கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 125

Saturday, January 24, 2026


இந்தப் புதுவருடம் நல்லதொரு புனைவின் வாசிப்போடு தொடங்கியிருக்கின்றது. 'அத்தைக்கு மரணமில்லை' என்ற சீர்சேந்து முகோபாத்யாய் எழுதிய குறுநாவலே அது. மூன்று தலைமுறையின்  கதைகள் எனச் சொல்லப்பட்டாலும், இரண்டு தலைமுறைப் பெண்களான சோமலதா, வசந்தா ஆகியோரின் குரலில் எழுதப்பட்டிருக்கின்றது. அத்தையம்மா என்கின்ற மூத்த தலைமுறைப் பெண் எப்படி அடுத்த தலைமுறைப் பெண்களான சோமலதாவையும், வசந்தாவையும் பாதிக்கின்றனர் என்பதை வாசிக்கும்போது அறிகின்றோம்.

செல்வத்திலும் அதிகாரத்திலும் உயர்ந்த ஜமீன் குடும்பத்திற்குள் நிகழும் கதை. இந்த ஜமீன் குடும்ப ஆண்கள், அவர்களுக்கு இருக்கும் சொத்துக்களை தமது சொகுசான வாழ்வுக்காக அழித்து கிட்டத்தட்ட வறுமைக்குள் அக்குடும்பம் போகும் காலத்தில் சோமலதா என்கின்ற எளிய குடும்பப் பின்னணியில் வந்த பெண் எப்படி அக்குடும்பத்தைக் காப்பாற்றுகின்றாள் என்பதைவிட எனக்கு அந்தப் பெண்ணின் உள்மனது காமம். அதிகார வேட்கை, செல்வம் என்பவற்றை எப்படிக் கையாள்கின்றது என்பதை வாசிப்பதே இன்னும் சுவாரசியமாக இருந்தது. 
Uploaded Image


வசந்தா புதிய தலைமுறைப் பெண், அவள் முன்னைய தலைமுறைப் பெண்களின் வாழ்க்கை முறையைப் போல வாழப் போவதில்லை என்றாலும் அவளால் தனது தாயான சோமலதாவினதோ, அவளின் பெரியம்மாவினதோ வாழ்வினை ஏதோ ஒருவகையில் விளங்கிக் கொள்ள முடிகின்றது.

தனது அம்மாவின் மீது கல்யாணத்தின் பின் பித்துப் பிடித்தலைகின்ற ஓர் இளைஞனையும் வசந்தாவினால் புரிந்துகொள்ள முடிகின்றது. அந்த இளைஞன்  சோமலதாவுக்காக அவர்களின் வீட்டு வாசலில் தினம் வைக்கும் ஒற்றை ரோஜாப்பூவை வசந்தா ஒருநாள் தற்செயலாகக் காணும்போது அந்த இளைஞன் சிறுமியான வசந்தாவின் கைகளில் சிரித்துபடி கொடுத்துவிட்டுப் போகும்போது வசந்தா பின்னாளில் அதை நினைவு கொள்ளும்போது 'அது எவ்வளவு அற்புதமான நாள்' என்கின்றாள்.

அது, தனது தாயிற்கு எதிராக இன்னொரு முனையில் இருப்பதாக நினைக்கும் வசந்தா, தன் தாயைப் புரிந்து கொள்கின்ற இடம் மட்டுமின்றி, தனது தாயின் அந்த 'நிறைவேறாக் காதலை' முன்வைத்து, எவ்வித தீர்ப்புக்களையும் அம்மாவிற்கு வழங்காத ஒரு புதிய தலைமுறைப் பெண்ணாகவும் வசந்தா இருக்கின்றாள்.

இதை நன்றாகத் தமிழில் தி.சிறினிவாஸன் மொழிபெயர்ப்புச் செய்திருக்கின்றார். இது ஆங்கிலத்தில் The Aunt who wouldn't die' என்று வந்திருக்கின்றது. அந்த ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்தே தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கின்றது என நூலில் குறிப்பிடப்படுகின்றது. இங்குள்ள நூலகத்தில் ஆங்கிலப் பிரதியும் இருப்பதால் அதையும் சும்மா உசாவிப் பார்த்தேன். அதில் Boshon என்ற பெயரே வசந்தாவுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.

இது குறித்து யாரோ கேட்டபோது பெங்காலியில் Boshon எனக் குறிப்பிடப்படுவது வசந்தத்தைக் குறிப்பிடுவது. ஆகவே தமிழில் வசந்தா என மாற்றியதாக தமிழ் மொழிபெயர்ப்பாளர் சொல்லியிருக்கிறார். ஆனால் நூலை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கும்போது அதை அப்படியே தமிழாக்குவது நல்லதா அல்லது மூலமொழிக்கு 'அவ்வப்போது' செல்லவேண்டுமா என்று ஒரு கேள்வியும் இருக்கின்றது.

அதுபோலவே, இந்நூலின் கதாபாத்திரங்கள் பேசும்போது தமிழ்ப் பேச்சு வழக்கு பாவிக்கப்படுகின்றது. ஆனால் ஆங்கிலத்தில் நியமமொழி (Standard Language) பாவிக்கப்படுகின்றது. அதை ஒருவித slang இற்கு மாற்றுவது சரியா என்ற ஒரு கேள்வியும் இருக்கின்றது. இதை சிறினிவாஸனிடம் மட்டுமில்லை, தமிழாக்கம் செய்யும் அனைவருக்குமான  பொதுக்கேள்வியாக விட்டுவிடுகின்றேன்.

மற்றும்படி இதொரு நல்ல குறுநாவல் என்பதிலோ, நல்ல தமிழாக்கம் என்பதிலோ எவ்வித மாற்றுக் கருத்துமில்லை. முக்கியமாக தமிழில் நூற்றுக்கணக்கான பக்கங்களில் நாவல்களை எழுதுபவர்களும், தாங்கள் எழுதும் புனைவே சிறந்ததென்று முன்னுரைகளில்  முழங்குகின்றவர்களும் இவ்வாறான குறையப் பக்கங்களில் எழுதப்படும் புதினங்களை வாசிக்கவேண்டும் என்று பிரியப்படுகின்றேன்.

எவ்விதப் பிரகடனங்களுமின்றி ஒரு புதினம் நம் மனங்களுக்குள் நுழைந்து எதையோ செய்யும்போது அது ஒரு சிறந்த படைப்பாக மாறிவிடுகின்றது. இல்லாவிட்டால் 40 வருடங்கள் கழிந்தபின்னும் 'ஜே.ஜே.சில குறிப்புகளை'யோ அல்லது 30 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட 'அத்தைக்கு மரணமில்லை'யையோ இப்போது வாசிக்கும்போதும்  இந்தளவு வியந்து பேசிக் கொண்டிருக்க மாட்டோம்.

***

 

0 comments: