கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

தேர்தல் 2011- மேதினம்: தெருக்களில் 'வாக்கு'

Tuesday, April 26, 2011

-6th Annual May Day of Action for Status for All-

தமிழில்: டிசே தமிழன்

அவ‌ர்க‌ளுக்குத் தேவை 'மிக‌ இன‌த்துவ‌ வாக்கு', ஆனால் அவ‌ர்க‌ளுக்கு குடியேறிக‌ள் தேவையில்லை.
வ‌ரும் பாராளும‌ன்ற‌த் தேர்த‌லில், இன‌வெறி பிர‌ச்சார‌ நிக‌ழ்ச்சி நிர‌லை எதிர்த்து நில்லுங்க‌ள்: தெருக்க‌ளில் 'வாக்கு'.

மே முத‌லாந்திக‌தி‍ ச‌ர்வ‌தேச‌ தொழிலாள‌ர் தின‌த்தில், வ‌ட‌ அமெரிக்காவிலுள்ள‌ ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளோடும், உலகின் மில்லிய‌ன்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளோடும் இணைந்து நிற்போம். தொழிலாள‌ர் ச‌ம்ப‌ள‌ம் ம‌ற்றும் ச‌ம்ப‌ள‌மின்மை, குடியேறிக‌ளுக்கான அந்த‌ஸ்து (status) ம‌ற்றும் அந்த‌ஸ்தின்மை: இவ‌ற்றை மேலும் ஆழ‌மாய் இறுக்குத‌ல், வேலை இழ‌த்த‌ல்க‌ள், சூழ‌லிய‌ல் அழிவுக‌ள், ஏகாதிப‌த்திய‌ போர்க‌ள் ம‌ற்றும் பெருநிறுவ‌ன‌ங்க‌ளின் பேராசைக‌ள் போன்ற‌வ‌ற்றைப் பார்த்துக்கொண்டு  மவுனமாக‌ இருப்ப‌தை நாம் ம‌றுக்கின்றோம்.

நீதிக்கும், க‌வுர‌வ‌த்திற்குமான‌ த‌ம் க‌ன‌வுக‌ளையும், பார்வைக‌ளையும், ந‌ம்பிக்கைக‌ளையும் ம‌க்க‌ள் இப்பேர‌ணியில் ப‌தாதைகள், ஆடைக‌ள் ம‌ற்றும் துண்டுப் பிர‌சுர‌ங்க‌ளினூடாக எடுத்துவ‌ருவ‌தை நாங்க‌ள் உற்சாக‌ப்ப‌டுத்துகின்றோம். எங்க‌ளுட‌ன் பேரணியில் துணையாக‌ வாத்திய‌ங்க‌ள் இசைக்கும் குழுக்கள், பொம்மலாட்ட‌க்கார‌ர்க‌ள் ம‌ற்றும் ப‌ல‌ர் வ‌ருவார்க‌ள்.

எனெனில், இனி குடும்ப‌ ஸ்பொன்ச‌ர்ஷிப் செய்வ‌த‌ற்கு ப‌தினான்கு வ‌ருட‌ங்க‌ள் வ‌ரை எடுக்க‌லாம் ம‌ற்றும் அக‌திக‌ளை ஏற்றுக்கொள்வ‌து 56%த்தால் குறைக்க‌ப்ப‌டுகின்ற‌து
எனெனில், எல்லைக் காவ‌ல‌ர்க‌ளுக்கு பெண்க‌ளின் வ‌திவிட‌ங்க‌ளை ஆக்கிர‌மிப்ப‌த‌ற்கான‌ அதிகார‌ம் இப்போது இருக்கிற‌து
எனெனில், த‌ற்காலிக‌ குடியேற்றத் தொழிலாள‌ர்க‌ள் 'திற‌ன் குறைந்தவ‌ர்க‌ள்' என‌க் க‌ருத்த‌ப்ப‌ட்டு, நான்கு வ‌ருட‌ங்க‌ளுக்குப் பிற‌கு க‌ன‌டாவிலிருந்து துர‌த்த‌ப்ப‌ட‌லாம்.
எனெனில், ரொர‌ண்டோவில் ஒவ்வொருநாளும், 70 ச‌மூக‌ உறுப்பின‌ர்க‌ள் சுற்றிவ‌ளைக்க‌ப்ப‌ட்டு நாடு க‌ட‌த்த‌ப்ப‌டுகின்றார்க‌ள்
எனெனில், ஹார்ப்ப‌ருக்குத் தேவை 'மிக‌வும் இன‌த்துவ‌மான‌' வாக்கு, ஆனால் குடியேறிக‌ள் தேவையில்லை.
எனெனில், (ரொர‌ண்டோ மேய‌ர்) போர்ட் (அர‌சுக்குச் சொந்த‌மான‌) பொது வீடுக‌ளை விற்க‌வும்,ரிரிசி ப‌ஸ்க‌ளை குறைக்கவும், பொதுச்சேவைக‌ளுக்கு ப‌ண‌ம் அற‌விட‌வும் விரும்புகின்றார். இந்த ந‌ட‌வ‌டிக்கைக‌ள் பெண்க‌ள், குடியேறிக‌ள் ம‌ற்றும் வ‌றிய‌ ச‌மூக‌ங்க‌ளை இன்னும் மோச‌மாக‌ப் பாதிக்கும்.
எனெனில்,குடியேறிக‌ளின் நீதிக்கான‌ ஒழுங்க‌மைப்பாள‌ர்க‌ள் தாக்க‌ப்ப‌ட்டு, கைது செய்ய‌ப்ப‌ட்டு, சிறையில் அடைக்க‌ப்ப‌ட்ட‌துட‌ன் தொட‌ர்ச்சியாக‌ பொலிசால் தொந்த‌ர‌வுக்குள்ளாக்க‌ப்ப‌டுகின்றார்க‌ள்.
எனெனில், க‌னேடிய‌ அர‌சு தொட‌ர்ச்சியாக‌ பூர்வீக‌ ம‌க்க‌ளின் இறையாண்மையையும் விடுத‌லையையும் எதிர்த்துக்கொண்டே இருக்கிற‌து.
எனெனில், எங்க‌ளின் க‌ன‌வுக‌ள் வாக்க‌ளிப்புப் பெட்டிக‌ளில் முடிய‌க்கூடிய‌து அல்ல‌,

.....ஆகிய‌ இக்கார‌ண‌ங்க‌ளையும் இன்னும் இருக்கும் காரண‌ங்க‌ளையும், நாங்க‌ள் தெருக்க‌ளுக்கு எடுத்து வ‌ருகின்றோம். ச‌ன‌நாய‌க‌ம், வாக்க‌ளிப்புப் பெட்டிக‌ளுட‌ன் தொட‌ங்குவ‌தோ முடிவ‌தோ அல்ல‌. மாற்ற‌ம் வ‌ருவ‌தைப் பார்க்க‌ காத்திருக்க‌ விரும்பாம‌ல் நாங்க‌ள் (அந்த‌) மாற்றதை உருவாக்குகின்றோம். அடிநிலையிலிருந்து மேலாக‌... ம‌க்க‌ளின் ச‌க்தியைக் கொண்டு.

ஏன் No One Is Illegal மேதின‌ ந‌ட‌வ‌டிக்கை?
ஏப்ர‌ல் 2006ல், ஹார்ப்ப‌ர் அதிகார‌த்திற்கு வ‌ந்த‌ சில நாட்க‌ளில், அவ‌ர் டப்ரின் அங்காடிப் ப‌குதியில் ப‌ல‌வேறு சுற்றிவ‌ளைப்புக்க‌ளைச் செய்யத் தொட‌ங்கினார். இன‌ப்பாகுபாட்டு விவ‌ர‌ங்க‌ளுடன் ப‌ல‌ நூற்றுக்க‌ண‌க்கான‌ முழு அந்த‌ஸ்து (full status) இல்லாத‌வ‌ர்க‌ள் கைது செய்ய‌ப்ப‌ட்டு த‌டுப்புக்காவ‌லில் வைக்க‌ப்ப‌ட்டார்க‌ள். இத‌ற்கு எதிர்வினையாக‌, ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ள் 'எல்லோருக்குமான‌ அந்த‌ஸ்து' (status for all) என்ற‌ கோரிக்கையுட‌ன் முத‌லாவ‌து வ‌ருட‌ மேதின‌த்தில் ரொர‌ண்டோத் தெருக்க‌ளில் இற‌ங்கினார்க‌ள். இதை நாங்க‌ள் ஜ‌க்கிய‌ அமெரிக்காவில் குடியேறிக‌ளின் உரிமைக‌ளுக்காய் ந‌ட‌ந்த‌ மாபெரும் பேர‌ணிக‌ளோடு இணைத்தும், அதிக‌ம் விளிம்புநிலைக்குள்ளாக்க‌ப்ப‌ட்ட‌ வேலைசெய்யும் வ‌ர்க்க‌த்தை முன்னிறுத்தியும் ச‌ர்வ‌தேச‌ தொழிலாள‌ர்க‌ள் தின‌த்தில் செய்தோம். க‌ட‌ந்த‌ ஆறு வ‌ருடங்க‌ளில், ம‌த்தியிலுள்ள‌ வ‌ல‌துசாரிக‌ளின் நாடுக‌ட‌த்தும் செயலை நிறுத்துவ‌த‌ற்காய், குடியேறிக‌ளின் உரிமைக‌ளை அவ‌ர்க‌ள் மேலும் ஒடுக்குவதற்கு எதிராக...‌ ம‌ற்றும் எங்க‌ள் ச‌மூக‌ங்க‌ளுக்கு ஆத‌ர‌வ‌ளிப்ப‌த‌ற்காய்... என‌ ஒவ்வொரு ந‌ட‌வ‌டிக்கைக‌ளுக்கும் நாங்க‌ள் போராடினோம்...

நாங்க‌ள் பாட‌சாலைக‌ளுக்கு, உண‌வுக்கு.., ம‌ருத்துவ‌ வ‌ச‌திக்கு.., பெண்க‌ளுக்கு எதிரான‌ வ‌ன்முறைக‌ளுக்கு எதிரான‌ சேவைக‌ள்... போன்ற‌ சில‌ அணுகுமுறைக‌ளில் வென்றிருக்கின்றோம், அதே ச‌ம‌ய‌ம், நாங்க‌ள் த‌டுப்புக்காவ‌ல் ம‌ற்றும் நாடுக‌ட‌த்த‌ல்க‌ளுக்கு எதிராக‌ மிக‌ வ‌லுவாக‌ குர‌லெழுப்பிய‌போதும் தோற்றிருக்கின்றோம், மிக‌ அண்மையாக‌ டானிய‌ல் கார்சியா பார்க்டேலில் இருந்து ஜ‌ன‌வ‌ரி முதலாந்திக‌தி நாடு க‌ட‌த்த‌ப்ப‌ட்டிருக்கின்றார். இந்த‌ மே தின‌த்தில், நாங்க‌ள் பார்க்டேலிருந்து ‍‍-இங்கேதான் டானிய‌ல் கார்சியா கைதுசெய்ய‌ப்ப‌ட்டார் என்ப‌தும் அமெரிக்க‌ப்பாணி குடியேறிக‌ள் சுற்றிவ‌ளைக்க‌ப்ப‌டும் முறை அமுலாக்க‌ப்ப‌ட்டு ஐந்து வ‌ருட‌ங்க‌ளும் ஆகின்ற‌ன‌- என்ப‌தையும் நினைவுகூர்ந்து பேர‌ணியைத் தொட‌ங்குகின்றோம்.
.
எல்லோருக்குமான‌ அந்த‌ஸ்து என்ப‌து என்ன‌?
ம‌த்திய‌, மாகாண‌ ம‌ற்றும் உள்ளூராட்சி அர‌சுக்க‌ள், குடிவ‌ர‌வாள‌ர் அந்த‌ஸ்து இல்லாத‌வ‌ர்க‌ளுக்கு, ந‌ல்ல‌ உண‌வு, ம‌ருத்துவ‌ வ‌ச‌தி, வாழ்க்கை, குழ‌ந்தைப் ப‌ராம‌ரிப்பு, க‌ல்வி, வ‌திவிட‌ம், நீதி ம‌ற்றும் க‌வுர‌மான‌ வாழ்க்கை என்ப‌வை கிடைப்ப‌தைத் த‌டுக்கின்ற‌ன‌. எல்லா ம‌க்க‌ளும் (அவ‌ர்க‌ளுக்கு அந்த‌ஸ்து இருக்கிற‌தோ இல்லையோ) சுத‌ந்திரமாக‌வும், ம‌திப்புட‌னும், ப‌ய‌ம‌ற்றும் வாழ‌த்தான் வேண்டும். பூர்வீக‌க் குடிக‌ள்,வ‌றிய‌ ம‌க்க‌ள், நிற‌முள்ள‌ குடியேறிக‌ள், ப‌ல‌ பெண்க‌ள், Queer ம‌க்க‌ள் ம‌ற்றும் மாற்றுத்திற‌ன் உள்ளோருக்கு இந்த‌ (க‌னேடிய‌) பிர‌ஜா உரிமையான‌து அவ‌ர்க‌ளுக்கான‌ சுத‌ந்திர‌த்தை பூர்த்தி செய்ய‌வில்லை என்ப‌து எங்க‌ளுக்கு மேலும் தெரியும். அந்த‌ஸ்துக்கான‌ போராட்ட‌ம் என்ப‌து அனைத்து ம‌க்க‌ளுக்குமான‌ ஒரு போராட்ட‌மாகும்; குடியுரிமை, பால், பாலின‌ம், மாற்றுத்திற‌ன் அல்ல‌து இன‌ப்பாகு போன்ற‌வ‌ற்றைப் பொருட்ப‌டுத்தாம‌ல் எல்லோரும் எல்லாவ‌ற்றையும் -எப்ப‌டி ஒரு குடியேறி அந்த‌ஸ்து உள்ள‌வ‌ர் பெற‌வேண்டுமோ- அவ்வாறு அவ‌ற்றைச் சுத‌ந்திர‌மாக‌ப் பெற‌வேண்டும்.

இத்த‌கைய‌ ஒருமைப்பாட்டின் எழுச்சியில், ஒரு அசைவிய‌க்க‌த்தை இந்ந‌க‌ரில் பார்ப்ப‌த‌ற்காய், 'எவ‌ருமே ச‌ட்ட‌விரோத‌மான‌வ‌ர்க‌ள் அல்ல‌' அமைப்பைத் சேர்ந்த‌வ‌ர்க‌ளாகிய‌ நாம் 'எல்லோருக்குமான‌ அந்த‌ஸ்து' என்ற‌ கோச‌த்தின் அடிப்ப‌டையில் ட‌ப்றின் குரூவ் பூங்காவிலிருந்து அணிவ‌குக்க‌ உள்ளோம்.

மே தின‌ நாளில் இவ‌ற்றை கேட்க‌, உறுதிப்ப‌டுத்த‌, செய‌லாக்க‌ நாங்க‌ள் தெருக்க‌ளுக்கு எடுத்து வ‌ருகின்றோம்:

ஆவ‌ண‌மில்லாத‌ ம‌ற்றும் குடியேறி தொழிலாள‌ர்க‌ளுக்கான‌ நீதி: எல்லோருக்குமான‌ அந்த‌ஸ்து! ப‌ய‌மில்லாது (எல்லாவ‌ற்றையும்) அணுகிப் பெறுத‌ல்!

எங்க‌ள் ச‌மூக‌ங்க‌ளுக்கான‌ நீதி: ச‌ம்ப‌ள‌த்தை, வாழும் காசை, தொழிற்ச‌ங்க‌ங்க‌ளை, இல‌வ‌சமான‌தும் எளிதில் பெற‌க்கூடிய‌துமான‌ பொதுச் சேவைக‌ளை அனைவருக்க‌மாய் அதிக‌ரித்த‌ல், வ‌ன்முறையான‌ பொலிசை அய‌லிட‌ங்க‌ளிலிருந்து அக‌ற்றுத‌ல்

சுத‌ந்திர‌மான‌ ந‌ட‌மாட்ட‌ம், சுத‌ந்திர‌மான‌ திரும்ப‌ல் ம‌ற்றும் சுத‌ந்திர‌மான‌ த‌ங்க‌ல்

கால‌னித்துவ‌ம், இராணுவ‌ ம‌ற்றும் பொருளாதார‌ போர்க‌ள் ம‌ற்றும் சூழ‌லிய‌ல் த‌ர‌ங்குறைத‌ல் என்ப‌வ‌ற்றிலிருந்து விடுத‌லை

(நன்றி: http://toronto.nooneisillegal.org)

கனடாத் தேர்தல் - மேலும் சில குறிப்புகள்

Sunday, April 24, 2011

1.
இம்முறை தேர்த‌ல் திக‌தி அறிவிக்க‌ப்ப‌ட்ட‌திலிருந்து -அடிக்க‌டி ந‌டைபெறும் தேர்த‌ல் க‌ணிப்பில்- வ‌ல‌துசாரிக‌ளை உள்ள‌ட‌க்கிய‌ ப‌ழ‌மைவாத‌க்க‌ட்சி கிட்ட‌த்த‌ட்ட‌ 40% முன்ன‌ணியிலும், லிப‌ர‌ல் க‌ட்சியின‌ர் 30%, ம‌ற்றும் என்டிபிக் க‌ட்சியின‌ர் 20% என் ச‌ற்றுக் கூடியும் குறைந்தும் இருந்தார்க‌ள். க‌ன‌டாவின் மொத்த‌ பாராளும‌ன்ற‌ இருக்கைக‌ளான‌ 308ல் மூன்றில் ஒருப‌ங்கு ஒன்ராறியோ மாகாண‌த்திலேயே (106) இருக்கின்ற‌து. அத‌ற்கு அடுத்து குயூபெக் மாகாண‌த்தில் 75 இருக்கைக‌ளும், பிரிடடிஷ் கொல‌ம்பியா மாகாண‌த்தில் 36 இருக்கைக‌ளும் இருக்கின்ற‌ன‌. இருக்கைக‌ளின் அடிப்ப‌டையில் வைத்துப் பார்க்கும்போது ஒன்ராறியோ மாகாண‌த்தில் எந்த‌க் க‌ட்சி, கூட‌ இருக்கைக‌ளைப் பெறுகின்ற‌தோ அதுவே எளிதாக‌ ஆட்சிய‌மைக்கும் என்ப‌தை நாம் புரிந்துகொள்ள‌லாம். மேலும் க‌ன‌டாவில் ஒரு க‌ட்சி பெரும்பான்மை ஆட்சிய‌மைக்கின்ற‌தென்றால் ஒன்ராறியோ மாகாண‌த்தில் பெரும்பான்மையான‌ இருக்கைக‌ளைக் கைப்ப‌ற்றினால் ம‌ட்டுமே சாத்தியமாகக் கூடிய‌து.

சென்ற‌ தேர்தலில் ப‌ழ‌மைவாத‌க் க‌ட்சி 143 இருக்கைக‌ளைக் கைப்ப‌ற்றிய‌து. 155 இருக்கைக‌ளுக்கு மேல் எடுத்தாலே பெரும்பான்மை அர‌சை வ‌ல‌துசாரிக‌ளால் அமைக்க‌முடியும் என்றாலும், அவ‌ர்க‌ள் கட‌ந்த‌ 2004ல் 99 இருக்கைக‌ளுட‌ன் தொட‌ங்கி 124(2006), 143(2008) என‌ ஏறுமுக‌த்திலேயே இருக்கின்றார்க‌ள். ஆக‌ இப்போது தேர்த‌லை அறிவித்த‌தும் அந்த‌ ஏறுமுக‌த்தை த‌க்க‌வைத்து ஒரு பெரும்பான்மை அர‌சை அமைப்ப‌தே என்ப‌து எவ‌ரும் அறிந்திருக்க‌க்கூடிய‌ 'இர‌க‌சிய‌மே'. ஆனால் நிலைமை இப்போது அவ்வ‌ள‌வு சொல்லிக்கொள்ளும்ப‌டியாக‌ வ‌ல‌துசாரிக‌ளுக்கு இல்லை என்ப‌துதான் யதார்த்த‌ நிலைமை.

சென்ற‌ தேர்த‌லில் லிப‌ர‌ல் க‌ட்சியின‌ர் ந‌ல்ல‌ வ‌ழிகாட்டியுள்ள‌ த‌லைவ‌ரைத் தேர்ந்தெடுக்காத‌தாலும், ம‌க்க‌ள் மாற்ற‌ங்க‌ளை வேண்டிய‌தாலும் -க‌ட‌ந்த‌ 20 வ‌ருட‌ங்க‌ளின் பின்- ஒரு மோச‌மான‌ தோல்வியை லிப‌ர‌ல் க‌ட்சி தேர்த‌லில் ச‌ந்தித்தது. அதனால் 77 இருக்கைக‌ளை ம‌ட்டுமே எடுக்க‌ முடிந்திருந்தது. அதேசமயம் லிப‌ர‌லைப் ப‌டுகுழியில் த‌ள்ளினாலும் ம‌க்க‌ள் ப‌ழ‌மைவாத‌க் க‌ட்சிக்கு ஒரு பெரும்பான்மையைக் கொடுக்க‌த் த‌யாராக‌வில்லை. குயூபெக்கில் ப்ளொக் குயூபெக்குவா 49 இருக்கைக‌ளையும், என்டிபி க‌ன‌டா முழுவ‌தும் 37 இருக்கைக‌ளையும் பெற்று வ‌ல‌துசாரிக‌ளின் த‌னிப்பெரும்பான்மை அர‌சுக் க‌ன‌வைக் க‌லைத்த‌ன‌ர்.

இம்முறை க‌ட‌ந்த‌ தேர்த‌லைப் போல‌வ‌ன்றி சிக்க‌ல‌ற்ற‌ ஒரு த‌லைவ‌ரை லிப‌ர‌ல் க‌ட்சி தேர்ந்தெடுத்திருக்கின்ற‌து. அடுத்த‌ பிர‌த‌ம‌ராக‌ யாரை விரும்புகின்றீர்க‌ள் என்ற‌ க‌ருத்துக்க‌ணிப்பின்போது லிப‌ர‌ல் க‌ட்சித்த‌லைவ‌ருக்கும், ப‌ழ‌மைவாத‌க் க‌ட்சித்த‌லைவ‌ருக்கும் அண்ண‌ள‌வாக‌ ஒரே விருப்பையே (30%)தெரிவித்திருக்கின்றார்க‌ள். ஆனால் இவ‌ர்க‌ள் இருவ‌ரையும் விட‌ அடுத்த‌ பிர‌த‌ம‌ராக‌ என்டிபி த‌லைவ‌ருக்கு (68%) மிகக் கூடிய‌ விருப்பைத் தெரிவித்திருக்கின்றார்க‌ள் என்ப‌து சுவார‌சிய‌மான‌ விட‌ய‌ம்.

என்டிபி க‌ட்சியின் மக்கள் செல்வாக்கைக் க‌ன‌டா முழுவ‌த‌ற்குமாய்ப் பார்க்கும்போது, ப‌ழ‌மைவாத‌க்க‌ட்சி ம‌ற்றும் லிப‌ர‌ல் க‌ட்சிக்கு அடுத்த‌தாக‌ மூன்றாவ‌து நிலையிலே இருக்கின்ற‌து என்ப‌தை நாம‌றிவோம். ஆனால் இப்போது இன்னொரு சுவார‌சிய‌மான‌ தேர்த‌ல் க‌ள‌ம் திற‌க்க‌‌ப்பட்டிருக்கின்ற‌து.

குயூபெக் மாகாண‌த்தில் க‌ட‌ந்த‌ 15 வ‌ருட‌ங்க‌ளாக‌ ப்ளொக் குயூபெக்குவாவே அதிக‌ இருக்கைக‌ளைப் பெற்று வ‌ருகின்ற‌து. சென்ற‌ தேர்த‌லில் 75 இருக்கைக‌ள் உள்ள‌ குயூபெக் மாகாண‌த்தில் 49 இருக்கைக‌ளை ப்ளொக் குயூபெக்குவாவும், மிகுதி 25 இருக்கைக‌ளில் லிப‌ர‌ல் (14), ப‌ழ‌மைவாத‌க் க‌ட்சி (10), என்டிபி (1) ம‌ற்றும் சுயாதீன‌க்க‌ட்சி(1) என‌க் கைப்ப‌ற்றியிருக்கின்ற‌து. சென்ற‌வார‌ம் வ‌ரை க‌ருத்துக்க‌ணிப்பில் ப்ளொக் குயூபெக்குவாவிற்கு அடுத்து இர‌ண்டாவ‌தாக‌ நின்ற‌ என்டிபி, இப்போது குயூபெக் மாகாண‌த்தில் ப்ளொக் குயூபெக்குவாவை விட‌ முன்ன‌ணியில் நிற்கின்ற‌து என்று அறிவிக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. என்டிபி முன்ன‌ணியில் நிற்கும்போது அதிக‌மாய் லிப‌ர‌ல்க‌ட்சியின‌ர‌தும், ப்ளொக் குயூபெக்குவாவினதும் வாக்குக‌ள் பிரிந்துபோகும் என்ப‌தால் இத‌னால் என்டிபியை விட‌ ப‌ழ‌மைவாத‌க் க‌ட்சியே இன்னும் சந்தோசப்படும்.

மேலும் பிரிவினையை வ‌லியுறுத்தும் ப்ளொக் குயூபெக்குவாவை எப்போதும் வெறுக்கும் வ‌ல‌துசாரிக‌ளுக்கு, இந்த‌ச் செய்தி பழம் நழுவி பாலில் விழுந்த‌மாதிரி இனிக்க‌வும் கூடும். ஆனால் இந்த‌ச் செய்தி சிறுபான்மையின‌ரின் குர‌ல்க‌ள் பொதுவெளியில் உர‌த்து ஒலிக்க‌வேண்டும் என்று நினைப்ப‌வ‌ர்க்கு அவ்வ‌ளவு உவ‌ப்ப‌தைத் த‌ராது என்பது உண்மையே. ஒர‌ள‌வு இட‌துசாரிக‌ளாய் இருக்க‌க்கூடிய‌ என்டிபியின‌ர் குயூபெக்கில் மிக‌ப்பெரும் எழுச்சி பெறுவ‌து ம‌கிழ்வாய் இருந்தாலும், அந்த‌ எழுச்சி இன்னொரு சிறுபான்மையின‌ருக்குத் பாதகம் விளைவித்து விடும் என்கின்றபோது யோசிக்க‌வேண்டியிருக்கும்.

2.
இந்தத் தேர்தலில் இரண்டு தமிழர்கள் ரொரண்டோ பெரும்பாகத் தொகுதிகளில் போட்டியிடுகின்றார்கள். ஒருவர் பழமைவாதக்கட்சியின் சார்பிலும், இன்னொருவர் என்டிபியினர் சார்பிலும் போட்டியிடுகின்றார். நீண்டகாலமாய் ஒன்ராறியோ மாகாணம் லிபரல் கட்சியாகவே இருந்துவந்திருக்கின்றது. பழமைவாதக்கட்சியினர் கொஞ்சம் கொஞ்சமாய் ஒன்ராறியோவில் செல்வாக்குப் பெற்று வருகின்ற இக்காலத்திலும் இன்னமும் அவர்கள் ரொரண்டோ ந‌க‌ராட்சியை உள்ளடக்கிய தொகுதிகளில் லிபரலை அசைக்கவே முடியாதிருக்கின்றது. ரொரண்டோ ந‌க‌ரில் லிபரலைத் தவிர என்டிபியினர் இரு தொகுதிகளில் வென்றிருக்கின்றனர். அதில் ஒருவர் என்டிபியின் கட்சித்தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக, லிபரல் கட்சியினர் வெல்லும் சாத்தியம் அதிகமுள்ள தொகுதிகளில் போட்டியிடும் இரு தமிழ் வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்புக்களை கடந்த காலத்த்தேர்தலை முன்வைத்து ஆராய்வோம்.

ஸ்காபரோ Rouge Valleyல் தமிழரான ராதிகா சிற்சபேசன் புதிய ஜனநாயக் கட்சி (என்டிபி) சார்பாகப் போட்டியிடுகின்றார். இத்தொகுதியிலும் தமிழர்கள் உள்ளிட்ட ஆசியா இனத்தவர்களே நிறைய இருக்கின்றார்கள்.1988ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து லிபரல் கட்சி வேட்பாளர்களே வென்றுவருகின்றார்கள் என்பது கவனிக்கத்தக்கது. எனினும் இம்முறை நீண்டகாலமாக லிபரல் கட்சி சார்பில் வென்ற டெரிக் லீ என்பவர் போட்டியிடாததால் புதிய ஒரு வேட்பாளரை லிபரல் கட்சி நிறுத்தியிருக்கின்றது. அவரும் ஒரு ஆசியா இனத்தவரைச் சேர்ந்தவராக இருப்பதால் அவரே வெல்வதற்கான சந்தர்ப்பம் நிறைய உள்ளதாகத் தெரிகிறது.

ஆனால் ராதிகா சிற்சபேசன் பழமைவாதக் கட்சியைச் சேர்ந்தவரை விட அதிக வாக்குக்குப் பெற்று இரண்டாம் இடத்தை பெறக் கூடும். எனெனில் தமிழர்களும், தொடர்ச்சியாக என்டிபியினருக்கு வாக்களிப்பவர்களும் ராதிகாவிற்கு வாக்களிக்கும் சந்தர்ப்பம் நிறைய இருப்பதால் கணிசமான வாக்குகளை அவ‌ர் பெறலாம். அதே சமயம்,  இந்தியாப் பின்னணியில்  லிபரல் கட்சி வேட்பாளரும், பழமைவாதக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளரும் இருப்பதால் அவர்களின் வாக்குகள் இருகட்சிக்கும் பிரிந்து போனால், ராதிகா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்களும் இருக்கின்றன. பழமைவாதக் கட்சியில் போட்டியிடும் மார்லின் ஒரு க‌வுன்சில‌ருக்கு உத‌வியாள‌ராக‌ இருப்பதால் அவருக்கும் கணிசமான வாக்குகள் விழக்கூடும் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

Scarborough - Rouge River
2008 Results
Party            Candidate               Votes               Vote Share (%)
LIB               Derek Lee               23,716            58.23
CON            Jerry Bance              9,160              22.49
NDP             Ryan Sloan              5,954              14.62
GRN            Attila Nagy              1,567               3.85
LTN            Alan Mercer             331                 0.81

2006 Results
Candidate             Party           Vote Count      Vote Share
Derek Lee             LIB              30285               65.62% 
Jerry Bance           CON            9432                 20.44%
Andrew Brett        NDP             4972                10.77%
Serge Abbat         GRN             754                   1.63%
Yaqoob Khan      IND               467                   1.01%
Alan Mercer         LTN              243                   0.53%

 3.
பழமைவாதக்கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற இராகவன் என்ற பெயரை அண்மையில் தேர்தலுக்காய் மாற்றிய கவன் பரஞ்சோதியின் தொகுதியான ஸ்காபரோ தென்மேற்குத் தொகுதியைப் பார்ப்போம். 2006ல் பழமைவாதக்கட்சி நீண்டகாலத்தின் பின் லிபரலைத் தோற்கடித்து பாராளுமன்றத்தில் ஆட்சியமைத்தபோது....ஸ்காபரோ தென்மேற்குத் தொகுதியில்...

2006 Results
DISTRICT: Scarborough Southwest

Candidate                     Party               Vote Count       Vote Share
Tom Wappel                 LIB                 19930              47.83%
Vincent Veera               CON               10017              24.04%
Dan Harris                    NDP                9626                23.1%
Valery Philip                 GRN                1827                4.38%
Trevor Sutton                IND                 147                  0.35%
Elizabeth Rowle            COM                120                  0.29%

2006ல் இத்தொகுதியில் வின்சன்ட் வீரசுந்தரம் என்ற தமிழரே பழமைவாதக் கட்சி சார்பில் பேட்டியிட்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. இருந்தபோதும் இத்தொகுதியில் நீண்டகாலமாய் பாராளுமன்ற உறுப்பினராய் இருந்த ரொம் மீண்டுமொருமுறை எளிதாகத் தேர்த்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால் அதேசமயம், என்டிபி கட்சி சார்பில் போட்டியிட்ட டானும் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தார் என்பதைக் கவனிக்கவேண்டும். அவருக்கும் வின்சனுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 500 வாக்குகளே ஆகும். ஆகவே பழமைவாதக்கட்சியினரும் என்டிபியினரும் கிட்டத்தட்ட சமமான செல்வாக்கையே இத்தொகுதியில் பெற்றிருக்கின்றார்கள் என்பதை அறியமுடியும். இத்தொகுதியில் பெரும்பான்மையாகத் தமிழர்களும், பிலிப்பைன்காரரர்களும் வாழ்கின்றார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

இனி 2008ல் நடந்த தேர்தலைப் பார்போம்:
Scarborough Southwest
Party       Candidate                      Votes               Vote Share (%) 
LIB          Michelle Simson             15,480             41.77
CON       Greg Crompton              10,900             29.41
NDP        Alamgir Hussain             7,024               18.95
GRN        Stefan Dixon                  3,507               9.46
IND         Fatique Kabir                 150                  0.40

                                           க‌ட‌ந்த‌ 2008 தேர்தலில் லிபரல் புதிய வேட்பாளரைக் களத்தில் இற‌க்கிய‌து. அதேபோன்றே பழமைவாதக்கட்சியினரும், என்டிபியினரும் புதிய வேட்பாளரையே தேர்தலில் நிறுத்திய‌து. இம்முறையும் லிபரல் கட்சி வேட்பாளரான மிசேலே வென்றாலும், என்டிபினருக்கு கிடைத்த வாக்குகள் வீதமும் லிபரல் கட்சியினரின் வாக்கு வீதமும் குறைந்திருப்பதைக் காணலாம். மேலும் பழமைவாதக்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஒரு சிறுபான்மையினரைச் சேர்ந்தவரோ அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.  இப்போது 2011ல் நடக்குந் தேர்தலில் லிபரல் கட்சி, சென்றமுறை வெற்றி பெற்ற மிஷைலையே களத்தில் இறக்குகின்றது. பழமைவாதக் கட்சி சார்பில் கவன் பரஞ்சோதி வாக்குக் கேட்கின்றார். இதைவிட சுவாரசியமான விடயமாக என்டிபி 2006 தேர்தலில் கணிசமான வாக்குகள் (9626) பெற்ற‌ டானையே இந்தத் தேர்தலில் மீண்டும் களமிறக்குகின்றது.

எனவே இத்தேர்தல் தொகுதி ஒரு மும்முனைப் போட்டியுள்ள தேர்தலாக மாறக்கூடிய சாத்தியங்களே அதிகமுள்ளது என நினைக்கின்றேன். இம்முறை பழமைவாதக்கட்சிக்கு தமிழர்கள் நிறையப்பேர்கள் வாக்களிக்கும் சாத்தியம் உண்டெனினும், பழமைவாதத்தை பேணும் வெள்ளையினத்தவர் ஒரு நிறமுள்ள (coloured person) முகத்திற்கு வாக்களிப்பார்களா என்ற சுவாரசியான கேள்வியும் இருக்கின்றது.

பழமைவாதக்கட்சியினருக்குத்தான் குழப்பமே தவிர, என்டிபியினருக்குக் குழப்பம் இருக்கப்போவதில்லை. எனெனில் என்டிபியினருக்கு வாக்களிக்கும் அநேகருக்கு அடுத்த தெரிவாக இருப்பது லிபரல் கட்சியோ கிறீன் கட்சியோ தவிர ஒருபோதும் பழமைவாதக் கட்சியாக இருக்கப்போவதில்லை. எனவே பழமைவாதக்கட்சியின் சார்பில் போட்டிடும் கவன் பரஞ்சோதி தொடர்ந்து பழமைவாதக்கட்சியினருக்கு வாக்களிப்பவரிடமும், தமிழர்களிடமுமே தனது வெற்றி வாய்ப்புக்காய்க் காத்திருக்கவேண்டியிருக்கிறது.

4.
தமிழர்கள் கனடிய அரசியல் களத்திற்கு இன்றைய காலங்களில் வருவது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியது. ஆனால் நாம் அவ்வாறு வாக்காளர்களாய் வரும் வேட்பாளர்கள் தமது கல்வி,செல்வாக்கு என்பவற்றால் தேர்தல் களத்திற்கு வருகின்றார்களா அல்லது உண்மையாகவே சமூகத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்பதற்காகவும், அரசியலில் ஆர்வம் இருப்பதாலும் வருகின்றார்களோ என்று கவனிக்கவேண்டும். நான் தனிப்பட்டவளவில் எதிர்காலத்தில் கனடா அரசியலில் செல்வாக்குச் செலுத்தப் போகின்றவர்களாய் யூவனிற்றா நாதன், நீதன் சண் மற்றும் ராதிகா சிற்சபேசன் போன்றவர்களைக் காண்கின்றேன். அவர்கள் பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபடுபவர்களாகவும், இளையவர்களாகவும் இருப்பதால் அவர்களுக்கான வாய்ப்புக்கள் விரிந்தே கிடக்கின்றன என நினைக்கின்றேன். மேலும் தொடக்கத்தில் கிடைக்கும் தோல்விகளை எண்ணிச் சோர்வடையாது, தொடர்ந்து இவர்கள் ஆர்வத்துடன் அரசியலில் இருப்பார்களாயின்  கனேடிய அரசியல் ஒரு இடம் இவர்களுக்குக் கிடைக்கப்போவதை எவராலும் தடுக்க முடியாது.

இறுதியாக ஏப்ரல் 22 நடந்த தேர்தல் கணிப்பின்படி, பழமைவாதக் கட்சி - 37.8%, லிபரல் கட்சி - 26.1% என்டிபி - 23.7%, ப்ளொக் குயூபெக்குவா - 7.4% மற்றும் கிறீன் கட்சி - 3.5% வாக்குகளைப் பெறும் என தெரிவிக்கின்றன.

என்டிபியினரின் செல்வாக்கு அண்மைக்காலமாய் அதிகரித்தாலும், அது லிபரல் கட்சியினரும், ப்ளொக் குயூபெக்குவாவினதும் வாக்குகளைப் பிளவு செய்தே பெறுகின்றதாய் இருக்கின்றது. ஆனால் இன்னமும் பழமைவாதக்கட்சி வலுவான 10% ற்கு அதிகமான முன்னணியில் இருப்பதை கவனித்தாகவேண்டும். இந்த 10% இடைவெளி வலதுசாரிகளுக்கு ஒரு பெரும்பான்மை அரசை அமைக்க வழிகொடுக்குமா என்பதைக் கண்டறிய நாம் மே 02 வரை காத்திருக்கவேண்டியிருக்கிறது.

 ராதிகா சிற்சபேசனின் வேட்பாளர் அறிமுகம்:




(நன்றி: CBC.Ca -கருத்துக்கணிப்புக்களுக்கும், கடந்த தேர்தல் வாக்குகளின் தரவுகளுக்கும்...)

க‌ன‌டாத் தேர்த‌ல்- 2011

Tuesday, April 19, 2011

1.
கட‌ந்த‌ ஐந்தாண்டுக‌ளில் இர‌ண்டு தேர்த‌ல்க‌ளைக் க‌ன‌டா க‌ண்டிருக்கின்ற‌து. இவ்விர‌ண்டு தேர்த‌ல்க‌ளிலும் வ‌ல‌துசாரிக‌ள் ஆட்சிய‌மைத்தாலும் அவ‌ர்க‌ளால் ஒரு பெரும்பான்மை அர‌சை அமைக்க‌ முடியாத‌து அவ‌ர்க‌ளுக்கு அவ‌தியைக் கொடுத்திருக்கிற‌து. இன்ன‌மும் கைக‌ளுக்குள் எட்டாத‌ பெரும்பான்மை அர‌சை அமைக்கும் க‌ன‌விற்காய் இப்போது மே 02ல் இன்னொரு தேர்த‌லை வ‌ல‌துசாரிக‌ள் அறிவித்திருக்கின்றார்க‌ள். ஆக‌ 5 வ‌ருட‌த்திற்குள் மூன்றாவ‌து தேர்த‌லைச் ச‌ந்திக்கிற‌து க‌ன‌டா.

நம‌து மேன்மைத‌ங்கிய‌ பிர‌த‌ம‌ர் ஸ்டீப‌ன் ஹார்ப‌ர், இம்முறை பெரும்பான்மையைத் த‌ங்க‌ளுக்குத் த‌ர‌வேண்டுமென‌ ம‌க்க‌ளிட‌ம் ம‌ன்றாடிக்கொண்டிருக்கின்றார். உல‌கில் க‌வ‌னிக்க‌த்த‌க்க‌தொரு நாடாக‌ மிளிர்ந்த்கொண்டிருந்த‌ க‌ன‌டா இப்போது ப‌ல்வேறு விட‌ய‌ங்க‌ளில் கீழிற‌ங்கிக் கொண்டிருக்கின்ற‌து என்று ப‌ட்டிய‌லிட்டுக் காட்டினாலும்,  'அதையெல்லாம் இப்போது ம‌ற‌ந்துவிடுங்க‌ள், க‌ன‌டாவின் ஏற்ற‌ம் பெற்றிருக்கும் பொருளாதார‌த்தைக் க‌வ‌னியுங்க‌ள்' என‌ ஒன்றை ம‌ட்டும் திரும்ப‌த் திரும்ப‌க் கிளிப்பிள்ளையாக‌  கூறிக்கொண்டிருக்கின்றார். அண்மையில் ப‌ல்வேறு மேற்கு நாடுக‌ளின் பொருளாதார‌ நில‌வ‌ர‌ம் ச‌ரிந்துகொண்டிருக்க‌ க‌ன‌டா எல்லோரின் எதிர்ப்பார்ப்புக‌ளுக்கும் அப்பால் நிமிர்ந்து நிற்ப‌து உண்மைதான். அத‌னால் தான் க‌ன‌டா டொல‌ரின் பெறுமான‌ம் அமெரிக்க‌ டொல‌ரின் பெறும‌தியைத் தாண்டி நிற்கிற‌து. ஆனால் இந்த‌ டொல‌ரின் வ‌ள‌ர்ச்சி யாருக்கு ந‌ன்மை த‌ருமென்றால் க‌ன‌டாவின் ப‌ண‌த்தின் பெறும‌தியில் முத‌லீடு செய்ப‌வ‌ர்க‌ளுக்கே அன்றி, சாதார‌ண‌ உள்ளூர்க் க‌ன‌டிய‌ர்க‌ளுக்கு அல்ல‌ என்ப‌தை நாம் ம‌ற‌ந்துவிட‌க்கூடாது. க‌ன‌டாவின் டொல‌ர்ப் பெறும‌தி கூட‌வாக‌த்தான் இருக்கிற‌து, ஆனால் ம‌ச‌கு எண்ணெயின் விலையிலிருந்து சாதார‌ண பொருட்க‌ளின் விலைக‌ள் வ‌ரை எல்லாமே உய‌ர்ந்திருக்கின்றன. இப்ப‌டியே க‌னேடிய‌ டொல‌ரின் பெறும‌தி கூடிக்கொண்டு போனால் -மூல‌ப்பொருட்க‌ளின் செல‌வு அதிக‌ரிக்க‌- த‌ம‌து வ‌ர‌வு செல‌வில் துண்டுவிழுவ‌தைத் த‌டுக்க‌, பெரும் நிறுவ‌ன‌ங்க‌ள் முத‌லில் கையை வைக்க‌ப்போவ‌து அங்கே வேலை செய்யும் வேலையாட்க‌ளைக் குறைப்ப‌துதான். முத‌லீட்டிய‌ நாடுக‌ளின் நிறுவ‌ன‌ங்க‌ள் தாம் எதிர்வுகூறும் வ‌ர‌வு செல‌வுக்குள் வ‌ரும் இலாப‌த்தை எத‌ன் பொருட்டும் விட்டுக்கொடுக்க‌ ஒருபோதும் த‌யாராக‌ இருப்ப‌தில்லை. என‌வே க‌னேடிய‌ப் பொருளாதார‌ம் வ‌லுவாக‌ இருக்கிற‌து, க‌னேடிய‌ டொல‌ரின் பெறும‌தி அதிக‌ரிக்கின்ற‌து என்று எவ‌ரேனும் கூறினால் அத‌னால் எம‌க்கு என்ன‌ ந‌ன்மை இருக்கிற‌து என்று நாம் முத‌லில் கேட்க‌ வேண்டியிருக்கின்ற‌து. க‌ன‌டாவில் அதிக‌ள‌வு ம‌ச‌கு எண்ணெய் தோண்டியெடுக்க‌ப்ப‌ட்டாலும், ஏன் இப்ப‌டியான‌ அசுர‌வ‌ள‌ர்ச்சியில் எரிபொருள் விலை அதிக‌ரிக்கின்ற‌து என‌ எவ‌ரும் கேட்க‌ப்போவ‌தில்லை. சென்ற‌ வ‌ருட‌த்தை விட‌, இம்முறை கோடையில்  30% எரிபொருள் விலை உய‌ர்வு இருக‌க‌ப்போகின்ற‌தென‌ எதிர்வு கூறுகின்ற‌ன‌ர்.

2.
இதைத்தான் இன்னொருவித‌மாய் தீவிர‌ வ‌லதுசாரிக‌ட்சி சிறுபான்மை இன வேட்பாளர் போட்டியிடுவ‌த‌ற்கு வாய்ப்புக்கொடுத்தால் கூட‌, அவ‌ர் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர் என்ப‌த‌ற்காய் நாம் வாக்க‌ளிக்க‌ வேண்டுமா அல்ல‌து அவ‌ர‌து க‌ட்சி எத்த‌கைய‌ விழுமிய‌ங்க‌ளுக்கு இட‌ங்கொடுக்கும் என்ப‌தைப் ப‌ற்றி யோசிக்க‌வேண்டுமா என‌ நாம் நினைத்துப் பார்க்க‌ வேண்டும். இம்முறைத் தேர்த‌லில் புதிய‌ குடியேற்ற‌வாசிக‌ளான‌ ந‌ம்மைப் போன்ற‌வ‌ர்க‌ளுக்கு யாரைத் தேர்ந்தெடுக்கின்றோம் என்ப‌தைவிட‌ யாரைத் தேர்ந்தெடுக்க‌க் கூடாது என்ப‌தில் க‌வ‌ன‌மாக‌ இருக்க‌ வேண்டும். யாரைத் தேர்ந்தெடுத்தால் ந‌ம‌து இருப்பும், க‌லாசார‌மும் இறுக்க‌ப்ப‌டும் என்ப‌தை நுட்ப‌மாக‌ நோக்க‌வேண்டும். ஆனால் மக்க‌ளுக்கு விழிப்புண‌ர்வை ஏற்ப‌டுத்தவேண்டிய‌ இர‌வு ப‌க‌லென்று இடைவெளியில்லாது அல‌றும் வானொலி/தொலைக்காட்சிக‌ளும், 'எம் க‌ட‌ன் விள‌ம்ப‌ர‌ம் பிர‌சுரித்து வாழ்வ‌தே' என‌ இருக்கும் ப‌த்திரிகைக‌ளும் இந்த‌ விட‌ய‌ங்க‌ள் குறித்து அதிக‌ம் அக்க‌றை காட்டுவ‌தில்லை. மேலும் கீழைத்தேய‌ நாடுக‌ளில் ஒர‌ள‌வு அர‌சிய‌ல் விழிப்புண‌ர்வு பெற்று வ‌ரும் எங்க‌ளிட‌ம், இங்கும் இய‌ல்பாய் அர‌சிய‌ல் அறிவு இருக்கும் என‌ எதிர்ப்பார்ப்ப‌து கூட‌ ச‌ற்று அதிக‌ம் போல‌த்தான் தோன்றுகின்ற‌து. இல்லாவிட்டால் குடிவ‌ர‌வாள‌ர்க‌ளை வெறுக்கும் ஒரு மேய‌ரை, குடியேற்ற‌வாசிக‌ள் 50%ற்கு கிட்ட‌வாக‌ வாழும் ரொற‌ண்டோவில் இருந்து தேர்ந்தெடுக்க‌ மாட்டார்க‌ள். ஒரு இட‌துசாரி சில‌வேளைக‌ளில் ம‌க்க‌ளுக்கு ந‌ல்ல‌து செய்யாம‌ல் இருக்க‌லாம். ஆனால் ஒரு வ‌ல‌துசாரி என்றுமே ஒடுக்க‌ப்ப‌ட்ட‌/விளிம்புநிலை ம‌க்க‌ளுக்கு ந‌ல்ல‌தே செய்வ‌தில்லை என அறியாம‌லா நாம் இருக்கின்றோம்? இப்போது மேய‌ர் ஒவ்வொரு விட‌ய‌மாய் த‌னியார்ம‌ய‌மாக்க‌லும், நிதிக்குறைப்பும் செய்யும்போது, 'அய்யோ இப்போது இவ‌ரின் சுய‌ரூப‌ம் விள‌ங்குகிற‌தே' என‌ த‌லையில் கைவைப்ப‌தில் எந்த‌ நியாய‌மும் இல்லை. ஆக‌ மே வ‌ரும் தேர்த‌லிலாவ‌து  யாரைத் தேர்ந்தெடுக்க‌க் கூடாது என்ப‌தில் நாம் க‌வ‌ன‌மாக‌ இருக்க‌வேண்டும்.

மேலும் இம்முறை வ‌ல‌துசாரிக‌ள் புதிய‌ முகமூடிக‌ளோடு வ‌ருகின்றார்க‌ள். பெரும்பான்மை ஆட்சியைப் பெறுவ‌தற்காய் தேர்த‌ல் கால‌ம்வ‌ரை (அவ‌ர்க‌ள் இதுவ‌ரை வெறுத்தொதுக்கிய‌ எந்த‌ப் 'பேயோடும்') ச‌ம‌ர‌ச‌ம் செய்ய‌ இருக்கின்றார்க‌ள். ப‌ல‌ ஆண்டுக‌ளாய் விளிம்புநிலை/ சிறுபான்மை இன‌த்த‌வ‌ர் மீது காழ்ப்பை உமிழ்ந்து கொண்டிருந்த‌வ‌ர்க‌ள் தேர்த‌ல் திக‌தி அறிவித்த‌வுட‌ன் நேச‌மாய் ப‌ழ‌க வ‌ருகின்ற‌ போதாவ‌து நாம் யோசிக்க‌வேண்டாமா? இதுவ‌ரை நீங்க‌ள் எங்க‌ளுக்கு என்ன‌ செய்துகொண்டிருந்தீர்க‌ள் எனத்‌ திருப்பிக் கேட்க‌வேண்டாமா? ஆனால் ந‌ம‌க்குத்தான் தொலைதூர‌ப் பார்வை என்ப‌து எப்போதுமே இருந்த‌தில்லை. ஒரு பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் கூட்ட‌த்தில் 'வ‌ண‌க்க‌ம்' என்று த‌மிழில் கூறினாலே ஏதோ அவ‌ர் பாராளும‌ன்ற‌த்திற்குள் எங்க‌ளுக்காய் குர‌ல் கொடுக்கின்றார் என்று நினைத்துப் புள‌ங்காகித‌ப்ப‌டுப‌வ‌ர்கள் அல்ல‌வா நாம்?

கடந்த ஐந்து வருடங்களாக கனடாவில் ஆட்சி செய்யும் வலதுசாரிகள் இதுவரை பொருளாதாரத்தைத் த‌விர‌ வேறு எதிலாவது சாதித்திருக்கின்றார்களா என்பதை யோசிக்கவேண்டும். ஏன் பொருளாதாரத்தில் கூட, கடந்தகால லிபரல் கட்சியினர் வரவு செலவுத்திட்டத்தில் துண்டு விழாது சமர்ப்பித்ததைப் போல வலதுசாரிகளால்  செய்யமுடியவில்லை என்பதும் குறித்தும் யோசிக்கவேண்டும். துண்டு விழாத வரவு செலவுத்திட்டத்திற்காய் இனி கனடா 2015 வரை வ‌ழிமேல் விழிவைத்து காத்திருக்கத்தான் வேண்டும்.

வலதுசாரி அரசு செய்த சில 'சிறப்பான' விடயங்களை இனிப் பார்ப்போம்.

3.
எப்போதோ ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியிருக்கவேண்டிய கனேடியப் படைகள் இன்னும் முழுமையாக வெளியேறச் செய்யாது, வலதுசாரிகள் தொட‌ர்ந்து தடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆப்கானிஸ்தான் போருக்காய் மில்லியன்கணக்கில் பணம் செலவு செய்யப்படுகின்றது என்பது ஒருபுறமிருக்க, வாரமொருமுறை ஒரு கனேடியப் படையினராவது கொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள் என்பதைக் கவனிக்கவேண்டும். அதை விட மிக முக்கியமானது கனேடியப் படைகள் ஆப்கானிஸ்தானில் செய்யும் அட்டூழியங்கள். இந்த அட்டூழியங்கள் ஆவணப்படுத்தப்பட்டு பொதுவெளிக்கு காட்சிப்படுத்த வேண்டிய காலத்தில் ஹார்பரின் அரசு இதை கவனமாகச் சென்ற வருடம் மறைத்ததை நாம் ம‌ற‌ந்துவிட‌க்கூடாது. இதன் நீட்சியில் வலதுசாரிகளின் ஆட்சி கவிழும் நிலை வ‌ந்த‌போது, பாராளுமன்றத்தை ஹார்ப்பர் பலமாதங்களுக்கு ஒத்திவைத்து விடயத்தை ஆறப்போட்டதை நாம் கவனிக்கவேண்டும். இன்னும் கூட அந்த ஆவணங்கள் முழுமையாக வெளியிடப்படாததை இம்முறை வாக்களிக்கப் போகும் ஒவ்வொருவரும் நினைவிலிருத்தி வைக்கவேண்டும்.

இந்த வலதுசாரி அரசானது இஸ்ரேலியர்களுக்கு மிகத் தீவிரமான ஆதரவு நிலையைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்க‌ள். அநேக கனேடிய அரசுகள் இஸ்ரேலின் மீது மென்போக்கைக் கொண்டிருந்தாலும்,  ஹார்ப்பரின் அரசு மிகவெளிப்படையாக எவ்வித விமர்சனங்களுமற்று எல்லாவிடயங்களுக்கும் ஆத‌ர‌வு கொடுத்துக்கொண்டிருப்பதை நாம் அறிந்ததே. இதற்காய் எத்தனையோ விடயங்களை நாம் பட்டியலிடலாம்... லெபனான் மீது இஸ்ரேல் சிலவருடங்களுக்கு முன் விமானத்தாக்குதல் செய்தபோது பத்துக்கு மேற்பட்ட கனேடியர்கள் கொல்லப்பட்டார்கள். தன் நாட்டு மக்கள் கொல்லப்பட்டபோதும் அது குறித்து எவ்வித மனக்கிலேசமும் இல்லாது நமது மேன்மைக்குரிய பிரதமர் இஸ்ரேலின் தாக்குதலை நியாயப்படுத்திக்கொண்டிருந்தவர். ஏன் அண்மையில் பாலஸ்தீன அகதிகளுக்காய் நிவாரணப்பொருட்கள் கொண்டு செல்லப்பட்ட கப்பல் மிலேச்சனத்தனமாய் இஸ்ரேலியப்படைகளால் தாக்கப்பட்டபோதும் நமது வலதுசாரிகள் மெளனமாகவும், பின்னர் இஸ்ரேலுக்கான ஆதரவு நிலைப்பாட்டையும் எடுத்தவர்கள். இவ்வாறான பல காரணங்களால்தான் சில மாதங்களுக்கு முன் சர்வதேச மன்னிப்புச்சபை -எந்த அரசு என்று குறிப்பிடாது - இதுவரை காலமும் (உலகப்) பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வை முன்வைக்கும் நாடாக இருந்த கனடா, இன்று பிரச்சனைகளின் ஒருபகுதியாக மாறி தன் விழுமியங்களை இழந்துகொண்டிருக்கின்றது' என அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த வலதுசாரி அரசு எவ்வாறு மில்லியன்கணக்கான ம‌க்க‌ளின் வ‌ரிப்ப‌ண‌த்தை வீணே செலவழிக்கிறது என்பதற்கு நாம் பட்டியலா இடவேண்டும்.  ஜீ8/ஜீ20 மாநாடுக‌ளில் எவ்வளவு மில்லியன்கணக்கான பணம் ஊதாரித்தனமாகச் செலவிடப்பட்டது என்பதை அனைவ‌ரும‌றிவோம். பாதுகாப்பிற்காக எவ்வளவு பணம் செலவு செய்யப்பட்டும் அரசவிழ்ப்பாளர்களின் மிகத்தீவிரமான எதிர்ப்பால் தன் மானம் இழந்து க‌ன‌டா உலகின் முன் அவமானப்பட்டத்தை நாமறிவோம். மேலும் ஜீ/20 மாநாடு நடந்த அரங்கிற்கு பத்து நிமிடத் தொலைவில் மிகப்பெரும் ஒன்ராறியோ வாவி இருந்தும், ஒரு செயற்கையான வாவியை அரங்கிற்குள் அமைத்து மில்லியன் கணக்கில் முட்டாள்தனமாய்ப் பணத்தைச் செலவிட்டதை நாம் அவ்வளவு இலகுவில் மறந்துவிடமுடியுமா என்ன?

4.
கனடாவின் மருத்துவத் திட்டம் உலகிற்கு ஒரு முன்னோடியாக இருந்து வருகின்றது. எல்லோரும் அடிப்படை மருத்துவ வசதிகளை இலவசமாகப் பெறலாம் என்பது அதன் முக்கிய அம்சம். இப்போது அதையும் கொஞ்சம் கொஞ்சமாக தனியார்மயப்படுத்துவதை இவ்வரசு செய்துவருகின்றது. மற்றக் கட்சிகள் இவ்வாறு செய்வதைக் குற்றஞ்சாட்டும்போது ஹார்ப்பர் அது ஒரு மாற்றீட்டுத்திட்டம் (Alternative Plan) என மூடிம‌றைப்ப‌தை நாம் அறியாதவர்களும் அல்ல. தான் அர‌சு அமைத்தால், ம‌ருத்துவ‌னையில் அவ‌ச‌ர‌ச் சிகிச்சைக‌ளுக்காய் நீண்ட‌நேர‌ம் காத்திருக்க‌த் தேவையில்லை என‌ வாக்குறுதிய‌ளித்த‌ ஹார்ப்ப‌ர் அத்திட்ட‌த்தை ந‌டைமுறைப்ப‌டுத்த‌ அவ்வ‌ள‌வு அக்க‌றை காட்டாத‌தையும் நாம் நினைவிலிறுத்திக் கொள்ள‌வேண்டும்.

அண்மையில் போர்க்க‌ள‌த்தில் பாவிக்க‌ப்ப‌டும் விமான‌ங்க‌ளுக்காய் (Stealth Jets) 150 மில்லிய‌ன்க‌ள் செல‌வ‌ழிக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. இவ்விமான‌ங்க‌ளை மேலும் ப‌த்திருப‌து வ‌ருட‌ங்க‌ளுக்கு ப‌ராம‌ரிப்ப‌த‌ற்கான‌ செல‌வும் மில்லிய‌ன்க‌ளைத் தாண்டுகின்ற‌து. ஆனால் இதையெல்லாவ‌ற்றையும் விட‌ ஹார்ப‌ரின் அர‌சு குறிப்பிட்ட‌ செல‌வை விட‌ இர‌ண்டு ம‌ட‌ங்கு இவ்விமான‌ங்க‌ளுக்காய்ச் செல‌வ‌ழித்த‌தாய் த‌க‌வ‌ல் க‌சிந்திருக்கின்ற‌து. என‌வே அர‌சு செல‌விட்ட‌தை பொதுவில் வைக்க‌வேண்டும் என‌ எதிர்க்க‌ட்சிக‌ள் வினாவிய‌போது, எல்லாச் செல‌வையும் பொதுவில் வைக்க‌வேண்டிய‌தில்லையென‌ ஹ‌ர்ப்ப‌ர் கூறி உண்மையான‌ செல‌வை ம‌றைத்திருக்கின்றார். க‌ன‌டாவின் ச‌ரித்திர‌த்திலேயே ஹ‌ர்ப‌ரின் அர‌சு ம‌ட்டுமே ம‌க்க‌ளின் முன்வைக்க‌வேண்டிய‌ பொது ஆவ‌ண‌ங்களை எல்லாம் -ஒரு அர‌சு விரும்பினால் ம‌ட்டுமே வைக்க‌லாம்- என்று கூறியிருக்கின்ற‌து. ஆக‌ ம‌க்க‌ளால் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ ஒரு அர‌சு ம‌க்க‌ளின் முன் வைக்க‌ வேண்டிய‌தையே த‌ய‌ங்காம‌ல் ம‌றைக்கிற‌து என்றால் (ஆப்கானிஸ்தானில் க‌னேடிய‌ இராணுவ‌ம் செய்த‌ குற்ற‌ங்களின் ஆவ‌ண‌ம் உட்ப‌ட‌) இவ‌ர்க‌ள் யாருக்கான‌ அர‌சு என‌ வினாவ‌ வேண்டியிருக்கிற‌து.. அதுவும், ஒரு பாராளும‌ன்ற‌த்தில் பெரும்பான்மை இருக்கைக‌ள் கிடைக்காம‌லே இப்ப‌டி 'ச‌ர்வாதிக‌ளுக்குரிய‌' விட‌ய‌ங்க‌ளைச் செய்துகொண்டிருப்ப‌வ‌ர்க‌ள் பெரும்பான்மை அர‌சு அமைத்தால் என்ன‌வெல்லாம் செய்வார்க‌ள் என‌ யோசித்துப் பார்க்க‌வே அச்ச‌மாயிருக்கிற‌து.

இந்த‌ வ‌ல‌துசாரி அர‌சான‌து, ப‌ல‌ அத்தியாவ‌சிய‌ விட‌ய‌ங்க‌ளில் நிதிக்குறைப்புச் செய்திருக்கின்ற‌து என்ப‌தையும், பெருநிறுவ‌ன‌ங்க‌ளுக்கு ம‌ட்டும் தாராள‌மாய் வ‌ரிச்ச‌லுகை கொடுத்திருப்ப‌தையும் நாம் ம‌ற‌ந்துவிட‌க்கூடாது. முக்கிய‌மாய் க‌ன‌டாவிற்கு வ‌ரும் புதிய‌ குடிவர‌வாள‌ர்க‌ளுக்கான‌ சேவைக‌ள் ப‌ல‌வ‌ற்றை ஹ‌ர்ப்ப‌ரின் அர‌சு நிறுத்தியிருக்கின்ற‌து. புதிதாய் இந்நாட்டிற்கு வ‌ரும் ஒருவ‌ர் த‌ன்னை ஒரு அந்நிய‌ராக‌ உண‌ராது, இங்குள்ள‌ வாய்ப்புக்க‌ளையும் வ‌ச‌திக‌ளையும் ப‌ய‌ன்ப‌டுத்துவ‌த‌ற்கான‌ சேவைக‌ள் ப‌ல‌ க‌ன‌டாவில் தொட‌ர்ந்து வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டு வ‌ந்திருக்கின்ற‌து. இச்சேவைகளில் ப‌ல‌தை நிறுத்திய‌து ம‌ட்டுமின்றி, பெண்க‌ளுக்கான‌ ப‌ல‌ சேவைக‌ளையும் ஹ‌ர்ப்ப‌ரின் அர‌சு நிறுத்தியிருக்கின்ற‌து. அண்மையில் ஐ.நாடுக‌ள் ச‌பையில் வெளியிட்ட‌ அறிக்கையில் பெண்க‌ள் சார்பான‌ விட‌ய‌ங்க‌ளில் உல‌கில் க‌ன‌டா 19வ‌து இட‌த்தில் இருக்கிற‌து. இல‌ங்கை க‌ன‌டாவிற்கு முன்பான‌ ப‌ட்டிய‌லில் இருப்ப‌தும் க‌வ‌னிக்க‌த்த‌க்க‌து. வ‌ல‌துசாரிக‌ள் பெரும்பான்மை அர‌சு அமைத்தால் க‌ருச்சிதைவு செய்வ‌தை ஒரு குற்ற‌மாக‌ ஆக்குவார்க‌ள் என்ப‌தும், கனடாவில் சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்படும் ஓரினப்பாலினரின் திருமணத்தை இரத்துச் செய்வார்கள் என்பதும் சொல்லித்தெரிய‌வேண்டிய‌தில்லை. எனெனில் அதற்கான‌ எல்லா முஸ்தீபுக‌ளையும் ஹார்ப்ப‌ரின் அர‌சு செய‌லிலும் சொல்லிலும் நிக‌ழ்த்திக்கொண்டிருக்கின்றார்க‌ள்.

இவை எல்லாவ‌ற்றையும் விட‌ ஹார்ப்ப‌ரின் அர‌சு முன்வைக்கும் ஆப‌த்தான‌ விட‌ய‌ம் 'தேசிய‌ம்' ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌து. லிப‌ர‌ல் க‌ட்சியின் த‌லைவ‌ர்
இக்னாடிஃவ் அமெரிக்காவில் இருந்த‌போது க‌ன‌டா குறித்து விம‌ர்சித்த‌தை எல்லாம் விள‌ம்ப‌ர‌ப்ப‌டுத்தி, 'இப்ப‌டி க‌ன‌டாவை வெறுப்ப‌வ‌ரையா நீங்க‌ள் பிர‌த‌ம‌ர் ஆக்க‌ப்போகின்றீர்க‌ள்?' என‌ வ‌ல‌துசாரிக‌ள் கேட்கின்றார்க‌ள். ஆனால் என்ன‌ முர‌ண்ந‌கை என்றால், ஹ‌ர்ப்ப‌ரே வ‌ல‌துசாரி புஷ்சின் ஆட்சிமுறைக‌ளை அப்ப‌டியே பின்ப‌ற்றிக் கொண்டிருக்கின்றார். புஷ்சைப் போல‌ ம‌ற்ற‌ நாடுக‌ளை ஆக்கிர‌மிக்கும் போர் ந‌ட‌வ‌டிக்கைக‌ளுக்கு ஆத‌ர‌வு கொடுப்ப‌து, அமெரிக்காவில் இருக்கும் பெரும் சிறைச்சாலைக‌ளைப் போல‌ இங்கும் பிர‌மாண்ட‌மான‌ சிறைச்சாலைக‌ளைக் க‌ட்டுவ‌து, இதுவ‌ரை ந‌டைமுறையில் இல்லாத‌, தாங்க‌ள் வைத்திருக்கும் துப்பாக்கிக‌ளுக்கு உரிமை எடுக்க்க‌த் தேவையில்லை என‌ ச‌ட்ட‌த்தைக் கொண்டுவ‌ர‌ முய‌ல்வ‌து உட்ப‌ட‌ ப‌ல‌ விட‌ய‌ங்க‌ள் அப்ப‌டியே அமெரிக்கா வ‌ல‌துசாரிக‌ளின் ஆட்சிமுறையையே ஒத்திருக்கின்ற‌து. அதைவிட‌ ந‌கைச்சுவை என்ன‌வென்றால், க‌ன‌டாவில் இதுவ‌ரையில்லாத‌ ந‌டைமுறையாக‌ த‌ன‌து அர‌சை 'க‌னேடிய‌ அர‌சு' என்று அழைக்காது 'ஹார்ப்ப‌ரின் அர‌சு' என‌ அழைக்க‌வேண்டுமென‌ அர‌சாங்க‌ம‌ட்ட‌த்தில் ஹ‌ர்ப்ப‌ர் உத்த‌ர‌விட்டிருப்ப‌து.

5.
இதைவிட‌ த‌மிழ‌ர்க‌ள் அண்மைக்கால‌த்தில் இர‌ண்டு க‌ப்ப‌ல்க‌ளில் வ‌ந்த‌போது வ‌ல‌துசாரிக‌ள் எவ்வாறு ந‌ட‌ந்துகொண்டிருந்தார்க‌ள் என்ப‌தை நாம் ம‌ற‌ந்துவிட‌க்கூடாது. நேற்றுக் கூட‌ வ‌ன்கூவ‌ரில் பேசிய‌ ஹார்ப்ப‌ர் இவ்வாறு வ‌ந்த‌வ‌ர்க‌ளை வ‌ழிநட‌த்திய‌வ‌ர்க‌ளை 'பாம்புத்த‌லைய‌ர்க‌ள்' (snakeheads) என‌ க‌டுமையான‌ திட்டித் தீர்த்திருக்கின்றார். க‌ன‌டாவில் இர‌ண்டாவ‌து க‌ப்ப‌ல் வ‌ந்த‌போது, அவ‌ச‌ர‌ம் அவ‌ச‌ர‌மாக‌ இப்ப‌டிக் க‌ப்ப‌லில் வ‌ருப‌வ‌ர்க‌ள் மீது க‌டும் த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌வேண்டும் என்ப‌து உட்ப‌ட‌ ப‌ல‌ ச‌ட்ட‌ மாற்ற‌ங்க‌ளை ஹார்ப‌ரின் அரசு பாராளும‌ன்ற‌த்தில் முன்வைத்த‌து. எனினும் லிப‌ரலின‌தும், என்டிபியின‌தும் முய‌ற்சியினால‌ அச்சீர்திருத்த‌ங்க‌ள் தோற்க‌டிக்க‌ப்ப‌ட்டு ச‌ட்ட‌மாக்க‌ப்ப‌டுவ‌து த‌டுக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. த‌ங்க‌ள் நாட்டில் உயிர்வாழ‌முடியாது என்ப‌தால் ப‌ல‌ அபாய‌ங்க‌ளைக் க‌ட‌ல்க‌ளில் ச‌ந்தித்தும், நிறைய‌க் க‌ட‌ன் பெற்றும் வ‌ரும் ம‌க்க‌ளை கொஞ்ச‌மேனும் ம‌னிதாபிமான‌த்தோடு புரிந்துகொள்ளாத‌ அர‌சை நாம் எப்ப‌டித் தேர்ந்தெடுக்க‌முடியும்? இவ‌ர்க‌ளின் (வெள்ளைய‌ரின்) மூத்தோர்க‌ள் நாடு நாடாக‌ ஆக்கிர‌மித்து அங்கிருந்த‌ வ‌ள‌ங்க‌ளையும், ம‌க்க‌ளையும் சூறையாடிய‌து போல‌வ‌ன்றி, இன்று மூன்றாம் உல‌க‌ நாடுக‌ளிலிருந்து இங்கே வ‌ருப‌வ‌ர்க‌ள் தாம் வ‌ள‌மாய் வாழ‌ சிறு இட‌ம் கேட்கின்றார்க‌ளே த‌விர‌ இங்குள்ள‌வ‌ர்க‌ளை ஆக்கிர‌மித்து வாழ‌ அல்ல‌ என்ப‌தை நாம் உறைக்கும்ப‌டி இவ‌ர்க‌ளுக்குச் சொன்னால் கூட‌ இவ‌ர்க‌ள் கேட்பார்க‌ளா என்ன‌? க‌ன‌டா போன்ற‌ மேற்கு நாடுக‌ள் ஏதோ பெரிய‌ம‌னிதாபிமான‌த்தால் ம‌ட்டும் புதிய‌ குடிவ‌ர‌வாள‌ர்க‌ளை உள்ளெடுக்கிற‌து என்று நாம் நினைத்தால் இவ‌ர்க‌ளின் அர‌சிய‌ல் அறியாச் சிறுபிள்ளைக‌ள் ஆகிவிடுவோம் நாம். இவ‌ர்க‌ளின் ச‌ன‌த்தொகை மிக‌ ம‌ந்த‌மாக‌வே வ‌ள‌ர்ச்சியுறுவ‌தால் பொருளாதார‌ வ‌ள‌ர்ச்சிக்கு நிறைந்த‌ ம‌னித‌வ‌லுத் தேவைப்ப‌டுகின்ற‌து. ஆக‌வே நிறைய‌ ம‌னித‌ர்க‌ளை உள்வாங்க‌வேண்டிய‌ நிர்ப்ப‌ந்த‌ம் இந்நாடுக‌ளுக்கு ஏற்ப‌டுகின்ற‌து.   இதுவே மிக‌ முக்கிய‌ கார‌ண‌மாகும். இல்லாவிட்டால் இன்று பொருளாதார‌ம் ம‌ந்த‌ம‌டையும்போது புதிய‌ குடிவ‌ர‌வாள‌ர்க‌ளை உள்ளெடுப்ப‌தை ஏன் மிக‌வும் க‌ட்டுப்ப‌டுத்துகின்றார்க‌ள் என்ப‌தை இந்த‌ அமெரிக்க‌/ஜ‌ரோப்பியா நாடுக‌ளை முன்வைத்து நாம் யோசிக்க‌வேண்டும்.

வ‌ல‌துசாரிக‌ளின் முன்வைத்து எழுதுவ‌தால் ஏதோ ம‌ற்ற‌க்க‌ட்சிக‌ள் எல்லாம் சிற‌ப்பான‌ க‌ட்சிக‌ள் என்ப‌தில்லை. வ‌லதுசாரிக‌ள் ஆட்சியில் இருப்ப‌தால் அவ‌ர்ளைப் ப‌ற்றியே நிறைய‌ப் பேச‌வேண்டியிருக்கிற‌து என்ப‌தோடு யாரைத் தேர்ந்தெடுக்கின்றோம் என்ப‌தை அல்ல‌, யாரைத் தேர்ந்தெடுக்க‌க் கூடாது என்ப‌திலேயே நாம் இந்நேர‌த்தில் அவ‌தான‌மாக‌ இருக்க‌வேண்டும் என்ப‌தை இங்கே கவ‌ன‌ப்ப‌டுத்தியிருக்கின்றேன். வ‌ல‌துசாரிக‌ளே வெல்வ‌த‌ற்கான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் இருப்ப‌தாய் க‌ருத்துக்க‌ணிப்புக்க‌ள் கூறுகின்ற‌ன‌. க‌ன‌டாவில் க‌ருத்துக்க‌ணிப்புக்க‌ளும், தேர்த‌ல் முடிவுக‌ளும் அவ்வ‌ளவு வித்தியாச‌ப்ப‌டுவ‌தில்லையென‌பதை நாம‌றிவோம். ஆக‌வே அவ்வாறு வ‌ல‌துசாரிக‌ள் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்டாலும், ந‌ம‌க்கு இர‌ண்டாவ‌து தெரிவு இருக்கிற‌தென்ப‌தையும் நாம் ம‌ற‌ந்துவிட‌க்கூடாது. அதாவ‌து வ‌ல‌துசாரிக‌ளை  ஒரு பெரும்பான்மை அர‌சை அமைக்க‌விடாது த‌டுக்க‌வாவ‌து நாம் முய‌ற்சிக்க‌வேண்டும்.

வரலாற்றின் பக்கங்களைப்புரட்டிய ஆதிமனிதன் - II

Monday, March 28, 2011

-ஹெச்.வி.ரசூல்
(நன்றி மணற்கேணி, பிப்ரவரி 2011)

(முந்தைய‌ பாக‌த்திற்கு)

புராதனமாக வாழ்ந்து அனுபவித்த மண்ணின் கலாச்சாரமும், வன்முறை பிதுக்கித்தள்ள சொந்த மண்ணைவிட்டு ஐரோப்பிய மண்ணைப் புகலிடமாக்கி வாழ்தலில் உருவான புலம்பெயர் சூழலின் கலாச்சாரமும் ஒன்றுக்கொன்று நினைவடுக்குகளிலும் மொழியடுக்குகளிலும் ஊடுருவிப் பரவுகின்றது. மேற்கத்திய வாழ்வு முறைக்கு ஆளாக்கப்பட்ட அகதி வாழ்வில் தன் பூர்வீக பண்பாட்டிலிருந்து பிடுங்கி வெளியே வீசப்பட்ட செடியின் இலைகள், கொம்புகள் உலர்ந்து போயிருந்தாலும் அதன் வேர்களில் ஈரப் பசபசப்பு இருப்பதைப் போன்று புகலிடக் கலாச்சாரச் சூழலின் அழுத்தத்தின் அடி ஆழத்தில் சொந்த பண்பாடு உரையாடலாய்க் குவிந்து கிடக்கிறது.  இதன் நிலப்பரப்பு, ஞாபகங்களின் உள் அடுக்குகளிலிருந்து உருவாகிறது.  இளங்கோவின் கவிதைகளிலும் இந்தப் பூர்வீகப் பண்பாட்டு வேர்களும் அழிக்கப்படாத ஞாபங்கங்களும் நெருக்கம் கொள்கின்றன.

மரணத்திற்குள் வாழ்தலையும், வாழ்தலுக்குள் மரணத்தையும் இளங்கோவின் கவிதைகள் பேசுகின்றன. தனது அப்பாவின் அப்பா தற்கொலை செய்த அந்தக் கிணற்றிலேயே தானும் ஒருநாள் தற்கொலை செய்வேன் என்றிருந்த துயரத்தையும் மரணத்தை உருவாக்கும் போரிலிருந்து தப்பித்தன் வழியாகத் தனக்கு வாழ்தலை உருவாக்கியுள்ள பெருந்துயரத்தையும் இளங்கோவின் கவிதை எழுத்துக்களில் பதிவு செய்கிறது.

அப்பாவின் அப்பா கோபத்தில்
தற்கொலைத்த அங்கேதான்
என்றோவோர் நாள் தவறி வீழ்ந்து
என் வாழ்வு முடியப்போகிறதென்று
நினைத்த பொழுதில்
ஆயுள் அதிகமெனத் துரத்தியது போர்

ஈழத்து ஒழுங்கைகளில் பின்மாலைப் பொழுதொன்றில் கரங்கள் கோர்த்து குதூகலமாய் நடந்ததொரு பிள்ளைப் பிராயம், ஒரு மழைக்காலத்தில் ஒற்றை வயலின் தந்தியின் சுருதியில் பெருங்குரலெடுத்துப் பாடிய ஆதிமொழியின் பாடலையும் பத்திரப்படுத்துகிறது. தனது இல்லாமையை அம்மாவுக்கு ஞாபகப்படுத்தக் கூடும் நத்தையைப் போல சுருண்டுகிடக்கும் போர்வையையும், மல்லிகைப் பூ வாசம் கமழந்தபடி இருந்திருக்கும் அந்த மண்ணில் கிளித்தட்டு விளையாட்டில் குழப்படி செய்த நண்பனைப் பறநாயேயென விளித்த உயர்சாதித் திமிரின் குரலும், இராணுவத்தால் சிதைக்கப்பட்ட தோழிக்கு முன்பொருகாலம் நாவற்பழம் பொறுக்கிக் கொடுத்த நினைவுக‌ளுமென‌ இந்தப் பூர்வீக மண்ணின் ஞாபகங்கள் எல்லாவித சந்தோசங்களுடனும் ஆற்றுப்படுத்த முடியாத துயரங்களுடனும் வரைபடமாய் விரிகிறது. தென்னை சூழந்த கடற்கரையில், ஊரின் ஞாபகம் அலையலையாய்க் கிளம்ப விழிகள் இரண்டிலும் ஈரம் கசிந்த ஒரு நாடற்றவனின் குறிப்பாக இந்த எழுத்துக்கள் உருக்கொண்டு அலைகின்றன.

புலம்பெயர் மண்ணில், நோயுற்றிறந்த அம்மம்மாவை நினைவுபடுத்தி அடிக்கடி பஸ்ஸில் பயணிக்கும் தமிழ் மூதாட்டியின் தனிமை, அலைச்சல், துயரம், மெளனம் தொடர்கிறது. அந்நியப்பட்டுப் போன அப்பெண்ணைக் கடந்துபோகும் மனது, இந்த வயதான பெண்களுக்கு எங்கள் சொந்த மண்ணில் எப்படியொரு வாழ்வு இருந்திருக்கக் கூடும் என ஏக்கம் ஒன்றைப் பதிலாகக் கூறுகிறது. சித்ரா பவுர்ணமியன்று ஊர் வைரவர் கோயில் ஞாபகத்திற்கு வருகிறது.

மூன்றாம் தத்தைக் கடந்துவிட்டால் வாழ்வு சுபம் என அடிக்கடி சொன்ன அம்மாவின் வார்த்தைகளும், கீரிமலைக் கேணியில் பாசி வழுக்கி மூழ்கி அதிசயமாய்த் தப்பிப் பிழைத்ததையும், ஒற்றை எஞ்சினுடன் பதினொரு படகுகளில் சவாரி செய்து, தாய் தேசத்திலிருந்து மீண்டு சென்ற கடலின் தத்தையும் ஞாபகச் சூழல்களில் எழுதிச் செல்கிற இளங்கோவின் வரிகள் புலம்பெயர் சூழலில் ஆழ்கடல் தேடி மாறி மாறி வலிக்கும் கானாய் சவாரி உடனான உரையாடலையும் நிகழ்த்திக் காட்டுகிறது. இரு வேறு வாழ்வுலகங்களின் சந்திப்பு இது.

இளங்கோவின் கவிதை முன்னிலைப்படுத்தும் தான் என்பதற்கு மாற்றான மற்றமை பல்வித நிலைகளில் வாசகனுடன் தொடர் உரையாடலை நிகழ்த்துகிறது. காதலின் பிரிவாகவும் அதுவே மற்றொரு நிலையில் புலம்பெயர்தலின் பிரிவாகவும் இணை நிலையில் இயங்குகிறது. இக்கவிதைகளில் வெளிப்படும் நீ/உன் என்பதான எதிர்தரப்பு குறித்த நானின் புரிதல், சிதைவுகளின், அவநம்பிக்கையின் பதற்றத்தின் வரிகளாக விரிவடைகின்றன. இந்த 'நீ'யும் ஒற்றைத்தன்மையை மீறி இயங்குகிறது. ஒரு பெண்ணின் கடந்தகால துயர் நிறைந்த வாழ்வும் புலம்பெயர்ந்த மனிதனின் துயர் பெருக்கெடுத்து ஓடும் வாழ்வும் இங்கு சந்தித்துக் கொள்கின்றன. வெறுமையின் தடங்களை அழிப்பதன் மர்மமாய் ஏதோ ஒரு பெண்ணின் வருகை நிகழ்கிறது. அந்த 'நீ' யாரேனும் ஒருவனின் காதலியாகவோ அல்லது குழந்தையொன்றின் தாயாகவோ கூட இருக்க நேர்கிறது. தனிமையின் வலி உச்சப்படுகையில் அதனை ஒரு பூச்செடியாக வளர்த்து பகிரமுடியாத ஆசைகளையும் பிரியங்களையும் அச்செடியின் இலைகளாகவும் கனிகளாகவும் மலர வைக்கிறது. அந்த 'நீ'யின் வருகையில் செடியின் உயிர் சாம்பல் நிற முயலாய் உருமாறுகிறது.

'எவரையும் அனுமதித்திராத/ என் தோட்டமடையும் புதர் படர்ந்த ஒற்றையடிப் பாதையில் மலர்ந்து வந்து/ பிரியம் கூறுகையில் செவியிரண்டும் சிலிர்க்க/ ஒரு சாம்பல் நிற முயலாய் மாறிவிடுகிறது/ எனது செடி.'

இந்த மாற்றுத்தரப்பின் 'நீ' ஒரு ஆண்மையத்தின் பாலியல் அதிகாரத்திற்கும் அரவணைப்பிற்கும் ஏங்கித் தவிக்கும் குரலாகவும் சன்னதமாக ஒலிக்கிறது. சென்றமுறை மாதவிலக்கு நேரத்தில் நெஞ்சில் தலைசாய்த்து கூந்தல் கோதிய முன்னிராப் பொழுதில் பரிவோடு இருப்பதைப் போல் பிறகும் நீ இருப்பாயா என்று அவனிடம் இறைஞ்சுகிறது. பாலியல் கலவியில் ஆடைகள் களைந்த மூன்றாம் ஜாமத்தில் தன் மூக்குத்தியை மூர்க்கமாய் பிடுங்கி எறியாமலிருக்க வேண்டிக் கொள்கிறது.

என்றாலும் இந்த இருப்பு நிலையற்ற உறவாய் மாறிவிடுகிறது. புரிதலற்ற, முரண்பட்ட, எதிரிடையாய் மோதுகின்ற ஒன்றான இந்த உறவுச் சிதைவின் கோலம் அழிக்கப்பட்ட சுவடின் ரூபமாகிறது. முதுகைக் காட்டிக் குழ்ந்தையாய்ப் போர்வையில் சுருண்டிருக்கும் அவளை விரல்களால் தீண்டவோ இழுத்து அணைப்பதற்கோ உரிய சாத்தியங்களை இல்லாமல் ஆக்கிவிடுகிறது. ஒட்டியிருப்பதை வெட்டி விடலாமென்றால் ரத்தம் தெறிக்கக் கத்தியை முதலில் யார் வீசுவதென்ற தயக்கமும் இருக்கிறது.

இந்த விலகலும் பிரிவும் இளங்கோவின் படிமங்களால் தொட்டுணர்த்தப்படுகிறது. அது அந்திவானத்தில் எதிர்த்திசைகளில் சிறகடித்துப் பறந்துபோய்த் துயர்களை மீட்டிய இரண்டு குருவிகளாகிறது. தேவாலயத்தின் உச்சியிலிருந்து பலகணியில் கரையொதுங்கிய புறாவின் சிறகுகளாகிறது. இந்தச் சிதைவின் படிமம் இன்னொரு தளத்தில் கந்தக‌வெடியையும், ரத்தச் சகதியையும் சுமந்தபடி ஒற்றைச் சிறகுடன் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளாகின்றன.

இளங்கோவின் கவிதைகளில் மரணத்தின் பயம் தொற்றிக் கொள்கிறது.

யன்னலோரத்தில் - நேசம்
நிரம்பி வழிந்த பொழுதில்
தந்திட்ட ஐந்தூரியச் செடி
இரையைக் கவ்வத் துடிக்கும்
மரநாயொன்றின் வன்மத்துடன்
அசையாதென்னைக் கவனிக்கிறது.

நேசத்தின் வெளிப்பாடு கொலை வெறிப் பகையாக உருமாறுகிறது. கொலைகளும் மரணங்களும் இடைவிடாது துரத்தியபடி இருக்கின்றன. ஓநாயின் பற்களில் பிரியம் வைத்தவர்கள் கோரமாய்த் தொங்குகின்றார்கள். ஒழுங்கு தவறாத லயத்தில் வேலை, உறக்கம், கணினி வாசிப்பு என்பதைப் போலக் கொலைகள் நிகழ்தலும் அன்றாட நிகழ்வாகிப் போகிறது. எனக்கொரு கொலை நிகழாக் காலம் வேண்டுமென மனது யாசிக்கிறது. இலையுதிர்த்த மரங்களின் கிளைகளில் தொங்கும் உறைந்துபோன பனியாக மனது இறுகுகின்றது. ஒவ்வொரு காலையும் தற்கொலை செய்வதற்கான தருணமாக மாறுகிறது.

புலம்பெயர் சூழலின் முக்கியப் பிரச்சினைகளாக, ஈழத்தின் நீட்சியாகத் தமிழ்க் குழுக்களுக்கிடையிலான படுகொலைகளும் புலம்பெயர்ந்த தமிழ் யுவதிகளின் தர்கொலைச் சாவுகளும் உறவின்மைகளும் மனோவியல் சிக்கல்களும் எழுகின்றன. இந்த வகை கனடிய தமிழ்ச்சூழலின் குரூர இறப்பின் எதார்த்த சுவடுகளை இளங்கோவின் கவிதைகளில் உணரலாம். அந்நியப்பட்டுப் போன மனத்தின் அவலம் சமூகம் நிறுவிய ஆதிக்கங்களின், ஒழுங்குகளின் புழுக்கம் தாங்காமல்

'கொண்டாடிக் கொண்டிருக்கின்றேன்
சமூகத்துடன் ஒன்றி வாழ முடியா
எனது சுயத்தை போதையுடன்'
எனச் சொல்லி சமரசப்படுத்துக்கொண்டு ஒரு விளிம்புநிலை வாழ்வைத் தேர்வு செய்துவிடுகிறது.

புலம்பெயர் வாழ்வு கலாச்சாரச் சிதைவை எதிர்கொள்கிறது. பாலியல் நெருக்கடியும் முரண்பாடும் மனத்தின் பிளவுகளும் உந்தித் தள்ளுகின்றன. நடுநடுங்கியபடி விரகமெழும் உறைபனிக்காலத்தில் கொஞ்சம் கொச்சைத்தமிழும் அதிகம் ஆங்கில‌மும் நாவில் சுழலும் அன்புத் தோழியுடன் மரபுகளைச் சிதைத்தபடி கலவியும் கிறங்கலுமாய்க் கழிகிற வாழ்வு பதிவாகிறது. மழைக்காலத் தெருவில், திசைகள் தெரியாப் புராதனத் தெருக்களில், ஒளியின் அரூப நடனத்துடன் பயங்களற்றுப் பயணிக்கிறது. மதுவருந்தி மயங்கும் வெள்ளியிரவுகள், நள்ளிரவுக்கப்பால் தொடர்கிற மதுவும் நடனமும், மதுபான விடுதியில் கோப்பையை நிறைக்கும் மது, நரம்புகளைத் துளைக்கும் இசை, எனக் களியாட்டங்களாய்ப் புராதன உலகத்திலிருந்தும் புலம்பெயர் உலகத்திலிருந்தும் வேறுபட்ட மூன்றாவது வெளி உருவாகிறது. புத்தர் கூட, அருந்துவதற்கு மிதமாய்க் கலந்து வைத்திருந்த வோட்காவைப் பகிர்ந்தபோது ஒவ்வொரு மிடறும் தாகத்திற்கு இதமாய் இருக்கிறதென்று கூறுகிறார். சில நேரங்களில் குறியென விறைத்து நிற்கும் துப்பாக்கி முனையின் நினைவு அச்சுறுத்துகையில் கலவியும் காமமும் கூடப் பயம் சார்ந்த வாழ்தலின் குறியீடாகவும் அதிகாரத்தின் பயமுறுத்தலாகவும் உருமாறிவிடுகிறது.

வீடற்றவர்களை நகரம் ஏற்றுக்கொள்வதில்லை. ஒரு செர்ரிப்பூ உதிர்ந்து நிலத்தை வந்தடைவதற்குள் கட்டவேண்டிய கடன் ரசீதுகள் மலைபோல் குவிகின்றன என்பதான புலம்பெயர்ந்தவர்களின் பொருளியல்சார் வாழ்வியல் நெருக்கடியும் வாழ்தலை துரத்துகின்றன. தரிசாகிக் கொண்டிருக்கும் மனத்தில் நீயொரு மரம் நட முயல்கிறாய் இதில் தளிரொன்று அரும்புவது அவ்வளவு இலகுவல்ல என வெறுமையின் தடத்தை வரைந்து காட்டுகிறது.

வாழ்தலை எதிர்நோக்கிய இருப்பிற்கு மாற்றாக மரணத்தை எதிர்நோக்கிய உடல்களின் இருப்பு தயாராகி விடுகிறது. இங்கு உடல்கள் எழுதும் காவியத்தின் முடிவாக மரணம் உருவகப்படுத்தப்படுகிறது. சுற்றிவளைக்கும் துப்பாக்கிகளுக்குக் காணிக்கையாக்கி சவப் பெட்டிகளுக்குள் சடலங்கள் அடுக்கப்படுகின்றன.

இருப்பின் சமன் குலைவு நிகழ, எதிர்பார்க்கப்பட்ட மரணம் என்பதைவிட எதிர்பார்க்கப்படாத தற்செயல் மரணமாக நிகழ்தலை மனது அறிவிக்கிறது. இது எதிரிகளின் தாக்குதலுக்கு ஆளாகி குணடடிபட்டு இறக்கும் மரணம் என்பதைத் தாண்டி எதிரிகளை அழிப்பதற்கு உடலையே குண்டாக்கி அழிவின் எல்லையை எட்டும் மரணமாகிறது. எந்தவித அடையாளமற்ற, பெயரற்ற வனாந்தரத்தில் நிகழும் மரணமாக உருமாறுவதற்கும் மனம் தயார் நிலையாகிறது.

தடயங்களின்றி
இந்த ஆண்டு இப்படி இறப்பு
இன்னபிற குறிப்புகளின்றி
பெயரறியா வனாந்தரத்தில்
கொண்டாட விரும்புகிறேன் - எனது மரணத்தை.

இளங்கோவின் கவிதைகளில் இடம்பெறும் அழகியல் படிமங்களில் ஒன்று பனி.

இரவைப் பனிமூடிக்கிடக்க
விரல்களிலும் படிகிறது குளிர்
நிழல்களைப் போல அசைந்தாடுகிறது
கடந்தகாலத்தின் துயர்

இந்த வரிகள், கடந்தகாலத்தின் துயர் மிகுந்த வரலாற்றை ஞாபகப்படுத்துகிறது. இது ஈழமக்கள் மீது ஏவப்பட்ட ராணுவ வன்முறைகள், படுகொலைகள், பாலியல் சிதைப்புகள், கூட்டு வன்புணர்ச்சி, பலாத்காரம் என்பதான எல்லைகளினூடே பயணப்படுகின்றது.

வன்புணர்ந்துவிட்டு
கிணற்றிலும் கிரனைட்டிலும்
அடையாளங்களைச் சிதைத்துவிட்டு
எகத்தாளமாய்ச் சிரிக்கவும் செய்யுங்களடா

எனத் தொடரும் வரிகளில் ஈழப்பெண் கோணேஸ்வரியைப் பத்து இலங்கை காவலர்கள் சேர்ந்து பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி, கூட்டுப்புணர்ச்சி செய்து அடையாளம் தெரியாமல் சிதைக்க, யோனியில் கிரானைட் வைத்து வெடிக்கச் செய்த வன்கொடுமை மெளன வரலாய்ப் புதைந்துள்ளது.

இலங்கை ராணுவம் மட்டுமல்ல பன்னாட்டு ராணுவம் இலங்கைக்குள் நிகழ்த்தும் தமிழன் மீதான இன அழிப்பும் மிகக் கொடூரமானது. உள்நாட்டுப் போர்ச்சூழலில் முன்பு அமைதியை நிலைநாட்டுவதற்காய் சென்ற அமைதிப்படையினர் நிகழ்த்திய வன்கொடுமையும் இளங்கோவின் வரிகள் விமர்சனம் செய்கிறது.

எதிர்வீட்டு அக்காவின் ஆடைக்குள்
குண்டிருப்பதாய்
எச்சில் தெறிக்கும் பரிகசிப்புடன்
அமைதியானவர்கள்
முலைகள் திருகிக் கூட்டாய்ப் படர்கையில்
அசையாய்ச் சாட்சிகளாவது
நானும் மதியவெயிலும்

இந்த வகை இழப்பீடுகளுக்கு மாற்றாக எதை முன்வைப்பது? அழிக்கபப்டும் உடல்களும் வாழ்வும் பழி தீர்ப்பதற்கான சாத்தியம் இருக்கிறதா என்கிற கேள்வி சமகால வாழ்வியல் தளத்தில் எழுப்பப்படுகிறது. எல்லா வாசல்களும் மூடப்பட்ட பதற்றமான சூழலில் மிச்சமிருக்கும் முள்வேலிகளுக்குள் வாழும் தமிழர்களின் மறுகுடியேற்றம் என்பதான சிந்தனையோட்டங்களே மிஞ்சுகின்றன. ஒரு படைப்பு நிலையில் நிகழும் சாத்தியம் என்பது பழிதீர்க்கும் படலமாகவே புனைவு எழுத்தில் தோற்றம் கொள்கிறது.

வரலாற்றின் இருண்ட குழிகளிலிருந்து
யோனிகளும் முலைகளும் எழுந்து வந்து
பூர்வீக நிலங்களிலிருந்து
அடியோடு வேரறுக்கும் இந்தப் பாவிகளை

என எழுதிச் செல்லும் இளங்கோவின் எழுத்தில் அழிக்கப்பட்டவற்றின் தீவிர அரசியல் மேலெழும்பி வருகிறது.

பூர்வீக நிலம் அபகரிக்கப்பட்ட வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிய ஆதிமனிதன், தேவதைகள் மழைக்காலத்தில் அனுப்பிய நாககன்னியுடன் பிணைந்து மலர்வித்த குழந்தைகளின் குதூகலத்தை வந்திறங்கிய கடற்கொள்ளையர்கள் அபகரிக்கின்றனர். விரும்பியதைப் புனைந்து விரும்பியதை அருந்தி இயற்கையாய் வாழ்ந்த நாககன்னியை வன்மத்துடன் புணரத் துடித்த குறிகளின் வசீகரப் பேச்சால் ஆதிமனிதன் தன் சுயத்தைத் தொலைக்கிறான. ஒரு அமாவாசை இரவில் நாககன்னியும் பச்சைக்குத்தப்பட முடியா குழந்தைகளும் கொன்றொழிக்கப்படுகின்றனர். இந்த நாககன்னி தொன்மம் இழந்துபோன ஈழத்தின் குறியீடு. கொன்றொழிக்கப்பட்ட தமிழ் இனத்தின் வரலாறு.  அழிக்கப்பட்ட வரலாறு புனைவின் உச்சமாகி நம்முடன் செயலூக்கத்திற்கான உணர்வெழுச்சியைப் பகிர்ந்துகொள்கிறது.

(27.11.2011 அன்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிய ஆதிமனிதன்

Sunday, March 27, 2011



-ஹெச்.வி.ரசூல்
(நன்றி மணற்கேணி, பிப்ரவரி 2011)

ஈழத்துப் புலம்பெயர் இலக்கியங்களில் சிங்களப் பேரினவாத அரச அதிகார வன்முறையால் பாதிக்கப்படும் தமிழினத்தின் சாவுகள், துயரங்கள் உள்ளீடாக நிரம்பி வழிகின்றன. தமிழ்ச் சகோதரப் போராளிக் குழுக்களிடையே வன்மமாக வளர்ந்துவிட்ட பகை சொந்த இனத்தின் அழிவின் துரத்தல்களாக வெளிப்படுகின்றன. கடலோரத்து கத்தோலிக்கத் தமிழ்க் கிறிஸ்தவமும் தமிழ் இஸ்லாமியமும் தமிழ் இந்து சமய அடையாளஙகளுடனான மோதல்களாகவும் வெளிப்பட்டுக் கொள்கின்றன. தமிழ் அடையாளங்களினூடே ஆதிக்கச் சாதிகளின் செல்வாக்கும் சமூகரீதியான ஒடுக்குமுறை தலித்துக்களின் மீது நிகழ்வதும் படிநிலை சாதீய கட்டுமானத்தைத் தக்கவைத்துக் கொள்வதும் நிகழ்கின்றன. இவற்றின் சூழலில் உயிர் அழிப்பையும், உடல் சிதைப்பையும் புலம்பெயர் படைப்புலகம் முன்னெடுத்துச் செல்கிறது.

இரண்டாயிரத்திற்குப் பிறகான ஈழத்துக் கவிஞர்களின் படைப்புகளிலும் புலம்பெயர் எழுத்துக்களிலும் நிலவியல்சார் ஒலிகளும் மண்சார்ந்த பெருந்துயர்களும் அனுபவ வெளியினூடே நீக்கமற நிறைந்துள்ளன. இக்காலகட்டத்தில் தீவிரமாக எழுதும் ஏறத்தாழ முப்பது கவிஞர்களையாவது அடையாளம் காட்டமுடியும்.

கிளிநொச்சி, வன்னிப்பகுதியின் பிரதேச அடையாளம் சார்ந்த போர்வதைத் துயரத்தையும் குழந்தைமையின் நிராதரவையும் தீபச்செல்வனின் பதுங்குகுழியொன்றில் பிறந்த கவிதை இவ்வாறாக எழுதிச் செல்கிறது. 'நான் கடும் யுத்தப் பேரழிவின்/ பிறந்ததாய்/ அம்மா சொன்னாள்/ எனது குழந்தையை நான் இந்தப் பதுங்கு குழியில்தான்/பிரசவித்திருக்கிறேன்.'

துவக்குகளின் அதிகாரமும் ராணுவ ஆதிக்கமும் பதற்றங்களே வாழ்வாகிப்போன யாழ்ப்பாண மண்ணின் சிதைந்த வாழ்வை, முகங்களைக் கறுப்புத்துணியால் கட்டிய இராணுவர்கள் நடமாடத்தொடங்கிய பிறகு, குழந்தைகள் தெருக்களை இழந்தன என சித்தாந்தன பதிவு செய்கிறார்.

ஈழத்தின் கிழக்குப் பிரதேச வாழ்வுலகத்திலிருந்தும் அனுபவ வெளியிலிருந்தும் உருவாகிய அனார், பஹிமா ஜவஹான், அலறி, றஷ்மி உள்ளிட்ட கவிஞர்கள் படைப்புத் தளத்தில் தீவிரமாக இயங்குகிறார்கள். கவிதைப் புனைவின் வெளிப்பாட்டில் எதிர் அழகியலையும் மாற்றுபிரதிகளின் உருவாக்கத்தையும் செய்கின்ற ரியாஸ் குரானாவின் எழுத்துக்களும், இவ்வகையில் முக்கியமானவை.

இன்றின் புலம்பெயர் கவிதை எழுத்தைப் பேச முற்பட்டால் வ.ஜ.ச செயபாலன், சேரன், தமிழ்நதி, இளங்கோ, திருமாவளவன், த.அகிலன், நிவேதா, மாதுமை எனப் படைப்பாளிகளின் பட்டியல் நீண்டு செல்கிறது. எண்பதுகளில் எழுதத் துவங்கிய பழைய தலைமுறைப் படைப்பாளிகளிலிருந்து, சமகாலப் புதிய தலைமுறைப் படைப்பாளிகள் என இவ்வரிசை தொடர்கிறது.

முப்பது வயதே நிரம்பிய ஈழத்து இளம்படைப்பாளியான இளங்கோ யாழ்ப்பாணம் அம்பனையில் பிறந்தவர். ஈழத்துப் போர்ச்சூழலில் தன் இளவயதிலேயே அலைக்கழிப்புக்கும், இடம்பெயர்வுக்கும் ஆளாகி தாயக மண்ணிலேயே அகதியாக அலைந்தவர். தனது பதினாறாவது வயதில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தவர். ஈழத்தில் தான் வாழ்ந்த இருப்பிடம் இராணுவ உயர் பாதுகாப்பு வளையத்திற்குள் வருவதால் ஒருபோதும் ஊரையோ வாழ்ந்த வீட்டையோ மண்ணின் உறவுகளையோ பின்னாட்களில் பார்க்க முடிந்ததில்லை என எழுதுவார்.

டிசே தமிழன் எனும் மாற்றுப்பெயரில் இணைய தளங்களிலும், இலக்கிய இதழ்களிலும் படைப்பாளியாகவும் விமர்சகராகவும் அறியப்பட்டவர். இளங்கோ டாட் நெட் வலைப்பக்கத்திலும் இவரது எழுத்துக்களை வாசிக்க முடியும். பின்காலனியம், பின்நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம், விளிம்புநிலை எனக் கோட்பாடு சார்ந்த விவாத நிலைகளிலும் படைப்பிலக்கிய வெளிகளிலும் தொடந்த தனது உரையாடல்களின் மூலமாகப் புதிய திறப்புக்களைச் செய்பவர்.

தொன்மவியல் கதாபாத்திரங்கள் மீதான வரலாற்றை அழித்துத் திரும்பவும் சமகாலச் சூழலில் எழுதப்படும் மறு வ‌ர‌லாறாக‌ இளங்கோவின் கவிதைப் புனைவு உருவாகிறது. புத்தர் கவிதைப் பரப்பெங்கும் பன்மை மாதிரியாய் உருவெடுக்கிறார். தமிழ் அடையாள மீட்பில் விகாரையிலிருந்து வெளியேறிய புத்தரும் பங்கெடுத்துக் கொள்கிறார். பூமியெங்கும் பரப்பிவைக்கப்பட்ட கண்ணிவெடியில் ஒற்றைக் காலினை இழந்து ஊர் வைரவர் புத்தருக்கு அடைக்கலம் கொடுத்து, தெய்வநிலையிலிருந்து புனைவு நீக்கம் செய்து ஒரு கிராமத்து மனிதனின் சகலவிதமான ஆசாபாசங்களோடு கள்ளுக்கொட்டிலுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

புனித விகாரையிலிருந்து வெளியேறிய புத்தர் தனது நீங்கலுக்கான காரணமாகச் சீடர்களான பெளத்த பிக்குகளின் நிலைப்பாடு முன்வைக்கப்படுகிறது. ஏனெனில் அவர்களது முன் படைக்கப்பட்ட குவளைகளில் நிரம்பி இருப்பது ரத்தம்.  இந்த ரத்தம் கொன்றொழிக்கப்பட்ட தமிழர்களின் ரத்தமென்பதை வாசகன் தன்னுணர்வாக புரிந்துகொள்ள முடிகிறது. தியானமும் துறவும் அர்த்தமற்ற வெளிப்பரப்பில் பொருளற்றுப் போகின்றன.

'நேற்று என்கனவில்/ புத்தர் பெருமான் சுடப்பட்டிருந்தார்/ சிவில் உடை அணிந்த அரசகாவலர் அவரைக் கொன்றனர்/ யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே/ அவரது சடலம் குருதியில் கிடந்தது' என எண்பதுகளில் நுஃமான் எழுதிய புத்தனின் கொலை கவிதையையும் இவ்விடத்தில் ஞாபகப்படுத்தலாம். ஹம்சத்வனியின் புத்தனின் நிர்வாணம் என்றதொரு கவிதை 'மூடிய விழிகளைத் திறந்து பார்த்தபோது/அவனது கால்களை நனைத்தது குருதி ஆறு/ உலகை வெறுத்து போதி மரத்தில் தூக்குப்போட்டுச் செத்தான் புத்தன்' எனப் புத்தனின் மரணத்தைப் பேசியது. பூர்வீக பெளத்தம் அரச பயங்கரவாதமாக உருவெடுத்துள்ளதை இக்கவிதைகள் குறிப்பீடு செய்கின்றன.

இளங்கோவின் கவிதையில் தான் நம்பிய துறவும் தியானமும் அதன் பூர்வீகச் சாரத்தை இழந்துவிட்ட சமகால இருப்பின் துயரம் நெட்டித்தள்ள வனம் நீங்கி புத்தன் பதற்றத்துடன் தன் இல்லம் நோக்கித் திரும்புகிறார். மற்றுமொரு கவிதையில், சாம்பர் பூத்திருந்த அடுப்பிலிருந்து தூசி தட்டியபடி புத்தர் உயிர்த்தெழுந்து வருவதும் நிகழ்கிறது. நவீன வாழ்வியல் சூழலின் நெருக்கடிகளில் மறு உயிர்ப்பு பெற்ற புத்தரால் ராப் பாடலுக்கு ஆடவும் தெரிகிறது. எனினும் ஒரு கவிதையின் முடிவு இவ்வாறாக எழுதப்படுகிறது.

நேரம் நள்ளிரவைக் கடந்தபோது
வெறுமையான மதுக் கோப்பைகளையும்
சில நட்சத்திரங்களையும் துணைக்கு விட்டுவிட்டு
புத்தரும் எனது நான்கு வயது மகளும்
காணாமற் போயிருந்தனர்

ஈழத்துச் சூழலில் நிகழும் சிறார் கடத்தலும் அவர்கள் மீதான வன்முறையும் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு அழிக்கப்பட்ட பெண்குழந்தைகளின் துயரமும் மாற்று உருவில் இவ்வரிகளினூடே உயிர்ப்பு பெற்றுள்ளது.

அரச வாழ்வையையும் யசோதரா, ராகுலன் என மனைவி குழந்தை குடும்பத்தையும் விட்டு விலகி சித்தார்த்தனை புத்தனாக மாற்றியது எதுவெனும் கேள்வி தொடர்ந்து கேட்டபடி இருக்கிறது. புத்தனின் கண்களில் பெருகும் அமைதி இதயத்தில் உயிர்ப்புடன் கசிந்து பரவுகிறது என்றாலும் புத்தனின் மனைவி யசோதரா ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும்போதுதான் அந்த அறையிலிருந்து யதோதராவுக்குத் தெரியாமலேயே புத்தர் வெளியேறுகிறார். இந்தப் புறக்கணிப்பின் வெளிப்பாடாகவே இளங்கோவின் யசோதரா மறு உருவாக்கம் பெறுகிறாள். வரலாற்றின் சொல்லப்படாத, மெளனப்படுத்தப்பட்ட பக்கங்களிலிருந்தும் புனைவு கட்டி எழுப்பப்படுகிறது. அறியப்படாத கதை மாந்தர்களின் வருகை நிகழ்வுகளின் சுழல்களோடும் ரணங்களோடும் நானை அழித்த இன்னொன்றாக கவிதைக்குள் பிரதிநித்துவம் பெறுகிறது.

யசோதரா இந்த வகையில் புனிதங்களையும் பராம்பரிய பெருமைகளையும் இழந்துபோன ஒரு அகதி சித்திரத்தின் புலம்பெயர்ந்த குறியீடு. மூலைக்கடை முடக்குத்தெரு பெஞ்சில் வரலாற்றில் தன்னந்தனிமையாய் புத்தனால் கைவிடப்பட்ட யசோதரா தென்படுகிறாள். அகதியாக்கப்பட்ட, புறந்தள்ளப்பட்ட யசோதராவின் இருப்பு சோகமயமானது. பெண் சார்ந்த இருப்பும் காயங்களும் வேறுவிதமானவையென கூறிய யசோதரா செய்யாத தொழிலுக்காகச் சம்பளம் பெறுவதில்லை எனவும் கூறுகிறாள். நவீனத்துவ மேலை வாழ்வின் சாயல் யசோதராவின் மீதும் படர்கிறது. நெடுமிரவில் கண்கூசா வெளிச்சத்தில் கிறீக் உணவும் வைனும் அருந்தி தன் உணர்வுகளை சிகரெட் புகைக்குள் மறைத்தபடி உரையாடிக் கொண்டிருப்பவளாகவும் மாறுகிறாள்.

தமிழ்நதி தன் கவிதையொன்றில் யசோதராவைச் சித்திரப்படுத்துகையில் சாளரத்தின் ஊடே அனுப்பிய/ யசோதரையின் விழிகள் திரும்பவேயில்லை/ பெளர்ணமி நாளொன்றில் அவன் புத்தனாகிறான்/ இவள் பிச்சியாகினாள்-- என எழுதிச் செல்வார். சுழலும் ஒளிவட்டங்களின் பின்னாலிருக்கிறது கவனிக்கப்படாத இருட்டென புத்தனின் மீதும் துறவற ஞானத்தின் மீதும் விமர்சனக் குறிப்பை முன்வைத்து யசோதராவின் மறைக்கப்பட்ட அவலத்தை தமிழ்நதி உணர்த்துகிறார்.

புத்தனோடு தொடர்புறுத்தப்பட்ட தொன்மக் கதையாடல்களில் குவேனியும் கவிதைக்குள் மறு உருவாக்கம் பெறுகிறாள். முதல் சிங்கள மன்னனாகக் கருதப்படும் விஜயனால் முன்னர் திருமணம் செய்யப்பட்டு பாண்டிய நாட்டு இளவரசியை இரண்டாவதாக மணந்து அரசனாக முடிசூட்டிய பின் நாட்டைவிட்டே துரத்தப்பட்டு வஞ்சிக்கப்பட்ட தீவொன்றின் குலராணி குவேனி. குவேனியும் புத்தனும் பெளத்த பழங்குடி மரபின் இரு அடையாளங்கள். சங்கமித்ராவின் ஆவேசமும் ஊழிநடனமும் புத்தரின் நட்பிற்கு எதிரான எதிர்ப்பின் வெளிப்பாடாகப் படர்கின்றன. அரசமரக்கிளைக்குப் பதிலாக சங்கமித்ராவின் கரங்களில் கொடும் ஆயுதங்கள் முளைக்கின்றன. இந்தக் கொலை வதைப்படலத்தில் புத்தர் குவேனி எனும் இரு சடலங்கள் காலப்பெருவெளியில் மிதக்கின்றன.

வன்முறையும் மரணமும் இருப்பின் யதார்த்தம். இதன் மீள் பிரதியாக்கமே வெவ்வேறான அளவீடுகளில் வெவ்வேறான தொன்மக் கதையாடல்களுடனான கதாபாத்திரங்களோடு கவிதையில் புனைவாய் மாறுகின்றன. யுத்ததிற்கும் அமைதிக்குமான போராட்டம் எல்லையில்லாப் பெருவெளியில் தொடர்ந்து நடக்கிறது. அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கான இந்த ஈர்ப்பு சிங்கள இனவாதமாகவும் ராணுவ மேலாதிக்கமாகவும் தமிழர்களின் மீதான இன அழிப்பாகவும் சமகால வாழ்வில் அர்த்தம் பெறுகின்றன.

இளங்கோவின் கவிதைகள் தொடர்ந்து மரணத்தின் பதற்றத்தை எழுதிச் செல்கின்றன. வாழ்தலுக்கும் மரணத்திற்குமான இடைவெளியும் தூரமும் குறைந்து கொண்டே வருகின்றது. மகிழ்ச்சியும் துயரமும் இடைவிடாது துரத்தியவண்ணம் உள்ளது.

'ரைபிளை துடைத்தபடிக்கு/ காதலிக்கு முத்தம் கொடுப்பேன்' என முற்றுபெறாத காதலுக்கும் யுத்தத்திற்குமான உணர்வெழுச்சி வ.ஜ.ச.செயபாலனின் வரிகளில் முன்பு வெளிப்பட்டது. இளங்கோவின் கவிதை இவ்வுணர்ச்சியை வேறு விதமாகப் பிரதியாக்கம் செய்கிறது. வாழ்தலுக்கும் மரணத்திற்குமான இடைவெளியை அக்கவிதை வரிகள் இவ்வாறு எழுதிச் செல்கிறது.

ஒரு முத்தத்தையும்
இன்னொரு முத்தத்தையும் பிரிப்பது
வினாடிகள் அல்ல
விரலிழுக்கும் துப்பாக்கி விசை

இந்த முத்தம் காத‌ல‌ன்-காதலி என்ற ஒற்றைப் பரிமாணத்தைத் தாண்டி குழந்தைக்குத் தந்தை கொடுக்கும் முத்தமாகவும், மகனுக்குத் தாய் கொடுக்கும் முத்தமாகவும், போராளிக்குக் காதலி கொடுக்கும் முத்தமாகவும் இன்னும் பலவாகவும் அர்த்தங்களைப் பல்கிப் பெருக்கி உணர்த்துகிறது.

இரு முத்தங்களுக்கு இடையே கூட மரணம் காத்திருக்கிறது. இது இருப்பின் இல்லாமை சார்ந்த வெளிப்பாடாகும்.

இளங்கோவின் மற்றுமொரு கவிதை இவான் என்னுமொரு சிறுவனைப் பற்றியது. அந்த நீள் கவிதையை இவ்வாறாக வாசித்தும் பார்க்கலாம்.

இன்னமும் உருகிவழியும்
வெம்மையைத் தவிர்க்க
ஏசி நிறையுமென் அறையினுள் நுழைகிறான்
இவான் என்னுமொரு சிறுவன்
வெறுமையையும் முடிவிலா கவலையையும்
அறையினுள் அலையவிட்டு
மேசையில் குழந்தையொன்றின்
குருதி தோய்ந்த படத்தை
வெறித்துக் கொண்டிருப்பவனைக் கண்டு
பதற்றம் நிரம்புகிறது அவனது விழிகளில்
......
......

வந்த இவான்
இடையில் எங்கே போனானென
பதற்றத்துடன் வீடு திரும்புகையில்
முன்னர் மேசையிலிருந்த
குருதி தோய்ந்த குழந்தையின் படம்
இவானாய் மாறியிருந்தது.

யதார்த்தமும் புனைவும் ஒரு விசித்திரமாக மாறி நிகழும் வன்முறையின் துயரத்தைப் பதிவு செய்கிறது. மேசையின் மீது இருந்த குருதி தோய்ந்த படம் குழந்தையொன்றின் உடலாக மாறுகிறது. இருப்பிற்கும் இல்லாமைக்குமான நுண் உரு இது. சிறார் மரணங்களின் வருத்தமிகுந்த வலி நுட்பமான மொழியினூடாகக் கவிதைப் படிமமாக மாற்றுகிறது.

நாட்டார் தெய்வ -- பெளத்த கலாச்சாரங்களின் சந்திப்பு இளங்கோவின் கவிதைகளில் நிகழ்கிறது. மிதிவெடியில் காலை இழந்த ஊர் வைரவர் என்கிற கிராமப்புற நாட்டார் தெய்வ அடையாளம் மட்டுமல்ல, பிள்ளையாரெனும் பெருங்கதையாடலாகிவிட்ட கணேசரின் இருப்பும் பத்திரகாளியின் ஊழி நடனமும் கவிதைக்குள் நடமாடுகின்றன. தமிழர்களின் பாதுகாவலற்ற பதற்றமான இருப்பை இளங்கோவின் வரிகள் இவ்வாறாக கோணேசரின் குறியீட்டு மொழியின் வழி உணர்த்திச் செல்கிறது.

கோணேசர் பாவம்
இராணுவம் சூழவிருக்கும் அவருக்கும்
ஊரடங்குச் சட்டமுண்டு
பின்னிரவு நீளமுன்னர் தன் தலம்
மீளவேண்டிய அவதி அவர்க்கு

தமிழ் மூதாதைக்கவி கணியன் பூங்குன்றன் பேசிய யாதும் ஊரே யாவரும் கேளீர், விரிந்த தோழமை பூண்ட மண்ணின் உறவு சமகாலத்தில் சொந்த மண்ணை இழந்த நாடற்றவனின் துயரத்தோடு முரண்படுவதை இளங்கோவின் கவிதை வலிமிகுந்த சொற்களால் உருவாக்குகிறது.

யாதும் ஊரே யாவரும் கேளீர் எனும்
ஒற்றப் பாடலில் உயிர்த்திருக்கும் கணியனுக்கு
எப்போது திரும்பினாலும் காத்திருக்கும்
ஓர் ஊர் வாய்த்திருக்கலாம்

கணியனுக்கு வாய்த்த ஊர், புலம் பெயர்ந்த ஈழத்தமிழனுக்குக் கிடைக்காமல் போனதுதான் வலிமிகுந்த துயரம்.

சங்கத் தமிழ்த் தொன்ம கதாபாத்திரங்களில் ஒன்றான புறநானூற்று வீரத்தாய் படிமம் இளங்கோவின் கவிதைகளில் மறு உருவாக்கம் பெற்றுள்ளது. போரில் எதிர்களை வீழ்த்த முடியாமல் புறமுதுகிட்டு ஓடினான் என்றால் இரு முலைகளையும் அறுத்தெறிவேன் என்ற புறநானூற்றுத்தாய் போருக்காவும் அதன் வெற்றிக்காகவும் எதிரியின் அழிப்பிற்காகவும் சபதமேற்கிறாள். இத்தகைய போரின் மீது ஏற்றப்பட்டிருக்கும் புனிதங்களின் எதிர்மாறான தரப்பாக இளங்கோவின் கவிதை இயங்குகிறது. இது மிகை புனைவு தளத்தில் இயங்கும் கவிமொழியிலிருந்து வேறுபட்டது. யதார்த்த தளத்தில் போரின் வன்கொடுமையால் அழிக்கப்பட்ட மக்கள் வாழ்விலிருந்தும் சிதைவிலிருந்தும் பெரும் துயரிலிருந்தும் மறுதரப்பாய் இக் கவிமொழி இயங்குகிறது. போரில் இறந்துபோன தனது பிள்ளைகளை நினைவுகூரத் தன் முலைகளை அறுத்தெறிகிறாள் இந்தத் தாய். இளங்கோவின் கவிதைப் படிமம் இவ்வாறாக உள் எழுச்சியில் உருவாகி ஒரு புறச்சித்தரிப்பாய் உருவாகி நிற்கிறது.

புறமுதுகிட்டு பிள்ளை ஓடினானெனின்
முலையரிவேனென்ற புறநானூற்றுத்தாய்
போரை விதந்தோத்திய
கவிஞர்களின் எழுதுகோல்களை நொறுக்கி
இறந்துபோன பிள்ளைகளை நினைவுகூர்கிறாள்
தன் முலைகளை அறுத்தெறிந்து.

என்றாலும் இன்னொருவித மன எழுச்சியில் சங்க இலக்கியத்தின் அகத்துறையான காதலையும், காமத்தையும், பசலை படர்ந்த பிரிவின் துயரத்தையும் பேசுகிற பெண்ணாக இருப்பதற்கு மாற்றாகப் போர்க்களத்தின் வாளாகவும், கவச‌மாகவும் உருமாறும் பெண்ணை முன்னிறுத்தவும் செய்கிறது.

'பின்னிரவில் மயிலிறகு வீசி/ மடியில் கிடக்கும்/ பிரிவில் பசலை படிந்து வெம்பித் தவிக்கும் / சங்ககாலப் பெண்ணுமல்ல நீ/ போர்க்களத்தில் வீசுகின்ற வாளாகவும்/ தாங்குகின்ற கவசமாகவும் மாறிவிடத் துடிப்பவளின்/ மொழி கிள்ளிப் புனைவேன் கவிதை.'

இவை இரட்டை மனநிலைகளால் கட்டமைக்கப்பட்ட வெவ்வேறு உணர்வுநிலைகளாக இளங்கோவின் கவிதைக்குள் உணரலாம். ஒன்று போரின் சாவுகளுக்கு எதிரானதாகவும் மற்றொன்று சாவினைத் தடுக்கும் போரின் தரப்பாகவும் ஒன்றுக்குள் ஒன்று பின்னிப் பிணைந்திருக்கிறது.

(தொடரும்...நீளங்கருதி)

(27.01.2011 அன்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

க‌ட‌தாசிப்பூக் குறிப்புக‌ள்

Thursday, March 17, 2011

1.
நஹீப் மஹ்பஷ் எழுதிய 'அரேபிய இரவுகளும் பகல்களும்' (Arabian Nights and Days), 'ஆயிரத்தொரு அரேபிய இரவுகள்' கதைகளைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்ட ஒரு நாவல். 'ஆயிரத்தொரு அரேபிய கதைகளின்' இறுதியில் சுல்தான்(ஷாகிரியார்), கதைகளைச் சொல்லும் ஷஹாரஜாத்தைக் கொல்லாது, மன்னித்து மணமுடிக்கப் போவதாக முடிகிறது.  இங்கே, 'அரேபிய இரவுகளும் பகல்களும்' நாவலில் மணவிழாவிற்கான கொண்டாட்டங்களோடு, நாட்டின் மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கதை தொடங்குகின்றது. ஆனால் சுல்தானை மணமுடிக்க இருக்கும் ஷஹரஜாத் உண்மையில் நாடு நிம்மதியாக இல்லையென தனக்குத் தெரிந்த, நாட்டில் நிகழும் கதைகளைச் சொல்லத் தொடங்குகின்றார். பூதங்களும் (Genie) அதிகாரம் மிக்க மனிதர்களும், மாறி மாறிக் கொலைகளையும், வன்புணர்வுகளையும் செய்ய நாடே கொந்தளிப்பில் தத்தளித்துக் கொண்டிருப்பதாய் ஷஹாரஜாத்தின் பார்வை வழியே கதை சொல்லப்படுகின்றது. 'ஆயிரத்தொரு அரேபிய இரவுகளில்' ஒவ்வொரு கதைகளின் முடிவிலிருந்தும் இன்னொரு கதை கிளைத்தெழுவதுபோல, இந்நாவலிலிலும் அநேக அத்தியாயங்களில் ஒரு கதாபாத்திரத்தின் கதை முடிய இன்னொரு புதிய பாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு, அப்புதிய கதாபாத்திரத்தின் வழியே கதை சொல்லப்படுகின்றது. இதற்கு நிகரான ஒரு கதைசொல்லல் முறையே ஒர்ஹான் பாமுக்கின், 'எனது பெயர் சிவப்பிலும்'' (My name is Red ) பின்பற்றப்படுவதை நாம் கவனிக்கலாம். இறுதியில் பூதங்கள் அல்லது பூதங்களால் பரிந்துரைக்கப்பட்டவர்களே நாட்டின் அதிகாரமிக்கவர்களாய் மாறுவதாய் கதை முடிக்கப்பட்டிருக்கும்.

உண்மையில் இந்நாவல், 'ஆயிரத்தொரு அரேபிய இரவுகளின்' நீட்சி எனச் சொல்லப்பட்டாலும் இது ஆயிரத்தொரு அரேபிய இரவுகள்' கதையை நிகழ்காலத்திற்கு ஏற்ப மறுவாசிப்புச் செய்கின்றது. அதிகாரத்தில் இருக்கும் ஒருவர் செய்யும் துஷ்பிரயோகத்தினால் ஒரு நாடே கொந்தளிப்பாக மாறி, அச்சமும் பீதியும் எல்லா இடங்களிலும் பரவிப் பாய்கின்றது என்ப‌தை இந்நாவ‌ல் மிக‌ நுட்ப‌மாக ப‌திவு செய்கிற‌து. இந்தக் கொந்தளிப்பின் நிமித்தம் அநீதியானவர்கள் மட்டுமின்றி நேர்மையானவர்களும் பலியிடப்படுகின்றனர் என்பதை இந்நாவலில் எக்குற்றங்களையும் செய்யாத அலாவுதீன் போன்றோர் வீணே தூக்குத் தண்டனைக்கு ஆளாவதை உதார‌ண‌ங்க‌ளாய் எடுத்துக் கொள்ள‌லாம். அலாவுதீனில் ஆசானாய் இருந்து, தன் மகளான சூபிடாவை மணமுடித்து வைக்கின்ற சீக்கிடம் (Sheikh), ஏன் அலாவுதீன் அநியாயமாய்க் கொல்லப்பட்டார் எனக்கேட்கப்படும்போது, 'I prayed to Almighty God and gave myself over to death, relinquishing all hope in human beings. When night fell I heard a movement at the surface of the hole. As I listened to it the mouth of hole was opened and I saw a large animal like dragon. It let down its tail to me and I knew that God had sent it to rescue me. I clung on to its tail and it drew me up. Then a voice from the heavens called out to me, "We have saved you from death with death." (p 171) என ஒரு மரணத்தைக் தவிர்க்க இன்னொரு மரணமே வேண்டியிருந்தது எனக் கூறப்படுகின்றது. அந்த மரணம் இன்னொரு அப்பாவியான அலாவுதீனின் மரணமாக இங்கே அமைந்திருக்கிற‌து.

மாயத்தன்மை நிறைந்த புதிர்கள் நிறைந்த உலகிற்கு இந்நாவல் வாசிக்கும் ஒருவரை அழைத்துச் செல்கிறது. ஒருவர் கொல்லப்படுவதற்கு அல்லது கொலையாளியாவதற்கு எப்போதும் உறுதியான காரணங்கள் இருப்பதேயில்லை. நல்லவர், கெட்டவர் என்ற பாகுபாடில்லாது ஒரு சிறுசந்தேகம் அல்லது முன்பகை ஒருவருக்கு உடனேயே தீர்ப்பளித்து மரணதணடனை கொடுக்க்கப்படுவதற்கு போதுமாயிருக்கிறது. இந்நாவலை நாம் அதிகாரம் ஓரிடத்தில் குவிந்து உருவாகும் எந்தத் தலைமையிடமும், எந்த நாட்டோடும் கூட பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம். நஹீப் மஹ்பஷின் கதைசொல்லும் முறையின் ஆளுமை மொழிபெயர்ப்பினூடாகவே சிலாகிக்க முடிகிறதென்றால் மூலமொழியில் இன்னும் வனப்பாகவே இருக்கும் என்ப‌தில் ச‌ந்தேக‌மேயில்லை. சிலவேளைகளில் பூதங்கள் மனிதர்களுக்கு நம்பிக்கை கொடுத்து கொலைகளைச் செய்யத் தூண்டிவிட்டு இடைநடுவில் அவர்களைக் கைவிட்டு விடுகின்றன‌. பிறசமயங்களில் அவர்களுக்கு மறுபிறப்புக் கொடுத்து அவர்கள் வாழ்ந்த நகரங்களில் வேறு ந‌ப‌ர்க‌ளாக‌ உருமாற்றி வாழவும் விடுகின்றன. அவ்வாறான பொழுதுகளில் தமக்குத் தெரிந்த மனிதர்கள் எல்லோரும் அந்நியராகப் போகும் விந்தைகளை மஹ்பஷ் அழகாக விவரிக்கின்றார். இன்னொருவிதத்தில் பார்த்தால் இது எப்போதும் மனிதர்களுக்கு இருக்கக்கூடிய 'இருத்தலியச் சிக்கல்'தான் என்பதாகவும் வாசித்துக்கொள்ளலாம்.

2.
'Veronica Guerin' திரைப்படம் ஒரு பத்திரிகையாளரின் கதையைச் சொல்லும் படம். அயர்லாந்தின் வறுமையை தமக்குச் சாதகமாக்கி பதின்மர்களை அதிகம் குறிவைத்து இயங்கிய போதைமருந்து மன்னர்களை அம்பலப்படுத்தி எழுதிய வெரோனிக்கா என்கின்ற‌ பெண்ணே இதில் முக்கிய‌ பாத்திர‌மாக‌ வ‌ருகிறார். . எதற்கும் அஞ்சாது உண்மைகளை எழுதுவேன் என உறுதியாக இருந்த வெரோனிக்காவை அவரது 38 வயதிலேயே இந்தப் போதைமருந்துக் கும்பல் கொலை செய்தது. ஆனால் வெரோனிக்காவின் மரணம் ட்பளினையே உலுக்கி சட்டத்தில் பல திருத்தங்களைச் செய்ய வழிகோலியிருக்கிறது. Criminal Assets Bureau Act வெரோனிக்காவின் மரணத்தின் பின் அறிமுகப்படுத்தபட்டு, சட்டவிரோத செயல்களைச் செய்து வரும் பணத்தால் வாங்கும் சொத்து எதுவாயினும், அவை அனைத்தும் அரசால் சுவீகரிக்கப்படும் எனகின்ற சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது. இதன் நிமித்தம் பல போதைமருந்துக் கும்பல்களின் தலைவர்களின் சொத்துக்கள் அயர்லாந்தில் பறிக்கப்பட்டிருக்கின்றது. இச்சட்டத்தின் பின்னர் பதின்மர்களிடையே இருந்த போதைமருந்துப் பயன்பாடு அடுத்தடுத்த வருடங்களில் 15% மாக அய‌ர்லாந்தில் குறைந்ததாக இப்படத்தின் முடிவில் கூறப்படுகின்றது. இச்சட்டம் அமுலாக்கப்பட்டதைப் போல வெரோனிக்காவின் கொலையோடு சம்பந்தப்பட்ட பலருக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டிருக்கின்றது. வெரோனிக்காவின் கொலை 1996ல் நிகழ்ந்திருந்தாலும் சென்ற வருடம் கூட இதுவரை தலைமறைவாக ஓடி ஒளித்திருந்த ஒருவர் பிடிப‌ட்டுமிருக்கிறார்.

வெரோனிக்கா ஒரு மகனுக்குத் தாயாக இருந்தபோதும் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் உண்மையை வெளிக்கொணர்வேன் எனத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தவர். கொலைப் பயமுறுத்தல்கள் மட்டுமில்லாது, அவரது வீட்டுக்கு வந்து அவரைத் தொடையில் சுட்டபோதும் அச்சமின்றி எழுதிக்கொண்டிருந்த வெரோனிக்காவை, இப்படி இனியும் எழுதுவதை நிறுத்தச் சொல்கிறார் அவரின் கணவர். அப்போது, 'தெருக்களில் போய் அங்கே போதைக்கு அடிமையாகிக்கொண்டிருக்கும் பதின்மர்களைக் கண்ட என்னைப் போன்ற ஒருவராய் நீ இருந்தால் உன்னால் கூட இவற்றை எழுதாமல் சும்மா இருக்கமுடியாது' என்று தன் கணவருக்குக் கூறுகின்றார். அதுபோல் செய்தி சேகரிப்பதற்காய் போதைமருந்துக் கும்பலின் தலைவர் ஒருவரிடம் செல்லும்போது மிகமோசமாய் தாக்கப்படுகின்றார். நிகழ்ந்ததை வெளியே சொன்னால் உனது மகனை வன்புணர்வுக்கு உள்ளாக்கி கொலையும் செய்வோமென வெரோனிக்கா அவரால் பயமுறுத்தப்படுகின்றார். இவ்வளவு நெருக்கடிகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் அப்பால் இயங்கிக்கொண்டிருந்த வெரோனிக்காவை ஒரு பகல்பொழுதில் காரில் போகும்போது கொலையாளிகள் மோட்டார் சைக்கிளில் வந்து கொல்கின்றனர். இத் திரைப்படம் முடிகின்றபோது Sinead O'Connor ன் 'One more day' ( http://www.youtube.com/watch?v=mFyiWlp13a8&feature=related ) ஒலிக்கும்போது ஒரு கணமாவது வெரோனிக்காவின் வாழ்வை மீள நினைக்காமல் இருக்கமுடியாது. ஜ‌ன‌நாய‌க‌ வ‌ழிமுறைக‌ள் கைக்கொள்ள‌ப்ப‌டுகின்ற‌ ஒரு நாட்டில், ஒரு ப‌த்திரிகையாள‌ர் கொலைசெய்ய‌ப்ப‌டும்போது பெரும் கொந்த‌ளிப்பே நிக‌ழ்கின்ற‌து. ஆனால் எத்த‌னையோ நேர்மையான‌ ப‌த்திரிகையாள‌ர்க‌ள் கொலைசெய்ய‌ப்ப‌ட்டும், க‌ட‌த்த‌ப்ப‌ட்டும், காணாம‌ற்போகின்ற‌போதும் அதுகுறித்த‌ அச‌ம‌ந்த‌ப்போக்கும் மூடிம‌றைப்புக்க‌ளுமே இல‌ங்கை போன்ற‌ 'ச‌ன‌நாய‌க‌ சோச‌லிச‌' நாடுக‌ளில் நிக‌ழ்வ‌தையும் நாம் இந்த‌க் க‌ண‌த்தில் நினைவுப‌டுத்திக் கொள்ள‌லாம்.

3.
வண்ணநிலவனின் வாசிக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த 'கம்பாநதி'யையும், 'ரெயினீஸ் ஐயர் தெரு'வையும் அண்மையில்தான் வாசிக்கும் ச‌ந்த‌ர்ப்பம் வாய்த்த‌து . இர‌ண்டாயிர‌த்தின் தொடக்கத்தில் வாசித்த வண்ணநிலவனின் 'கடல்புறத்தில்' தந்த நெருக்கமும் நெகிழ்ச்சியும் என்றைக்குமே மறக்கமுடியாது. 'கடல்புறத்தை இப்போது மீண்டும் வாசித்தால் அதே அனுபவத்தைத் தருமா என்பதும் சந்தேகமே. 'கடல்புரத்திலும்' , 'ஜே ஜே சில குறிப்புகளை'யும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் வாசித்தாலும், ஜே.ஜே. சில குறிப்புகள் பின் தங்கிவிட இன்றும் கடல்புறத்தில்' மனதில் மித‌ந்துகொண்டிருக்கிற‌து.

'கம்பா நதி' ஒரு வேலையைத் தேடுகின்ற இளைஞனின் கதையோடு அவனோடு சம்பந்தப்பட்ட மனிதர்களை விபரிக்கின்றது. இக்கதையில் வேலைக்காய் நேர்முகத்திற்காய் போகின்ற இளைஞனின் அவஸ்தைகளை நம்மில் அநேகர் சந்தித்திருக்கக் கூடியவை; அனுபவித்திருக்கக் கூடியவை. வேலை தேடிக்கொண்டிருக்கும் பாப்பையாவின் இன்னமும் திருமணம் முடிக்காத அக்கா சிவகாமி, பாப்பையா விரும்புகின்ற கோமதி, பாப்பையாவையோ சிவகாமியையோ பற்றி அக்கறையில்லாது குடியும், இன்னொரு மனைவியும் வைத்துக்கொண்டு திரிகின்ற பாப்பையாவின் தகப்பன் சங்கரன்பிள்ளை...என இந்நாவலில் வரும் பாத்திரங்களை எல்லாம் நாம் சந்தித்திருக்கக் கூடியவர்கள், சிலவேளைகளில் அந்தப் பாத்திரங்களில் ஒருவராக நாமே இருக்கக்கூடியவர்களும் கூட.  நகரும் வாழ்க்கை எல்லா அவமானங்களையும் தோல்விகளையும் தின்று செரித்திருக்கக்கூடியதுதான், ஆனால் அவ்வப்போது சிறுபொறி பழைய நினைவுகளை சரசரவென்று பற்றவைத்துவிடுகின்றது. கோமதியின் திருமணத்தின்போது மிதமிஞ்சிக் குடித்து தெருவில் கிடக்கிற சங்கரன்பிள்ளை, அவளுக்கு அவரின் மகனான பாப்பையாவை மீள நினைக்கும்படி செய்துவிடுவதும் அப்படித்தான்.

'கம்பாநதி'யில் குறிப்பிடப்படுகின்ற ரெயினீஸ் ஜயர் தெரு, டாரதி எல்லாம் வண்ணநிலவன் இரண்டு வருடங்களுக்குப் பின் எழுதுகின்ற 'ரெயினீஸ் ஐயர் தெரு'வில் விரிவாக வருகின்றார்கள்/வருகின்றது. இன்னொருவிதமாக இது 'ரெயினீஸ் ஐயர் தெருவில்' இருக்கும் குடும்பங்களைப் பற்றிய விரிவான கதை எனச் சொல்லலாம். 'கம்பாநதி'யில் நதி எல்லோரும் குவிகின்ற ஒரு மையமாக வருகின்றதோ அவ்வாறே 'ரெயினீஸ் ஐயர் தெரு'வில் ஒரு தெரு முக்கிய பாத்திர‌மாய் வருகின்றது. வழக்கமாய் ஒரு தெருவில் இருக்கும் குடும்பங்களிடையே வரும் சண்டைகளும், சச்சரவுகளும், சமாளிப்புக்களும், கள்ளத்தனங்களும், உளவறிதல்களும் இந்நாவலில் மெல்லியதாகச் சித்தரிக்கப்படுகின்றது. ரெயினீஸ் ஐயர் தெருவில் வழமைபோல பெய்கின்ற மழையோடு நாவல் நிறைவுபெறுகிறது. மழைக்காலத்தில் மனிதர்களை நம்மால் ஒருபோதும் வெறுக்கமுடியாது என்று நாவலில் கூறப்படுவதுபோல வாசிக்கும் நம்மாலும் இந்நாவலின் பாத்திரம் எதனையும் வெறுக்கமுடியாதுதான் இருக்கிறது. ஆனால் இந்நாவலில் வரும் 'கல்யாணி அண்ணன்' என்கின்ற பாத்திரம் ஏன் எப்போதும் ஒரு தேவதூதரைப் போல 'வித்தியாசமாகச்' சித்தரிக்கப்படுகின்றது என்பதுதான் புரியவில்லை.

எல்லோருக்கும் மிகப் பிடித்தமான, எப்போதும் அன்பைப் பகிர்ந்துகொண்டிருக்கும் அலீஸ் இளவயதில் இறப்பது, எஸதர் சித்திக்கு அவரின் பெறாமகனாய் இருக்கின்ற சாம்சனோடு உடல் சார்ந்த உறவு இருப்பது, எப்போதும் குடியும், தறுதலையுமாய் இருக்கும் தியோடர், முதிர்ந்த தம்பதிகளான ஆசீர்வாதம் - ரெபேக்காளுக்கு உதவி செய்வதற்கு ஒருபோதும் தயங்காதது.... என வாழ்க்கை வித்தியாசமான மனிதர்களையும் அவர்களின் விசித்திரமான மனோநிலைகளையும் வரைந்துகொண்டே இருக்கிறது. இருதயத்து ரீச்சர் வீட்டுக்குள் குறுக்கு மறுக்குமாய் ஓடும் கோழிகளும், மழை பெய்யும் நாட்களில் நீரை ஊறச்செய்ய வாசல்களில் விரிக்கும் சாக்குப்பைகளும் ஊர்களில் வாழ்ந்திருப்பவர்க்கு இன்னும் நெருக்கத்தைத் தரும் படிமங்கள். ஆனால் பெரிய பிள்ளையாக ஆகும் ஜீனோ, 'அம்மாவோ இன்னொரு மனுஷியாகத் தெரிந்தாள். மிக மோசமான, தாழ்ந்த குலப் பெண்ணாக அம்மா இருந்தாள்' என நினைக்கும்போதுதான் சற்று நெருடுகின்றது. வயதுக்கு வரும் பெண்களுக்கு அம்மாவுடனான ஒரு விலகல் ஏற்படலாம். ஆனால் அது ஏன் 'மோசமான, தாழ்ந்த குலப்பெண்ணாக' சித்தரிக்கப்படுகின்றது என யோசிக்கும்போது இது ஜீனோவின் உள்மனக்குரலா அல்லது வண்ணநிலவனின் விருப்புச்சார்ந்த ஒலிப்பா என கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது. இந்த இடத்தில் மட்டுமின்றி வேறு சில இடங்களிலும் 'தாழ்ந்த குலம்' பற்றிய வர்ணிப்புக்கள் வருகின்றது. நாவல் எழுதப்பட்ட 81களில்தான் இந்தப் 'பிரக்ஞை'கள் இல்லையென்பதை ஒரு சாட்டாக முன்வைத்தாலும், நான் வாசித்த நர்மதா பதிப்பாக 2001ல் வந்த மறுபதிப்பிலாவது திருத்தி எழுதியிருக்கலாமென நினைக்கிறேன். சாதாரண நிகழ்வுகளின் விடுபட்டவைகளை நுட்பமாகச் சித்தரிக்கும் ஒரு படைப்பாளி என மதிப்பிடப்படுகின்ற வண்ணநிலவன்...எப்போதும் மனிதர்களை அவர்களின் பலங்களோடு அன்றி அவர்களின் பலவீனங்களோடும் நேசிக்கச் சொல்லும் வண்ணநிலவன், இவ்வாறான 'தாழ்ந்த சாதி' என எழுதுவதும், தாழ்ந்த சாதி அல்ல தாழ்த்தப்பட்ட சாதிகளாக்கியதே ஆதிக்கசாதிகள் தான் என்பதை உணர மறுப்பதுதான் என்னளவில் வியப்பாயிருக்கிறது. வண்ணநிலவன் என்ற படைப்பாளியின் இந்தப் பலவீனங்களோடு (இவ்வாறான விடயங்களை அவர் மாற்றவேண்டுமென தெளிவாய் வலியுறுத்தியபடியும்) எனக்கு கம்பா நதியும், ரெயினீஸ் ஐயர் தெருவும் பிடித்திருந்தன என்பதையும், அவை எழுதப்பட்ட காலங்களில் அவை ஒரு பாய்ச்சல்தான் என்பதையும் பதிவுசெய்ய விரும்புகின்றேன்.

4.
இவ்வருடத்திற்கான 'இயல்விருது' எஸ்.பொன்னுத்துரைக்கு வழங்கப்பட்டிருப்பது மிக மகிழ்ச்சி தருகின்ற செய்தி. ஈழத்து இலக்கியம் சார்ந்து சில விடயங்களை விரிவாக எழுதுவதற்காய் எனக்குப் பிடித்தவர்களை பட்டியலிட்டபோது, ஒரு முக்கோணத்தின் மூன்று நுனிகளில் வருகின்றவர்களாய் மு.தளையசிங்கத்தையும், பிரமிளையும், எஸ்.பொவையுமே குறியிட்டு வைத்திருக்கிறேன். அந்த முக்கோணத்தை இன்னுமிர‌ண்டு கோடுக‌ளால் நீட்டித்து  சாய்சதுரமாய் ஆக்கினால் அதில் வரக்கூடியவர்கள் கைலாசபதியும், சிவத்தம்பியும் என்பதாய்த் தீர்மானித்திருந்தேன். அவர்களுக்குள்ளால் மேலும் விரியக்கூடியது முற்போக்கு இலக்கியக்க்காரர்களின் பட்டியல்.

1999ன் பிற்பகுதியில் என நினைக்கிறேன். முதன் முதலாக செல்வத்தின் 'வாழும் தமிழ்' கண்காட்சியிற்கு சென்றபோது இரண்டு நூற்களை வாங்கினேன். ஒன்று சு.ராவின் 'ஜே.ஜே.சில குறிப்புகள்' மற்றது எஸ்.பொவின் 'ஆண்மை'. அதுவரை பாலகுமாரனை ஒரு குருவாய் நினைத்து அவரின் படைப்புக்களுக்குள் அமிழ்ந்துகொண்டிருந்தவனை கை நீட்டி இன்னொரு திசையில் அழைத்துச் சென்றவர்கள் சு.ராவும், எஸ்.பொவும்தான். அதேபோன்று எஸ்.பொவை 2000ல், காலச்சுவடு 'தமிழ் இனி' நடத்திக்கொண்டிருந்த காலகட்டத்தில் கனடாவில் சந்திக்க முடிந்திருந்தது. அப்போது எஸ்.போ புலம்பெயர் இலக்கியத்தை எவரெஸ்டின் சிகரத்தில் ஏற்றிவிடுவேன் என கங்கணம் கட்டிக்கொண்டு ஒவ்வொரு உலக நாடுகளாய் சென்று தமிழ் ஊழியம் செய்துகொண்டிருந்த காலகட்டம். ஒரு முழுநாள் நிகழ்வாய் எஸ்.பொ அந்நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தார். கனடாவில் இருந்த பல்வேறுபட்ட படைப்பாளிகளை ஒரேயிடத்தில் சந்தித்த பொழுது அது. அப்படி ஒரு அரங்கு நிறைந்த/நிறைவான கூட்டத்தை அதன்பின்னர் எப்போதும் கண்டதுமில்லை. பல்வேறு தலைப்புக்களில் பல்வேறு கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. அவற்றை எல்லாம் விட எஸ்.பொவின் அன்றைய காலத்தில் வெளிவந்த படைப்புக்கள் எல்லாவற்றையும் ('தீ', 'சடங்கு', 'இனி') போன்றவற்றையும் வாங்க முடிந்திருந்தது. எஸ்.பொவின் 'ஆண்மை'யை வாசித்த இன்பத்தில் அவரைத் தொடர்ந்து பின் தொடர்ந்தபடியே இருந்தேன். பிறகு இன்னொரு கூட்டம் இது தமிழில் பட்டம் பெறப்படிப்பவர்கள் படிக்கும் இடத்தில் நடந்தது. எஸ்.பொ எப்படி முதல் நிகழ்வில் தன்னை கைலாசபதி,சிவத்தம்பி எப்படி புறக்கணித்தார்கள் என்று விரிவாகப் பேசினாரோ இங்கேயும் அதேயே பேசினார். படித்துக்கொண்டிருந்த சில பெண்கள் சிவத்தம்பியிடமும் படித்தவர்கள். ஆகவே அவர்கள் தம் குருவை விட்டுக்கொடுக்காது எஸ்.பொவை திரும்பிக் கேள்விகள் கேட்டு மடக்கினார்கள். எஸ்.பொவும் கோபம் வந்து 'என்னிடம் கேள்வி கேட்பதுபோல நீங்கள் சிவத்தம்பியிடம் கேட்டிருந்தீர்களா?' எனத் திருப்பி மடக்கினார். இரண்டு தரப்பிடமும் தீ பற்றாத குறைதான். இரண்டு கூட்டங்களின் அனுபவத்தின்படி எஸ்.பொ என்ன பேசுவார் என்ற 'வித்தை' கைவரப் பெற்றதால், அவரைப் பின் தொடர்வதைவிட எனக்குப் பிடித்த அவரின் படைப்புக்களைப் பின் தொடர்வதே சிறந்தது என -அவரின் கூட்ட உரைகளுக்குப் போவதை மறந்துவிட்டு- வாசிப்பில் கவனஞ்செலுத்தினேன்.

எஸ்.பொ ஒரு சிறந்த கதை சொல்லி. அதை மறுத்துக் கூறும் எவரோடும் எங்கும் உரையாடுவதற்குத் தயாரகவே இருக்கின்றேன். சமஸ்கிருத வார்த்தைகள் அளவுக்கதிகமாய் அவரது படைப்புக்களில் சிலவேளைகளில் பெருக்கெடுத்தாலும் அவர் தன் படைப்புக்கள் புதிய சொற்கள் பலதை அறிமுகப்படுத்தியிருக்கின்றார். அதற்கு அவர் கற்றிருக்கக்கூடிய பைபிள் கைகொடுத்திருக்கலாம்தான். எனினும் அதைத் தேவையான இடத்தில் பொருத்திவிடக்கூடிய நுட்பம் எஸ்.பொவுக்கு மிக எளிதாக வாய்த்திருக்கிறது. சடங்கில் மிக நுட்பமாய் பதியப்பட்ட யாழ்ப்பாணிகளின் வாழ்க்கையை நாம் மறந்துவிடக்கூடுமா என்ன? ஆனால் நான் விதந்தோத்துகிற எஸ்.பொதான் கட்டுரையாக எழுதக்கூடிய 'மாயினியை' ஒரு மோசமாக நாவலாகத் தந்திருக்கின்றார் என்பதையும் மறந்துவிடமுடியாது. மரபார்ந்த மார்க்சியர்களை கேள்வி கேட்டு எழுதியபோது -அவ்வப்போது சண்டைபிடிப்பதும் கட்டியணைப்ப்துமாய் - இருக்கின்ற நண்பர் 'நீயெல்லாம் எஸ்பொ ஏற்கனவே வைத்திருக்கும் பட்டுக்குஞ்சத்தையே தலையில் போடத்தான் லாயக்கானவன்' என்றபோது....எந்தப் பட்டமும் விரும்பாதபோதும் இந்தக் குஞ்சம் எனக்குப் பிடித்தமாய்தான் இருந்தது.  ஆக, இவ்வாறு எனக்குப்பிடித்த எஸ்.பொவுக்கு, ஒரு சிறந்த படைப்பாளியான அவருக்கு,  இயல் விருதுக்குழு இயல்விருதை வழங்கி தன்னைக் கவுரவித்திருக்கிறது எனத்தான் சொல்லவேண்டும்.

நிகழ்வு முடிந்து எஸ்.பொ போய்க்கொண்டிருக்கின்றார். 'ஆண்மை'யில் இருக்கும் கதையில் அக்கா என்கிற கதாபாத்திரம் மிக இளவயதான ஒரு சிறுவனிடம் (உடல்) உறவு வைத்திருக்கிறார். இதையெல்லாம் கதையில் எழுதுவது நியாயமா? என ஒரு அப்பாவியாய் எஸ்.பொவிடம் கேட்கிறேன். எஸ்.பொ ஒரு முறை என்னை உற்றுப் பார்த்தார். பிறகு. 'இதெல்லாம் யதார்த்தில் நடந்திருக்கிறது. அதைத்தான் எழுதினேன், தவறு சரியெல்லாம் கதைகளில் அடங்காது' என்கிறார். எனக்கு அந்தக் கதையை வாசித்தபோது, அதில் பட்டும்படாமலும் கதையில் வரும் அக்காவுக்கும் சிறுவனுக்கும் உறவு இருந்தென்பது விளங்கியது, அதை உறுதிப்படுத்தத்தான் எஸ்.பொவிடம் கேட்டேன். நான் நினைத்தது சரிதான் என என் வாசிப்புப் பற்றிய நம்பிக்கையில் உற்சாகமடைந்தேன். எஸ்.பொ அடுத்த நிகழ்வொன்றுக்காய் தன் உறவினர்கள் புடைசூழ யாரோ போட்டிருந்த மாலை கழுத்தில் தொங்க நடந்துபோய்க்கொண்டிருந்தார்.
...............................
*க‌ட‌தாசிப்பூவின் இன்னொருபெய‌ர் போக‌ன்வில்லா

ஷோபாசக்தியின் பதில்கள்: சில அவதானங்கள்

Saturday, February 19, 2011

ஆதியிலே ஷோபாசக்தியோடு முரண் இருந்தது - பகுதி 03

ஷோபாசக்தி எனது கேள்விகளுக்கு அளித்த பதில்களை முன்வைத்து சில குறிப்புக்களை எழுதுகின்றேன். கேள்வி பதில்...பிறகு பதிலுக்கு மேலும் கேள்விகள் என ஒரு முடிவுறாத வட்டத்திற்குள் சிக்காமல் இருப்பதற்காய் சில அவதானக் குறிப்புக்களை எழுதுகின்றேன்.



(1) ஷோபா குறிப்பிட்ட‌ மாற்ற‌ம்/மாற்ற‌த்திற்கான‌ கார‌ண‌ங்க‌ள் என்ப‌வ‌ற்றையும் நானும் ஒப்புக்கொள்கின்றேன். கால‌ச்சுவ‌டு, இந்தியா ரூடே போன்ற‌வ‌ற்றில் எழுதிக்கொண்டிருந்த‌ ர‌விக்குமார்,ராஜ்கெள‌த‌ம‌ன் போன்ற‌வ‌ர்க‌ளையும் அதே நிலைப்பாட்டிலேயே நானும் ஆத‌ரித்து வ‌ந்திருக்கின்றேன். அதை என‌து த‌ள‌த்திலும் எழுதியுமிருக்கின்றேன்.

நான் சுட்ட‌ விரும்பிய‌து, மாற்ற‌த்தைய‌ல்ல‌. புல‌ம்பெய‌ர் சூழ‌லில் இல‌க்கிய‌ச் செய‌ற்பாடுக‌ளுக்கும், ச‌ஞ்சிகைக‌ள் வெளிவ‌ருவ‌த‌ற்கும் எவ்வ‌ள‌வு அல்லாட‌ வேண்டியிருக்கிற‌து என‌ நாமெல்லோரும் அறிவோம். ப‌டித்துக்கொண்டிருந்த‌ கால‌த்தில் என‌க்கும், ந‌ண்ப‌னொருவ‌ருக்கும் ச‌ஞ்சிகை வெளியிடும் ஆசை வ‌ந்து, அப்போது இங்கு வ‌ந்திருந்த‌ 'உயிர்நிழ‌ல்' க‌லைச்செல்வ‌னோடும் இது ப‌ற்றி உரையாடியிருந்தோம். அவ‌ர் தான் 'உயிர்நிழ‌ல்' வ‌ருவ‌த‌ற்காய், தான் வேலை செய்துவ‌ரும் ப‌ண‌ம் முழுவ‌தையுமே செல‌விட‌வேண்டியிருக்கிற‌தென‌ அது குறித்த‌ இட‌ர்க‌ளை எங்க‌ளுட‌ன் ப‌கிர்ந்திருந்தார். மேலும் 'உயிர்நிழல்' ச‌ஞ்சிகையை இல‌ங்கை/இந்தியாவிலிருப்ப‌வ‌ர்க‌ளுக்கு விற்ப‌தில்லையென்ற‌ முடிவில் அவ‌ர்க‌ளுக்கு இல‌வ‌ச‌மாக‌வே அனுப்புவ‌தாய்க் குறிப்பிட்ட‌தும் நினைவு. என‌வே உயிர்நிழ‌லோ, எக்ஸிலோ பிற‌ ச‌ஞ்சிகைக‌ளோ புக‌லிட‌ சூழ‌லிருந்து மிகுந்த‌ நெருக்க‌டிகளிலிருந்தே வெளிவ‌ந்த‌ன‌ என்ப‌தை நாம‌னைவ‌ரும் அறிவோம். எக்ஸில் ச‌ஞ்சிகையின் ஆசிரிய‌ர் குழுவில் இருந்த‌வ‌ர்க‌ளின்(?) அர‌சிய‌ல் என‌க்கு உட‌ன்பாடில்லாவிட்டாலும், அவ‌ர்க‌ள் விள‌ம்ப‌ர‌ங்க‌ளைத் த‌ங்க‌ள் ச‌ஞ்சிகையில் பிர‌சுரிக்கும்போது, சாதி வெறிய‌ர்க‌ளிட‌மோ/ம‌த‌ வெறிய‌ர்க‌ளிட‌மோ போக‌மாட்டார்க‌ள் என்ப‌தை நிச்ச‌யமாக என்னைவிட‌ ஷோபாச‌க்தி ந‌ன்கு அறிவார். அப்ப‌டிப்ப‌ட்ட‌ ந‌ண்ப‌ர்க‌ள் விள‌ம்ப‌ர‌ங்க‌ளைத் த‌ங்க‌ள் ச‌ஞ்சிகைக‌ளில் சேர்ப்ப‌தை விம‌ர்சித்த‌ ஷோபா, த‌ம‌து வியாபார‌ நோக்க‌ங்க‌ளுக்காய் எந்த‌ அடிப்ப‌டை அற‌முமில்லாது விள‌ம்ப‌ர‌ங்க‌ளைப் பிர‌சுரிக்கும் நிறுவ‌ன‌ங்க‌ளின் சஞ்சிகைக‌ளில் எழுத‌ப்போகும்போது, எக்ஸில் ச‌ஞ்சிகை ந‌ட‌த்திய‌ ந‌ண்ப‌ர்க‌ளிட‌மும் த‌ன‌து த‌வ‌றை உண‌ர்ந்து ம‌ன்னிப்புக் கேட்டிருப்பாரா என்ப‌து கேள்விக்குரிய‌து. நாம் யாரை விம‌ர்சிக்கின்றோம் என்ப‌தையோ அல்ல‌து எப்போது நாம் மாறுகின்றோம் என்ப‌தையோ த‌வ‌றென‌ச் சொல்ல‌ வர‌வில்லை. ஆனால் கால‌நேர‌ங்க‌ளுக்கு ஏற்ப‌ ந‌ம‌க்கு எது சாத‌க‌மாக‌ இருக்கின்றோமே அதைச் செய்துவிட்டு 'சும்மா சாட்டு' பிற‌கு சொல்வ‌த‌ற்கு இன்னொரு பெய‌ர் ச‌ந்த‌ர்ப்ப‌வாத‌ம் என்ப‌தையும் குறிப்பிட‌ விரும்புகின்றேன்.

இந்த‌ விட‌ய‌த்துக்கு இன்னொரு உதார‌ண‌த்தையும் பார்ப்போம். புதிய‌ பார்வை என்றொரு ச‌ஞ்சிகையை எல்லோருக்கும் தெரியும். அந்த‌ ச‌ஞ்சிகையின் ப‌திப்பாசிரிய‌ர் ந‌ட‌ராஜ‌ன். அவ‌ரின் சாதி எதுவென‌ எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதே ச‌ஞ்சிகையில் அ.மார்க்ஸ் ப‌த்திக‌ள் எழுதிவ‌ருகின்றார். முத்துராம‌லிங்க‌ம் அவ‌ர்க‌ளின் நூற்றாண்டுவிழாவில் அது ஒரு சிற‌ப்பித‌ழ் வெளியிடுகின்ற‌து. அ.மார்க்ஸை ஷோபாவைப் போல‌ எல்லாப்பொழுதும் ஆத‌ரிக்கும் சுகுணாதிவாக‌ரிட‌ம், இதே கால‌ப்ப‌குதியில், 'முத்துராம‌லிங்க‌த்தை வித‌ந்தோத்தும் ஒரு இத‌ழில் அ.மார்க்ஸ் எழுதுவ‌து என்ன‌ நியாய‌ம்?' என‌ ஒரு கேள்வியைக் கேட்கின்றேன். அத‌ற்கு அவ‌ர், 'ஆமாம். இனி அ.மார்க்ஸ் புதிய‌ பார்வையில் எழுத‌மாட்டார்' என‌ப் ப‌தில் சொல்கின்றார்.

த‌லித்திய‌ அர‌சிய‌லை முன்னெடுத்த‌ அ.மார்க்ஸுக்கு ந‌ட‌ராஜ‌ன் ப‌ற்றி எதுவுமே தெரியாம‌லா அங்கே எழுத‌த் தொட‌ங்கினார் என்ப‌து முத‌ற்கேள்வி. ந‌ட‌ராஜ‌ன் த‌ன் சாதி நீக்க‌ அர‌சிய‌லை எங்கேயாவ‌து முன்வைத்து அதை ந‌ம்பித்தான் அ.மார்க்ஸ் போனார் என்ப‌த‌ற்கு ஏதாவ‌து ஆதார‌முண்டா? ஆக, அ.மார்க்ஸ் புதிய‌பார்வையில் எழுதிய‌தை எத‌ன் அடிப்ப‌டையில் புரிந்துகொள்வ‌து?

இதே ச‌ம்ப‌வ‌த்தை என‌து ப‌த்ம‌நாப‌ அய்ய‌ரின் கேள்வியோடும் ஒருவ‌ர் ஒப்பிட்டுப் பார்க்க‌லாம். அங்கே நான் குறிப்பிட்ட‌து 'சாதிப்பெயர்களை எடுத்துவிட்டு சாதிமான்களாய் உலாவருபவர்களையும் நீங்கள் அறியாததுமல்ல?' என்ப‌து. இத‌ற்கு ஒரு உதார‌ண‌மாய் ந‌ட‌ராஜ‌ன் இருக்கின்றார். இங்கே நாம் ந‌ட‌ராஜ‌னை அதிக‌ம் விம‌ர்சிக்க‌வேண்டுமா அல்ல‌து அய்ய‌ர் என்ற‌ பெய‌ரை ம‌ட்டும் வைத்திருப்ப‌த‌ற்காய் ப‌த்ம‌நாப‌ அய்ய‌ரை அதிக‌ம் விம‌ர்சிக்க‌வேண்டுமா? இந்த‌ 'வித்தியாச‌ங்க‌ளை' நாம் க‌ண‌க்கிலெடுக்க‌ வேண்டுமென‌த்தான் திரும்ப‌த் திரும்ப‌ ஷோபாவிட‌ம் வ‌ற்புறுத்துகின்றேன்.

(2) ஒரு முக்கிய விட‌ய‌த்துக்கு அது நிக‌ழ்ந்த‌ நேர‌த்தில் ஏன் ஷோபா எதிர்வினையாற்றவில்லை என்ற‌ என‌து முக்கிய‌கேள்வியைச் ஷோபா மிக‌ எளிதாக‌க் க‌ட‌ந்துபோகின்றார். ஷோபா ஏன் எல்லாவ‌ற்றுக்கும் எதிர்வினை செய்ய‌வேண்டுமா என‌ ஒருவ‌ர் கேட்க‌வும் கூடும். முத‌லாவ‌து இது ஷோபா அதிக‌ம் புழ‌ங்கும் இல‌க்கிய‌வெளி. இர‌ண்டாவ‌து ஷோபா த‌லித்திய‌ச் செய‌ற்பாடுக‌ளில் அதிக‌ம் ஈடுபாடுடைய‌வ‌ராக‌க் காட்டிக்கொள்ப‌வ‌ர். இவை எல்லாவ‌ற்றுக்கும் மேலாய் ஷோபாவின் நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ள் குறித்த‌ ச‌ம்ப‌வ‌ இட‌த்தில் இருந்த‌தோட‌ன்றி, அவ‌ர்க‌ளில் ஒருசில‌ர் மீதும் சுகிர்த‌ராணியால் குற்ற‌ஞ்சாட்ட‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. ஒன்றுமேயில்லாத‌ சீமானின் 'த‌ம்பி' ப‌ட‌த்துக்கு வ‌ரிந்து வ‌ரிந்து எழுதுகின்ற‌ ஷோபா இந்த‌ விட‌ய‌த்தில் ம‌வுன‌மாக‌ ஏன் இருந்தார் என்ப‌தும் முக்கிய‌ கேள்வி. அந்த‌ வ‌கையில் ஷோபாவினதும் சுக‌னின‌தும் ம‌வுன‌ம் 'க‌ள்ள‌ம‌வுன‌மே' என்ப‌தை இங்கே ம‌ன‌வ‌ருத்த‌துட‌ன் ப‌திவு செய்கின்றேன். (சுகிர்த‌ராணியின் இக்க‌ட்டுரைக்கான‌ ஒரு விவாத‌ம் என‌து பேஸ்புக்கில் நிக‌ழ்ந்த‌தையும் ஒரு குறிப்பாக‌ இங்கே விட்டுச்செல்கின்றேன்)

(3) கால‌ச்சுவ‌டு/உயிர்மை/கிழ‌க்குப் ப‌திப்ப‌க‌ங்க‌ளை நாடி புல‌ம்பெய‌ர்ந்த‌வ‌ர்க‌ள் செல்வ‌து என‌க்கும் வ‌ருத்த‌ம‌ளிக்கும் விட‌ய‌ந்தான். ஆனால் அவ்வாறு போகும் எல்லோரும் எம்மைப் போல‌ இணைய‌க்க‌ட‌லில் எப்போதும் மூழ்கிக்கிட‌ப்ப‌வ‌ரும் அல்ல‌ர். ந‌ட‌ப்ப‌வை அனைத்தையும் அறிந்த‌வ‌ர்க‌ளும் அல்ல‌ர். என‌வே தொட‌ர்ந்து ப‌ல‌ர் இவ்வாறான‌ ப‌திப்ப‌க‌ங்க‌ளைத் தேடிச் செல்ல‌த்தான் போகின்றார்க‌ள். அவ்வாறு செல்கின்ற‌வ‌ர்க‌ளைப் பார்த்து வ‌ருத்த‌ங்க‌ளையும், 'பாம்பென்றால் ம‌னித‌னைக் க‌டிக்கும்' என்று 'த‌த்துவ‌ங்க‌ளை'ப் பேசிக்கொண்டிருந்தால் ம‌ட்டும் போதுமா?  தொட‌ர்ந்து பாதிப்ப‌வ‌ர்க‌ளுக்காய் நாம் ஒரு சொல் ஆத‌ர‌வு அளித்தோ அல்ல‌து குறிப்பிட்ட‌ ப‌திப்ப‌க‌ங்க‌ளை அம்பல‌ப்ப‌டுத்தி எழுதுத‌லுமே நியாய‌மாகும். ஷோபா அண்மையில் ப‌ட்டிய‌லிட்ட‌ ந‌ம்பிக்கையான‌ ப‌டைப்பாளிக‌ளில் ஒருவ‌ர் மெலிஞ்சிமுத்த‌ன். அவ‌ர் ஒரு ப‌திப்ப‌க‌த்துட‌னான த‌ன் க‌ச‌ப்பான‌ அனுப‌வ‌த்தைக் கூறும்போது நாம் அத‌ற்குத் தார்மீக‌ ஆத‌ரவு கொடுக்க‌வேண்டிய‌து நம் அனைவ‌ரின‌தும் க‌ட‌மைய‌ல்ல‌வா?

'மனிதன் பாம்பைக் கடித்தால்தான் செய்தி. பாம்பு மனிதனைக் கடிப்பது சாதாரணம். அருந்ததிராய் பிரச்சினை அவ்வகைப்பட்டது' என்கின்ற‌ உதார‌ண‌ம் எவ்வ‌ள‌வு அபத்த‌மான‌து என்ப‌தைப் பாருங்க‌ள். எப்போதும் 'க‌வ‌ன‌த்தை ஈர்க்கும்' விட‌ய‌ங்க‌ளுக்கு ம‌ட்டுமே குர‌ல் கொடுப்பேன் என்கின்ற‌ ம‌றைமுக‌ குர‌ல் இத‌ற்குள் ஒலிக்கிற‌தா இல்லையா ஷோபா? பாம்பு எப்போதும் பாம்புதானே? ம‌னித‌ன் பாம்பைக் க‌டித்தான் என்றால் எத‌ற்கு இவ்வ‌ள‌வு ப‌த‌ற்ற‌ப்ப‌டுகின்றீர்க‌ள்? ந‌ச்சில்லாத‌ ம‌னித‌ன் க‌டித்து பாம்புக்கு என்ன‌ பாதிப்பா வ‌ர‌ப்போகின்ற‌து என‌ நானொரு புதிய‌ வியாக்கியான‌ம் சொன்னால் அதுவும் ச‌ரியாக‌ வ‌ரும‌ல்ல‌வா? இதைத்தான் ஏற்க‌ன‌வே (1)ல் குறிப்பிட்ட‌மாதிரி த‌ன‌க்கேற்ற‌ ச‌ந்த‌ர்ப்ப‌மும் சூழ‌லும் வ‌ருகின்ற‌போது ம‌ட்டும் த‌ன்னை வெளிப்ப‌டுத்தும் ஷோபாவின் ம‌னோநிலை என்கின்றேன்.

(4) நீங்க‌ள் இந்த‌க் கேள்விக்கு நேர‌டியாக‌ப் ப‌தில் சொல்லாத‌வ‌ரை, நீங்க‌ள் அருந்த‌தி ரோயின் மீது வைக்கும் விம‌ர்ச‌ன‌ம் வேறு உள்நோக்கை அடிப்ப‌டையாக‌க் கொண்ட‌து என்றே இப்போதும் ச‌ந்தேகிக்கின்றேன்

(5)ஆங்கில‌ம் தெரியாத‌து ஒரு குறையேய‌ல்ல‌. நீங்க‌ள் பிரெஞ்சில் இர‌ண்டுவ‌ரி கேட்டால் என‌க்கும் ப‌தில் கூற‌த் தெரியாதுதான். ஆனால் அந்த‌ மோச‌டிக் க‌ட்டுரை குறித்து நீங்க‌ள் வெளிப்ப‌டையாக‌ அந்த‌க் கால‌ப்ப‌குதியிலேயே ம‌ன்னிப்புக்கேட்டிருக்க‌வேண்டும். எனெனில் அதை வைத்தே 'பின் ந‌வீன‌த்துவ‌ம் பேசுப‌வ‌ர்க‌ள் அனைவ‌ருமே போலிக‌ள்' என‌ முத்திரை குத்த‌ப்ப‌ட்ட‌தை அறிவீர்க‌ள். பின் ந‌வீன‌த்துவம் குறித்து தேட‌லும்,அறிய‌ ஆர்வ‌மும் உடைய‌ ஒருவ‌ருக்கு இத்த‌கைய‌ விட‌ய‌ங்க‌ள் எவ்வாறான‌ ஒரு மன‌ப்ப‌திவைக் கொடுக்குமென்று நினைக்கின்றீர்க‌ள்? எனெனில் அந்த‌ப்ப‌குதியிலேயே நானும் பின் ந‌வீன‌த்துவ‌ம் குறித்து அறிய‌ ஆவ‌ல் கொண்டிருந்தேன் என்ப‌தால் அந்த‌ நிலைமைக‌ள் என‌க்குப் புரியும். இன்று கூட‌ அதேமாதிரியான‌ சில‌ பிம்ப‌ங்க‌ளைச் சும‌ந்துகொண்டு பின் ந‌வீன‌த்துவ‌ம் குறித்து கேலி செய்துகொண்டிருக்கின்ற‌ சில‌ 'புர‌ட்சிவீர‌ர்க‌ளை' நீங்க‌ள் அறியாத‌தும‌ல்ல‌. த‌வ‌றுக‌ள் செய்யாத‌ ம‌னித‌ர்க‌ள் இருக்கின்றார்க‌ளா என்ன‌? அறிந்தே எத்த‌னையோ த‌வ‌றுக‌ளைச் செய்து ம‌ன்னிப்பும் கேட்டுக்கொண்டிருக்கும்போது, அறியாம‌ல் செய்த‌ த‌வ‌றுக்கு ம‌ன்னிப்புக் கேட்க‌  நாம் ஏன் த‌ய‌ங்க‌வேண்டும்?

(6) ஷோபா உங்க‌ளுக்கு த‌மிழ் ம‌ட்டுமேய‌ல்ல‌ பிரெஞ்சும் ந‌ன்கு தெரியுமென‌ என‌க்குத் தெரியும். என‌வே அதை ஒரு விட‌ய‌மாக‌ச் சொல்ல‌த் தேவையில்லை. சாருவின் 'உன்ன‌த‌ ச‌ங்கீத‌ம்' ந‌ல்ல‌ க‌தை என‌ச் சான்றித‌ழும் த‌ருகின்றீர்க‌ள். ந‌ன்று. ஆனால் பெண்க‌ள் ச‌ந்திப்பு ம‌ல‌ரில் (ஆதார‌ம் காட்ட‌ என்னிட‌ம் பிர‌தி வ‌ச‌மில்லை) ப‌ல‌ பெண்க‌ள் இக்க‌தை குறித்து வைத்த‌ எதிர்வினைக‌ளுக்கு, ஒரு தொகுப்பாள‌ன் என்ற‌வ‌கையிலும், க‌தை பிடித்த‌து என்ற‌வ‌கையிலும் எங்கேயாவ‌து விரிவாக‌ எழுதியிருக்கின்றீர்க‌ளா? இன்றுவ‌ரையும் அதுகுறித்து ஒரு இறுகிய‌ ம‌வுன‌த்தைத்தானே ப‌திலாக‌த் த‌ந்திருக்கின்றீர்க‌ள்? சாரு த‌ன் உனன‌த‌ச‌ங்கீத‌த்தை நியாய‌ப்ப‌டுத்த‌ தொட‌ர்ந்து ழார் ப‌த்தாயின் 'விழியின் க‌தை'யையும், ஷேக்ஸ்பிய‌ரின் 'ரோமியோ ஜூலிய‌ட்டை'யும் உதார‌ண‌ம் காட்டிக்கொண்டேயிருப்பார். ஆனால் விழியின் க‌தை தொட‌ங்கும் இட‌த்தைப் பாருங்க‌ள், 'I was nearly sixteen when I met Simone, a girl my own age, at the beach in X.' என்றே ப‌தின்ம‌வ‌ய‌துகார‌ன் சொல்ல‌க் க‌தை தொட‌ங்கும். அதேபோன்று ரோமியோ ஜூலிய‌ட்டில், 13 வ‌ய‌தில் இருந்து 14ற்கு வ‌ய‌துக்கு மாறுகின்ற‌ ஜூலிய‌ட்டுக்கு அவ‌ள் வ‌யதைவிட‌ ஒன்றிர‌ண்டு வ‌ய‌து கூடிய‌ ரோமியோவே காத‌ல‌ன்.

18வ‌ய‌துக்கு மேற்ப‌டாத ஒரு பெண்ணோடு. 18வ‌ய‌தைத்தாண்டிய‌ ஒரு ஆண் உற‌வுகொள்வ‌தென்ப‌து ச‌ட்ட‌ப்ப‌டி குற்ற‌ம்; ஆனால் அதேச‌ம‌ய‌ம் கிட்ட‌த்த‌ட்ட‌ ப‌தின்ம‌வ‌ய‌து பெண்ணோடு அவ‌ள் வ‌ய‌தையொட்டிய‌ ஆண் உற‌வில் இருப்பது குறித்துப் பிர‌ச்சினையில்லை. இந்த‌ வித்தியாச‌ங்க‌ளையும், தான் காட்டும் உதார‌ண‌ங்க‌ளுக்குள் இருக்கும் முர‌ண்க‌ளையும் தெரியாதுதான் சாரு தன்னை நியாயப்படுத்துகிறார் என்ப‌து இன்னொரு விவாத‌த்திற்கான‌ புள்ளி. புனைவில் எதை எழுத‌லாம்/எழுத‌க்கூடாது என‌ நாம் ச‌த்த‌ம் போட‌முடியாதுதான். ஆனால் சாருவின் 'நோநோ' சிறுக‌தைத் தொகுப்பையெல்லாம் வாசித்துவிட்டு, 'உன்ன‌த‌ச‌ங்கீத‌ம்' போன்ற‌ த‌ட்டையான‌ க‌தையைச் 'சிற‌ந்த‌ க‌தை' என‌ப் பாராட்டும் உங்க‌ள் வாசிப்பை எப்ப‌டிப் புரிந்துகொள்வ‌தென‌ யோசித்துக்கொண்டிருக்கின்றேன்.

இர‌ண்டாவ‌து இந்த‌க்க‌தையை முன்வைத்து வைக்க‌ப்ப‌டும் குற்ற‌ச்சாட்டு, இந்திய‌ இராணுவ‌ம் சிங்க‌ளப் பெண்ணைப் பாலிய‌ல் வ‌ன்புண‌ர்வுக்கு உட்ப‌டுத்துவ‌து குறித்து. இப்ப‌டியொரு ச‌ந்த‌ர்ப்ப‌ம் உண்மையில் ந‌ட‌ந்திருக்கிற‌தா? ச‌ரி புனைவுதானே அங்கே எதையும் எப்ப‌டியும் முன்வைக்க‌லாம் என்ற‌ வாத‌த்தை நீங்க‌ள் முன்வைப்பீர்க‌ளாயின், நீங்க‌ள் எழுதிய‌ ஒரு சிறுக‌தையில் ர‌ஞ்சி(சுவிஸ்)யின் பெய‌ரையும், ஊரையும் குறிப்பிட்டு எழுதிய‌த‌ற்கு அவ‌ர் க‌ண்ட‌ன‌ம் தெரிவித்த‌போது அவ‌ரின் பெய‌ரை அக‌ற்றியிருந்தீர்க‌ள். அந்த‌ச் ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் ஏன் நீங்க‌ள் புனைவில் வ‌ரும் க‌தைசொல்லி அதைச் ச‌ரியாக‌வோ பிழையாக‌வோ சொல்லியிருக்க‌லாம், அதை மாற்றுவ‌த‌ற்கான‌ சுத‌ந்திர‌ம் என‌க்கில்லையென‌ச் சொல்ல‌வில்லை? இந்த‌ இரு ச‌ம்ப‌வ‌ங்க‌ளையும் முன்வைத்து உங்க‌ளை எந்த‌வ‌கையில் புரிந்துகொள்வ‌து?

(7) எஞ்சியிருப்ப‌வ‌ர்க‌ளின் வாழ்வுக்காய் ப‌கை ம‌ற‌ப்பும், மீளிண‌க்க‌மும் முக்கிய‌ம் என்ப‌தே என‌தும் நிலைப்பாடு. ஆனால் அதேச‌ம‌ய‌ம் வெற்றிபெற்ற‌வ‌ர்க‌ள் திணிக்கின்ற‌தாய் இந்த‌ விட‌ய‌ங்க‌ள் இருக்கக்கூடாது என்ப‌தோடு, தோற்ற‌வ‌ர்க‌ள் வென்ற‌வ‌ர்க‌ள் மீது ந‌ம்பிக்கை கொள்வ‌த‌ற்கான‌ ந‌க‌ர்வுக‌ளை வென்ற‌வ‌ர்க‌ளே செய்ய‌வேண்டும் என்ப‌தையும் நாம் வ‌ற்புறுத்தியாக‌ வேண்டியிருக்கிற‌து. இந்த‌ வெற்றி எப்ப‌டிப் பெற‌ப்ப‌ட்ட‌து என்ப‌து குறித்த‌ கேள்விக‌ளையும் நாம் ம‌ற‌ந்துவிட‌க்கூடாது. மேலும் வென்ற‌வ‌ர்க‌ள் எழுதும் ச‌ரித்திர‌மே 'வ‌ர‌லாறாக‌'ப் போய்விடுவ‌து குறித்தும் அவ‌தான‌மாக‌ இருக்க‌வேண்டும்.

இத‌ற்கு ஒரு உதார‌ண‌மாக‌ போல‌ந்தில் போலிஷ்காரர்களுக்கு ந‌ட‌ந்த‌ Katyn ப‌டுகொலைக‌ளைக் குறிப்பிட‌ விரும்புகின்றேன். போல‌ந்தை ஆக்கிர‌மித்திருந்த‌ நாசிப்படைக‌ளை வெற்றிகொண்ட‌ சோவிய‌த் ப‌டைக‌ள் நாசிக‌ளே இதைச் செய்தார்க‌ள் என‌ நெடுங்கால‌மாக‌க் கூறிவ‌ந்திருக்கின்ற‌ன‌ர். அண்மையிலேதான் ‍ இத்த‌னை வ‌ருட‌த்துக்குப் பிற‌கு தாங்க‌ளே ப‌டுகொலைக‌ளைச் செய்த‌தாக‌ ர‌ஷ்ய‌ அர‌சு வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிற‌து. காலம் கடந்த தீர்ப்புகளுக்கு சிலவேளைகளில் அர்த்தமேயிருப்பதில்லை என்பதையும் நாமறிவோம். என‌வே 'ப‌கை ம‌ற‌ப்பு' ம‌ற்றும் 'மீளிண‌க்க‌ம்' என்ப‌வ‌ற்றை முன்வைத்து நாம் வென்ற‌வ‌ர்க‌ளின் ப‌க்க‌ம் முற்றுமுழுதாக‌ச் சாய‌வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லை என‌ச் சொல்ல‌ விரும்புகின்றேன். கால‌ம் தாண்டி வெளிவ‌ந்த‌ உண்மைக‌ளுக்கு ஒரு உதார‌ணமாய் இந்த‌ச் ச‌ம்ப‌வ‌ம் இருப்ப‌துபோல‌ ஈழ‌ப்போரிலும் புதைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ ப‌ல‌ உண்மைக‌ள் இருக்கும் என்ப‌தை ஷோபாவும் நினைவில் கொள்ள‌வேண்டுமென‌ விரும்புகிறேன்.

ப‌கை ம‌ற‌ப்பை முன்னிறுத்தி இல‌ங்கையில் ந‌ட‌க்கும் விட‌ய‌ங்க‌ளுக்கு ஆத‌ரவு கொடுப்ப‌வ‌ர்க‌ள் எல்லோருமே எப்ப‌டி இல‌ங்கை அர‌சின் ஆத‌ர‌வாள‌ர்க‌ள் இல்லையோ, அப்ப‌டியே இல‌ங்கை அர‌சின் செய‌ற்பாட்டை விம‌ர்சிப்ப‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் ப‌கை ம‌ற‌ப்புக்கும், மீளிண‌க்க‌த்திற்கும் எதிரான‌வ‌ர்க‌ள் என்ப‌தும் இல்லை என்ப‌தையும் நாம் க‌வ‌ன‌த்திற் கொள்ள‌வேண்டும்.

((8) இந்த‌க் கேள்வியின் முக்கிய‌மே, சாதிப்பெய‌ர்க‌ளை நீக்கிய‌வ‌ர்க‌ள் எல்லோரும் சாதி நீக்க‌ம் செய்த‌வ‌ர்க‌ளும‌ல்ல‌, சாதிப்பெய‌ர்க‌ளோடு இருப்ப‌வ‌ர்க‌ள் எல்லோரும் சாதி வெறிய‌ர்க‌ளும் அல்ல‌ என்ப‌தே. இந்த‌ வித்தியாச‌ங்க‌ளை அறியாது 'பெய‌ர்க‌ளை' ம‌ட்டும் க‌ருத்திற்கொண்டு ந‌ட்பு ச‌க்திக‌ளையும் எதிர்த்திசையில் வைத்து உரையாடுவ‌து எந்த‌ள‌வில் ச‌ரியென்ப‌தை யோசிக்க‌வேண்டும். இன்று ஹ‌ரி த‌ன‌க்குப்பின்னால் வ‌ரும் பெய‌ரை எடுத்துவிட்டார், அவ‌ர் அதை எடுக்காதுவிட்டிருந்தால், ஷோபா எவ்வாறான‌ உதார‌ண‌த்தைச் சொல்லித் த‌ப்பித்துக்கொண்டிருப்ப்பார் என‌வும் யோசிக்கின்றேன்.

(9)'தொழிலாளிக்கு தாய்நாடு கிடையாது என்ற கார்ல் மார்க்ஸின் பார்வையும் நானொரு தேசத்தரோகி என்ற பெரியாரின் அறைகூவலுமே எனது வழிகள்.'

இவ்வாறான‌ பிர‌க‌ட‌ன‌ங்க‌ளும், சூளுரைப்புக்க‌ளும் ந‌ல்ல‌தே. எனினும் ஷோபா நீங்க‌ள் இந்தியாவிற்குப் போக‌ விஸா எடுக்கும்போது இவை உங்க‌ளுக்கு உத‌வி புரியாது. நீங்க‌ள் உங்க‌ளை இல‌ங்கைய‌னாக‌வோ அல்ல‌து பிரெஞ்சுக்கார‌னாக‌வோ அடையாள‌ங்காட்டினால்தான் விஸா த‌ருவார்க‌ள் அல்ல‌வா? இவ்வ‌கையான‌ தேர்வுக‌ள் தான் இல‌ங்கையில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கும் இருக்கும் என்ப‌தை எப்ப‌டி மறுத‌லிப்பீர்க‌ள்?

போர் துர‌த்திய‌ கால‌ந்தொட்டு ஈழ‌த்தில் இருந்த‌வ‌ரை ஏன் நான் த‌மிழ‌னாய் பிற‌ந்தேன் என‌க் க‌வ‌லைப்ப‌ட்டிருக்கின்றேன். போருக்குள் அக‌ப்ப‌ட்டிற‌ந்தால் அடுத்த‌ பிற‌ப்பு என்று ஒன்றிருந்தால் த‌மிழ‌னாய் அல்லாது பிற‌க்க‌ வேண்டுமென‌வே பிரார்த்தித்துமிருக்கின்றேன். நான் என‌து அடையாள‌ங்க‌ளைத் துற‌க்க‌ விரும்பிய‌போதும் என் மீது த‌மிழ‌ன் என்ற‌ அடையாள‌ம் ஒவ்வொரு ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ளிலும் திணிக்க‌ப்ப‌ட்ட‌து.

அவ்வாறு ஒரு அடையாள‌த்தை வைத்து ஒடுக்க‌ப்ப‌டும்போது, அந்த‌ அடையாள‌த்தை வைத்து கிள‌ர்ந்தெழுவ‌து த‌விர்க்க‌முடியாது. வ‌ர‌லாறு முழுதும் அதுவே நிக‌ழ்ந்திருக்கின்ற‌து. த‌லித் என்ற‌ அடையாள‌த்தை வைத்து ஒடுக்குத‌ல்க‌ள் நிக‌ழும்போது த‌லித்துக்க‌ள் அத‌ன் பெய‌ரிலே கிள‌ர்ந்தெழுவ‌து எவ்வாறு த‌விர்க்க‌முய‌லாதோ, அவ்வாறே த‌மிழ‌ர் என்ற‌ பெய‌ரில் ஒடுக்க‌ப்ப‌டும்போது த‌ங்க‌ளை ஒரு இணைந்த‌ ச‌க்தியாக‌ ஒடுக்க‌ப்ப‌டுவ‌தற்கு எதிராக‌ப் போராட்ட‌ங்க‌ளை ந‌ட‌த்துவ‌தையோ நாம் ஒதுக்கிவிட‌ முடியாது. ந‌ம‌க்கு வ‌ழிகாட்டிக‌ளாக‌ இருந்த‌வ‌ர்க‌ளும், ந‌ம்மை வ‌ழிந‌ட‌த்திய‌வ‌ர்க‌ளும் த‌வ‌றாக‌ இருந்தார்க‌ள் என்ப‌த‌ற்காக‌ நம் மீது நட‌ந்த‌ ஒடுக்குமுறைக‌ள் இல்லை என்றாகிவிடாது.

உங்க‌ளைப் போல‌வே தேசிய‌த்தின் மீது ந‌ம்பிக்கை என‌க்கில்லையென‌ வெளிப்ப‌டையாக‌க் கூறியிருக்கின்றேன். அவை இறுதியாய் எங்கே போய் முடியுமென்ப‌தையும் குறிப்பிட்டிருக்கின்றேன். ஆனால் த‌ன் தேசிய‌ அடையாள‌த்தின் பெய‌ரால் ஒடுக்க‌ப்ப‌டுகின்ற‌ ஒரு இன‌ம், த‌ன் தேசிய‌த்தின் பெய‌ரால் ஒருங்கிணைவ‌தை நாம் த‌வ‌றென்றும் கூறிவிட‌முடியாது. இவ்வாறான‌ உங்க‌ள் சூளுரைப்புகளுக்கு அப்பால் இருக்கும் ய‌தார்த்தையும் புரிந்துகொள்ள வேண்டுகின்றேன். உங்க‌ளைப் போல‌வே என‌க்கும் பிடித்த‌மான‌ பெரியார், (இப்போது இருந்தால்) தான் வெளிநாடு செல்லும்போது த‌ன்னை இந்திய‌ன் என‌ பாஸ்போட்டில் குறிப்பிட்டிருப்பாரா அல்ல‌து தேச‌த்துரோகியென‌க் குறிப்பிட்டிருப்பாரா என‌வும் யோசித்துப் பார்க்க‌வும்.

(10) சுக‌னைப் ப‌ற்றிக் கேட்ட‌ கேள்விக்கு இப்ப‌டி விர‌லைச் சூப்புகின்ற‌ குழ‌ந்தையாய் அப்பாவித்த‌ன‌மாய் திருப்பிக் கேள்வி கேட்கின்றீர்க‌ளே ஷோபா? இணைய‌த்தில் சும்மா தேடினாலே சுக‌ன் ப‌ற்றிய‌ விமர்சனங்கள் நிறைய‌க் கிடைக்குமே? நீங்க‌ள் இப்ப‌டி 'அப்பாவி'க்குழ‌ந்தையாய்தான் இருப்பீர்க‌ள், ஆனால் எதிர்கால‌த்தில் நீங்க‌ள் வ‌ள‌ர்ந்து தொலைந்துவிட்டாலும், இந்த‌விட‌ய‌த்தை அறிய‌வேண்டுமென்ப‌த‌ற்காய்தானே பானுபார‌தியின் பேஸ்புக்கையும் உதார‌ண‌ம் காட்டியிருந்தேன். 'உயிரெழுத்தில்' எழுதுவ‌தால் அவ‌ர்க‌ள் உங்க‌ள் ந‌ட்பு வ‌ட்ட‌த்திற்குள்ளே இருப்பார்க‌ள் என‌ ந‌ம்புகின்றேன். ச‌ந்த‌ர்ப்ப‌ம் வாய்க்கும்போது அவ‌ர்க‌ளிட‌ம் கேளுங்க‌ள், ஏன் சுக‌னிட‌ம் உங்க‌ளுக்கு இப்படி க‌டுமையான‌ விம‌ர்ச‌ன‌ம் இருக்கிற‌தென்று. என்னாலான‌ உத‌வி இப்போதைக்கு இவ்வ‌ள‌வுதான்.

(11)'தனிநபர்கள் மீது அவதூறு பரப்புதைத் தடுப்பதற்காக பின்னூட்டங்களில் மட்டுறுத்தல் நீக்கல் மூடல் எல்லாமே செய்வேன். தனிநபர்கள் மீது அவதூறு பரப்புதைத் தடுப்பதற்காக பின்னூட்டங்களில் மட்டுறுத்தல் நீக்கல் மூடல் எல்லாமே செய்வேன். நீங்கள் உங்களுடைய வலைப் பதிவில் எழுதுவதை நான் தடைசெய்தால்தான் அதற்குப் பெயர் கருத்துச் சுதந்திர மறுப்பு'

நான் அவ‌தானித்த‌வ‌ரை நீங்க‌ள் பேஸ்புக்கில் அக‌ற்றிய‌வ‌ர்க‌ள் எல்லாம் உங்க‌ள் மீத‌ல்ல‌வா விம‌ர்ச‌ன‌ம் வைத்திருந்தார்க‌ள். இறுதியில் நேற்றுக்கூட‌ ஒருவ‌ரை அக‌ற்றியதாக என் ஃபேஸ்புக் மூலம் அறியமுடிந்திருந்தது.

நுண‌லும் த‌ன் வாயால் கெடும் என்று சும்மாவா கூறினார்க‌ள். இப்ப‌டி நீங்க‌ள் எழுதிய‌தையே சற்று விரித்துப் பார்ப்போம். இதையே ஒரு இய‌க்க‌ம் அல்ல‌து த‌லைமை தாங்குப‌வ‌ர், நான் என் இய‌க்க‌த்தில் இருப்ப‌வரைச் சித்திர‌வ‌தை செய்வேன், விரும்பினால் போட்டுக்கூட‌த் த‌ள்ளுவேன், எனெனில் இது என் இய‌க்க‌ம், நீ வாயைப் பொத்திக்கொண்டு போ' என்று சொல்வ‌த‌ற்கு எவ்வ‌ள‌வு நேர‌ம் எடுக்கும் என‌ நினைக்கின்றீர்க‌ள். அவ‌ர்க‌ளும் யாரையும் போட்டுத்த‌ள்ளிவிட்டு, 'இந்த‌ நப‌ர் எங்க‌ள் இய‌க்க‌ம் ப‌ற்றி அவ‌தூறு ப‌ர‌ப்புகின்றார்' என‌ச் சொல்லிவிட்டுப் போக‌லாம் அல்ல‌வா? இதுதானே க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் நிக‌ழ்ந்தும் இருக்கிற‌து அல்ல‌வா ஷோபா? இதைத்தான் ஏற்க‌ன‌வே சொன்னேன், எங்க‌ளிட‌ம் எத்த‌கைய‌ ச‌கிப்புத்த‌ன்மையும், பொறுப்புண‌ர்ச்சியும் இல்லாத‌போது நாம் ச‌ன‌ங்க‌ளுக்காய் பேசுவ‌து என்ப‌து சுத்த‌ ப‌ம்மாத்து என்கின்றேன். எங்க‌ளை ந‌ம்பி ச‌ன‌ம் வ‌ருகின்ற‌து என்றால், அது அவ‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குத் தாங்க‌ள் கழுத்தில் தூக்குக் க‌யிற்றைப் போட்ட‌மாதிரியே என‌ இப்போதும் தெளிவாக‌ச் சொல்கின்றேன்.

(13) புலிக‌ள் எப்போதும் ஆயுத‌ப்போராட்ட‌ம் அத‌ன் மூல‌ம் த‌மிழீழ‌ம் என்ற‌வ‌கையில் மட்டுமே சிந்தித்த‌வ‌ர்க‌ள் என்ப‌து அனைவ‌ருக்கும் தெரியும். அவ‌ர்க‌ள் சாதி ஒழிப்பு ம‌ட்டுமின்றி பிற‌ எந்த‌ விட‌ய‌ங்க‌ளுக்கும் ஒருபோதும் வேலைத்திட்ட‌த்தை முன்வைத்த‌தோ ந‌டைமுறைப்ப‌டுத்திய‌தோ இல்லை என்ப‌து அனைவ‌ரும் அறிந்த‌தே. இன்குலாப் போன்ற‌ புலிக‌ளின் தீவிர‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே, புலிக‌ள் எழுச்சியுட‌ன் இருந்த‌ கால‌த்திலேயே, 'த‌மிழீழ‌ம் கிடைத்தால்கூட‌ அத‌ன்பிற‌கும் அங்குள்ள‌ ம‌க்க‌ள் இன்னொரு போராட்ட‌த்திற்குத் த‌யாராக‌வேண்டும். அது சாதிக்கு எதிரான போராட்ட‌ம்' என‌ எப்போதோ கூறியுமிருக்கின்றார்கள். ஆக‌ உங்க‌ளைப் போன்ற‌ 'மாற்று' அர‌சிய‌ல் பேசிய‌வ‌ர்க‌ளுக்கு ம‌ட்டுமின்றி புலிக‌ளைத் தீவிர‌மாக‌ ஆத‌ரித்த‌வ‌ர்க‌ள் கூட‌ இதைச் சொல்லியிருக்கின்றார்க‌ள்.

ஆனால் உங்க‌ளைப் போன்ற‌வ‌ர்க‌ள் தொட‌ர்ச்சியாக‌ ஏதோ புலிக‌ள் ம‌ற்ற‌ எல்லாவ‌ற்றையும் செய்துவிட்டு சாதியை ம‌ட்டும் வ‌ள‌ர்க்க‌த் துணைபோகின்றார்க‌ள் என்ற‌ ப‌ர‌ப்புரையைச் செய்துகொண்டிருந்தீர்க‌ள் என்ப‌தை நாம‌னைவ‌ரும் அறிவோம். இப்போது ' புலிகள் மீதான எனது விமர்சனம் அவர்கள் சாதியத்தை வளர்தார்கள் என்பதல்ல. சாதியைக் கில்லியெறிய அவர்கள் ஆழமான வேலைத்திட்டங்களை வைக்காததையே எப்போதும் எனது விமர்சனமாக வைத்து வந்திருக்கிறேன்' என‌ நீங்க‌ள் கீழிறங்கி வ‌ந்திருப்ப‌தே வ‌ர‌வேற்க‌க்கூடிய‌ விட‌ய‌ந்தான். எனெனில் இப்ப‌டி நீங்க‌ள் வெளிப்ப‌டையாக‌க் முன்பு கூறி நான் வாசித்த‌ நினைவும் இல்லை.

இது ஒருவ‌கையில் புரிந்துகொள்ள‌க்கூடிய‌ ம‌னோநிலைதான் ஷோபா. எனெனில் புலி அல்லாத‌வ‌ராய் இருப்ப‌வ‌ரைவிட‌ புலிக்குள் இருந்து வெளியே வ‌ந்து, புலியை விம‌ர்சிப்ப‌வ‌ர்க்கு நிறைய‌ பிர‌ச்சினைக‌ள் உண்டு. த‌ன‌து விம‌ர்ச‌ன‌த்தைக் காட்ட‌மாய் க‌ண்மூடித்த‌ன‌மாய் வைத்தாலான‌றி அவ‌ர் த‌ன்னை நிலை நிறுத்திக்கொள்ளுத‌ல் க‌டின‌ம். இது உங்க‌ளுக்கு ம‌ட்டும‌ல்ல‌ நிக‌ழ்ந்திருக்கின்ற‌து. வேறு இய‌க்க‌ங்க‌ளில் இருந்து புலிக‌ளோடு பிற்கால‌த்தில் சேர்ந்த‌வ‌ர்க‌ளும் -சாதார‌ண‌மான‌வ‌ர்க்கு இருக்கும் புலி ஆத‌ர‌வை விட‌- க‌ண்மூடித்த‌ன‌மான‌ புலி ஆத‌ர‌வைக் காட்டுவார்க‌ள். ஷோபா இதுவே உங்க‌ளுக்கு க‌ட‌ந்த‌கால‌த்தில் நிக‌ழ்ந்தென‌ உறுதியென‌ ந‌ம்புகின்றேன், அதாவ‌து க‌ண்மூடித்த‌ன‌மான‌ புலி எதிர்ப்பு. அதுவேதான், இன்று ஈழ‌த்தில் புலிக‌ள் இல்லாத‌ கால‌த்தில், உங்க‌ள் நிலைப்பாடுக‌ளைப் படுகுழிக்குள் த‌ள்ளிக்கொண்டிருக்கின்ற‌து. முறையான‌ மாற்ற‌ர‌சியல் செய்திருந்தீர்க‌ளாயின் இப்ப‌டித் த‌டுமாற்ற‌ங்க‌ளோ ச‌ரிவுக‌ளோ வ‌ந்திருக்காது.

(14) முழுப்பூச‌ணிக்காயைச் சோற்றில் கூட‌ ம‌றைக்கலாம்; ஆனால் நான் விரிவாக‌ விப‌ரித்து எழுதிய‌ கேள்விக்கு தொட‌ர்பின்றிப் ப‌தில் சொல்கின்றீர்க‌ளே ஷோபா. நேர‌டியாக‌க் கேள்வி கேட்டும் உங்க‌ள் 'விவாத‌த் திற‌மை'யை இங்கும் செருகிவிடுத‌ல் நியாய‌மா?

இன்றைய‌ உங்க‌ள் க‌ருத்துக்க‌ளின் அடிப்ப‌டையில் நான் நேர‌டியாக‌க் கேட்ட‌து, நாளை புலிக‌ள் ஒரு அர‌சிய‌ல் க‌ட்சியாகி, அங்கிருக்கும் ம‌க்க‌ளின் ஆத‌ர‌வோடு த‌னித் த‌மிழீழ‌மும் பெற்றால் ஆத‌ரிப்பீர்க‌ளா அல்ல‌து புலிக‌ள் என்ற‌ கார‌ண‌த்திற்காய் எதிர்ப்பீர்க‌ளா என்ப‌து... ஏன் இப்ப‌டிச் சுற்றிவ‌ளைத்துப் ப‌தில் கூறுகின்றீர்க‌ள்.

உங்க‌ளைப் போல‌வே நானும் ' தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக் குரலுக்கு ஆதரவாய் இருப்பவன்' என‌வே கூற‌விரும்புகின்றேன். உதார‌ண‌த்திற்கு க‌ன‌டாவிலிருக்கும் கியூபெக் மாகாண‌ம் த‌னி நாட்டுக்கான‌ கோரிக்கையை மீண்டும் முன்வைக்கிற‌தென‌ வைப்போம் (ஏற்க‌ன‌வே அருந்த‌ப்பில் த‌னிநாடாகாம‌ல் இருக்கிற‌தென்ப‌தை நீங்க‌ளும் அறிவீர்க‌ளென‌ ந‌ம்புகிறேன்). அங்கிருக்கும் மக்கள் த‌னிநாட்டுக்கு ஆத‌ர‌வ‌ளிக்கின்ற‌ன‌ர். அப்போதும் நான் 'தேசிய இனங்களின் இணைப்பாட்சி முறையே இப்போதைக்கு ஏற்ற தீர்வு எனக் கருதுகிறேன்' என‌க் கூறிக்கொண்டிருப்ப‌து எவ்வ‌ள‌வு அப‌த்த‌மாக‌ இருக்கும்? அவ்வாறாக‌ அல்ல‌வா உங்க‌ளின் ப‌திலும் இருக்கிற‌து.

அதைவிட‌க் கொடுமை என்ன‌வென்றால் நான் கேள்வி (9)ல் 'தேசியம் குறித்து உங்களின் பொதுவான வரைவிலக்கணம் என்ன? இலங்கையில் தமிழ்த்தேசியத்திற்கான அவசியம் இருக்கின்றதா? ஆம்/இல்லை எதுவெனிலும் உங்கள் பதில்களை முன்வைக்கவும்.' என‌க் கேட்க‌ ஏதோ புத்திசாலித்த‌ன‌மாக‌ப் ப‌தில‌ளிப்ப‌தாய் நினைத்து தொட‌ர்பிலாது ஏதோ ப‌தில‌ளித்துவிட்டு இப்போது 'தேசிய‌ இன‌ங்க‌ளின் சுய‌நிர்ண‌ய‌ம்' குறித்துப் பேசுகின்றீர்க‌ளே? இதைத்தான் க‌ட‌ந்த‌ ப‌குதியில் கூறினேன் ஸ்பைட‌ர்மான் மாதிரி தாவித் தாவிப்பாயும் உத்தி.

ச‌ரி உங்க‌ளின் குயுக்தி முறைக‌ளையாவ‌து விடுவோம். நீங்க‌ள் கார்ல் மார்க்ஸையும் ஆசானாக‌ வைத்திருக்கின்றீர்க‌ள் அல்ல‌வா? உங்க‌ள் அள‌வுக்கு மார்க்ஸை லெனின் முறையாக‌க் க‌ற்றிருக்காவிட்டால் கூட‌, லெனின் ஒரு தேசிய‌ இன‌ம் அது தான் விரும்பினால் த‌னிநாடாக‌ப் பிரிந்துபோகின்ற உரிமை அத‌ற்கு உரிய‌து என‌வும் கூறியிருக்கின்றார் அல்லவா? அதைக்கூடவா ஞாபகம் வைக்காமல் இருக்கின்றீர்கள்?

'நான் ஒரு தேசத்துரோகி, நான் எப்போதும் தேசிய இனங்களின் இணைப்பாட்சி முறையே இப்போதைக்கு ஏற்ற தீர்வு எனக் கருதுகிறேன்... 'என எப்போதும் எல்லாவற்றுக்கும் ஒன்றையே கூறிக்கொண்டிருப்பது எவ்வளவு அபத்தமென்பதைத்தான் மேலேயுள்ள கேள்விகளின் மூலம் சுட்டிக்காட்டியிருக்கின்றேன். ஏற்கனவே தயாரித்த விடைகளை வைத்துக்கொண்டு எல்லா இடங்களிலும் பொருத்திப் பார்த்துக்கொண்டு உங்களை ஒரு பின் நவீனத்துவத்தில் ஆர்வமுள்ள ஒருவராய் எப்படி இனங்காட்ட முயல்கின்றீர்களென  வியப்பாகவே என்னால் இப்போதும் பார்க்க முடிகின்றது.

-------------------
இறுதியாய் என‌க்கிருக்கும் ச‌ந்தேக‌ம். நீங்க‌ள் ஊரில்/உல‌க‌த்தில் இருக்கும் ப‌ல‌ருக்கு சுவ‌ரொட்டிக‌ளும் எதிர்வினைக‌ளும் செய்திருக்கும்போது த‌மிழ்ச்சூழ‌லில் பெரும் பாதிப்பை ஏற்ப‌டுத்தும் ஜெய‌மோக‌ன் ப‌ற்றி எதுவுமே எழுத‌வில்லை? உங்க‌ளுக்கும் என‌க்கும் பிடித்த‌மான‌ பெரியாரை ம‌ட்டுமின்றி, உங்களில் அதிக‌ம் பாதிப்புச் செலுத்தும் அ.மார்க்ஸையும் அவ‌ர் நேர‌ங்கிடைக்கும்போது அடித்துத் துவைக்கிறாரே? ஏன் ஒரு சொல் அது குறித்து நீங்க‌ள் பேசுவ‌தில்லை? சில‌வேளை இத‌ற்கும் 'மனிதன் பாம்பைக் கடித்தால்தான் செய்தி. பாம்பு மனிதனைக் கடிப்பது சாதாரணம்' என‌ப் பெரும் ச‌ந்த‌ர்ப்ப‌ம் வ‌ருவ‌த‌ற்காக‌க் காத்திருக்கின்றீர்க‌ளோ தெரியாது? இதைவிட‌ நீங்க‌ளும் அ.மார்க்ஸும் திட்டித்தீர்க்கின்ற‌ ய‌முனா ராஜேந்திர‌ன்தான், உங்க‌ள் மார்க்ஸையும் காப்பாற்ற‌ வ‌ர‌வேண்டியிருக்கிற‌து என்ப‌து இன்னொரு முர‌ண்ந‌கை.

கடந்த இரண்டு வாரங்களாய் இந்த விடயங்களோடு ஈடுபட்டிருந்ததால் என்னால் ஃபேஸ்புக்கில் நடக்கும் பிறவற்றை தொடர்ந்து வாசிக்கமுடியவில்லை. இன்று காலை இதை வாசிக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. இதில் கூறப்படும் விடயங்களை ஆழமாகக் கவனிக்காததால் உள்நுழைந்து கருத்துச் சொல்ல இப்போது விருப்பம் இல்லை. ஆனால் இக்கட்டுரையில் உங்களை ஒரு தலித்தாகவே தொடர்ந்து அடையாளப்படுத்தியதாகக் கூறப்படுகின்றது. அடையாளங்களை மறுதலிப்பது தவறேயல்ல, ஆனால் உயர்சாதி அடையாளங்களை மறுப்பதால் அதன் நிகர் தலித் என்றாகிவிடாது. அது மிகப்பெரும் மோசடி. இவ்வாறு அந்தக் கட்டுரையில் கூறப்பட்டிருப்பதுபோல் நீங்கள் உங்களை ஒரு 'தலித்' எனக் கூறியிருப்பின் எனது கண்டனங்களைப் பதிவு செய்துகொள்கின்றேன்.
 -----------------

இத்துட‌ன் ஷோபாச‌க்தியுட‌னான‌ விவாத‌த்திலிருந்தும் இத்தொடரிலிருந்தும் வில‌கிக்கொள்கின்றேன். ஷோபாச‌க்தி த‌ன‌து த‌ள‌த்தில் வ‌ள‌ர்ம‌தியின் (என‌துமான‌) 6 கேள்விக‌ளுக்குப் ப‌தில் அளித்திருக்கின்றார். அந்த‌ப் ப‌தில்க‌ளை இன்னும் ஆற‌ம‌ர‌ இருந்து வாசிக்க‌வில்லை. அவ‌ற்றைப் ப‌ற்றி ஏதேனும் எழுத‌வேண்டியிருப்பின் எப்போதாவ‌து ஒருநாள் எழுத‌ முய‌ற்சிக்கிறேன்.

(இறுதியாய் நிதான‌மாய் உரையாட‌வ‌ந்த‌ ஷோபாவிற்கும் ந‌ன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனெனில் என் அனுப‌வ‌ங்க‌ளின்ப‌டி ப‌ல‌ருக்கு அவ‌ர்க‌ளைப் ப‌ற்றி சின்ன‌ விம‌ர்ச‌ன‌த்தை வைத்தாலே, தொட‌ர்பேயின்றி எதையெதையோ கோப‌த்தில் பேசிவிட்டு அதுவ‌ரைகால‌ ந‌ட்பையே முறித்துவிட்டுச் சென்றுவிடுப‌வ‌ர்க‌ளாக இருந்திருக்கின்றார்க‌ள். அந்த‌வ‌கையில் என்னைவிட‌ தெளிவாக‌வே இது த‌னிப்ப‌ட்ட‌ காழ்ப்பின் அடிப்ப‌டையிலான‌ உரையாட‌ல் இல்லை என்ப‌தைக் கூறி தொட‌ர்ந்து உரையாடிய ஷோபாவிற்கு நன்றி. ஷோபா எப்ப‌டி எள்ள‌ல்க‌ளாய் எனக்குப் ப‌தில் அளித்தாரோ அதைவிட‌ எள்ள‌லாக‌வே நானும் ம‌றுமொழிந்திருக்கின்றேன். என‌க்கு எப்ப‌டி சில‌வேளைக‌ளில் ஷோபாவின் எள்ள‌ல் எரிச்ச‌லைத் த‌ந்திருக்குமோ அதையள‌வுக்கு அவ‌ருக்கு என‌து எள்ள‌ல்க‌ள் எரிச்ச‌ல்க‌ளைக் கொடுத்திருக்கும் என்ப‌தை என்னால் உணர‌முடிகின்ற‌து. அத‌ற்கு ம‌ன்னிப்பும், இதுவும் விவாத‌த்தின் ஒருப‌குதியே என‌ப் பெரிதுப‌டுத்தாதுவிட்ட‌ ஷோபாவிற்கு ந‌ன்றியும்.)