கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 17

Sunday, August 20, 2023

 

சகீனாவின் முத்தம்

************

"ற்செயல் என்பது கிடையாது. சில நிகழ்வுகளின் முந்தைய தொடர்பு விதிகள் நமக்குப் புலப்படுவதில்லை. அவ்வளவுதான்." என்ற வரிகளோடு தொடங்குகின்றது 'சகீனாவின் முத்தம்' என்கின்ற இந்த நாவல். அதற்கேற்ப இந்நாவலில் தற்செயல் போல நிகழ்கின்ற பல சம்பவங்களுக்கு ஏதோ காரண காரியங்கள் இருக்கின்றன. பெருநகரத்தில் வசிக்கின்ற வெங்கட் என்கின்ற வெங்கட் ரமணனின் பார்வையில் கதை சொல்லப்படுகின்றது.

வெங்கட்டிற்கு விஜி என்கின்ற மனைவியும், 20 வயதில் இருக்கின்ற ரேகா என்கின்ற மகளும் இருக்கின்றனர். நாவலின் தொடக்கத்தில் ஒரு அரசியல் கட்சி சார்ந்த குழு வெங்கட்டின் மகள் ரேகாவோடு பேச வேண்டும் என்று வீட்டுக்கு வந்து வெங்கட்டை அதட்டுகின்றனர். ரேகாவோ வெங்கட் பிறந்த தொலைதூர ஊரான சிறு கிராமத்துக்குச் சென்றிருக்கின்றார். அவ்வாறு சென்ற ரேகாவைக் காணவில்லை என்று வெங்கட்டும், விஜியும் பதட்டப்பட்டு அந்த ஊருக்குப் புறப்படுகின்றார். அந்தப் பயணத்தோடு வெங்கட் தன் சிறுவயது அனுபவங்களையும், அவரின் குடும்ப வரலாற்றையும் வாசகர்க்குச் சொல்லத் தொடங்குகின்றார்.

பெருநகரில் மத்தியதர வர்க்கமாய், மனைவி பிள்ளையோடு வெங்கட் வாழ்ந்தாலும், அவரின் கதைசொல்லலில் அவரையறியாமலே அவர் இந்த சமூகத்தின் அனைத்துப் பிற்போக்குத் தனங்களின் பிரதிநிதியாக இருப்பதைக் காண்கின்றோம். ஒரு தேர்தலின்போது பெண்கள் இப்படித்தான் ஆடைகள் அணியவேண்டும் என்கின்ற அரசியல்வாதிக்கு எதிராக மனைவியும், மகளும் இருந்தாலும், வெங்கட் அந்த அரசியல்வாதிக்கு -நேரடியாகச் சொல்லாவிட்டாலும்- வாக்குப் போடுகின்றார்.

இந்த ஆடை பற்றி குடும்பத்தில் நடக்கும் விவாதத்தின்போது வெங்கட்டின் மனைவி விஜி தன் தோழியான அனகாவின் கதையைச் சொல்வார். அனகாவின் கணவன் வியாபாரம் செய்பவன். ஆசிரியராக இருக்கும் அனகாவை வேலையை விட்டுவிட நச்சரிப்பவன். சேலை இல்லாமல் வேறு ஆடை அணிய விடாதவன். அவனோடு வாழ்வதென்பதே அவமானம் என்று அனகா சொல்கின்றாள். மேலும் 'அவனுடன் படுப்பது என்றால் மிகவும் அசிங்கமாகத் தோண்டும். அவன் கைபட்டாலே போதும் வாந்தி வரும். என்ன செய்வது என் தலையெழுத்து' என்று சொல்லி அனகா அழுகின்றாள்.

அவ்வாறு ஆடைகளின் கட்டுப்பாட்டைக் கொண்டுவரும் ஒரு 'கலாசார காவலனே' தேர்தலில் வெல்கின்றான். இதனால் விஜியும், ரேகாவும் கோபமடைகின்றனர். ரேகா அப்போது சொல்கின்றாள், 'அம்மா இவனுக்கு ஓட்டுப்போட்ட இத்தனை இலட்சம் பேரில் பாதிக்கு மேல் ஆண்களாக இருப்பார்கள். திருமணம் ஆனவர்கள் நிச்சயம் இதில் கால்வாசிப் பேர் இருப்பார்கள். அவர்கள் மனைவிகளின் பாடு என்னவாகும்' என்கின்றாள்.

அதற்கு விஜி கொடுக்கும் பதில்தான் சுவாரசியமானது: 'அனகாவின் கணவனைப் போல எல்லாவற்றையும் திறந்து வைப்பது ஒருவகை. ஆகக்குறைந்தது எதை சகித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதாவது தெரிந்திருக்கும். ஆனால் இரகசியமாகச் சாணி திங்கும் இந்த துரோகிகள்தான் மிகவும் அசிங்கம். வாய் நாறடித்தாலும் திங்கவில்லை என்று வெட்கமில்லாமல் பொய்சொல்லி சாதிப்பார்கள்' என்கின்றார்.

உண்மையில் இதுதான் இன்று சமூக வலைத்தளங்களில் மட்டுமில்லை, யதார்த்ததிலும் நடந்துகொண்டிருக்கின்றது. தம்மை முற்போக்கானவர்களாய்க் காட்டிக் கொண்டிருக்கும் பலரின் முகமூடிகளுக்குப் பின்னால் இருப்பது படுபிற்போக்குத்தனமே. இதை இந்த நாவலில் பல்வேறு தளங்களில் வெங்கட் என்கின்ற பாத்திரத்தின் மூலம் விவேக் ஷான்பாக் காட்டுகின்ற இடங்கள் ஆழமானவை.

ரேகா காணாமல் போய்விட்டார் என்று தேடிக் கொண்டிருக்கும்போதுதான் ரமணன் என்கின்ற வெங்கட்டின் மாமாவின் கதை சொல்லப்படுகின்றது. வெங்கட்டின் தாயின் தம்பியான ரமணனை அவனுக்குப் பெற்றோர் இல்லாது போகின்ற சின்ன வயதிலேயே நுட்பமாக அவனுக்குரிய சொத்தை வெங்கட்டின் தகப்பனாரும், சித்தப்பாவும் சுவீகரிக்கின்றார். வெங்கட்டின் தாயோ அவர் இறக்கும்வரை தம்பிக்குரியதை தம்பிக்குக் கொடுத்துவிடவேண்டும் என்று ஞாபகப்படுத்திக் கொண்டிருப்பார்கள்.

நகரத்தில் படித்துக் கொண்டிருக்கும் ரமணன் ஊருக்கு வரும்போதெல்லாம் ஓர் எளிய மனிதனாக இருப்பான். நகரில் இருந்து அவன் எழுதும் கடிதங்கள் எல்லாம் எளிதில் வாசிக்க முடியாத எழுத்தில் எழுதப்பட்டிருக்கும். ஒருநாள் ரமணனின் கடிதம் வருகின்றது. அதில் தன்னை பொலிஸ் தேடிக் கொண்டிருக்கின்றது என்றும்
, இனி அவர்கள் என்னை உயிருடன் விடமாட்டார்கள் என்றும், முகவரி உள்ள தனது கடிதங்கள் உள்ளிட்ட எல்லா அடையாளங்களையும் அழித்துவிடச் சொல்கின்றான். தனக்கிருக்கும் ஒரு சொத்தான தோட்டக்காணியை மட்டும் தனது காதலி தேடி ஊருக்கு வந்தால் அவளுக்குக் கொடுக்கும்படியும், இல்லாவிட்டால் தங்கள் வீட்டில் வேலை செய்யும் நான்கு வேலைக்காரர்களுக்கு அதைப் பகிர்ந்துகொடுக்கும்படியும் சொல்கின்றான்.

நேரடியாக இந்த நாவலில் அடையாளப்படுத்தபடாவிட்டாலும் நக்சலைட்டாக ஆகிவிட்டான் என்பது புரிகின்றது. பிறகு ரமணன் கூறியதுமாதிரியே பொலிஸ் அவனைத் தேடி ஊருக்கு வருகின்றது. இவையெல்லாம் ரேகா ஒரு துப்பறியும் பத்திரிகைக்குக் கட்டுரை எழுதுவதற்காகத்தான் காணாமல் எங்கேயோ போய்விட்டாள் என்கின்றபோது வெங்கட்டுக்கு நினைவில் வருகின்றன.

அவரது குடும்பத்து பல இரகசியங்கள் இப்போது வெளிவரத் தொடங்குகின்றன. விஜியும், ரேகாவும் தன்னை விட்டு விலத்திப் போகின்றனர் என்று தெரிகின்றது. அதைவிட வெங்கட் தன்னை ஒரு முற்போக்காளன் என்று சொல்லிக் கொண்டாலும் அவனின் பிற்போக்குத்தனங்களினால் இது நிகழ்கின்றது என்பதை அறிந்தாலும், அநேக ஆண்கள் போல தன்னை அவர் திருத்திக் கொள்ளவும் தயாரில்லை.

ரேகா எதற்காகக் காணாமற் போனாள், மீண்டும் நகர் திரும்பும்போது ஏன் வெங்கட்டின் வீட்டில் திருடர்கள் உட்புகுந்தார்கள், ரமணனின் காதலி அவர்களைத் தேடி வந்தாளா போன்றவை அறிவதன் மூலம் நாவலில் தொடக்கத்தில் சொல்லப்பட்டது போல "தற்செயல் என்பது கிடையாது. சில நிகழ்வுகளின் முந்தைய தொடர்பு விதிகள் நமக்குப் புலப்படுவதில்லை" என்பதை மீண்டும் நாங்கள் நினைவூட்டிக் கொள்ளலாம்.

ஒரேவிதமான யதார்த்தக் கதைகளை விதந்தோத்துகின்ற இன்றைய தமிழ்ச்சூழலில் இது வித்தியாசமான வாசிப்பைத் தருகின்றது. கடந்து போன காலங்களை மட்டுமில்லை, நம் சமகாலத்தையும் எப்படி விமர்சனரீதியாக அணுகிப் பார்க்கலாமென்பதற்கு இந்த நாவல் நல்லதொரு உதாரணம். விவேக் ஷான்பாக் கன்னடத்தில் எழுதியதை கே. நல்லதம்பி தமிழில் அழகாகத் தந்திருக்கின்றார்.

தாறுமாறான கையெழுத்தில் எழுதப்படும் ரமணனின் கடிதத்தை வாசிக்கும்போது 'சகீனாவின் முத்தம்' என்று இருப்பதைக் கண்டு வெங்கட்டின் குடும்பம் ரமணன் தன் காதலி சகீனா முத்தம் கொடுத்ததைப் பற்றி எழுதியிருக்கின்றான் என்று நினைக்கின்றனர். ஆனால் பின்னர் அந்த வரிகளைச் சரியாக வாசிக்கும்போது ரமணன் சொல்லியிருப்பது 'சாவிலிருந்து முக்தி அடைவது எளிது' என்பதை அவர்கள் அறிகிறார்கள்.

ஒரு போராளியாகப் போயிருக்கின்ற ரமணன் தன் முடிவை உணர்ந்து சொல்கின்ற வரிகள் இவை. சகீனாவின் முத்ததிற்கும், சாவிலிருந்து முக்தி அடைவது எளிதிற்கும் இடையில் இருப்பது, காலவெள்ளத்தில் கரைந்து போய் மறக்கடிக்கப்பட்ட ஒரு மனிதனின் பெரும் போராட்ட வாழ்க்கை!

*******************

('சகீனாவின் முத்தம்' - விவேக் ஷான்பாக், தமிழில் கே.நல்லதம்பி)

(Jun, 2023)

0 comments: