கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Pages & Coffee

Monday, August 07, 2023

 

சில ஊர்களின் தனித்துவப் பெயர்கள் என்னைக் கவர்ந்திழுப்பதுண்டு. அப்படித்தான் இந்தக் கஃபேயின் பெயரும் என்னை அப்படி ஈர்த்திருந்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் நான் அந்த கஃபேயிற்குப் போகும்போது மூடிவிடுவார்கள். ஒரு கஃபேயை மாலை ஏழு மணிக்குள் கதவடைப்பது என்பது மிக்க அநியாயம். இவர்களுக்கு இரவு என்பது ஏழு மணிக்குப் பிறகுதான் இன்னும் இளமையாக இருக்கும்’  என ஒருவரும் சொல்லியிருக்க மாட்டார்கள் போலும். இறுதியில் உள்ளே நுழையும் சந்தர்ப்பம் நேற்று அமைந்தது. கஃபேயின் பெயரைப் போல நிறையப் புத்தகங்கள் சுற்றிலும் அடுக்கப்பட்டிருந்தன.


சில இடங்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும், அதற்குள் இருக்கும் அதிர்வுகள் நமக்குப் பொருந்தாதிருக்கும்.  எந்தக் கணத்தில் என்றாலும் எம்மை அமைதியிழக்கச் செய்து வெளியேற்றிவிடும் பதற்றத்தை அவை தன்னகத்தே கொண்டிருக்கும். இந்த கஃபேயிற்குள் நுழைந்தபோது வேறொரு அதிர்வு வந்திருந்தது. கொழும்பில் சில கஃபேயிற்குள் சேகுவரா, மார்க்ஸ், முகமது அலி, ஜான் லெனன் என நமக்குப் பிடித்தவர்களைக் கொண்டு அலங்கரித்திருப்பார்கள். முன்னர் இவர்கள் உண்மையான இடதுசாரிப் பின்னணியில் வந்திருப்பார்களோ என்ற தோற்றமயக்கமுற்று கஃபேக்களை நிறுவியவர்களின் பின்னணியை அறிய ஆவலுறுவதுண்டு. இப்போது கப்பிட்டஸிஸ்ட் மட்டுமில்லை, மார்க்சியர்கள் கூட இறுதியில் நவ தாராளவாதத்தில் வந்து சேரும் நுட்பமான இடங்களைக் கண்டு ஏமாறாமல் இருக்கக் கற்றுக் கொண்டாயிற்று. மேலும் நாமென்ன புரட்சி செய்யவா கஃபேக்களுக்குப் போகின்றோம், முதலீட்டியத்தின் முக்கிய கூறான நுகர்வோரின் ஓர் அங்கமாக எப்போதோ ஆகியும் விட்டோம் அல்லவா?

Latte & Waffle இற்கு உத்தரவு கொடுத்துவிட்டு அங்கிருந்து ஜே.கிருஷ்ணமூர்த்தியின் நூலொன்றை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். ஜே.கே நம்மைச் சரியாக நமது பின்னமைப்பியல்வாதிகளின் நூல்களைப் போலக் குழப்புவார். ஆனால் சரடொன்றைக் கண்டுபிடித்துவிட்டால் நமக்குச் சுவாரசியமாகிவிடுவார். நான் எடுத்து வாசிக்கத் தொடங்கிய பக்கங்களில் விடுதலை/விடுபடுதல்பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். அதைப் பேசுவதற்கு முன் நமது பயங்களைப் பற்றி பேசுதல் முன்நிபந்தனை என்றபடி எங்கோ இழுத்துக் கொண்டு சென்றார்.

பின்னர் சட்டென்று எவற்றிலிருந்து விடுதலையை நமது மனம் வேண்டுகின்றது என்று கேள்வி கேட்கத் தொடங்கினார். நமது மனதுக்கு உவப்பான சந்தோசம், பேருவுகை போன்றவற்றிலிருந்து விடுதலையை நாம் ஒருபோதும் கேட்பதில்லை. துயரம், வலி போன்ற நமக்குப் பிடிக்காத உணர்ச்சிகளில் இருந்து மட்டுமே நாம் விடுபடுதலை வேண்டுகின்றோம். அப்போது நாம் ஒரு பக்கத்தை எடுத்து மற்றதை விலத்துகின்றோம். ஆனால் மகிழ்ச்சியும், துயரமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாது. ஒன்றைத் தக்கவைத்து, மற்றதில் விடுபடுதல் சாத்தியமானதுமல்ல, அது உண்மையான விடுதலையுமல்ல. மனதில் எதுவும் எஞ்சியிருக்காத தனிமையிலிருந்து வருவதே விடுதலை என்கிறார். ஹிப்பிக்கள் இந்தச் சமூகத்திலிருந்து வெளியேறி அலைந்து திரிந்தது முக்கிய நிகழ்வென்றாலும், அவர்கள் அதை தாங்கள் வாழும் சமூகத்திலிருந்து எதிர்ப்புத் தெரிவிக்கின்றோம் என்று நினைப்போடு செய்ததால் அது முழுமையான விடுதலை இல்லை, ஏனெனில் அங்கே ஏதோ ஒன்று இன்னும் மிஞ்சியிருக்கின்றது என்கின்றார் ஜேகே.



வ்வாறு வாசித்து மனம் விடுதலையை அலசிக் கொண்டிருந்தபோது, வாங்கிய Latteஇற்காக பணம் செலுத்தப் போனேன். அங்கு நின்ற பெண், ‘நீங்கள் எழுதுகின்றவரா?’ எனக் கேட்டார். முதன்முதலாக ஒரு கஃபேயில் randomமாக ஒரு பெண் இப்படிக் கேட்கின்றாரே என வியப்பாக இருந்தது. அத்தோடு நிறுத்தாமல் என்ன எழுதுவீர்கள், புத்தகங்களின் பெயர்கள் என்ன என்றெல்லாம் கேட்டார் (இதற்காகவே இந்தக் கஃபேக்கு 7 மணிக்கு முன்னர் அடிக்கடி வரவேண்டுமென நினைத்தேன்).

நான் இப்படி அன்போடு அந்தப் பெண் ‘குசலம்விசாரித்ததில் கரைந்து போய் நிற்பதை, மறுகரையில் இருந்த என் தோழி மோப்பம் பிடித்திருக்க வேண்டும். ஜே.கேயின் விடுதலையை நான் வாசிக்கத் தொடங்கியபோது அவருக்கு Modern Love Chennai இன் மார்கழியை என் அலைபேசியில் Amazon Prime ஊடு பார்க்கக் கொடுத்திருந்தேன். என்னையும் கூடச் சேர்ந்து அதைப் பார்க்கக் கேட்டபோது, என் மருமகளின் வயதில் இருப்பவர்க்கான எபிசோட்டை நான் பார்க்கமாட்டேன் என நிராகரித்திருந்தேன். ஆனால் அவ்வப்போது வாசிப்பின் இடையில் எட்டிப் பார்த்தபோது அதன் மலை/மழை பின்னணி, அந்த அப்பாவித்தனமான பதின்மக்காதல், எதிர்ப்பால் உடல் மீது வரும் முதன்முதலான ஈர்ப்பு எல்லாம் நாமெல்லோரும் கடந்து வந்திருக்கக் கூடியதுதான் என நினைத்துக் கொண்டேன்.

Modern Love Chennai  இல் வரும் நம்மாளின் எபிசோட் பார்ப்பதென்றால், வேண்டுமெனில் நானும் சேர்ந்து பார்க்கின்றேன் என்றேன். அது தியாகராஜன் குமாரராஜா. எனக்கு அவரின் திரைப்படங்கள் பிறரைப் போல அவ்வளவு கவர்ந்ததில்லை. ஆனால் அவரின் எளிமையும், ஒருவகை நாடோடித்தன்மையும் பிடிக்கும். அண்மையில் மிஷ்கின் கூட நானொரு குழந்தமையைக் கொண்ட ஒருவனைச் சந்தித்தேன், அவன் பின்னர் கொண்டு வர மறந்ததேனெனச் சொல்லி தான் வரைந்த ஓவியத்தை அனுப்பினான் என்று குமாரராஜா பற்றிச் சொல்லியிருப்பார்.

கஃபேயில் ஒலித்த ஒரு எப்ஃ.எம்மில் consensual sex பற்றிய உரையாடல் போகும்போது நினைவோ ஒரு பறவைபார்க்கத் தொடங்கினோம். இலங்கையில் ஆங்கில வானொலிகள் மிக முன்னோக்கிய நிலையில் இருந்ததை வேறு சந்தர்ப்பங்களிலும் கண்டிருக்கின்றேன். கனடாவிலிருக்கும் நம் தமிழ் வானொலி ஆட்கள் இவற்றைப் பார்த்தாவது உருப்படியான நிகழ்ச்சிகளை அலுப்பில்லாது செய்வது எப்படியெனக் கற்க வேண்டும். 

நம்மாள் ஏமாற்றவில்லைஆனால் இந்தளவுக்குக் காதலை இழுத்திருக்கத் தேவையில்லை. காதல் இப்படி அவ்வளவு அழகாக எல்லோருக்கும் வாய்க்குமா தெரியவில்லை. ஆனால் கற்பனைகள் விரிய விரிய எல்லாவற்றுக்கும் அழகு கூடிவிடுகின்றன. நாம் அதற்குள் நுழையும்போது ஒரு படைப்பின் பாத்திரங்களாய் நாங்கள் உணரவும் தொடங்கிவிடுவோம். அப்போது அந்தக் காதலை நாங்களும் வாழத் தொடங்குகின்றோம்.

மற்ற எபிசோட் போலில்லாது இது நீண்டதென்பதால், இது முடிவதற்குள் கஃபேயை மூடிவிடப்போவதாகச் சொன்னார்கள். நல்லவேளையாக அதன் ஒருபகுதியாக வெளியே தேமாப்பூ மரம் சூழ சில பெஞ்சுகள் இருக்க நாம் அங்கே போய் அதை முழுதாய்ப் பார்த்தோம்.

பிறருக்கு தேமாப்பூ, எனக்கு அது வெள்ளையாக இருக்கும்போது பாதிரிப்பூதான். மரத்திலிருந்து உதிர்ந்த சில பாதிரிப்பூக்களை எடுத்து தோழிக்குக் கொடுத்தேன். அவர் அதைச் சூடிக்கொண்டு நான் உனக்கு, உன் பிரியமுள்ள புத்தரா என்றார். நீங்கள் புத்தரென்றால், நான் இன்னமும் பாவங்கள்செய்தபடி புத்தரின் காலடிக்கு வந்துவிடாத ஆமிரபாலி என்றேன்.

இவ்வாறு இந்த மாலை/இரவு ஒருவகைப் பேருவுகையைக் கொண்டு வந்திருந்தது. புத்தகங்கள் சூழ, யன்னலுக்குள் மரங்கள் அசைவதைப் பார்த்து, ஜேகேயின் நூலை வாசித்து அசைபோட்டபடி, ‘நினைவு ஒரு பறவையாக அவ்வப்போது சிறகடிக்க நான் அமைதியையும் உணர்ந்தேன்.

சிலவேளைகளில் கணங்களில் நிகழக்கூடிய விடுதலைதான் எனக்கு வாய்த்திருக்கின்றதோ என்னவோ. ஓஷோ தியானத்தில் வரும் Valleys and Peaks , சிலவேளைகளில் நாங்கள் love making இன் போது அந்தக் கணநேரத்து Peaks களை உணரமுடியும் என்கின்றார். நினைவோ ஒரு பறவையில் நாயகி orgasm இன் பொழுது தனக்குள் short term memory loss ஆகி தான் இன்னொரு பிரபஞ்சத்தில் நுழைந்துவிடுவதான பிரமை வருகின்றது என்கின்றாள்.

ஏதோ ஒருவகையில் நாம் நமது நாளாந்த நெருக்கடியிலிருந்து கொஞ்சப் பொழுதாவது விடுதலையாக வேண்டும்.

எழுதுகின்றவனா எனக்கேட்டு என் பொழுதுக்கு வர்ணமூட்டிய ந்தப் கஃபே பெண்ணுக்கு ஒரு புன்னகையைப் பரிசளிக்க வேண்டும். ஜேகேயை வாசித்து, என் அத்தனை குழப்பங்களோடும்  நான் அவரைப் புரிந்துகொள்ள rephrase செய்ததைப் பொறுமையாகக் கேட்ட என் தோழியை நேசத்துடன் அரவணைக்க வேண்டும். இவையும் கணங்களில் நிகழக்கூடிய விடுதலைதான்.


இந்த இரவு இன்னும் இளமையாகவே இருக்கின்றது!

*************************************


(May, 2023)


0 comments: