கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Gold - திரைப்படம்

Tuesday, December 26, 2017

ங்கத்தோடு மட்டுமில்லை, தங்கச் சுரங்கங்களோடும் மனிதர்கள் காலங்காலமாய் பகடையாடிக் கொண்டிருக்கின்றார்கள். ஐரோப்பாக் கணடத்திலிருந்து தங்கம் மீதான பேராசையுடன் கொடுங்குளிரையும் பாராது, ஒரு பெரும் மக்கள் திரள் வட அமெரிக்காவிற்கு வந்திருந்தது கடந்தகால வரலாறு. Gold என்கின்ற இத்திரைப்படத்திலும் கனிமச்சுரங்களைக் கண்டுபிடிக்கும் ஒருவன் சொல்வான்: கொலம்பஸ் தன் நாட்டு இராணிக்கெழுதிய கடிதங்களில் கடவுள் என்று குறிப்பிட்டதை விட தங்கம் என்று குறிப்பிட்டதே அதிகமானது என்று. அந்தளவிற்கு ஆதிகாலத்திலிருந்தே தங்கத்தின் மீது பித்துப் பிடித்துத் திரிந்திருக்கின்றார்கள்.


இத்திரைப்படம் உண்மையான சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கின்றதெனினும் நடந்தவை சற்று மாற்றப்பட்டு எடுக்கப்பட்டிருக்கின்றது. பரம்பரை பரம்பரையாக தங்கச் சுரங்கங்களைத் தேடும் ஒரு குடும்பத்தில் பிறந்த கென்னி, சரியான தங்கச் சுரங்கத்தைக் கண்டுபிடிக்க முடியாததால் திணறிக்கொண்டிருக்கின்றார். எல்லாவற்றையும் இழந்துகொண்டிருக்கும் அவர் இந்தோனேசியாவில் கனிமச் சுரங்கங்களைக் கண்டுபிடிக்கும் மைக் மீது நம்பிக்கை வைக்கின்றார். தங்கம் இந்த மலையில் கிடைக்கலாம் என்ற மைக்கின் வார்த்தையில் நம்பிக்கை வைத்து, நிறையப் பணத்தை பல்வேறு இடங்களிலிருந்து கடன்வாங்கி, இதில் முதலீடு செய்து சூதாட்டம் ஆடுகின்றார். அதிஷ்டவசமாக அங்கே செய்யும் அகழ்வின் நிறைய தங்கம் மண்ணோடு கலந்திருக்கின்றது என்பது கண்டுபிடிக்கப்படுகின்றது. இப்போது கென்னி மில்லியன்கணக்கில் பணம் கொட்டும் தங்கச் சுரங்கத்தைக் கண்டுபிடித்துவிட்டார் என்று அமெரிக்காவில் அவரது 'ஸ்டாக்குகள்' சட்டென்று விலையேறுகின்றது.

சில ஆண்டுகளிலேயே கென்னியின் நிறுவனம் பில்லியன் மதிப்புள்ளதாய் வர்த்தக சந்தையில் ஆகிவிடுகின்றது. இந்த அசுரவளர்ச்சியினால் பல நிறுவனங்கள் கென்னியின் நிறுவனத்தை வாங்க விரும்புகின்றது. ஆனால் கென்னி மறுக்க, இந்த பெருநிதி நிறுவனங்கள் பொறாமையால் இந்தோனேசிய மன்னரைத் தூண்டி விட, அவரின் இராணுவம் இந்தச் சுரங்கத்தைச் சுற்றிவளைக்கின்றது. இப்போது கென்னிக்கு மீண்டும் வீழ்ச்சி. எனினும் கென்னி அசராது, மீண்டும் சூதாடுகின்றார். இந்தோனேசிய மன்னரின் மகனோடு நட்பாகி அவரையும் தம் நிறுவனத்தில் பங்குதாரர் ஆக்கி, மீண்டும் தங்கத்தைத் தோண்டத் தொடங்குகின்றனர்.


வ்வாறு மீண்டும் கென்னி எழுந்தபோதும், ஒரு பெரும் உண்மை அறிந்து உலகு அதிர்கின்றது.கென்னியும், மைக்கும் கண்டுபிடித்தது உண்மையான தங்கமல்ல, அதை அவர்கள் பிரித்தெடுக்கும்போது மிகநுட்பமாக உப்பைக் கலந்து எவருக்கும் சந்தேகம் வராது அசல் தங்கம் போல ஆக்கிவிட்டார்கள் என்ற உண்மை வெளியே வருகின்றது. கென்னியின் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு உயர்ந்த வேகத்திலேயே வீழ்கின்றது. வர்த்தக சந்தையிலிருந்து இவர்களது ஸ்டாக்குகள் முற்றாக அகற்றப்படுகின்றது. இந்த பங்குகளில் முதலீடு செய்த பலரும் பெரும் பணத்தை இழக்கின்றனர்.

மைக் தப்பியோடுகின்றார். கென்னி எஃபிஐயினரால் விசாரிக்கப்படுகின்றார். கென்னி இந்த உண்மை தனக்குத் தெரியாது, மைக்கே இதில் புகுந்து விளையாடியிருக்கின்றார் எனத் தொடர்ந்து மறுத்தபடி இருக்கின்றார். மைக் இந்தோனேசியாவிற்குத் தப்பியோடும்போது, அவர் அங்குள்ள இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு, வானூர்தியில் கொண்டுசெல்லப்பட்டு தள்ளிவிடப்பட்டு கொல்லப்பட்டுவிட்டார் என்று சொல்லப்படுகின்றது. கென்னி விசாரணைகளிலிருந்து விடுவிக்கப்படுகின்றார். எனினும் தனது மதிநுட்பமான நண்பன் மைக் இப்படி எளிதில் இறந்துவிட்டார் என்பதை கென்னி நம்ப மறுக்கின்றார்.

சில மாதங்களின் பின் அவருக்கு ஒரு கடிதம் வருகின்றது. அதில் கென்னியும் மைக்கும் இந்த தங்கச்சுரங்கத்தைக் கண்டுபிடித்தபோது, வரும் லாபத்தில் இருவருக்கும் 50/50 என்று எழுதிய ஒப்பந்தம் வருகின்றது. அத்தோடு கென்னிக்கு உரியதென இங்கிலாந்திலிருக்கு வங்கியொன்றில் வைப்பிலிடப்பட்டிருக்கும் 82 மில்லியன் பணத்திற்கான செக் ஒன்றும் (மைக்கால்) அனுப்பப்படுகின்றது. கென்னி ஒரு மர்மப்புன்னகை செய்வதுடன் படம் முடிகின்றது.

னி அசலாய் நடந்த கதை.

உண்மையில் இத்திரைப்படத்தில் வந்ததுமாதிரி இது அமெரிக்காவில் நடந்த கதையல்ல. இந்தச் சம்பவம் கனடாவில் 90களின் நடுப்பகுதியில் நடந்தது. அல்பேர்ட்டாவில் இருந்த டேவிட் என்பவர், ஒரு அகழ்வாராய்ச்சியாளரின் துணையுடன் இந்தோனேசியாவில் தங்கச்சுரங்கம் கண்டுபிடித்துவிட்டோம் என்று கனடாவிற்கு அறிவித்து, ரொறொண்டோ பங்குச் சந்தையில் மட்டுமில்லை, அமெரிக்க நாஸ்டக்கிலும் தனது நிறுவனத்தின் பங்குகளை பெரும் ஆரவாரத்துடன் கொண்டுவந்தவர். கிட்டத்தட்ட பென்னி ஸ்டாக் வகையான மிக மதிப்புக்குறைந்த, டேவிட்டின் பங்குகள் 250 டொலர்வரை அந்தக் காலத்தில் சென்றிருக்கின்றது. பின்னர் தங்கத்தில் உப்பு கலக்கப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டபின், முதலிட்ட பலர் மில்லியன் கணக்கில் பணத்தை இழந்திருக்கின்றனர்.

இந்த டேவிட், பஹாமாஸிற்குத் தப்பி வாழ்ந்திருக்கின்றார். திரைப்படத்தில் வந்தமாதிரி டேவிட்டின் நண்பரான அகழ்வாராய்ச்சியாளர் கொல்லப்படவில்லை. ஆனால் இன்னொரு இந்தோனேசியா அகழ்வாராய்ச்சியாளர் இராணுவத்தின் வானூர்தியில் தூக்கியெறியப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார். செய்த பாவத்தாலோ என்னவோ டேவிட் இந்தச் சம்பவம் நடந்த சில வருடங்களின் பின், நரம்பில் ஏற்பட்ட வெடிப்புக் காரணத்தால் இறந்தும் விட்டார்.

ந்த பெரும் சூதாட்டத்தில் யார் பெரும் பணத்தை இழந்தவர்கள் என்றால், அரசாங்க உத்தியோகத்தில் இருந்தவர்கள். எனெனில் இந்த நிறுவனத்திலேயே ஒன்ராறியோ/கியூபெக் அரசுகள், தமது ஊழியர்களுக்கான பல மில்லியன் ஓய்வூதியப்பணத்தை முதலீடு செய்திருந்தது. தங்கச் சுரங்க வரலாற்றில், உலகில் நடந்த மிகப்பெரும் பித்தலாட்டம் இதுவே என சொல்லப்படுகின்றது. டேவிட் இறந்துவிட்டபின்னும் இந்தச் சூதாட்டத்தின் பொருட்டு, எவரும் பிறகு பெரிதும் கைதுசெய்யப்படவில்லை. 98களிலேயே இந்த வழக்கு மூடப்பட்டும் விட்டது.

ஆனால் யாரோ ஒருவரினதோ அல்லது சிலரினதோ ஆட்டத்திற்காய் எத்தனை சாதாரண அப்பாவி மக்கள் தமது சேமிப்பை இழக்கவேண்டியிருந்தது என்பதே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். இன்று பெரும் செல்வம், உலகச் சனத்தொகையில் 1%மான பணக்காரர்களிடம் மட்டுமே இருக்கின்றது என்பது நிரூபிக்கப்பட்டும்விட்டது. அந்த 1% தமது சுயநலத்திற்காய், மிகுதி 99% ஐ எப்படியாயினும் சூது வைத்து விளையாடவும் தயாராக இருப்பதைத்தான் டேவிட் போன்றவர்களின் வாழ்க்கை நமக்குச் சொல்லி நிற்கின்றது.

(நன்றி: 'பிரதிபிம்பம்')

0 comments: