கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

காற்று, மணல், நட்சத்திரங்கள்

Monday, December 04, 2017

"மனித இனத்தில் வெறுப்பு, நட்பு, மகிழ்ச்சி இவையெல்லாம் நிகழ்த்தப்படும் அரங்குதான் எவ்வளவு எளிதில் நொறுங்கக் கூடியதாக இருக்கிறது! இன்னும் வெதுவெதுப்பாக இருக்கும் எரிமலைக் குழம்பின் மேல் தற்செயலாக வந்து இறங்கி, இனி எதிர்கொள்ளவிருக்கும் பாலைகளும் பனிப்பொழிவுகளும் மிரட்டிக்கொண்டிருக்க, நிரந்தர வாழ்வின் சுவையை இந்த மனிதர்கள் எங்கிருந்து பெறுகின்றார்கள்? அவர்களுடைய நாகரிகம் எளிதில் கலைந்துவிடக்கூடிய நகாசு வேலை மட்டுமே: ஒரு எரிமலை, ஒரு புதிய கடல், ஒரு மணற்புயல் அவர்களை அழித்துவிடும்."
-அந்த்லான் து செந்த்-எக்கபெரி 

'குட்டி இளவரசன்' மூலம் அந்த்லான் து செந்த்-எக்கபெரி மிகப் பிரபல்யமடைந்தவர். சுயசரிதம் போல எழுதப்பட்டிருக்கும் 'காற்று, மணல், நட்சத்திரங்கள்' அவரின்  இன்னொரு பக்கத்தை நமக்குக் காட்டுகின்றது. இளவயதிலேயே எக்கபெரி விமானத்தில் பறக்கத் தொடங்கியவர். ரைட் சகோதரர்கள் பறப்பதற்கான விமானங்களைக் கண்டுபிடித்த சொற்ப வருடங்களிலேயே எக்கபெரியும் பறக்கத் தொடங்கியவர். அவரது பறத்தல் பல்வேறு சாகச நிகழ்வுகளைக் கொண்டதோடு, புதிய விமானத்தடங்களை கண்டுபிடிப்பதிலும் அன்றைய காலங்களில் இருந்திருக்கின்றது.

இந்த சுயசரிதைத்தன்மைக் கொண்ட நாவல், எக்கபெரியின் விமானப் பயணங்களைப் பற்றியது என்றாலும், அதை மேவி நிற்பது அவர் மானிடகுலத்தின் மீது வைத்திருந்த அளப்பெரிய நம்பிக்கைதான். மனிதர்களும், இயந்திரங்களும் ஒன்றல்ல, ஆனால் மனிதர்கள் தமது நிலையறியாது சீரழிகின்றார்கள் என்று இந்நாவல் எங்கிலும் கவலைப்படுகின்றார். அவ்வாறியிருப்பினும் அதை மீறி மனிதர்களை அதிகம் நேசிக்கின்றார்; போரைப் பல்வேறு நிலைகளில் பார்த்தபோதும் அதை ஒவ்வொருமுறையும்  எக்கபெரி எதிர்நிலையில் வைத்தே பார்க்கின்றார்.

இந்த நூலில் எக்கபெரியும் அவரது விமான மெக்கானிக்கும் சஹாரா பாலைவனத்தில் விமானத்தோடு நொறுங்கி விழுந்து, மூன்று நாட்கள் கொடும் வெப்பத்தில் சாகும்தறுவாயிற்குப் போய், ஒரு நாடோடியின் உதவியால் தப்பிவருவதை வாசிக்கும்போது, நாம் இதுவரை அறியாத ஒரு புதிய நிலப்பரப்பிலும், சாகசப்பயணத்திலும் அவர்களோடு சேர்ந்து இருப்பது போல உணர்வோம். அந்தவளவிற்கு மிக அருமையாக விபரித்து எக்கபெரி எழுதியிருப்பார். வாசிப்பதிலும், எழுதுவதிலும் மிக விருப்புக் கொண்ட எக்கபெரி வான் மீதிலிருந்தே நிறைய வாசித்திருக்கின்றார். சிலவேளைகளில் கீழே இறங்கும் விமானதளம் வந்தபிறகும், வாசிப்புச் சுவாரசியத்தில் தரையில் இறங்காமல் மணிக்கணக்கில் சுற்றிக்கூட வந்திருப்பதாய் அவரைப் பற்றிய குறிப்புகளில் இருந்து அறியமுடிகின்றது.

விமானப் பயணங்களைப் போல, ஸ்பானிய உள்நாட்டுப்போரில் நடக்கும் சம்பவங்களை விபரிக்கும்போதும், மூர் இனத்தவரிடம் சிக்கியிருந்த அடிமையான மொராக்கோக்காரரை அவருக்கான பணத்தைக் கொடுத்து விடுவிடுத்து, அவரின் சொந்த இடத்துக்கு அனுப்பிவைக்கும்போதும், எக்கபெரியின் சாகசச் செயல்களை மட்டுமின்றி, அவருக்குள் ஒளிந்துகிடக்கும் அற்புதமான மனிதாபிமானியையும் நாம் கண்டுகொள்ள முடிகின்றது.

'காற்று, மணல், நட்சத்திரங்கள்' எனப் பெயரிட்டப்பட்டு தனக்குத் தெரிந்த விடயங்களைத்தான் இதில் எக்கபெரி எழுதிச் செல்கின்றார் என்றாலும், வாசிக்கும் நாம் அந்த சாகசங்களின் மீது வியப்பையும், இயற்கையின் மீது பேரன்பையும், சகமானிடர் மீது தோழமையுணர்வையும் கொள்கின்றோம். அதுவே 'குட்டி இளவரசனை'ப் போல, இந்த நாவலையும் கடந்துபோய்விடமுடியாத ஒரு படைப்பாக தன்னை ஆக்கியும் கொள்கிறது.

(இந்நாவலை வெ.ஸ்ரீராம் தமிழாக்கம் செய்து, க்ரியா பதிப்பகம் வெளியிட்டிருக்கின்றது)
---------------------------
(நன்றி: 'பிரதிபிம்பம்')

0 comments: