கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பசுமையாய் வாழ்பவர்கள்

Wednesday, October 07, 2020

 சுமை எப்போதும் மனதுக்கு நிறைவளிப்பது. பச்சை வர்ணத்தினூடாக ஒரு செழிப்பைப் பார்க்கின்றோம். செழிப்பு என்பது முகிழ்தலோடு தொடர்புடையது. அதிலும் உள்ளம் வெறுமையெனும் தரிசால் மூடப்பட்டுக் கொண்டிருக்கும்போது பசுமை கிளர்த்தும் ஆனந்தம் சொல்லிமாளாது.


இவ்வாறு பசுமைக்கு நம் மனோநிலைகளை மாற்றிவிடக்கூடிய வல்லமை இருப்பினும், எனக்கு உரிய பருவம் பச்சை வர்ணம் மூடியிருக்கும் கோடை காலம் அல்ல.


எனது விருப்புக்குரியது பல்வேறு வர்ணங்கள் சிதறிப் பரவும் இலையுதிர்காலமாகும். ஆனால் இதைப்போல அது உற்சாகத்தைத் தரும் பருவமல்ல. Melancholyயான எல்லா உணர்வுகளும் கலந்து நகரும் காலமென அதைச் சொல்லலாம்.


அதற்காய் பசுமை விலத்தி நடப்பவன் என்றல்ல அர்த்தம். கனடா போன்ற நான்கு பருவங்கள் தெளிவாய் இருக்கும் நிலப்பரப்பில் ஒவ்வொரு காலமும் அழகுடையவைதான். அதிலும் மனது உள்ளே பிரச்சினைகளால் சிக்கி உழலும்வேளையில் விரைவில் வரும் அடுத்த பருவம்போல சிக்கல்களும் நம்மைவிட்டுப் போய்விடுமென மாறும் பருவங்களே நம்பிக்கை தரக்கூடியதாக இருக்கும்.



ன்றைய கொரோனாக் காலம் பலரை வீட்டுக்குள் முடக்கிவிட்டிருக்கின்றது. ஏற்கனவே பிரச்சினைகளில் உழன்றுகொண்டிருந்தவர்க்கு இன்னும் கொடுங்காலமாய் இது ஆகிக் கொண்டிருக்கின்றது. தொலைபேசி எடுத்துப் பேசும் நண்பர்கள் எனக்கு கைவிரல்கள் அளவுக்குள்ளேயே வருபவர்கள் என்றாலும், அவர்களில் பலரே துயர்களின் சுழல்பாதைகளில் சிக்கிக்கொண்டிருப்பதை அவர்களின் பேச்சினூடாக அறிந்துகொண்டிருக்கின்றேன். ஒரு கட்டத்துக்கு மேலேயே எதுவுமே செய்யமுடியாக் கையாலாகத்தனத்துடன் இந்தக் கதைகளைக் கேட்பதே பெரும் உபாதையாக மாறிக்கொண்டிருக்கிறது.



ஆகவே என்னை இதிலிருந்து விடுபடச் செய்வதற்காகவேனும் பசுமையை நோக்கி நடக்கவேண்டியிருக்கின்றது. சிலர் அப்படி பசுமைக்குள் நடக்கையில் சொற்கள் உருண்டு திரண்டு, கதைகளாகவும் கவிதைகளாகவும் உருவாகின்றதாகச் சொல்கின்றார்கள். ஆனால் எனக்கு இந்தக் கொடுங்காலத்தில் மனிதர்கள் இன்னுமின்னும் சிலந்திவலைபோல ஏன் தம் வாழ்க்கையைச் சிக்கலாக்கின்றனர்கள் என்றே நடக்கும்போது எண்ணங்கள் பரவித் தொடங்கும். மேலும் நான் மனவுளைச்சல்களில் உழன்றுகொண்டிருந்த பொழுதுகளில் என்னை அரவணத்துத் தேற்றியவர்களையும் நன்றியுடன் நினைத்துக் கொள்ளத் தோன்றுகிறது.



ஏனெனில் பகிரலை விட, செவிமடுத்தல் என்பது இன்னும் பொறுமை வேண்டிய ஒரு நிலை. அதிலும் ஒருவர் என்னால் துயர்களிலிருந்து விடுபடவே முடியாது என்று ஒன்றையே சொல்லிக் கொண்டிருக்கும்போது அதைக் கேட்டல் என்பது எளிதானதுமல்ல. ஆனால் அவ்வாறுதான் எல்லோரும் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு விடுபட்டு போகவேண்டியிருக்கின்றது. எல்லாப் பாதைகளும் அடைபட்டிருக்கின்றதென சுயபச்சாபத்தில் ஏங்கும் காலத்தில் ஒரு சிறு துண்டை எடுத்தெறிந்துவிடுவதன் மூலம் மோதித் திறக்கமுடியாக் கதவுகளெல்லாம் திறக்கப்பட்டிருக்கின்றது. பிறகு தெரிவதெல்லாம் சூரிய ஒளியில் பச்சையாகவும், பொன்னிறமாகவும் மிளிரும் பசுமை. பசுமை என்பது துளிர்ப்பு. புது வாழ்க்கையிற்கான முகையவிழ்ப்பு. வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதை அதிராமல் செப்பும் பெருஞ்சொல்.




திரும்பி பசுமைக்குள் நடந்து வந்துகொண்டிருக்கின்றேன். சட்டென்று ஒரு அதிசயம் நிகழ்ந்தால் போல் அது நடந்தேறுகிறது. நான் இன்னும் மூச்சை இழுக்கின்றேன். இன்னும்...இன்னும்!

 

.ஜேயிற்கு (கனகரட்ன) அவரின் இறுதிக்காலத்தில் சுவை இல்லாமற் போயிருக்கின்றது. எனக்கு இரண்டு வருடங்களின் மூக்கில் நிகழ்ந்த அறுவைச் சிகிச்சையின் பின் வாசங்களை அறவே உணரமுடியாது போயிருந்தது. எந்த நறுமணமோ, நாற்றமோ எதையும் அனுபவித்தறியமுடியாத ஒரு வெறுமையான நிலை அது. இந்தக் காலையில் நறுமணத்தை. நாற்றத்தை ஒரளவு மீண்டும் உணரத்தொடங்கினேன். இது எனது பசுமையின் ஒரு துளிர்ப்பு. மகிழ்ச்சியின் நறுமணம்.



வீடு திரும்பும் எனக்காய் ஒரு சிறுசெய்தி காத்திருக்கின்றது. 'உன்னோடு கதைக்கவேண்டும் போல இருக்கிறது. அழைக்க முடியுமா?'. நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் நான் தினம் கதைப்பவன் அல்ல. தொடக்கத்தில் நீ என்னோடு நாள்தோறும் கதைக்கவேண்டும் என்று கேட்டு நிறையச் சண்டைபிடித்து இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டவர்கள் என்பதால் விரும்பியபோது மட்டுமே இப்போது பேசுவோம்.



பேச்சு மூன்று மணித்தியாலத்துக்கு மேலே நீண்டபடி இருந்தது. கடந்தவருடப் பிறந்ததினத்தின்போது அவர் எழுதி அனுப்பியதை தற்செயலாகக் கண்டுபிடித்து, இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு எழுதியிருக்கின்றீர்களே என்று அவருக்கு அதை வாசித்துக் காட்டினேன். ஏனெனில் நாங்கள் கதைக்கும்போது நாயே, பேயே அதுவும் இயலாதபோது f wordம் சகஜமாகப் பேசும் ஒருவர் இப்படி உருகி எழுதியிருக்கின்றார் என்றால் சற்று ஆச்சரியந்தான்.



இப்படிப் பேசியபடி 2 மணித்தியாலங்களைக் கடந்தபோதுதான் அவர் கூறினார், 'இன்று மிக இயலாதபட்சத்தில் தற்கொலைக்கு முயன்றேன். எல்லாத் தயார்ப்படுத்தல்களும் முடிந்த நிலையில் வந்த தாயாரின் தொலைபேசி அழைப்பு என்னைக் காப்பாற்றியது' என்றார். இவ்வளவு நேரமும் அதன் சுவடே தெரியாமல் அவரால் என்னோடு கதைக்கமுடிந்ததென்பதில் எனக்குத் திகைப்பு என்றாலும் அவரை கடந்த சில வருடங்களாய் ஒரளவு அறிவேன். எப்போதும் அழுதுகொண்டிருப்பதில் அவருக்கு உடன்பாடில்லை. என்னைப் போன்றவர்களுக்கு ஒரு துயரம் வந்தால் அதிலிருந்து மீள நாட்களோ வாரங்களோ எடுப்பது போலன்றி, அவர் ஒருநாளுக்குளேயே தன்னை வேறொரு சூழலுக்கு மாற்றிக்கொள்ளும் அற்புதமான மனோநிலை கொண்டவர்.



இதையே அவருக்கும் சொன்னேன். ஒருநாளிலேயே இவ்வளவு துயரம் நடந்தபின்னும் இப்படி உங்களால் சிரிக்கமுடிகிறது என்பது உங்களுக்கு கிடைத்த அற்புதமான விடயம். எனக்கெல்லாம் அப்படியில்லை என்று கூறியபடி தற்கொலைக்கு முயன்ற ஒருவனின் கதையை அனுப்ப அவர் தன்குரலிலேயே வாசித்துக் காட்ட இந்த இரவு நமக்கு வேறொன்றாக மாறத்தொடங்கியது.


 

இறுதியில், 'நீங்கள் இன்று இல்லாமல் போயிருந்தால், நான் உங்கள் கடிதத்தை வாசித்துக் காட்டும் சந்தர்ப்பமோ அல்லது என் கதையை நீங்கள் வாசிக்க உங்கள் குரலில் நான் கேட்கும் அனுபவமோ நமக்குக் கிடைத்திருக்காது. நாமில்லாது போகும் காலம் இயற்கையாய் வரும்வரை சற்றுக் காத்திருப்பதில் என்ன குறைந்து விடப்போகிறது. பதின்மத்தில் இப்படி முயற்சித்த ஒருவன் இப்போது எதிர்முனையில் பேசிக் கொண்டிருக்கின்றான். அதுமட்டுமில்லை அதற்கான எல்லாக் காரணிகளோடும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒருவன் வாதைகளைப் புரிந்துகொள்ளாமல் எதையும் எளிதாக சொல்லமாட்டான் என்றேன்.




சுமை. இப்போது நம் மனம் முழுதும் பச்சையம். சூரியனின் ஒளியில் தகதகவென ஒளிரும் பொன்மஞ்சள் பசுமை.



ஆம் நாங்கள் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.



பசுமை கோடையின் பின் மறையும். இலைகள் அடுத்த பருவத்தில் வேறு வர்ணங்களை எடுக்கும். காற்றும் பெருமழையும் இலைகளை உதிர்த்துக் கொட்ட பனிக்காலம் வரும். பச்சையம் இழந்த மரங்கள் புதிய இலைகளுக்காய் காத்திருக்கும்.



மீண்டும் முகையவிழ்ப்பு. பசுமை. சுடரில் ஒளிர்தல். ஆனால் அது வேறொரு பிறப்பு. வேறொரு நாம்.



ஒரு வாழ்வை வாழ்ந்து பார்த்த இதத்தில் நாம் இலைகளாய் உதிர்ந்திருப்போம். சருகுகளாய் அடையாளமற்றுப் புதைந்து போயிருப்போம். அதுவரைக்கும் நாம் பசுமையில் வாழ்பவர்கள்.

...............................

(July 18, 2020)

Baby you're my good thing!

Tuesday, September 08, 2020

நேற்று மாலை Jazz & Blues festivalற்குப் போயிருந்தேன். பூங்காவிற்குள் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு திறந்தவெளி அரங்குகளில் பாடகர்கள் பாடிக்கொண்டிருந்தார்கள். ஓரிடத்தில் முரே போர்ட்டர்  (Murray Porter) பாடிக்கொண்டிருந்தார். 'காதல் அதற்கான வழியைக் கண்டுபிடிக்கும்' என்ற பாடல் ஒருபக்கம் கரையவைக்க, முன்னாள் காதலன்/காதலி/துணைகளுக்காய் பாடுவதாய் முரே சொல்லிப் பாடிய 'அப்படியே போய்விடு, திரும்பிவராதே' (Stay Gone) என்ற பாடல் நமக்குள் ஏதேனும் கோபமிருந்தால் அதையும் வழிந்தோடச் செய்யவைத்தது. முரே போர்ட்டர் பூர்வீகக்குடிகளின் Mohawk tribesஐச் சேர்ந்தவர். காதலை மட்டுமில்லாது 'நெடுஞ்சாலை-16' என்ற பாடலில்  நெடுஞ்சாலைகளில் காணாமற்போன பெண்களுக்காகவும், 'இந்த மன்னிப்புப் போதுமா?' என்று நமது அரசு இங்குள்ள பூர்வக்குடிகளுக்குச் செய்த அநியாயங்களுக்கு  'மன்னியுங்கள்' என்று கேட்பது மட்டும் போதுமா என்றும் சில அரசியல்மயமாக்கப்பட்ட பாடல்களையும் உருக்கமாகப் பாடினார். 


பாடல்களுக்கிடையில் பேசும்போது, யாராவது தமது கலையாக்கங்களில் working செய்கின்றோம் என்றால் ஏற்றுக்கொள்ளாதீர்கள். கலை என்பது playing. எம்மை நாம் மறந்து அதில் ஈடுபடுவது. அப்போதே அது அற்புதமான கலையாகின்றது எனவும் சொன்னார். கலையைச் செய்நேர்த்தியோடு ஒருவகை நுட்பமாக யாராலும் செய்துவிடமுடியும், ஆனால் அதை ஒரு விளையாட்டாக, கலை நிகழ்கின்றது என்பதை நாம் அறியாமல் அதை நிகழ்த்திக்காட்டுபவர்களே அரிய கலைஞர்களாக மிஞ்சுகின்றார்கள் என்பது காலம் நமக்குக் கற்றுத்தரும் பாடமாகும்.


அன்பே, என்னுடைய நல்லதொரு பொருள் நீ. உன்னை ஒருபோதும் போக விடப்போவதில்லை. நானொரு முரட்டு மனிதனாக இருந்தேன். எனக்கு இதயம் ஒரு கல்லாக இருந்தது. இப்போது எல்லாம் மாறிவிட்டதென 'Baby you're a good thing' என்ற பாடலை முரே பாடியபோது நாம் உற்சாகத்தின் நிலைக்கு வந்திருந்தோம். நிறையச் சோடிகள் அந்த அழகிய மாலையை நடனமாடி அழகாக்கத் தொடங்கியிருந்தனர். 


இன்று எழுத்துக்கு மட்டுமில்லை, இசை, ஓவியம், சிற்பம் போன்ற நுண்கலைகளுக்கும் இருக்கும் சிக்கல் என்னவென்றால், நம்மால் பொறுமையாக நின்று நிதானித்து இரசிக்கமுடியாமல் இருப்பதாகும். கலை என்பது உடனே எங்களுக்குள் தங்களை உள்ளிழுத்துக்கொள்ளாது. நிறையப் பரிசோதனை செய்யும், பரீட்சித்துப் பார்க்கும், சிலவேளை குழப்பமடையவும் செய்யும். பின்னர்தான் தனது கதவுகளைத் திறந்து உள்ளிழுத்துக்கொள்ளும். முதலில் சாதாரணமாகக் கேட்கத் தொடங்கிய முரேயின் இசையினுள் உள்ளிறங்கியபோது காதலியின் கரம்பற்றி நடப்பது போன்று இதமாய்த் தோன்றியது. மேலே  வானத்தில் நிலவும் அரைவாசியாக காலித்தபடி கூடவே நமக்குத் துணையிருந்தது.


நேற்றைய அழகிய மாலைக்கு நன்றி செலுத்த ஞாயிறு  காலை சைக்கிளை எடுத்து ஓடத்தொடங்கினேன். மெல்லிய குளிராக இருந்தாலும் உற்சாகமாக சைக்கிளை ஓடமுடிந்தது. இன்றைய காலை நமது தமிழாக்கள் நிதி சேகரிப்பிற்காய் ஏதோ ஒரு வருடாந்த நடைபவனி செய்துவிட்டு, பூங்காவில் Mr Local பாட்டுக்குச் சின்னப்பிள்ளைகளை விட்டு ஆடவைப்பதைப் புன்னகையுடன் கடந்துவந்தபோது முத்துராசா குமாரின் இந்தக் கவிதைதான் நிகழ்வுக்கு வந்தது.


டிஸ்கோ

.........................


இன்று இரவுதான்

கடைசிநாள் மண்டகப்படி

இறுதிப்படையலாக

டிஸ்கோ டான்ஸ் ஆரம்பித்துவிட்டது.

மேடைக்கு அருகிலேயே

சீரியல் பல்பு சாரத்தில் நிற்கிறார்

சங்கிலி கருப்புசாமி.

வீச்சரிவாளில் பல்புகள் எரியாமல் போக

ஆயுதமற்று நிற்கும் கருப்புவினால்

தெருவின் போர்த்திறனுக்கு 

இழுக்கென்று குதித்த படைவீரர்கள்

மைக்செட்காரனை வீழ்த்தக் கிளம்புகையில்

ஊமைவிழிகளிலிருந்து ஒலித்த

' ராத்திரி நேரத்துப்பூஜை' பாடலுக்கு

சினம் மறந்து ஆர்ப்பரிக்கத்தொடங்கினர்

நீண்ட காலம் கழித்து வெறுங்கைகளை

சொடக்கு முறித்த சங்கிலி கருப்பு

பாடலுக்கு முரட்டு விசிலாக அடித்தார்.

...............

(Sept, 2019)

மெக்ஸிக்கோ - செல்வரஞ்சினி

Thursday, September 03, 2020

வாழ்வியலின் எண்ணற்ற பிரச்சனைகளில் மனம் ஆழ்ந்து அமிழும் போதெல்லாம் காதலின் மெல்லுணர்வுகள் மட்டுமே கைதூக்கி கரைசேர்த்து விடுகின்றன. அல்லாடும் மனதை ஹீலியம் நிரப்பிய பலூனாக காற்று வெளியிடை அழைத்துச் செல்கின்றன.அப்படி ஒரு எண்ணப் பயணத்தை எனக்குள் விதைத்தவள் மெக்ஸிகோவின் அவள். படர்க்கையில் விளிக்கப் பட்டாலும் கூட படைப்பின் முன்னிலையில் விஸ்வரூபம் எடுப்பவள் அவள்தான்.


உலகில் ரசிப்புக்கு உரிய எதனையும் அதன் சோகத்தின் பக்கங்களோடும், எதிர்மறை எண்ணங்களோடும் எதிர்கொள்ளும் கதைசொல்லியான அவன் வளர்புப்பிராணிபோல வெறுமை ஒன்றையே கூட வைத்திருந்தாலும் கூட , பயணங்களிலும் வாசிப்பிலும் தன்னை மறந்தும் மறவாமலும் தேடலை விரும்புகின்றவன். அவனால் அதிகம் நேசிக்கப்பட்டவர்கள் ஆளுமையின் வசீகரமும், இயல்பாகவே மனஉறுதியும் கொண்ட இரு பெண்கள். இவர்களே தமது உரையாடல்களின் மூலம் வாசகருடன் நெருக்கமாகும் கதைமாந்தர்.


பெண்கள் மென்மையானவர்கள் மட்டுமல்ல, சந்தர்ப்பங்களைப் பொறுத்து எதிர்நிற்பவரை வீழ்த்தும் சாகசமும் வல்லமையும் படைத்தவர்கள் என்கிறார் இளங்கோ.உண்மைதான். இயற்கையையும், வாழ்க்கையையும் புரிந்து கொள்ளும் விதமும் , "இந்தக்_கணத்து_வாழ்வு_அழகானது" எனவே நிகழ்காலத்தில் வாழ்ந்து மகிழ் கொள்ளுங்கள் என்கிற அவர்களது அற்புதமான வெளிப்பாடும் ஒரு பெண்ணாக எனக்கும் பெருமிதத்தினை அளிக்கின்றன. அதே சமயம் இனிதான வாழ்வியல் இன்பங்களை எல்லாம் எமது ஆக்கிரமிப்பு எண்ணங்களாலும், உணர்வுகளினாலுமே சிக்கலாக்கிக் கொள்கிறோம் என்ற பேருண்மையானது வாசகருக்கு மனத்தெளிவினையும் தந்து நிற்பது சிறப்பானது.


பதினாறாவது பக்கத்தில் கடலில் அவளால் வீசப்பட்ட வலையில் மீனாகப் போனதென்னவோ கதைசொல்லியான ஆண்மகன்தான்.ஆனால் கதையில் ஆசிரியரது எழுத்து வன்மையெனும் மாயவலையில் சிக்கியது வாசகராக நானும்தான்.ஒரு ஆணால் எழுதப்பட்ட இந்த படைப்பு ஆணின் தன்முனைப்பையும், ஆதிக்கத்தையும் முன்னிறுத்துவதை விட பெண்மையின் கம்பீரத்தையும், கருணையையும் வெளிக்காட்டும் ஒன்றாக இருப்பது மனதுக்கு இதமானது. 


மெக்ஸிக்கோவின் இயற்கை வனப்பும், றொறண்டோ பனியின் கனதியும், தாயகத்தின் கடந்தகால கசப்பான நினைவுகளும், புத்தர்பெருமானின் தத்துவ முத்துக்களும், மாயன்களின் வாழ்க்கை வனப்பும் கதையின் பாதை எங்கும் ஆங்காங்கே சிதறிச் சிரித்துக் கொண்டிருக்கிறன. இது போதாதென்று புன்னகை தரும் இளங்கோவின் இதமான நகைச்சுவை மலர்களும், வரையறை தாண்டாத எழுத்தில் காதலின் காமரசங்களும் ஆங்காங்கே சிலிர்க்க வைக்கின்றன.காதல் என்பதே வாழ்வாக வேண்டுமா அன்றி வாழ்வின் பகுதியாக வேண்டுமா என்ற கேள்வி கதையின் இறுதியில் எழுவது தவிர்க்க முடியாதது.


கதையை வாசிக்கும் போது மனதைக் கவர்ந்த பல வரிகளுக்கு பென்சிலால் மெலிதாக அடிக்கோடு இட்டுக் கொண்டே வந்தேன். பக்கங்கள் செல்லச்செல்ல கோடுகளும் கூடிக்கொண்டே சென்றன. இறுதி அத்தியாயங்களை நெருங்கிய போது வலிதான எண்ணங்கள் தந்த திக்பிரமையுடன் இயல்பாகவே கோடிடுவதைக் கைகள் நிறுத்திக் கொண்டன. 


நிஜம் எது நிழல் எது என்ற மயக்கத்தில் மனது மரத்துப் போன அந்தக் கணங்களில். "நெஞ்சுக்குள்_பெய்திடும்_மாமழை..." என்ற பாடல் வரிகள் அலைகளாய் மனதில் ஆர்ப்பரிக்கத் தொடங்கின. இதன் அர்த்தம் என்னவென்று கதையை முதலில் இருந்து இறுதிவரை அர்ப்பணிப்போடும், உள்ளார்ந்த அன்பின் வழிநின்றும் வாசித்தவர்களுக்குப் புரியும். வாழ்த்துக்கள் இளங்கோ. அருமை.


அடிக்கோடிட்ட_அழகிய_வரிகளில்_மிகச்சில


தற்செயல்களின் அழகியல் தருணங்கள்......


காதல் ஒரு சாம்பல் பறவை........


இலையுதிர் காலமென்பது இலைகள் மலர்களாகும் இன்னொரு வசந்த காலம்.........


பனியில் உறைந்த நதி ஒன்று உறைநிலை விலத்தி வசந்தத்தில் பாயத் தொடங்குவது போல......


விழுவதும் எழுவதும் வாழ்க்கையில் இயல்பு.ஆனால் நான் ஒரே இடத்தில் விழுந்து விழுந்து கொண்டிருக்கிறேன்.......


ஒருகாதல் எப்படி முகிழ்கிறதோ அது போலவே எந்தப்புள்ளியில் அது முற்றுப் பெறுகிறது என்பதை எளிதாக அறிய முடியுமா........?


பிரியும் நாளோடு பிரிதல் நிகழ்ந்து முடிந்து விடுவதில்லை......


இந்த உலகில் அனைவராலும் கைவிடப்பட்டு இனி எதுவுமேயில்லை என்ற விரக்தியில் நிற்கும் ஒருவருக்கு ஒரேயொரு அணைப்பு போதும்.அது கொடுக்கும் கதகதப்பில் வாழ்வதற்கான நம்பிக்கை மீண்டும் துளிர்க்கும்........


எவ்வளவு காயங்கள் வாழ்வில் வந்தாலும் பெண்கள் இல்லாத வாழ்வு சாத்தியப்படாதென ஆசீர்வாதிக்கப் பட்டிருக்கிறேன்.........


எத்தனையோ மழைத்துளிகளுக்கிடையிலும் அவள் கூந்தலில் இருந்து இறங்கி என் நெஞ்சு நனைத்த துளியை எனக்குரிய துளியெனப் பத்திரப் படுத்திக் கொண்டேன்


மனம் நெய்யப் போகும் எல்லாப் புதிர்களில் இருந்தும் என்னைக் காப்பாற்றுபவளாக அவள் இருப்பாள்.....

........................................

வரலாற்றை வாசித்தல் - 02

Wednesday, August 26, 2020

லித்திய அரசியலை வாசித்துவிட்டு அடுத்து வாசிக்கத் தொடங்கியது ரெஜி டெப்ரேவின் 'சே குவேராவின் கொரில்லா யுத்தம்'. இது சேயின் இறுதிக்காலங்களில் பொலிவியாவில் அவரோடிருந்த ரெஜி டெப்ரோ எழுதிய நூலாகும். இதற்கு முன்னர்தான் சே (ரெஜியினது பங்களிப்பும் உண்டு) எழுதிய 'கெரில்லா யுத்தம்' என்ற நூல் வெளிவந்திருந்தது. அது பல கெரில்லா அமைப்புக்களுக்கான கையேடாகவும் இருந்திருக்கின்றது/இருக்கின்றது.  ஆனால் 'சேகுவாராவின் கெரில்லா யுத்தம்' என்கின்ற நூல் சேயினது கெரில்லா நடவடிக்கைகளை ஆய்வுபூர்வமாக அவரின் வீழ்ச்சிவரை அணுகிப்பார்க்கின்றது. 


ஒரு கெரில்லா யுத்தம் நூல்களின் வழியல்ல, அதன் புறக்காரணிகள்/அன்றைய நிலவரம் என்பவற்றிலேயே பெரிதும் தங்கியிருந்தென்பதைத் தெளிவாக இந்த நூலில் பார்க்க முடிகிறது. ஏன் சேயினது பல்வேறு குழுக்கள் பொலிவியாவில் பிடிபடப் பிடிபட சே இறுதிவரை ஒரு புரட்சி பொலிவியா/பெருவில் நடந்துவிடும் என்பது எப்படி நம்பினார் என்பது நமக்கு வியப்பாக இருக்கும். சிலவேளைகளில் மெக்ஸிக்கோவில் இருந்து கியூபாவில் 80இற்கு மேற்பட்டோரின் தரையிறக்கம் நிகழ்ந்தபோது பெரும்பாலானோர் கொல்லப்பட மிஞ்சிய 12 பேரோடு கியூபப் புரட்சி சாத்தியமானது போல பொலிவியா/பெருவிலும் ஒரு புரட்சி சாத்தியமென சே நினைத்தோரோ தெரியவில்லை. 

இன்று கடந்தகால வரலாற்றை நின்று பார்க்கும்போது இப்படி இருக்கலாம் அப்படி நடந்திருக்கலாம் என்று 'லாம்'களில் நாம் பேசமுடியுமே தவிர நடந்தவை எல்லாமே வரலாறுதான். அவற்றை நாம் மாற்றமுடியாது. ஒருவகையில் சேயைப் பார்த்தால் தோல்வியுற்ற புரட்சியாளன் என்ற விம்பங்கூட நமக்கு வரலாம். கியூபாப் புரட்சியைத் தவிர, கொங்கோ, பொலிவியா/பெருவில் மட்டுமல்ல, இடையில் ஆர்ஜெண்டீனாவில் சே முன்னின்று கட்டிய கெரில்லா இயக்கம் கூட முற்றுமுழுதாக அவர் காலத்திலேயே  துடைத்தெறிய‌ப்பட்டிருக்கின்றது. 


சிலவேளைகளில் காஸ்ரோ, ராவுல், கமீலிலோ போன்றோரே சிறந்த போராளித்தளபதிகள், சே அல்ல என்று முடிவுக்குக் கூட வரலாம். சேயை ஒரு அந்நியராக விலத்தி வைக்காது, தமக்குள் உள்வாங்கிக்கொண்டவர் காஸ்ரோ . ஆனால் பிறநாடுகளில் புரட்சியை நிகழ்த்தப் போன சேயை, கியூபாவைப் போல எவராலும் அரவணைத்துக் கொள்ள முடியவில்லை. பொலிவியாவில் சேயுக்கு, அங்கே ஏற்கனவே கட்டப்பட்டிருந்த பெருவிய இடதுசாரிகளோடு முரண் வருவதுதான், சேயின் மரணத்துக்கான முக்கிய காரணமாகக் கூடச் சொல்லப்பட்டிருக்கின்றது. 


அந்நியரைக் குறைத்து உள்நாட்டவர்களைக் அதிகம் சேர்த்தல் என்ற கொள்கையின்படி, பெருவிலிருந்து போராடவந்தவர்களைக் கூட சே  பொலிவியாவில் தவிர்க்கின்றார். ஆனால் பொலிவியா இடதுசாரிகள் சேயுடன் இணையாது பின்வாங்க அவரது நிலைமை இன்னும் மோசமாகின்றது.  இதே விலத்தல், கியூபப் புரட்சியின்போது சே தலைமையேற்கின்ற ஒருவராக மெக்ஸிக்கோவில் மாறும்போது தொடக்கத்தில் நிகழ்கின்றது. அந்நியர் ஒருவர் எப்படி நமக்குத் தலைமை தாங்குவது என்ற சிக்கல் அவர்களுக்கிடையில் வருகின்றது. அதை ஃபிடல்  எவ்வாறு இலாவகமாய் கையாண்டார் என்பதை சே புரிந்துவைத்திருந்தார் என்ற விடயத்தையும் ரெஜி இந்த நூலில் நமக்குச் சுட்டிக்காட்டியிருக்கின்றார். 


ஆனால் இவ்வாறு கியூபாப் புரட்சி தவிர, மிகுதி எல்லாவற்றிலும் தோற்ற ஒருவர் எப்படி கெரில்லாக்களுக்கும்/ புரட்சிகளுக்கும் முன்னுதாரணமாய் ஆனார் என்பதுதான் நாம் கேட்கவேண்டிய கேள்வியாகும். சே தான் நம்பியவற்றில் தெளிவாக இருந்தார். அதையே தன் கடைசிக்காலம்வரை பின் தொடர்ந்தவர். அதில் எந்த சமரசங்களுக்கும் இடங்கொடுக்கவில்லை. இயேசுவுக்கு ஒரு 'மீள்பிறப்பு' போல சே இறந்தபின்னும் இன்னுமின்னும் மீள்பிறப்புக்களைத் தனது தோல்வியினூடாக நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார். 


அதனால்தான் எங்கோ தொலைவிலிருந்த இலங்கையில் கூட நிகழ்ந்த புரட்சியை 'சேகுவேராப் புரட்சி' என்று பெயரிட்டு எழுபதுகளில் அழைத்திருக்கின்றார்கள். ஃபிடல் காஸ்ரோவுக்கு வரலாறு இரண்டாவது சந்தர்ப்பதை வழங்கியபோது அதைப் புரட்சியாக நிகழ்த்திக் காட்டி தன்னை காலத்தின் முன்னே அடையாளப்படுத்தினார். ஆனால் இலங்கையில் ரோகண விஜயவீராவுக்கு அதே இரண்டாவது சந்தர்ப்பத்தைக் காலம் வழங்கியபோது, அது மோசமாக நிகழ்ந்து, முடிவில் சுட்டுக் கொல்லப்படவும் செய்யப்பட்டிருந்தார். 


இப்போது ஏன் சேயை இங்கே நினைவுபடுத்துகின்றேன் என்றால், சே ஒரு இடதுசாரியாக இருந்தாலும், அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் தேசியவாதம் சார்ந்தும் உரையாடலை நிகழ்த்த வேண்டியிருந்தது.  புரட்சி என்கின்ற கனவைக் கைவிடாது அதை அவர் நியாயமாக எதிர்நோக்கியுமிருந்தார். ஆக சேயை அவரின் காலத்தில் வைத்தே நாம் பார்க்க வேண்டியிருக்கின்றது. அவரின் சரிவுகளிலிருந்தும் சே என்ற ஆளுமை விகாசித்துக் கொண்டிருக்கின்றது என்பதையும் அறிகின்றோம். 


எங்கள் ஈழத்திலும் பல்வேறு இயக்கங்கள்/புரட்சிகள்/கெரில்லாப் போர்முறைகள் என்ற பலது நிகழ்ந்து இலத்தீன் அமெரிக்க நாடுகளைப் போல ஒரு கொதிநிலையிலேயே இலங்கை எதையும் கற்றுக்கொள்ளாது இப்போதும் இருக்கின்றது. ஆனால் அதைவிட இந்த 'வரலாற்றை மறுவாசிப்பவர்களின்' தொல்லையோ இன்னுந் தாங்க முடியாதிருக்கின்றது. இன்றைய காலகட்டத்தை வைத்து இவர்கள்  கடந்தகாலத்தை  'மறுவாசிப்பு' செய்யும்போது நமக்குத் தலைசுற்றுகின்றது. நல்லவேளையாக வாசிப்பு' என்றொரு ஆசான் இருக்கின்றார் என்பதால் புத்தகங்களுக்குள் அடைக்கலம் புகுந்து நம்மால் தப்பிக்கமுடிகிறது.

................................

(Jun 12, 2020)

'காலம்' - இதழ் - 54

Tuesday, August 25, 2020

இந்தக் 'காலம்' இதழ் தெளிவத்தை ஜோசப்பினதும், எஸ்.வி.ராஜதுரையினதும் சிறப்பிதழாக வந்திருக்கின்றது. இதில் தெளிவத்தை ஜோசப் பற்றி மல்லியப்புசந்தி திலகர் எழுதிய கட்டுரையும், எஸ்.வி.ஆர் குறித்து வ.கீதா எழுதிய கட்டுரையும் மிக நேர்த்தியானவை. இலக்கியத்தில் ஆளுமைகள் குறித்து அறிய, இவ்வாறான சிறுசஞ்சிகை களையே தங்கியிருக்கவேண்டியிருக்கின்றது. பக்க நெருக்கடி இல்லாது, விரிவும் ஆழமாக சொல்ல விரும்பியதுக்கெல்லாம் இடம் கொடுப்பவை இவ்வாறான சஞ்சிகைகளே. அதுவும் இணையம் போன்றவை பரவலாக இல்லாத காலத்தில், வெகுசன சஞ்சிகைகளில் ஒதுக்கப்பட்டு அல்லது கவனிக்கவேபடாத படைப்பாளிகளை இவ்வாறான சிறுசஞ்சிகைகளே நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது.


புலம்பெயர் சூழலில் 30 வருடங்களாக, விரும்பியபோதுதான் முகிழ்வேன் என்பதற்கிணங்க காலம் வந்துகொண்டிருப்பது ஒரு முக்கியமான நிகழ்வெனச் சொல்லவேண்டும். இந்த 30 வருடங்களில் 54 இதழ்கள்தான் வந்திருக்கின்றன என்றால், வருடத்துக்கு 2 இதழ்கள் கூட வரவில்லை என்றுதான் கணக்கிடவேண்டும். ஆனால் அந்த இடைவெளி என்னைப் போன்ற வாசகர்களுக்கு உறுத்துவதில்லை. எப்போதும் ஒரு சஞ்சிகையை/இதழை சேமித்து வைப்பதற்கு எனக்கு அதில் ஒன்றிரண்டு விடயங்களாவது புதிதாய் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் கடமைக்கு என்று வருவதில் என்ன சிறப்பு இவற்றில் இருக்கப்போகின்றது. 


இதில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்ற ஷக்திக குமாரவின் சிங்களக் கதை (தமிழில் ரிஷான் ஷெரிப்) வெளிவந்திருக்கின்றது. இந்தக் கதையில் புத்தபிக்குகளின் பாலியல் வரட்சியைச் சொன்னதாலேயே ஷக்திக குமாரவை அரசு  இலங்கைச் சிறையில் அடைத்து வைத்திருப்பதும் நிகழ்ந்தது. போர் முடிந்தபின்னும் இன்னும் சுதந்திரமாக எதையும் எழுதும் நிலை, சிங்களர்வர்க்குக் கூட இல்லை என்பது இச்சம்பவத்தின் மூலம் நிரூபணமாகிறது. இந்தச் சிறுகதையை ஒரு முக்கிய படைப்பாகக் கூடச் சொல்லமுடியாது. ஆனால் சில பக்கங்களில் நீளும் இந்தக் கதையைக் கூடச் சகிக்க முடியாதுதான் இலங்கையில் மதம் சார்ந்த சகிப்புத்தன்மை இருக்கின்றது என்பதுதான் கவலைக்கிடமானது.


இந்த இதழில் வந்த கதைகளில் இமையத்தின் 'விஷப்பூச்சி' என்னைக் கவர்ந்த ஒன்று. ஆனால் இமையம் 'செல்லாத பணம்' நாவல், 'பெத்தவன்' குறுநாவல் உள்ளிட இன்னும் வேறு சில கதைகளிலும் இந்த ஒரே சம்பவத்தை ஏன் பல்வேறு வழிகளில் எழுதிப் பார்க்கின்றார் என்று யோசித்துப் பார்த்திருக்கின்றேன். சிலருக்கு சிலதைக் கடந்துபோக முடியாததுபோல, வீட்டைவிட்டு ஓடிப்போகும் பெண்கள் இமையத்துக்கு கதைகளுக்கான விதைகளைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர் போலும்.


கனடிய எழுத்தாளரான மார்க்கிரட் அட்வூட்டின் புதிய நாவலான 'The testaments' பற்றிய சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் வாசிப்பும் சுவாரசியமானது. இதற்கு முன்னர் அட்வூட் எழுதிய 'The Handmaid's Tale' இன் பின்னணியில் வைத்து ஒரு மதிப்புரையை இதற்கு எழுதியிருப்பது சிறப்பானது.  'The Handmaid's Tale' இங்கே மிகுந்த கவனம் பெற்று தொலைக்காட்சித் தொடராகவும் வந்து பரவலாகப் பேசப்பட்டிருக்கின்றது. அதேபோன்று மகாலிங்கம், மு.தளையசிங்கத்தோடான நினைவுகளைப் பகிர்ந்த ஒரு சிறு கட்டுரையையும் முக்கியமானது. மு.த எப்படி அன்றையகாலத்தில் ஆங்கிலப் புத்தகங்களை வெளிநாடுகளிலிருந்து பெற்றார் என்பதும், எவ்வாறு ஒவ்வொரு நூல்களிலும் தனது அடிக்குறிப்புக்களை எழுதுவார் என்பதும், இறுதியின் அவரது வீடு புங்குடுதீவில் கைவிடப்பட்டு அவரின் சேகரிப்பிலிருந்து புத்தகங்கள் சிதைந்ததோடு, அவரின் வீட்டில் குசினி மட்டும் மிச்சமாயிருக்க மிகுதி அனைத்தும் அழிந்து இருப்பதை நீண்டகாலங்களுக்குப் பிறகு அங்கே போய்ப் பார்க்கும் மகாலிங்கம் நமக்குக் குறிப்புகளாய்த் தருகின்றார். மு.தவின் எழுத்துக்களை வாசிக்கும் நமக்கு அன்று எப்படி மு.த இப்படியெல்லாம் விரிவாகப் புத்தகங்களை வாசித்திருப்பார் என்றெல்லாம் வியப்பு வரும். அதை நாம் கண்டடையக்கூடிய சிறுபுள்ளிகளை மகாலிங்கம் இந்தக் கட்டுரையில் தருகின்றார். இறுதியில் சரியாக அடையாப்படுத்தாது போர்க்காலங்களில் முன்னும், நடக்கும்போதும் இல்லாமற்போன எழுத்தாளர்களின் வாழ்வு இன்னும் அவலமானது என்ற குறிப்பு இதில் வரும். 


எனக்கு உடனே நினைவுக்கு இப்படி வந்தவர் சு.வி என அழைக்கப்பட்ட சு.வில்வரத்தினம். அவரின் வீடும், அவர் எழுதியவையும், சேகரித்த நூல்களும் இந்திய இராணுவகாலத்தில் அழிக்கப்பட்டிருக்கின்றது. பின்னர் ஒருபோதுமே ஊர் திரும்பமுடியாது திருகோணமலையில் காலமாகியும் விட்டவர் அவர். இவ்வாறு 95இல் இடம்பெயர்ந்து பின் திரும்பிவந்தபோது தன் சேகரத்திலிருந்த நூல்கள் அழிந்துபோனதை வடகோவை வரதராஜனும் குறிப்பிட்டிருக்கின்றார். அப்படி அவை இல்லாமற்போனதன்பின் பிறகு நூல்களை வாங்கவோ, சேகரிக்கவோ விருப்பு இல்லாது போய்விட்டது என்றும் அவர் சொல்லியிருக்கின்றார். இவ்வாறு எத்தனை எத்தனை அனுபவங்கள் முக்கியமாய் இறுதிப்போர் நடந்த முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பிவந்த படைப்பாளிகள் பலருக்கும் இருக்கக்கூடும்.


காலம் இவ்வாறு 30 வருடங்களில் 54 இதழ்களை நமக்குத் தந்ததோடு, இன்னொரு முக்கிய விடயத்தையும் சத்தமில்லாது புலம்பெயர்மண்ணில் இருந்துகொண்டு செய்திருக்கின்றது. அது இற்றைவரை 50இற்கும் மேலான நூல்களை வெளியிட்டிருக்கின்றது. அவரவர்கள் நான்கைந்து நூல்களை வெளியிட்டவுடனேயே பதிப்பாளர்கள் என்ற 'பெருமை'களுடன் உலாவரும்போது காலம் செய்திருப்பது முக்கியமான விடயமே.  அதிலும் மொழியாக்கம் தவிர்ந்து, ஈழம்/புலம்பெயர்ந்து இருப்பவர்களின் நூல்களையே காலம் வெளியிட்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தக்கது.


இப்போதைய கொடுங்காலத்தில் காலம் அமேஸனூடாகத் தனது 55வது இதழை வெளியிட்டிருக்கின்றது. மணி வேலுப்பிள்ளை அவர்கள் தமிழாக்கம் செய்திருக்கும் 10 உலகச் சிறுகதைகளை மட்டும் கொண்டு ஒரு சிறப்பிதழாக அது வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

..................

(Jun, 2020)

La Red Avispa ( Wasp Network)

Wednesday, August 12, 2020

 கியூபாப் புரட்சியின் பின் ஃபிடல் காஸ்ரோவை அமெரிக்கா கொலை செய்த முயற்சிகள் நூற்றுக்கணக்கானவை. அதேவேளை அமெரிக்க வேறுவழிகளில் கியூபாவுக்குள் நுழைய முயன்றும் கொண்டிருந்தது. Wasp Network  அமெரிக்காவும் கியூபாவும் 90களில் தங்களுக்குள் செய்த 'திருவிளையாடல்'களின் ஒருமுகத்தைக் காட்டுகின்றது. 


சோவியத்து ஒன்றியத்தின் உடைவின்பின் கியூபாவின் பொருளாதாரம்  சரிந்துகொண்டிருந்தபோது,முற்று முழுதாகச் சுற்றுலாத் துறையில் கியூபா தங்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே அமெரிக்க அதன் சுற்றுலாத் துறையில் கை வைக்கத் தொடங்கியது. ஒருபக்கம் அமெரிக்காவிலிருந்த கியூபன்களை ஆட்சியைக் கவிழ்க்க உசிப்பேற்றியதுபோல, கியூபாவிலிருக்கும் ஹொட்டலுக்கும் குண்டுகளை வைக்க அவர்களைக் கொண்டு முயற்சிக்கின்றது.  1997இல் கியூபாவின் ஹொட்டல் ஒன்றில் இப்படிக் குண்டு வெடித்தும் இருக்கிறது. இவ்வாறு அமெரிக்க கியூபாவுக்குள் உள்நுழைய முயற்சித்தபோது, கியூபாவும் அமெரிக்காவிற்குள் ஊடுருவி உளவுபார்க்கத் தொடங்கியது.


இந்தப் படம் அவ்வாறு கியூபா, அமெரிக்காவுக்குள் நுழையவிட்ட உளவாளிகளின் கதையை முக்கியப்படுத்துகின்றது. அவர்களின் மூலமே கியூபாவில் நடக்க இருந்த பல்வேறு  தாக்குதல் முயற்சிகள் தடுக்கப்படுகின்றன. அதேசமயம் ஒருமுறை கியூபா, FBIயை தங்கள் நாட்டுக்குள் அழைத்து இவ்வாறான விடயங்கள் அமெரிக்க மண்ணில் தமக்கெதிராக நடந்துகொண்டிருக்கின்றன என விபரமாய் தகவல்/சாட்சியங்களோடு முன்வைக்கின்றது. FBI சும்மாவிடுமா?  தங்கள் நாட்டுக்குள் நுழைந்த கியூப உளவாளிகளை வேட்டையாடத் தொடங்குகின்றது. இறுதியில் பலர் பிடிபடுகின்றனர். பிடிபட்டவர்கள் கியூபாவிற்கு விசுவாசமாக இருந்து, கொடுக்கப்பட்ட 15 வருடங்களுக்கு மேலான தண்டனைகளை அனுபவிக்கின்றனர்.


90களில் இவ்வாறு நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு  எடுக்கப்பட்ட திரைப்படம் இதுவாகும். 1998இல் 'Cuban/Miami Five' என்ற வழக்கு பிரபல்யமான ஒன்று. முதலில் கியூபா இதை மறுத்தாலும்  தாங்கள் அமெரிக்காவையோ அல்லது FBIயையோ உளவு பார்க்க இவர்களை அனுப்பவில்லை, தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கியூப குழுக்களை உளவுபார்க்கத்தான் அனுப்பினோம் என கியூபா பின்னர் 2001 இல் அதை ஒப்புக்கொண்டது. இத்திரைப்படத்தில் காஸ்ரோவிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்ட ஒரு சிறு காணொளியும் இணைக்கப்பட்டிருக்கும். அமெரிக்கா கியூபா உள்ளிட்ட எத்தனையோ நாடுகளில் உளவுபார்க்க ஆட்களை அனுப்பும்போது நாங்கள் செய்வதும் நியாயமென உணர்ச்சிபூர்வமாக காஸ்ரோ அதில் பேசியிருப்பார். 


நிறையச் சம்பவங்களை சொல்லவேண்டும் என்ற எத்தனிப்பில் இந்தத் திரைப்படம், சிறந்த நடிகர்களை கொண்டிருந்தாலும் நம் உணர்வுகளுக்கு அவ்வளவு நெருக்கமாய் வரவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். எனினும் உளவாளிகளுக்கும் ஒரு வாழ்க்கையிருக்கும், உளவின் நிமித்தம் எத்தனையோ விடயங்களை இழக்கவேண்டியிருக்கும் என்பதற்காக இதைப் பார்க்கலாம்.


கியூபாவிலிருந்து  கிளைடரை எடுத்துக்கொண்டு ஒருவர் அமெரிக்காவுக்குப் பறந்துவிடும் ஒரு காட்சி இதில் வரும். அவர் கியூப உளவாளியாகத்தான் அங்கு அனுப்பப்படுகின்றார் என்றாலும் அவரின் மனைவி, பிள்ளைக்குக் கூட இந்தச் செய்தி தெரியாது வைக்கப்பட்டிருக்கும். இதன் நிமித்தம் அவரின் மனைவி/பிள்ளை 'துரோகி'யாக கியூப மக்களால் வெறுக்கப்படுவார்கள். பிறகு அந்தக் குடும்பம் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு உளவாளியோடு வாழத்தொடங்கினாலும், கொஞ்சக் காலத்தில் அந்த ஆணை  FBI பிடித்துவிட திரும்பவும் இந்தக் குடும்பம் அநாதரவாகத் தனித்துவிடப்படும். இவ்வாறாக உளவாளிகளுக்கு அப்பாலும் பலரின் வாழ்க்கை உளவின் நிமித்தம் பாதிக்கப்படுகின்றது என்பதை இந்தத் திரைப்படம் காட்டுவது முக்கியமானது. 


அதிலும் இப்படி உளவாளியாக வரும் இன்னொருவர் அமெரிக்காவில் ஒரு பெண்ணைத் திருமணம் கூடச் செய்துவிடுவார். அவர் கியூபாவுக்கு தன் வேலை முடிந்துபோனதன் பிறகே இந்தப் பெண்ணுக்கு அவர் ஒரு உளவாளி என்பதே தெரியவரும். இப்படி ஒரு சம்பவம் நடந்து அந்தப் பெண் கியூபநாட்டுக்கு எதிராக வழக்குக் கூடப் போட்டிருக்கின்றார். இதன் நிமித்தம், தீர்ப்பில் கொடுக்கவேண்டும் எனச் சொல்லப்பட்ட மில்லியன் நஷ்டஈட்டின் ஒரு பகுதியை அந்தப் பெண்ணுக்கு கியூபா  வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

....................

(Jun 22, 2020)

மெக்ஸிக்கோ - இந்து சித்ரா

Wednesday, July 29, 2020


ஒரு கிழமை விடுமுறை. வழமையான நாட்களில் செய்யமுடியா வேலைகளைச்செய்து முடிக்கவேண்டிய பட்டியல் இருந்தும், மனம் ஏனோ "வேலை நாட்களிலும் ஓட்டம், இப்போ விடுமுறையிலுமா?" எனக்கேள்வி கேட்டது. இதைவிட்டால் ஆறுதலாக இந்த வேலையை முடிக்க முடியாது.மனமும் மூளையும் ஒரு மையப்புள்ளியில் கையை குலுக்கிக்கொண்டன.

பாதிநாள் வேலைக்காக, பாதிநாள் எனக்காகின.குணா கவியழகன் எமக்காய் அள்ளிவந்த புத்தகங்களின்முன் ஒரு தேடுதல்.எந்தப் புத்தகத்தை தேர்ந்தெடுப்பது என்பதில் மீண்டும் மூளைக்கும் மனத்திற்குமான பரிமாற்றம்.

இந்த நிலையை சுலபமாக்கியது என் கணவரின், "மெக்ஸிக்கோ நாவலை படித்துப்பாரும் உமக்கு பிடிக்கும்"என்ற பரிந்துரை.

அந்த நாவலுடன் சூரிய ஒளி என்னைச்சுட பல்கனியில் இதமாய் அமர்ந்தேன்.சுட்டுச் சென்ற காற்றையும் குருவிகளின் கீச்சு கீச்சு சத்தங்களையும் உள்வாங்கி,கண்களால் பச்சை மரங்களை ஒத்திக்கொண்டு இளங்கோ எழுதிய "மெக்ஸிக்கோ" எனும் நாவலின் பக்கங்களை விரித்தேன்.

என் முன்னே அழகாய் விரிந்தது அந்நகரம், காதலின் கொஞ்சலோடு. அந்த இரவுப் பொழுதுகளினுள் கலந்திருக்கின்ற கலாசார வடிவங்களைக்காதலில் தோய்த்து அந்த நேரத்திற்கு இன்னும் அழகு சேர்த்திருந்தார்.

இந்த நாட்டின் பெயர் கேட்ட மாத்திரத்தே இளங்கோ சொன்னது போல போதைவஸ்து ,மாஃபியா கூட்டம் ,துப்பாக்கி சூடுகள் இவைதான் அந்த மண்ணிற்கான பேசும் பொருளாயின. எந்த ஒரு நாடும் சகதியுடுத்திய பக்கங்களை கொண்டிருந்தாலும் அந்தந்த நாட்டிற்குரிய செழுமையையும் கொண்டுதான் இருக்கின்றன.

அதனால்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்துவம் உள்ளது போல, நாடுகளும் தனித்துவம் கொண்டிருப்பது புவியியல் சிறப்பு.அதனை இளங்கோ பல இடங்களில் எம் கைபிடித்து ,பேனா கொண்டு ஒரு சுற்றுலா கூட்டிச்செல்கின்றார்.

மெக்ஸிக்கோ எனக்கு தெரியாத இடம். ஆனால்,அவர் கதை பேசிச்செல்கின்ற விதம் என் கற்பனையில் அதற்கு ஒரு வடிவம் தீட்டி என்கூடவே வருகின்றது.

சில நாவல்களுடன் எம்மை வலிந்து இணைக்க வேண்டியிருக்கும், இடையிடையே அந்த கதையைவிட்டு விலகியும் சென்றுவிடுவோம். ஆனால் இந்த நாவலெனும் ஆற்றுக்குள் ஒரடி வைத்தேன்,என்னை இழுத்து மூழ்க வைத்தது.

மெக்ஸிக்கோவைப் பற்றிச்சொன்னால் ஃபிரீடாவை பற்றிச் சொல்லாமல் நகரமுடியாது.அதிசயமான பிறப்புக்களில் அவளும் ஒருத்தி.பேசப்படவேண்டிய பெண் அவள்.

நாவலின் நகர்வு என் மனதில் ஒரு முடிவை பின்ன தொடங்கியது. ஆனால் அந்த முடிவின் மாற்றம் நினைத்தே பார்த்திராத ஒரு வளைவுக்குள் புகுந்து முடிகிறது. அதுவே இந்நாவலை வேறு ஓரிடத்தில் தூக்கி நிற்க வைத்துவிட்டது. என் மனதிற்கு பிடித்த நாவல்களுக்குள் இதுவும் நுழைந்து கொள்கிறது.

மெக்ஸிக்கோ நகரை பார்க்கும் ஆசையையும் தூண்டிவிட்டு முடிந்து போகிறது இக்கதை. எனது விடுமுறையை இனிதாக்கிய, இந்த நற்படைப்பைத் தந்த இளங்கோவிற்கு நெஞ்சார்ந்த நன்றியும், வாழ்த்துக்களும்.

(via Yogakumari Lingeswaran)
Jun 11, 2020

சதுரங்கக் குதிரையும், புனலும் மணலும்..

Monday, July 13, 2020

1.

ன் செவ்வியல் படைப்புக்களை வாசிக்கவேண்டுமென்ற இடாலோ கால்வினோவின் பிரபல்யமான கட்டுரையொன்று இருக்கிறது. தமிழில் நிறைய புதினங்கள் 'கிளாசிக்' என்ற அடையாளத்தோடு அண்மையில் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. காலம் செல்லச் செல்ல செம்மது நன்கு சுவையேறுவதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் தமிழ்ச்சூழலில் பல படைப்புக்கள் காலத்தால் முற்பட்டது என்ற ஒரே காரணத்தால் மட்டுமே அவை செவ்வியல்  வடிவத்தை அடைந்துவிடுவது துரதிஷ்டவசமானது. உதாரணத்துக்கு எஸ்.பொ எழுதிய 'சடங்கை' நான் ஒரு கிளாசிக்காக கொள்வேன். ஆனால் 'தீ'யை செவ்வியல் என்ற அடையாளத்தைக் கொடுத்து வெளியிடும்போது அதை எஸ்.பொவை என் ஆசானாகக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளத் தயங்குவேன். இன்னும் கொஞ்சக் காலம் சென்றவுடன் அவரின் மோசமான நாவலாக நான் கருதுகின்ற 'மாயினி'யையும் ஏதேனும் பதிப்பகம் 'கிளாசிக்' வரிசையில் வெளியிட்டுவிடுவார்களோ என்று சற்று அச்சமாக இருக்கிறது.

அவ்வாறுதான் ஆ.மாதவனின் 'கிருஷ்ண பருந்தை' ஒரு கிளாசிக்காகக் கொள்வதில் தயக்கம் ஏதுமில்லை. அதேவேளை அவரின் 'புனலும் மணலும்' நாவலை கிளாஸிக் வரிசையில் வெளிவந்திருப்பதைக் கண்டு சற்று ஆச்சரியமாக இருந்தது. அங்குசாமி என்ற மூப்பனைப் பற்றிய கதை கோட்டையாற்றுப் பின்னணியில் வைத்துச் சொல்லப்படுகிறது. ஆற்றில் மணல் அள்ளி இன்று பல ஆறுகளில் நீர்வரத்து இல்லாமலும், ஒற்றையடிப்பாதையைப் போல 'சேணமிழுத்து'க்கொள்வதையும் கண்டுவருகின்றோம். இதற்கான ஒரு புள்ளியை இந்த புனலும் மணலும் தொட்டுச் செல்வதை ஏற்றுக்கொள்ளலாம்.
இன்று யானைக்கு அன்னாசிக்குள் வெடிவைத்து கொல்கின்ற 'நாகரிகமான' மனிதர்களாய் நாம் மாறியிருக்கையில், நீராடக்கொண்டுவந்த ஆனை, மணல் தூறப்பட்ட ஆற்றில் சிக்கித்திணறுகையில் அதைக் காப்பாற்ற தன்னுயிரையே அசட்டைசெய்து காப்பாற்றத் துடிக்கின்ற ஒரு மூப்பனாக அங்குசாமியை அங்குபார்க்கிறோம்.

இந்த நாவலின் சிக்கல் என்னவென்றால் அங்குசாமி ஏற்கனவே குழந்தை இருக்கும் தங்கம்மைத் திருமணம் செய்கின்றார். தங்கம்மையும் ஒருகட்டத்தில் நோயில் இறந்துவிட, மிகுந்த வன்மத்தை step daughterஆன பங்கியின் மீது காட்டுகிறார். இதை ஆ.மாதவன் ஒரு பாத்திரத்தின் பார்வையினூடாகக் காட்டியிருந்தார் என்றால்கூட ஒருவகையில் இப்படி மனிதர்கள் இல்லையா எனக் கொஞ்சமாவது ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் குரூபி, உருண்டைக்கண்கள், கிழிந்த உதடு, கறுப்பி என்று பல்வேறு இடங்களில் பங்கி சுட்டிக்காட்டப்படுகின்றார். அதுமட்டுமில்லாது பங்கியின் தாயான தங்கம்மைகூட தனது மகளை அவலட்சணமானவள் என்று எண்ணுவதாக படர்க்கையில் நின்று எழுதப்பட்டிருக்கின்றது. ஆக ஒருவரின் அங்கலட்சணங்களை பொதுப்புத்தியாக நின்று கதாசிரியரும் தன் பங்கிற்கு விபரிக்கும்போதுதான் நமக்குச் சிக்கல் வருகின்றது.

இவ்வாறு தன் மீது வெறுப்பையும், வஞ்சினத்தையும் அங்குசாமி உமிழ்ந்தாலும், பங்கி 'அப்பா' என்று அன்பொழுகவே மாடசாமியை அழைக்கின்றார். பல்வேறு உதவிகளை அவருக்கு நோயும்/வயதும் ஏறும் காலங்களில் செய்து கவனித்தும் கொள்கிறார். இந்த நாவலை வாசித்து முடித்தபின்னும் மறக்கமுடியாதிருப்பது மனிதர்களின் இருண்டபக்கங்களை இருட்டாகவே, நம்மால் புரிந்து கொள்ளமுடியாததாகவே நாவலை ஆ.மாதவன் முடித்திருப்பதால் என்பதால் போல் தோன்றியது. அங்குசாமி என்கின்ற மூப்பன் ஏன் தனது மனைவியின் மகளான பங்கியை அப்படி வெறுக்கிறார்.

அதேவேளை அவரின் வாழ்வில் பிறகு வந்துசேரும் ஓரு பதின்மனான தாமோதரனை அதற்கு எதிர்மாறாக ஒரு மகனைப்போல அவ்வளவு நேசிக்கிறார் என்பதே மனிதமனங்களின் ஆழங்களுக்குள் நாம் போய்ப்பார்ப்பதற்கான ஒரு சிறுபுள்ளியை ஆ.மாதவன் முன்வைக்கின்றார் என நினைக்கிறேன்.
ஒவ்வொரு மனிதரும் நல்லவராகவும் கெட்டவராகவும் இரண்டு எதிர்மைகளையும் தனக்குள் கொண்டிருக்கின்றார் என்பதை நாம் இந்நாவலினூடாக அறிந்து கொள்கின்றோம். ஒருவகையில் இது Yin-Yang ஐப் போன்றது. நாம் இந்த இரண்டில் ஒன்றை மட்டுந் தேர்ந்தெடுத்துக் கொள்ளமுடியாது, அதேவேளை ஏதோ ஒன்று சற்று மேலோங்கி வரும் காலத்தில் அதன் இயல்பாக நாம் அடையாளப்படுத்தப்பட்டு இந்த வாழ்வை வாழ்ந்து முடித்துவிடக்கூடுமென நாம் மூப்பன் அங்குசாமியின் வாழ்வினூடாகப் பார்க்கின்றோம். புனலும் மணலும் இன்று சூழலியல் சிக்கல்கள் உக்கிரமாகிக் கொண்டிருக்கும் காலத்தில் வாசிக்கவேண்டிய நாவல் என்றாலும், அவரின் 'கிருஷ்ண பருந்தே' அவரின் மிக முக்கியமான படைப்பெனத் தயக்கமில்லாமல் சொல்வேன்.

2.

புனலும் மணலுமோடு ஒரே வரிசையில் வைத்துப் பேசமுடியாதென்றாலும், இவ்வாறு ஒரு தகப்பன் - 'மகள்' கதையைப் போல, ஒரு தாய் - மகன் கதையைச் சொல்கின்ற நாஞ்சில் நாடனின் 'சதுரங்கக் குதிரையையும்' கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம். சிறுவயதில் தகப்பனை இழந்து, காலம் பிந்திப் பிறக்கின்ற நாராயணின் வாழ்க்கை தமிழ்நாடு - மும்பை என தனிமைக்குள் அலையத்தொடங்கின்றது அல்லது அமிழத்தொடங்கின்றது. நாவலை நகுலனுக்குக் காணிக்கை என்கின்றபோதே நமக்கு நாராயணின் கதையை தொடக்கத்திலேயே எளிதாகப் புரிந்துகொள்ள முடிகின்றது.

நாராயணன் என்ற கதாபாத்திரத்தின் தளம்பலே, உண்மையிலேயே நாராயணன் தனித்து வாழ விரும்புகின்றாரா அல்லது புறக்காரணிகளால் அவருக்குத் திருமணம் நடக்காமல் போகின்றதா என்பதேயாகும். பல்வேறு காலகட்டங்களில் அவருக்குத் திருமணம் செய்துவைக்க அவரின் உறவுகளும், நண்பர்களும் முயற்சிக்கையில் சிலது குறிப்பிட்ட காரணங்களால் பிறரால் நிராகரிக்கப்படுவதையும், அதேசமயம் பலவேளைகளில் நாராயணால் நிராகரிக்கப்படுவதையும் நாவலில் நாம் காண்கின்றோம். தனித்துவாழும் வாழ்வு நாராயணின் ஒரு தெரிவெனில் ஏன் அவரால் அதைக் கொண்டாடவோ, நிறைவாகவோ வாழமுடியாது இருக்கின்றது என்ற கேள்வியையும் இந்நாவலை முன்வைத்து நாம் கேட்டுப் பார்க்கலாம்.

நாராயணுக்கு அவரின் மாமாவின் இளையவயது மகள் கல்யாணி மீதே விருப்பு இருக்கிறது. கல்யாணிக்குத் திருமணம் நடந்து அவரின் மகள் திருமணமாகின்றபோதுகூட, கல்யாணி சார்ந்து இவருக்கு  உடல்சார்ந்து மோகக்கனவுகள் கூட வருகின்றன. ஆனால் நாராயணனுக்கு, கல்யாணியிலிருந்து நாவலின் இறுதியில் மும்பையில் சந்திக்கின்ற ராதாவரை ஈர்ப்பிருந்தாலும் ஏன் தன் உள்ளக்கிடக்கையை ஒருபோதும் வெளிப்படையாகச் சொல்லவில்லை என்பதே வாசிக்கும் எனக்கு அலுப்பைத் தந்திருந்தது. நாராயணைப் போன்றோர் இவ்வுலகில் நிறைய இருக்கக்கூடும். தனிமையில் இருந்தபடி, காமத்தைத் தீர்க்கின்ற காலங்கள் கனிகின்றபோதுகூட அதை எட்டி உதைத்தபடி வீம்பாக வாழ்கின்ற மனிதர்கள் மீது எனக்கு எவ்விதக் கேள்விகளுமில்லை. அவரவர்  வாழ்வு அவரவர்க்கு. ஆனால் என் அலைவரிசை ராஜ சுந்தரராஜனின் 'நாடோடித்தடத்தில்' வரும் கதைசொல்லிக்கு அண்மையாகச் செல்வது. வாழ்வு அவ்வப்போது பெரும் அதிர்ச்சிகளைத் தந்தாலும், தனக்கு என்ன வேண்டுமென அவற்றை நாடிச்செல்வது, அதைக் கொண்டாடியபடி தன் தனிமையையும் தனக்குள்ளேயே வைத்திருப்பது. இதன் அர்த்தம் தனித்திருந்து வாழ்வைக் கொண்டாடிக்கொண்டிருப்பதால், வேறுவகையான சிக்கல்கள்/சோகங்கள் இல்லையென்பதல்ல. ஒருவருக்குத் தரப்பட்ட தேர்வின் நிமித்தம், அவர் அதனூடாக தன் வாழ்வை இயன்றவரை தனக்குப் பிடித்தமாதிரிக் கொண்டுசெல்வது, பிற/பிறரின் மீது அளவுக்கதிகமாக காரணங்களைச் சாட்டாது தம் வாழ்வின் தெரிவுகளுக்கு தாமே பொறுப்பேற்றுக் கொள்வதாகும்.

3.

.மாதவனின் புனலும் மணலும், நாஞ்சில் நாடனின் சதுரங்கக் குதிரையும் அவர்கள் எழுதிய நாவல்களில் உச்சமில்லை என்றாலும் வாசித்து விவாதிப்பதற்கான புள்ளிகளைக் கொண்டிருக்கின்றது என்பதையும் தெளிவாக இங்கு கூறிவிடவேண்டும். இன்னுமொரு அம்சம் என்னவென்றால் - நான் ஏற்கனவே பலதடவைகள் சொன்னதுதா ன் - இந்த இரு நாவல்களும் 200 பக்கங்ளுக்குள் முடிந்துவிடுகின்றவையாகவும் இருக்கின்றன. இவ்விரு நாவல்களில் எங்கு ஒவ்வொரு அத்தியாயத்தைத் தொடங்கி, எப்படி முடிப்பது என்று இதன் படைப்பாளிகளுக்குத் தெரிந்திருக்கின்றது. ஆ.மாதவனின் நாவலில் சில அத்தியாயங்கள் இரண்டு பக்கங்களும் இருக்கின்றன. அவ்வாறே அளவுக்கதிகமாய் எல்லாவற்றையும் விபரித்து எங்களைச் சோர்வடையச் செய்யாமலும் இந்த நாவல்கள் நகர்கின்றன.

இன்று எழுதப்பட்டும் பெரும்பாலான நாவல்களின் சிக்கலே வாசிப்பவரை பக்கங்களை எழுந்தமானமாகத் தட்டிச்செல்லும்படியான அலுப்பான நடையில் இருப்பது என்று சொல்வேன். வாசிக்கும் ஒருவரை, விபரிப்போ, பாத்திரங்களுக்கிடையிலான உரையாடலோ போதும் போதுமென்று பக்கங்களைப் புரட்டச்செய்தாலே அந்த நாவல் எங்கோ இடறிவிட்டதெனச் சொல்லலாம். எவ்வாறு ஒரு வாசகரை அலுப்படையச் செய்யாமல் எங்கே வெட்டி எங்கே புதிதாய்த் தொடங்குவதென்பதில் ஒரு நாவலாசிரியர்  நல்லதொரு திரைப்பட 'எடிட்டிங்' போல கவனமாக 'வெட்ட' வேண்டும். அதேபோல இந்த இரண்டு நாவல்களும் முடியும் இடங்களையும் அவதானித்தால் கூட, எப்படி ஒரு படைப்பை முடிப்பதென்ற உத்திகளும் நமக்குப் புலப்படும். ஒருவகையில் இந்த நாவல்களின் முடிவுகளே நம்மை இது குறித்து அதற்குள் இருக்கும் பலவீனங்களைத்தாண்டி வாசிக்கவும் உரையாடவும் வைக்கின்றன என்பதையும் உணர்ந்துகொள்ளலாம்.
....................................

(ஆனி, 2020)