கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

அமைதிக்காக நடத்தல் (Walk for Peace)

Tuesday, January 27, 2026

 

எனது ஸென் ஆசிரியரான தாய், Engaged Buddism என்பதைத் தொடர்ந்து முன்வைத்தவர். ஆன்மிகத்தில் மட்டுமில்லை, அரசியல், தத்துவம் போன்றவற்றிலும் இந்த Engaged தன்மை இல்லாவிட்டால் அவை கடந்தகாலத்தில் உறைந்து போன நடைமுறைக்கு உதவாத  ஒன்றாகிவிடும். தொடர்ச்சியாக உரையாடல்களால் தன்னைப் புதுப்பிக்காத எந்த விடயமும் வாழ்க்கைக்குப் பயனற்றுப் போய்விடும்.

புத்தர் 35 வயதில் ஞானமடைந்தவர் என்று சொல்லப்படுகின்றது. அதன் பிறகு கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் இந்தப் பூமியில் வாழ்ந்திருக்கின்றார். புத்தரின் வாழ்க்கையை அவதானித்தால் அவர் வாழ்வில் 40 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக நடந்து கொண்டேயிருந்தவர். அப்படி தொடர்ச்சியாக ஓரிடத்தில் தங்காது நடந்து கொண்டிருந்ததால்தான் புத்தம் மிக எளிதாக இந்தியாவெங்கும் பரவியிருந்தது.  புத்தர் தான் மட்டுமில்லாது, தன்னைப் பின்பற்றியவர்களையும் ஓரிடத்தில் தங்காது தொடர்ந்து நடக்க வைத்துக் கொண்டிருந்தவர்.

உணவுக்காக மக்களிடையே இரத்தலும் (பிச்சை எடுப்பதும்), மிகக் குறைந்த உடைமைகளோடு வாழ்வதும் தொடக்கத்திலேயே புத்தரால் கற்பிக்கப்பட்டால், புத்தரைப் பின் தொடர்ந்தவர்களால் இப்படி நெடுங்காலத்துக்கு நடந்து கொண்டிருப்பது ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கவும் இல்லை.

Uploaded Image

மழைக்காலத்தில் மட்டும் தொடர்ந்து நடக்கமுடியாது என்பதால் அவர்கள் ஓரிடத்தில் தங்க வேண்டியிருந்தது. அதுவே பிற்காலத்தில் மழைக்கால retreat ஆக மாறியது. இன்றும் எனது ஆசிரியரான தாய் உள்ளிட்ட பல புத்தப் பிரிவுகளில் இந்த மழைக்கால retreat நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அமெரிக்க/ஐரோப்பா போன்ற புத்த மடலாயங்களில் இது winter retreat எனப் பெயர் சூட்டப்பட்டது.

*
இன்றைய ஐக்கிய அமெரிக்காவில் உள்நாட்டிலே நடைபெறும் அக்கிரமங்களும், இதே அமெரிக்கா பிறநாடுகளின் இறையாண்மையில் புகுந்து செய்யும் அட்டூழியங்களும் நாமனைவரும் அறிந்ததே. அதைப் பற்றி விரித்தெல்லாம் சொல்லத் தேவையில்லை. ஆனால் இவ்வாறான இருண்ட காலங்களில் நம்பிக்கை தரும் ஒருவிடயமாக இருபதுக்கு மேற்பட்ட பிக்குகள் டெக்ஸலில் இருந்து வாஷிங்டன் டிசிக்கு நடக்கத் தொடங்கியிருக்கின்றார்கள்.

அதற்கு 'அமைதிக்காக நடத்தல்' எனப் பெயரிட்டு நூற்று இருபது நாட்களாக நடந்து 2,300 மைல்களைக் கடப்பதாக இருக்கின்றார்கள். இப்போது எண்பது நாட்களின் மத்தியில் சென்று கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறு இந்தப் பிக்குகள் ஏற்கனவே இந்தியா உள்ளிட்ட பல இடங்களில் நடந்திருக்கின்றனர். இப்போது இப்படியொரு நடையைச் செய்யலாம் என்று டெக்ஸசில் இருக்கும் புத்த மடலாயத்தில் இருந்து ஒரு எண்ணத்தை ஒரு பிக்கு முன்வைத்தபோது தாய்லாந்து, வியட்னாம், இந்தியா என்று பல்வேறு நாடுகளிலிருந்து பிக்குகள் இணைந்து இப்போது சமாதானத்துக்காக நடந்து கொண்டிருக்கின்றார்கள்.

நடத்தல் என்பது எளிதாகத் தெரிந்தாலும், அவர்கள் நடப்பது எப்போதும் பாதுகாப்பான பாதைகள் அல்ல. அவர்களோடு அவர்கள் இந்தியாவில் நடந்தபோது மேற்கு வங்காளத்தில் கண்டெடுத்த தெரு நாயான 'அலோகா' வும் சேர்ந்து நடக்கின்றது.

இந்த நடத்தல் எளிது ஏன் இல்லை என்று சொல்கின்றேன் என்றால், ஒருநாளில் கிட்டத்தட்ட அவர்கள் 20-30 மைல்கள் நடக்க வேண்டும். இப்படி அவர்கள் நடந்தபோது 67வது நாளில் ஒரு பெரும் விபத்தைச் சந்தித்திருக்கின்றார்கள். இதனால் அப்படி நடந்து கொண்டிருந்த சில பிக்குகள் காயமடைந்திருக்கின்றார்கள். அதில் ஒருவரின் இடது கால் வெட்டி எடுக்குமளவுக்கு விபத்து ஆபத்தின் எல்லைக்குப் போயிருக்கின்றது.

எனினும் இந்தப் பிக்குகள் நடந்து கொண்டிருக்கின்றார்கள். தொடக்கத்தில் நடப்பது மட்டுமே குறிக்கோள் என்று நடந்து கொண்டிருந்தார்கள். சின்னதொரு RV அவசரத்தேவைக்காக சென்று கொண்டிருந்ததைத் தவிர, எவ்வித உதவிகளையும் எதிர்பார்த்து அவர்கள் நடக்கவில்லை. தொடக்க நாட்களில் இரவுகளில் யாரேனும் காணிகளில் அனுமதி கேட்டு கூடாரம் அமைத்து தங்கிக் கொள்வார்கள். பின்னர் காலைகளில் எழும்பி நடக்கத் தொடங்குவார்கள்.

இந்த 'அமைதிக்காக நடத்தல்' என்கின்ற விடயம்,  இந்தப் பிக்குகளே எதிர்பார்க்காத அளவுக்கு தீ போல அமெரிக்க மக்களிடையே பற்ற வைத்துக் கொண்டிருக்கின்றது. இப்போது அவர்களை ஆயிரக்கணக்கான மக்கள் செல்லும் பாதைகள் எங்கும் நின்று வரவேற்கின்றார்கள். அவர்களின் மதிய/இரவு பேச்சுக்களைக் கேட்க மணித்தியாலக் கணக்கில் இந்த மக்கள் காத்திருக்கின்றார்கள்.

எந்தப் பெரும் பின்புலமும் இல்லாது தொடங்கிய இந்தப் பிக்குகளின் நடை, இப்போது முகநூல், இன்ஸ்டாவில் ஒன்றை மில்லியனுக்கு மேற்பட்ட பின் தொடர்பவர்களால் நிரம்பி வழிகின்றது. அவர்கள் நேரடியாகக் கொடுக்கும் உரைகளைக் கேட்க, தினம் சமூக வலைத்தளங்களில் நான்காயிரம்/ஐயாயிரம் பேர்கள் (நானுட்பட) காத்துக் கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு விடிகாலையையும் Today is going to be my peaceful day என எழுதி அன்றைய பொழுதைத் தொடங்குங்கள் என்று இடைவிடாது சொல்கிறார்கள்.

*

இதுதான் ஆர்ப்பாட்டமில்லாத பெரும் மாற்றம். நீங்கள் உண்மையான நோக்கத்துக்காக சுயநலமில்லாது செயற்படும்போது மிகப்பெரும் மக்கள் திரளைக் கவர முடியும் என்பதற்கு இந்த அமைதிக்கான நடத்தல் மிகச் சிறந்த உதாரணம்.  பிக்குகளின் உரைகள் கூட மிக எளிய உரைகள்தான். ஆனால் அது மக்களின் ஆழ்மனதைத் தொடுகின்றது.  அதைக் கேட்டு மனம் நெகிழ்கிறார்கள், கண்ணீர் வடிக்கின்றார்கள்.

இந்தப் பிக்குகளோ, தொடர்ச்சியாக எங்களின் உரையை மட்டும் கேட்பதாகவோ அல்லது எங்கள் இந்த நடை 120 நாட்களின் முடிந்தவுடன் எல்லாவற்றையும் கைவிட்டு நீங்கள் போவதாகவோ இருக்கக் கூடாது. நீங்கள் தொடர்ச்சியாக உங்கள் மனதுக்கு அமைதியைக் கொடுங்கள். தினம் 15 நிமிடங்களாவது தியானம் செய்து உங்கள் நாளாந்தத்தை அழகுபடுத்துங்கள், எனத் தொடர்ந்து சொல்லியபடி இருக்கின்றார்கள்.

இந்த பிக்குகளைப் போலவே, அவர்களோடு தொடர்ந்து நடக்கும் அலோக்கா நாயும் பிரபல்யமடைந்து விட்டது. அதற்கென நிறைய இரசிகர் கூட்டங்கள்.  சமூக வலைத்தளங்களில் அலோக்காவுக்குவென புதிய பக்கங்களைத் தொடங்கியிருக்கின்றார்கள். சில நாட்களுக்கு முன் அலோக்கா தொடர்ச்சியாக நடந்த காரணத்தால், ஒரு அறுவைச் சிகிச்சைக்குப் போனபோது பலர் கவலையில் மூழ்குமளவுக்கு அலோக்கா இப்போது அமெரிக்காவில் அவ்வளாவு பிரபல்யம். இனி நிறைய நாய்களுக்கு இந்தப் பெயர் அமெரிக்காவில் வைக்கப்படும் என நினைக்கின்றேன்.

நான் இந்த பிக்குகளின் நடைபயணங்களில் உருகி நிற்கும் மனிதர்களையும் அவர்களின் கண்ணீரையும் காணொளிகளாகவும், புகைப்படங்களாகவும் பார்க்கும்போது, இந்த பிக்குகள் எத்தனை தூரம் மக்களின் மனதிற்குள் போயிருக்கின்றார்கள் என்பதை உணர்ந்திருக்கின்றேன். அப்போது எனக்குள் தோன்றிய எண்ணம், நான் பிறந்த நாட்டிலும் இதே பெளத்தந்தான் பெரும்பான்மையாக இருக்கின்றது. ஒருவகையில் நாங்கள் அந்தவகையில் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஆனால் ஒருபோதும் இப்படி நெகிழ்ச்சியாக உணர எங்கள் நாட்டு பெளத்தம் எனக்கு எதையும் தரவில்லையே,  எவ்வளவு துரதிஷ்டசாலிகள் என்றும் நினைத்துக் கொண்டேன்.

ஏன் இப்படியான ஒரு நடையை, இலங்கையில் வடக்கிலிருந்து தெற்கிலிருந்து நடந்தால் கூட 300 மைல்களைத் தாண்டாத சிறுதீவில் புத்த பிக்குகள் சமாதானத்துக்காக நடக்க முன்வரவில்லை என்றும் நினைத்தேன். ஒரு அரசியல்வாதியை/அரசியல் கட்சியை விட, இந்த ஆன்மீகத்துறவிகள் எமது நாட்டை ஒன்றாக்கும் விதைகளை எளிதாகத் தூவ முடியும் அல்லவா?

ஆனால் அவர்களில் பெரும்பாலானோர்க்கோ எந்த ஆலமரத்தில் ஒரு புது புத்த விகாரையை ஆக்கிரமித்துத் தொடங்கலாம் என்பதிலே நாளும் பொழுதும் கழிகிறது. அப்படி பலவந்தமாக வைக்கும் புத்த மடலாயங்களிலிருந்து முதலில் வெளியேறுவதே புத்தராகத்தான் இருப்பார் என்கின்ற சிறு ஞானமும் இல்லாத பிக்குகளாக அவர்களும் அவர்களைச் சார்ந்த பெளத்த பீடங்களும் இலங்கையில் இருப்பதுதான் துயரமானது.

அவர்களின் புத்தரையும், புத்தத்தையும் நாம் இப்போதைக்கு ஒருபக்கம் விட்டுவிடுவோம். நமக்கு Engaged Buddism சொல்லித் தந்த தாயிலிருந்து எண்ணற்ற ஸென் துறவிகளும், இப்போது அமெரிக்காவில் நடந்து கொண்டிருக்கும் இந்த புத்த பிக்குகளும் சமாதானத்துக்கும், நமது தனிவாழ்வுத் துயரங்களின் மீட்சிக்குமான நம்பிக்கையாக இருக்கின்றார்கள். அவர்களிடமிருந்து அமைதியைக் கற்றுக்கொள்வோம்.

***

புகைப்படம்: 'Walk for Peace'

 

0 comments: