கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 127

Monday, January 26, 2026

 

தீ பரவட்டும்!
***


பராசக்தி திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது எனக்கு ஈழத்தின் கடந்தகாலமே மனதுக்குள் ஓடியது.  1950களில் தமிழகத்தில் இந்தித் திணிப்பு நடந்தபோது, இலங்கையிலும் 1956 இல் தனிச் சிங்களத் திட்டம் கொண்டுவரப்பட்டது. எப்படி இந்தி தெரிந்தால்தான் தமிழர்க்கு அரசு வேலைகள் கிடைக்குமோ, அப்படியே இலங்கையிலும் 1956 தனிச் சிங்களச் சட்டத்தினால், சிங்களம் படித்தால்தான் தமிழர்க்கு அரசு உத்தியோகம் கிடைக்கும் என்ற நிலைமை வந்திருந்தது.

எப்படி இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு இருந்ததோ, 1940களில் இந்தி எழுத்துக்களை அழித்து அண்ணாத்துரை போன்றவர்கள் போராட்டத்தைத் தொடங்கியதுபோலவும், கருணாநிதி டாமியாபுரத்தை அழித்து கல்லாக்குடி என்று அதன் இன்னொரு கட்டத்தைத் தொடங்கியதுபோலவும், இலங்கையிலும் தமிழர் பிரதேசங்களில் பல்வேறு வகையில் சிங்களத் திணிப்புக்கு  எதிராக எதிர்ப்புக் காட்டப்பட்டது.

அதில் முதன்மையானது வாகன இலக்கத்தகடுகளில் சிங்கள 'சிறி' எழுத்துக்கள் தமிழர்கள் பகுதிகள் எங்கும் தார்பூசி அழிக்கப்பட்டது. இந்த சிங்கள் சிறிக்கு எதிராக மலையகத் தமிழர்களும் வடக்கு/கிழக்கு தமிழர்களைப் போல தீவிரமாக எதிர்ப்புக் காட்டியிருந்தமை  வரலாற்றில் மறக்காமல் குறிக்கப்பட வேண்டியது.

Uploaded Image
 
இவ்வாறு இலங்கையில் அனைத்து தமிழ்ச் சமூகமும் தனிச் சிங்களச் சட்டத்துக்கு எதிராக எதிர்ப்பைக் காட்டியது. இலங்கை பாராளுமன்றத்தில் அன்றைய தமிழ் அரசியல்வாதிகள் இதை எதிர்த்து சத்தியாக்கிரகம் இருந்தபோது  அவர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டு, சத்தியாக்கிரகத்தில் துரத்தியடிக்கப்பட்டிருந்தனர்.

1956 இல் தமிழ்ச் சிங்களத் திட்டத்தின் எதிர்ப்பின் காரணமாக 1957இல் இலங்கைப் பிரதமருக்கும் தமிழ்த் தரப்புக்கும் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டு அச்சட்டம் நீக்கப்படுவதாகச் சொல்லப்பட்டாலும், புத்தபிக்குகளாலும் பிறராலும் அது எதிர்க்கப்பட்டு தனிச்சிங்களச் சட்டம் அப்படியே உத்தியோகபூர்வமாக இருந்தது. இதன் நீட்சியில் 1958 இல் முதன் முதலாக தமிழர்க்கு எதிரான இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது.  அப்போது உத்தியோகபூர்வமாக  150 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் எனச் சொல்லப்பட்டாலும், அது ஆயிரத்தைத் தாண்டியது என்றும் சொல்கின்றார்கள்.

தமிழகத்தில் இந்தி எதிர்ப்போடு தனித் தமிழ்நாட்டுப் பிரிவினைக் கோஷம் 50களில் இருந்தபோதும், அண்ணாத்துரை 60களின் தொடக்கத்தில் அந்த பிரிவினைக் கோரிக்கையைக் கைவிடுகின்றார். மீண்டும் இந்தி 1960களில் திணிக்கப்பட்டபோது அது 1965 மாபெரும் பெரும் இந்தி எதிர்ப்பாக மாணவர்களிடையேயும், அரசியல் கட்சிகளிடையேயும் இருந்து எழுந்தது. அந்தத்தீயே இந்தப் பராசக்தியில் 'தீ பரவட்டும்' என உணர்ச்சிக் கொந்தளிப்பின் பகுதியானது.

*
அதன் பிறகு காலத்துக்காலம் தமிழகம் தமிழுக்காகவும், தன்னாட்சி உரிமைக்காகவும் பல தியாகங்களைச் செய்திருந்தாலும், அது ஒருபோதும் ஆயுதங்களை ஏந்தும் போராட்டங்களுக்குச் சென்றதில்லை (70களில் நக்சலைட் பாதிப்பில் தமிழகத்து சில பகுதிகளில் ஆயுதம் ஏந்தியதைத் தவிர).

ஆனால் இலங்கையிலோ எமது தமிழ் அரசியல்வாதிகள் 76ல் தனி நாட்டுக்கான தனித் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்துகின்றார்கள்.  அது  பின்னர் எப்படி முற்றுமுழுதான ஆயுதப்போராட்டத்துக்குப் போக 1983 தமிழர்கள் மீதான இனப்படுகொலை காரணமாயிற்று என்பது கடந்தகால வரலாறு.

நான் இலங்கை அரசியல்/ஆயுதப் போராட்டத்தைப் பற்றி பேசும்போது அநேகமாக, இந்தித் திணிப்பு/தனிச் சிங்களச் சட்டம், தனித் தமிழ்நாடு/ தனித் தமிழீழம் போன்ற ஒற்றுமையான புள்ளிகளில் அதிகம் கவனம் செலுத்துவதுண்டு. எப்படி தமிழ்நாடு தனிப் பிரிவினையைக் கைவிட்டும், தமிழ்மொழிக்கான உரிமையைக் கைவிடாது இருந்ததோ, கிட்டத்தட்ட அவர்கள் எதிரநோக்கிய மொழித் திணிப்பை எதிர்நோக்கிய நாம் ஏன் தொடக்கத்திலேயே தனித் தமிழீழப் பிரகடனத்தைக் கைவிட்டு தமிழ் மொழிக்கான உரிமையே அகிம்சையான போராட்டத்தை நோக்கித் திருப்பவில்லை என்பதைப் பற்றி அதிகம் யோசிப்பதுண்டு.

இவ்வளவு பெரும் சனத்தொகை இருக்கும் தமிழ்நாட்டவர்களாலேயே ஒரு தனிநாடு சாத்தியம் இல்லை என்கின்றபோது, அதைவிட மிகச் சிறிய நிலப்பரப்பிலும்,  குறைந்த சனத்தொகையிலும் இருந்த நாம் ஏன் தனித்தமிழீழக் கோரிக்கையை ஆரம்பத்திலே (70களிலேயே) கைவிடவில்லை என்று நினைப்பதுண்டு.

இது எமது பக்கத்தில் இருந்து வினாவவும் விமர்சிக்கவும் உரையாடவும் வேண்டிய புள்ளியாகும். இது  ஒருபுறமிருந்தாலும், இரண்டாவது கேள்வி நான் எங்கள் ஆயுதப்போராட்டத்தை முன்வைத்து அநேக இடங்களில் கேட்பது:

1983 இனப்படுகொலையின்போது எம்மிடையே தோன்றிய பல்வேறு இயக்கங்களை இந்தியா வளர்க்காமலும், அவர்களின் பயிற்சிக்குப்  பின் தளங்களையும் ஆயுதங்களையும் அள்ளி வழங்காமலும் இருந்திருந்தால் நாம் வேறு வழிகளில் சென்றிருக்கக்கூடுமா என்பதைப் பற்றியது.

இப்படி கேள்வி கேட்டுப் பார்க்கலாம். ஒருவேளை தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஆயுதப்போராட்டமாக மாறியிருந்தால், இந்திய அரசு அவர்களை எப்படி நசுக்கியிருக்கும். அல்லது தமிழ்நாட்டவர்கள் மத்திய அரசுக்கெதிராகப் போராடுகின்றோம் என்று அருகிலிருந்த பாகிஸ்தானிலோ சீனாவிலோ ஏன் இலங்கையிலோ ஆயுத உதவியைப் பெறுவதையும்/ பின் தளமாகப் பாவிப்பதையும் அறிந்திருந்தால், இந்திய மத்திய அரசு என்ன செய்திருக்கும்?

ஆனால் ஏன் இந்திய மத்திய அரசு நமது தமிழ் இயக்கங்கள் எல்லாவற்றுக்கும ஆயுதங்களையும், பயிற்சியையும் அளித்து ஆதரவு கொடுத்தது?  1983 தமிழர் படுகொலை நடந்து பல ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டபோது அப்படி தமிழர்கள் மீது அக்கறை இருந்திருந்தால் நேரடியாகவே இந்தியா தலையிட்டு ஒரு சுமுகமான தீர்வைக் கொடுத்திருக்க இந்திரா காந்தி தலைமையிலான அரசுக்கு எளிதில் முடிந்திருக்குமல்லவா?  கிழக்கு பாகிஸ்தானையே, பங்களாதேஷாக சுதந்திர நாடாக்க முடிந்த இந்தியாவிற்கு, சின்னஞ்சிறிய நாடான இலங்கை எம்மாத்திரம்?

எப்படியோ இந்தியா ஒருபோதும் இலங்கையில் தமிழர்க்கான தனிநாடு உருவாவதை விரும்பப்போவதில்லை. ஏன் விரும்பாது என்பதற்கான எளிதான காரணம் அவ்வாறு உருவாகினால் அது தமிழ்நாடு  தனியாகப் பிரிவதற்கும் எளிதான 'விஸா' கொடுப்பது போன்று ஆகிவிடும். அவ்வாறே பல்வேறு மொழிவாரி மாநிலங்கள் இந்தியாவில் பிரிவதற்கான எளிய வழியாக அந்த்ப் பாதை ஆகிவிடும். ஆக தமிழ் இயக்கங்களுக்கு இந்திய அரசு பயிற்சிக்கான பின் தளத்தையோ, ஆயுதங்களையோ கொடுத்தபோது ஒருபோதும் அது தனித்தமிழீழ எல்லைவரை அது விரும்பியிருக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

ஆக, இந்தியா, இலங்கை என்கின்ற நாட்டை (அப்போதைய ஜெயவர்த்தனா அமெரிக்கச் சார்ப்பு எடுத்தவர்) தனது கண்காணிப்புக்குள் வைத்திருக்கும் பொருட்டு ஒரு பகடைக்காயாக நமது இயக்கங்களைப் பாவித்திருக்கின்றது என்பது எல்லோர்க்கும் புரியக்கூடிய எளிய உண்மை.
 
இவ்வாறான உண்மைகளை விளங்கிக் கொண்டாலும், தமிழகத்தில் தீ பரவட்டும் என்று தொடங்கிய கொந்தளிப்பைக் காலத்தின் நீட்சியில் அவர்களே அது ஆயுதப்போராட்டத்துக்குப் போகாது கட்டுப்பாட்டுக்குள் வைத்திக்கவும் அவர்கள் முடிந்திருக்கின்றது என்பதுதான் ஈழத்தவர்களாகிய நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம். அதுமட்டுமில்லை இயன்றளவு தமிழ் மொழியையும், தமிழ் கலாசாரத்தையும் பேணக்கூடிய ஒர் மாநில அரசையும் இன்றளவும் அவர்களால் கைவிடாதிருக்க முடிகின்றது என்பதும் கவனிக்கத்தது.

நாமோ முப்பது வருடங்களுக்கு மேலாக ஆயுதப் போராட்டத்தை நடத்திப் பேரழிவைப் பார்த்துவிட்டோம். இவ்வளவு சின்னத் தீவில் எதற்கு ஓர் தனிநாடு வேண்டியிருந்தது என்று நாம் புலம்பெயர்ந்து வாழும் பெரும் நாடுகளைப் பார்க்கும்போது திகைத்து நிற்கின்றோம். சரி நம் தாய் மொழிக்காகத் தான் போராடினோம் என்றாலும், எங்ளைவிட நிலப்பரப்பிலும், சனத்தொகையிலும் இருக்கும் தமிழ்நாட்டில் தமிழ்மொழியை முன்வைத்து நடந்த போராட்டங்களிலாவது கற்றுக் கொண்டிருக்கலாம் (போர் முடிந்து 15 வருடங்களுக்குப் பிறகும் அதற்கான எந்த நம்பிக்கையையும் காணவில்லை என்பது இன்னும் துயரமானது).

இதைவிட கவலையானது இலங்கையில் வடக்கு கிழக்கு என்கின்ற இரண்டு மாகாண(மாநில) அரசுக்கள் ஒரு துரும்பைத்தானும் அசைக்கமுடியாத, எவ்வித அதிகாரங்களுமற்ற உதிரி அரசுக்களாக இருக்கின்றன என்பதுதான்.

நம்மால் சிறு தீக்குச்சியால் கூட மொழியை முன்வைத்து collective ஆக தீயைப் பற்ற வைக்க முடியாது இருக்கின்ற காரணத்தால்தான்,  இலங்கையில் சில தமிழ் அரசியல் கட்சிகளும், சில தமிழ் அரசியல்வாதிகளும் கோமாளிக் கூத்துக்களைக் காட்டி பிழைத்துக் கொண்டிருக்கின்றன.  அதற்குப் பெரும்பாலான புலம்பெயர்ந்தவர்களும்/புலம்பெயர் அமைப்புக்களும் பக்க வாத்தியங்களை வாசித்துக் கொண்டிருக்கின்றனர்.

***

0 comments: