கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

இலங்கையில் தமிழ்ப் பெளத்தம்

Tuesday, November 19, 2024


1.

லங்கையில் எப்போதிருந்து சிங்களப் பெளத்தம் இருந்ததோ அப்போதிருந்தே தமிழ்ப் பெளத்தமும் இருந்தது என்கின்ற ஆய்வுக்கட்டுரைகள் இப்போது நிறைய எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இலங்கையில் பெளத்தம் இந்தியாவில் அசோகர் காலத்தில் அவரின் மகனான மகிந்தரால் கொண்டு வரப்பட்டது என்று 'மகாவம்சம்' கூறுகின்றது. மகாவம்சத்தின்படி சிங்கள இனம் விஜயனின் வருகையோடு கி.மு 5ம் நூற்றாண்டில் இலங்கையில் குடியேறியது.  அதன்பிறகு பெளத்தம் கி.மு 3ம் நூற்றாண்டில் மகிந்த தேரரால், அன்று இலங்கை மன்னனாக இருந்த தேவனம்பிய தீசன் காலத்தில் அறிமுகப்படுத்தப்படது.

 

இவ்வாறு
மகாவம்சத்தின் பிரகாரம், இலங்கையில் பெளத்தம் மகிந்ததேரரால் கி.மு 3ம் நூற்றாண்டில் பரப்பப்பட்டது என பொதுச்சூழலில் ஆழமாக விதைக்கப்பட்டாலும் அது அவ்வாறுதான் உண்மையில் நடந்ததா என்பதை நாம் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்கலாம். இன்று பலர் (சிங்கள ஆய்வாளர்கள் உட்பட) பெளத்தம் அசோகரின் காலத்துக்கு முன்னர், புத்தரின் காலத்திலேயே இலங்கைக்கு வந்துவிட்டதெனச் சொல்கின்றார்கள். புத்தரின் ஆளுமை திராவிட மொழிக்குடும்பமான தெலுங்கை (ஆந்திரப் பிரதேசம்) முதலில் அடைந்து நிறையப் பேர் புத்தரைப் பின் தொடரச் செய்கின்றார்கள். அவர்களினூடாக புத்தரும் அவரின் போதனைகளும் தமிழ்நாட்டுக்கு/தமிழுக்கு வந்தடைகின்றது. ஆந்திரா/தமிழ்நாட்டுக்கு வந்த பெளத்தமே இலங்கையை முதலில் வந்தடைந்திருக்கின்றது என்பதை இப்போது பல ஆய்வாளர்கள் உறுதியாக நம்புகின்றார்கள்.

 

இப்போது எப்படி தமிழ்ப் பெளத்தம் இலங்கைக்கு வந்தது என்பதைச் சற்று ஒதுக்கிவைத்துவிட்டு, இது தொடர்பாக வாசித்தபோது சிங்கள ஆய்வாளர்களின் எழுத்தில் உறுத்திய சில புள்ளிகளைப் பார்ப்போம். தமிழ்ப் பெளத்தம் குறித்து பேசுகின்ற பெரும்பாலான சிங்கள ஆய்வாளர்கள் தமிழர்கள் சோழப் படையெடுப்பால்தான் ஆதியில் இலங்கைக்கு வந்தவர்கள் என்று நம்புகின்றார்கள். அதே போல அவ்வாறு படையெடுத்து வந்து இலங்கையைக் கைப்பற்றி அரசாண்ட எல்லாளன் தவிர்ந்த எல்லாத் தமிழ் அரசர்களும் பெளத்தத்தைத் தழுவியவர்கள் என்பதில் உறுதியாய் நிற்கின்றார்கள். ஏனெனில் இலங்கையானது அனுராதபுரத்தை ஆண்டு பாண்டுகாபாயமன்னனில் இருந்து பிரித்தானியர்கள் முற்றுமுழுதாக கைப்பற்றும் காலம்வரை, பெளத்தத்தை தழுவிக்கொண்ட மன்னர்களாலேயே ஆளப்பட்டிருக்கின்றது எனச் சொல்கின்றனர். அதாவது கி.மு 4ம் நூற்றாண்டிலே இலங்கை முற்றுமுழுதான பெளத்த (சிங்கள) அரசாக இருந்திருக்கின்றது என நிரூபிக்க கடுமையாக முயற்சிக்கின்றனர்.

 

அதன் நம்பகத்தன்மை/விதிவிலக்குகள் என்பவற்றை இப்போது ஒருபுறத்தில் வைத்துவிட்டு நாம் இப்போது சில கேள்விகளை எழுப்பிப் பார்க்கலாம். சிங்கள இனம் விஜயனின் வருகையோடு கி.மு 5ம் நூற்றாண்டில் இலங்கையில் ஆரம்பிக்கின்றது என மகாவம்சம் சொல்கின்றது. அப்போது வந்த விஜயனின் மதம் என்னவாக இருந்தது. அதைப் பற்றி ஏன் மகாவம்சம் உள்ளிட்ட சிங்கள ஆய்வாளர்கள் எவரும் பேசுவதில்லை. அது மட்டுமின்றி விஜயன் வந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் பெளத்தம் இலங்கைக்கு வருகின்றது என்று மகாவம்சம் கூறுகின்றது. அந்த இரண்டு நூற்றாண்டுகளில் வாழ்ந்தமக்கள் மதமற்ற நாத்திகர்களாவா இருந்தார்கள்? விஜயன் வருவதற்கு முன்னர் இயக்கர், நாகர் என்பவர்கள் இருந்தார்கள் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. நாகர்களின் கல்வெட்டுக்கள் பல, தமிழ்ப் பிரதேசங்களில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. அவர்களின் கல்வெட்டுக்கள் தமிழ் (தமிழ்நாட்டில் இருக்கும்) பிராமி எழுத்துக்களோடு ஒத்து வருகின்றது என்பதைப் பல சிங்கள் ஆய்வாளர்களே ஒப்புக்கொள்கின்றனர்.

 

இரண்டாவது விடயம், இலங்கையில் தமிழர்களின் வரவு சோழர்களின் படையெடுப்போடு தொடங்குகின்றது எனறு 'அடித்துக் கூறுகின்ற' எந்தச் சிங்கள ஆய்வாளரும், விஜயன் முதலில் குவேனியை மணந்து அவரைக் கைவிட்டு மணம்புரிந்த பாண்டிய இளவரசியையும், அவரோடு அனுப்பி வைக்கப்பட்ட தமிழர்களைப் பற்றியும் ஏன் பேசுவதில்லை. சிங்களவர்களின் வாதப்படி சொல்வதென்றால் கூட, சோழப் படையெடுப்பால் தமிழர்கள் முதலில் முதலில் இலங்கைக்கு வரவில்லை. சிங்கள இனம் இலங்கைக்கு வந்த கி.மு 5ம் நூற்றாண்டிலேயே நீங்களாகவே தமிழர்களை பாண்டிய இளவரசியை மணமுடிந்ததன் மூலம் இலங்கைக்கு விரும்பி அழைத்துவிட்டீர்கள் அது மறந்துவிட்டதா என நாம் கேட்கலாம். மேலும் ஏற்கனவே பல இடங்களில் சொல்லியது போல,  சிஙகள் இனம் (சிங்கள இனம் மட்டுமில்லை, எந்த இனமும், தமிழர் உட்பட) தூயதல்ல. எனவே இனப்பெருமை பேசுவதில் எவ்வித தர்க்கங்களும் இருக்கப்போவதில்லை எனத்தான் எல்லோருக்கும் பொதுவாகச் சொல்ல வேண்டியிருக்கின்றது. 

 

 

2.

 

லங்கையில் பெளத்தம் பரவியபோது  சிங்களப் பெளத்தம் போல தமிழ்ப் பெளத்தமும் இருந்தது. அது பின்னாளில் அழிந்துபோனதும், பிரித்தானியர்கள் வரமுன்னரே தமிழர்கள் சைவத்தையும், சிங்களவர்கள் பெளத்தத்தையும் தமக்குரிய மதங்களாகக் கொண்டு பிரிவினைகளை உருவாக்கிவிட்டார்கள் என்பது தெளிவு.  பிறகான காலத்தில் பிரித்தாளும் சூழ்ச்சியுள்ள காலனித்துவவாதிகளான ஆங்கிலேயர்களால் கச்சிதமாக இன்னும் இவ்விரு இனங்களிடையே இன/மதத்தை முன்வைத்து வேற்றுமைகளை உருவாக்கவும்  முடிந்திருக்கின்றது.

 

இலங்கையில் இன்று தேரவாத பெளத்தமே அதிகம் ஆதிக்கம் செய்கின்றது. மகாசேன மன்னன் காலத்தில் அதில் பிரிவினை வந்து அபயகிரி விகாரைப் பிரிவு தோன்றுகின்றது. தமிழ்ப் பெளத்தம் தேரவாத பெளத்தமாகவும், மகாயான பெளத்தமாகவும் இரண்டு பிரிவுகளையும் தனக்குள் கொண்டிருந்திருக்கின்றது. தொடக்கத்தில் தமிழகத்தில் ஊடு பரவிய தமிழ்ப்பெளத்தம் (யாழ்ப்பாணம்,மன்னர், நெடுந்தீவு போன்றவை தமிழ்நாட்டுக்கு மிக அண்மையாக இருந்தமையால்) சிங்களப் பெளத்தத்தின் எந்தச் செல்வாக்குக்கும் உட்படாதிருக்கச் சாத்தியம் அதிகம் இருக்கின்றது. மகிந்தரின் வருகையால் பரவிய தேரவாத பெளத்தம் பின்னர் தமிழ்ப் பெளத்ததிலும் ஆதிக்கம் செலுத்தியிருக்கலாம். ஒருவகையில் ஒரு நாட்டின் மன்னர் முழுமையாக மதம் மாறும்போது அந்த நாடும் முழுதாய் ஒரு தனி மதத்துக்குரிய நிலப்பரப்பாக மாறுவதும் இயல்பானதென எடுத்துக் கொள்ளலாம்.

 

அவ்வாறு பல்வேறு நாடுகளில் பல மன்னர்கள் மதம் மாறியிருக்கின்றனர். ஏன் டொச்சுக்காரர் வந்தபோது கொழும்பு மன்னனாகிய தர்ம்பாலா கத்தோலிக்கத்துக்கு மதம் மாறி தன் பெயரையும் அவரின் மனைவிகளையும் டொனா இஸபெல்லா, டொனா மார்கடீட்டா என மாற்றவில்லையா? இவ்வாறெல்லாம்,  எதிரியுடன் போரிட்டு வெல்ல முடியாதபோது மதம் மாறுகின்ற சிங்கள் மன்னர்களை, இன்னமும் தமக்குரியவர்களாகக் கொள்ளும் சிங்களப் பேரினவாதிகள், எல்லாள மன்னனை அதுவும் முழு இலங்கையை 44 ஆண்டுகள் சுமூகமாக எந்தப் பிளவுகளும் வராது ஆண்ட ஒருவனை, அந்நியராகவும், படையெடுப்பாளராகவுமே தமது நினைவுகளிலும், எழுத்துக்களிலும் முன்வைத்தபடி இருக்கின்றார்கள்  என்பதுதான் வியப்பானது. அத்துடன் எல்லாளனுக்கு முன்னர் இலங்கையை அரசாண்ட சேனன்/குத்திகன், ஏழு வணிகர்கள் (சில சிங்கள ஆய்வாளர்களின்படி ஏழு குண்டர்கள்) போன்ற மன்னர்கள் தமிழர்கள் என்றாலும், அவர்கள் பெளத்தத்தைத் தழுவாமல் ஒருபோதும் இலங்கையை ஆண்டிருக்க முடியாதென ஒற்றைக்காலில் நிற்கின்றனர்.

 

ஒருவகையில் அதுவும் நல்லதுதான். சிங்களப் பெளத்தம் என்கின்ற ஒற்றை அதிகாரத்தை (Hegemony) இது தகர்க்க உதவும் என்பதால், ஆம் அவர்கள் பெளத்தர்கள்தான், ஆனால் அவர்கள் தழுவிய பெளத்தம் உங்களதல்ல, அது தமிழ்ப் பெளத்த மரபில் வந்ததெனச் சொல்லலாம். மற்றும்படி இப்படியான வம்புகளுக்கு எதிர் ம்புகளை நாம் பேசுவதைத் தவிர்த்து, ஆம், எங்களிடையே தமிழ்ப் பெளத்தம் இருந்தது ஆதாரபூர்வமானது என்று நிரூபிக்க நம்மிடம்  உள்ள ஆதாரங்களை முன்வைக்க வேண்டும்.

 

யாழ்ப்பாணத்தில் கந்தரோடையில் இன்று சிங்களவர்கள் தமது சிங்களப் பெளத்தம் என்று உரிமை கொள்கின்ற பெளத்தம் தமிழ்ப் பெளத்ததிற்கு உரியது. எனினும் அங்கு இருக்கும் சிறு விகாரைகள் போன்றவைகள் இலங்கையின் எந்தப் பகுதியோடும் தொடர்புடையது அல்ல. அவ்வாறு எந்தக் கட்டட அமைப்பும் இலங்கையில் இல்லை. ஆய்வாளர்களின் கூற்றுப்படி இது தெலுங்குப் பகுதியில் இருக்கும் கட்டட அமைப்பை நிகர்த்தது. அதேபோன்று வல்லிபுரக் கோயில் பகுதியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட செப்புப்பட்டயத்தில் செதுக்கப்பட்டவையும் தெலுங்குப் பகுதியைச் சேர்ந்தது. அது யாழ்ப்பாணத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட எந்த பெளத்தக் கல்வெட்டு எழுத்துக்களோடும் தொடர்புபடாதவை. வல்லிபுரத்தில் அகழ்ந்தெடுக்கப்ப்ட்ட அழகான புத்தர் சிலையை அன்றைய பிரித்தானிய அரசு தாய்லாந்து மன்னருக்கு அனுப்பி வைத்தும் இருந்தது.

 

ஒருவகையில் வல்லிபுரம் ஆழ்வார் கோயில், தமிழ்ப்பெளத்த ஆலயத்திலிருந்து பின்னாளில் எழுந்திருக்கவே சாத்தியம் அதிகமிருக்கின்றது. இன்றைக்கு ஆதாரபூர்வமாக யாழில் ஒன்பதுக்கு மேற்பட்ட புத்த மடாலயங்கள் இருந்ததெனனவும், அவற்றில் நான்கு பின்னர் அய்யனார் கோயில்களாக மாற்றப்பட்டன எனவும் சொல்கின்றனர்.

 

நான் அறிந்து யாழில் போரின் நிமித்தம் ஒவ்வோரு ஊர் ஊராக அகதியாக அலைந்தபோது சுன்னாகத்தில் (அல்லது மல்லாகத்தில்) ஒரு அய்யனார் கோயில் வயலில் நடுவில் இருந்தமை ஞாபகத்திலுண்டு. சுன்னாகம்/மல்லாகம்/தெல்லிப்பளை போன்ற இடங்களில் தமிழ்ப் பெளத்தம் ஒருகாலத்தில் தளைத்திருந்தமை குறிப்பிடப்படுகின்றது. அவ்வாறே நெடுந்தீவில் வெடியரசன் கோட்டைக்கு அருகிலும் பெளத்த மடாலயம் இருந்திருக்கின்றது. அதற்கான அடித்தளம் நமக்கு அது ஒரு பெளத்த ஆலயம் என்பதை எளிதாகக் காட்டி விடுகின்றது. ஒருவகையில் நாகதீபம்/மணிபல்லவம் என்று பழங்காலத்தில் குறிப்பிடும் தீவு நயினாதீவு என்று தமிழர்க்கும்/சிங்களவர்க்கும் பொதுவானநம்பிக்கையாகஇருக்கின்றது. ஆனால் ஆதாரங்களை வைத்துப் பார்த்தால் அப்படி நாகதீபமாய் இருக்க நெடுந்தீவே பெரும்பாலும் சாத்தியமென பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் போன்றவர்கள் குறிப்பிடுகின்றனர். தமிழகத்தோடு மிக அருகில் மற்ற இடங்களைவிட மிக அருகில் இருப்பது நெடுந்தீவேயாகும். எனவே அவ்வாறிருக்கச் சாத்தியமும் அதிகம்.

 

இன்று இலங்கையில் தமிழ்ப் பெளத்தம் பற்றிப் பேச கஷ்டப்படும் சிங்களவர்கள் புத்தகோஷா, புத்த தேரோ, தர்ம்பால வஜ்ஜிரபோதி உள்ளிட்ட பல தமிழ்ப் பெளத்த அறிஞர்கள் தமிழகத்தில் இருந்து வந்து இலங்கையில் தங்கி கற்பித்ததை மறந்து விடுகின்றார்கள். ஒருவகையில் இன்று தேரவாத பெளத்தம் இலங்கையில் இந்தளவுக்கு வேரூன்றி நிற்பதற்கு தமிழ்ப் பெளத்தரான புத்தகோஷா இலங்கையில் தங்கி நின்று பாளியில் இருந்த பிரதிகளை சிங்கள மொழிக்கு எழுதிக் கொடுத்ததே முக்கிய காரணமாகும். அதுவே 'விசுத்திமகா' (பரிநிர்வாணமடைவதற்கான வழி) என்ற ஒரு முக்கிய பிரதியாக சிங்களவரிடம் இப்போதும் இருக்கின்றது. அத்தோடு எப்போதெல்லாம் இலங்கையில் அரசியல் ஸ்திரமற்று குழப்பம் வந்து விகாரைகளை மன்னர்கள் ஒடுக்குகின்றார்களோ, அப்போதெல்லாம் பெளத்த பிக்குகள் தமிழ்நாட்டில் இருந்த புத்த மடலாயங்களிலேயே தஞ்சம் புகுத்திருக்கின்றார்கள். சிலர் அவ்வாறு தஞ்சமடைந்த காலங்களில் சிங்களத்தில் பெளத்த பிரதிகளைக் கூட எழுதியிருக்கின்றார்கள்.

 

3.

ப்போது மீண்டும் தமிழ்ப் பெளத்தத்திற்கு வருவோம். ஏன் இலங்கையில் தமிழ்ப் பெளத்தம் அழிந்தது என்பதற்கு இரண்டு காரணிகளை முக்கியமாகச் சொல்கின்றார்கள். அனுராதபுரத்தை ஆண்ட சிங்கள மன்னர்கள் தமது அரசியல் அதிகாரத்தை யாழ்ப்பாணம் போன்ற தமிழர் பிரதேசங்களில் பிரயோகிக்க முயன்றமை ஒன்று. மற்றது சிங்கள பெளத்தர்கள் தமிழ்ப் பெளத்தர்களோடு தொடர்பாடலைத் துண்டித்துக் கொண்டமை. அத்தோடு தமிழ்நாட்டில் எப்படி பக்தி இயக்கங்கள் பெளத்தத்தையும், சமணத்தையும் விழுங்கிக் கொண்டனவோ அவ்வாறே அதன் பாதிப்பு தமிழர்கள் இருந்த வடக்கு கிழக்குகளையும் சென்றடைந்தன என்கின்றார்கள். இன்னொருவகையில் இப்படிப் பார்க்கலாம். தமிழ்ப் பெளத்தத்திற்கு பெருமளவில் உதவிகள் சிங்கள மன்னர்களிடம் இருந்து ஒருபோதும் கிடைத்ததில்லை. ஆகவே அது இலங்கையில் இருந்த தமிழ் சிற்றரசர்களையும், தமிழ்நாட்டு மன்னர்களையும், புரவலர்களையும் நம்பியிருந்திருக்கலாம். தமிழ்நாட்டிலே பெளத்தம் தன்னிருப்பை அடையாளமற்று கைவிட்டபோது இலங்கையிலும் தமிழ்ப் பெளத்தம் மறையத்தொடங்கி சைவத்தோடு தன்னிருப்பைக் கரைத்திருக்கலாம்.

 

ஆகவே எப்படி விஜயன் இரண்டாவது மனைவியாக பாண்டிய அரசியை மணந்ததன் முலம் தமிழர்களின் வரவு இலங்கையில் தொடங்கிவிட்டதெனச் சொல்ல சிங்களவர்களின் மகாவம்சமே நமக்கு ஆதாரம் எடுத்துத் தருவதுபோல, சிங்களப் பெளத்தம் மட்டுமில்லை தமிழ்ப் பெளத்தமும் சமாந்திரமாக இலங்கையில் தொடங்கியிருக்கின்றது என்று சொல்வதற்கும் நமக்குப் பல ஆதாரங்கள்  இருக்கின்றன. இதன் மூலம் சிங்களவரோ/தமிழரோ தனிப்பட்டு உரிமைகொள்ள இலங்கை என்கின்றநாடோ, அரச மதமாக சிங்களப் பெளத்தமோ ஒருபோதும் அமைய முடியாது.  இலங்கையில் பிறந்தநம் அனைவருக்கும் இலங்கை என்கின்றநாட்டிலும், இலங்கையின் இறையாண்மையின் முக்கிய பகுதியாககட்டமைக்கப்பட்டிருக்கும் பெளத்தமதத்திலும், சமபங்கிருக்கின்றது என்று உறுதியாக உரையாடல்களை நிகழ்த்த முடியும்.

 

*************

 

(நன்றி: 'அம்ருதா' - கார்த்திகை)

கார்காலக் குறிப்புகள் - 57

Saturday, November 09, 2024

 அமரன்: ஒற்றைக் கதையாடலின் ஆபத்து
************************


நான் அமரன் திரைப்படத்தின் கதைக்களத்துக்குள் போக விரும்பவில்லை. அது ஒரு உண்மையான மனிதனின் வாழ்க்கையைப் புனைவாகச் சொல்கின்ற திரைப்படம். எந்த ஒருவரினதும் இழப்பு என்பது துயரமானதே. அதுவும் இளம் வயது சடும் மரணமாயின், அவர்களைச் சுற்றியிருப்பவர்க்கு மனவடுக்களை நீண்டகாலத்துக் கொடுக்கக்கூடியது.

அந்தவகையில் மேஜர் முகுந்த் வரதராஜனின் மரணத்தின் பாதிப்பை நாம் எந்தவகையில் மறுக்கமுடியாது. ஆனால் 'அமரன்' திரைப்படத்தின் சிக்கல் என்னவென்றால் அது சாகசம் என்கின்ற பெயரில் இந்திய இராணுவத்தையும், இந்திய தேசப்பற்றையும் glorify செய்வதாகும்.

அப்படி மிகைப்படுத்தி மேன்மைப்படுத்துவதும்போது அது தன்னளவில் நின்று செய்யாமல், மற்றமையைக் கட்டியமைத்து அந்த மற்றமையை மிக மோசமான/கேவலமான எதிரிகளாகக் கட்டியமைப்பதாகும். இன்றைக்கு இந்தியாவில் (இலங்கையில் எப்போதும்) சிறுபான்மையினர் மீது அளவுக்கதிகமான வெறுப்பு எல்லாத் திசைகளிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது. இந்துக்கள் X முஸ்லிம்கள் என்கின்ற துவிதநிலைப் பிரிவினைகள் மிக மோசமாகிக் கொண்டிருக்கின்ற காலத்தில், ஓர் இராணுவ வீரனின் தேசப்பற்றை காஷ்மீர் முஸ்லிம்கள் என்கின்ற மற்றமையை மிக மோசமாகச் சித்தரிப்பதன் மூலம் 'அமரன்' கட்டியமைப்பதே இங்கே சிக்கலாகின்றது.

இனி முகுந்த் வரதராஜன் என்ற ஒரு இராணுவ மேஜரையும், அவரின் சாகசத்தையும், இழப்பையும் ஒருபுறம் வைத்துவிட்டு சிலவற்றை யோசித்துப் பார்ப்போம்.

ந்த நாட்டிலும் இராணுவம் என்பது அதிகார மையத்தின் உச்சியில் நின்று இயங்குவது என்பது நமக்குத் தெரியும். அதனால்தான் பல நாடுகளில் அரசியல் தளம்பல்கள் நிகழும்போது இராணுவமே ஆட்சியைக் கவிழ்த்து அரசாள்வதை -முக்கியமாக நமது தென்னாசியா/தெற்கிழக்காசியா நாடுகளின் வரலாற்றைப் பார்க்கும்போது அறிந்துகொள்ளலாம். அந்தவளவுக்கு அவர்களிடம் அதிகாரம் மிகுந்து இருக்கின்றது.

எந்தவகை அதிகாரம் என்றாலும் அது மிகப்பெரும் துஷ்பிரயோகத்துக்கு இட்டுச் செல்லும் என்றாலும், ஆயுதங்கள் தாங்கும் ஓர் அமைப்பான இராணுவத்துக்கு அது இன்னும் பிறரை ஒடுக்கின்ற சக்தியை எளிதாகக் கொடுத்து விடுகின்றது. எனவே அந்த அதிகார மையத்தை தேசத்தை ஒன்றிணைக்கும் புள்ளியாக, தியாகிகளாக மட்டும் உருப்பெருக்கும்போதே சிக்கல்கள் வருகின்றன.

அவ்வாறு அவர்கள் தேசப்பக்தியாளர்களாகவும், தியாகிகளாகவும் கட்டமைக்கும்போது அவர்களின் துஷ்பிரயோகம் பேசப்படாது போகின்றது. இங்கே அமரன் ஒற்றைக் கதையாடலை மட்டும் (Singular Narratives) முன்வைப்பதால்தான் இதைப் பேசவேண்டியிருக்கின்றது. ஒற்றைக் கதையாடல் எவ்வளவு ஆபத்தானது என்பதை சிமாண்டா அடிச்சியின் 'The Danger of a Single Story' உரையை வாசிப்பதன் மூலம் நாமின்னும் அறிந்து கொள்ளலாம்.

'அமரன்' இந்திய இராணுவத்தினன் ஒருவனினது சாகசத்தையும் தியாகத்தையும் காட்டுவதற்கு காஷ்மீரின் சுயநிர்யண உரிமைகளுக்காகப் போராடுபவர்களை மட்டுமில்லை, இந்தியா-பாகிஸ்தான் அரசியல் சூதாட்டத்தில் பங்குபெறாத மக்களையும் எதிரிகளாகக் கட்டியமைக்கின்றது. இதைத்தான் சிமாண்டா அடிச்சி ஒற்றைக் கதையை (மட்டும்) சொல்வதால் வரும் ஆபத்து என்கின்றார். எப்படி வெள்ளையின ஐரோப்பா உலகம் ஆபிரிக்காவைச் சார்ந்தவர்களை ஒற்றைக் கதையாடல் மூலம் அவர்களின் தனித்துவங்களை அழித்து தனக்கான வரலாற்றை எழுதிக் கொண்டதோ அவ்வாறே அமரன் இந்திய இராணுவத்தின் சாகசத்தின் மூலம் மற்றமைகளை மூடி மறைத்திருக்கின்றது.

ண்மையிலே இந்திய இராணுவம் இவ்வளவு புனிதமானதா? என்பதை நாம் கடந்தகாலத்தைப் படிப்பதன் மூலம் அறிந்து கொண்டால், இப்படி அமரனில் கட்டியமைக்கப்படும் விம்பம் நமக்கு மகிழ்ச்சியைத் தராது. மேலும் இங்கே இராணுவத்தினன் நாட்டுக்காக துச்சமாக மதிப்பவன் என்று புனிதமாக, தியாகியாக கட்டியமைத்தாலும் அவர்களும் அதைச் சம்பளம் பெறும் ஒரு அரச உத்தியோகத்தனாகவே இருக்கின்றார்கள் என்பதையும் நினைவில் வைக்கவேண்டும். எந்த ஒருவரும் நாட்டுக்காக, தாம் நம்புக் கொள்கைக்காக volunteer ஆகவோ தேசப்பக்தியின் நிமித்தமோ மட்டும் செல்வதில்லை. அந்தவகையில் பார்த்தால் போராளிகளோ அல்லது 'பயங்கரவாதிகள்' என்று கட்டியமைக்கப்படுபவர்களோ இந்த 'சம்பளம்' இல்லாது தன்னார்வளாகப் போகின்றவர்களாக, இனி இழப்பதற்கு உயிரைத் தவிர வேறெந்தத் தேர்வும் இல்லை என்ற நிலையில் போகின்றார்கள் என்று வைத்துக்கொண்டால், அவர்கள் அல்லவா இந்த 'சம்பளம்' பெறும் இராணுவத்தை விட மிகப்பெரும் தியாகிகளாக இருப்பார்கள்?

மேலும் இந்திய இராணுவம் தனது நாட்டில் அரசியல் சிக்கல்கள் இருக்கும் காஷ்மீர்/அஸாம்/மணிப்பூர் போன்ற இடங்களில் மட்டுமில்லை, பஞ்சாப் காலிஸ்தான் பிரிவினையின்போதும், ஏன் வீரப்பன் வேட்டை என்கின்றபெயரில் அதிரடிப்படையினராக தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் செய்த அட்டூழியங்களும் மிக விரிவாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இங்கே இந்திய இராணுவம் இலங்கை, சூடான் (ஐ.நா.அமைதிப்படை) போன்ற பிற நாடுகளில் செய்த 'நல்ல விடயங்களை' பட்டியலிடப்போவதில்லை.

இந்த விடயங்களை எல்லாம் அமரன் பேச வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் இந்தப் பின்னணியோடு ஒருவர் 'அமரனை'ப் பார்த்தால் இதில் கட்டியமைக்கப்படும் தேசப்பற்றும், புனிதமும் அவ்வளவு உண்மையல்ல என்பது புரிந்துவிடும். மேலும் காஷ்மீரிகளில் பெரும்பான்மையினர் இந்தியாவும் வேண்டாம், பாகிஸ்தானும் வேண்டாம், ஆங்கிலேயர் வரமுன்னர் எப்படி இருந்தோமோ அப்படி அல்லது அதற்கு நிகரான சுயநிர்ணயமுள்ள மாகாணமாக இருக்கவேண்டும் என்றே விரும்புகின்றார்கள். ஆனால் 'அமரன்' கட்டியமைப்பதோ, அங்கே இருப்பவர்கள் பெரும்பாலும் பாகிஸ்தானின் செல்வாக்குக்கு உட்பட்ட 'பயங்கரவாதி'கள். ஆகவே அவர்கள் மிக மோசமாக அடக்கியொடுக்க வேண்டியவர்கள்.

இந்திய இராணுவம் செய்யும் ஒவ்வொரு தாக்குதல்களிலும் மக்கள் ஒன்றுகூடுகின்றார்கள். கற்களை எறிகின்றார்கள். ஆனால் இந்திய இராணுவம் ஒன்றுமே அவர்கள் மீது செய்யாத அப்பாவி/அருமையான இராணுவமாகக் கட்டியமைக்கப்படுகின்றார்கள்.

காஷ்மீரில் இந்திய இராணுவமும், இந்திய அரசும் செய்த அட்டூழியங்களை சும்மா இணையத்தில் தேடிப் பார்த்தாலே விபரங்கள் கொட்டும் என்பது ஒருபுறமிருக்க, சரி காஷ்மீரிகள் எதைச் சொன்னாலும் அது பக்கசார்பாக இருக்கும் என்று சொல்பவர்க்கு அருந்ததி ராயின் 'The Ministry of Utmost Happiness' வாசிக்கப் பரிந்துரைப்பேன். அது இரண்டு தரப்பினரைப் பற்றியும் பேசுகின்றது. அந்நாவல் மீது கூட விமர்சனம் இருந்தாலும், மேலும் அது இந்த இரண்டு தரப்பையும் தாண்டி முக்கியமான மூன்றாந்தரப்பான மக்களை, அவர்கள் படும் துயரங்களையும்/ சித்திரவதைகளையும் பேசுகின்றது.

மரனில் காட்டப்படும் இந்திய இராணுவம் இவ்வாறான இடங்களைக் கைப்பற்றும், தனது வீரர்களைக் காப்பாற்றும் தாக்குதல்கள் பற்றி எனது அனுபவம் ஒன்றைச் சொல்கின்றேன். யாழ்ப்பாணத்தை இந்திய இராணுவம் கைப்பற்றும் முயற்சியை செய்கின்றது. யாழ்ப்பாண நிலவியலையோ, புலிகளின் ஆயுதபலத்தையை அவ்வளவு அறியாது பாரசூட்கள் மூலம் இராணுவத்தை இறக்கி யாழ்நகரைக் கைப்பற்றலாம் என்று இந்திய இராணுவம் திட்டம் அமைக்கின்றது. அவ்வாறு ஓர் இரவில் இறக்கிய இராணுவத்தின் பெரும்பகுதியினரை புலிகள் தாக்கி அழிக்கின்றனர். இது இரண்டு ஆயுதத் தரப்புக்களின் போர் எனச் சொல்லலாம். ஆனால் அடுத்தநாள் இந்திய இராணுவம் என்ன செய்கின்றது? தனது கவச வாகனங்களைத் தெருவில் இறக்கி, வீதியில் நின்ற அப்பாவி மக்களை வகைதொகையின்றி தனது வெஞ்சினம் தீர்க்கச் சுட்டுக் கொன்றது. சுட்டுக் கொன்றது மட்டுமில்லை அப்படித் தப்பியவர்களையும், அரைகுறையாக காயங்களுடன் துடித்துக் கொண்டவர்களையும் தனது டாங்கிக்கு அடியில் போட்டு மேலே மிதித்துக் கொன்றது. இது கிட்டத்தட்ட 80களின் பிற்பகுதியில் நடந்த கோரதாண்டவம்.

அப்படி இருக்கின்ற இந்திய இராணுவத்தை ஒரு திரைப்படம் தனியே தேசப்பற்றாளர்களாவும், தியாகிகளாகவும், மக்களுக்காகப் போராடுபவர்களாகவும் காட்டுகின்றபோது ஒருவருக்கு நெருடல் வராதா என்ன? அதுவும் தனது இராணுவ காலத்தில் மிக மோசமாக காயப்பட்டு காப்பாற்றக்கூடிய 'பயங்கரவாதியைக் கூட' பக்கத்தில் வைத்து சுட்டு கொன்று தன்னை வீரனாகப் பெருமிதம் கொள்கின்ற (அமரனில் வரும் காட்சி) ஒருவனை, அவனது எதிர்த்தரப்பு கொல்கின்றபோது இதுவும் போரின் ஒரு எதிர்வினை என்றுதானே எடுத்துக் கொள்ளவேண்டியிருக்கும். நாமே தெருவில் போனால் ஒருவன் சீண்டினால் கோபப்படுவோம் என்றால், ஒருவனை மிலேச்சனத்தனமாக அதிகாரத்தின் நிமித்தம் கொன்றுவிட்டு 'வீரனாக'க் காட்டும்போது மறுதரப்பின் எதிர்வினைகளில் இருந்து ஒருவன் எப்படித் தப்பித்துக் கொள்ளமுடியும்.

மேலும் இந்திய இராணுவத்தின் புனிதத்தை குடும்பத்தின் பாசத்தைக் காட்டுவதன் மூலம் கட்டியமைப்பது இன்னும் மோசமானது. ஒரு இராணுவ வீரனுக்குப் பாசம் இருக்கக்கூடாதா என்று கேட்கலாம். இருக்கலாம். அது தவறே இல்லை. அப்படியாயின் 'பயங்கரவாதிகள்' என்று கட்டியமைக்கப்பவர்க்குக் குடும்பங்கள் இல்லையா? அவர்களுக்குப் பாசம் இல்லையா? அவர்கள் குடும்பம், இந்த இராணுவ சம்பளம், இறந்தால் கூட பெருமை மிகு 'அர்ஜூனா' விருதுக்கள் இல்லாது இப்படி ஏன் யுத்தம் செய்ய வருகின்றார்கள் என்று ஒருகணம் யோசித்துப் பார்த்திருக்கின்றோமா? இந்தளவு உணர்ச்சிவசப்படும் அவர்கள் ஒரு இராணுவத்தில் சேர்ந்து சம்பளம் பெற்று நிம்மதியாக வாழ முடியுமே? ஏன் இவற்றையெல்லாம் தவிர்த்து இப்படி ஒரு மோசமான உயிர் ஆபத்தான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கின்றார்கள் என்பதை நாம் ஒருபோதும் சிந்திக்கவிடாது, இவ்வாறான தேசப்பற்று/தியாக திரைப்படங்கள் நம்மைக் கட்டிப்போடுகின்றன.

ஆகவேதான் இந்த ஒற்றைக் கதையாடல்கள் மிக ஆபத்தானவை என்கின்றேன். இந்தத் தேவையில்லாத தியாக/புனித கற்பிதங்களை நம்பி எந்த இராணுவத்தையும் மேன்மைப்படுத்தாதீர்கள் என்று மட்டுமில்லை, இராணுவத்துக்கு உங்கள் பிள்ளைகளைத் தயவு செய்து அனுப்பி வைத்துவிடாதீர்கள் என்றும் சொல்லவேண்டியிருக்கின்றது. இராணுவத்தில் இருந்து உயிர் திருப்பி வருபவர்களில் பெரும்பாலானோர் PTSD போன்றவற்றால் பாதிக்கப்பட்டு மனச்சிதைவுடன் தமது எஞ்சிய நாட்களை மிக மோசமாகக் கழிக்கின்றார்கள் என்பதை அமெரிக்க இராணுவ வரலாற்றைக் கற்பதன் மூலம் நாம் எளிதாக அறிந்துகொள்ள முடியும்.

ஒரு மனித உயிரின் இழப்பு என்றவகையில் முகுந்த வரதராஜனின் மரணம் ஈடுசெய்யமுடியாது. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதேபோல அது எந்த அரசியல் நோக்கம் என்றாலும் எதிர்த்தரப்பின் இழப்பும் ஈடுசெய்யமுடியாததே என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். ஆகவேதான் எந்த மோசமான குற்றச்செயல் புரிந்திருந்தால் கூட, நாம் எல்லோருமே மரணதண்டனைக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுக்கின்றோம். ஒரு உயிரைப் பறித்து நாம் எந்த பெரும் நீதியை இந்த உலகில் நிலைநாட்டிவிடப் போகின்றோம். அது எமக்கு மிக மோசமான எதிர்த்தரப்பாக இருந்தால் கூட எவருக்கும் அப்படியொரு தண்டனை வழங்கும் அதிகாரம் இருக்கக் கூடாது என்றுதான் விரும்புகின்றோம். அதுவும் காந்தி போன்ற ஒருவர் பிறந்த நாட்டில், ஒரு இராணுவத்தின் சாகசத்தை/பழிவாங்கலை தேசப்பக்தியாகவும்/ தியாகமாகவும் கட்டியமைக்கும்போது நாம் சற்று தலைகுனிந்து வெட்கப்படவும் அல்லவா வேண்டும்?
************

(இதை எழுத, எனக்குப் பிரியமானவர் முகுந்த் வரதராஜன் காலமானபோது அவரின் அஞ்சலிக்காக இசையமைக்கப்பட்ட பாடல்களில் ஒன்றை தான் எழுதிக் கொடுத்தேன் என்று சொன்னது ஒரு காரணமாக இருந்தது. அந்தவகையில் இந்தத் திரைப்படம் அவருக்கு நெருக்கமானதும் கூட. அவரின் சார்பு/உணர்ச்சி எல்லாவற்றையும் புரிந்துகொண்டே, ஒற்றைக் கதையாடலின் ஆபத்து இத்திரைப்படத்தில் இருக்கின்றது என்கின்ற உரையாடலின் நீட்சியிலே இதை எழுதினேன். அவருக்கும் நன்றி)

 

- Nov 04, 2024-

கார்காலக் குறிப்புகள் - 56

Friday, November 08, 2024

 போருக்குள் வாழ்ந்தவர்கள் துயரம் ஒருவகையென்றால், அதிலிருந்து தப்பி அகதியாக புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்பவர்களின் சோகம் இன்னொரு வகையானது. நாம் போரையும், அகதிகளையும் புரிந்துகொள்கின்றோம் என நினைக்கின்றோம். ஆனால் அது பொதுமையான புரிதலே தவிர, அரசியல் காரணங்களுக்காக சொந்த நாட்டை விட்டு புலம்பெயர்ந்த ஒவ்வொரு அகதியினதும் வாழ்வென்பதை முழுமையாக எவராலும் புரிந்துகொள்ள முடியாது .

குர்டிஷ் எழுத்தாளரான புர்ஹான் ஸென்மெஸ் 'Sins and Innocents' என்கின்ற தனது நாவலில் இங்கிலாந்தில் அடைக்கலம் புகுந்த ஒரு அகதியின் வாழ்வைச் சொல்கின்றார். ஆனால் இந்த நாவலை குர்டிஷ் - துருக்கி போராட்டங்களுக்குள் செல்லாமல், இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் நகரில் ஒரு குர்டிஷ் ஆணுக்கும், ஈரானியப் பெண்ணுக்கும் இடையில் முகிழும் நேசத்தினூடாக சமகாலத்தையும், கடந்தகாலத்தையும் விவரிக்கின்றார். ஒரு நேர்கோட்டுத் தன்மை இல்லாது, குர்டிஷ் நாடோடிக்கதைகளாலும், கிராமியப் பாடல்களாலும் இந்த நாவலை எழுதிச் செல்வதுதான் இன்னும் அழகாக இருக்கின்றது.

இங்கிலாந்தில் ஓர் அகதிபடும் அவதியை, நித்திரை இல்லாத இரவுகளை, 'உனது நாட்டுக்குத் திரும்பிப் போ' என்கின்ற பதின்மவயதினரின் இனத்துவேஷத்தை, விட்கன்ஸ்டெய்யினின் கல்லறையில் பகல்களைக் கழிக்கும் புலம்பெயர்வின் நிமித்தம் அந்நியமாகிப் போன ப்ரானிடெவோவில் யுத்த நிலங்களிலிருந்து தப்பிவந்த நாம் எம்மை அடையாளங் காண்கின்றோம்.

ப்ரானிடாவோவின் யுத்தகால வாழ்க்கை மட்டுமில்லை, புலம்பெயர் அகதி வாழ்வும் நமக்குப் பரிட்சயமானது. குர்டிஷ் மலைக்கிராமமொன்றில் பிறந்து, தனது மொழியில் கல்விகற்கமுடியாது, துருக்கி மொழியில் கற்கும் ப்ரானிடாவோவில் நாம் நமது மொழிக்கான போராட்டதைக் காண்கின்றோம். இரண்டு வகையான 'யதார்த்தில்' வாழ்ந்த தன் இளம் பருவமே தன்னை பின்னாளில் எழுத்தின் மீது ஈர்ப்பு வரச் செய்ததென்று புர்ஹான் ஒரு நேர்காணலில் சொல்கின்றார்.

தனது தாய்மொழியான குர்டிஷ் அகவயமாகவும், வெளியுலகில் புழங்கு மொழியான துருக்கி புறவயமாகவும் தன்னை அறிந்து கொள்ள உதவின என்று குறிப்பிடுகின்றார். இவ்வாறு துருக்கி மொழியில் தனது நாவல்களை எழுதிய புர்ஹான் இப்போது தனது கடைசி நாவலை குர்டிஷில் எழுதி வெளியிட்டிருக்கின்றார். இது ஒருவகையில் மீண்டும் வேரினை நோக்கி திரும்புதல் எனலாம். இதை முதலில் ஆங்கிலத்தில் எழுதிப் புகழடைந்த நைஜீரியா எழுத்தாளரனா சினுவா ஆச்சுபேயும் தனது தாய்மொழியில் இறுதிக்காலத்தில் எழுதுபவராகவும் மாறியிருந்தார்.

இந்த நாவலில் புர்ஹான், சித்தரிக்கும் குர்திய நிலப்பரப்பான ஹேன்னா, மார்க்வெஸ்ஸின் 'நூற்றாண்டு காலத் தனிமை'யில் வரும் மகோந்தாவை நினைவுபடுத்துதாக ஒருவர் நினைத்தாலும், எனக்கு இந்த நாவலின் சொல்லப்படும் நாடோடிக் கதையும், அந்தக் கதையின் நாயகனான ஃபெர்மன் செய்த கொலைகளும் ஒருவகையில் மார்க்வெஸின் 'முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்' கதையின் சாயலை நினைவுபடுத்தியிருந்தது.

மார்க்வெஸ்ஸும், போர்ஹேஸும், டால்ஸ்டாயும் புர்ஹானுக்குப் பிடித்தவர்கள். முக்கியமாக புலம்பெயர் வாழ்வு தனித்தலையும்போது தென்படும் மனிதர்களின் சோகம் அப்பிய முகங்களை ப்ரானிடாவோ பார்க்கும்போது டால்ஸ்டாயின் 'மகிழ்ச்சியான அனைவரும் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள்; மகிழ்ச்சியற்ற ஒவ்வொருவரும் தத்தம் வழியில் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறார்கள்' என்ற வசனங்களை அடிக்கடி நினைவு கொள்கிறார்.

போருக்குள் வாழ்ந்தவர்கள், முக்கியமாக புலம்பெயர் தேசத்திலிருந்து எழுதுபவர்க்கு முக்கியமான இரண்டு புனைவுகளாக மிலான் குந்தேராவின் 'Ignorance' ஐயும், ஹைனர் சலீமின் 'The Father's Rifle' ஐயும் நான் உதாரணமாகச் சொல்வதுண்டு. இப்போது புர்ஹானின் 'Sins and Innocents' ஐயும் இனிச் சேர்த்துச் சொல்லலாம். இதில் நாடோடிக்கதைகளாலும், கவிதைகளாலும் மாந்தீர்கத்தன்மையுடன், போரையும், தாய் நிலம் பிரிந்து வந்த துயரத்தையும் சொல்வது அவ்வளவு ஆழமாக மனதில் ஊடுருகின்றது.

இந்த நாவலை வாசிக்கும்போது நாவலாசிரியரான புர்ஹானின் வாழ்க்கை இணைத்துப் பார்ப்பதும் ஒரு வாசகருக்கு வாசிப்பில் நிகழலாம். தனது வாழ்வின் சில பகுதிகளை முன்வைத்து தனது கதையையல்ல, ஒரு புனைவையே எழுதியுள்ளேன் என்றுதான் புர்ஹான் சொல்கின்றார். புர்ஹான் குர்டிஷ்காரர். மின்சார வசதியே இல்லாத தனது கிராமத்திலிருந்து தன் 17வயதில் இஸ்தான்புல்லுக்குப் படிக்க வந்து பிறகு சட்டத்தரணியானவர். அன்றையகாலத்தில் ஒரு தீவிர இடதுசாரியாக இருந்த புர்ஹானை துருக்கிய பொலிஸ் கைது செய்து பயங்கரமாகச் சித்திரவதை செய்தபோது, துருக்கியிலிருந்து தப்பி இங்கிலாந்துக்கு அரசியல் அகதியாகப் புலம்பெயர்ந்தவர். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் துருக்கிக்குத் திரும்பிப் போக முடியாது தடுக்கப்பட்டவர். கவிதைகளின்பால் அதிக ஈர்ப்புடன் இருந்தவர். தனது முதல் நாவலை எழுத பத்து ஆண்டுகளுக்கு மேலாக எடுத்தவர். இன்றைக்கு புர்ஹான் கவனித்துக்குரிய எழுத்தாளர், சல்மான் ருஷ்டி போன்ற எழுத்தாளர்களால் தொடங்கப்பட்ட PEN அமைப்பின் தலைவருங் கூட .

ஒரு காலத்தில் அகதியாய், கையில் காசில்லாது, பயணிப்பதற்கென இருந்த சைக்கிளும் திருடப்பட்டு, சாப்பிடாது மழையில் தெப்பலாக நனைந்து வந்து தனிமையில் இங்கிலாந்தில் வருந்திய நாவலில் சித்தரிக்கப்படுகின்ற ஒர் அகதியின் வாழ்க்கையை புர்ஹானும் வாழ்ந்திருக்கக் கூடும்.

தனது சொந்த மொழியில் பேசவோ எழுதவோ முடியாது இரவல் மொழியில் தன்னை வெளிப்படுத்துபவருக்கு சுதந்திரத்தின் அருமை தெரியும். எல்லோர்க்கும் 'சொர்க்கமாக'த் தெரியும் மேற்குலகு வாழ்வு எப்படி ஒரு அகதிக்கு அத்தனை அச்சங்களையும், தூங்கமுடியா இரவுகளையும் கொடுக்கின்றது என்பது புர்ஹானுக்கு மட்டுமில்லை, நமக்கும் ஒரளவு புரியும்.

 
***************

('Sins and Innocents' என்கின்ற இந்நாவல் தமிழில் 'பாவங்களும் அப்பாவிகளும்' என்று முடவன் குட்டி முகம்மது அலியால் அருமையாக மொழிபெயர்க்கப்பட்டு 'காலச்சுவடு' பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கின்றது.)

கார்காலக் குறிப்புகள் - 55

Thursday, November 07, 2024

னடா - இந்தியா உறவுகள் இப்போது மிக மோசமான நிலைமையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றது. ஏற்கனவே இந்தியாவிலிருந்து குடிபுகும் மாணவர்கள் மீதொரு ஒவ்வாமை கனடிய பொதுச்சமூகத்தில் ஊடகங்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றது. அத்தோடு இரு நாட்டு உறவுகள் மேலும் மேலும் சிக்கலாகி வந்தபடி இருக்கின்றன.

கடந்த வாரம் கனடிய அரசு, இங்கிருக்கும் இந்திய தூதரலாயத்தில் இருந்து ஆறுக்கு மேற்பட்டவர்களை வெளியேற்றியிருந்தது.
இவற்றுக்கெல்லாம் அடிப்படைக் காரணமாக இந்தியாவின் உளவுநிறுவனம் பின்னால் நின்று காலிஸ்தான் ஆதரவுள்ள இந்திய வம்சாவளி கனடியர் ஒருவரைப் பொதுவெளியில் சுட்டுக் கொன்றமையே காரணம். இவ்வாறான காலிஸ்தான் ஆதரவுள்ள இன்னொருவரை அமெரிக்காவில் கொல்ல முயன்றபோது இந்திய உளவுத்துறை வசமாக மாட்டுப்பட்டும் இருந்தது.

அமெரிக்காவோ, கனடாவோ தனது குடிமக்கள் மீது வேறு நாட்டில் எவரும் கைவைத்தால் கூடஅவர்களைக் காப்பாற்ற - அது ஒருவகையில் அவர்களின் தன்மானத்துக்கான சவால் என்பதால்- கடைசி எல்லைவரை செல்லக்கூடியது. அப்படி இருப்பவர்களின் நாட்டில் இன்னொரு அரசு வாடகைக் கொலைகாரர்களை வைத்துச் செய்யும் நடவடிக்கைகளை ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்பது ஓர் எளிய பாடம்.

இந்தக் கொலைகள்/கொலை முயற்சிகளுக்கு முன்னரும் ஒரு கொலை நடந்திருந்தது. எயர் இந்தியா விமானக் குண்டு வெடிப்பில் (காலிஸ்தான்/பொற்கோயில் பிரச்சினையில் 80களில் நடந்த சம்பவம்) குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒரு பஞ்சாபியர் பட்டப்பகலில் வைத்து வன்கூவரில் கொலைசெய்யப்பட்டார். இந்தளவு வயதானவரை (80களை அண்டியவர்) கொல்லப்பட்டபோதே இது சும்மா செய்யப்பட்ட கொலையல்ல, கடந்தகால நிகழ்வுகளின் பழிவாங்கலாக இருக்குமென நண்பரொருவரிடம் சொல்லியிருந்தேன். இப்போது அந்தக் கொலைவழக்கும் கனடிய அரசால் தூசி தட்டப்பட்டு, இரு வாடகைக் கொலையாளிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். எனவே அந்தக் கொலையின் பின்னணியார் யார் இருந்தார்கள் என்கின்ற விபரங்களும் விரைவில் வெளியிடப்படலாம்.

கனடிய அரசு, ஒரு வணக்கஸ்தலத்தின் முன் நடந்த இந்தக் கொலையை பற்றி இந்திய அரசிடம் விளக்கம் கோரியது. இந்திய அரசோ விளக்கம் கொடுப்பதை விடுத்து கடந்த வருடம் இந்திய தூதுராலயத்தில் இருந்த கனடிய அதிகாரிகள் பலரை வெளியேற்றியது. அதுமட்டுமில்லாது அப்போது கனடியர்களுக்கு விஸா கொடுப்பதையும் இந்திய அரசு தடுத்து நிறுத்தியது.

அப்போதும் கனடிய அரசு நிதானமாகவே இந்த விடயத்தைக் கையாண்டது. பதில் நடவடிக்கையாக எந்த எதிர்விடயங்களையும் செய்யவில்லை. இதற்கிடையில் இந்திய உளவுத்துறையின் இரத்தக்கறை இருப்பதற்கான ஆதாரங்களைப் பார்க்க கனடிய அரசு எதிர்க்கட்சித் தலைவர்களையும் அழைத்தது.

அந்தவகையில் கனடாவில் மூன்றாவது பலமான தரப்பாக இருக்கும் (ஒரளவு இடதுசார்புள்ள நான் ஆதரிக்கும் புதிய ஜனநாயக் கட்சி) தலைவரான ஜஸ்மீட் சிங்கும் இந்தியாவின் தலையீடு கனடாவில் இருப்பதை, ஆதாரங்களைப் பார்த்தவர் என்றவகையில் பொதுவெளியில் அறிவித்தார்.

கனடிய அரசு நிறைய அவகாசம் கொடுத்தபின்னும், இந்திய அரசு இந்தக் கொலைக்கான விளக்கத்தைக் கொடுக்காதபோது இப்போது கனடிய அரசு இங்கிருக்கும் இந்திய தூதரலாயத்தில் இருந்து 6இற்கு மேற்பட்டவர்களை வெளியேற்றியிருக்கின்றது.

 

ந்த விடயம் ஒருபுறம் போய்க் கொண்டிருக்க, குடிவரவாளர்களாக வரும் இந்தியர் (மாணவர்கள்) மீது ஒவ்வாமையும், இனத்துவேஷமும் கனடாவில் இப்போது அதிகம் வெளிப்படத் தொடங்கியுள்ளது. கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்பவை 'வெள்ளையினப் பெருமை' உள்ள நாடுகள் என்பதை நாம் நன்கு அறிவோம். இனவாதம் வெளிப்படையாகத் தெரியாது இந்தநாடுகள் தம்மை மறைத்துக் கொண்டிருந்தாலும், இனத்துவேஷம் உள்ளோடியிருப்பதை அகதிகளாக/ குடிவரவாளர்களாக வந்த நாம் அனைவரும் அனுபவித்திருப்போம். வருகின்ற சில இந்திய மாணவர்களும் தம்மை ஏற்கனவே இருக்கின்ற சமூகத்தோடு கட்டமைக்காமல் 'இந்தியப் பெருமை'களில் சிக்கிச் சீரழிந்து 'நுணலும் கெடும் தன் வாயால்' என்கின்றமாதிரி இங்கே ஆகிக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் ஒரளவு ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

நமது ஈழத்தவர்கள் இலங்கையிலிருந்த சாதி உள்ளிட்ட விடயங்களை அப்படியே அள்ளிக்கொண்டு வந்தமாதிரி இந்தியர்களும் எண்ணற்ற விடயங்களை அப்படியே கொண்டு வந்திருக்கின்றனர். ஒருவர் தனது நம்பிக்கைகள்/விருப்புக்களை தனிப்பட்டு வைத்திருப்பதற்கும், அதைப் பொதுவெளியில் பகட்டாக காட்டுவதற்கும் வித்தியாசங்களுண்டு. இப்போது நாமிருக்கும் மாகாணத்தில் இந்தியர்கள் செறிவாக வாழும் சில நகரங்களில் இந்தியர்கள் செய்யும் 'அழிச்சாட்டியங்களை' படம்பிடித்து பொதுவெளியில் பலர் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். உண்மையில் இவை எல்லாச் சமூகங்களும் கனடிய நீரோட்டத்தில் கலக்க முன்னர் தன்னைத் தகவமைத்துக் கொண்டு போகும்போது செல்கின்ற பாதைதான்.

ஆனால் இப்போது இந்திய மாணவர்கள் மீது எல்லோரும் கவனம் குவித்திருப்பதால் அது பெரும் விடயங்களாக ஊடகங்களினால் ஊதிப் பெருப்பிக்கப்படுகின்றன. இதனால் இப்போது இனவாதம் சம்பந்தமான நிகழ்வுகள் பொலிஸ் நிலையங்களில் நிறைய பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த மாணவர்களை பொதுப்புத்தியோடு வெறுக்கின்ற நம்மவர்க்கும், இது எல்லாமே இறுதியில் எமது அடிப்படை உரிமைகளையும் சுதந்திரமான வாழ்வையும் கேள்விக்குட்படுத்தும் என்பதை அறிந்தார்களில்லை. நாமும் அதே 'மண்ணிறமானவர்கள்', நாமும் இப்படி ஒருகாலத்தில் அகதிகளாக வந்தவர்கள் என்பதை மறந்துவிடுகின்றோம். இந்திய மாணவர்களும், தம்மைப் போல அதிக அளவில் சர்வதேச மாணவர்களாக வரும் சீன மாணவர்களைப் போன்று, அவர்கள் எவ்வாறு 'அலட்டிக்கொள்ளாது/படங்காட்டாது' பொதுச்சமூகத்தில் எளிதில் இணைந்துகொள்கின்றார்கள் என்கின்ற பாடங்களைக் கற்றுக் கொள்வதன் மூலம் தேவையற்ற பல பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

இவையெல்லாவற்றின் நீட்சியாக கனடிய அரசு இப்போது குடிவரவாளர்கள்/சர்வதேச மாணவர்கள் கனடாவில் குடியுரிமை/நிரந்தர வதிவிடம் பெறும் சட்டங்களை மிக இறுக்கமாகக் கொண்டுவரத் தொடங்கியுள்ளது.

கனடா/அமெரிக்கா/இங்கிலாந்து/ஆஸ்திரேலியா ஒரே நேர்கோட்டில் தமது முடிவுகளை எடுக்கக் கூடியவை. இவ்வாறு சர்வதேச மாணவர்களாக வந்தவர்களை இங்கிலாந்தில் தொடர்ந்து தங்கவிடாது சில வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்து தனது சட்டங்களை இறுக்கியதை நாம் ஏலவே அறிவோம். இப்போது கனடாவும் அதைப் பின்பற்றத் தொடங்கியிருக்கின்றது.

அதுமட்டுமின்றி இப்போது கனடிய லிபரல் அரசு கனடாவில் ஒவ்வொரு வருடமும் ஏற்றுக்கொள்ளும் குடிவரவாளர்களின் எண்ணிக்கையையும் குறைப்பதாக அறிவித்திருக்கின்றது.

குடிவரவாளர்களின் பெரும்பான்மை ஆதரவால் அரசமைத்த லிபரல் அரசே இவ்வாறு குடிவரவாளர்க்கான அனுமதி/சட்டங்களை இறுக்கின்றபோது, அடுத்த வருடம் நடைபெற்றவுள்ள தேர்தலில் வெல்லச் சாத்தியமுள்ள வலதுசாரியான பழமைவாதக் கட்சி பெரும் மாற்றங்களை குடிவரவாளர்கள்/சர்வதேச மாணவர்களில் நிச்சயம் கொண்டுவரும். டிரம்ப் அமெரிக்காவில் ஆட்சிக்கு வந்தபோது, பல இந்தியர்கள் அங்கே வதிவிட அனுமதி மறுக்கப்பட்டு, கனடாவுக்கு எல்லை தாண்டியபோது கனடா அவர்களை ஏற்றுக்கொண்டது. இனி அமெரிக்காவிலும், கனடாவிலும் வலதுசாரி அரசுக்கள் வெல்லும் சாத்தியங்கள் இருக்கும்போது நம்மைப் போன்ற அகதிகள்/குடிவரவாளர்களே பெரும் சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கப் போகின்றது என்பதுதான் துயரமானது.

***********

 

(Oct 25, 2024)

கார்காலக் குறிப்புகள் - 54

Saturday, November 02, 2024

கோட்பாடுகளைப் பற்றி அண்மையில் ஒரு சிறு உரையாடல் போயிருந்தது. கோட்பாடுகளை அறிதல்/கற்றல் ஒரு படைப்பாளிக்கு முக்கியமா இல்லையா என்பது தமிழ்ச்சூழலில் அவ்வப்போது தீவிர விவாதிக்கப்பட்டு வந்திருக்கின்றன. தமிழ்ச் சூழலில் கோட்பாடுகளும், புனைவுகளும் ஒன்றோடு ஒன்று ஊடாடி தங்களை செழுமைப்படுத்தியபடியே வந்திருக்கின்றன. அந்தப் புரிதல் இல்லாது இவற்றை இருவேறு துவிதமுனைகளில் வைத்து விவாதிப்பவர்களோடு உரையோடுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை.

இன்றைக்கு வாசிப்பு என்பதே சுருங்கிய நிலையில் கோட்பாடுகளின் பக்கம் செல்பவர்கள் மிகச் சொற்பமாகவே இருக்கின்றார்கள். ஏதேனும் ஒரு விடயத்தைக் கோட்பாடுகள் சார்ந்து பேசும்போது தமிழ்ச்சூழலில் எளிதில் எள்ளல் செய்து நகரும் நிலையே இருக்கின்றது. ஆனால் புனைவில் மிகப்பெரும் விருப்பு எனக்கு கோட்பாடுகள் என்னை/என் எழுத்துக்களை செழுமைப்படுத்தியிருக்கின்றன. எழுத்திலும், வாழ்விலும் கரைகளைக் கண்டடைய முடியாச் சிக்கல்களை கோட்பாடுரீதியாக அணுகியபோது அவை தீர்க்கக்கூடிய எளிய விடயங்களாக மாறியிருக்கின்றன. அதேவேளை நான் கோட்பாடுகளை மேலோட்டமாகவே வாசித்து கடந்துபோகின்றவன் என்றே சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். ஆனால் அதைச் சொல்லித்தரும் முன்னோடிகள் மீது இன்றும் -எத்தகைய விமர்சனங்கள் அவர்கள் சார்ந்த அரசியல்/தத்துவச் சார்புகளில் இருந்தாலும்- மிகவும் மதிக்கின்றேன்.

தமிழ்ச்சூழலில் கோட்பாடுகள் மிகவும் உரையாடப்பட்ட 80/90கள் ஒரு 'பொற்காலம்' எனலாம். அத்தோடு அதுவரை பெரும்நம்பிக்கையாக இருந்த சோவியத் ஒன்றியம் சிதறடிக்கப்பட்ட பின்னும், மிக விரிவான உரையாடல்கள் மார்க்ஸிசம் சம்பந்தப்பட்டு உரையாடப்பட்டிருக்கின்றன. நாம் எவ்வளவு முன்னே கோட்பாடுகள் சார்ந்து முன்னோக்கி இருந்தோம் என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கின்றேன்.

எனது நண்பர் ஒருவர் 15 வருடங்களுக்கு முன் இங்குள்ள பல்கலைக்கழகத்தில் மானுடவியல் கற்கப்போனபோது, முதலாண்டிலே பின்னமைப்பியல்/பின்நவீனத்துவம் பற்றி அறிந்திருப்பதை அவரது முதலாமாண்டு பேராசிரியர் வியப்புடன் பார்த்திருக்கின்றேன். இது எவ்வாறு சாத்தியம் என்றபோது எங்கள் தமிழ்ச்சூழலில் இது எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் விரிவாகப் பேசப்பட்டிருக்கின்றது என அவர் சொல்லியிருக்கின்றார்.

ஆனால் 2000களின் பின் கோட்பாடுகள்/விமர்சனங்கள் சார்ந்து தமிழ்ச்சூழலில் எந்தத் தீவிரமான உரையாடல்களையும் நாம் செய்யவில்லை. கோட்பாடுகளை அறிமுகப்படுத்தி விவாதித்த முன்னோடிகளும் உறங்குநிலைக்குப் போய்விட்டிருந்தனர் அல்லது அவ்வாறான ஒரு நிலைமை தமிழ்ச்சூழலில் உருவாக்கப்பட்டு, புனைவு எழுத்தாளர்கள் மட்டுமே தமிழ் இலக்கியத்தின் முகங்களென கட்டமைக்கப்பட்டார்கள். அவர்களும் கோட்பாடுகள்/தத்துவங்கள் புனைவுகளுக்கு எதற்கென திருவாய் மலர், அவர்களின் சீடர்களுக்கு எவர் கோட்பாடு/தத்துவங்களைப் பேசத்தொடங்குகின்றார்களே, அந்த முன்னோடிகளை எல்லாம் நக்கலும்/நளினமும் எளிதாகச் செய்யத் தொடங்கினார்கள்.


நா
ன் எழுத வந்த 2000களின் தொடக்கத்தில், அப்போது கவிதைகள் மீது பெரும் மோகம் இருந்தபோதும், தமிழகத்தில் இருந்து நூல்களை இணையத்தில் வாங்கியபோது கவிதைப் புத்தகங்களுக்கு நிகராக தமிழில் வந்த கோட்பாடு/தத்துவ நூல்களையும் வாங்கியிருந்தேன். அந்தக் கோட்பாடு நூல்களை எல்லாம் முழுதாக வாசித்தேன் என்று சொல்லமாட்டேன். ஆனால் இயன்றளவு நுனிப்புல்லாக வாசித்து அதன் அடிப்படைகளை அறிந்து வைத்திருந்தேன். மேலும் அன்றையகாலத்தில் (இன்றும்) எனக்கு பின்னமைபியல்/பின் நவீனத்துவம் மிக நெருக்கமாக இருந்தது/இருக்கின்றது.

பின்னமைப்பியல்/இருத்தலியம்/தெரிதா/சார்த்தர் என எனக்குத் தெரிந்ததை எழுதியெழுதித்தான் ஒருவகையில் அதன்/அவர்களின் அடிப்படைகளைப் புரிந்துகொண்டேன்.  அன்றையகாலத்தில் அ.மார்க்ஸ், எஸ்.வி.ராஜதுரையின் புத்தகங்கள் வழிகாட்டியாக இவற்றுக்கு இருந்ததென்றால், இன்னொருவகையில் இணையத்தில் எழுதிக்கொண்டிருந்த நாகார்ஜூனன், தமிழவன் (தீராநதி) போன்றவர்களின் ஊடாடங்கள் எனக்கான கற்றல்களாக இருந்தன. நாகார்ஜூனன் போன்றவர்கள் அன்று நான் எழுதியவற்றுக்குக் கருத்துக்கள் கூறியும், இது குறித்து உரையாடல்களில் பங்குபற்றியும் எமக்கு (மறைமுகமாக) வழிகாட்டுபவர்களாக இருந்தார்கள்.

அந்த நீட்சியில்தான் மார்க்ஸியம் மீது பெருவிருப்புக் கொண்ட என் சமகாலத்துவர்களோடு, மார்க்ஸிசம் X பின் நவீனத்துவ உரையாடல்களை நிகழ்த்தியிருந்தோம். அது தொடர்ச்சியாக நிகழாமல் போனது எம்மளவில் ஓர் இழப்பே. ஏன் இந்த கோட்பாடுகள் சார்ந்த உரையாடல்கள் புனைவுகளுக்கு முக்கியம் என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கின்றேன்.

ஈழத்தில் இலக்கியம் சார்ந்த வரலாற்றை அவதானிப்பவர்க்கு, ஒருகாலத்தில் மார்க்ஸிசம் சார்ந்த முற்போக்கு இலக்கியத்துக்கும், மரபுசார்ந்த இலக்கியத்துக்கும் விவாதங்கள் நடந்ததை அறிந்திருப்போம். அது பின்னாளில் முற்போக்கு இலக்கியத்திலிருந்து முரண்பட்டு வெளியேறிய மு.தளையசிங்கம், எஸ்.பொ என்பவர்களால் முற்போக்கு இலக்கியம் அதற்கெதிரான எஸ்.பொ முன்வைத்த (நற்போக்கு இலக்கியம்) போன்ற உரையாடல்களாக மாறியது.

இத்தனைக்கும் எஸ்.பொவின் (நற்போக்கு இலக்கியம்), மு.தளையசிங்கத்தின் (பிரபஞ்ச யதார்த்தவாதம்) என்பவை ஒருபோதும் மார்க்ஸிசத்தை முற்றாக நிராகரித்ததும் இல்லை. மார்க்ஸிசம் சில இடங்களில் போதாமையாக இருக்கின்றது என்று சொல்லியே அவர்கள் தமது விவாதங்களை உருவாக்கியபோதும், மார்க்ஸிசத்துக்கு ஒரு பெரும் மதிப்பு அவர்களுக்குள் எப்போதும் இருந்தது. 



வ்வாறு முற்போக்கு இலக்கியம் X நற்போக்கு இலக்கியம் X பிரபஞ்ச யதார்த்தம் என்று பல்வேறு போக்குகள் ஈழத்தில் உரையாடப்பட்டபோது புனைவுலகும் செழித்திருந்ததை நாம் பார்க்க முடியும். தத்துவமும் புனைவும் ஒன்றோடொன்று உரசி முரணும் உறவும் கொண்டு தம்மை வளர்த்துக் கொண்டன. நிறையப் படைப்பாளிகள் அந்தச் சூழலில் முளைவிட்டு எழும்பினர். கைலாசபதியும், கா.சிவத்தம்பியும் புனைவின் பக்கம் வராதபோதும் (அதேயே எஸ்.பொ அவர்கள் மீதான விமர்சனமாக பல இடங்களில் குறிப்பிட்டிருந்தாலும்), அவர்கள் புனைவெழுத்தாளர்களை ஊக்குவித்தார்கள். அவர்களின் நூல்களுக்கு முன்னுரையும்/ திறனாய்வும் எழுதினார்கள். அவர்கள் நம்பிக்கை வைத்து எழுதிய படைப்பாளிகள் பிறகு விகாசித்தார்களா இல்லையா என்பது விமர்சனமாக ஒருபுறமாக இருந்தாலும், 'அப்படியென்றால் நாம் படைப்பது இலக்கியம் இல்லையா' என்று மு.தளையசிங்கமும், எஸ்.பொவும், வ.அ.இராசரட்ணமும் எனப் பலர் மறுபுறத்தில் கிளைத்தெழுந்தார்கள்.

இவ்வாறான ஒரு சூழலின் ஒளி புகுந்திருக்காவிட்டால் பிரமிள் போன்ற ஒருவர் எல்லாவற்றையும் திருகோணமலையில் துறந்துவிட்டு இலக்கியப் பித்துப் பிடித்து அன்று தமிழகத்துக்குப் புலம்பெயர்ந்தே இருக்கமாட்டாரெனவே நம்புகின்றேன். எஸ்.பொவின் 'தீ'யுக்கு, பிரமிள், எஸ்.பொ, மு.தளையசிங்கம் நடத்திய உரையாடல்களை அவதானித்தால், தனியே அந்த நாவலுக்கு மட்டும் அது நடக்கவில்லை என்பதையும் நாம் அறிவோம்.

இன்றைக்கு தமிழ்ப் புனைவெழுத்து ஈழத்திலும்/தமிழகத்திலும்/புலம்பெயர்விலும் தேங்கிப் போனதற்கு இந்த கோட்பாட்டு/விமர்சனச் சூழல் அருகிப் போனதையே முக்கிய காரணம் என்பேன். அதனால்தான் புதிய முயற்சிகள்/பரிசோதனைகள் அடிக்கடி தமிழில் புனைவெழுத்து சார்ந்து நடப்பதைக் காண்பதே அரிதாக இருக்கின்றது.

கோட்பாடு/தத்துவங்களை மட்டும் வைத்து புனைவைப் படைத்து முடியுமா என்று தேய்வழகான கேள்விகளோடு எவரும் வரத்தேவையில்லை. எந்த ஒரு படைப்புமே கோட்பாடுகள் சார்ந்து எழுதப்படுவதில்லை. அது பின்னர் வாசிப்பு எளிமைக்காய் ஒரு பிரிவிற்குள் வகுக்கப்படுகின்றது. புனைவுகள் மட்டும் அல்ல, பின்னமைப்பியல்/பின் நவீனத்துவ வாதிகள் என்று இன்று நாம் சொல்கின்ற எந்த ஒரு அறிஞரும் கூட அப்படி ஒரு சட்டகத்துள் தம்மை வைப்பதை மறுதலிப்பவர்களாகவே இருந்திருக்கின்றனர்.

நாம்தான் அவர்கள் சொல்வதை எளிதாக விளங்கிகொள்வதற்காக ஒரு சட்டகத்திற்குள் வைத்துப் பேசுகின்றோம். மார்க்ஸே கூட,  தனக்கான காலத்தின் பின் அவர் பேசியவை எல்லாம் தன் பெயரிலே பொதுமைப்படுத்தி 'மார்க்ஸிசம்' என்று பேசப்படுமென நினைத்திருப்பாரா என்ன?

************* 


(Oct 20, 2024)

ஓவியம்: ஜி.கோபிகிருஷ்ணன்

 

கார்காலக் குறிப்புகள் - 53

Friday, November 01, 2024

( ஓவியம்: முரளிதரன் அழகர்)

 

ன் வாழ்வில் பயணம் என்பது மிக முக்கியமான பகுதியென நினைத்துக் கொள்பவன். எனது பதின்மங்களிலோ, இருபதுகளிலோ அவ்வளவாகப் பயணித்தவன் அல்லன். பயணங்கள் தரும் பேரனுபவத்தை எவருமே அருகில் இருந்து அன்றைய காலங்களில் எடுத்துச் சொல்லவும் இல்லை.

கனடா போன்ற புதிய நாடொன்றுக்கு எதுவுமே இல்லாமல் வந்து, தொடக்கத்தில் நாளாந்த வாழ்வில் அல்லாடியது ஒருபுறமென்றால், இன்னொருபுறம் படிப்பின் நிமித்தம் கடன் எடுத்து அதைக் கட்டி முடிக்க 10 ஆண்டுகள் மேலாக எடுத்தும் இருந்தது. இதற்கிடையில் ஒரு தீவிரமான காதல், அதன் நிமித்தம் வந்த பொறுப்புகள் மேலும் எனக்கான பயணங்களைத் தள்ளி வைத்திருந்தன.

ஆனால் இன்று இவற்றையெல்லாம் நிதானமாகப் பின்னோக்கிப் பார்த்தால், இத்தகைய பொறுப்புக்கள்/ தத்தளிப்புக்களுக்கிடையில் அன்றே பயணங்களைத் தொடங்கியிருக்கலாம் என்றே நினைக்கின்றேன். ஒரு ஆற்றுப்படுத்தலுக்காய் தற்செயலாகப் பயணமொன்றைத் தொடங்கிய எனக்குள் அன்றே 'பயணப்பூச்சி' நுழைந்துவிட்டது. ஆகவே பயணங்கள் இல்லாது ஒரு வருடத்தைக் கடந்துவிட்டால் எதையோ இழந்துவிட்டதான உணர்வை இந்தப் பூச்சி குடைந்து கொடுக்கத் தொடங்கிவிடும்.

சிலர் சொகுசான பயணங்களைச் செய்வார்கள். இன்னுஞ் சிலர் மிக எளிமையான (backpack) பயணங்களைத் தேர்ந்தெடுப்பார்கள். நான் புத்தரின் சொற்களை நம்புகின்றவன் என்பதால் மத்திய பாதையைத் (middle path) தேர்ந்தெடுப்பவன். ஆடம்பரமான பயணங்கள் எனக்கு உரித்தானதல்ல, ஆனால் அதேசமயம் ஒரு பயணத்தில் ஒன்று பிடித்துவிட்டால்அதை அனுபவிப்பதற்கு எதையும் செலவழிக்கும் மனோநிலையையும் வைத்திருப்பவன்.

தாய்லாந்து-கம்போடியா பயணத்தில் தெருக்கடைகளில் (5$,10$ இல்) சாப்பிட்டுக் கொண்டிருந்த நான் அருமையான மீன் உணவு கிடைக்கின்றது என்று அறிந்து ஓரிடத்தில் 75$ கொடுத்து சாப்பிட்டிருக்கின்றேன். கனடாவிற்குள் பயணிக்கும்போது 30,000 தீவுகள் இருக்கும் இடத்தில் , அதை வானத்தில் இருந்து பார்ப்பது அவ்வளவு அழகு என்று சொன்னார்கள். அதற்காய் helicopter tour இற்காய், அந்தப் பயணத்திற்கான இரண்டு நாள் செலவை விட, கூடக் கொடுத்து அந்த அழகை இரசித்திருக்கின்றேன். இவ்வாறு வாழ்வதைத்தான் ஒருவகையில் நான் நெருக்கம் கொள்ளும் minimalism கற்றுத் தந்திருக்கின்றது. வாழ்வை எளிமையான வாழுங்கள், ஆனால் உங்களுக்கு விருப்பமான ஒரு விடயத்துக்காய் எந்த எல்லைவரையும் போகலாம் என்பது அதன் சாராம்சம்.

இவ்வாறு பயணங்கள் மீது பெருவிருப்பு இருந்தாலும், 20 நாடுகளுக்கு மேலாகப் பயணித்தாலும், இந்தியா, இங்கிலாந்து, கியூபா போன்ற நாடுகளுக்கு நான்கைந்து முறைகளுக்கு மேலாகப் போயிருந்தாலும், என்னை முழுமையான ஒரு பயணியாக முன்வைக்க மாட்டேன். ஆனால் நான் வியந்து பார்க்கும் ஒரு பயணியாக 60 நாடுகளுக்கு மேலாகப் பயணித்துக் கொண்டிருக்கும் சுரேஷ் துரை கணபதிப்பிள்ளையைச் (https://www.facebook.com/suresh.kanapathypillai) சொல்வேன். நம்மவர்களில் அவர் அசலான backpacker Traveller. அவரளவுக்கு இவ்வளவு எளிமையாகவும், கடுமையான இடங்களை நோக்கியும் என்னால் பயணிக்க முடியாது என்பது அவரின் பயணங்கள் மீது அதிக வாஞ்சையை எனக்கு ஏற்படுத்துகின்றது.

இப்போது அவர் இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்குப் பயணித்துக் கொண்டிருக்கின்றார். அதுவும் சாதாரண பயணிகள் செல்லப் பிரியப்படாத குவாத்தமலா, எல்-சல்வடோ, நிக்கரகுவா போன்ற நாடுகளுக்குள் மிகக் குறைந்த செலவில் பயணங்களை தனித்துச் செய்து கொண்டிருக்கின்றார். அதைவிட என்னை வியக்க வைப்பது அவர் தினமும் அதை எழுத்தில் பதிவு செய்து கொண்டிருப்பதாகும்.

எனக்கு தினந்தோறும் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் இல்லையென்றாலும், பயணிக்கும்போது இயன்றளவு அன்றன்று நடக்கும் விடயங்களை எழுதி வைக்க முயல்வேன். ஏனெனில் இதையெல்லாம் பின்னர் எழுதலாம் என்று நினைத்தாலும், ஒருநாளிலேயே நிறைய விடயங்கள் நடந்திருக்கும். அடுத்த நாள் வரும்போது முதல்நாள் நடந்த சிறிய அழகான விடயங்கள் மறந்து போயிருப்பதை பயணங்களில் பார்த்திருக்கின்றேன். அப்படி என் முதல் மெக்ஸிக்கோப் பயணத்தில் குறிப்புகளாக எழுதியவை பின்னர் என் நாவலுக்கு மிகவும் உபயோகமாகவும் இருந்தது.

இவ்வாறு நாளாந்த பயண அனுபவங்களை சிறுகுறிப்புகளாக எழுதி வைப்பதே எவ்வளவு கடினமென்று எனக்குத் தெரியும். ஏனென்றால் ஒருநாளில் நிறைய விடயங்களைச் செய்து விடுதி வரும்போது அவ்வளவு அலுப்பாக இருக்கும். காலை எழும்பி எழுதலாம் என்றாலும் அன்றைய நாளுக்கான திட்டங்கள் முன்னே வந்து நிற்கும்.

இவ்வளவுக்கிடையிலும் தினமும் பயண நாட்குறிப்புக்களை அதுவும் விரிவாக சுரேஷ் எழுதிக் கொண்டிருப்பதற்கு நிறைய பொறுமையும், உழைப்பும் வேண்டியிருக்கும். சுரேஷ் இப்படி பயணக் குறிப்புகளை விரிவாக எழுதினாலும் அதை தொகுத்து நூலாக்கும் விருப்பு அவருக்கு இருந்ததில்லை. அது அவரது தெரிவு/விருப்பு என்றாலும், முகநூலைத்தாண்டி அவர் இதை ஏதேனும் ஒரு வலைப்பதிவிலோ/இணையத்தளத்திலோ சேகரம் செய்ய வைக்க வேண்டும்.

என் இருபதுகளில் இப்படி எதனையும் பயணங்கள் சார்ந்து வாசிக்கச் சாத்தியம் இருக்கவில்லை. இன்று இருபதுகளில் இருப்பவர்களுக்குப் பயணிப்பதற்கான எல்லைகள் விரிந்தாலும், அவர்களின் பயணங்கள் ஆழமற்றதாக இருப்பதையும் கண்டிருக்கின்றேன். எனவே இவ்வாறான பல்வேறு வகையான அனுபவங்களை வாசிக்கும்போது நாம் பயணங்கள் பற்றி புரிந்து வைத்திருப்பதை மீளாய்வு செய்து நம்மை நேர்த்தியாக்க உதவலாம்.

இப்படித்தான் பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட கம்ரன் (https://www.facebook.com/KamranOnBike) என்பவர் சைக்கிளில் ஆர்ஜெண்டீனாவில் இருந்து அலாஸ்கா வரை சென்றதைப் பின் தொடர்ந்திருக்கின்றேன். அதற்கு முன்னர் அவர் வசித்துக் கொண்டிருந்த ஜேர்மனியில் இருந்து பாகிஸ்தானுக்கு சைக்கிளில் சென்றிருக்கின்றார். அண்மையில் பாகிஸ்தானில் இருந்து பாலைவனங்களினூடாக ஆபிரிக்காக் கண்டத்தினூடு பயணித்து தென்னாபிரிக்காவின் கடைசி முனையை நேற்றுத் தொட்டிருந்தார்.

ஒரு கணம் நிதானித்து, யோசித்துப் பாருங்கள். இவையெல்லாம் எவ்வளவு பெரும் சாதனைகள். இதனூடாகக் கிடைக்கும் அனுபவத்துக்கு முன் எதுவுமே நிகர் ஆகாது இல்லையா? அந்த மனிதரையும் இந்தக்கணம் ஆதூரமாக தோளணைத்துக் கொள்கிறேன். பக்கத்தில் ஒரு கடை இருந்தால் கூட, நடந்து போகாது காரையோ, மோட்டார்சைக்கிளையோ எடுத்துச் செல்லும் கதிகதி உலகில் அல்லவா நாம் இருக்கின்றோம். அப்படியான உலகில் ஒருவர் வட- தென்னமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசியா (அரைவாசிப் பகுதி) என அனைத்து நிலப்பரப்புக்களையும் சைக்கிளால் மிக மெதுவாகத் தாண்டியிருக்கின்றார் என்று நினைக்கும்போது எவ்வளவு வியப்பாக இருக்கின்றது.

இப்படித்தான் எத்தனையோ மனிதர்கள் தமது பெரும் சாதனைகளை நிகழ்த்திவிட்டு அமைதியாக வாழ்ந்துவிட்டு இப்பூமியிலிருந்து நீங்கிவிடுகின்றனர். அவர்கள் இதையெல்லாம் அங்கீகாரத்துக்காகவோ, எவருக்கும் நிரூபிப்பதற்காகவோ செய்யவில்லை என்பதுதான் முக்கியமானது. ஆனால் நமக்கு இந்த சமூகவலைத்தளங்களில் கொஞ்சம் 'லைக்' கிடைக்கவில்லை என்றாலே -அதனால் எந்தப் பயனும் இல்லை என்றால் கூட- மனஞ்சுருங்கி விடுகின்றவர்களாக இருக்கின்றோம். ஒவ்வொரு சிறுசிறு செயலுக்கும் நாம் யாரினதோ அங்கீகாரத்துக்காக ஏங்கி நிற்பவர்களாக மாறிக் கொண்டிருக்கின்றோம்.

ஆகவே நாங்கள் கொஞ்சம் இந்த மெய்நிகர் உலகிலிருந்து வெளியே வந்து பார்க்கலாம். இந்த உலகில் தாங்க முடியாத தனிமை என்று எதுவுமே இல்லை. இந்தத் தனிமை தாங்க முடியாதது என்று மறைமுகமாக கற்பித்துக் கொண்டிருப்பதும் இந்த மெய்நிகர் சமூக ஊடகங்கள்தான். அதிலிருந்து தப்பித்து கொஞ்சம் பயணிக்கவோ, புத்தகங்களை விரித்து வாசிக்கவோ செய்தால் இன்னும் ஒரு உலகம் விரியும். அது அவ்வளவு அழகானதாக, நம் ஆழ்மனதின் விருப்புக்களோடு உரையாடும் ஒரு இனிய தோழமையாக மாறிவிடவும் கூடும்.

************

( Oct, 2024)