கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

க‌ம்ப‌ராமாய‌ண‌ம் ப‌டித்த‌ க‌தை அல்ல‌து புல‌ம்பெய‌ர் Fusion க‌தை

Wednesday, August 18, 2010

ச‌ம‌ர்ப்ப‌ண‌ம்:

'விதியினை நகுவன, அயில் விழி; பிடியின்
கதியினை நகுவன, அவர் நடை; கமலப்
பொதியினை நகுவன, புணர் முலை, கலை வாழ்
மதியினை நகுவன, வனிதையர் வதனம்.'
என‌க் க‌ம்ப‌ன் க‌ண்ட‌ பெண்டிர்க்கு...!

முன்னீடு
சென்ற‌ மாத‌ம் 'ம‌ழைக்குள் காடு'  நிக‌ழ்வில் க‌விதைக‌ள் ப‌ற்றிய‌ ஓர் உரையாட‌ல் ந‌டைபெற்றிருந்த‌து. என‌க்குப் பிரிய‌மான‌  செல்வ‌ம் புதிதாய்க் கவிதை எழுத‌ வ‌ருகின்ற‌வ‌ர்க‌ள் க‌ட்டாய‌ம் க‌ம்ப‌ இராமாய‌ண‌த்தை வாசிக்க‌வேண்டும் என்று கூறியிருந்தார். க‌ம்ப‌ராமாய‌ண‌த்தில் இருக்கும் ச‌னாத‌ன‌க் க‌ருத்துக்க‌ளை ம‌றுத்துக்கொண்டே அதேச‌ம‌ய‌ம் க‌ம்ப‌னில் ஊற்றாய்ப் பெருகும் அழ‌குத் த‌மிழுக்காய்த்தான் செல்வ‌ம் அவ்வாறு கூறியிருப்பார் என‌ நினைக்கின்றேன். ம‌ர‌புக‌ளையும் தொன்ம‌ங்க‌ளையும் க‌ற்றுத்தேர்வ‌தால் நாம் எதையாவ‌து அடைய‌க்கூடுமே த‌விர‌ இழ‌க்க‌ப்போவ‌து எதுவுமில்லைத்தான். எனினும் என‌க்கு இந்த‌ 'வ‌ர‌லாற்றை'க் க‌ற்றுக்கொள்வ‌தால் ந‌ம‌க்கு ஊட்ட‌ப்ப‌டும் ப‌ழ‌ம்பெருமைக‌ளும், வீர‌மும், தியாக‌மும் இன்ன‌மின்ன‌மும் அநேக‌மாய் எம்மை எதிர்கால‌த்தில் வெறியூட்ட‌ப் ப‌ய‌ன்ப‌டுப‌வையே என்ற‌ எண்ண‌மேயுண்டு.

செல்வ‌ம் என் பிரிய‌த்துக்குரிய‌வ‌ர் என்று கூறிய‌தற்குக் கார‌ண‌ம், அவ‌ர்மீது எவ்வ‌ள‌வு விம‌ர்ச‌ன‌ம் எழுத்திலும் நேரிலும் வைத்தால்கூட‌ அதே நேச‌த்துட‌ன் தொட‌ர்ந்து ப‌ழ‌க்கூடிய‌வ‌ர் என்ப‌து ம‌ட்டுமின்றி க‌தைப்ப‌த‌ற்கான‌ வெளியைத் த‌ந்து என‌து க‌ருத்துக்க‌ளைச் செவிம‌டுப்ப‌வ‌ர். ஆனால் இந்த‌ப் பிரிய‌ம் என்ப‌து உண்மையில் எங்க‌ளின் எதிர்ம‌றைக‌ளினூடே உருவான‌து என்றுதான் கூற‌வேண்டும். உதார‌ண‌த்திற்கு செல்வ‌த்திற்கு ஜெய‌மோக‌னைச் சுத்த‌மாக‌ப் பிடிக்காது என‌க்கு ஜெமோவை பிற‌ எந்த‌ ப‌டைப்பாளியை விட‌வும் மிக‌வும் பிடிக்கும். எந்த‌ச் ச‌பையிலும் ஜெமோவை நான் ஒருபோதும் விட்டுக் கொடுப்ப‌தில்லை. செல்வ‌த்திற்கு ஜெமோவில் இருக்கும் எரிச்ச‌லினால்தான், அவ‌ர் த‌ன் வீட்டில் குடிபெய‌ர்ந்த‌ ஒரு பெண்ம‌ணிக்கு 'விஷ்ணுபுர‌ம்' வாசிக்க‌க் கொடுத்திருக்கின்றார். அடுத்த‌ ஓரிரு வார‌ங்க‌ளில் அப்பெண்ம‌ணி பேய‌றைந்த‌மாதிரி வீட்டையே காலி செய்து போயிருக்கின்றார். இப்ப‌டியொரு 'க‌தை' ந‌ட‌ந்ததாக‌ க‌ன‌டாவில் இருப்ப‌வ‌ர்க‌ள் பேசிக்கொள்கின்றார்க‌ள் என‌ செல்வ‌மே 'கூர்' நேர்காண‌லில் கூறியிருக்கிறார். இத‌ன் மூல‌ம் செல்வ‌ம், 'உங்க‌ளுக்குப் பிடிக்காத‌வ‌ர்க‌ள் எவ‌ரேனும் வீட்டில் இருந்தால் 'விஷ்ணுபுரத்தை'க் கொடுத்து எளிதாக‌ வெளியேற்றுங்க‌ள்' என்ப‌தை ம‌றைமுக‌மாய்ச் சொல்ல‌வ‌ருகின்றார் என்ப‌தை -ஜெமோவின் தீவிர‌ வாச‌க‌னாக- என்னால் புரிந்துகொள்ள‌ முடிகிறது. அத‌னால்தான் சொல்கின்றேன் செல்வ‌த்துட‌னான என‌து ந‌ட்பும் பிரிய‌மும் முர‌ண்க‌ளின் அடுக்குக‌ளில் க‌ட்ட‌ப்ப‌டுப‌வை.

க‌ம்ப‌ராமாய‌ண‌த்தைப் செல்வ‌ம் ப‌டிக்க‌ச் சொன்ன‌து இது முத‌ற் த‌ட‌வையும‌ல்ல‌. என‌து தொகுப்பான‌ 'க‌ழுதைக‌ளின் குறிப்புக‌ளுக்கான‌' விம‌ர்ச‌ன‌க்கூட்ட‌மொன்றிலும்  இதையே அவ‌ர் கூறியுமிருந்தார். ஆக‌வே எங்க‌ள் மீதிருக்கும் பிரிய‌த்தில்தான் செல்வ‌ம் வ‌லியுறுத்துகிறார் என்ப‌தில் என‌க்கு எவ்வித‌ச் ச‌ந்தேக‌முமில்லை. ஆக‌வே நான் இப்போது க‌ம்ப‌ராமாய‌ண‌த்தைப் ப‌ற்றி ஒரு க‌தை சொல்ல‌ப்போகின்றேன்.

உள்ளீடு
1.
'தேரிடைக் கொண்ட அல்குல், தெங்கிடைக் கொண்ட கொங்கை,
ஆரிடைச் சென்றும் கொள்ள ஒண்கிலா அழகு கொண்டாள்,
வாரிடைத் தனம் மீது ஆட மூழ்கினாள்; வதனம், மை தீர்
நீரிடைத் தோன்றும் திங்கள் நிழல் என, பொலிந்தது அன்றே! '
(க‌ம்ப‌ராமாய‌ண‌ம்; பால‌காண்ட‌ம்)

த‌மிழின் தொன்ம‌ங்க‌ளையும் ம‌ர‌புக‌ளையும் அழ‌காய்த் த‌ன் க‌விதைக‌ளில் பொருத்திய‌வ‌ர் சு.வில்வ‌ர‌த்தின‌ம். 'சொற்றுணை வேதிய‌ன்' என்ற‌ தேவார‌த்தை ம‌ன‌ப்பாட‌ம் செய்வ‌தே வேப்ப‌ங்காயாக‌ இருந்த‌வ‌னுக்கு காற்றுவெளிக்கிராம‌த்தில் 'சொற்றுணை வேதிய‌ன்' கல‌ந்தொரு க‌விதையை சு.வி எழுதிய‌போது விய‌ப்பில் புருவ‌ம் உய‌ர்ந்து வில்லாய் வ‌ளைந்த‌து (ம‌ன்னிக்க‌: க‌ம்ப‌னை வாசித்த‌ பாதிப்பு).  அதே போன்று நாட்டுப்புற‌ப்பாட‌ல்களிலும் மர‌புக்க‌விதைக‌ளிலும் இருந்த‌ ப‌ரிட்சய‌ம் வ‌.ஜ‌.ச‌.ஜெய‌பால‌னின் க‌விதைக‌ளில் ச‌ந்த‌த்தையும் இல‌ய‌த்தையும் நேர்த்தியாக‌க் கொண்ர்ந்திருந்த‌ன‌. ஆக‌வே ப‌ழ‌ம் இல‌க்கிய‌ங்க‌ளைக் க‌ற்றுக்கொள்வ‌தால் மொழிவ‌ள‌ம் விரியும் என்ப‌தில் என‌க்கும் ச‌ந்தேக‌ம் எதுவும் இருக்க‌வில்லை.

நான் க‌ம்ப‌னையும் க‌ம்ப‌ராமாய‌ண‌த்தையும் முத‌ன்முத‌லில் அறிந்துகொண்ட‌தென்றால் அள‌வெட்டிக் கும்பிளாவ‌ளைப் பிள்ளையார் கோயிலில்தான். அனுமான‌ வ‌ர‌வேண்டிய‌ இட‌த்தில் இதென்ன‌ பிள்ளையார் குறுக்கே புகுந்துவிட்டார் என்று எண்ணுகின்றீர்க‌ளா? பொறுமை! பொறுமை! வியாச‌ர் ம‌காபார‌த‌ம் சொல்ல‌ச் சொல்ல‌ பிள்ளையார்தான் வியாச‌ரின் வேக‌த்திற்கு ஈடுகொடுத்து எழுதினார் என்ப‌து ஜ‌தீக‌ம். அதுவும் ஒருக‌ட்ட‌த்தில் எழுத்தாணி முறிய‌ வியாச‌ர் பார‌த‌ம் பாடுவ‌தை ஒருக‌ண‌ம்கூட நிறுத்த‌க்கூடாது என்ப‌த‌ற்காய் த‌ன் த‌ந்த‌த்தையே முறித்து எழுதிய‌ அற்புத‌ ம‌னித‌ர‌ல்ல‌வா பிள்ளையார்? மேலும் நாங்க‌ள் போரின் நிமித்த‌ம் இட‌ம்பெய‌ர்ந்திருந்த‌ அள‌வெட்டியில் அம்ம‌ன்கோயில்க‌ளுக்கும் பிள்ளையார் கோயில்க‌ளுக்கும் ப‌ஞ்ச‌மில்லாது இருந்த‌து. எனினும் என‌க்குப் பிடித்த‌து பெருமாக்க‌ட‌வைப் பிள்ளையார் கோயில்தான். வ‌ய‌ல்க‌ளுக்குள் ந‌டுவில் இருக்கும் அத‌ன் அமைதியும் செழுமையும் என்றுமே ம‌ற‌க்க‌முடியாத‌து.  மேலும் ஊரில் வீதிக்கு ம‌றுபுற‌மாய் விரிந்திருந்த‌ பெரும்வ‌ய‌லை  விட்டுவ‌ந்திருந்த‌ என‌க்கு, பெருமாக்க‌ட‌வை பிள்ளையார் கோயில் எப்போதும் இழ‌ந்துவ‌ந்த‌ ஊரை நினைவுப‌டுத்திக் கொண்டிருந்த‌து. 80க‌ளில் தொட‌ங்கிய‌ இய‌க்க‌ங்க‌ளின் உள் முர‌ண்பாடுக‌ளில் சுட்டுக்கொல்ல‌ப்ப‌ட்ட‌ இறைகுமார‌னும் உமைகுமார‌னும் இங்கேதான் உட‌ல‌மாகப் போட‌ப்ப‌ட்டிருந்த‌ன‌ர்.  க‌ம்ப இராமாய‌ண‌ம் ப‌ற்றிச் சொல்ல‌ வ‌ந்து பிள்ளையார் கோயில்க‌ளைப் ப‌ற்றிக் க‌தைக்கிறேன் என‌ நீங்க‌ள் முணுமுணுப்ப‌து கேட்கிற‌து. நீங்க‌ள் எப்போதாவ‌து சொன்ன‌ இட‌த்திற்கோ சொன்ன‌ விட‌ய‌த்தையோ குறித்த‌ நேர‌த்தில் செய்து முடித்திருக்கின்றீர்க‌ளா? இல்லைத்தானே!

'பாகு ஒக்கும் சொல் நுண் கலையாள்தன் படர் அல்குல்
ஆகக் கண்டு, ஓர் ஆடு அரவு ஆம் என்று, அயல் நண்ணும்
தோகைக்கு அஞ்சி, கொம்பின் ஒதுங்கி, துணர் ஈன்ற
சாகைத் தம் கை, கண்கள் புதைத்தே தளர்வாளும்; '
(க‌ம்ப‌ராமாய‌ண‌ம்; பால‌காண்ட‌ம்)

ச‌ரி க‌ம்ப‌ராமாய‌ண‌த்திற்கு மீண்டும் வ‌ருவோம். கும்பிளாவ‌ளைப் பிள்ளையார் கோயில் திருவிழாக்கால‌ங்க‌ளில் க‌ம்ப‌ராமாய‌ண‌க் க‌தாட்சேப‌ம் ந‌டைபெறும். ஒவ்வொருநாளும் ஒரு க‌தையென‌ 12 நாட்க‌ளும் இராம‌ன் க‌தை சொல்ல‌ப்ப‌டும். இந்த‌க் க‌தையை க‌ம்ப‌வாரிதியோ புழுதியோதான் சொல்லிக்கொண்டிருப்பார். ம‌னுச‌னுக்கு ந‌ல்ல‌ குர‌ல்தான். பேச்சால் கேட்ப‌வ‌ர்க‌ளைக் க‌ட்டிப்போடும் வித்தை தெரிந்த‌வ‌ர்க‌ள் ஈழ‌த்தில் சொற்ப‌ப் பேர்தான். பின்னாளில் சுன்னாக‌த்தில் இட‌ம்பெய‌ர்ந்து இருந்த‌போது ஆறு.திருமுருக‌ன் 'திருமுருகாற்றுப்ப‌டை'(?)யைச் செப்பி, தான் 'புழுதியை அட‌க்க‌ வ‌ந்த‌ தூற‌ல்' என‌ நிரூபிக்க‌ முய‌ன்றிருக்கிறார்.  ஆனால் நான் கும்பிளாவ‌ளைப் பிள்ளையார் கோயிலுக்குப் போன‌து க‌ம்ப‌ராமாய‌ண‌ம் கேட்ப‌த‌ற்காய் அல்ல‌. ஒவ்வொரு இர‌வும் புழுதியும் -ம‌ன்னிக்க‌- வாரிதியும் புய‌லும் பூசையும் ஓய்ந்த‌பின், இறுதியில் நிக‌ழும் பாட்டுக் க‌ச்சேரிதான் என் விருப்புக்குரிய‌ தேர்வு.

க‌ண்ண‌ன், சாந்த‌ன் என்று அன்றைய‌கால‌த்தில் புக‌ழின் உச்சியிலிருந்த‌வ‌ர்க‌ள் இசைக்குழுவோடு வ‌ந்து பாடுவார்க‌ள். நான் பாட்டுக்க‌ளைக் கேட்ட‌ கால‌த்தில் சாந்த‌ன் ஏதோ பிர‌ச்சினையில் மாட்டுப்ப‌ட்டு புலிக‌ளின் 'ப‌ங்க‌ருக்குள்' இருந்து, பாடுவ‌த‌ற்காய் ம‌ட்டும் வெளியே வ‌ர‌ அனும‌திக்க‌ப்ப‌ட்ட‌ கால‌மாய் இருந்த‌து. என‌வே உயிரைக்கொடுத்து உண‌ர்ச்சியாக‌ப் பாடியேனும் வெளியே வ‌ந்துவிடும் நிர்ப்ப‌ந்த‌ம் அவ‌ருக்கு இருந்திருக்க‌லாம். இவ‌ர்க‌ளின் க‌ச்சேரியைக் கேட்ப‌து மிக‌வும் பிடித்த‌து என்றாலும் க‌ச்சேரி தொட‌ங்க‌ ந‌ள்ளிர‌வு ஆகிவிடும். அத‌ற்குள் நான் நித்திரையாகிவிடுவேன். ஆனாலும் 'இந்த‌ ம‌ண் எங்க‌ளின் சொந்த‌ம‌ண், இத‌ன் எல்லையை மீறி யார் வ‌ந்த‌வ‌ன்?' என்றோ 'ந‌ட‌ரா ராசா ம‌யிலைக் காளை பொழுது விடிய‌ப் போகிற‌து' என்றோ பாடும்போதோ நான் விழித்தெழும்பிவிடுவேன். (த‌மிழ்) 'உண‌ர்வுள்ள‌ த‌மிழ‌ன் ஒருபோதும் உற‌ங்க‌மாட்டான்' என்ப‌த‌ற்கு நான் ந‌ல்ல‌தொரு உதார‌ண‌மாக‌ இருந்தேன். நான் திடுக்கிட்டு விழித்தெழும்போது முக்கால்வாசி ச‌ன‌ம் நித்திரா தேவியினதோ/தேவன‌தோ க‌த‌க‌த‌ப்பான‌ அணைப்பிலிருப்பார்க‌ள். எனினும் ம‌ன்ம‌த‌னின் அருட்ட‌லில் இள‌ம் அண‌ங்குக‌ளும் அன‌க‌ர்க‌ளும் (ந‌ன்றி க‌ம்ப‌ன்) விழித்த‌ப‌டி த‌த்த‌ம் காத‌ற்காரிய‌த்தை விழிய‌சைவாலும் ந‌ளின‌ச்சிரிப்பாலும் தீவிர‌மாக‌ச் செய்துகொண்டிருப்பார்க‌ள். இராம‌னைப் பார்த்த‌ நொடியிலே காத‌லெனும் பெருந்தீயில் ஜான‌கியே விழுந்து துடித்த‌போது, இச்சின்ன‌ஞ்சிறு மானிட‌ப்ப‌த‌ர்க‌ள் என்ன‌தான் செய்யும்? ஆனால் இராம‌னை முத‌ற்பார்வையிலே க‌ண்டு காத‌லில் வீழும் சீதையின் நிலையை க‌ம‌ப‌ன் வ‌ர்ணித்த‌தைப் பார்க்கும்போது சீதையை இனியெவ‌ராலும் காப்பாற்ற‌முடியாது என‌ Intensive Care Unitல் போட‌ப்ப‌ட்டிருந்த‌தை மாதிரித்தான் உண‌ர்ந்தேன். ந‌ல்ல‌வேளை ந‌ம‌க்கு இராம‌ன் என்னும் ஒருக‌ட‌வுள் ம‌ட்டும் மானிட‌ராய்ப் பிற‌க்க‌ப் ப‌ணிக்க‌ப்ப‌ட்டிருந்திருக்கின்றார். இந்து ச‌ம‌ய‌த்திலுள்ள‌ எல்லாக்க‌ட‌வுளும் இப்ப‌டி வ‌ந்திருந்தால் எத்த‌னை பெண்க‌ள் காத‌லின் ப‌ச‌லையில் த‌ற்கொலையை நாடியிருப்பார்க‌ள்?

செம்மாந்த தெங்கின் இளநீரை, ஓர் செம்மல் நோக்கி,
'அம்மா! இவை மங்கையர் கொங்கைகள் ஆகும்' என்ன,
'எம் மாதர் கொங்கைக்கு இவை ஒப்பன?' என்று, ஒர் ஏழை,
விம்மா, வெதும்பா, வெயரா, முகம் வெய்துயிர்த்தாள்.
(க‌ம்ப‌ராமாய‌ண‌ம்; பால‌காண்ட‌ம்)

க‌ம்ப‌வாரிதியின் சொற்பிள‌ம்பின் வெம்மையிலிருந்து த‌ப்பிவிட்டேன் என்ற என் நிம்ம‌திப் பெருமூச்சை 9ம் வ‌குப்பில் நான் க‌ற்க‌வேண்டியிருந்த‌ த‌மிழ் இல‌க்கிய‌ம் விதி என்ற‌ பெய‌ரில் குறுக்கே ம‌றித்து நின்று எக்காளித்துச் சிரித்த‌து. க‌ம்ப‌ராமாய‌ணப் பாட‌ல்க‌ள் பாட‌த்திட்ட‌த்தில் சேர்க்க‌ப்ப‌ட்டிருந்த‌து. க‌ம‌ப‌னின் இராமாய‌ண‌மும் வான்மீகியின் இராமாய‌ண‌மும் எவ்விட‌ங்க‌ளில் மாறுப‌டுகின்ற‌து என்று ப‌டித்த‌தும் அன்றைய‌ கால‌ங்க‌ளில்தான். இப்போதும் க‌ம்ப‌னின் அவைய‌ட‌க்க‌ப் பாட‌ல்க‌ள் சில‌ நினைவில் வ‌ருகின்ற‌ன‌.'ஒரு ச‌முத்திர‌த்தை ந‌க்கிக் குடிக்க‌முடியுமென‌ பூனை நினைப்ப‌துபோல‌ நானும் வான்மீகியின் இராமாய‌ண‌த்தைப் பாட‌ப் புற‌ப்ப‌ட்டுவிட்டேன்' என‌வும் 'ம‌ர‌ங்கள் ஏழையும் த‌ன் அம்பால் துளைத்த‌வனின் பெருங்க‌தையை நொய்மையிலும் நொய்மையான‌ சொற்களால் சொல்ல‌ வ‌ந்தேன்' என‌வும், 'அன்பெனும் ம‌துவை அள‌வுக்க‌திக‌மாய்க் குடித்த‌வ‌ன் வான்மீகி எழுதிய‌ இராமாய‌ண‌த்தை த‌ன் மூக்கால் பாட‌ வ‌ந்திருக்கின்றேன்' என‌வும் க‌ம்ப‌ன் அவை அட‌க்க‌ம் பாடுவ‌து நினைவினிலுண்டு.

ச‌ர‌யு ந‌தியின் வ‌ள‌மையைப் பாடும் பாட‌ல்க‌ள் கூட‌ எங்க‌ள் பாட‌ப்புத்த‌க‌த்தில் இருந்திருக்கிற‌து.. கோச‌லை நாட்டையோ அயோத்தியையோ விப‌ரிக்கும்போது 'வாளை உள்ளிட்ட‌ ப‌ல‌வ‌கை மீனின‌ங்க‌ள் வ‌ள‌ர்ந்து நிற்கும் க‌முக‌ம் ம‌ர‌ங்க‌ளுக்கு மேலாய்த் தாவி விளையாடுகின்ற‌ன‌' என்று வ‌ரும்  இதைப் ப‌டிப்பித்த‌ எங்க‌ளின் த‌மிழ் வாத்தி இது அந்நாட்டின் செழுமையைச் சித்த‌ரிக்கின்ற‌து என‌த்தான் சொல்லித்த‌ந்தார். ஆனால் இப்போது யோசிக்கும்போது க‌முக‌ம் ம‌ர‌த்திற்கு மேலால் மீன்க‌ள் பாய்கின்ற‌ன‌ என்றால், சுனாமி போன்ற‌ இய‌ற்கையின் அழிவுக‌ள் நிக‌ழும்போது ம‌ட்டுமே ந‌ட‌க்க‌ச் சாத்திய‌முண்டு போல‌த் தெரிகிற‌து. ஓர் அன‌ர்த்த‌த்தை அழ‌கிய‌லாக்க‌ க‌ம்ப‌ன் போன்ற‌ க‌விஞ‌ர்க‌ளால் முடியும்,  'க‌விதைக்குப் பொய்ய‌ழ‌கு' என்று அவ‌ர்க‌ள் நியாய‌ப்ப‌டுத்த‌வும் கூடும். ஆனால் எங்க‌ளின் த‌மிழ் வாத்தி எங்க‌ளுக்கு அந்த‌ வ‌ய‌திலேயே பொய் சொல்ல‌க் க‌ற்றுத்த‌ந்தார் என்ப‌தைத்தான் என்னால் இன்ன‌மும் ஏற்றுக்கொள்ள‌ முடியாதிருக்கிற‌து.

இவ‌ற்றைக் கூட‌ ம‌ன்னிக்க‌லாம்; ஆனால் என்றைக்குமே ம‌ன்னிக்க‌முடியாத‌ ஒரு குற்ற‌த்தை எங்க‌ளுக்கு க‌ம்ப‌ராம‌ய‌ண‌த்தைக் க‌ற்றுத்த‌ந்த‌வ‌ர்க‌ள் இழைத்திருக்கின்றார்க‌ள் என்ப‌தைக் க‌ம்ப‌ ராமாய‌ண‌த்தைப் ப‌டித்த‌போதுதான் அறிய‌முடிந்த‌து. சின்ன‌ வ‌ய‌தில் என‌க்குத் த‌மிழ்ப்ப‌ட‌ங்க‌ளில் 'ஆ...ஊ' என்று க‌த்திக்கொண்டு ச‌ண்டைபிடிக்கும் ப‌ட‌ங்க‌ள்தான் அதிக‌ம் பிடிக்கும். ஒரு ப‌ட‌த்தில் ச‌ண்டைக்காட்சிக‌ள் இல்லாவிட்டால் அது பார்ப்ப‌த‌ற்குரிய‌ ப‌ட‌மே அல்ல‌ என்ப‌துதான் என் அள‌வுகோலாக‌ இருந்த‌து. 'ராம்போ', 'கொம‌ண்டோ' போன்ற‌ ப‌ட‌ங்க‌ளைப் பார்த்துவிட்டு 'அட‌ இய‌க்க‌த்தில் நாலைந்து பேர் இப்ப‌டி இருந்தாற்கூட‌ப் போதும் நாங்க‌ள் விரைவில் த‌மிழீழ‌ம் அடைந்துவிட‌லாம்' என்றும் நினைத்துமிருக்கிறேன். ஆனால் 8ம் வ‌குப்பிற்கு வ‌ந்த‌பின் த‌மிழ்ப்ப‌ட‌ங்க‌ளின் ச‌ண்டைக்காட்சிக‌ளை விட‌ பாட்டுக்காட்சிக‌ள் பிடிக்க‌த் தொட‌ங்கிவிட்ட‌ன‌. அதுவ‌ரை 'அப்பாவி'யாய் ச‌ண்டைக்காட்சிக‌ளையும் நகைச்சுவைக்காட்சிக‌ளையும் பார்த்துக்கொண்டிருந்த‌ என்னை வ‌ய‌து மூத்த‌ ஒரு  ந‌ண்ப‌ரொருவ‌ன் 'உழைப்பாளி' ப‌ட‌ம் மூல‌ம் மாற்றிவிட்டான். ம‌ண்ணெண்ணெயில் மூசிமூசி ஜென‌ரேட்ட‌ர் இய‌ங்கிக்கொண்டிருக்க‌ எப்ப‌ க‌ர‌ண்ட் நிற்க‌ப்போகின்ற‌தோ என்ற‌ ப‌த‌ற்ற‌த்தில் ப‌ட‌ம் பார்த்துக்கொண்டிருந்த‌போதுதான் ந‌ண்ப‌ன் மெல்லிய‌ குர‌லில் சொன்னான் 'பாருடா இன்னும் கொஞ்ச‌ நேர‌த்தில் ரோஜா த‌ன்ரை முன்ப‌க்க‌த்தாலே ர‌ஜினியை முட்டுவா' என்று.  அத‌ற்குப் பிற‌கு எந்த‌ப் ப‌ட‌த்தில் எந்த‌ ச‌ண்டைக்காட்சி இருக்கும் என்ப‌தை நினைவுப‌டுத்துவ‌த‌ற்குப் ப‌திலாக‌ எந்த‌ப் பாட‌லில் எந்த‌ ந‌டிகை த‌ன் மார்ப‌க‌ங்க‌ளைக் குலுக்குவா என்ப‌துதான் நினைவில் நிற்க‌த்தொட‌ங்கிய‌து. ஆனால் இவ்வாறான‌ காட்சிக‌ளைப் பார்ப்ப‌து என்ப‌து அன்றைய‌கால‌த்தில் மிக‌வும் க‌டின‌மாக‌ இருந்த‌து. எங்க‌ளிட‌ம் ரீவியோ டெக்கோ(VCR) ஜென‌ரேட்ட‌ரோ இல்லாத‌து அல்ல‌ முக்கிய‌ கார‌ணம். ந‌ண்ப‌ர்க‌ளின் வீட்டில் ப‌ட‌ம் போட்டால் கூட‌ 'ம‌ண்ணெண்ணெய் விற்கின்ற‌ விலைக்கு ப‌ட‌ம் பார்ப்ப‌து ஒரு கேடா?' என்று ச‌ன‌ம் பேசும். மேலும் புலிக‌ள் த‌ணிக்கையைக் அறிமுக‌ப்ப‌டுத்தி, க‌ண்ணுக்குள் விள‌க்கெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு  'ஒருமாதிரி'யான‌ பாட‌ல்க‌ளை எல்லாம் க‌வ‌ன‌மாக‌க் க‌த்த‌ரித்தும் விடுவார்க‌ள்.

இந்த‌ அல்லாட‌ல்க‌ளுக்கு இடையில் எங்க‌ளுக்கு கிடைத்த‌ ஒரு செய்தி இன்னும் அச்ச‌மூட்ட‌க்கூடிய‌தாக‌ இருந்த‌து. சுண்டிக்குழிப்ப‌க்க‌மாய் பெண்கள் சில‌ர் ஒன்றாய்ச்சேர்ந்து 'த‌ணிக்கை' செய்யாத‌ ஒரு ப‌ட‌த்தைப் பார்த்துக்கொண்டிருந்திருக்கின்றார்க‌ள். ப‌ட‌ம் திரையிட‌ப்ப‌ட்ட‌ வீட்டில் பெண்ணின் பெற்றோர் திரும‌ணாத்துக்கு எங்கையோ போயிருக்கின்றார்க‌ள். அந்த‌ ச‌ம‌ய‌த்தில் ஜென‌ரேட்ட‌ரோ டெக்கோ இடையில் நின்றுவிட பெற்றோர் வ‌ர‌முன்ன‌ர் டெக்கிற்குள் இருக்கும் க‌செட்டை எடுத்துவிட‌ வேண்டிய‌ நிர்ப்ப‌ந்த‌ம். பெற்றோர் வ‌ந்துவிட்டால் இவ‌ர்க‌ளின் க‌ள்ளம் பிடிப‌ட்டுவிடும்.  யாரிட‌மாவ‌து உத‌வி கேட்டு கசெட்டை வெளியில் எடுத்தால் போதும் என்ற‌ அவ‌ச‌ர‌த்தில் ரோட்டில் சைக்கிளில் போன‌ பெடிய‌ன் ஒருவ‌னை ம‌றித்து டெக்கைக் க‌ழ‌ற்றி க‌ஸெட்டை எடுத்துத் த‌ரும்ப‌டிக் கேட்டிருக்கின்ற‌ன‌ர். பெடிய‌னும் எடுத்துக் கொடுத்திருக்கின்றான். ஆனால் அவ‌ன் ஓர் இய‌க்க‌ப்பெடிய‌ன். புலி மூளை உட‌னே வேலை செய்ய‌, பிற‌கென்ன‌ க‌டைசியில் பெட்டைய‌ளைப் ப‌ங்க‌ருக்குள் ப‌னிஷ்மென்டிற்காய் போட்டுவிட்டிட்டாங்க‌ளாம்.  நான் இந்த‌க் க‌தையைக் கேள்விப்ப‌ட்டுவிட்டு 'இது சும்மா புளுகுக்க‌தைய‌டா, பெட்டைய‌ளை இய‌க்க‌ம் ப‌ங்க‌ளுக்குள் போட‌மாட்ட‌ங்க‌ள்' என்றேன். இதைக் கேட்டுக்கொண்டிருந்த‌ ஒருத்த‌ன் 'அப்ப‌ நீ இப்ப‌டியொரு க‌ச‌ட்டை கையில் வைத்துக்கொண்டிரு, அவ‌ங்க‌ள் உன்னைக்கொண்டுபோய் ப‌ங்க‌ருக்குள் போட‌ட்டும். பிற‌கு உள்ளே பெட்டைய‌ள் இருக்கினமா இல்லையா என்று தெரிந்துவிடும்' என்றான்.  உந்த‌க் கோதாரிக‌ளோடு இதுதான் ஒரு பிர‌ச்சினை, ஒன்றை ஏதும் ம‌றுத்துச் சொன்னால் போதும், உட‌னே வேள்விக்குப் போகின்ற ப‌லியாடாக‌ எங்க‌ளையே அனுப்பிவிடுவாங்க‌ள்.

வம்பின் பொங்கும் கொங்கை சுமக்கும் வலி இன்றிக்
கம்பிக்கின்ற நுண் இடை நோவ, கசிவாளும்;
பைம் பொன் கிண்ணம் மெல் விரல் தாங்கி, பயில்கின்ற
கொம்பில் கிள்ளைப் பிள்ளை ஒளிக்க, குழைவாளும்;
(க‌ம்ப‌ராமாய‌ண‌ம்; பால‌காண்ட‌ம்)

இப்போது க‌ம்ப‌ராமாய‌ண‌த்தை வாசிக்கும்போதுதான் நாங்க‌ள் கையில் வெண்ணெய்யை   வைத்துக்கொண்டு நெய்யிற்காய் அலைந்திருக்கின்றோம் என்ப‌து ந‌ன்கு புரிகிற‌து. க‌ம்ப‌ர் பெண்க‌ளை விப‌ரித்து எழுதிய‌தைப் ப‌டிக்கும்போதுதான் அவ‌ன் க‌விச்ச‌க்க‌ர‌வ‌ர்த்திய‌ல்ல‌, காத‌ல் பேர‌ர‌ச‌னாக‌வோ பேராச‌னாக‌வோ இருக்க‌த் த‌குதியுரிய‌வ‌ன் போல‌த் தோன்றுகிற‌து. ந‌ல்ல‌ காத‌ல் சுவை கொட்டும் க‌ம்ப‌ராமாய‌ண‌ப்பாட‌ல்க‌ளை எங்க‌ள் பாட‌த்திட்ட‌த்தில் வைத்திருந்தால் நாங்க‌ள் 'த‌ன‌ங்க‌ளைப் ப‌ற்றி அறிகின்ற‌ ஆர்வ‌த்தில் த‌மிழையும் க‌ற்றிருப்போம்' அல்ல‌வா?  இப்ப‌டியொரு வ‌ர‌லாற்றைத் த‌வ‌றைச் செய்த‌ ந‌ம் த‌மிழ்ச்ச‌மூக‌த்தையோ ஆசிரிய‌ர்க‌ளையோ என்னால் இனி எப்ப‌டி ம‌ன்னிக்க‌முடியும்?

2.
இடையீடு

க‌தையோடு க‌தையாக‌ என் திருக்குற‌ள் க‌தையையும் சொல்லிவிட‌வேண்டும். தெல்லிப்ப‌ளையில் துர்க்கைய‌ம்ம‌ன் கோயில் இருக்கிற‌து. அப்போது த‌ங்க‌ம்மா அப்பாக்குட்டிதான் அக்கோயிலை நிர்வ‌கித்து வ‌ந்தார். மாண‌வ‌ர்க‌ளுக்கு ந‌ன்னெறி காட்டுவ‌த‌ற்காகவும், 'மேன்மை கொள் சைவ‌ நீதி' யாழ்ப்பாண‌ம் எங்கும் விள‌ங்குவ‌த‌ற்காக‌வும் அடிக்க‌டி திருக்குறள் போட்டிக‌ள் வைப்பார்க‌ள்.  5, 10 அதிகார‌ங்க‌ளை ம‌ன‌ன‌ம் செய்துவிட்டு அவ‌ற்றை ம‌ற‌ந்துவிடாது போட்டியின்போது எழுத‌வேண்டும். சில‌வேளைக‌ளில் அத‌ன் பொருளையும் எழுத‌வேண்டும். நானும் இந்த‌ப் போட்டிக‌ளில் ப‌ங்குபெறுத‌லில் சிக்குப்ப‌ட்டுவிட்டேன். அறிவுட‌மை, ஒழுக்க‌முட‌மை, க‌ல்வியுட‌மை என்று அற‌த்துப்பாலில்தான் தெரிவு செய்து பாட‌மாக்க‌ச் சொல்வார்க‌ள். இப்போது என்ற‌ல்ல‌ அப்போதே  'ஐந்தில் வ‌ளையாது ஐம்ப‌தில் வ‌ளையாது' என்ப‌துமாதிரி என‌க்கு இந்த‌ 'ந‌ன்னெறி' விட‌ய‌ங்க‌ளை எவ்வ‌ள‌வு பாட‌மாக்கினாலும் ம‌ன‌ப்பாட‌மாகாது. ஆனால் ம‌ன‌ந்த‌ள‌ராத‌ விக்கிர‌மாதித்த‌னாக‌ப் ப‌ங்குபெற‌ என‌து பெற்றோரால் தொட‌ர்ந்தும் நிர்ப‌ந்திக்க‌ப்ப‌ட்டிருந்தேன்.

திருக்குற‌ளும், க‌ம்ப‌ராமாய‌ண‌ம் போல‌ ஓர் அமுத‌சுர‌பி தான் என்ப‌து நான் க‌ன‌டாவிற்கு வ‌ந்து ப‌தின்ம‌வ‌ய‌தில் ஒரு பெண்ணைத் 'தீவிர‌மாய்க்' காத‌லித்துக்கொண்டிருந்த‌போதுதான் தெரிந்த‌து. ஈழ‌த்திலிருந்து வ‌ரும்போது 9ம் வ‌குப்பில் 6 பாட‌ங்க‌ளில் முத‌ன்மைச் சித்தி பெற்ற‌த‌ற்காய் ஒரு திருக்குற‌ள் புத்த‌க‌த்தைப் ப‌ரிச‌ளித்திருந்த‌ன‌ர். அதையொரு பொக்கிச‌மாய் நான் க‌ன‌டாவிற்கு க‌ண்ட‌ங்க‌ளும் க‌ட‌ல்க‌ளுந்தாண்டிக் கொண்டுவ‌ந்திருந்தேன். காத‌லித்துக்கொண்டிருக்கும் பெண்ணிற்கு என் காத‌லைக் க‌விதையாய்ச் செப்ப‌, அவ‌ரை வ‌ர்ணிக்க‌ புதிய‌ புதிய‌ சொற்க‌ள‌ தேவைப்ப‌ட்டிருந்த‌ன‌. ஒருநாள் த‌ற்செய‌லாய் திருக்குற‌ளை காம‌த்துப்பாலைப் புர‌ட்டிக்கொண்டிருந்த‌போதுதான் திருவ‌ள்ளுவ‌ர் ம‌ன்ம‌த‌னிற்குப் ப‌க்க‌த்துவீட்டுக்கார‌ன் என்ப‌து புரிந்த‌து. அற‌த்துப்பால் என்ற‌ அலுப்பான‌ விட‌ய‌ங்க‌ளை எழுதிய‌ இந்த‌ ம‌னுச‌ன் தானா இப்ப‌டி காத‌லில் புகுந்துவிளையாடுகின்றார் என்ற‌ திகைப்பு வ‌ந்த‌து. பெண்க‌ளைப் ப‌ற்றி என்ன‌ வ‌ர்ணிப்பு, விர‌க‌த்த‌விப்பை ப‌ற்றி என்ன‌ எழுத்து...ஆகா ஆகா?  பிற‌கென்ன‌ திருக்குற‌ள் என்னும் வ‌ற்றாச் சுர‌ங்க‌த்திலிருந்து த‌ங்க‌க்குவிய‌ல் கிடைக்க‌ நான் காத‌ல் வானில் த‌ங்கு த‌டையின்றி ப‌ற‌க்க‌த் தொட‌ங்கினேன். இவ்வாறு நான் திருக்குற‌ளின் க‌ருத்துக்க‌ளை அங்குமிங்குமாய்த் தெளித்து நூற்றுக்க‌ண‌க்கில் க‌விதைக‌ள் எழுதிக்கொடுத்த‌ பெண்ணிட‌ம்,  'எப்ப‌டியிருக்கிற‌து என் க‌விதைக‌ள்?' என்கின்ற‌போது ஒரு புன்ன‌கையாலோ வெட்க‌த்தோலோ ம‌ட்டும் ப‌தில் கூறுவார். அட‌டா க‌ன‌டா ப‌றந்து வ‌ந்த‌போதும் ப‌ருப்பு சோறு க‌றி எப்ப‌டிச் ச‌மைக்கிறது என்ற‌ பெண்ணாக‌ ம‌ட்டுமின்றி அச்ச‌ம் நாண‌ம் ம‌ட‌ம் ப‌யிர்ப்பு போன்ற‌வை க‌ல‌ந்துருவாகிய‌ த‌மிழ் அண‌ங்காக‌வும் இவ‌ர் இருக்கிறார் போலும் என‌ நினைத்து விய‌ந்தேன்.

வ‌ழ‌மையாக‌ என் 25 காத‌ல்க‌ளுக்கும் நிக‌ழ்ந்த‌துபோல‌ இவ‌ரும் பிரிந்து போன‌ பிற்பாடுதான் அறிந்துகொண்டேன், அந்த‌ப் பெண்ணுக்குத் த‌மிழில் க‌தைக்க‌ ம‌ட்டுந்தான் முடியும், ஆனால் த‌மிழ் எழுத‌ வாசிக்க‌த் தெரியாது என்று.  என்ன‌ ஒரு கொடுமை?  எனினும் என‌க்கும் வ‌ள்ளுவ‌ருக்கும் ம‌ன‌ம் நோக‌க்கூடாது என்ப‌த‌ற்காய், எந்த‌ ம‌றுப்புத் தெரிவிக்காது நாம் எழுதிய‌ க‌விதைகளை ஏற்றுக்கொண்ட‌ அவ‌ரை ந‌ன்றியுட‌ன் நினைவில் இருந்திக்கொள்ள‌த்தான் வேண்டும் (எங்கிருந்தாலும் வாழ்க‌; என் பெய‌ரை உங்க‌ள் பிள்ளைக்குச் சூட்டுக‌).

'கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்'
(குற‌ள்)

அண்மையில் ந‌ல்லூர்க்கோயிலுக்கு வ‌ரும் பெண்க‌ளுக்கு(க‌வ‌னிக்க‌: பெண்க‌ளுக்கு ம‌ட்டும்)ஆடைக் க‌ட்டுப்பாட்டு விதிக‌ள் நீதிம‌ன்ற‌த்தால் விதிக்க‌ப்ப‌ட்ட‌து.  இது குறித்த‌ விவாத‌த்தில் இவ்வாறான‌ ஆடைக்க‌ட்டுப்பாடு த‌ங்க‌மம்மா அப்பாக்குட்டியால் ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ள் முன்பே தெல்லிப்ப‌ளை துர்க்கைய‌ம்ம‌ன் கோயிலில் விதிக்க‌ப்ப‌ட்டிருந்த‌து என‌ ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் நினைவூட்டினார். 'சிவ‌த்த‌மிழ்ச்செல்வி' த‌ங்க‌ம்மா அப்பாக்குட்டி இப்ப‌டியான‌ விட‌ய‌ங்க‌ளில் இராணுவ‌க் க‌ட்டுப்பாடோடுதான் ந‌ட‌ந்துகொள்வார் என்றே நினைக்கிறேன். சிறுவ‌ர்க‌ளாயிருக்கும்போது கோயிலுக்குப் போய் ஏதும் ச‌த்த‌ம் போட்டு விளையாடினாலோ ஏதேனும் க‌ஞ்ச‌ல் போட்டாலோ ம‌னுஷி க‌த்த‌த் தொட‌ங்கிவிடும். ஆனால் இவ‌ற்றுக்க‌ப்பால் பெற்றோரை இழ‌ந்த‌ அநாத‌ர‌வான‌ நிறைய‌ப் பெண்பிள்ளைக‌ளை -வ‌ருகின்ற‌ கோயில் வ‌ருமான‌த்தில் வைத்து -ப‌ராம‌ரித்துக்கொண்டிருந்த‌து என‌க்கு ந‌ன்கு நினைவிலுண்டு. பிற‌கு பிர‌ச்சினையின் நிமித்த‌ம் தெல்லிப்ப‌ளையில் இருந்து இட‌ம்பெய‌ர்ந்த‌போதும் அப்பிள்ளைக‌ளை ம‌ருத‌னாம‌ட‌த்தில் வைத்துக் க‌வ‌னித்திருக்கின்றார். ஆனால் ந‌ல்லூரில் ஒரு ஆதின‌ம் இருக்கின்ற‌தைத் த‌விர‌ அங்கே அவ‌ர்க‌ள் என்ன‌ செய்துகொண்டிருக்கின்றார்க‌ள் என்ப‌தை நான‌றியேன்.

ந‌ல்லூர்க்கோயிலுக்குள் நான்  போன‌தில்லை. ஈழ‌த்தில் இருந்த‌கால‌ங்க‌ளில் அப்பாவின் சைக்கிளில் இருந்து அத‌ன் வெளிவீதிக‌ளால் போன ஞாப‌க‌ங்க‌ளுண்டு. அப்பா ஒரு நாத்திக‌ராக‌ இருந்ததால் கோயில்க‌ளுக்குள் அழைத்துப் போவ‌தில்லை. ஆனால் என‌க்கு ந‌ல்லூர்க்கோயிலை ந‌ன்றாக‌ நினைவில் வைக்க‌ ஒரு ச‌ம்ப‌வ‌ம் இருக்கிற‌து. அது திலீப‌னின் உண்ணாவிர‌த‌ ம‌ர‌ண‌ம் நிக‌ழ்ந்த‌ கால‌ம். திலீப‌ன் இற‌ந்த‌போது ம‌க்க‌ள் உண்மையில் த‌ன்னெழுச்சியாக‌ அலைய‌லையாக‌வே வ‌ந்த‌ன‌ர். யாழ் நக‌ர‌த்தை விட்டொதுங்கிய‌ ஒதுக்குப்புற‌ச் சிறு ஊரிலிருந்து நாங்க‌ள் கூட‌ ஒரு வான் பிடித்து ந‌ல்லூருக்குப் போயிருந்தோம். அப்போது என‌க்கு ஏழெட்டு வ‌ய‌து இருக்கும். காலையில் போன‌ நாங்க‌ள் வ‌ரிசையில் நின்று திலீப‌ன் உட‌லைப் பார்ப்ப‌த‌ற்குள் இருள் க‌விழ்ந்துவிட்டிருந்த‌து. அவ்வ‌ள‌வு ச‌ன‌ம்; நெடுமாற‌ன் உரையாற்றிக்கொண்டிருந்தார். க‌றுத்தும் சுருங்கியும் போயிருந்த‌ திலீப‌னின் உட‌லைப் பார்த்த‌போது 'ஓ ம‌ர‌ணித்த‌ வீர‌னே உன‌து ஆயுத‌ங்க‌ளை என‌க்குத்தா உன‌து கால‌ணிக‌ளை என‌க்குத்தா' என்ற‌ பாட‌ல் ஒலிப‌ர‌ப்பான‌து ம‌ட்டுமில்லை; 'ம‌க்க‌ள் புர‌ட்சி வெடிக்க‌ட்டும், நான் வானிலிருந்து 690? போராளியாக‌ இருந்து சுத‌ந்திர‌ த‌மிழீழ‌ம் ம‌ல‌ருவ‌தைப் பார்ப்பேன்' என்ற‌ திலீப‌னின் வாச‌க‌ங்க‌ள் கூட‌ என‌க்கு அந்த‌ வ‌ய‌தில் ந‌ன்கு நினைவிருந்தது. ஏழு எட்டு வ‌ய‌தில் இப்ப‌டி அர‌சிய‌ல் தெரிய‌ நீயென்ன‌ உமையின் முலைப்பால் குடித்த‌ ஞான‌ப்ப‌ழ‌மா அல்ல‌து வாழைப்ப‌ழ‌மா என்று சில‌ர் முத்திரை குத்த‌வும் கூடும் என்ப‌தால் இங்கே மேலும் அர‌சிய‌ல் பேசுவ‌தைத் த‌விர்க்கிறேன். ச‌ரி விட‌ய‌த்திற்கு மீண்டும் வ‌ருகிறேன், ஆண்க‌ளை அரை நிர்வாண‌மாக‌ (மேலாடை இல்லாது) வ‌ர‌ச்சொல்கின்ற‌ ந‌ல்லூர்க்க‌ந்த‌ன் பெண்க‌ளையும் தாவ‌ணியோ சேலையோ க‌ட்டாது ப்ள‌வுஸும் பாவாடையுமாக‌ அல்ல‌வா வ‌ர‌ச்சொல்லியிருக்க‌வேண்டும்? பெண்க‌ள் சேலையோ half சாறியோ அணியாம‌ல் வ‌ந்தால் "என்ன‌ கெட்டுப்போகுமென்று" நினைக்கின்றார்க‌ளே அதையே ஆண்க‌ள் மேலாடையின்றி வ‌ரும்போது கெட்டுவிடாதா என்ன‌? மேலும் இப்ப‌டி செக்சியாய் மேலாடை இல்லாது வ‌ரும் ஒரு ஆணைப் பார்த்து யாரேனும் பெண் -க‌ம்ப‌னையோ வ‌ள்ளுவ‌னையோ வாசித்த‌ பாதிப்பில்- ஏக்க‌மாய்ப் பெருமூச்சுவிட்டு ஏதும் ஏடாகூடாமாய் கோயிலுக்குள் ந‌ட‌ந்துவிட்டால் பிற‌கு அப்பெண்ணின் பெற்றோருக்கு க‌ந்த‌னா ப‌தில் சொல்லுவார்?

இப்போது என்னைப்போன்ற‌ யாழ்ப்பாணிக‌ள் நிறைய‌த் த‌மிழ்ப்ப‌ட‌ம் பார்ப்ப‌தாக‌வும் புதுப்ப‌ட‌ங்க‌ள் வ‌ந்தால் ந‌டிக‌ர்/ந‌டிகைக‌ளுக்கு பாலாபிஷேக‌ம் செய்வ‌தாவும் சொல்கின்ற‌ன‌ர். ப‌ட‌ங்க‌ளில் அநேக‌மாய் நாய‌கிக‌ள்தான் -இய‌ல்பு வாழ்க்கைக்கு மாறாய்-  'ஏய் மாமோய் வாய்யா போ'வ்'வோம் ஆத்துப்ப‌க்க‌மாய் அல்ல‌து guest house ப‌க்க‌மாய்' என்று ஒரு 'ஹிக்'காய் அழைப்பு விடுகின்ற‌வ‌ர்க‌ளாய் இருக்கின்றார்க‌ள். இதையே வேத‌வாக்காக‌ ந‌ல்லூர்க் கோயிலுக்குப் போகின்ற‌ பெண்க‌ள் செய்துவிடும் அபாய‌மும் உண்டு என்பதையும் ஆடைக‌ள் அணிய‌ ச‌ட்ட‌ம் கொண்டு வ‌ந்த‌ நீதிக்குச் சுட்டிக்காட்ட‌வேண்டியிருக்கிற‌து.

3.
இது கம்ப‌ இராமாய‌ண‌ம் ப‌டித்த‌ க‌தைய‌ல்ல‌; க‌ம்ப‌னின் காம‌ர‌ச‌ம் சொட்டும் பாட‌ல்க‌ளை இடையில் புகுத்தி எழுதிய‌, ஒரு நீல‌ப்ப‌ட‌ம் பார்த்த‌ க‌தையென‌ யாரேனும் ஒரு விம‌ர்ச‌க‌ர் ‍என் மீதான‌ காழ்ப்புண‌ர்வில் எழுத‌லாம். நிச்ச‌ய‌மாக‌ எவ‌ரும் இந்த‌க் க‌தையை விம‌ர்சிக்க‌லாம், ஆனால் அத‌ற்கு முன் நீங்க‌ள் இதேமாதிரியான‌ 'நொந்த இராம‌ய‌ண‌ம் அல்ல‌து வெந்த‌ இராமாய‌ண‌ம் வாசித்த‌ அனுப‌வ‌ம்' என்றொரு க‌தையை எழுதியிருந்தாலே நீங்க‌ள் கூறுவ‌து ச‌பையிலேறும் என்ப‌தை அவைய‌ட‌க்க‌த்துட‌ன் கூற‌ விரும்புகின்றேன். க‌ம்ப‌ன் எத்த‌னையோ காண்ட‌ங்க‌ள் எழுதியிருக்க‌ பால‌காண்ட‌த்தில் ம‌ட்டுமே நிறுத்திக்கொண்ட‌ ப‌ன்னாடையென‌ என்னைத்திட்ட‌ப் போகின்ற‌வ‌ர்க‌ள் த‌ய‌வுசெய்து -நாக‌ரிக‌மாக‌- நீரை ம‌ட்டும் அருந்திவிட்டு பாலை விட்ட‌ அன்ன‌ப்ப‌ற‌வையென‌ புதிய‌ உதார‌ண‌த்தைப் ப‌ய‌ன்ப‌டுத்துமாறு அன்புட‌ன் வேண்டிக்கொள்கிறேன். என‌க்கு பாலகாண்ட‌மே தேவ‌ர்க‌ளும் அசுர‌ர்க‌ளும் க‌டைந்த‌ பாற்க‌ட‌லாக‌ இருக்கும்போது,  அதில் நீச்ச‌ல‌டித்தே என்னால் க‌ரைதாண்ட முடியாதிருக்கும்போது எப்ப‌டி என்னால் பிற‌ காண்ட‌ங்க‌ளைத் தாண்ட‌முடியும் என்ப‌தையும் நீங்க‌ள் நினைவில் இருத்திக் கொள்ள‌வேண்டும்.

உண்மையில் இந்த‌க்க‌தையை எழுதிய‌த‌ற்கு என‌து ஆசான் Xமோவிற்கு ந‌ன்றி கூற‌வேண்டும். எனெனில் அவ‌ர்தான் தின‌மும் 2 ம‌ணித்தியால‌ம் காலையும் மாலையும் எழுதுகின்றார் என்று ப‌லர் முன்னுரையிலும் முக‌ப்புநூல்க‌ளிலும் ப‌திவுசெய்கின்ற‌ன‌ர். என‌க்கு காலைப்பொழுதின் 1 ம‌ணித்தியால‌ம்  காலைக்க‌ட‌ன்க‌ளிலும் குளிப்ப‌திலும் போய்விடுகின்ற‌து.  ஏன் எவ‌ரும் 'க‌விதை எழுதுவ‌து, க‌தை எழுதுவ‌து போல‌' மிக‌ உன்ன‌த‌மான‌து காலைக்க‌ட‌ன் க‌ழிப்ப‌தும் குளிப்ப‌தும் என‌ச் சொல்ல‌வில்லை? இது போன்ற‌ இருட்ட‌டிப்புக்க‌ள் வ‌ர‌லாற்றின் பல்‌வேறு க‌ட்ட‌ங்க‌ளில் நிக‌ழ்ந்திருக்கின்ற‌ன‌ என்ப‌தை நான் உங்க‌ளுக்கு நினைவூட்ட‌த் தேவையில்லை என‌ நினைக்கிறேன்.

இவ்வாறாக‌க் கூற‌ப்ப‌டாத‌தால்தான் நான் இன்று காலை இந்த‌க் க‌தையை -என‌து காலைக்க‌ட‌னிற்கான‌ நேர‌த்தில்- எழுத‌வேண்டிய‌தாக‌ப் போய்விட்ட‌து. சில‌ ஆண் க‌விஞ‌ர்க‌ள் க‌விதை ஒன்றை எழுதி முடிப்ப‌து பிர‌ச‌வ‌வேத‌னையைப் போன்ற‌து என்கின்ற‌ன‌ர். ஏன் காலைக்க‌ட‌ன் க‌ழிப்ப‌து கூட‌ சில‌ருக்கு மாபெரும் வேத‌னையாக‌ இருக்கின்ற‌து என்ப‌தை இவ‌ர்க‌ளால் புரிந்துகொள்ள‌ முடியாதிருக்கின்ற‌து?

இறுதியாக‌ இக்க‌தையை முடித்தாக‌ வேண்டியிருக்கிற‌து. நான் 'திருக்குற‌ளாய்க் காத‌லித்த‌' பெண் வ‌ரும் மாத‌ம் த‌ன‌க்குத் திரும‌ண‌ம்,,, வ‌ர‌ச்சொல்லி அழைப்பு விடுத்திருக்கின்றார். அவ‌ர் என்னைச் சில‌ மாத‌ம் காத‌லித்திருந்தார். பிற‌கு என் ந‌ண்ப‌னை 6 வ‌ருட‌ங்க‌ள் நேசித்திருந்தார். இப்போது என‌க்கும் என‌து ந‌ண்ப‌னுக்கும் தெரிந்த‌ எங்க‌ளின் ந‌ண்ப‌ன் ஒருவ‌னை ம‌ன‌தார‌ நேசித்து ம‌ண‌விழாக் காண‌ப்போகின்றார். என‌து '25 த‌ட‌வைக‌ள் காத‌லித்த‌ சாத‌னை'யை முறிய‌டிக்க‌ இவ‌ரும்  முய‌ற்சித்திருக்கின்றார் என்ற‌ வ‌கையில்  மிகுந்த‌ பாச‌ம் இவ‌ர் மீது என‌க்குத் த‌னிப்ப‌ட்ட‌வ‌ளவில் உண்டு.   இப்போது இங்கே திரும‌ண‌ விழாக்க‌ளின்போது தென்னிந்திய‌த் திரைப்ப‌ட‌ப்பாட‌ல்க‌ளைப் போல‌ இணைக‌ள் ஆடுவ‌தாக‌வும் அபிந‌ய‌ம் பிடிப்ப‌தாக‌வும் ஒளிப்ப‌திவு செய்து திரையிடுகின்றார்க‌ள். குற‌ள் மீது அபினாக‌ நான் இருப்ப‌தால் என்னைத் த‌ங்க‌ளை வாழ்த்தியொரு க‌விதை பாட‌ச்சொல்லிக் கேட்டிருக்கின்றார். உங்க‌ள் வாழ்வு என‌க்கு 'ஆட்டோகிராப்' ப‌ட‌த்தை நினைவுப‌டுத்துவ‌தால் 'ஞாப‌க‌ம் வ‌ருகிற‌தே' பாட‌ட்டுமா என்று கேட்டிருந்தேன். அவ‌ர் புன்ன‌கைத்தார். அந்த‌ப் புன்ன‌கை வீட்டில் ரொறொண்டோத் தெருவில் பிர‌ப‌ஞ்ச‌வெளியில் அலைய‌லையாய் ந‌ம் முடியாக் காத‌லின் துய‌ரை நிர‌ப்பிச் செல்கிற‌து.

000000000000000

மேலும் இந்த‌க்க‌தை த‌மிழ்ச்சினிமாவில் இறுதியில் வ‌ந்து முடிவ‌தால் இஃதொரு புல‌ம்பெயர்க‌தைதான் என்ப‌தை நீங்க‌ள் உறுதியாக‌ நம‌ப‌லாம்.

(என் த‌மிழ் ஊழிய‌ம் இப்போதைக்கு நிறைவுற்ற‌து)

M.I.Aயின் 'மாயா'

Wednesday, July 21, 2010

-மாயா அருட்பிர‌காச‌த்தின் 'மாயா' இசைத்தொகுப்பை முன்வைத்து-

'Did you like this?
They can rewrite History
But we can re write it back faster
We have speed on our hands'
-M.I.A


மாயா அருட்பிர‌காச‌த்தின் (M.I.A) மூன்றாவ‌து இசைத்தொகுப்பான‌ 'மாயா' அண்மையில் வெளிவ‌ந்துள்ள‌து. ஏற்க‌ன‌வே மாயாவின் 'அருள‌ர்', 'க‌லா' போன்ற‌ இசைத்தொகுப்புக்க‌ள் வ‌ந்து அதிக‌ க‌வ‌னிப்பைப் பெற்றிருக்கின்ற‌ன‌. அவ‌ர‌து அநேக‌ பாட‌ல்க‌ளிலுள்ள‌ அர‌சிய‌லைப் போல‌, அவ‌ர் நேர‌டியாக‌வும் த‌ன‌க்குச் ச‌ரியான‌து என்று நினைக்கின்ற‌வ‌ற்றைப் பேசுவ‌தால் மாயாவை நேசிக்க‌வும், வெறுக்க‌வும் செய்கின்ற‌ நிறைய‌ப்பேர் இருக்கின்ற‌ன‌ர். த‌ன‌க்குக் கிடைத்த‌ த‌ள‌ங்க‌ள் அனைத்திலும், ஈழ‌த்தில் ந‌ட‌ந்த‌ ப‌டுகொலைக‌ளுக்கு எதிராக‌த் த‌ன் குரலைத் தொட‌ர்ச்சியாக‌ மாயா உர‌த்து ஒலித்திருக்கிறார். இத‌னால்தான் இல‌ங்கையின் பாதுகாப்புச் செய‌லாள‌ர் கோத்த‌பாய‌ ராஜ‌ப‌க்சா ஒருமுறை 'மாயா த‌ன் பாட‌ல்க‌ளைப் பாடுவ‌தோடு நிறுத்திக்கொள்ள‌ட்டும்; இல‌ங்கையின் உள்விவ‌கார‌ங்க‌ளில் த‌லையிட‌வேண்டாம்' என்று எச்ச‌ரித்துமிருக்கிறார் மாயாவின் வெளிப்ப‌டையாக‌ ஒலிக்கும் அரசிய‌ல் குர‌லால் அமெரிக்காவிற்குச் செல்வ‌த‌ற்கான‌ விசா ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌தையும் இதையிட‌த்தில் நாம் நினைவுகூர‌ வேண்டும். 'தீவிர‌வாதி'க‌ளென‌ தடைசெய்ய‌ப்ப‌ட்ட‌ விடுத‌லை இய‌க்க‌ங்க‌ளை முன்னிலைப்ப‌டுத்தி எவ‌ராலும் த‌ம் இர‌சிக‌ர்க‌ளைப் பெரும‌ள‌வில் க‌வ‌ர‌முடியாது, ஆனால் மாயா ம‌ட்டுமே விதிவில‌க்காக‌ த‌ன‌து பாட‌ல்க‌ளில் 'தீவிர‌வாத‌' இய‌க்க‌ங்க‌ளென‌ அடையாள‌ப்ப‌டுத்தப்ப‌ட்ட‌ இய‌க்க‌ங்க‌ளை அடிக்க‌டி குறிப்பிட்டும் கூட‌ பெரும‌ள‌வு இர‌சிக‌ர்களைக் கொண்டிருக்கின்றார்'  என‌க் கூறுகின்றார் ஓர் இசை விம‌ர்ச‌க‌ர்.

மாயாவின் மூன்றாவ‌து இசைத்தொகுப்பு வ‌ர‌முன்ன‌ரே ப‌ல்வேறுவித‌மான‌ ச‌ர்ச்சைக‌ள் தொட‌ங்கிவிட்ட‌ன‌. 'மாயா' இசைத்தொகுப்பில் உள்ளாட‌க்க‌ப்ப‌ட்ட‌ 'Born Free' பாட‌ல் காணொளியாக‌(video) வ‌ந்த‌போது மிக‌ப்பெரும் ச‌ர்ச்சைக‌ள் எழும்ப‌த் தொட‌ங்கிய‌து. அந்த‌க் காணொளியில் அமெரிக்க‌ இராணுவ‌ம் சிவ‌ப்புத்த‌லை  ம‌னித‌ர்க‌ளை நிர்வாண‌மாக‌ சுற்றி வ‌ளைப்பதாய், சுட்டுக்கொல்வ‌தாய், குழ‌ந்தைக‌ளைப் ப‌லியெடுப்ப‌தாய் காட்ட‌ப்ப‌ட்ட‌தால் YouTube அப்பாட‌லை 'வ‌ய‌து வ‌ந்த‌வ‌ர்க்கு ம‌ட்டும் உரிய‌து' என‌ எளிதாக‌க் கூறித்  த‌டைசெய்தது;  ஆனால் அதேவேளை மாயா 'தீவிர‌வாதப்புலிக‌ளின் பாட‌கி'யென‌ துவேச‌த்துட‌ன் வெட்டி ஒட்ட‌ப்ப‌ட்ட‌ காணொளிக‌ளை 'சுத‌ந்திர‌மாக‌' YouTube அனும‌தித்த‌து. மாயாவின் பாட‌ல்க‌ளிலுள்ள‌ அர‌சிய‌லைப்போல‌ இப்பாட‌ல் ப‌ட‌மாக்க‌ப்ப‌ட்ட‌ வித‌த்திற்கும் ப‌ல‌வேறு வித‌மான‌ வாசிப்புக்க‌ள் விம‌ர்ச‌க‌ர்க‌ளாலும் இர‌சிக‌ர்க‌ளாலும் முன்வைக்க‌ப்ப‌ட்டு விவாதிக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. இக்காணொளியில் அமெரிக்க இராணுவ‌த்தால் கைது செய்ய‌ப்ப‌ட்ட‌ சிவ‌ப்புத்த‌லை இளைஞ‌ர்க‌ளுக்கு இர‌ண்டு வித‌மான‌ தெரிவுக‌ள் கொடுக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஒன்று க‌ண்ணிவெடிக‌ள் புதைக்க‌ப்ப‌ட்ட‌ நில‌ங்க‌ளினூடாக‌ ஓடுத‌ல், ம‌ற்ற‌து ஒட‌ம‌றுத்தால் துப்பாக்கியால் ஈவிர‌க்க‌மின்றிச் சுட்டுக்கொல்ல‌ப்ப‌டுவார்க‌ள். இர‌ண்டு தெரிவுக‌ளின‌தும் முடிவு ஒன்றுதான், அது ம‌ர‌ண‌ம். இன்று வெளிநாடுக‌ளை ஆக்கிர‌மித்து நிற்கும் அமெரிக்கா/பிரித்தானியா ம‌ற்றும் அத‌ன் நேச‌ப்ப‌டைக‌ள் ஆக்கிர‌மிப்பு நாடுக‌ளில் நிக‌ழ்த்தும் கொடூர‌மான‌ வ‌ன்முறையை நாளை த‌ன‌து சொந்த‌ நாட்டின் ம‌க்க‌ளுக்கு எதிராக‌க் கூட‌ நிக‌ழ்த்தும் என்கின்ற‌ ஒருவ‌கையான‌ வாசிப்பைக்கூட‌ நாம் இக்காணொளியினூடு செய்ய‌லாம். எவ்வாறான‌தாயினும் இது அர‌சு/இராணுவ‌ம் போன்ற‌வ‌ற்றிற்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌ அளவ‌ற்ற அதிகார‌த்திற்கு எதிரான‌ க‌ல‌க‌க் குர‌லே. மேலும் இப்பாட‌லைப் ப‌ற்றிய‌ விப‌ர‌த்தைத்த‌ரும் சிறுகுறிப்புப் புத்த‌க‌த்தில், ஈழ‌த்தில் நிர்வாண‌மாக்க‌ப்ப‌ட்டு க‌ண்க‌ளும் கைகளும் க‌ட்ட‌ப்ப‌ட்டு சுட்டுக்கொல்ல‌ப்ப‌ட்ட‌ இளைஞ‌னின் ப‌ட‌ம் இணைக்க‌ப்ப‌ட்டிப்ப‌தையும் குறிப்பிட்டாக‌ வேண்டும் (இந்நிக‌ழ்வு காணொளியாக‌ வ‌ந்த‌து ந‌ம் அனைவ‌ருக்கும் நினைவிருக்கும்).

இந்த‌ இசைத்தொகுப்பு ப‌ற்றி மாயா எம்ரீவியிற்கு நேர்காண‌ல் கொடுத்த‌போது, 'இது ஒரு முப்ப‌ரிமாண‌ இசைத்தொகுப்பு' என்று கூறியிருக்கின்றார். முப்ப‌ரிமாண‌ம் என்ப‌தில் எவ‌ற்றை மாயா உள்ள‌ட‌க்க‌ விரும்புகின்றார் என்று தெளிவாக‌த் தெரியாத‌போதும், இர‌ண்டு வ‌கையில் இவ்விசைதொகுப்பு மூன்று ப‌ரிமாண‌ங்க‌ளைத் தொட‌ முய‌ன்றிருக்கிற‌து போல‌த் தெரிகிற‌து. ஒன்று, தொகுப்பிலுள்ள‌ பாட‌ல்க‌ள் மாயாவின் த‌னிப்ப‌ட்ட‌ வாழ்வின் த‌த்த‌ளிப்புக்க‌ளையும், வெளிப்ப‌டையான‌ அர‌சிய‌லையும் ம‌ற்றும் காத‌லையும் கூறுவ‌தால் இது ஒருவ‌கையான‌ முப்ப‌ரிணாம‌ம் என‌ நாம் எடுத்துக்கொள்ள‌லாம். மாயாவின் இர‌ண்டாவ‌து இசைத்தொகுப்பான‌ 'க‌லா'வில் காத‌ல் த‌வ‌ற‌விட‌ப்ப‌ட்டிருந்த‌து அல்ல‌து மென்மையாக‌ ஒலித்திருக்கிற‌து. ஆனால் இத்தொகுப்பில் நான்கிற்கு மேற்ப‌ட்ட‌ காத‌ற்பாட‌ல்க‌ள் இருக்கின்ற‌ன‌; சில‌ பொப் (electro pop) இசையில் பின்ன‌ணியில் க‌சிகின்ற‌ன‌. இர‌ண்டாவ‌து வ‌கையான‌  முப்பரிமாண‌மாக‌ கொள்ள‌க்கூடிய‌து இங்கே ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும் வெவ்வேறான‌ வாத்திய‌ங்க‌ள்...பொப், எலெக்ரோ, ரக்கே, ராப் பல்வேறுவித‌ இசைக் க‌ல‌வைக‌ள் -சில‌வேளைக‌ளில் த‌னிப்பாட‌ல்க‌ளில் கூட‌-க‌ல‌க்க‌ப்ப‌ட்டு முப்ப‌ரிணாம‌மாக‌ விரிவ‌டைகின்ற‌ன. இவ்வாறான வித்தியாச‌மான‌ இசைக்கோர்வைக‌ளோடு பல்வேறுவித‌மான‌ புதிய‌ முய‌ற்சிக‌ளையும் மாயா பாட‌ல்க‌ளில் புகுத்தியிருக்கிறார். இத‌னால் ம‌ர‌புவ‌ழியான‌ அல்ல‌து த‌ட‌ம்ப‌திக்க‌ப்ப‌ட்ட‌ பாதையிலான‌ இசைத்துணுக்குக‌ளைக் (genre) கேட்க‌விரும்புப‌வ‌ர்க‌ளுக்கு இவ் இசைத்தொகுப்பு ஏமாற்ற‌த்தை ஏற்ப‌டுத்த‌லாம். கேட்கும்போது ச‌வால்க‌ளை ப‌ல்வேறு த‌ள‌ங்க‌ளில் ஏற்ப‌டுத்தும் 'மாயா' இசைத்தொகுப்புட‌ன் ஒருவ‌ரால் அவ்வ‌ள‌வு எளிதாக‌ நெருக்க‌ம் கொண்டுவிட‌முடியாது என்ப‌தையும் குறிப்பிடாக‌ வேண்டும்.

'மாயா' தொகுப்பில் 'XXXO' சிற‌ந்த‌ காத‌ல்பாட‌லென‌ ப‌ல‌ரால் அடையாள‌ங்காண‌ப்ப‌ட்ட‌போதும் எவ‌ராலும் க‌வ‌னிக்காத‌ அருமையான‌ இன்னொரு காத‌ற் பாட‌லொன்று இருக்கிற‌து. அது 'Space' என்கின்ற‌ பாட‌ல். 'புவியீர்ப்பு என‌து எதிரி/ அது என்னைக் காசைப் போல‌ இழுக்கிற‌து/ நான் வாழ்வின் ஓடிசியில் மித‌ந்துகொண்டிருக்கும்போது/விண்மீன்க‌ள் என்ன‌ருகில் மோதுகின்ற‌ன‌/ என‌து தொலைபேசி இணைப்புக்க‌ள் செய‌லிழந்துவிட்ட‌ன்/ உன்னால் இனி என்னை (தொலைபேசியில்) அழைக்க‌முடியாது' என‌ பிரிந்துபோகின்ற‌ காத‌லை அருமையாக‌ மாயா சொல்கின்றார். மேலும் மிக‌ மென்மையோடும் ஒருவித‌ கெஞ்ச‌லோடும் த‌தும்பும் மாயாவின் குர‌ல் ந‌ம்மை இன்னொரு வெளிக்கு அழைத்துச் செல்கிற‌து. 'XXXO','Space' பாட‌ல்க‌ளைப் போல‌, 'It takes a muscle to fall in love', 'Tell Me Why' போன்ற‌வையும் காத‌லின் கொண்டாட்ட‌த்தையும் பிரிவின் வேத‌னைக‌ளையும் காம‌த்தின் கிற‌க்க‌ங்க‌ளையும் பாடுகின்ற‌ன‌.

மாயா இசைத்தொகுப்பில் இருக்கும் 'Teqkilla', Stepping Up', 'Illy Girl' ஆட்ட‌ அர‌ங்குக‌ளில் ஆடுவ‌த‌ற்குரிய‌வை; கொண்டாட்ட‌த்தையும் குதூக‌ல‌த்தையும் ஒருங்கே வ‌ழிய‌விடுப‌வை. காதலும், கொண்டாட்ட‌மும் அநேக‌ இசைஞ‌ர்க‌ளிட‌ம் இருப்ப‌வை, இவ‌ற்றோடு அர‌சிய‌லையும் இணைக்கும்போதே மாயாவின் இசை பிற‌ரிட‌மிருந்து வேறுப‌ட‌க்கூடியதாக‌ மாறுகின்ற‌து. 'Born Free' பாட‌லின் கூற‌ப்ப‌ட்ட‌ உக்கிர‌ அர‌சிய‌லைப் போல‌ 'Love a Lot'ல் 'நான் என‌து க‌ன்ன‌த்தைக் காந்தியைப் போல‌ (அடிக்க‌)காட்ட‌ மாட்டேன்/ என்னோடு ச‌ண்டை பிடிப்ப‌வ‌ர்க‌ளோடு நான் ச‌ண்டையிடுவேன்' என‌ மாயா கூறுகின்றார். அதேபோல‌ இன்னொரு பாட‌லான‌ 'Believer'ல் 'நான் போராட்ட‌ங்க‌ளைத் தேர்ந்தெடுக்க‌வில்லை/ போராட்ட‌ங்க‌ள் என்னைத் தேர்ந்தெடுக்கின்ற‌ன‌' என்கின்றார்.அதேபோல‌ நாம் எவ்வாறு நுண்ணிய‌த‌ள‌த்தில் க‌ண்காணிப்ப‌டுகின்றோம் என்ப‌தை 'Message' பாட‌லில் 'இணைய‌ம் கூகிளோடு இணைக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து/ கூகிள் அர‌சாங்க‌த்தோடு இணைக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து' என்று பாடுகிறார். உண்மைதான் அமெரிக்காவில் ம‌ட்டுமில்லை, சீனாவில் கூட‌ அர‌சாங்க‌ம் த‌ன‌க்குரிய‌வ‌ர்க‌ளின் த‌னிப்ப‌ட்ட‌ த‌க‌வ‌ல்க‌ளைச் சேக‌ரிக்க‌க் கேட்க‌  யாகூ போன்ற‌ பெருநிறுவ‌ன‌ங்க‌ள் வ‌ழ‌ங்கிய‌மை க‌வ‌ன‌த்தில் கொள்ள‌வேண்டியுள்ள‌து. 'Story to be Told' என்கின்ற‌ பாட‌லில் எதுவானாலும் ‍அது மிக‌ச் சாதார‌ண‌ க‌தையாக‌ இருந்தாலும் அனைவ‌ரும் த‌த்த‌ம‌து க‌தைக‌ளைச் சொல்வ‌தை அனும‌திக்கும் சுத‌ந்திர‌மான‌ வெளி வேண்டும் என்கிறார் மாயா. அதேபோன்று 'Meds and Feds' என்ற‌ பாட‌லில் 'யார் சொன்ன‌து எல்லாச் ச‌ட்ட‌ங்க‌ளும் எதோவொரு ச‌ட்ட‌த்தால் ஆக்க‌ப்ப‌ட்ட‌து என்று/ நாங்க‌ள் அவ‌ற்றை உடைப்போம், அவ‌ர்க‌ளின் க‌ண‌னிக‌ளையும்' என்கிறார்.

இன்று அநேக‌மான‌ க‌லைஞ‌ர்க‌ளும், இல‌க்கிய‌க்கார‌ர்க‌ளும், அறிவுஜீவிக‌ளும் வ‌ச‌தியான‌ இட‌த்திலிருந்துகொண்டு எவ‌ரையும் நோகாது முன‌கிய‌ குர‌லில் அதிகார‌ங்க‌ளுக்கும்/அர‌சுக‌ளுக்கும்/ஒடுக்குமுறைக‌ளுக்கும் எதிரான‌ குர‌லை வெளிப்ப‌டுத்துகிறார்க‌ள். இவ் மெல்லிய‌ குர‌லை ம‌றுத்து தெளிவான‌ உறுதியான‌ குர‌லில் மாயாவின் க‌ல‌கக் குர‌ல் ஒலிக்கிற‌து. அதிகார‌ப் பெரும‌ர‌த்தின் ஒரு சில‌ இலைக‌ளையாவ‌து மாயாவின் இசை அதிர‌ச் செய்வ‌தால்தான் இல‌ங்கை அர‌சும், அமெரிக்க‌ உள‌வுத்துறையும் மாயாவிற்கு எதிர்வினை செய்கின்ற‌ன‌. இப்ப‌டியே தொட‌ர்ந்திருந்தால் உன்னை ஒடுக்கி ஓரிட‌த்தில் சுருட்டி வைப்போமென‌ அவ்வ‌ப்போது இவ‌ர்க‌ள் மாயாவை அத‌ட்ட‌வும் செய்கின்ற‌ன‌ர். இத‌ற்கு மாயா ப‌ய‌ப்பிடுகின்ற‌வ‌ர் இல்லை. அத‌னால்தான் 'You get off easy. I speak direct 2 the CIA FBI China Sri Lankan Gov on Aim' என‌ அவ‌ர்க‌ளை நோக்கி மீண்டும் பேசுகிறார்.

இது ம‌ட்டுமில்லாது ப‌டிப்பு ப‌டிப்பென‌ 'வ‌ளாக‌ங்க‌ளுக்குச் செல்வ‌தே வாழ்வின் உன்ன‌த‌ம்' என்கின்ற‌ த‌மிழ்ச் ச‌மூக‌த்திற்கு ப‌டிப்பைப்போல‌வே இசைத்துறையில் நுழைந்தால் கூட‌ உய‌ர‌ங்க‌ளை அடையால‌மென‌ முன்னுதார‌ண‌மாக‌ இசையில் சாதிக்கும் மாயா ம‌திக்க‌ப்ப‌ட‌வேண்டிய‌வ‌ரும் கூட‌. இன்றைய‌ உல‌க‌ப் ப‌ர‌ப்பில் ஒவ்வொரு ச‌மூக‌த்திற்கும் த‌ம‌து சாத‌னையாள‌ர்க‌ளாக‌ப் ப‌ட்டிய‌லிட‌ நீண்ட‌தொரு வ‌ரிசையிருக்க‌ ந‌ம‌க்கு எவ‌ருமேயில்லையென்கின்ற‌ வ‌ருத்த‌த்தை துடைத்து மாயா என்ற‌ ஈழ‌த்த‌மிழ‌ப்பெய‌ர் உல‌க‌ அர‌ங்கில் ஒளிருகிற‌து. த‌ன‌க்கு குழ‌ந்தை பிற‌ந்த‌போது 'என் பிள்ளைக்கு இருக்கும் வ‌ச‌திக‌ளில் ஒன்றுகூட‌ இல்லாது ஈழ‌த்த‌மிழ்ப்பிள்ளைக‌ள் வ‌ன்னியில் இற‌க்கின்ற‌ன‌வே' என‌ உண்மையான‌ ம‌னிதாபிமான‌த்தோடு த‌ன் ம‌ன‌தைத் திற‌ந்த‌ மாயாவை நாம் கொண்டாடத்தான் வேண்டும், அவ‌ர‌து பாட‌ல்க‌ளைப் போன்று.

ந‌ன்றி: அம்ருதா (செப்ரெம்ப‌ர்-2010)

G-20 ரொறொண்டோவில் ந‌ட‌ந்த‌து என்ன‌? ப‌குதி ‍- 03

Thursday, July 08, 2010

1.
ஞாயிறு, Jun 27...

ச‌னிக்கிழ‌மை நிக‌ழ்ந்த‌ வ‌ன்முறைக‌ளும், வ‌கைதொகையில்லாக் கைதுக‌ளும் விடிகின்ற‌ ஞாயிறுக்கு மிகுந்த‌ அட‌ர்த்தியைக் கொடுக்கிற‌து. ஞாயிறின் விடிகாலையில் கைது செய்ய‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளையும் சேர்த்து கிட்ட‌த்த‌ட்ட‌ 900 பேர் சிறைக்குள் இருக்கின்றார்க‌ள் என்ற‌து என்ற‌து பொலிஸ். இதுவ‌ரை க‌ன‌டா வ‌ர‌லாற்றில் முன் எப்போதும் நிக‌ழாத‌ அதிக‌ள‌வு கைது என்ற‌ செய்தியையும் வ‌ர‌லாறு இந்நாளில் எழுதிக்கொள்கிற‌து.G20 மாநாடு கோலாக‌ல‌மாக‌ மூட‌ப்ப‌ட்ட‌ அர‌ங்கினுள் ஞாயிறின் பிற்ப‌க‌ல் வ‌ரை ந‌ட‌ந்தாலும், தொட‌ர்ச்சியாக‌ எதிர்ப்புத் தெரிவிப்ப‌த‌ற்கான‌/ஒன்று கூடுவ‌த‌ற்கான‌ ம‌னித‌வ‌லு எதிர்ப்பாள‌ர்க‌ளிட‌ம் இருக்க‌வில்லை. கைதாகிய‌வ‌ர்க‌ளுக்கு என்ன‌ ந‌ட‌ந்த‌து/ந‌ட‌க்கின்ற‌து என்று பார்ப்ப‌த‌ற்கும், எப்ப‌டி அவ‌ர்க‌ளை விடுத‌லையாக்குவ‌து என்ப‌திலும் ப‌ல‌ரின் ப‌க‌லில் பொழுது க‌ழிகிற‌து.

ச‌னிக்கிழ‌மை ந‌டைபெற்ற‌ சில‌ வ‌ன்முறை நிக‌ழ்வுக‌ளால் க‌டுமையான‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளை எதிர்கொண்ட‌ அர‌சும்/பொலிசும் இப்ப‌டி ஞாயிறு அமைதியாக‌ விடிகிற‌தேயென‌ நிம்ம‌திப் பெருமூச்சு விட்டிருக்க‌க் கூடும். ஞாயிற்றுக்கிழ‌மை ரொறொண்டோவின் மைய‌த்தில் திற‌ந்திருந்த‌ க‌டைக‌ள் ப‌ல‌, ச‌னி நிக‌ழ்வால் த‌ம் க‌டைக‌ளைப் பூட்ட‌ ந‌க‌ர் வெறிச்சோடிப்போயிருந்த‌து. மெட்ரோ ரொறொண்டோவில் இருந்த‌ ம‌க்க‌ள் த‌ம் அத்தியாவ‌சிய‌ தேவைக‌ளுக்காய் அங்குமிங்குமாய் போவ‌தையும், அன்றைய‌ நாளில் ந‌ட‌ந்த‌ உல‌க‌ காற்ப‌ந்தாட்ட‌தைப் பார்க‌ளில் பார்க்க‌ப் போகின்ற‌ இர‌சிகர்க‌ளைத் த‌விர‌ ந‌க‌ர் க‌ளையிழ‌ந்து கிட‌ந்தது.

ம‌திய‌த்திற்கு பின்பான‌ பொழுதுக‌ளில் சில‌ர் தெருக்க‌ளில் ஆர்ப்பாட்ட‌ம் செய்ய‌த் தொட‌ங்குகின்ற‌ன‌ர். கிட்ட‌த்த‌ட்ட‌ 40-50 வ‌ரையான‌ ஒரு எதிர்ப்புக் குழு Spadina-Queen ச‌ந்தியை அடைத்து ஆர்ப்பாட்ட‌ம் செய்கிற‌து. மிக‌வும் அமைதியான‌ முறையில் எதிர்ப்புக் காட்ட‌ப்ப‌டுகிற‌து. பொலிஸ் அவ‌ர்க‌ளை ஒரு திசையில் த‌டுத்து நிறுத்துகிற‌து. ஆனால் நேர‌ஞ்செல்ல‌ செல்ல‌ ச‌ன‌ம் அச்ச‌ந்தியில் என்ன‌ ந‌ட‌க்கிற‌து என‌ விடுப்புப் பார்க்க‌க் கூடுகிற‌து. இப்போது கூட்ட‌ம் 200ற்கு கிட்ட‌வாக‌ ஆகிற‌து. ச‌டுதியாக‌ பொலிஸ் ஒரு புதிய‌ முய‌ற்சி செய்து ச‌ந்தியில் கூடி நின்ற‌வ‌ர்க‌ளை நான்கு ப‌க்க‌மாய் பொலிஸ் சூழ்கிற‌து. அவ‌ர்க‌ளை வெளியே செல்ல‌விடாது த‌ன‌து க‌ர‌ங்க‌ளை இறுக்குகிற‌து. கிட்ட‌த்த‌ட்ட‌ 4 ம‌ணித்தியால‌ங்க‌ளுக்கு மேலாய் பொலிஸ் இந்த‌ முற்றுகையை வைத்திருக்கிற‌து. ஒருக‌ட்ட‌த்தில் க‌ல‌வ‌ர‌ம் த‌டுக்கும் பொலிஸ் இந்த‌ ம‌க்க‌ளைப் பொறுப்பெடுத்து அவ‌ர்க‌ளை மிக‌ச்சிறிய‌ இட‌த்தில் ஒடுக்கி வைக்கிற‌து. 'நாங்க‌ள் சாதார‌ண‌மானவ‌ர்க‌ள் எங்க‌ளைப் போக‌விடுங்க‌ள்' என்ற‌போதும் எவ‌ரும் வெளியே செல்ல‌ அனும‌திக்க‌ப்ப‌ட‌வில்லை. 'எங்க‌ளால் இந்த‌ முற்றுகைக்குள் நிற்க‌முடியாது' என்ப‌வ‌ர்க‌ள் முற்றுகைக்குள் வெளியே எடுக்க‌ப்ப‌ட்டு கைக‌ள் பிளாஸ்ரிக் நூலால‌ க‌ட்ட‌ப‌ப்ட்டு இன்னொரு வ‌ரிசையில் நிறுத்த‌ப்ப‌டுகிறார்க‌ள். அத‌ற்கு பொலிஸ் சொன்ன‌ நியாய‌ம்: 'disturbance of peace'. உண்மையில் அந்த‌ 200ற்கு மேற்ப‌ட்ட‌வ‌ர்க‌ளில் 90% மான‌வ‌ர்க‌ள் சாதார‌ண‌ பொதும‌க்க‌ள். காற்ப‌ந்தாட்ட‌த்தைப் பார்த்துவிட்டு வ‌ந்த‌வ‌ர்க‌ள், மாலை உட‌ற்ப‌யிற்சிக்காய் உலாத்த‌ப்போந்த‌வ‌ர்க‌ள், க‌டைக‌ளில் பொருட்க‌ள் வாங்க‌ச் சென்ற‌வ‌ர்க‌ள்' போன்ற‌வ‌ர்க‌ளே இக்கூட்ட‌த்தில் க‌ணிச‌மாய் இருந்த‌ன‌ர். கூடும் ஒரு கூட்ட‌த்தை பொலிஸ் கலைக்க‌ விரும்பினாலோ, த‌டிய‌டிப் பிர‌யோக‌ம் செய்ய‌ப் போகின்ற‌தோ என்றாலோ ஆக‌க்குறைந்த‌து 3 த‌ட‌வையாவ‌து எச்ச‌ரிக்கை கொடுக்க‌ப்ப‌ட்டே செய‌ற்பாட்டைத் தொட‌ங்க‌வேண்டும் என்கின்ற‌ விதியிருக்கிற‌து. ஆனால் இந்த‌ எச்ச‌ரிக்கை எதுவும் கொடுக்காம‌லேயே பொலிஸ் த‌ன் முற்றுகையை இங்கே நிக‌ழ்த்தியிருந்த‌மை க‌வ‌னிக்க‌த்த‌து.

இப்ப‌டி முற்றுகை ம‌ணித்தியால‌க்க‌ண‌க்கில் நீண்ட‌போது பெரும‌ழையும் பொழியத்தொட‌ங்குகின்ற‌து. அன்றைய‌ தின‌ம் Thunder Storm Warning கொடுக்க‌ப்ப‌ட்டிருந்த‌து க‌வ‌னிக்க‌த்த‌து. இவ்வாறு இந்த‌ ம‌க்க‌ள் முற்றுகையிட‌ப்ப‌ட்டு பெரும‌ழையில் நின்ற‌போது அவ‌ர்க‌ளுக்குரிய‌ எந்த‌ அடிப்ப‌டை உரிமைக‌ள் கூட‌ விட்டுக்கொடுக்க‌வில்லை. இய‌ற்கையின் உபாதையிற்கோ அல்ல‌து தாக‌த்திற்கு த‌ண்ணீர் குடிக்க‌வோ அனும‌திக்க‌ப்ப‌ட‌வில்லை. கிட்ட‌த்த‌ட்ட‌ 3 ம‌ணித்தியால‌ங்க‌ள் மேலாக‌த் தொட‌ர்ச்சியாக‌ பெய‌த‌ மழையில் ந‌னைந்தப‌டியும் ந‌டுங்கிய‌ப‌டியும் பொதும‌க்க‌ள் ந‌டுவீதியில் நிறுத்த‌ப்ப‌ட்டிருந்த‌ன‌ர்.

இந்த‌ 4 ம‌ணித்தியால‌ய‌ பொலிஸ் 'நாட‌க‌த்தை' இங்கிருக்கும் உள்ளூர் தொலைகாட்சி(CityTV) நேர‌டியாக‌ ஒளிப‌ர‌ப்பிக்கொண்டிருந்த‌து. ஏன் இப்ப‌டி சாதார‌ண‌ ம‌க்க‌ளை முற்றுகையிட்டு ம‌ணித்தியால‌க்க‌ண‌க்கில் வைத்திருக்கின்றீர்க‌ளென‌ ஊட‌க‌விய‌லாள‌ர் பொலிஸிட‌ம் கேட்ட‌போது அதைப் ப‌ற்றி எதுவும் கூறாது சும்மா ம‌ழுப்பிக்கொண்டிருந்த‌து பொலிஸ். G20 மாநாட்டை முன்னிட்டு இதுநாள்வ‌ரை த‌டுப்பு வேலிக்கு அருகில் போனால் கைது செய்யும் உரிமை பொலிசுக்கு இருக்கிற‌து என்ற நிலையிலிருந்து சாதார‌ண‌ வீதிக‌ளில் ந‌ட‌ந்தால் கூட‌ உங்க‌ளை எந்த‌க் கேள்வியுமில்லாது முற்றுகையிட்டு வைத்திருக்கும் உச்ச‌ அதிகார‌ நிலைக்கு பொலிசின் கொடுங்க‌ர‌ங்க‌ள் நீள‌த்தொட‌ங்கிய‌து (அப்ப‌டியொரு ச‌ட்ட‌ம் இருக்க‌வில்லை; ஆனால் அப்ப‌டியொரு அதிகார‌ம் த‌ங்க‌ளுக்கு இருந்த‌தாய் காட்டிக்கொண்ட‌தாய் Liar பிளேய‌ர் பிறகு ஒப்புக்கொண்டார்.)

ச‌னிக்கிழ‌மை நிக‌ழ்ந்த‌ சில‌ வ‌ன்முறை நிக‌ழ்வுக‌ளால் G20 எதிர்ப்பாள‌ருக்கு எதிராக‌ மாறிய‌ பொதும‌க்க‌ளின் ம‌னோநிலை இப்போது இந்த‌ த‌ன்னிச்சையான‌ அதிகார‌ ஆண‌வ‌ப்போக்கால் பொலிசுக்கு எதிராக‌ மாறுகின்ற‌து. மேலும் இம்முற்றுகை நிக‌ழ்ந்துகொண்டிருக்கும்போது சிறைக‌ளில் இருந்து சில‌ர் விடுத‌லை செய்ய‌ப்ப‌டுகின்றார்க‌ள். அவ‌ர்க‌ள் சிறையின் உள்ளே இருக்கும் நிலைமைக‌ள் குறித்தும், தாங்க‌ள் ந‌ட‌த்த‌ப்ப‌டுவ‌து குறித்தும் சொல்வ‌து தொலைக்காட்சியில் நேர‌டியாக‌ ஒளிப‌ர‌ப்ப‌டுகிற‌து. பெண்க‌ள் தாங்க‌ள் -ஆண் பொலிஸ் காவ‌லுக்கு நிற்க‌- க‌த‌வுக‌ளில்லாத‌ க‌ழிப்ப‌றைக‌ளிற்குப் போக‌வேண்டியிருக்கும் நிலையைக் கூறுகின்ற‌ன‌ர். த‌டுத்து வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ 20 ம‌ணிக‌ளுக்கு மேலாய், முறையான‌ உண‌வு கொடுக்க‌ப்ப‌டாது வைத்திருக்க‌ப்ப‌ட்டிருந்த‌ன‌ர் என்ப‌தோடு சில‌ under-age பெண்க‌ளை ஆண் பொலிஸ் உட‌ல் தேடுத‌லும் (body checkup) செய்திருக்கின்ற‌து என்றும் கூற‌ப்ப‌டுகின்ற‌து. முற்றுகை நிக‌ழ்வும், சிறைக்குள் ந‌ட‌ந்த‌ நிக‌ழ்வுக‌ளும் தெருவில் ந‌ட‌க்கும் த‌ங்க‌ளுக்கும் ஏதாவ‌து ந‌ட‌க்க‌லாமென்ற‌ அச்ச‌த்தை சாதார‌ண‌ ம‌க்க‌ளிட‌ம் விதைக்கிற‌து.

2.
திங்க‌ட்கிழ‌மை பொலிசின் கைதுக‌ள்/முற்றுகை ப‌ற்றியும் அவ‌ர்க‌ளுக்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌ மேல‌திக‌ அதிகார‌ம் குறித்தும் ஊட‌க‌ங்க‌ள்/அர‌சிய‌ல்வாதிக‌ள்/ம‌னித‌ உரிமைவாதிக‌ள் கேள்விக‌ளை எழுப்புகின்ற‌ன‌ர். இம்முற்றுகையினுள் ஆர்ப்பாட்ட‌க்காராக‌ அல்லாது சாதார‌ண‌ ஒருவ‌ராக‌ அக‌ப்ப‌ட்ட‌ ரொறொண்டோ ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ பேராசிரிய‌ர் எவ்வாறு ப‌ல்வேறு அடிப்ப‌டை உரிமைக‌ள் மீற‌ப்ப‌ட்ட‌ன‌ என்று த‌ன‌ அனுப‌வ‌ங்க‌ளை எழுதுகிறார். இதுவ‌ரையான‌ நிக‌ழ்வுக‌ளில் க‌ள்ள‌ ம‌வுன‌ம் காத்த‌ ஒன்ராறியோ மாநில‌ முத‌ல்வ‌ர் Dalton McGuinty பொலிசின் செய‌ல்க‌ளை நியாய‌ப்ப‌டுத்துகிறார். பொலிசின் த‌லைவ‌ர் பிளேய‌ர் Black Bloc ஐ  'தீவிர‌வாதி'க‌ளென‌ குறிப்பிட்டு குற்ற‌ஞ்சாட்டுகிறார். இதுவ‌ரை பொலிசுக்கு/ந‌டுவ‌ண் அர‌சுக்கு ஆத‌ர‌வாக‌ பேசிய‌ ரொறொண்டோ மேய‌ர் த‌ன‌து குர‌லைச் ச‌ற்று மாற்றுகிறார். எனெனில் ரொறொண்டோவில் ந‌ட‌க்கும் G20ற்கான‌ அனைத்துப் பொறுப்புக்க‌ளும் த‌ங்க‌ளுக்கென‌ கூறிய‌ பிர‌த‌ம ம‌ந்திரி வ‌ன்செய‌ல்க‌ளின் பின் உடைக்க‌ப்ப‌ட்ட‌ க‌டைக‌ளுக்கு ந‌டுவ‌ண் அர‌சு ந‌ஷ்ட ஈடு கொடுக்காதென‌ ம‌றைமுக‌மாய்ச் சொல்கிறார்.
மேய‌ர் David Miller, 'நாங்க‌ள் ரொறொண்டோவில் G20 ந‌ட‌த்த‌வேண்டாமென‌ச் சொன்ன‌போதும் ந‌ட‌த்திக் காட்டிய‌ ஹார்ப்ப‌ர் அர‌சு இப்போது ந‌ஷ்ட‌ ஈடு த‌ருவ‌தில் இழுத்த‌டிக்கிற‌தென‌' இன்னொரு நாட‌க‌த்தை அர‌ங்கேற்றுகிறார்.

பொலிசின் அராஜ‌க‌த்தையும், வ‌கைதொகையில்லாக் கைதுக‌ளையும் க‌ண்டித்து ஒரு க‌ண்ட‌ன‌ப்பேர‌ணி பொலிஸ் த‌லைமைய‌க‌த்திற்கு முன் திங்க‌ள் (Jun 28) மாலை கூடுகின்ற‌து. 1000ற்கு மேற்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் க‌ல‌ந்துகொண்டு பொலிசுக்கு எதிரான‌ த‌ம‌து எதிர்ப்பைத் தெரிவிக்கின்ற‌ன‌ர். பிற‌கு இப்பேர‌ணி குயின்ஸ் பார்க் வ‌ரை ப‌ல்வேறு வீதிக‌ளில் ந‌ட‌ந்துசென்று க‌லைகின்ற‌து. பொலிசின் ந‌ட‌வ‌டிக்கைக‌ள் மீதான‌ பொது விசார‌ணை (Public Inquiry) ந‌ட‌த்த‌ப்ப‌ட‌வேண்டுமென‌ அழுத்த‌ம் ப‌ல‌மாக‌ப் பிர‌யோகிப்ப‌டுகிற‌து.

இத‌ற்கு அடுத்த‌ வார‌ம் Gay Pride Parade ந‌ட‌க்க‌விருக்கிற‌து. அத‌ற்கு பொலிசும் த‌ன் ப‌ங்க‌ளிப்பை ஒவ்வொரு வ‌ருட‌மும் கொடுக்கின்ற‌து. மில்லிய‌ன்க‌ண‌க்கில் ம‌க்க‌ள் ப‌ங்குபெறும் இந்நிக‌ழ்விற்கான‌ கூட்ட‌மொன்றிற்கு பொலிஸ் த‌லைவ‌ர் வ‌ந்த‌போது அவ‌ரை முற்றுகையிட்டு Queer ந‌ண்ப‌ர்க‌ள் அவ‌ரைப் பொலிஸ் த‌லைமைப் பொறுப்பிலிருந்து இராஜினாமாச் செய்ய‌ச் சொல்கின்ற‌ன‌ர். பிற‌கு சென்ற‌ வியாழ‌ன் Canada Dayயின்போது 1000ற்கு மேற்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் க‌ல‌ந்துகொண்ட‌ இன்னொரு க‌ண்ட‌ன‌ப்பேர‌ணி குயின்ஸ் பார்க்கில் தொட‌ங்கி பொலிஸ் த‌லைமைய‌த்தைப் போய்ச் சேர்கிற‌து. ரொறொண்டோ பொலிசின் அத்துமீறிய‌ அராஜ‌த்தை எதிர்த்து மொன்றிய‌லிலும்  Anit Capitalists என்ற‌ குழு ஆர்ப்பாட்ட‌ம் செய்கிற‌து. இவ்வாறு ப‌ல‌ எதிர்ப்பு ஊர்வ‌ல‌ங்க‌ள் பல்வேறு ப‌குதிக‌ளில் நிக‌ழ்த்த‌ப்ப‌டுகின்ற‌ன‌.

பொலிஸ் மீதான‌ எரிச்ச‌லில் ம‌க்க‌ளும், ஆர்ப்பாட்ட‌க்கார‌ர்க‌ளும் இருக்கின்றார்க‌ள் என்ற‌ ப‌ய‌த்தில் வ‌ழ‌மையாக‌ ஒவ்வொரு வ‌ருட‌மும் Gay Pride Paradeல் க‌ல‌ந்துகொள்ளும் பொலிஸ் த‌லைவ‌ர் Paradeன்  எந்நிக‌ழ்விலும் ப‌ங்குபெற‌வில்லை. பொலிஸ் Pride Paradeன் ஒரு ப‌குதியாக‌க் க‌ல‌ந்துகொண்டாலும், பொலிசை 'இப்பேர‌ணியிலிருந்து வெளியே போ' என்று கூறிய‌ சுலோக‌ அட்டைக‌ள் சில‌ரால் எழுப்ப‌ப்ப‌ட்டிருந்த‌ன‌.

நேற்று வ‌ந்த‌ அறிக்கையின்ப‌டி G20 முன்னிட்டு 1070 பேர் கைது செய்ய‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள். 250 பேரின் மேல் குற்ற‌ஞ் சாட்ட‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. 800வ‌ரையானோர் எவ்வித‌ குற்ற‌ங்க‌ளுமில்லாது  விடுத‌லை செய்ய‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள் என‌ச் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து. இன்ன‌மும் சிறையில் 20 பேருக்கு மேற்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் G20 ஆர்ப்பாட்ட‌ங்க‌ள் முடிந்து ஒரு வார‌த்திற்குப்பின்னும் த‌டுத்து வைக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌ர். சில‌ தின‌ங்க‌ளுக்கு முன்னும் ப‌ல்வேறு ம‌னித‌ உரிமைக்குழுக்க‌ள் பொது விசார‌ணை வேண்டுமென‌ ப‌த்திரிகையாள‌ர் ச‌ந்திப்பை நிக‌ழ்த்தியிருக்கின்ற‌து. ந‌ம்மில் ப‌ல‌ருக்கு G20 எதிர்ப்பு ஊர்வ‌ல‌ங்க‌ள் நிக‌ழ்த்த‌ப்ப‌ட்ட‌து குறித்து ப‌ல்வேறுவித‌மான‌ கேள்விக‌ள் இருந்தாலும், பொலிஸுக்கு மேல‌திக‌மாக‌க் கொடுக்க‌ப்ப‌ட்ட‌ அதிகார‌ங்க‌ள் குறித்தும் அதை அவ‌ர்க‌ள் துஷ்பிர‌யோக‌ம் செய்த‌து குறித்தும் ஒன்றிணைந்த‌ குர‌லே இருக்குமென‌ ந‌ம்புகிறேன்.


ரொறொண்டோ இப்ப‌டித்தான் சில‌நாட்க‌ளாய் 'பொலிஸ் ந‌க‌ராக‌' இருந்தது



Black Blocல் பொலிஸ் Under cover ஆக‌ இருந்திருக்க‌லாம் என்ற‌ ச‌ந்தேக‌ம் இங்கே எழுப்ப‌ப்ப‌டுகிற‌து. பொலிஸ் ஏற்க‌ன‌வே இவ்வாறான‌ 'ச‌தி'க‌ளில் ஈடுபட்டிருப்ப‌து ஆதார‌ங்க‌ளோடு நிரூபிக்க‌ப்ப‌ட்டுமிருக்கிற‌து என்ப‌தையும் நாம் அவ்வ‌ள‌வு எளிதாக‌ ம‌ற‌ந்தும் விட‌முடியாது.

இத்தொட‌ரை எழுதுவ‌த‌ற்கு உத‌விய‌வை:

(1) CitvTV
(2) Toronto Star
(3) TVO
(4) ஒளிப்ப‌ட‌ங்க‌ள்/காணொளி எடுத்தாள‌ப்ப‌ட்ட‌ உரிய‌ த‌ள‌ங்க‌ள்

G-20 ரொறொண்டோவில் ந‌ட‌ந்தது என்ன‌? ப‌குதி-2

Friday, July 02, 2010

-ஜூன்-26...

ச‌னிக்கிழமை விடிகாலையிலே ஊர்வ‌ல‌த்தில் க‌ல‌ந்துகொண்ட‌ ப‌ல‌ரின் வீடுக‌ளை நோக்கி பொலிஸ் குவிகிற‌து (பொலிசால் இவ‌ர்க‌ள் ஏற்க‌ன‌வே குறிப்பு எடுக்க‌ப்ப‌ட்டிருப்பார்க‌ள் என‌ ந‌ம்புகிறேன்). தேடுத‌ல் ந‌ட‌த்த‌ எவ்வித‌ உரிய ப‌த்திர‌மும்(warrant) இல்லாது ப‌ல‌ வீடுக‌ளில் சோத‌னை ந‌ட‌த்த‌ப்ப‌டுகிற‌து; ப‌ல‌ர் கைது செய்ய‌ப்ப‌டுகின்றார்க‌ள். அல‌ன் பூங்காவிலிருந்து குயின்ஸ் பார்க்கிற்கு செல்ல இருந்த No One Is Illegalன் பேச்சாள‌ர் (spokesperson) ஹ‌ச‌னும், இன்னொருவ‌ரும் -சீருடை அணியாத‌- பொலிசால் கைவில‌ங்கிட்டு கைது செய்ய‌ப்ப‌ட்டு அடையாள‌ இல‌க்க‌மில்லாத‌ வாக‌ன‌த்தில் ஏற்ற‌ப்ப‌டுகிறார்க‌ள். ஹசனும், அவரது தோழியும் விடிகாலையில் நடந்த முறையற்ற கைதுகள் பற்றி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தச் செல்கின்றபோதே கைது செய்யப்படுகிறார்கள். இவர்களின் கைதால் குயின்ஸ் பார்க்கில் நடைபெறவிருந்த ப‌த்திரிகையாள‌ர் ச‌ந்திப்பு இர‌த்துச் செய்ய‌ப்ப‌டுகிற‌து. கைதுசெய்ய‌ப்ப‌ட்ட ஹசனின் தோழியை -சீருடை அணியாத‌ பொலிஸ்- ரக்ஸியில் ஏற்றி ரொறொண்டோ நகருக்குள் 40-50 நிமிட‌ங்க‌ள் வைத்து ஓடித்திரிந்துவிட்டு வீதியின் ஒரு மூலையில் இற‌க்கிவிடுகின்றார்க‌ள்.

இத‌ற்கிடையில் G20 த‌ற்காலிக‌ சிறைச்சாலைக்கு முன், கைதுசெய்ய‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் ந‌ண்ப‌ர்க‌ள் கூடி ப‌த்திரிகைக‌ளுக்கும், வெளி உல‌கிற்கும் ந‌ட‌ந்த‌வை ப‌ற்றிக் கூறுகின்றார்க‌ள். தமது நண்பர்கள், உரிய அனும‌தியோ/கார‌ண‌ங்க‌ளோ இன்றி கைதுசெய்யப்படுவது எந்தவகையில் நியாயம் எனக் கேட்கிறார்கள். நேர‌ஞ் செல்ல‌ச் செல்ல‌ நிறைய‌ப்பேர் சிறையின் முன் கூடி கைது செய்ய‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளை விடுத‌லை செய்யச் சொல்லி ஆர்ப்பாட்ட‌ம் செய்கிறார்க‌ள். நிறைய‌ப் பொலிஸ் சிறைச்சாலையின் முன் கூடுகின்றார்க‌ள். க‌ல‌வ‌ர‌த் த‌டுப்பு பொலிஸ் ஒருக‌ட்ட‌த்தில் க‌ண்ணீர்ப்புகைகையையும், பிளாஸ்ரிக் தோட்டாக்க‌ளையும் ஏவுகிறார்க‌ள். ப‌ல‌ G20 எதிர்ப்பாளர்கள் இந்த‌ ஆர்ப்பாட்ட‌த்தின்போதும் கைது செயய‌ப்ப‌டுகிறார்க‌ள்.

எனினும் ஏற்க‌ன‌வே தீர்மானித்த‌ப்ப‌டி குயின்ஸ் பார்க்கிலிருந்து மாபெரும் பேர‌ணி ஒன்று ம‌திய‌ம் 1.00 ம‌ணிய‌ள‌வில் தொட‌ங்குகின்ற‌து. வெள்ளி நிக‌ழ்ந்த‌துபோல‌வே ப்ல‌வேறுவிதமான‌ தொழிலாள‌ர் அமைப்புக்க‌ள், சிறுபான்மையின‌ அமைப்புக்க‌ள் சேர்ந்து ஊர்வ‌ல‌த்தை ந‌க‌ர்த்துகின்ற‌ன‌ர். முன்ன‌ணியில் செல்லும் பெண்க‌ள் அமைப்பு 'தேவால‌ய‌ங்க‌ளோ அர‌சோ எம்மை க‌ட்டுப்ப‌டுத்த‌ முடியாது' என‌ குர‌லெழுப்புகிறார்க‌ள். ஹ‌ர்ப்ப‌ரின் அர‌சாங்க‌ம் 3ம் உல‌க‌நாடுக‌ளில் ந‌ட‌க்கும் க‌ருத்த‌டைக்கு இதுவ‌ரை வ‌ழ‌ங்கிவ‌ந்த‌ உத‌விகளை நிறுத்துவ‌தாக‌ அறிவித்த‌தை நாம் இங்கே நினைவில் கொள்ளவேண்டும்.

ஒருக‌ட்ட‌த்தில் ஊர்வ‌ல‌ம் பல்வேறு ப‌குதிக‌ளாக‌ப் பிரிகின்ற‌து. முக்கிய‌மாய் வெள்ளி அல‌ன்ஸ் பூங்காவில் த‌ம்மை முற்றுமுழுதாக‌ க‌றுப்பு ஆடைக‌ளாலும் முக‌மூடிக‌ளாலும் மூடிய‌ அதே குழு (Black Bloc என பின்னர் ஊடகங்களால் அடையாளங் காட்டப்பட்டனர்) குயின்ஸ் பார்க்கிலும் இருந்த‌து. அது த‌னியே ஊர்வ‌ல‌த்திலிருந்து பிரிந்து ஆனால் பிற‌ரை த‌ங்களைச் சுற்றி பாதுகாப்பிற்காய் வ‌ரும்ப‌டி கேட்கின்ற‌து. குயின் (Queen), ய‌ங் (Yonge), பே (Bay), கொலிஜ்(Collge) என்கின்ற ரொறொண்டோ ந‌க‌ரின் முக்கிய‌ வீதிக‌ளில் இருக்கும் பெருந்தேசிய‌ நிறுவ‌னங்க‌ளின் க‌டை க‌ண்ணாடிக‌ளை உடைக்கிற‌து. Urban Outfitters, American Apparel, Adidas Store, Starbucks, Rogers போன்ற‌வ‌ற்றின் க‌டைக‌ளும், ப‌ல‌ வ‌ங்கிக‌ளும் இவ‌ர்க‌ளும் முக்கிய‌ குறிக‌ளாகின்ற‌ன‌.இக்க‌டைக‌ளுக்கு இடையில் அப்பாவியாக‌ இருந்த‌ சிறு வ‌ர்த்த‌க‌ க‌டைக‌ள் சில‌வ‌ற்றின் க‌ண்ணாடிக‌ளும் உடைக்க‌ப்ப‌ட்ட‌தை திங்க‌ட்கிழ‌மை சென்று பார்த்த‌போது தெரிந்த‌து. இத‌ன் தொட‌ர்ச்சியில் பொலிஸ் கார்க‌ள் பல்வேறு சந்திகளில் எரிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. மொத்த‌மாக‌ 4 பொலிஸ் கார்க‌ள் எரிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. இவ‌ர்க‌ள்தான் முதலாளித்துவ‌ எதிர்ப்பின் கோப‌த்தில் எரித்தார்க‌ள் என்ற‌ ‍சாதார‌ண -AntiG20 ஊர்வ‌ல‌த்தில் ப‌ங்குபெறாத‌- ம‌க்க‌ளும் சிரித்த‌ப‌டி எரியும் பொலிஸ் கார்க‌ளை ப‌ட‌ங்க‌ளாய் எடுக்கிறார்க‌ள்,த‌ரித்து நின்று இர‌சிக்கிறார்க‌ள். ஆக‌ எல்லோருக்கும் பொலிஸின் அதிகார‌ம் மீதான‌ எரிச்ச‌ல் உள்ளுக்குள் ஊறிய‌ப‌டித்தான் இருந்திருக்கிற‌து போலும். எந்த‌ தெருவில் போனாலும் நூற்றுக்க‌ண‌க்காய் சீருடையிலும் ம‌ற்றும் சீருடை இல்லாதும் நிற்கும் பொலிஸ், கார்க‌ள் எரிந்த‌ நீண்ட‌நேர‌த்தின் பின்னே ஆற‌ அம‌ர‌ ஏன் வ‌ந்தார்க‌ள் என்ப‌து முத‌ல் கேள்வி. ம‌ற்றது எரிக்க‌ப்ப‌ட்ட‌ 20/30 நிமிட‌ங்க‌ளுக்குப் பின்னே தீய‌ணைப்புப்ப‌டையே வ‌ந்து சேர்கின்ற‌து. எந்த‌ அவ‌ச‌ர‌ உத‌வி என்றாலும் நிமிட‌ங்க‌ளில் பொலிசுட‌ன் வ‌ர‌க்கூடிய‌ தீய‌ணைப்புப்ப‌டைக்கு இவ்வ‌ள‌வு நேர‌ம் ஏன் எடுக்கிற‌து என்ப‌து இன்னொரு கேள்வி.


இங்கே Black Bloc 'அமைப்பு' ப‌ற்றி மிக‌ச் சுருக்க‌மாக‌ப் பார்ப்போம். Black Bloc என்ற‌ பெய‌ர் ஜேர்ம‌னியில் அணுச்ச‌க்தி ப‌ரிசோத‌னைக்கு எதிராக‌ கூடிய‌ எதிர்ப்பாள‌ர்க‌ளிலிருந்து தொட‌ங்குகின்ற‌து. தொட‌ர்ந்து பெருந்தேசிய‌ நிறுவ‌ங்க‌ளுக்கும், உல‌க‌ வ‌ங்கி போன்ற‌வ‌ற்றிற்கும் எதிர்ப்புத் தெரிவித்து ப‌ல‌ இட‌ங்க‌ளில் இவ்வ‌மைப்பின‌ர் த‌ம‌து இருப்பைக் காட்டியிருக்கின்றார். 1999ல் மிக‌ப் பிர‌சித்தி பெற்ற‌ சியாட்டில் (Anti WTO)ல் இவ‌ர்க‌ள் பல‌ பெருந்தேசிய‌ நிறுவ‌ன‌ங்க‌ளைச் சேத‌ப்ப‌டுத்தியிருக்கிறார்க‌ள். Black Bloc எப்ப‌டி இய‌ங்குகிற‌து என்ப‌து குறித்து இன்னும் தெளிவான‌ ஆதார‌ங்க‌ள் எடுக்க‌ப்ப‌ட‌வில்லை. இது அமைப்ப‌ற்ற‌தாக‌வும், த‌லைவ‌ர் போன்ற‌வை இல்லாது இய‌ங்குகின்ற‌ன‌ என‌வும், நில‌வ‌ர‌ங்க‌ளுக்கு ஏற்ப‌ 'உறுப்பின‌ர்க‌ள்'ஓரிட‌த்தில் கூடி இய‌ங்குப‌வ‌ர்க‌ளாய் இருக்கின்றார்க‌ள் என‌ச் சொல்ல‌ப்ப‌டுகிற‌து. உறுப்பின‌ர்க‌ளைச் சேர்க்கும்போது இர‌க‌சிய‌மான‌ முறையில் சேர்க்க‌ப்ப‌ட்டு செய‌ற்பாடுக‌ளின் போது ஒருவித‌ ச‌ங்கேத‌ மொழி அவ‌ர்க‌ளுக்குக் கொடுக்க‌ப்ப‌டுகிற‌து. ரொறொண்டோவில் த‌ம‌து செய‌ற்பாடுக‌ளை நிக‌ழ்த்தும்போது 'umberlla' என்ற‌ சொல் ப‌ய‌ன்ப‌ட்ட‌தாக‌ச் சொல்ல‌ப்ப‌டுகிற‌து.

சாதார‌ண‌ G20 எதிர்ப்பாள‌ர்க‌ள் அமைதியான‌ முறையில் த‌ம‌து எதிர்ப்பைக் காட்டுவ‌த‌ற்கு மாறாக‌, எதையும் செவிம‌டுக்காத‌ அர‌சிட‌ம்/பொலிசிட‌ம் வ‌ன்முறையான‌ வ‌ழிக‌ளே ச‌ரியாக‌ இருக்கும் ந‌ம்புப‌வ‌ர்க‌ளாக‌ இவ‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள். முத‌லாளித்துவ‌த்திற்கு/ பொலிசுக்கு/கால‌னித்துவ‌த‌ற்கு எதிரான‌வ‌ர்க‌ள் என‌த் த‌ங்க‌ளைப் பிர‌க‌ட‌ன‌ப்ப‌டுத்தும் இவ‌ர்க‌ளின் பிர‌சித்த‌மான‌ கோச‌மாக‌ 'முதலாளித்துவ‌ம் கொல்ல‌ முன்ன‌ர், முத‌லாளித்துவ‌த்தைக் கொல்' என்ப‌து இருக்கிற‌து. எப்ப‌டி க‌றுப்பாடை அணிந்து த‌ங்க‌ளை வேற்றாட்க‌ளாக‌ காட்டிக்கொள்கிறார்க‌ளே அவ்வ‌ளவு விரைவாக‌ அதைக் க‌ளைந்து த‌ம்மைச் சாதார‌ண‌மான‌வ‌ர்க‌ளாய் த‌ங்க‌ள் அவ‌தார‌த்தை மாற்றியும் கொள்கிறார்க‌ள்.

வெள்ளி வ‌ரை அர‌சு/பொலிசுக்கோ அல்ல‌து G20 எதிர்ப்பாள‌ருக்கோ ஆத‌ர‌வு நிலை என்ற‌ அந்த‌ர‌மான‌ நிலையிலிருந்த‌ பொதும‌க்க‌ளின் 'ம‌னோநிலை' Black Blocன் வ‌ன்முறையின் பின் அர‌சு/பொலிசுக்கு ஆத‌ர‌வாக‌ மாறுகின்ற‌து. ஊர்வ‌ல‌த்தில் க‌ல‌ந்துகொண்ட‌ அனைவ‌ரும் வ‌ன்முறையை ஆத‌ரிப்ப‌வ‌ர்க‌ளாய் இருக்க‌வில்லை என்ப‌தும் உண்மை. ஆனால் ஏன் இக்க‌டைக‌ளை உடைக்கின்றீர்கள் என்று Black Bloc இட‌ம் ஊட‌க‌ம் ஒன்று கேட்கும்போது இப்பெருநிறுவ‌ன‌ங்க‌ள் சாத்தான்க‌ளைப் போன்ற‌து' என்று அவ‌ர்க‌ளில் கூறிய‌தில் உண்மை இல்லாம‌லும் இல்லை. அமைதியான‌ முறையில் G20 எதிர்ப்பைக் காட்டிக்கொண்டிருந்த‌ சில‌ர் க‌டை உடைப்பு நிக‌ழ்வின்போது, 'நீங்க‌ள் அர‌சு G20 பாதுகாப்பிற்காய் செல்வு செய்த‌ 1.24 பில்லிய‌ன் டொல‌ரை நியாய‌ப்ப‌டுத்தப்போகின்றீர்க‌ள்' என‌ எச்ச‌ரிக்கை செய்த‌தையும் நாம் இங்கு குறிப்பிட்டாக‌ வேண்டும்.

வ‌ன்முறையோடு வாழ்ந்த‌ ந‌ம்மைப் போன்ற‌ 3ம் உலக‌ நாடுக‌ளைச் சேர்ந்த‌வ‌ர்க்கு பொலிஸ் கார்க‌ளை எரிப்ப‌து நிக‌ழ்வ‌து என்ப‌து பெரிய‌ விட‌ய‌ம‌ல்ல‌; ஆனால் க‌ன‌டா போன்ற‌ நாடுக‌ளில் இருப்ப‌வ‌ர்க்கு இது அதிர்ச்சிதான். பொலிஸ் கார்க‌ளை எரித்த‌வுட‌ன் உல‌க‌ எங்கும் இச்செய்தி ப‌ர‌வுகின்ற‌து. இந்த‌ தீவிர‌ எதிர்ப்பாள‌ர்க‌ளும் G20 எதிரான‌ த‌ம‌து செய்தியை வெளி உல‌கிற‌கு தெளிவாக‌ அறிவிக்கின்ற‌ன‌ர். இப்போது G20 நாட்டுத் த‌லைவ‌ர்க‌ள் உள்ளே என்ன‌ உரையாடுகின்றார்க‌ள் என்ப‌தைவிட‌ தெருக்க‌ளில் இந்த‌ -Black Bloc- எதிர்ப்பாள‌ர்க‌ள் என்ன‌ செய்ய‌ப்போகின்றார்க‌ள் என்று ஊட‌க‌ங்க‌ளும் உள்ளூர் ம‌க்க‌ளும் உல‌க‌ ம‌க்க‌ளும் அவ‌தானிக்க‌ச் செய்கின்ற‌ன‌ர்.

ச‌னிக்கிழ‌மை ந‌ட‌ந்த‌ நிக‌ழ்வுக‌ள் த‌ம் கையை மீறி ந‌ட‌ந்த‌தை (அல்ல‌து அவ‌ர்க‌ளாக‌வே அப்ப‌டி ந‌ட‌க்க‌ட்டுமென‌ இருந்திருக்க‌லாம், இவ்வ‌ள‌வு பில்லிய‌ன் பாதுகாப்புக்குச் செல்வு செய்து ஒன்றுமே நிக‌ழ்வில்லை என்றால் அர‌சும் பொலிசும‌ல்ல‌வா ம‌க்க‌ளிட‌ம் ப‌தில் சொல்ல‌வேண்டும். எனெனில் இந்த‌ப்ப‌ண‌ம் அனைத்தும் உழைக்கும் ம‌க்க‌ளின் வ‌ரியிலிருந்து அல்ல‌வா சுர‌ண்ட‌ப்ப‌ட்ட‌து) பொலிஸ் அதிகாரி கேள்விக‌ளால் துளைக்க‌ப்ப‌டுகின்றார். ரொறொண்டோ மேய‌ர் கையால‌க‌த்த‌ன‌த்துட‌ன் இந்த‌ வ‌ன்முறை ரொறொண்டோவிற்கு வெளியில் வ‌ந்த‌வ‌ர்க‌ளால் நிக‌ழ்த்த‌ப்ப‌டுகின்ற‌து என்கிறார். அன்றைய‌ இர‌வே பொலிஸ் த‌ன் அதிகார‌த்தின் க‌ர‌த்தை இறுக்குகிற‌து. கிட்ட‌த்த‌ட்ட‌ 400 மேற்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் கைது செய்ய‌ப்ப‌ட்டு அடைக்க‌ப்ப‌டுகிறார்க‌ள். ப‌ல‌ அப்பாவி ம‌க்க‌ள் வீடுக‌ளில் எவ்வித‌ அனும‌தியுமின்றி விசாரிக்க‌ப்ப‌டுகின்றன‌ர். அவ்வாறு ஊர்வ‌ல‌ம் எதிலும் ப‌ங்குபெறாத‌ மிருக‌ வைத்திய‌ர் ஒருவ‌ர் கைக‌ள் க‌யிறால் க‌ட்ட‌ப்ப‌ட்டு 1/2 ம‌ணிக்கு மேலாய் அவ‌ருக்கே தெரியாத‌ ஒருவ‌ர் ப‌ற்றிய‌ விப‌ர‌த்தைத் த‌ருமாறு பொலிஸால் மிர‌ட்ட‌ப்ப‌டுகிறார். ப‌ல‌ர் நித்திரையிலேயே வைத்து கைது செய்ய‌ப்ப‌டுகிறார்க‌ள். இதுவ‌ரை எப்போதுமே நிக‌ழ்ந்திராத‌ பெரும் பொலிஸ் தேடுத‌ல் வேட்டை ரொறொண்டோ ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ வ‌ளாக‌த்தில் நிக‌ழ்த்த‌ப்ப‌ட்டு கிட்ட‌த்த‌ட்ட‌ 70ற்கு மேற்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் கைது செய்ய‌ப்ப‌டுகிறார்க‌ள்.

மிக‌வும் கொந்த‌ளிப்பான‌ ப‌க‌லாக‌வும் இர‌வாகவும் ஜூன் 26 ச‌னி க‌ழிகிற‌து.

(தொட‌ரும்)
ந‌ன்றி: ப‌ட‌ங்க‌ள்

G-20 ரொறொண்டோவில் நடந்தது என்ன?

Tuesday, June 29, 2010

பதின்மூன்று முட்டாள்க‌ள் மைதான‌த்தில் கிரிக்கெட் விளையாட‌ ப‌தின்மூன்றாயிர‌ம் பேர்க‌ள் அதை வெளியில் இருந்து வேடிக்கை பார்க்கிறார்க‌ள் என்றொரு பெர்னாட் ஷோவின்  ந‌கைச்சுவைத் துணுக்கு ஒன்று இருக்கிற‌து. அதுபோல‌வே G-20 என்ற‌ பெய‌ரில் 20 நாட்டின் த‌லைவ‌ர்க‌ள் சொகுசாக‌ இருந்து க‌தைத்து த‌ங்க‌ளை க‌ட‌வுள‌ரின் அவ‌தார‌மாக‌ 'ஏழை' நாடுக‌ளுக்கு காட்ட‌ ரொறொண்டோவில் கூடினார்க‌ள். எல்லாமே அவ‌ர்க‌ள் நினைத்த‌ப‌டித்தான் ந‌ட‌ந்த‌து... ஜூன் 25ம் திக‌தி வ‌ரைக்கும். க‌ட‌வுள‌ர்க‌ள் என்றால் சும்மாவா? பில்லிய‌ன் டொலர் க‌ண‌க்கில் ($1.24 Billion) பாதுகாப்புக்குச் செல‌வு செய்து, க‌ட‌வுள‌ரின் மாநாட்டுக்கு அர‌ங்குக‌ளைச் சுற்றி வான‌ளாவிய‌ வேலிக‌ளை அடைத்து, அது போதாதென்று காலாட்ப‌டை, க‌வ‌ச‌ந்தாங்கிய‌படை, குதிரைப்ப‌டை, ந‌வீன‌ தொழில்நுட்ப சைக்கிள் ப‌டையென்று ப‌ல்வேறு த‌டுப்புப் ப‌டைக‌ளையும் உருவாக்கியிருந்தார்க‌ள். இதைவிட‌ க‌ண‌க்கில்/க‌வ‌ன‌த்தில் வ‌ராத‌ உள‌வுப்ப‌டை,  பொதுமக்களைப்போல க‌ல‌ந்துவிட்ட‌ உள்ளூர்ப்படை, ஏதும் அச‌ம்பாவித‌ம் ந‌ட‌ந்தால் குருவிக‌ளாய் ம‌னித‌ர்க‌ளைச் சுட்டுத்த‌ள்ள‌ சினைப்ப‌ர் ப‌டை என‌ ந‌க‌ரின் மூலை முட‌க்கு எல்லாம் குமிந்துகிட‌ந்தார்க‌ள் ந‌ம் க‌ட‌வுள‌ரின் பாதுகாவ‌ல‌ர்க‌ள்.

ஆனால் விளையாட்டில்தான் 13பேர் முட்டாள்க‌ள் விளையாட‌ 13000 பேர் வேடிக்கை பார்ப்பார்க‌ள்; G-20 என்ப‌து ப‌ல‌ரின் நாளாந்த‌ வாழ்வையும், அடிப்ப‌டை உரிமைக‌ளையும் ப‌றிக்கும் நிக‌ழ்வ‌ல்ல‌வா? க‌ட‌வுள் என்றாலும் வினையாகிப்போனால் எதிர்வினை செய்து அனைவ‌ருக்குமான‌ சுத‌ந்திர‌த்தை  உறுதிசெய்வ‌தற்கு G20 எதிர்ப்பாள‌ர்கள் (Anti G20) ஒன்று கூடினார்கள். இறுதியாய் தம் விளையாட்டு மைதான‌த்தில் தாமே ஆடி தம் 'வெற்றி'யை உலகுக்கு எடுத்தியம்ப விரும்பிய‌ க‌ட‌வுள‌ரை முற்றாக ம‌ற‌ந்து, அனைவரும் இந்த‌ எதிர்ப்பாள‌ர்க‌ள்/அர‌ச‌விழ்ப்பாள‌ர்க‌ளைப்  ப‌ற்றியே பேச‌த்தொட‌ங்கின‌ர். 'எங்க‌ளுக்கு G20 மாநாடு, விளையாட்டில் ஒலிம்பிக்ஸைப் போல கோலாகலமானதென' அர‌சு வழங்கவிருந்த சலுகைகளை வாங்க‌ ப‌ல்லிளித்துக் கொண்டிருந்த‌ பெருநிறுவனங்களான வ‌ங்கிக‌ளையும் சேத‌ப்ப‌டுத்தி ஒரு செய்தியைச் செப்பிவிட்டுத்தான் ஓய்ந்தார்க‌ள் அர‌ச‌விழ்ப்பாள‌ர்க‌ள்.


ஜூன் 25ற்கு முன்...
G20 மாநாடு ஜூன் 26ல் ரொறொண்டோவில் தொடங்குவதற்கு முன்ன‌ரே ப‌ல்வேறு அமைப்புக்கள் தம் எதிர்ப்பைக் காட்டுவ‌த‌ற்காய் பல ஊர்வ‌ல‌ங்க‌ளை ந‌க‌ரின் முக்கிய‌ப‌குதிக‌ளில் நடத்தத் தொடங்கியிருந்தன.. ஜூன் 24 க‌ன‌டா நாட்டின் பூர்வீக‌க்குடிக‌ள் த‌ம‌து நில‌ங்க‌ள் தொட‌ர்ந்து ஆக்கிர‌மிப்ப‌தையும், G20யின் நிகழ்ச்சி நிரலையும் எதிர்த்து நகரின் முக்கிய வீதிக‌ளில் ஊர்வலமாகச் சென்று ஒன்ராறியோ பாராளும‌ன்ற‌ வளாக‌மான‌ குயின்ஸ் பார்க்கைச் சென்ற‌டைந்த‌ன‌ர். நீங்க‌ள் என்ன‌ செய்தால் என்ன‌ இந்த‌ வீதிக‌ள் எம‌க்குரிய‌ன‌ என்று பொலிஸ் என்ற‌ அதிகார‌ அமைப்பு ம‌றைமுக‌மாய் எல்லோருக்கும் உண‌ர்த்த‌த்தொட‌ங்கியிருந்த‌ன‌. சைக்கிள்க‌ளில், குதிரைக‌ளில், த‌ங்க‌ள் அடையாளம் பொறிக்கப்பட்ட கார்களில், ஏன் சாதார‌ண ம‌க்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்தும வாகங்களிலென, எங்கும் பொலிஸே நீக்க‌ம‌ற‌ நிறைந்திருந்த‌ன‌ர். போதாதற்கு வானில் வானூர்திகளாகவும் பறந்துகொண்டிருந்தனர். உங்க‌ளால் இப்ப‌டி சும்மா க‌த்த‌வே முடியும், எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் எங்க‌ள் கைக‌ளில்தான் என்று சொல்லாமற் சொன்னார்கள்.

ஜூன் 25 - ‍ வெள்ளி...

மிக‌ப்பெரிய‌ பேர‌ணியொன்று ப‌ல‌வேறு அமைப்புக்க‌ளினால் அல‌ன் பூங்காவில் (Allan Gardens) பிற்பகல் 2.30 மணியளவில் தொட‌ங்க‌ இருப்ப‌தாய் அறிவிக்க‌ப்ப‌ட்ட‌து. கிட்ட‌த்த‌ட்ட‌ 2000ற்கு மேலான‌வ‌ர்க‌ள் க‌ல‌ந்துகொண்டார்க‌ள் (நாங்க‌ளும் க‌ல‌ந்துகொண்டோம்). அன்றுதான் ஒன்றாரியோ பாராளும‌ன்ற‌த்தில் இர‌க‌சிய‌மாக‌ பொலிசுக்கு அதிக‌ அதிகார‌ம் கொடுக்கும் ச‌ட்ட‌மொன்று இய‌ற்ற‌ப்பட்ட‌து பொதுவெளியில் க‌சிய‌த் தொடங்கியது. ஜூன் 2ல் இச்ச‌ட்ட‌ம் இய‌ற்ற‌ப்ப‌ட்டிருக்கிற‌து; அது என்ன‌வெனில் மாநாட்டு அர‌ங்கு வேலிக்கு 5 மீற்ற‌ர் தொலைவுக்கு அப்பாலே ஒருவ‌ர் ந‌ட‌மாட‌முடியும். அப்ப‌டியொருவ‌ர் அதையும் மீறி வ‌ந்தால் அவ‌ரை விசாரிக்க‌வும், அடையாள அட்டை கேட்க‌வும், பொருட்க‌ளைப் ப‌ரிசோதிக்க‌வும் பொலிசுக்கு உரிமையுண்டு. இவ்வாறு செய்ய‌ப்படுவ‌தை ஒருவ‌ர் -தன் தனிமனித அடிப்படை உரிமையை முன்வைத்து- ம‌றுப்பாரானால் அவ‌ரை பொலிஸ் கைது செய்து ஜெயிலுக்கு அனுப்பும் அதிகாரமுண்டு. ஒரு 22 வ‌ய‌து இளைஞ‌ன் இவ்வாறு த‌ன் அடையாள‌த்தைக் காட்ட‌ ம‌றுத்து கைதுசெய்ய‌ப்ப‌ட்ட‌போதே பொலிஸ் த‌லைவ‌ரால் இச்ச‌ட்ட‌ம் ஏற்க‌ன‌வே இய‌ற்றப்பட்ட‌து குறித்து பொதுவெளியில் தெரிவிக்க‌ப்ப‌டுகிறது. கிட்டத்தட்ட 3 வாரங்களாக இது குறித்து எந்த பொது அறிவிப்பும் வெளியிடாது கள்ள மவுனம் காக்க காசுக்கடவுளரின் பாதுகாவலர்களால் மட்டுமே முடியுமே. க‌ட‌வுள‌ர்க‌ள்தான் ப‌க்த‌ர்க‌ளுக்கு இர‌க‌சிய‌மாய் அருள் பாலிப்பார்க‌ள் என்றால் பொலிஸும் தம் கடவுளரின் கடைவாய்ச் சிரிப்புக்காய் பொதும‌க்க‌ளைப் பலிகொடுக்க இர‌க‌சிய‌மாய் இச்ச‌ட்ட‌த்தை இய‌ற்றியிருந்தார்க‌ள் போலும்!

அல‌ன் பூங்காவில் குழுமியிருந்த‌ ம‌க்க‌ள் ந‌க‌ர‌த்தெருக்க‌ளில் ஊர்வ‌ல‌மாக‌ப் போகத்தொட‌ங்குகின்ற‌ன‌ர். No One Is Illegal என்ற‌ அமைப்பினூடாக‌ நாங்க‌ளும் ந‌ட‌க்க‌த் தொட‌ங்குகின்றோம். பூங்காவில் முற்றுமுழுதாக‌ த‌ங்க‌ளை க‌றுப்பு உடையால் ம‌றைத்த‌ ப‌ல‌ரைக் காண்கிறோம் (எங்க‌ளை ப‌ட‌ம் எடுக்க‌வும் அவ‌ர்க‌ள் அனும‌திக்க‌வில்லை‍ இவ‌ர்க‌ளைப் ப‌ற்றி கீழே சொல்கிறேன்). ஒவ்வொரு அமைப்பும் அர‌சையும் அதிகார‌த்தையும் எதிர்த்துக் கோசம் போடுகின்றன.. "No One Is Illegal, Canada is Illegal" என்கின்ற‌ கோச‌மும் எழுகின்றது. இது நிச்சயம் அதிகார அடிவருடிகளுக்குக் கோபத்தையோ/எரிச்சலையோ ஏற்படுத்தியிருக்கும். புதிதாய் உரிய அனுமதியின்றி வருபவர்களை Illegal Immigrants என்று அடையாளங்குத்தி திருப்பி அனுப்பச் செய்கின்ற அரசு, தன் மூதாதையர்கள் இந்நாட்டின் பூர்வீகக்குடிகளின் நிலங்களை ஆக்கிரமித்து, ஒடுக்கியே தனக்கான அரசை ஸ்தாபித்தபோது, Canada is Illegal என்பதில் எவ்விதத் தவறுமேயில்லைத்தானே. கோச‌ம் எழுப்ப‌ப்ப‌டாத‌போது ராப் பாட‌ல்க‌ளால் அதிகார‌த்தை முக்கிய‌மாய் பொலிசை திட்டுகிற‌/கேலி செய்கிற‌ வ‌ரிகள் மிகப்பெரும் சத்தத்தில் ஓடுகின்ற‌ன‌. கூட்ட‌ம் ந‌கர‌ ந‌க‌ர சைக்கிள் பொலிஸ் இருபுற‌மும் வேலி அடைத்து எங்களைச் சூழ்ந்து வ‌ருகின்ற‌ன‌ர். நாங்க‌ள் போகின்ற‌ வீதிக்கு குறுக்காய் திடீரென‌ ஒரு பொலிஸ் கார் த‌ன் அலார‌த்தை அல‌ற‌விட்டு த‌ன்னைவிடுவென‌ அதிகார‌ம் காட்டுகிற‌து. ஏற்க‌ன‌வே அள‌வுக்க‌திக‌மான‌ பொலிஸின் பிர‌ச‌ன்ன‌த்தாலும் அவ‌ர்க‌ளுக்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌ அதிகார‌த்தாலும் எரிச்ச‌லும் கோப‌ம‌டைந்திருந்த ஊர்வலக்குழுக்கள் பொலிஸ் காரைச் சூழ‌த்தொட‌ங்குகின்ற‌து.

இங்கே ஒன்றை நினைவில் கொள்ள‌வேண்டும். ஊர்வ‌ல‌த்தில் வ‌ந்த‌ அரைவாசிக்கும் மேற்ப‌ட்டோர் கையில் க‌ம‌ராக்க‌ள் இருக்கின்ற‌ன‌. மேலும் ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ளும் இருக்கின்ற‌ன‌ர். எந்த‌ அத்துமீற‌லும் உட‌னே ப‌ட‌மாக்க‌ப்பட்டு அதேவேக‌த்தில் பொதுவெளியில் ப‌ர‌வத் தொட‌ங்கிவிடும். அலாரம‌டித்த‌ பொலிஸ் காரை ஊர்வ‌ல‌க்கார‌க‌ள் சூழ‌ந்த‌தைப் போலவே க‌ம‌ராக்க‌ளும் சூழ‌கின்ற‌ன‌. ப‌ட‌மெடுக்கின்ற‌ன‌. த‌ன் அதிகார‌ம் இனி ஆகாதென்ற‌ நிலையில் பொலிஸ் காரின் அலார‌ம் நிறுத்த‌ப‌ட்டு அமைதியாகின்ற‌து. இந்த‌ தெருக்க‌ள் உங்க‌ளுக்கு ம‌ட்டுமில்லை; நாங்க‌ள் ஊர்வ‌ல‌ம் போகும்போது அது எங்க‌ளுக்கும் சொந்த‌மான‌து என்ப‌தை மறைமுக‌மாக‌ பொலிசுக்குத் தெளிவுப‌டுத்தப்ப‌டுகிற‌து.

இப்ப‌டிக் காரைச் சூழ்ந்து எல்லோரும் நின்றால் ஏதாவது அச‌ம்பாவித‌ம் நிக‌ழ்ந்துவிடக்கூடுமென்ற‌ எச்ச‌ரிக்கையில் சுற்றி நிற்ப‌வ‌ர்க‌ளைத் தொட‌ர்ந்து ந‌ட‌ந்துபோகுமாறு சில‌ பெண்க‌ள் அறிவுறுத்துகிறார்க‌ள். தொட‌ர்ந்து கோஷ‌ங்க‌ள் எழுப்ப‌டுகிற‌து; ஊர்வ‌ல‌ம் ந‌க‌ர‌த்தொட‌ங்குகின்ற‌து. சில‌ நிமிட‌ங்க‌ளில் எங்க‌ளுக்குப் பின்னே கூட்ட‌ம் அல்லோலக‌ல்லோலப்ப‌டுகிற‌து. என்ன‌ ந‌ட‌க்கிற‌து என்று க‌ம‌ராவுட‌ன் ஓடும்போது பொலிஸ் ஒரு க‌றுப்பின‌ இளைஞ‌னை நில‌த்தோடு சாய்த்து கைதுசெய்கிற‌து. கூட்ட‌ம் கொந்த‌ளிக்க‌த் தொட‌ங்குகிற‌து. அங்கே நிற்கும் பொலிஸைச் சுற்றி ஊர்வ‌ல‌க்கூட்ட‌ம் சுற்றிவ‌ளைக்க‌த் தொட‌ங்குகிற‌து. Let him GO என அவ‌ரை விட‌ச்சொல்லி கூட்ட‌ம் க‌த்துகிற‌து. ப‌ட‌மெடுத்துக்கொண்ட‌வ‌ர்களையும் பொலிஸ் முர‌ட்டுத்த‌ன‌மாய் ந‌ட‌த்துகிற‌து. No One Is Illegal சார்பாக‌ பொலிஸ் அராஜ‌க‌த்திற்கு எதிராக‌ ஏற்கனவே கோச‌ம் எழுப்பிக்கொண்டிருந்த‌ பெண்ணை பொலிஸ் குறிவைத்து தாக்குகிற‌து. அவ‌ருக்கு க‌ண்ணருகில் காய‌ம் ஏற்பட்டு இரத்தம் வடிகிறது.. அந்த‌ இளைஞ‌னை கைதுசெய்வ‌த‌ற்கு என்ன‌ கார‌ண‌ம் என்ன‌வென்று அறியாத‌போதும் அவ‌ர் காது கேளாத‌/ வாய் பேசாத ந‌ப‌ர் என்று அறிந்தோம்.

இவ‌ரை பொலிஸ் ஊர்வ‌ல‌த்தின் இடையே புகுந்து கைது செய்த‌தாக‌சொல்ல‌ப்ப‌டுகிற‌து. இவ்விளைஞன் கைது செய்யப்படும்போது அவர் வாய் பேசமுடியாதவர், தயவு செய்து அவரின் கைகளை இறுக்கக்கட்டினால் அவரால் (சைகையால்) பேசமுடியாது என அவரின் நண்பி கூறியபோதும் பொலிஸ் முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறது. அவர் பேசுவதை விளங்கி பொலிசுக்கு தெரிவிக்க தன்னையும் கூட்டிச்செல்க என அவ்விளைஞனின் தோழி கேட்டபோதும் பொலிஸ் மறுக்கிறது. நேற்று அவரின் வழக்கறிஞர் 'இது கிட்டத்தட்ட சாதாரண வாயால் பேசும் ஒருவரை அவரைப் பேசமுடியாது செய்ய duct tape ஒட்டுவதற்கு நிகர்த்த மனித உரிமை மீறல்' எனக் கூறியிருக்கிறார்.

ஊர்வ‌ல‌ம் எங்கே முடியுமென‌ ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ளால் கேட்க‌ப்ப‌ட்ட‌போதும் அது செல்லும் வீதிக‌ளோ, முடியும் இட‌மோ தெளிவாக‌க் கூற‌ப்ப‌டாது, இய‌ன்ற‌வை பாதுகாப்பு வேலிக்க‌ருகில் செல்வ‌து என‌ ஊர்வலத்தை வழி நடத்துபவர்களால் சொல்ல‌ப்ப‌டுகிற‌து. எனினும் பெருந்தொகையான‌ பொலிஸ் பிர‌ச‌ன்ன‌த்தால் வேலியை நெருங்க‌முடியாது, ஊர்வ‌ல‌ம் மீண்டும் தொட‌ங்கிய‌ இட‌த்திற்கு (அலன் பூங்காவிற்கு) வ‌ருகின்ற‌து. வீட‌ற்ற‌வர்களுக்கு (Homeless People) ஆத‌ர‌வு (Solidarity) கொடுக்கும் வ‌கையாக‌ கூடார‌ங்க‌ள் சிலவற்றை அங்கேயே அமைத்து 40ற்கு மேற்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் அவ்விர‌வு அங்கேயே த‌ங்குகின்ற‌ன‌ர்.

( தொடரும்)

ஒற்றைக்கால் புறாவும் புர‌ண்டு ப‌டுக்கும் ஆமைக‌ளும்

Monday, June 28, 2010

-மெலிஞ்சிமுத்த‌னின் 'வேருல‌கு' நாவ‌லை முன்வைத்து-

1.
ஈழ‌த்த‌மிழ‌ரின் வாழ்வென்ப‌து ஈழ‌த்திலும் புல‌த்திலுமென‌ ப‌ல்வேறு சிக்க‌ல்க‌ளைத் தின‌மும் ச‌ந்திப்ப‌து. நான்கு புற‌மும் க‌ட‌ல் சூழ்ந்த‌ தீவொன்றில் இருந்து வ‌லுக்க‌ட்டாய‌மாய் புல‌ம்பெய‌ர்க்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளின் க‌தைக‌ளில் அநேக‌ம் க‌ண்ணீரின் உவ‌ப்பு உடைய‌ன‌வை. புதிய‌ வாழ்வு தேடிப்புற‌ப்ப‌ட்ட‌ ப‌ல‌ ஈழ‌த்த‌மிழ‌ரின் உயிர்க‌ள் க‌ட‌லிலும்,ப‌னியிலும் காணிக்கையாக‌க் கொடுக்க‌ப்பட்டு நினைவுக‌ள் ம‌ட்டும் மித‌ந்துகொண்டிருக்கின்ற‌ன‌. இவ்வாறு புதிய‌ வாழ்வு தேடி அக‌தியாய்ப் புல‌ம்பெய‌ரும் ஒருவ‌ன் விமான‌நிலைய‌த்தில் பிடிப‌ட்டு நிர்வாண‌மாக்க‌ப்ப‌ட்டு விசாரிக்க‌ப்ப‌டுவ‌தில் இருந்து தொட‌ங்குகின்ற‌து மெலிஞ்சி முத்த‌னின் 'வேருல‌கு' குறுநாவ‌ல். க‌தைசொல்லியான‌ சீல‌ன் நிர்வாணியாக்க‌ப்ப‌ட்டு அடையாள‌த்துக்காய் புகைப்ப‌ட‌மும், கைரேகையும் பொலிஸால் எடுக்க‌ப்ப‌டுகின்ற‌து. த‌ன்னைப் புற‌வுல‌காய் அடையாள‌ங்காண‌ முய‌ற்சிக்கும் உங்க‌ளால் த‌ன் த‌னித்துவ‌மான‌ க‌ன‌வுகளுக்குள் நுழைய‌முடியுமா என‌ சீல‌ன் அவ‌ர்க‌ளை ம‌ன‌துக்குள் கேலி செய்கின்றான்.

சீல‌ன் ஈழ‌த்திலிருந்து பிரான்சிற்கு புல‌ம்பெய‌ர்ந்த‌ ஓர் அக‌தி. ஊரில் இருக்கும்போது ப‌ழ‌க்க‌மான‌ ப‌வானி சீல‌னுக்கு த‌ங்கிமிட‌த்தை வ‌ச‌தி செய்து கொடுக்கிறார். அவ்வீட்டில் வ‌சிக்கும் ப‌வானி உட்ப‌ட‌ அனைவ‌ரும் குறைந்த‌ வ‌ருமான‌த்தில் த‌ங்க‌ள் வாழ்வை ந‌க‌ர்த்திச் செல்ப‌வ‌ர்க‌ள். மேலும் ஊரிலிருக்கும் த‌ம் குடும்ப‌ம்/உற‌வுக‌ளுக்கு ப‌ண‌மும் அனுப்ப‌வேண்டிய‌வ‌ர்க‌ள். மிகுந்த‌ அவ‌ஸ்தைக‌ளுட‌ன் இவ‌ர்க‌ளுட‌ன் கால‌ம் க‌ழிக்கும் சீல‌னுக்கு இர‌ண்டாம் முறையும் அக‌தி அந்த‌ஸ்து பிரான்சில் நிராக‌ரிக்க‌ப்ப‌ட பிரான்ஸிலிருந்து வேறு நாடுக்கு க‌ள்ள‌மாக‌ வெளிக்கிட‌த் த‌யாராகிறார். ப‌வானி சீல‌னைத் திரும‌ண‌ம் செய்யும் த‌ன் விருப்பைத் தெரிவிக்கிறார். தான் காத‌லியாக‌ ப‌வானியை நினைத்துப் ப‌ழக‌வில்லையென‌க் கூறி சீல‌ன் ம‌றுத்தாலும், இத‌ற்கு இன்னொரு முக்கிய‌ கார‌ண‌ம் உண்டு. அது சாதி. ப‌வானி, ஊரில் ப‌னையேறும் தொழிலைச் செய்யும் பிறேம‌னின் ம‌க‌ள்.

ஸ்பெயினிலிருந்து இன்னொரு நாட்டுக்குச் செல்லும் ப‌ய‌ண‌ம் இடைந‌டுவில் பிடிப‌ட்டுத் த‌டைப‌ட‌, வெறுமையோடு சிறைக்குள்ளிருக்கும் சீல‌னுக்குள் ஊர்ப‌ற்றிய‌ நினைவுக‌ள் ஊற‌த்தொட‌ங்குகின்ற‌ன‌. ஸ்பெயினிலிருந்து க‌தை க‌ட‌ல்க‌ளையும் க‌ண்ட‌ங்க‌ளையும் தாண்டி அரிப்புத்துறையில் போய் இற‌ங்கி ந‌க‌ர‌த் தொட‌ங்குகின்ற‌து. அருவியாறு பாயும் அரிப்புத்துறையில் போரும் வ‌றுமையும் மாறி மாறித் த‌ம்மை விஞ்சுகின்ற‌ வாழ்க்கை சீல‌னுக்கு. பெரிய‌ம்மா குடும்ப‌த்தோடு அதிக‌ கால‌ம் க‌ழிக்கும் சீல‌னுக்கு அருகிலிருக்கும் க‌ண்ம‌ணி மாமி குடும்ப‌த்துட‌ன் நெருங்கிப் ப‌ழ‌கும் ச‌ந்த‌ர்ப்ப‌ம் வாய்க்கிற‌து. க‌ண்மணி மாமியின் குடும்ப‌த்தை முன்னிலைப்ப‌டுத்திய‌ப‌டி 'வேருல‌கு'  ப‌ல்வேறு திசைக‌ளில் ப‌ய‌ணிக்க‌த் தொட‌ங்குகின்ற‌து. க‌ண்ம‌ணி மாமி, மாமா, அவ‌ர்க‌ளின் பிள்ளைக‌ளான‌ ச‌சிய‌க்கா, சின்ன‌ன், அத்தான்பிள்ள‌ ம‌ற்றும் ‍க‌ண்ம‌ணி மாமி வீட்டில் வேலை செய்கின்ற‌‍ உலுந்தையின் பாத்திர‌மும் அதிக‌ம் விவ‌ரிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. இவ‌ர்க‌ளோடு சேமாலைய‌ண்ண‌ன், ச‌ந்தியாக்கிழ‌வ‌ன், பொன்னுக்கிழ‌வி போன்றோரும் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டுகின்றார்க‌ள். இம்மூவ‌ரும் சீல‌னின் வாழ்வில் ஆழ‌மான‌ பாதிப்பை ஏதோவொரு வ‌கையில் ஏற்ப‌டுத்துப‌வ‌ர்க‌ள்.

க‌ண்ம‌ணி மாமி குளிப்ப‌தை இர‌க‌சிய‌மாக‌ இர‌சிக்கும் உலுந்தை, வ‌ள‌ர்ந்த‌ த‌ன் ம‌க‌ளான‌ ச‌சிய‌க்காவுட‌ன் ஒரே அறையில் ப‌டுத்து கைக‌ளால் அளைகின்ற‌ (க‌ண்ம‌ணி)மாமா, ச‌சிய‌க்காவின் நெருப்புச் சுழியேற்றும் மார்புக‌ளை நினைத்துத் த‌ன் காற்ச‌ட்டைக‌ளை ந‌னைக்கும் க‌தைசொல்லியான‌ சீல‌ன் என‌ எல்லோருக்குள்ளும் காம‌ம் ப‌ல்வேறு புள்ளிக‌ளில் குறுக்கிடுகின்ற‌ன‌. க‌ண்ம‌ணி மாமியின் இருளான‌ அறையினுள் ஆமைக‌ள் புர‌ள்வ‌தைப் போல‌ இவ‌ர்க‌ள் எல்லோருக்குள்ளும் காமம் ஒரு இர‌க‌சிய‌ ந‌தியாய் ந‌க‌ர்ந்த‌ப‌டியிருக்கின்ற‌து. ஆனால் 'வேருல‌கு' காம‌த்தை ம‌ட்டும் உரையாடும் புனைவ‌ல்ல‌. போர் சார்ந்த‌ வாழ்க்கையின் உள்ளும் காம‌ம் த‌ன்ன‌ளவிள் க‌சிந்த‌ப‌டியிருக்கும் என்ப‌தைப் ப‌டைப்பாளி சுட்டிக்காடிவிட்டு புற‌ச்சூழ‌லுக்குள் ந‌க‌ர்ந்துவிடுகின்றார்.

ஈழ‌த்தில் ப‌ல்வேறு இய‌க்க‌ங்க‌ள் வெடித்துக் கிள‌ம்புகின்ற‌ கால‌ம். 'தோழ‌ர்' என‌ த‌ங்க‌ள் இய‌க்க‌த்த‌வ‌ரை அழைத்துக்கொள்ளும் இய‌க்க‌ம் ஒன்றுக்கு க‌ண்ம‌ணி மாமி குடும்ப‌த்தின‌ர் ஆத‌ர‌வு கொடுக்கின்றன‌ர். ந‌ள்ளிர‌வுக‌ளில் க‌ண்ம‌ணி மாமி, வீட்டில் புட்டு அவித்துக் கொட்ட‌க் கொட்ட‌, சுட‌ச்சுட‌ எழுத‌ப்ப‌டும் சுவ‌ரோட்டிக‌ள் ப‌க‌ல் வேளைக‌ளில் உண‌ர்ச்சிக‌ர‌மாய் போராட்ட‌த்திற்கு சுவ‌ர்க‌ளில் அழைப்பு விடுகின்ற‌ன‌. அவ்வாறான‌ கால‌ப்ப‌குதியில் இய‌க்க‌த்தில் இருக்கின்ற‌ சேமாலைய‌ண்ண‌னுக்கும் ச‌சிய‌க்காவிற்கும் காத‌ல் அரும்புகின்ற‌து. அவ‌ர்க‌ள் திரும‌ண‌ம் செய்கின்ற‌ நாளில் இராணுவ‌ம் ஊர்புக‌ ச‌ன‌ங்க‌ள் அக‌தியாகின்ற‌ன‌ர். இடையில் க‌ண்ம‌ணி மாமி வீட்டில் வேலை செய்யும் உலுந்தை (க‌ண்ம‌ணி)மாமாவிற்கு க‌த்தியால் குத்திவிட்டு ஓடிப்போய்விடுகின்றார். இவ்வாறு மாமா குத்த‌ப்ப‌ட்ட‌த‌ற்கு மாமாவிற்கு உலுந்தையின் அக்காவோடு இருந்த‌ இர‌க‌சிய‌ உற‌வென்று ஊரில் பேசிக்கொள்கின்றார்க‌ள். ஆனால் எவ‌ருக்குத் தெரியாத‌ -சீல‌னுக்கு ம‌ட்டுந்தெரிந்த‌‍- மாமியின் உட்பாவாடையை க‌ள‌வாக‌ எடுத்து இர‌க‌சிய‌மாய் இர‌சிக்கின்ற‌ உலுந்தையின் இன்னொரு க‌தையும் வேருல‌கில் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து.

உலுந்தையின் அக்காவோடு த‌ன் க‌ண‌வ‌னுக்கு இருந்த‌ தொட‌ர்புப‌ற்றிப் பேசும் ஊர் வாயை மூட‌ முடியாத‌ க‌ண்ம‌ணி மாமி சாவ‌த‌ற்குக் கிண‌ற்றுக்குள் குதிக்கிறார். இதை முத‌லில் க‌ண்டாலும், அவ‌ரை விட‌ சாதியின் ப‌டிநிலையில் குறைந்திருக்கின்ற‌ பிறேம‌னால் கிண‌ற்றுக்குள் குதித்து க‌ண்ம‌ணி மாமியை விட‌ காப்பாற்ற‌ முடியாதிருக்கின்ற‌து. சேமாலைய‌ண்ண‌ன் வ‌ரும்வ‌ரை காத்திருக்க‌வேண்டியிருக்கிற‌து. 'எங்கிருந்தோ எழும் மிடுக்கும' என்று ம‌ஹாக‌வி பாடிய‌தைப் போல‌ இழ‌ப்புக்க‌ள், இட‌ம்பெய‌ர்த‌ல்க‌ள் போன்ற‌ துய‌ர்க‌ளுக்கும் அப்பால், உயிர்ப்புட‌ன் அரிப்புத்துறைச் ச‌ன‌ம் தொழில் செய்ய‌ க‌ட‌லுக்குப் போக‌த்தொட‌ங்குகின்ற‌ன‌ர். ஒரு நாள் க‌ட‌லுக்குள் தொழில் செய்ய‌ப் புற‌ப்ப‌ட்ட‌ ப‌ட‌குக‌ள் இராணுவ‌த்தால் கொல்ல‌ப்ப‌ட்ட‌ உட‌ல‌ங்க‌ளோடு க‌ரை திரும்புகின்ற‌ன‌. அன்று ஊரில் 12 பேர் வித‌வையாயிற்றார்க‌ளென‌க் க‌தைசொல்லி கூறுகின்றார். அதில் போன‌ சேமாலைய‌ண்ணன் உட்ப‌ட ஒருசில‌ரின் உட‌ல்க‌ள் த‌விர‌ மிகுதி உட‌ல்க‌ள் அடையாள‌ங் காண‌ப்ப‌டுகின்ற‌ன‌. சேமாலைய‌ன்ண‌ன் உயிருட‌ன் வ‌ருவார் என்று ச‌சிய‌க்காவும், க‌ண்ம‌ணி மாமியும் ந‌ம்புகின்றன‌ர். க‌ர்ப்ப‌ணியாயிருக்கும் ச‌சிய‌க்காவிற்கும் குழ‌ந்தை இற‌ந்து பிற‌க்கின்ற‌து.

இவ்வாறான‌ கொடுங்க‌ன‌வுக‌ள் சூழ‌ந்த‌ கால‌த்தில், மாமாவைக் குத்திவிட்ட‌ உலுந்தையை சீல‌ன் ஓரிட‌த்தில் ச‌ந்திக்கின்றார். த‌ன்னோடு கூட‌வே வ‌ரும்ப‌டி அழைக்கின்ற‌ உலுந்தையோடு போகின்ற‌ சீல‌ன், த‌ண்ணீர் அள்ள‌த் த‌னித்து வ‌ருகின்ற‌ ஒரு இராணுவ‌த்தின் த‌லையை உலுந்தை வெட்டுவ‌தை நேர‌டிச் சாட்சியாக‌ப் பார்க்கின்றார். எநத‌ அற‌த்தைச் ச‌ம‌ன்பாடாக‌ வைத்தும் கொலையை நியாய‌ம் செய்ய‌முடியாது ந‌ம்புகின்ற‌ சீல‌னுக்கு உலுந்தையின் இச்செய‌ல் மிகுந்த‌ அதிர்ச்சியைத் த‌ருகின்ற‌து.

பூச்சியாடும் தானுமாய்த் திரிகின்ற‌ பொன்னுக்கிழ‌வி ப‌ல‌ தொன்ம‌க் க‌தைக‌ளை சீல‌னுக்குக் கூறுகின்றார். அதிலொரு க‌தை அல்லி ராணியின் க‌தை. அரிப்புத்துறையில் குறுநில‌ அர‌ச‌ர்க‌ளாய் இருந்த‌ ப‌ர‌ம்ப‌ரையில் வ‌ந்த‌ அல்லியையும் அவ‌ள‌து க‌ண‌வ‌னையும், அல்லியில் ஆசை வைக்கும் ஓர் அதிகாரி ந‌ய‌வ‌ஞ்ச‌க‌மாக‌க் கொல்கின்றான். ஆனால் அல்லிக‌ளுக்கு ம‌ர‌ணம் நிக‌ழ்வ‌தேயில்லை; துரோகிக‌ளை அழிப்ப‌த‌ற்காக‌ கால‌ந்தோறும் அல்லி ராணி உயிர்த்த‌ப‌டியேயிருக்கிறாள் என்கிறார் பொன்னுக்கிழ‌வி. த‌ன‌க்குள்ளே அதிக‌ம் பேசுகின்ற‌ ச‌ந்தியாக் கிழ‌வ‌னை, ஊர் ம‌ன‌ம்பிற‌ழ்ந்த‌வ‌ர் என்று கூறிக்கொண்டாலும் சீல‌னுக்கு அவ‌ரே எதையும் அதிக‌ம் அறிந்த‌வ‌ரென்று அவ‌ருட‌ன் நெருங்கிப்ப‌ழ‌குகிறான்.

ஒருநாள் ச‌ந்தியாக் கிழ‌வ‌ன் காணாம‌ற்போகின்றார். ச‌ன‌ம் முற்றுமுழுதாய் ஊர் விட்டு அக‌தியாக‌ இட‌ம்பெய‌ர்கிற‌து. பொன்னுக்கிழ‌வி என்ன‌ நிக‌ழ்ந்தாலும் ஊரைவிட்டு நீங்குவ‌தில்லையென‌ ச‌ந்தியாக் கிழ‌வ‌னின் மீள்வ‌ருகைக்காய் ஊரிலேயே த‌ங்கிவிடுகின்றார். ஆமைக‌ள் மீண்டும் புர‌ண்டு புர‌ண்டு இருட்டு அறைக‌ளில் ப‌டுக்கின்ற‌ன‌. பூனைக‌ளும் எவ்வ‌ள‌வு த‌டுத்தும் குட்டிக‌ளைப் போடுவ‌தை வீடுக‌ளில் நிறுத்துவ‌தாய் இல்லை. ச‌சிய‌க்கா அக‌தி முகாமில் இருக்கின்ற‌ செல்வனோடு எங்கையோ வ‌ன்னிப்ப‌க்க‌மாய் ஓடிப்போய்விடுகின்றார்.

த‌ற்செய‌லாய் ஒருநாள் சீல‌ன் சேமாலைய‌ண்ண‌னை உயிருட‌ன் காண்கிறார். அவ‌ர் த‌ன்னை மீன்பிடிக்க‌ க‌ட‌லுக்குள் போன‌போது கைது செய்த‌ இராணுவ‌ம் த‌ள்ளாடி முகாமிலும் பின்ன‌ர் வெலிக்க‌டையிலும் வைத்திருந்து விடுவித்த‌து என்கின்றார். வ‌றுமையின் நிமித்தம் கூலித்தொழிலாளியாக‌ ப‌ல‌ இட‌ங்க‌ளில் வேலை செய்து 'முட்டாள்' என‌ப்ப‌ட்ட‌ம் வாங்கி த‌ற்போது இராணுவ‌த்தோடு சேர்ந்திய‌ங்கும் இய‌க்க‌ம் ஒன்றோடு ச‌ம்ப‌ள‌த்திற்காய் சேர்ந்திருக்கின்றேன் என்கிறார். இவை எல்லாவ‌ற்றுக்கும் மேலான சோக‌மாய், சேமாலைய‌ண்ணனை இராணுவ‌ம் பிடிப‌டமுன்ன‌ர் சேர்ந்து இய‌ங்கிய‌ இய‌க்க‌ம், சேமாலைய‌ண்ணன் விடுத‌லையாகி வ‌ந்த‌போது க‌ரைந்து காணாம‌ற்போய்விட்ட‌து. 'ஈழ‌ விடுத‌லைப் போராட்ட‌ம் என்ற நீரோட்ட‌த்தில் தெறித்து வெறும் குமிழிக‌ளாய் ச‌ல‌ன‌ற்றுப் போன‌ எத்த‌னையோ துளிக‌ளில் ஒருதுளிதான்' சேமாலைய‌ண்ண‌ன் என்று நினைத்து க‌வ‌லைப்ப‌டுகிறார் சீல‌ன்.

ஒருநாள் அல்லி ராணி அருவியாற்றில் நீராடுவ‌தை சீல‌ன் காண்கிறார். நெருங்கிப் போய்ப்பார்க்கும்போது அது -க‌ண்ம‌ணி மாமியின் ம‌க‌ளான‌‍- சின்ன‌ன் என்ப‌து தெரிகின்ற‌து. அல்லிக‌ள் மீண்டும் தோன்றுவ‌து துரோகிக‌ளைப் பூண்டோடு அழிக்க‌வே என்ற‌ பொன்னுக்கிழ‌வியின் தொன்ம‌க் க‌தை க‌ட‌ந்து போகின்ற‌து. சின்ன‌ன் ஒருநாள் சேமாலைய‌ண்ண‌னை ஏழு துண்டாய் வெட்டிவிட்டு ந‌தியில் இற‌ங்கி இர‌த்த‌க்க‌றையைக் க‌ழுவிக்கொள்கிறார்.

2.
வேருல‌கின்' க‌தாபாத்திர‌ங்க‌ள் குறித்தும் அவை ந‌க‌ரும் திசை குறித்தும் ஒரு எளிமையான‌ வ‌ரைபட‌த்தை இவ்வாறு வ‌ழ‌ங்கினாலும் இக்குறுநாவ‌லில் வ‌ரும் ப‌ல‌ பாத்திர‌ங்க‌ள் த‌ம்ம‌ள‌வில் த‌னியே விரிந்து ப‌ல‌ க‌தைக‌ளைக் கூற‌க்கூடிய‌ன‌. முக்கிய‌மாய் சேமாலைய‌ண்ண‌ன், உலுந்தை, ச‌சிய‌க்கா த‌ங்க‌ளின் க‌தையைத் த‌ம‌த‌ள‌வில் சொல்ல‌க்கூடிய‌ இடைவெளிக‌ளை ப‌டைப்பாளி த‌ந்திருக்கின்றார். அதிக‌மான‌ உரையாட‌ல்க‌ளாலும்,எளிமையான‌ மொழியிலும் எழுத‌ப்ப‌டும் பெரும்பான்மையான‌ ஈழ‌ப்ப‌டைப்புக்க‌ளிலிருந்து வில‌கி நிறைய‌ப் ப‌டிம‌ங்க‌ளோடும், மிக‌ இறுக்க‌மான‌ உரைந‌டையோடும் 'வேருல‌கு' த‌னித்துவ‌மாய் மிளிர்கின்ற‌து. 'காடு ப‌ச்சை மேக‌ங்க‌ளாய் அவ‌தார‌மெடுத்திருந்த‌ அவ்விட‌த்தில் வான‌ம் இற‌ங்கித் த‌ன் கூர‌ல‌கால் ந‌தி நீர் அருந்திக்கொண்டிருந்த‌து' (ப‌26), 'க‌ட‌ல் ப‌ல‌ கோண‌ல்மாண‌ல்க‌ளின் அழ‌கு. காம‌த்தையும் கோப‌த்தையும் ஒருங்கே சேர்த்த‌ திமிற‌லின் வ‌டிவ‌ம். க‌ட‌ற்க‌ரை முழுவ‌தும் கேட்டுக்கொண்டிருக்கின்ற‌து ஒரு ப‌டுக்கைய‌றையின் முன‌க‌ற்ச‌த்த‌ம்' (ப‌25) 'பொறுக்க‌ப்ப‌டாத‌ எருக்க‌ட்டிக‌ளோடு பொக்கிளிப்பான் வ‌ந்த‌தொரு முக‌த்தைப் போல‌க் கிட‌ந்த‌து ப‌ன‌ங்கூட‌ல்' (ப‌58) என்ப‌வை ஒரு சில‌ உதார‌ண‌ங்க‌ள்.

ஈழ‌த்தின் உள்ளே போரினால் ந‌டைபெறும் இட‌ம்பெய‌ர்வுக‌ள் ப‌ல்வ‌கைப்ப‌ட்ட‌து. ஒர‌ள‌வு வ‌சதியான‌வ‌ர்க‌ள் இட‌ம்பெய‌ர்ந்து த‌ங்க‌ள் உற‌வின‌ர் வீடுக‌ளிலோ வேறு வீடுக‌ளிலோ த‌ங்கிவிடுவ‌து ஒருவ‌கை. இன்னொரு வ‌கையின‌ருக்கு இவ்வாறான‌ வ‌ச‌திக‌ள் கிடைப்ப‌தில்லை. ஆக‌வே அவ‌ர்க‌ள் இட‌ம்பெய‌ரும்போது யாராலும் க‌வ‌னிக்க‌ப்ப‌டாத‌ கைவிட‌ப்ப‌ட்ட‌ நில‌ப்ப‌ர‌ப்புக்க‌ளில் குடில்க‌ளை அமைத்து முகாங்க‌ளை நிறுவிக்கொள்வார்க‌ள். இவ்வாறான‌ அக‌தி முகாங்க‌ளில் அடிப்ப‌டை வ‌ச‌திக‌ள் கூட‌ இருப்ப‌தில்லை. இய‌ற்கைக்க‌ட‌னிற்காய் ப‌ற்றைக‌ளைத் தேட‌வேண்டியிருக்கும். ம‌ழை, வெள்ள‌ம் போன்ற‌வை நிக‌ழும்போது இன்னொருவ‌கையான‌ சிர‌ம‌ங்க‌ளை எதிர்கொள்ள‌ வேண்டியிருக்கும். இதுவ‌ரை எழுத்தில் அவ்வ‌ள‌வு ப‌திய‌ப்ப‌டாத‌ இந்த‌ இர‌ண்டாம் வ‌கையான‌ அக‌திமுகாம் வாழ்வு 'வேருல‌கில்' மிக‌ அழுத்த‌மாக‌ப் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. 'வ‌றுமை உறிஞ்சிய‌ செரிக்காத‌ வ‌யிறுக‌ளும், க‌ன்ன‌ங்க‌ள் ஒட்டி முன்னோக்கி நிற்கும் ப‌ற்க‌ளும், குழி விழுந்த‌ க‌ண்க‌ளும், அவிந்த‌ வாய்க‌ளும், ந‌ர‌ம்பு புடைத்திருக்கும் நெற்றிப் ப‌ள்ள‌ங்க‌ளும்' இவ்வாறான‌ அக‌தி முகாம் வாழ்க்கைக்குள் இருந்த‌வ‌ர்க‌ளுக்கு 'கொடையாக‌' அளிக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து.

இப்புனைவில் போராட்ட‌த்தில் உண்மையாய் த‌ங்க‌ளை அர்ப்ப‌ணித்த‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் விருப்பு வெறுப்பின்றி இய‌ல்பாக‌ப் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள். கால‌மும் வ‌றுமையும் திசை மாறிப்போக‌ சேமாலைய‌ண்ண‌னைத் துர‌த்தினாலும், அவ‌ர் ஒரு வேற்றாளாக‌ இக்குறுநாவ‌லில் சித்த‌ரிக்க‌ப்ப‌டாது முக்கிய‌மான‌து. 'துரோகி' என‌ப்பெய‌ரிட்டு ஒழித்துக்க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ அநேக‌ரிலும், இர‌த்த‌மும் ச‌தையுமான‌ த‌மிழ்ம‌க்க‌ளின் விடுத‌லை சார்ந்த‌ க‌ன‌வுக‌ளே இருந்திருக்கின்ற‌ன‌ என்ப‌தை சேமாலைய‌ண்ண‌ன் பாத்திர‌ம் காட்டுகின்ற‌து. சேமாலைய‌ண்ண‌ன போல‌ கால‌த்தின் சுழியில் சிக்குப்ப‌ட்டு சின்னாபின்னாமாகிப் போன‌வ‌ர்க‌ள்தான் எத்த‌னை பேர்? அதேபோல‌ எதிரிக‌ளாக‌ க‌ட்ட‌மைக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் மீது நாம் நிக‌ழ்த்திய‌ மிக‌க்கொடூரமான‌ வ‌ன்முறையின் ப‌டிம‌ந்தான் உலுந்தையின் பாத்திர‌ம். த‌னியே வ‌ரும் இராணுவ‌த்தின் க‌ழுத்தை வெட்டி த‌லையை கிணற்று வாளிக்குள் வைத்து இர‌த்த‌ம் தெறிக்க‌க் கொண்டு ஓடுகையில் நாம் இழந்துபோயிருந்த‌ ம‌னிதாபிமான‌ம் நினைவூட்ட‌ப்ப‌டுகின்ற‌து.

நான்கு கால்க‌ளின் க‌தையைச் சொல்ல‌ப்போகின்றேன் என்று இக்குறுநாவ‌லின் இடையில் க‌தைசொல்லி சொல்வ‌து இந்த‌ நான்கு காலிலிருந்து நீளும் ஆயிர‌க்கான‌ கால்க‌ளின் துய‌ரத்தைத்தான்; ஒற்றைக் காலிழ‌ந்த‌ புறா, ஒரு காலை மிதிவெடிக்கு ப‌லி கொடுத்த‌ ஒரு கூத்துக்க‌லைஞ‌ன் ம‌ற்றும் இராணுவ‌த்தின் ப‌குதியிற்குள் வ‌ந்து சுட‌ப்ப‌ட்டு ம‌ர‌ணித்த‌ ஒரு போராளியின் கால்க‌ள். இந்த‌க் கால்க‌ள் த‌ம‌து க‌தையை ம‌ட்டும் ந‌ம‌க்குக் கூறுவ‌ன அல்ல‌, அத‌ற்குப் பின்னால் நாம் த‌வ‌ற‌விட்ட‌ ப‌ல‌ கால்க‌ளின் க‌தையையும் அக்க‌றையுட‌ன் க‌வ‌னிக்க‌ச் சொல்கின்ற‌ன‌.

ஈழ‌த்தின் நிக‌ழ்கால‌க் க‌தையைச் சொல்ல வ‌ரும் ஒருவ‌ருக்கு மிகுந்த‌ சிர‌ம‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌. ஏதோவொரு புள்ளியில் ப‌டைப்பாளி ஒரு சார்பை எடுக்க‌வேண்டிய‌ நிலையை வ‌ந்த‌டைய‌வே செய்வ‌ர். ஆனால் போரை வெறுக்கின்ற‌, கொலைக‌ளை எந்த‌ அற‌த்தின் பொருட்டும் நியாய‌ப்ப‌டுத்த‌ விரும்பாத‌ ஒரு ப‌டைப்பாளி தான் சொல்ல‌வேண்டிய‌ க‌தையை ம‌ட்டும் கூறிவிட்டு எவ‌ரின் மீதும் தீர்ப்பு எழுதாது வில‌கிவிடுவார். அந்த‌வ‌கையில் மெலிஞ்சி முத்த‌னின் 'வேருல‌கு' இருப்ப‌து குறிப்பிட‌வேண்டிய‌து. 'ஒற்றைக் காலிழ‌ந்த‌ புறாவே துய‌ர‌த்துட‌ன் அலையாதே, உன‌க்குப் ப‌ற‌ப்ப‌த‌ற்கு சிற‌குக‌ள் இருக்கின்ற‌ன‌ என்ப‌தையும் ம‌ற‌ந்துவிடாதே' என்று பெரும் இழ‌ப்புக்க‌ளின் பின்னால் வ‌ரும் விர‌க்தியிற்கு அப்பாலும் வாழ்வின் மீது ந‌ம்பிக்கை கொள்ள‌ச் சொல்கிற‌து இப்புனைவு. இதனால்தான் அண்மைக்கால‌த்தில் வெளிவ‌ந்த‌ ப‌டைப்புக்க‌ளில் க‌வனிக்க‌த்த‌க்க‌ ப‌டைப்பாக‌வும் ப‌ல்வேறு வாசிப்புக்க‌ளைச் செய்ய‌க்கூடிய‌ புனைவாக‌வும் வேருல‌கு தெரிகின்ற‌து.

(தீராந‌தி - ஜீன்,2010 இத‌ழில் இத‌ன் சுருக்கிய‌ வ‌டிவ‌ம் பிர‌சுர‌மான‌து)

"நான் உயிர்வாழ்வ‌த‌ற்காய் ஆசீர்வதிக்க‌ப்ப‌ட்டிருக்கின்றேன்" - கணேஸ்வ‌ரி ச‌ந்தான‌ம்

Wednesday, May 26, 2010

ந‌ன்றி: IRIN
த‌மிழாக்க‌ம்: டிசே த‌மிழ‌ன்

க‌ணேஸ்வ‌ரி ச‌ந்தான‌ம் (31),சுத‌ந்திர‌ த‌மிழ் நாடு அமைப்ப‌த‌ற்காய் 25 வ‌ருட‌ங்க‌ளுக்கு மேலாய் போராடி,அண்மையில் தோற்க‌டிக்க‌ப்ப‌ட்ட‌ த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ளில் இணைந்திருந்த‌ ஆயிர‌க்க‌ண‌க்கான‌ பெண்க‌ளில் ஒருவ‌ர்.

-ப‌ல‌ நாடுக‌ளால் தீவிர‌வாத‌ அமைப்பென‌ அழைக்க‌ப்ப‌ட்ட‌‍- இய‌க்க‌த்தில் இணைந்த‌ இவ‌ர், ச‌மாதான‌ கால‌த்தில் இய‌க்க‌த்திலிருந்து வில‌கி, ச‌க‌ போராளி ஒருவ‌ரைத் திரும‌ண‌ஞ் செய்து ஒரு குழ‌ந்தையையும் -மீண்டும் இய‌க்க‌த்தில் 20006ல் அழுத்த‌த்தால் இணையும்போது- பெற்றிருந்தார். இன்று ஆயிர‌க்க‌ண‌க்கான‌வ‌ர்க‌ள் மீண்டும் த‌ங்க‌ள் வீடுக‌ளுக்குத் திரும்புவ‌தைப் போல‌, தானும் ஒரு ந‌ல்ல‌தொரு எதிர்கால‌த்தை க‌ட்டிய‌மைக்க‌ முடியுமென‌ இவ‌ர் ந‌ம்புகிறார்.

'நான் 10 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் த‌மிழ் ம‌க்க‌ளின் விடுத‌லைக்கான‌ போருக்காய் புலிக‌ளிட‌ம் சேர்ந்தேன் என‌து பெற்றோர் என‌து முடிவு குறித்து அவ்வ‌ள‌வு ச‌ந்தோச‌ம‌டைய‌வில்லை. போரின் கார‌ண‌மாக‌ நான் பாட‌சாலையிலிருந்து வில‌கினேன். ஒரு ப‌ர‌த‌ நாட்டிய‌க்காரியாக‌ வ‌ருவ‌தே என‌து குழ‌ந்தைப் ப‌ருவ‌க் க‌ன‌வாக இருந்த‌து; ஆனால் என‌து க‌ன‌வு ஒருபோதும் நிறைவேறிய‌தில்லை.'

'கிட்ட‌த்த‌ட்ட‌ ப‌த்து வ‌ருட‌த்திற்கு மேலாக‌ இய‌க்க‌த்தில் இருந்த‌பின், 2002ல் ஏற்ப‌ட்ட‌ ச‌மாதான‌க் கால‌த்தில் நான் புலிக‌ளிட‌மிருந்து விலகினேன். புலிக‌ளின் போராளியொருவ‌ரை ம‌ண‌ந்து, ஒரு குழ‌ந்தையையும் பெற்று நாங்க‌ள் ம‌கிழ்ச்சியான‌ த‌ம்ப‌திக‌ளாக‌ இருந்தோம்.

'ஆனால் 2006ல் வாழ்வின் இய‌ல்புநிலை மாறி நான் மீண்டும் இய‌க்க‌த்தில் இணைய‌ அழுத்த‌ம் கொடுக்க‌ப்ப‌ட்டேன். இக்கால‌க‌ட்ட‌த்தில், கிராம‌த்தில் மிக‌க் க‌டுமையான‌ ப‌யிற்சி என‌க்கு ம‌ற்ற‌ப் பெண்க‌ளோடு த‌ர‌ப்ப‌ட்டு, ம‌ற்றைய‌வ‌ர்க‌ளை விட‌ சிற‌ந்த‌தொரு போராளியாக‌ என்னை நான் நிரூபித்துக் காட்டினேன்.'

'அதே நேர‌ம் இது மிக‌வும் க‌டின‌மாக‌ இருந்த‌து எனெனில் நான் என‌து குடும்ப‌ம் ப‌ற்றி மிக‌வும் க‌வ‌லைப்ப‌ட்டேன். இப்போரில் நான் கொல்ல‌ப்ப‌ட்டால் யார் என‌து குடும்ப‌த்தைக் க‌வ‌னிப்பார்க‌ள் என‌ எப்போதும் நான் யோசிப்பேன். போர்க்க‌ள‌த்தில் நான் நிற்கும்போதும்,என‌து குடும்ப‌ம் ப‌ற்றிய‌ நினைவுக‌ளே எப்போதும் என‌து ம‌ன‌தில் இருந்த‌ன‌.இன்னொரு புற‌த்தில் இது நான் தீர்மானித்து தெரிவு செய்யும் ஒன்றாக‌ இருக்க‌வில்லை; நான் தொட‌ர்ச்சியாக‌ ச‌ண்டைபிடித்தேன். க‌ட‌வுளிட‌ம் எனது க‌ண‌வ‌னையும் ம‌க‌னையும் வாழ‌ விடும்ப‌டி நான் பிரார்த்தித்தேன். பின்ன‌ர், என‌து குடும்ப‌மும் நானும் எங்க‌ள் கிராம‌த்திலிருந்து இட‌ம்பெய‌ர்ந்தோம். இன்னொரு ம‌க‌னைப் பிர‌ச‌வித்த நான் இப்போது என‌து க‌ண‌வ‌ரைப் போல‌வே தொழில் எதுவுமின்றி இருக்கின்றேன்.'

'போர் மிக‌வும் கொடூர‌மாயிருந்த‌து, நிறைய‌ காய‌ங்க‌ளும், இழ‌ப்புக்க‌ளும். நான் என‌து பிள்ளைக‌ளை ப‌டிப்பித்து ந‌ல்ல‌ பிள்ளைக‌ளாக்க‌ விரும்புகிறேன். க‌ச‌ப்பான‌ க‌ட‌ந்த‌கால‌த்தை ம‌ற‌ந்துவிட்டும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ம‌ன்னித்துவிட்டும் அமைதியான‌ வாழ்வை நான் (வாழ‌) விரும்புகிறேன்.

'நான் போர்க்க‌ள‌த்தில் ச‌மராடியிருக்கிறேன்,ஆனால் என்னால் எவ்வித‌க் காய‌ங்க‌ளுமின்றி த‌ப்ப‌ முடிந்திருக்கிற‌து, அதேவேளை என‌து ச‌க‌போராளிக‌ள் நிறைய‌ப் பேர் அந்த‌ இட‌த்திலேயே இற‌ந்திருக்கின்றார்க‌ள். இது ஒரு க‌ட‌வுளின் அதிச‌ய‌ம். நான் உயிர்வாழ்வ‌த‌ற்காய் ஆசீர்வ‌திக்க‌ப்ப‌ட்டிருக்கிறேன்.'

மூன்று க‌விதைக‌ள்: சென்ற‌ வ‌ருட‌ நினைவுக‌ளிற்கு...!

Tuesday, May 18, 2010

க‌பால‌ங்க‌ளைக் காவிச்செல்லும் ப‌ற‌வைக‌ள்

ந‌ள்ளிர‌விலழும் குழ‌ந்தைகளை கதகதப்பாக்க
சிமினி விள‌க்குக‌ளை காவிய‌ப‌டி
ப‌ற‌க்கும் சாம்ப‌ல் ப‌ற‌வைக‌ள்
எனது குற்றங்களின் குறுகுறுப்பை
தாங்க‌ முடியாத் துய‌ர‌த்தில்
த‌வ‌றவிடுகின்ற‌ன‌ விள‌க்குக‌ளை

சித‌றிய‌ எண்ணெய்த்துளிக‌ளிலிருந்து
முத்துக்குமாரிலிருந்து முருக‌தாச‌ன்வ‌ரை
எண்ண‌ற்றோர் தீ மூட்டிக்கொள்ள‌
நூற்றாண்டுக‌ளாய் நில‌த்தினுள்
உறைந்துபோயிருந்த‌ போர் அரக்கன்
விழிக‌ள் விரித்து
இன்ன‌மும் உட‌ல‌ங்க‌ள் தாவென்று உக்கிர‌த்துட‌ன்
த‌ன் அக‌ண்ட‌ வாயைப் பிள‌க்கிறான்
வ‌ன்னிப் ப‌துங்குகுழிக‌ளுக்குள்.

அவ்வைக்கு க‌ள்ளோடு தமிழூட்டி
முன்னோர் காலத்தில் ச‌ந்த‌திக‌ளைப் பிர‌ச‌வித்தபடி
காடுகளில் அலைந்த ஆதித்தாயே
குழ‌ந்தைக‌ளின் குருதி குடித்தும்
எவரினதும் தாகம் தீராக்கண்டு
எல்லாப் பூர்வீகப் பிரதிகளும்
தம்மைத் தாமே எரிக்க
எமதெல்லோரினதும் அடையாளமாகிறது மகாவம்சம்

உடலங்கள் புதைந்த சதுப்புநிலத்தில்
இன்னமும் கொய்வதற்கு மிஞ்சியுள்ள
தலைகளுக்காய் காத்திருப்பவர்களின்
கைகளில் 'சமாதானம்' இருக்க
அரசர்களும் அதிகாரங்களும்
கவனிக்கவும் கதைக்கவும்படும் காலத்தில்
நாயொன்று கவ்விக்கொண்டுவந்த
எலுமிச்சை குத்தப்பட்ட வைரவரைப்போல
அநாதரவாயினர் மக்கள்

பறவைகள் காவிச் செல்லும்
சிமினி விளக்குகளுக்காய் குழந்தைகள் காத்திருந்த காலம்போய்
நேற்றுச் சரிந்து வீழ்ந்த உடலுக்கு
கொள்ளியிட எந்தப் பிசாசு நெருப்புக்கொண்டுவருமென்று
காத்திருக்கும் விழிகளின் கோரம் தாங்காது
நான் அனுப்பிக்கொண்டிருக்கின்றேன் எண்ணெய் ஊற்றி
எரியூட்டிய எனது கபாலத்தை.

(Feb 26, 2009)

நனவுகளின் பலிக்காலம்

கறுப்புத்துணியால்
இறுக்கப்பட்ட விழிபிதுங்க
பின்னிரவில் பின்னந்தலையில் 'பொட்டு' வைக்கப்பட்ட
என் 'சவம்' தாங்கிவருகின்றாள் தாய்
அவளிடம் சொல்வதற்கு சில வார்த்தைகளை
அவசரமவசரமாய்த் தயார்ப்படுத்துகின்றீர்கள்
இவனிற்கு ஏதேனும் இயக்கத்தோடு தொடர்பிருந்திருக்கலாம்;
-அல்லது- நாளை ஏதேனும் இயக்கத்தில் இணைந்திரண்டுபேரை
மண்டையில் போடுமொருவனாய் மாறிவிடும் ஆபத்தான கொள்கைகளோடிருந்தவன்
நாக்கு பலவாயிரம் கதைசொல்லிகளை கட்டெறும்புகளாய்ப் பிரசவிக்கிறது.

பிரேதங்கள் உரையாடுவதில்லையெனினும்
நீங்கள் ஊற்றிக்கொண்டிருக்கும் சிவப்புவைனில் மிதக்கும்
ஐஸ்கட்டியிலிருந்தெனது சிதைந்தமூளை கரைவதான நினைப்பில்
விரல்கள் நடுங்கி இதயம் அழுத்தமுறும்
ஒரு குழந்தையைப் புணர்ந்தவனுக்கும் இவ்வாறு பதற்றங்களோடிருப்பவனுக்கும்
வித்தியாசங்கள் அவ்வளவாய் இருப்பதுமில்லை

அம்மாவிற்கு
'தேசியம்' தெரியாது
சர்வதேசியத்தால் எல்லாமே தீர்ந்துவிடுமென்ற 'வரலாற்றுண்மை'யும் அறியாள்
தாடியைத்தாண்டி பெரியாரையும் மார்க்ஸையும் இனம்பிரித்தறியும்
சில்லெடுப்புக்களில் அக்கறையிருந்ததுமில்லை
ஆனால் அவளுக்கு
சுருண்டிருக்கும் குறியாய் பிஸ்ரல் இருப்பதும்
விறைத்த லிங்கமாய் ஏகே-47 விரிந்தும்
மாறிமாறி வதைத்துக்கொல்லும் 'ஆம்பிளைத்தனங்கள்' தெரியும்

என்னுடைய கனவாயிருந்தது;
எல்லாவற்றிலிருந்தும் தப்பியோடுவது
காசு கொஞ்சம் உழைத்து அம்மா உலக்கைபோட்டு அரிசி இடித்தலை
வாடி வதங்குவதை நிறுத்துவது
பனிப்புலத்தில் ஒருத்தியைப் புணர்ந்து
காஃப்காவின் நாயகனைப்போலவென் கடந்தகாலச்சோகங்களைச் சிதைப்பது.

f*** off, you bloody shot gun!
தலையிலடித்து மண்ணை வாரியிறைத்து
தன் ஆடைகள் கிழித்து
என்னைப் புணர்ந்தெனினும் தன் இளையமகனை
திருப்பித்தருவியளா பாவிகளேயெனக் கேட்டுருகும்
அம்மாக்களின் கதறல்கள் நூற்றாண்டுகளாய்த் தொடர்ந்து எதிரொலிப்பவை

அம்மா,
உன் யோனியை இறுக்கிமூடி
குறிகளை மட்டுமில்லை
துவக்குகளையும் உள்நுழைய அனுமதிக்காதே;
எவருமே நெருங்கவியலா
பயங்களற்ற சவமாய்
உனக்குள்ளே கதகதப்பாய்த் துயில விரும்புகின்றேன்.

(Nov 07,2007)

உட‌ல‌ப்ப‌ச்சைய‌ங்க‌ள்

1.
நேற்றைக‌ளின் இர‌வுக‌ளின்
ஒவ்வோர் க‌த‌க‌த‌ப்பான‌ அழைப்பிலும்
ப‌ச்சைய‌ம் ப‌டிந்து உருவான காடுக‌ள்
க‌ழுத்திலொரு வ‌ளைய‌ம் அணிவித்து
கால‌ம் ந‌ம்மை நெருக்கிய‌போது
எல்லா இர‌க‌சிய‌ங்க‌ளையும்
தம்மோடு மூடிக்கொண்டு
துய‌ர‌த்தில் த‌ற்கொலை செய்திருந்த‌ன‌

'எல்லாமும்' இருக்கின்ற‌
யாரும‌ற்ற‌ ப‌னிப்பாலையில்
சுழிய‌த்திலிருந்து தொட‌ங்கும் ப‌திய‌ங்க‌ள்
த‌வ‌றுக‌ளின் துரித‌க‌தியில் ஊரத்தொட‌ங்குகின்ற‌ன‌ புத்த‌க‌ப்பூச்சிக‌ள்
புத்த‌க‌ங்க‌ளும் வேண்டாம் பூனாவும் வேண்டாமென‌
மூர்ககமாகி அனைத்தையும் உதைத்துத்த‌ள்ளிய‌பின்
கொளுத்த‌த்தொட‌ங்கினேன் புத்த‌க‌ம் + பூச்சிக‌ளை.

2.
இப்போது உதிர்ந்துகொண்டிருக்கும்
இலைக‌ளில்
பொழியும் மழை
மீண்டும் கிள‌ர்த்திக்கொண்டிருக்கிற‌து
க‌ன‌வுக‌ளை.

'ந‌ம‌க்கான‌ க‌ன‌வுக‌ள் த‌னித்துவ‌மான‌வை'
நூறிலிருந்து சுழிய‌த்துக்கு ந‌க‌ர்ந்துகொண்டிருந்த‌
விருப்புக்க‌ளின் ச‌துர‌ங்க‌த்திற்குள் நின்றொலித்திருக்கிறேன்
பாம்பு வாலால் சுழ‌ற்றி வீழ்த்திய‌போதும்
ஏணியில் ஏற்றிவிட‌ 'தொலைவிலொரு குர‌ல்' காத்திருந்த‌து

ப‌ச்சைய‌ங்க‌ளில் வ‌ள‌ர்த்த‌
ந‌ம‌க்கான‌ காடு த‌ற்கொலையை நாடிய‌போது
அத‌ன் க‌டைசிப்பொழுது க‌த்தரிப்பூ நிற‌த்திலிருந்த‌து
பிடித்த‌மான‌ க‌ள்ளிச்செடிக‌ளை வ‌ளர்க்க‌க்கூட‌
மூர்க்க‌மாய் ம‌றுத்துத் த‌ரிசான‌து நில‌ம் (அல்ல‌து காடு).

3.
பிற‌ருக்கான‌
ந‌ன்றிக‌ளையும் விருப்புக்க‌ளையும்
ம‌றுத‌லித்து பாவ‌ங்க‌ளின் குறுக்கும‌றுக்குமான‌
முடிவிலி வ‌லைக்குள் வீழ்ந்தா நானா?
ந‌ம‌க்கான‌ க‌ன‌வா?
காடெரிந்த‌ க‌த்தரிப்பூச் சுவாலை
மீண்டும் ஊருலா வ‌ருகையில்
காலையில் த‌ருமொரு முத்த‌மாய்
உன்துயில் க‌லைக்காது 'போய்விட‌' விரும்புகின்றேன்

'எரிப்ப‌தை விட‌ வ‌னாந்த‌ர‌த்தில் புதைப்ப‌தே விருப்ப‌மான‌து'
அன்பே, த‌ய‌வுசெய்து ம‌ற‌ந்துவிடாதே
க‌ன‌வு எண் இருப‌த்தைந்தை.

காடு த‌ன்னை எரித்த‌துபோல‌வ‌ன்றி
அடையாளமின்றிப்போவ‌தை ம‌றுக்கின்றேன்
'இந்த‌க் க‌ன‌வுக‌ள் - ஈர‌லிப்பான‌வை நித்திய‌மான‌வை நிக‌ழ‌க்கூடிய‌வை'

ப‌ஞ்ச‌வ‌ர்ண‌க்கிளியின் வ‌ழிகாட்ட‌லோடு
க‌ன‌வுக‌ளை நிக‌ழ்த்திக்காட்ட‌
வ‌ருமொருவ‌ரின் கால‌டித்த‌ட‌ங்க‌ளுக்காய்
மித‌ந்த‌ப‌டியிருக்க‌ட்டும்
என்னுட‌ல‌ப் ப‌ச்சைய‌ங்க‌ள்.

(2009)

Monday, May 10, 2010

செம்மஞ்சளாய்
இலைகள்
உதிர்ந்துகொண்டிருந்த பருவத்தில்
முன்பொருமுறையும் சென்றிராத
சிறுதீவுக்கு பயணித்திருந்தேன்

ஒரு மதுபானவிடுதியின்
இருட்டுமூலையில்,எனது
கோப்பையை நிறைக்கும்
மதுவினைப்போல்
பரவியிருந்தது வெறுமை

அந்நியமான சூழலில்
தோலின் நிறத்தை
நிராகரித்து
மொட்டவிழ்க்கும் தோழமை
அழகு நிறைந்தது

இப்போது
நமது உதடுகளில்
நுரைத்துத் ததும்புகின்றன
வார்த்தைகளும் மதுவும்.

திடீரென
dance floorன் மையத்தில்
இழுத்துச்சென்று
ஆட்டத்தின்
எந்தவிதியும் அறியாவென்னை
soca நடனம்
இணைந்தாடச்சொல்கின்றாய்

மதுவும் இசையும்
நரம்புகளைத் துளைக்க
தளம்பாதிருப்பவர் அறிவுஜீவிகள்
நான் உன் பிரியத்திற்குரியவன்;
ஆடுகின்றேன்.

வாரமொன்று களிந்து
புறப்படுகையில்
பேரூந்து யன்னலில்
அலைந்து திரிந்த ஒற்றையிலை
காலம் முழுவதற்குமான
நமது பிரிவுத்துயரை
காவிச்செல்கின்றது

இந்த நள்ளிரவில்
நீ சமைத்துப் பரிமாறிய
உன்கலாச்சாரத்து கார உணவும்
soca நடன அசைவுகளும்
ஒரு கடிகாரத்தின் முள்சத்தத்தைவிடவும்
அதிகம் தொந்தரவு செய்கின்றன

நீயும் எழுதக்கூடும்
தென்னை சூழ்ந்த கடற்கரையில்
ஊரின் ஞாபகம் வந்து
விழிகளிரண்டில் ஈரஞ்சுமந்த
ஒரு நாடற்றவனின் குறிப்பினை.

சித்திரை 05/05

நஞ்சு

Saturday, May 08, 2010

thami

குளிரென் நெஞ்சை அமுக்கவெடியாய் அழுத்தியபோது
இலையுதிர்காலத்தின் கடைசிச்சாட்சியென
பறந்துசெல்லும் அவனைக் கண்டேன்
விபத்தில் இல்லாமற்போனவன் தீப்பிடிக்கும் காயங்களுடன்
துடிப்படங்காது அலறும் தன்செவ்விதயத்தை
பனிக்குள் பத்திரப்படுத்திக் கையளிக்க
மாயன்காலத்தவர்கள்
போரினை நிறுத்த
உயிருள்ளவர்களைப் பலியிட்டார்களெனும் குறிப்புகள்
குருதி நரம்புகளெங்கினும் ஓடுகின்றன

காளான்களாய் குண்டுகள் முளைக்கும்
தேசத்தின் செம்மண் தெருக்களினொன்றில் பதியஞ்செய்கையில்
தொலைந்துபோனவர்களின் நினைப்பொழிந்து
போர்பற்றிய பயங்களிலிருந்து விடுபடலாமென்று
தீயையொரு நாயைப்போல வருடியபடி கூறுகின்றான் தோழன்

குருதி நிறத்திலிருந்து நீலம்பாரிக்கும் இதயத்தைக்காவியபடி
இரண்டு கடல்களும் மூன்று கண்டங்களும் தாண்டி
சிறுதீவொன்றில் புதைக்கும்போது
பூமிபிளந்து இருதேசங்கள் பிரிந்தன

இப்போது
மழைக்கால ஈசல்களைப்போல
பல்லாயிரம் இதயங்கள்
மாயன்காலத்து போர்க்காலக்குறிப்புக்கள் களைந்து
மீண்டும் மனிதவுருக்கொள்கின்றன
தமிழும் சிங்களமும் பேசி

இரவுகளை கோரமாய் விழுங்கும்
பனியரசனின் தீயுமிழும் ட்ராகனை
கோடையில் சூரியன் விழுங்கியதுபோல்
நஞ்சூட்டப்பட்ட என்னுடலும் வார்த்தைகளும்
பொறி வைத்துக்காத்திருக்கின்றன
போர் அரக்கனுக்காய்.




(Jan 30, 2007)
Photo: Thami (Eelam)