கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மட்டக்களப்புப் பயணம் – 01

Sunday, August 27, 2023



ட்டக்களப்புக்குப் போவதற்கு, ஏறாவூரில் நிகழ்ந்த புத்தகக் கண்காட்சி ஒரு காரணம். மற்றக்காரணம் அங்கே வடகோவை வரதராஜரின் புதிய நூலொன்று ‘கஸல்பதிப்பகம் ஊடாக வெளிவருவதாகவும் இருந்தது. என்னோடு வேறு சில நண்பர்களும் மட்டக்களப்புக்கு வருவதாக இருந்தாலும். கொழும்பிலும், பாசிக்குடாவிலும் எழுத்தாளர் ஒருவரால் நிகழ்ந்துவிட்ட சில அசம்பாவிதங்களால் தயக்கத்துடன் அவர்கள் பின்வாங்கிவிட்டார்கள்.

நான் மட்டும் விடிகாலை
6 மணிக்கு கொழும்பிலிருந்து மட்டுநகருக்கு ரெயின் எடுத்து, மாலை 3.30 மணிக்கு மட்டக்களப்பு ரெயின் ஸ்ரேசனின் போய் இறங்கினேன். கடந்த சில மாதங்களாக வடகோவையாரை யாழை விட்டுப் பெயர்த்தெடுத்து எங்கேயாவது நண்பர்களுடன் சேர்ந்து சந்திப்பதற்கென திட்டமிடுவேன். அவரோ, அவர் வளர்க்கும் ஆடு, நாய், பக்கத்து வீட்டு பர்வதம் மாமி ஆகியோர் தான் ஊட்டி விடாவிட்டால், பட்டினி கிடந்து வாடிவிடுவார்கள் எனச் சொல்லி, வீட்டை விட்டுப் புறப்படவே  தயங்கிக் கொண்டிருப்பார்.


நேரத்தைப் பொன் போல
ப் போற்றுவோருக்கு உரியவை இரவுநேர அதிதுரித பஸ்கள். இயற்கையையும், கிராமப்புறங்களையும் ஆறுதலாக இரசித்து, ரெயினுக்குள் விற்கப்படும் கச்சானையும், வடையையும், ஹெலப்பவையும் (இலையப்பம்) சுவைத்தபடி போகின்ற என்னைப் போன்றவர்கள் பயணிப்பதற்கு ரெயினே பொருத்தமானது. இலங்கையில் ரெயினில் போவோர் சில நேரம் திகைக்கும் இடங்களுண்டு. முன்னே போய்க் கொண்டிருக்கும் ரெயின், சட்டென்று எங்கேயாவது ஸ்ரேசனில் நிறுத்தி பின்பக்கத்தால் ஓடத் தொடங்கும். அப்படித் திகைத்து பதறக்கூடாதென்று சில ரெயின்களில் முதல்தர வகுப்புக்களில் நம் இருக்கைகளை 360 டிகிரிகளில் மாற்றுகின்ற வசதிகளையும் செய்திருக்கின்றார்கள்.


இப்படி ஒரு வசதி இந்த முழுதீவு நாட்டுக்கும் இருந்தால் ஆபிரிக்காப் பக்கமோ, அமெரிக்காப் பக்கமோ இந்த நாட்டையும் அவ்வப்போது சுக்கான் பிடித்துக்கொண்டு படகைப் போல நகர்த்திக் கொண்டு வந்தால், என்னைப் போன்றவர்கள் கனடாவில் இருந்து  நிறையப் பணத்தையும் நேரத்தையும் செலவு செய்து விமானம் எடுத்து வரும் கஷ்டமும் இருக்காது.


நான் மட்டுநகர் போவதற்குள், காலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து பஸ்ஸெடுத்து வடகோவையார் அங்கே வந்து சேர்ந்து விட்டிருந்தார். அவர் வீட்டில் வளர்த்த ஒரு தறுதலை ஆட்டுக்கு என் பெயரை வைத்ததாலோ என்னவோ பாசம் பொங்கி, ‘நீ வந்தால்தான் நான் சாப்பிடப் போவேன் என்று உருகியுருகி மெஸெஜ் அனுப்பிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் இயலாமல், ‘உங்களுக்குப் பசித்தால் போய்ச் சாப்பிடுங்கள்என்று சொன்னேன். நம்மைப் போன்ற ஆண்களுக்கு எங்கே சொந்தப்புத்தி இருக்கின்றது? 'உங்களுக்குப் பசித்தால் போய்ச் சாப்பிடுங்கள்என்று இவன் சொல்கின்றான் இதன் அர்த்தம் என்ன என்று வடகோவையார் தன் கிரஷிற்கு அனுப்பி இதை decode செய்யக் கேட்டிருக்கின்றார். 


அந்தக் கிரஷோ, ‘உங்களைப் போய்ச் சாப்பிடுங்கள் என்று நேரடியாகச் சொல்லவில்லை, உங்களுக்குப் பசித்தால் மட்டும் போய்ச் சாப்பிடுங்கள் என்றுதான் சொல்லியிருக்கின்றான். ஆகவே நீங்கள் போய்த் தனியே சாப்பிடவேண்டாம், பிறகு அவன் கோபித்து அடுத்தவேளைச் சோற்றில் நஞ்சைக் கூட வைத்துவிடுவான்' என்று பயமுறுத்தியிருக்கின்றார். பாவம் வடகோவையார், நான் போகும்போது சாப்பாடில்லாது அரைமயக்க நிலையில் அறைக்குள் அலைந்தபடி இருந்தார்.

நாங்கள் அங்குமிங்கும் அலைந்து ஒரு கிலோமீற்றர் நடந்து போய்ப் பார்த்தபோதும் சாப்பாட்டுக் கடை தென்படவில்லை. கமகமஎன்றும் ஓலைஎன்றும் நல்ல பெயர் வைத்திருந்தார்களே தவிர சாப்பாட்டுக் கடையைத் திறந்து வைத்தாரில்லை. பிறகு ஓட்டோ ஒன்றைப் பிடித்துப் போய்ச் சாப்பிட்டு வந்தோம். அங்கே நல்ல பால் அப்பமும் கிடைத்தது. அந்தக் கடையில் சுடச்சுட போட்டுத்தந்த தேநீரின் சுவையோ அருமை.

யாழ்ப்பாணத்தில் ஒரு ஒழுங்கான, சுடச்சுடத் தேநீர் விற்கும் கடையையே இப்போது எளிதில் காணமுடியாது. கொழும்பில் அப்படிக் கேட்பதே பெரும் பாவம். கொழும்பில் ஒரு கஃபேயில் ரீ கேட்க, 800 ரூபாய் பில் வந்தது. ரீயிற்கு எங்கே பால் என்று கேட்க, அதற்கும் 400 ரூபாய் மேலதிகமாக எடுத்து, ஒரு பாற்தேத்தண்ணி 1200 ரூபாவா என்று எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்கள். அதன் பிறகு கொழும்பில் கடைகளில் ரீயே கேட்பதில்லை.


மக்குப் பக்கமாய் சாப்பாட்டுக் கடைகள் மட்டுமில்லை, நாங்கள் போக வேண்டிய ஏறாவூர் புத்தகக் கண்காட்சி கூட, 10 கிலோமீற்றர் தொலைவில் இருந்தது. ஏன் இப்படி நடுவாந்திரமான ஊரில் இடம் எடுத்தீர்கள் என வடகோவையாரைக் கேட்டேன். அவரோ, இந்த ஊர்ப் பெயர் ஒரு பொம்பிளைப் பிள்ளையின் பெயர் போலக் கிடந்தது. அதில் நான் மயங்கி மற்ற வசதிகளைப் பார்க்காது இந்த இடத்தில் ரூமைப் பதிவு செய்துவிட்டேன், மன்னித்துவிடு என்றார்.

ஊரின் பெயர் ஊறணி!

அழகான பெயர்தான். அறையிலிருந்து பார்த்தால் கடலும் தெரியும். ஏதேனும் பாவம் செய்தால் போவதற்கு பக்கத்தில் அமெரிக்கன் மிஷன் தேவாலயமும் இருந்ததுதான். ஆனால் அதற்காய் யாரேனும் ஒருவர் மற்ற வசதிகளைப் பார்க்காது, ஊரின் பெயரை மட்டும் பார்த்து மயங்குவார்களா என்ன?

இதற்கிடையில் அவர் மட்டக்களப்பார் பாயோடு ஒட்ட வைத்துவிடுவார்கள் என்றொரு ஜதீகக் கதை இருக்கிறது
, எதற்கும் mattress இற்குக் கீழே மாந்தீரிகம் வைத்த பாய் எதுவும் இருக்கா என்று தேடிப்பார் என்றார். எனக்கு வந்த எரிச்சலுக்கு, அந்தச் சனம் அப்பாவிச் சனம், என்னுடைய இப்போதைய 3 கிரஷ்கள் மட்டக்களப்புத்தான். நம்மடைய யாழ்ப்பாணிகள்தான் தந்திரமாக இங்கே வந்து இந்த ஊர் செழுமையையும், பெண்களின் அழகையும் கண்டு பாயோடு ஒட்டிக்கொள்கின்றவர்கள். ஏனென்றால், பாருங்கள் யாழ்ப்பாணிகள் என்ற பெயரிலே இருப்பதென்ன? ‘பாணிதானே. அந்தப் (பனங்காய்ப்)பாணியை ஒட்டிக்கொண்டு மட்டக்களப்புக்கு வந்து இங்கிருப்போரோடு ஒட்டிப்போட்டு, ஏதோ மட்டக்களப்பார் பாயோடு ஒட்ட வைக்கின்றவர்கள் என்று கதையை இந்த யாழ்ப்பாணிகள் மாற்றிவிட்டனர் என்றேன்.

இவ்வளவும் நான் சொன்னதன் பிறகு, வடகோவையார் நீ இப்படிச் சொன்னது எனக்குச் சரியான கவலையாக இருக்கிறதுஎன்றார். எதையெதையோ வாய்க்கு வந்ததை எல்லாம் நான் பேச அவர் மனமுடைந்துவிட்டாரோ என்று நினைத்து ஏன்எனக் கேட்டேன். இல்லையடா உண்மையிலை உனக்கு மட்டக்களப்பில் 3 கிரஷ் இருக்கா? எனக்கு இந்த வயசில் யாழ்ப்பாணத்தில் கூட ஒரு கிரஷும் இல்லையே. என் வாழ்விற்கு அர்த்தமே இல்லாமற் போச்சுதடா?’ என்றார்.

எனக்கு வந்ததே ஒரு விசர்!

இந்த மனிதரோடு இரண்டு நாள்கள் பகலும் இரவும் திரிந்தாலே, சொந்த செலவில் நானே எனக்கு சூனியம் வைத்து பைத்தியமாகப் போகின்றேன் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு, இரவு புத்தகக் கண்காட்சிக்குப் போகத் தயாரானேன்.

*********************

 

(May 21 , 2023)


0 comments: