பர்கள் பலரும் கேவலப்படுத்துகிறார்கள் என்று கோணல்பக்கங்களில் எழுதும்போது நகைப்புத்தான் வருகிறது. சனதருமபோதினியில் எழுதப்பட்ட உன்னதசங்கீதத்திலும், இப்போது கோணல் பக்கத்திலுள்ள மதுமிதாவுக்கு சொன்ன பாம்புக்கதைகளிலும் அவர் சிறுமிகள் மீது வைத்திருக்கும் 'மதிப்பு' தெரிகிறது. சிறுபிள்ளைத்தனமாய், chat செய்வதையும், காதலில் (தமிழ்ப்படம் தோற்றது போங்கோ) அடிக்கடி வீழ்வது பற்றி எழுதும்போதும் இந்த ஆளை எந்த categoryக்குள் அடக்குவது என்று யோசிப்பதுண்டு. இது அவரது சொந்த விசயமாய் இருந்தாலும் அதை அவரே வெளியே கொண்டுவரும்போது இரண்டு வார்த்தை நான் சொல்வதில் தப்பில்லை என்று நினைக்கிறேன். மற்றபடி வேறு பலரைப் போல உள்ளுக்குள் மறைத்து வேடம்போடாமல் தன்னை ஒப்புவிப்பதற்கும் ஒருவித தைரியம் வேண்டும் என்றே நம்புகிறேன். கோணல்பக்கங்களில் இப்படி பல கோமாளித்தளங்கள் இருந்தாலும், பல அற்புதமான பத்திகள் உள்ளன. இலத்தீன் அமெரிக்கா, வடஅமெரிக்கா இலக்கியம்/இலக்கியவாதிகள், இன்ன பிற என்று ஆழமாய் எழுதும் பத்திகள் முக்கியமானவை. குஜராத் கலவரம், பெரியார், ரோட்டுப்போடும் தொழிலாளர்கள், அலிகள் என்று பல பத்திகள் மிகக் கரிசனமாகவும், சமூகம் மீதான கறான விமர்சனப்பார்வையுடனும் எழுதப்பட்டிருக்கிறது.

ஒரு படைப்பாளியை/படைப்புக்களை எந்த அளவிற்கு நேசிக்கிறேனோ அந்தவளவிற்கு வெறுக்கவும் செய்கிறேன் என்றால் அதில் முக்கியமானது சாருநிவேதிதாவின் படைப்புக்கள்.

(சிலவேளைகளில் மேலும் எழுதக்கூடும்).


வாழ்விக்க வந்த தாயே வாழ்வழித்தாய்

Tuesday, January 11, 2005

இந்தப்பாடலை CTR (www.ctr24.com) வானொலியில் இணையத்தின் மூலம் கேட்டேன். ட்சூனாமியின் ஈழத்தில் (அல்லது புலம்பெயர்ந்த தேசத்தில்) வெளியிடப்பட்ட இசைத்தட்டிலிருந்து ஒலிபரப்பப்பட்ட பாடல் என்று நினைக்கிறேன். மிகவும் உருக்கமான குரலிலும், வலிமையான வசனத்திலும் இந்தப் பாடல் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. புலம்பெயர்ந்த சூழலில் ட்சூனாமியின் நேரடியான பாதிப்பு இல்லாது, சொந்த தேசத்தில் நிகழ்ந்த அனர்த்தத்தை மறக்கடிக்கும் பல்வேறு சூழ்நிலைக்காரணிகள் இருக்கும் இந்தச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான பாடல்கள்/செய்திகள்/சம்பாஷாணைகள் தாயகத்தை நோக்கி நம் மனதைத் நிச்சயம் திருப்பும்.

கடந்த சனிக்கிழமை ஒன்ராரியோ மாநகரசபையின் திறந்தவெளி அரங்கில், ஈரநினைவுகளின் ஒன்று கூடல் நட்ந்து முடிந்தது. ஏற்கனவே சனிக்கிழமை கனடாவில் ட்சூனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான துக்கதினமாய் பிரகடனப்படுத்தப்பட்டு, மத்திய மாநில அரசாங்கக்கட்டடங்களில் நினைவாராதனைகள் நிகழ்ந்தன. முக்கிய அமைச்சர்கள், பிரமுகர்கள் எல்லாம் கனடா தமிழர் பேரவையால் செய்யப்பட்ட நிகழ்வில் பங்குபெற்றியிருந்தனர். Jack Leyton (New Democratic Party leader) புலிகளின் கட்டுப்பாடுகளிலுள்ள பகுதியில் நேரடியாக பார்வையிட அனுமதி மறுக்கப்பட்ட ஐ.நா செயலாளர் நாயகம் கோ·பி அனான் குறித்த செய்தியையும், இலங்கை அரசாங்கத்தையும் கண்டித்துப்பேசியிருந்தார். (பொங்கு தமிழ் நிகழ்ந்தபோதும், ஏனைய அரசியல்வாதிகள் எல்லாம் சுருண்டு கிடந்தபோது, எவ்விதத்தயக்கமில்லாது வந்து ஈழத்தமிழர்களின் சமாதான முயற்சிகளுக்கான முழுஆதரவை Jack Layton தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தகக்கது). ஈர நினைவுகளின் ஒன்றுகூடலில் இலங்கையில் வெளிநாட்டு உதவிகள் சரியாக பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்பதே முக்கிய கோரிக்கையாக கனடீய பாராளுமன்ற மற்றும் அனைத்து மட்டங்களிலுள்ள அமைச்சர்களுக்கு தமிழ் மாணவர்களால் முன்வைக்கப்பட்டது.

ஈழ இலக்கியவாதிகள் பற்றி விமர்சிக்க பல காரணங்கள் இருந்தாலும் ஆபத்து/உதவி என்று வரும்போது நீளும் அவரது கரங்கள் நம்பிக்கையளிக்கக் கூடியவை. அய்ரோப்பாவில் இலக்கியச்சந்திப்பு நண்பர்கள் நிதிசேகரித்துக்கொண்டிருப்பதுவும், கனடாவில் அண்மையில் வெளியிடப்பட்ட என்.நடேசனின் புத்தகவெளியீட்டில் புத்தகம் விற்று வந்த பணம் முழுதும் ட்சூனாமி நன்கோடைக்கு அளிக்கப்பட்டதும் இதமான செய்திகளாகும். ஈரநினைகளின் ஒன்றுகூடலிற்கு சேரன் போன்றவர்கள் எல்லாம் பங்கேற்றதை தொலைக்காட்சியில் பார்த்தபோது, இலக்கியவாதிகள் என்றால் சும்மா எழுத்தோடு மட்டும் வாளாவிருப்பவர்கள் என்ற பிரேமிற்குள் நமது எழுத்தாளர்கள் இல்லை என்பது தெம்பூட்டக்கூடியதாகவிருந்தது.

கனடாவைப் பற்றியும் சிலவற்றைச் சொல்லவேண்டும். ட்சூனாமிக்காய் 4 மில்லியனின் தொடங்கிய நிதி 425மில்லியன் வரை உயர்ந்திருப்பதில் இங்குள்ள மக்களின் பரந்த இதயம் தெரிகிறது. ஈரநினைவுகளின் ஒன்றுகூடலில் தோழி ஒருவர் சொன்னமாதிரி, கனடாவின் அகண்ட நிலத்தைப்போல மக்களின் மனதும் பரந்துவிரிந்தது என்பது உண்மைதான். அமைச்சர்கள், பிரதம மந்திரி என்று எல்லோரும் நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்களிற்கு செல்ல ஆயத்தமாவதிலும், கனடா நாட்டு நிவாரணம் சரியாக பகிர்ந்தளிக்கப்படவேண்டுமென்பதில் பிடிவாதமாய் இருப்பதிலும். நம்பிக்கையின் மெல்லிய ஒளிக்கீற்று தெரிகிறது. வேலைக்கு போனபோது உனது தாயகத்தில் நிகழ்ந்த பேரழிவிற்கு வருந்துவதாய் ஏதோ சொந்த உறவுகள் போல ஆறுதல்களைச் சொன்ன மனிதர்களைப் பார்க்கையிலும், தனது நண்பி இறந்துவிட்டா அவாவின் funeralற்கு போகோணும், எண்டாலும் உங்கட நாட்டில் நடந்தது மிகவும் கோரம். சின்ன பிள்ளைகள் எல்லாம் கடலோடு போய்விட்டார்கள் என்று ஒரு co-worker சொன்னபோதும் எனக்கும் நெஞ்சு கனத்தது. இந்த நாட்டோடு ஒட்டமுடியாது என்று பல நூறு காரணங்கள் சொல்லி விமர்சிக்கும் என்னைப்போன்றவர்களை எதுவும் சொல்லவிடாமல் மனதைக் கலங்க வைக்கும் சில தருணங்களில் இதுவும் ஒன்று.

காலத்தின் முன் கையறு நிலையராய்...

Sunday, January 02, 2005

Tsunami - Aftermath

இறுதியாய் புலிகளின் சமாதானச் செயலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, வடகிழக்கில் கிட்டத்தட்ட 19000 மக்கள் இறந்தும், 11000 பேர் காணாமலும் போயிருக்கின்றனர். சூனாமியால் ஏற்பட்ட இழப்பு 30000ற்கு அதிகமாகிவிட்டது என்று தெரிகிறது. இதைவிட தெற்குப்பகுதியிலும் ஆயிரக்கணக்கில் மக்களை இழந்துவிட்டோம். இருபது வருட போரில் இறந்துபோனவர்களைப் போல அரைமடங்கான மக்களை ஒரு நாளில் இயற்கையினால் தொலைத்துவிட்ட கொடுமையை சென்ற ஆண்டு தன் கரிய கரங்களால் எழுதிவிட்டுப் போய் விட்டது.
.................
இன, மத பேதமில்லாமல் புலிகளும், தமிழர் புனர்வாழ்வுக்கழகமும் உதவிகளைச் செய்து கொண்டிருக்கின்றனர் என்று வரும் செய்தி ஆறுதலிக்கிறது. முஸ்லிம் மக்களுக்காய் குறிப்பிட்ட தொகையை தமிழர் புனர்வாழ்வுக்கழக்கம் வழங்கியிருப்பதும், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள சிங்களக்குடும்பங்களுக்கு நிவாரணப்பணிகளை தமிழர் புனர்வாழ்வுக்கழகம் முன்னின்று செய்வதும் நம்பிக்கை தரும் விடயங்கள். ஈழத்தில் ஏனைய பகுதியில் வாழும் சிங்களமக்களும் (not the damn politicans and racists) விரிந்த மனதுடன் உதவிகளை தமிழ் மக்களுக்கு செய்துகொண்டிருப்பபதுவும் குறிப்பிடத்தக்கது. புலிகளின் கடற்படை சிறப்புத்தளபதி சூசை ஒரு பேட்டியில் கூறும்போது, ஒரு சிங்களக் குடிமகன்தான் தங்கள் பகுதியில் பாதிக்கப்பட்ட இடங்களிலுள்ள சடலங்களை அப்புறப்படுத்துவதில் முன்னின்று உழைத்துக்கொண்டிருப்பதை நன்றியுடன் நினைவுகூர்ந்திருந்தார்.
.................
சூனாமியின் aftermathதான் இன்னும் பயங்கரமாய் இருக்கும்போல இருக்கிறது. முக்கிய பிரச்சினை தொற்றுநோய்கள் பரவும் அபாயம். சரியான வழியில் சுகாதாரச்செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், சூனாமியால் இறந்தவர்களைவிட இன்னும் அதிகமானவர்களை இழக்கவேண்டிய அபாயம் உண்டு என்று அண்மையில் செஞ்சிலுவைச் சங்கம் எச்சர்த்துள்ளது. மற்றது உறவுகளைப் பலிகொடுத்தவர்கள் கடந்துசெல்லவேண்டிய உளவியல் பிரச்சினைகள். ஒரு செய்தியில் எழுதப்பட்டது போல, "..But psychological and behavioral problems are certain to become more important as the authorities gain control over the life-threatening issues.." என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டும். அத்தோடு இப்போது இரண்டு விதமான பிரச்சினைகளைக் கேள்விப்பட்டேன். இந்த அனர்த்தத்தால் அநாதைகளாகப்போன இலங்கைச் சிறார்களை மேற்குலக நாடுகளிலிருந்து பலர் சுவீகரிக்க முயற்சித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பது. நல்ல உள்ளங்கள் பல இருந்தாலும், சரியான தகவல் இல்லாமல் adoptationஜ அனுமதிக்க முடியாது. இதைச் சாட்டாக வைத்து child abusers குழ்ந்தைகளை தத்தெடுக்க முயலக்கூடும். எனவே சரியான வரைமுறைகள்/சட்டதிட்டங்கள் இல்லாமல் இலங்கையில் குழந்தைகளைத் தத்தெடுத்தல் தற்போதைக்கு தடைசெய்யப்பட்டுள்ளதாக அதற்கு பொறுப்பான ஒரு அதிகாரி கூறியுள்ளார். இலங்கையிலிருந்து வெளிவரும் மற்றொருவிதமான செய்திதான் கொடுமையானது. இந்த அசம்பாவத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கும் பெண்களை/சிறார்களை பாலியல் வல்லுறகளிற்கு உட்படுத்த பலர் முயல்வதான சம்பவங்கள். ஒரு உதாரணத்திற்கு, "..Since Friday, two other cases of suspected abuse of children were reported, including one by a man who attempted to molest his granddaughter..". UN சிறார்களுக்கான அதிகாரியும் இதுகுறித்து எச்சரிகை விடுத்துள்ளார்."In the aftermath of displacement and shock you do see an increase of abuse and violence against women and children," said Ted Chaiban, head of the U.N. children's agency in Colombo." பலவிதமான கோணங்களுடன் பலப்பிரச்சினைகளைப் பாதிக்கப்பட்டோர் சந்திக்கவேண்டி வரப்போகிறது என்பதை மேற்கூறிய சம்பவங்கள் கட்டியங்கூறுகின்றன.
.................
இவ்வளவு காலமும், தான் இலங்கையில் கால்பதிக்கவில்லையென்று சும்மா ஒளிச்சுபிடிச்சு காட்டிய நம்ம அண்ணாச்சி அமெரிக்காவிற்கு இது நல்ல சந்தர்ப்பம். ஏற்கனவே அமெரிக்காக் கொமாண்டோக்கள் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சியளித்துக்கொண்டிருப்பது நமக்குத் தெரிந்த செய்தி என்றாலும், இது வெளிப்படையாக அமெரிக்க காலூன்றுவதற்கான நல்ல தருணம். சூனாமி பேரழிவிற்கு உதவுவதற்காய் 1500 அமெரிக்க Marines இலங்கைக்கு போகப்போவதென்ற செய்தி மிகவும் அச்சமூட்டுவதாகவே உள்ளது. திருகோணமலைத் துறைமுகத்திற்கான அமெரிக்காவின் தந்திரக்கண் நமக்கொன்றும் தெரியாதல்ல. இப்படி உதவி என்று போய் ஈழத்திலேயே நிரந்தரமாய் தங்கி நமக்கு உபத்திரம் பிறகொருபொழுதில் தரக்கூடும். இப்பவே எமது எதிர்ப்புக்குரல்களை இங்கும் ஈழத்திலும் காட்டாவிட்டால் பாரிய பின்விளைவுகள் வரக்கூடும். உதவியை அமெரிக்கா ஐ.நாவின் உபபிரிவுகளான UNICEF, WHO போன்றவற்றின் மூலம் வழங்க நாம் கட்டாயப்படுத்தலாம். அமெரிக்கா என்றால் நாயைக் காணமுன்னமே எடுடா கல்லென்று அலறுகின்ற ஜே.வி.பியும் அடக்கிவாசிக்கும்போது நாற்காலிக்கனவுகளின் 'அற்புதம்' விளங்குகின்றது. சந்திரிக்காவைப்பற்றிஒன்றும் கூறத் தேவையில்லை. யார் வந்தாலும், என்ரை நிறைவேற்று அதிகார சனாதிபதி நாற்காலிக்கு வேட்டு வைக்காவிட்டால் போதுமென்பது அவரது இன்றைய கொள்கை.
.................
என்னவோ எல்லாம் நடக்குது போங்கோ!