கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 16

Monday, August 14, 2023

 

'ர்தா' தமிழில் அண்மையில் வெளிவந்த முக்கியமான ஒரு அரசியல் புனைவு என்பேன். பர்தாஎன குறிப்பிடுவதால் அதை ஒரு குறிப்பிட்ட மத/இன அடையாளத்துக்குள் மட்டும் அடைக்கத் தேவையில்லை. பெண்களின் ஆடைகளின் அரசியல்என்ற விரிந்த எல்லைக்குள்ளும் வைத்துப் பார்க்கக்கூடியதாக இருப்பதால்தான் பர்தா’ வாசிப்பில் முக்கியமாகின்றது. தமக்கான ஆடைகளைத் தேர்வு செய்வதென்பதில் முஸ்லிம் பெண்கள் மட்டுமில்லை, தமிழ்ப் பெண்கள் உள்ளிட்ட பலரும் சிக்கல்களை எதிர்நோக்கியபடி இருக்கின்றார்கள். இலங்கையில் ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பெண்கள் சேலை மட்டும் அணியவேண்டும் என்று சொல்லப்பட்ட்திலும், தமிழகத்தில்துப்பட்டா போடுங்கள் தோழிஎன்ற சொல்லாடல்களின் பின்னும் ஆடைகளின் அரசியலே இருந்திருக்கின்றது.

இங்கு ஒரு பெண் பர்தா/ஹபாயாவோ, சேலையோ, துப்பட்டவோ அணிய வேண்டுமா இல்லையா என்பதல்ல கேள்வி. எந்த ஆடையானாலும் அதைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் பெண்களுக்கு அவர்கள் இருக்கும் சூழலில் இருக்கின்றதா என்பதே முக்கியமான கேள்வியாகும் பெண்களாக இல்லாத ஆண்களாகிய நாம் அந்தத் தேர்ந்தெடுக்கும் உரிமைக்காய் பெண்களுக்கு தோழமையுணர்வுடன் இருக்கலாமே தவிர, ஆண்களாகிய நாம் இன்னின்ன ஆடைகள் சரியா/தவறா என்று விவாதிக்கும் எல்லைக்குப் போவதில் அர்த்தமேதும் இருக்கப்போவதில்லை. அதையேதான் ஆடைகளின் அரசியல்என்ற என் ஒரு கட்டுரையில் முன்னொரு பொழுது விவாதித்திருக்கின்றேன். இலங்கை/இந்தியா போன்ற நாடுகளில் மட்டுமில்லை, கனடா போன்ற மேற்கத்தைய நாடுகளிலும் இந்தச் சிக்கல்களை பெண்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. யோர்க் பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்புப் பற்றிய கலந்துரையாடலில் ஒரு பொலிஸ் அதிகாரி ‘slut மாதிரி ஆடைகள் அணிந்தால் பாலியல் வன்முறை நடக்கத்தான் செய்யும்என்ற கூறியதற்கு எதிராகப் பெண்கள் கிளர்ந்தெழுந்து அதே பெயரில் (Slut Walk) எதிர்ப்புப் பேரணிகளை நடத்திக் காட்டியிருந்தனர்.

ஓர் அரசியல் பிரதியை, பிற இனங்களினால் ஒடுக்குநிலையாக்கப்பட்ட சமூகம் தனக்குள் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சினையை, அதன் வீரியத்தோடும், அதேசமயம் தன் சமூகத்தை பிறரிடமும் விட்டுக்கொடுக்காது நிதானமாய் எழுதுவது என்பதை மாஜிதாவின் இந்த பர்தாநாவல் நமக்குக் கற்றுத் தருகின்றது. இன்றைக்கு ஈழப்போராட்டம் சார்ந்து எழுதும் பல படைப்பாளிகள் கற்றுக்கொள்ளவேண்டிய புள்ளியும் இதுவென்பேன். ஈழத்தமிழரின் அரசியல்/சாதிப் போராட்டங்களைப் பற்றி எழுதப்படும் பல பிரதிகள், ஈழத்தமிழரை ஒருபோதும் அநியாயம் செய்யாத தமிழராகவோ அல்லது முற்றிலும் அநியாயம் செய்தவர்களாவோ நிதானமற்று எழுதப்படும்போது பிரதிகளின் நம்பகத்தன்மை மட்டுமின்றி, இந்த உண்மைகளை நன்கு அறிந்த நமக்கு எரிச்சலும் வந்துவிடுகின்றது.

கிழக்கில் இருக்கும் முஸ்லிம் சமூகத்தில் எப்படி பர்தா உள்நுழைந்து அதனோடு சேர்ந்து ஹபாயாவும் பிற்காலத்தில் இணைகின்றதென்பதை துண்டு துண்டான காட்சிகள்/சம்பவங்களினூடாக பர்தாமுன்வைக்கின்றது. அதை எப்படி முஸ்லிம் பெண்கள் எதிர்கொண்டார்கள் / ஏற்றுக்கொண்டார்கள் / எதிர்ப்புக்காட்டினார்கள் என்பதை நாம் இதை வாசிப்பதனூடாக அறிந்துகொள்கின்றோம். இந்நாவலின் கதைசொல்லியான சுரையாவின் பெற்றோரான பீவியையும், ஹாயத்து லெப்பையையும் கூட அவர்கள் பர்தா/ஹபாயாவை சுரையாவின் மீது திணிக்கின்றவர்களாக இருந்தாலும், அவர்களையும் நாம் காலவோட்டத்தின் இயல்பில் வைத்துப் புரிந்துகொள்கின்றோம். 


சுரையா, அவரின் உம்மா பீவி, புலம்பெயர்ந்த நாட்டிலே பிறந்த சுரையாவின் மகள் ராபியா மூவருமே பர்தா/ஹபாயா பற்றி வெவ்வேறு விதமான பார்வைகளைக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் வெவ்வேறு பார்வைகளைக் கொண்டிருந்தாலும், இந்த மூன்று தலைமுறைப் பெண்களும் அது பர்தாவோ இல்லை வேறெந்த உடையோ அதைத் தேர்ந்தெடுக்கும் உரிமை தமக்கு நிச்சயம் வேண்டுமெனத்தான் வெளிப்படையாகவோ அல்லது உள்மனதிலோ விரும்பியிருப்பார்கள் என்பது வாசிக்கும் நமக்கு தெளிவாகத் தெரிகிறது.

பர்தாவை வாசித்துக் கொண்டிருக்கும்போது,  வேலைக்குப் போனால் இலங்கையில் கட்டாயம் சேலை அணிந்து செல்லவேண்டும் என்ற ஒரு காரணத்துக்காகவே புலம்பெயர்ந்து வெளிநாட்டுக்கு வர விரும்பிய என் தோழியொருவர் நினைவுக்கு வந்தார் (அவ்வாறே இலங்கை பஸ்களில் நடந்த பாலியல் சுரண்டல்களால், அதைக் கடைசிவரை பாவிக்காத பல தோழிகளின் கதைகள் நானறிவேன்). அதேபோல் என் நெருங்கிய தோழிகளில் இருவர் சேலையை ஒருபோதும் அணிய விரும்பாதவர்களாக இருந்திருக்கின்றார்கள் என்பதும் நினைவுக்கு வந்தது. இந்த என் தோழிகளைச் சமூகம் வற்புறுத்தி அணியச் சொல்லியிருந்தால் அவர்களுக்கும் சேலை இன்னுமொரு பர்தாவாகவே நிச்சயம் ஆகியிருக்கும். ஆகவேதான் நான் 'பர்தா' என்ற இந்தப் புனைவை ஒரு மதத்திற்குள் அடக்காது, ‘பெண்களின் ஆடைகளின் அரசியல்என்ற விரிவான தளத்தில் வைத்து உரையாட முடியும் எனச் சொல்கின்றேன்.

இந்தப் புனைவில் இலண்டனில், இலங்கையில் நடந்த ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களுக்கு எதிர்ப்பும், பலியானவர்களுக்கு அனுதாபமும் தெரிவிக்கும் நிகழ்வொன்றோடு தொடங்கின்றது. எந்த அடிப்படைவாதமும் முதலில் பெண்களின் உடல்கள்/ஆடைகள்/நடமாட்டங்களைக் கண்காணிப்பதோடு தொடங்கி மனிதவுயிர்களைக் காவு கொள்கின்றதாகக் கூட மாறக்கூடுமென்பதை மறைமுகமாக மாஜிதா நாவலின் உள்ளே, பர்தா/ஹபாயாவை அணிய வற்புறுத்தும் பல்வேறு முஸ்லிம் இயக்கங்களின் செயற்பாடுகள் ஊடாகச் சொல்லவும் செய்கின்றார். இன்று அவ்வாறான ஒரு அடிப்படைவாதத்தை இறக்குமதி செய்ய இந்தியாவின் ஆர்,எஸ்.எஸ்/பிஜேபி சார்பானவர்கள் இலங்கை மண்ணில் வந்திறங்குவதையும் நமக்கான எதிர்கால எச்சரிக்கையாகப் பார்க்க வேண்டும்.

இந்தப் புனைவில் புலம்பெயர்ந்த மண்ணில் பிறந்த சுரையாவின் மகளான ராபியாவிற்கு பர்தா/ஹபாயா என்பது வேறு ஒரு அர்த்தத்தை இறுதியில் கொடுக்கின்றது. அவ்வாறான ஒரு கலாசார அடையாளத்தை, புலம்பெயர்ந்த மண்ணில் பிறந்த தமிழ்ப்பிள்ளைகளுக்கு, என் தோழிகளைப் போல சேலையின் அரசியல் தெரியாதுபுதிய அடையாளத்தையும் பெருமையையும் கொடுப்பதைப் பார்த்திருக்கின்றேன். இங்கே நாம் எந்த ஆடை சரி/பிழை என்று விவாதிப்பதைவிட, இந்த ஆடைகளின் அரசியலைத் தெரிந்து தமக்கான தேர்வுகளைப் பெண்கள் எடுக்கும் வெளிகள் இருக்கின்றனவா என்பதைப் பற்றியே நாம் விரிவாக உரையாடவேண்டும்.

அந்தவகையில் மாஜிதாவின் 'பர்தா' பல்வேறு உரையாடல்களை நாம் நிதானமாகச் செய்வதற்கான வெளிகளைத் தருகின்றது. முக்கியமாய் பலநூறு பக்கங்களில் எழுதிக்கூட நம் மனதைத் தீண்டாத எத்தனையோ நாவல்கள் இருக்கும்போது, மிகக் கச்சிதமாக 130 பக்கங்களில் எழுதப்பட்ட பர்தா நம்மை எங்கெங்கோ யோசிக்க சிந்தனைகளை இழுத்துச் செல்கிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

********************


(Feb 18, 2023)

0 comments: