கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

யாழ்ப்பாணம்

Friday, July 07, 2023

 

யாழில் நிற்பதற்கு இம்முறை புதியதொரு ஹொட்டலைத் தேர்ந்தெடுத்தேன். அங்கே நின்ற இரண்டு நாட்களுக்குள் மூன்று அறைகள் மாற்றப்பட்டிருந்தேன். அவ்வளவு குழறுபடிகள். அவர்கள் 'Booking.com' இல் சொல்லியபடி அங்கே வசதிகளும் இருக்கவில்லை. எங்கெங்கோ எல்லாம் அலைந்தவனுக்கு இதெல்லாம் பெரிய விடயமில்லை. ஆனால் என்னைப் பார்க்க நண்பர்கள் வந்தபோது புதிய விதிகளை விதித்தார்கள். நீங்கள் எனக்கு சொல்லப்பட்ட அறையையோ, குறிப்பிட்ட வசதிகளையோ செய்து தரவில்லை, அப்படியிருந்தும் அமைதியாக இருந்தேன், ஏன் இப்போது மட்டும் என் நண்பர்கள் பார்க்க வரும்போது தடுக்கின்றீர்களென அவர்களோடு கொஞ்சம் எகிறினேன்.


இவ்வாறு கட்டுநாயக்கா எயார்போட்டில் என் லக்கேஜ்ஜை எடுத்துவிட்டு வெளியே வரும்போது என்னை மட்டும் ஒருவர் தடுத்துவிட்டு, பெட்டிகளைத் திறக்கச் சொன்னார். அவரின் பாவனையும், கேட்ட மொழியும் இனவெறி பிடித்தவர் என்பதைச் சொல்லாமற் சொல்லியது. சரி பெட்டிகளைத் திறந்து காட்டுகிறேன் என்று ஒரு பக்கமாய் ஒதுங்கினேன். முன்னால் சென்ற நண்பர் என்ன நடந்ததெனக் கேட்டார். This guy asking me to open my luggage என்றபோது, வந்த எரிச்சலில் guy இற்கு முன்னர் f word பாவித்துவிட்டேன். நண்பருக்கு நான் சொன்னதைக் கேட்டுவிட்ட இந்த அதிகாரிக்கு இன்னும் இரத்தக் கொதிப்பு வந்துவிட்டது. 


சிலவேளைகளில் பேச்சு வழக்கில் f word பாவிப்பது போல இதை நான் அங்கே பாவித்தது தவறுதான். இது நான் தடுத்தவரை நோக்கிச் சொன்னது இல்லை, என் நண்பருக்கே சொன்னேன். ஆனால் இதையே நான் தமிழில் சொல்லியிருந்தால் இவருக்கு விளங்கியிருக்கவா போகிறது. உடனே கோபம் வந்துவிட்ட அவர் என் பெற்றோர், எங்கள் சந்ததியென எல்லோரையும் இழுத்தார். நான் எதுவுமே பேசவில்லை. ஒரு சுற்றுலாப் பயணியை இப்படித்தான் வழிநடத்துவரா என்ற யோசித்தபடி, அவரைப் படமெடுக்க முயன்றேன். உடனே என் அலைபேசியைப் பறித்து கேஸ் போடபோகின்றேன் என போனை என் அனுமதியில்லாமல் எடுத்துக் கொண்டு அருகிலிருந்த அலுவலகத்துக் கூட்டிச் சென்றார். அவரை பார்த்தல்ல, என் நண்பருக்குத்தான் இதைச் சொன்னேன் என்பதால் எனக்கு அவர் எந்தக் கேஸ் போட்டாலும் (ஆகக் கூடியது என்ன செய்வார்கள், இலங்கைக்குள் செல்ல அனுமதிக்காது, கனடாவுக்கு அப்படியே திரும்ப அனுப்புவார்கள், அவ்வளவுதானே) அதை எதிர்கொள்ளலாம் என அவரைப் பின் தொடர்ந்து சென்றேன்.


லங்கைக்குள் நுழைந்த அந்த ஞாயிறு Sunday Times எடுத்து வாசித்தபோது, முக்கிய செய்தியாக சுற்றுலாப் பயணிகளை இலங்கையில் தற்சமயம் மோசமாக வழிநடத்துவது பற்றிய செய்திகள் வெளிவந்திருந்தன. ரெயினில் போன சுற்றுலாப் பயணிக்கு செருப்பால் எறிந்தது, ஓட்டோவில் விமானநிலையத்துக்கு aggressive ஆக அழைத்துச் செல்ல முயன்ற ஆட்டோக்காரரின் விடீயோ என பல்வேறு வகைச் சம்பவங்கள்! இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சரும் இவை குறித்து கண்டித்ததுடன் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனச் சொல்லியிருந்தார். அதை வாசித்தபோது சாதாரண/விளிம்புநிலை மனிதர்களை விடுங்கள், முதலில் உங்கள் விமான நிலையத்தில் இந்த அதிகாரநிலை அதிகாரிகளுக்கு எப்படி பயணிகளை வரவேற்பது என்பதைக் கற்றுக்கொடுங்கள் என எண்ணிக்கொண்டேன்.


நான் நின்ற ஹொட்டலில் அனுபவங்கள் எதிர்மறையாக இருக்கின்றதேயென சலித்துக் கொண்டபடி, ஒருநாள் காலையில் அங்கு உணவருந்தப் போனேன். நான் முரண்பட்ட மானேஜர் ஒட்ட வெட்டிய தலையோடு, கை முழுதும் tattoo வோடு macho வாக இருந்தார். அவரைப் பார்த்த என் நண்பர், ஆள் பழைய ஆர்மிக்காரனோ தெரியாது, சும்மா அவரோடு தனவாதே என்றார். எதற்கு வம்பென வாயைச் சாப்பிடுவதற்கு மட்டுமே திறப்பதென அதற்குப் பிறகு முடிவு செய்திருந்தேன். இரண்டு குழல் பிட்டும்,பூரியும், கோழிகறியும், பருப்பும், சம்பலும், சொதியுமென ஆற அமர்ந்து காலை உணவைச் சாப்பிட்டேன்.

பரிமாறிக்கொண்டிருந்தவருக்கு அப்படியொரு களையான முகம். பேச்சுக் கொடுத்தபோது மட்டக்களப்புப் பக்கம் சொந்த ஊரென்றார். சாப்பாடும் நன்றாக இருந்தது. மற்ற இடங்களில் உணவும், சேவையும் சிறப்பாக இருக்கும்போது நம்மியல்பிலே Tips கொடுப்பதைப் போல அவருக்குக் கொடுத்தபோது, அவர் ஏற்றுக்கொள்ள மறுத்தார். சரி ஒரு விருந்தினர் வீட்டுக்குப் போகும்போது ஏதாவது வாங்கிப் போவதில்லையா, அப்படி பொருள் வாங்கிச் செல்ல மறந்த சந்தர்ப்பமாக இதை நினைத்து இந்த அன்பளிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் எனச் சொன்னபோதும் அதை வாங்க மறுத்தார். வேண்டுமெனில் மட்டுநகர் வந்தால் என் ஊருக்கு வாருங்கள், அப்போது விருந்தாளியாக ஏதேனும் வாங்கிக்கொண்டுவந்தால் பார்ப்போம் என அதே அப்பாவித்தனமான சிரிப்போடு சொன்னார்.

பயணிக்கும்போது பல இடங்களில், நல்ல அனுபவங்களைப் பெறுவதுபோல, பயணிகள் என்று தெரிந்து, இவர்கள் திரும்பி வரப்போவதில்லையென அறிந்து அறாவிலை கேட்கப்படுவதையும், ஏமாற்றப்படுவதையும் அனுபவித்திருக்கின்றேன். ஆனால் இப்படியொரு அருமையான மனிதரைக் கண்டதும், இந்த ஹொட்டலில் நான் சந்தித்த அனைத்து எதிர்மறை அனுபவங்களும் பண்ணைக் கடலில் மறைந்த சூரியனைப் போலக் கரைந்து போயின.

ஒரு நல்ல மனிதரை, ஒரு நல்ல அனுபவத்தை நீங்கள் சந்திக்கையில், ஒரு பயணம் இனிதாக நிறைவுபெறத் தொடங்குகின்றது.


***************

 

(Mar 10, 2023)


கார்காலக் குறிப்புகள் - 09

Thursday, July 06, 2023

 

யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற திரைப்படத்தை நேற்றுப் பார்த்தேன். அந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டதில் பல அபத்தங்கள் இருக்கின்றன. அத்துடன் இத்திரைப்படம், தொ.பத்தினாதனின் நூல்களில் இருந்து உருவப்பட்ட பகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டதென்கின்ற பத்தினாதனின் குற்றச்சாட்டுக்களும் முக்கியமானவை. இதைப் போன்றே எழுதப்பட்ட உண்மைக்கதையிலிருந்து அப்பட்டமாக உருவாக்கப்பட்டதுஅயோத்திஎன்ற திரைப்படம் என்று சொல்லப்பட்டாலும் அதற்கு இறுதியில் என்ன நடந்தது என்பதை நாமறிந்தால் தொ.பத்தினாதனுக்கு என்ன தீர்ப்பு இகொடுக்கப்படும் என்பதும் எளிதாக விளங்கும்.

மேலும் சிலர் பத்தினாதன் இதற்கு எதிராக வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்று அறைகூவல் செய்கின்றார்கள். இந்தத் திரைப்படத்தில் வரும் கதாநாயகன் மட்டுமில்லை, பத்தினாதன் கூட இந்தியக் குடியரசின் எந்த உரிமைக்கும் உரித்தில்லாதவர்களாக இருக்கும்போது எதன் பெயரில் வழக்குப் போடுவது? எவ்வாறு வழக்காடுவது என்பது இவர்களுக்குப் புரிவதில்லையா? ஒரு ஈழத்து அகதி எப்படி இந்தியாவில் வாழ முடிகின்றது என்று தெரியாத இவர்களுக்கே முதலில் விழிப்புணர்வு ஊட்டவேண்டும்.

ஆக, நான் இந்தத் திரைப்படத்தை அழகியல்/அரசியல்ரீதியாக உள்ளே சென்று இப்போது பார்க்கப் போவதில்லை. ஆனால் இத்திரைப்படத்தில் ஒரளவுக்கு போரும், அகதிகளின் வாழ்க்கையும் சொல்லப்பட்டிருப்பது ஒருவகையில் எனக்கு முக்கியமாகத் தெரிந்தது. தமிழகத்தில், முக்கியமாக திரைப்படங்களில் ஈழத்து அகதிகளின் கதையாடல் (Discourse) முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டவை. அதை மீறி ஈழத்தவர்களின் கதையைச் சொல்கின்றோம் என்று வந்த திரைப்படங்களைப் பார்த்தபோது (நந்தாதவிர்த்து), ‘ஆளை விடுங்கடா சாமிஎன்று, நீங்கள் எங்கள் கதையைச் சொல்லாமல் விட்டாலே போதும் என்று நம்மைக் கூற வைத்தவையே அதிகம்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்அபத்தமாய் எடுக்கப்பட்டாலும், அதில் இன்னமும் அகதிகளுக்கு தமிழகத்தில் இருக்கும் சிக்கல்களை திரையில் சொல்ல முயல்கின்றது என்பது கவனத்திற்குரியது. ஒரளவுக்கு தமிழக பொலிஸ்/கியூ பிராஞ்ச் எப்படி அகதிகளைச் சுரண்டுகின்றார்கள் என்பதை இது இயன்றவளவுக்கு காட்சிப்படுத்துகின்றது. ஏதாவது ஒரு நாட்டின் குடியுரிமை உள்ளவர்க்கு இருக்கும் Privilegeகளில் எதுவும் இந்த அகதிகளுக்கு இல்லையென்று நம்மைக் கொஞ்சமேனும் குற்றவுணர்ச்சியடையச் செய்கிறது.

நான் இத்திரைப்படத்தை கொழும்பில், இப்போதும் மே 18 நினைவுதினத்தில் கொல்லப்பட்ட மக்களை அமைதியாக நினைவுகூர முடியாத (பொரளையில் சிங்கள இனவாத அமைப்புக்கள் இந்நிகழ்வை பொலிஸ்/இராணுவ துணையுடன் கலைக்கின்ற காலகட்டத்தில்), ஒரு தலைநகரத் தியேட்டரில் இருந்து இறுதிப் போரின் சில காட்சிகளையும், வன்னியிலிருந்து தப்பிப் போகும்போது இலங்கை இராணுவத்தால் ஒருவனின் பிடறியில் பிஸ்டல் வைக்கப்பட்டு கொல்லப்படுவதையும், ஒரு பெண் போராளி கைகள் இரண்டையும் இழந்தபோது, இனி இராணுவத்தால் கைப்பற்றப்படப் போகின்றேன் என்ற நிலை வரும்போது, இந்த நாயக சிறுவனிடம் சயனைட்டை என் வாயில் வைத்துவிடு என்று கதறவதையும் பார்க்க முடிகின்றது என்பதுதான் என்னளவில் முக்கியமானது.

ஏனெனில் இன்னும் கூட, இலங்கைக்குள் ஈழப்படுகொலைகள் சம்பந்தமான புகைப்படங்களோடோடு, முகப்பு அட்டைகளோடோ வருகின்ற எந்தப் புத்தகத்தையும் உள்ளே நுழைய விடுவதற்கு இலங்கை அரசுக்கு தயக்கங்கள் உள்ளன. பல நூறு கேள்விகள் கேட்டே சுங்கத்திலிருந்து வெளியே எடுக்க அனுமதி தருகின்ற கதைகளையே நாம் அடிக்கடி கேட்டபடி இருக்கின்றோம்.


தனோடு சம்பந்தப்பட்டும்/படாத மாதிரி ஒரு விடயத்தை
, நமது செல்வத்தாரின் (செல்வம் அருளானந்தம்) பனிவிழும் பனைவளம்வாசித்துக் கொண்டிருந்தபோதும் உணர்ந்தேன். இந்த நூல் யாழில் வாழும் ஓருவனின் கதையைச் சொல்லத் தொடங்கி, ஒரு காதல் முறிவை மறக்க வேலையொன்றை எடுத்து மன்னாருக்கு 1970களின் பிற்பகுதியில் செல்கின்ற கதையைச் சொல்லி, பின்னர் அவன் அகதியாக ஜேர்மனிக்குப் புலம்பெயரும் அவலக் கதையைச் சொல்வதாக மாறுகின்றது. செல்வத்தாரின் மூன்று நூல்களும் அரசியல் என்று வரும்போது கிட்டத்தட்ட ஒரேவிதமான 'அப்படியும் இருக்கலாம், இப்படியும் இருக்கலாம்' என்கின்ற மேலோட்டமான கருத்துக்களை பாத்திரங்களின் உரையாடல்களின் மூலம் தொடர்ந்து இந்தப் புத்தகத்திலும் சொல்லிக்கொண்டிருப்பது சற்று அலுப்பைத் தருகின்றது. ஆனால் இதன் முக்கியம், ஏனைய எந்தப் புலம்பெயர் நூலிலும் இல்லாதவளவுக்கு ஈழத்து சாதியத்தின் கொடுமையைத் தொடர்ந்து இடைவெட்டிச் சொல்கின்றது என்பதில் இருக்கின்றது. அத்தோடு அவற்றை எப்படி இந்த மாந்தர்கள் கடந்து செல்கின்றார்கள் என்பதும் கவனத்திற்குரியது. ஒருவகையில் சல்மா ஆண்களைப் பார்த்து, ‘எல்லாப் புரிதல்களுடனும் விரிகிறது என் யோனிஎன்று எழுதியதைப் போல, ‘பனிவிழும் பனைவளம்நூலின் கதைசொல்லி இவ்வாறு ஆதிக்கசாதியினரைப் புரிந்து கொள்ள முயல்கின்றான்.

ஈழத்தில் போர் நிகழ்ந்து முடிந்து 15 ஆண்டுகள் இப்போது தொடங்கும்போதும் கூட, நிம்மதியாக அவர்களை நினைவுகூர முடியாத நிலையே இருக்கின்றது. அப்படிக் கொல்லப்பட்ட மக்களை எங்கும் நினைவுகூர வெளிகளை உருவாக்காமல், அவர்கள் அதன்மூலம் ஆற்றுப்படுத்தி தங்கள் உளவடுக்களை இல்லாமற் செய்ய முயலாமல், இன்றைய தொங்குநிலை ஜனாதிபதி அதேநாளில் இராணுவத்தின் வீரர்களின் போர் வெற்றிவிழாவில் பெருமிதத்தோடு கலந்துகொள்கின்றார்.

அதைவிட அபத்தமாய் கனடாவின் பிரதமர் மே 18ஐ ஒட்டி வெளியிட்ட அறிக்கையில் இன அழிப்பு (genocide) 2009இல் இலங்கையில் நிகழ்ந்தது என்று சொன்னதற்காய் இந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கடுமையாககனடாவின் இலங்கைக்கான அம்பாஸிடருக்கு எச்சரிக்கை விடுத்தாரென இங்குள்ள சிங்கள/ஆங்கிலப் பத்திரிகைகள் எழுதிக் குதூகலிக்கின்றன. இதன் குரூரநகைச்சுவை என்னவென்றால், அன்று இனப்படுகொலை நடைபெறவில்லை, போர்க்குற்றங்கள்தான் இராணுவத்தாலும், புலிகளாலும் நடந்ததென்று ஐ.நாவின் அறிக்கையையே இலங்கையில் வெளிவிவகார அமைச்சர் உசாத்துணைக்கு இந்த அறிக்கையில் எடுத்தாள்கின்றார். அன்பரே, இனப்படுகொலை என்பதோ, போர்க்குற்றங்கள் என்பதோ ஒரு சொல்தானே, அதற்கான வரைவிலக்கணங்களை மேற்குலகங்கள் தங்கள் வசதிப்படி கொடுத்து வைத்திருப்பதை, பின்னர் நாம் ஆராய்வோம்.

போர்க்குற்றங்கள் அரசு, புலிகள் என்ற இரண்டு தரப்பாலும் நடத்தப்பட்டபோது பாதிக்கப்பட்டது யார்?அப்போது இறந்த 50,000-70,000 மக்கள் எந்த நாட்டின் குடிமக்கள்? போர்க்குற்றங்கள் செய்ததாகச் சொல்லப்பட்ட ஒரு தரப்பான புலிகள் அன்றே அழிக்கப்பட்டுவிட்டார்கள். யாருக்கு இப்போது பொறுப்புக்கூறும் கடமையுள்ளது. புலிகள் என்ன இறையாண்மையுள்ள ஓர் அரசா? அவர்களா இந்த 50,000 இற்கு மேற்பட்ட மக்களை அழித்தார்கள்? இந்த நாட்டின் குடிமக்களாக இருந்த அந்தப் பொதுமக்களின் படுகொலையில் அரசின் கரங்கள் இரத்தக்கறை படவேயில்லையா? அவர்களின் உறவுகள், சுற்றத்தார், நண்பர்களுக்கு நீங்கள் எந்த ஆறுதலைக் கொடுத்தீர்கள்? இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்? போன்ற எண்ணற்ற கேள்விகள் நம்மிடையே இருக்கின்றன.

இம்முறை மட்டுமில்லை, கடந்த சில ஆண்டுகளாக கனடா அரசு இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என்று அறிக்கை வெளியிட்டபடிதான் இருக்கின்றது. மே மாதத்தில் ஒரு வாரத்தை இலங்கையின் இனப்படுகொலை வாரம் என்று கனடாவில் அறிவித்து கனடாவில் சில மாகாண/நகராட்சி மட்டங்களில் அனுட்டித்து விழிப்புணர்வு செய்யவும் அங்கே செய்கின்றார்கள். அது சரி சென்ற வருடம் ஏன் நீங்கள் இப்படி கனடாவிற்கெதிராகப் பொங்கவில்லை? சென்ற வருடம் அரகலியா போராட்டம் காலிமுகத்திடலில் நடைபெறாவிட்டால், உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பம் இப்போது வந்திருக்குமா என்ன?

அன்புள்ள இறையாண்மை இலங்கை அரசின் அமைச்சர்களே, நீங்கள் போராடவேண்டியது மேற்குலகங்களோடு அல்ல, உங்கள் சொந்த மக்களோடுதான். அவர்களுக்கு நீங்கள் ஆறுதலும், நிறைவான ஆட்சியும் கொடுத்தால் ஏன் மேற்குலகத்தான் இங்கே வரப்போகின்றான். எங்கள் மக்களை இந்த மேற்குலகம் துவித நிலைகளுக்கு (polarization) தள்ளுகின்றது என்று ஏன் நீங்கள் புலம்பவேண்டும். நல்லாட்சியும், மீளிணக்கமும் சிறப்பாக நடைபெறுமாக இருந்தால், மேற்குலகம் இடையூறு செய்வதை, அரசுக்கு முன்னர் அம் மக்களே பொங்கியெழுந்து அந்நியனே உனக்கென்ன வேலை எம் நாட்டில்என்று சொல்லியிருக்கமாட்டார்களா என்ன?

ஆகவே ஆகக் குறைந்தது முதலில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கோ, போர்க்குற்றங்களுக்கோ மனச்சுத்தியோடு அம்மக்களிடம் மன்னிப்புக் கேட்டு, அழிவுகளுக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் கூட, அவர்கள் இழந்த உறவுகளுக்காக நிம்மதியாக அழுவதற்காவது அவர்களை இப்போது விடுங்கள்.

'பனிவிழும் பனைவளத்தில்' வரும் ஒருபகுதி இது, இதை வாசிக்கும்போது நீங்கள் இந்நாட்டு மக்களுக்கு உடனடியாகச் செய்யவேண்டியது என்னவென்பதாவது புரியட்டுமாக!

ஏனெனில் நானும் அன்று இந்நிகழ்வில் ஓர் சாட்சியாக அங்கேயிருந்தேன்.

"முள்ளிவாய்க்கால் பேரவலம் முடிந்த அந்த மே மாதத்தில் 20ஆம் திகதி நான் வாழும் பட்டணத்துப் பாராளுமன்றத்துக்கு அருகே பெருமளவில் தமிழர் கூடி காற்றாகிப் போன இலட்சக்கணக்கான தங்கள் உடன்பிறப்புகளுக்கு அஞ்சலி செய்துகொண்டிருந்தனர்.

நானும் என் நண்பர்கள் சிலரும் அங்கு போயிருந்தோம். இவ்வளவு பெருந்தொகையில் தமிழர் கூடிப் பெருமூச்சுகள் விட்டும் பெரும் குரல் எழுப்பி அழுததையும் என் வாழ்வில் நான் மறக்க முடியாதது.

அது கடும் துயர் கவிந்த பெரும் இரவு. இந்த நாட்டு பொலிஸார் குதிரைகளிலும் மோட்டார் சைக்கிளிலும் சுற்றிவர நின்றார்கள். மக்களோடு மக்களாகக் கலந்தும் நின்றார்கள்.

எங்கோ தொலைதூரத்தில் இருந்து தங்கள் நாட்டில் அடைக்கலம் தேடி வாழ வந்த மக்களின் துயரில் பங்குபற்றுவதைப் போல எங்கும் அவர்கள் அமைதியாக நின்றுகொண்டிருந்தார்கள்.

மனம் கனத்தது. நான் என் நண்பர்களை விட்டு நழுவிப்போய் ஒரு மரத்தின் கீழ் நின்றேன்.

என் உறவுகளை நினைத்தேன். நான் பிறந்து வாழ்ந்த என் ஊரை நினைத்தேன். அல்பிரட் அண்ணனின் மகள் மல்லிகாவையும் கார்க்கார இராயப்புவையும் நினைத்துப் பெரும் குரல் எடுத்து அழுதேன். என் அழுகை அங்கு புதினமாகப் பார்க்கப்படவில்லை. எல்லோரும் அழுதுகொண்டிருந்தார்கள்.

என் பின்புறமாகத் தோளில் ஒரு கை விழுந்தது. மறுகை என்னை ஆதரவோடு அணைத்தது, திரும்பினேன். ஒரு கறுப்பினப் பெண் பொலீஸ் அதிகாரி கருணை ததும்பும் விழிகளுடன் என்னைப் பார்த்தாள்."

(ப.230)

***************************


(May 26, 2023)


சென்னை

Wednesday, July 05, 2023

வசந்த முல்லையும், சுறாப்புட்டும்...


சென்னையில் ஒரு இரவு பயங்கரப் பசியில் இருந்தேன். கடைகள் எல்லாம் பூட்டும் தருவாயில் இருந்தன. ஓர் உணவகத்தில் உணவு ஏதும் எடுத்துக் கொண்டு போய், விடுதியில் ஆறுதலாக இருந்து சாப்பிடலாமென தீர்மானித்திருந்தேன். மெனுவைப் பார்த்தபோது சுறாப்புட்டு வசீகரித்தது. இது பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றேனே தவிர அதுவரை தைச் சாப்பிட்டதில்லை. கடைக்காரரிடம், அண்ணா ஒரு சுறாப்புட்டு பார்சல் என்று கூலாக் கூறிவிட்டுக் காத்திருந்தேன். இடையில் சந்தேகம் வர, இதனோடு சாப்பிட ஏதும் கிரேவி வேண்டுமா என்று கேட்டேன்; dry ஆகத்தான் இருக்கும், ஆனால் அப்படியே கூடச் சாப்பிடலாம் என்று அவர் ருசி காட்டினார்.


நான் காத்திருந்த சுறாப்புட்டு கையில் வந்தது. ஆனால் எனக்கு ஒரே அதிர்ச்சி. 300 ரூபாய் சுறாப்புட்டு ஒரு குட்டி டப்பாவில் தரப்பட்டது. நான் யாழ்ப்பாணத்து முட்டைப்பொறியல் பிரட்டித் தரும் புட்டைப் போல அல்லவா, இந்தச் சுறாபுட்டை எதிர்பார்த்திருந்தேன். திகைப்போடு கடைக்காரரிடம், "அண்ணா, சுறா இருக்கிறது, எங்கே புட்டு?" என்றேன். தம்பி இதுதான் சுறாப்புட்டு என்று அவர் அடம்பிடித்தார். எனக்கு அவ்வளவு கோபம். விஜய்தான் சுறா என்று ஒரு படம் நடித்து எங்களை ஏமாற்றினார் என்றால், நீங்கள் புட்டுத்தராமல் சுறாப்புட்டு தந்து என்னை ஏமாற்றிவிட்டீர்கள் என்று கடைக்காரரைத் திட்டிவிட்டு இன்னொரு தெருக்கடையில் பரோட்டாவும், பன்னீர்க்கறியும் வாங்கிச் சாப்பிட்டு என் வயிற்றெரிச்சலைக் கரைத்துக் கொண்டேன்.

இப்படி சுறாப்புட்டோடு சுதாகரித்திருக்க வேண்டும். ஆனால் சிங்காரச் சென்னையை காதலிகளை விடக் கூட காதலித்ததாலோ என்னவோ அடுத்த நாள்,'வசந்தமுல்லை' என்ற படம் பார்க்கப் போனேன். பகலில் சென்னை வெயில் சுட்டெரிப்பதால் மதியக்காட்சிக்கு ஏஸிக்குள் நிம்மதியாய் இருக்கலாம் என்பதும் படம் பார்க்கப் போனதற்கு இன்னொரு காரணம். ஒவ்வொரு பயணங்களிலும் புதிதாய் எதையாவது கற்கவேண்டும், அதுவரை தாண்டாத எல்லைகளைக் கடக்க வேண்டும். இல்லாவிட்டால் ஊர்சுற்றுவதில் என்ன பயன். 'வசந்தமுல்லை'யின் டிரெயிலர் பார்த்தபோது ஒரு அமானுஷ்யப் படம் போலத் தெரிந்தது. நான் இப்படியான அமானுஷ்ய/பேய்ப் படங்கள் பக்கம் போவதில்லை. அவ்வளவு பயம். இம்முறை இப்பயத்தைக் கடந்து -புதுவிடயமொன்றைப் பயணத்தின்போது கற்பதற்காக- வசந்தமுல்லைக்குப் போனேன்.

படத்தின் தொடக்கக் காட்சி சத்யம் தியேட்டரில் நடக்கும். அது காட்சிப்படுத்தப்பட்ட சத்யம் தியேட்டரில்தான் நானும் படம் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு சண்டைக்காட்சி தியேட்டர் washroom இல் நடக்கும். எனக்குப் பிடித்த மசாலா 'டீ' எவ்வளவு இங்கே குடித்தாலும், இனி கழிப்பிடப் பக்கம் போவதில்லையென அப்போதே தீர்மானித்தேன். அநேகமாய் பேய் அங்கிருந்துதான் வெளிவரப் போகின்றதென்று இருக்கையை இன்னும் கைகளால் இறுக்கப் பிடித்தேன்.

அடுத்த காட்சி மூணாறிலோ
, இடுக்கியிலோ எடுக்கப்பட்டிருக்க வேண்டும். மர்மமான சூழல். அதன் பின்னணியில் ஒரு பாடல் நன்றாக ஒளிப்பதிவும் செய்யப்பட்டிருந்தது. மவனே/மவளே நீ எந்தப் பாலினப் பேயாக இருந்தால் என்ன, நானே இடுக்கியில் நள்ளிரவில் ஏலம் கள்ளமாகப் பிடுங்கத் தனியே போயிருக்கின்றேன். உன்னைச் சமாளிக்கத் தயார்' என்று வசந்தமுல்லையில் வரும் பேயைச் சந்திக்க அறைகூவல் விடுத்தேன். மனதுக்குள் வீர சபதம் எடுத்தது, பக்கத்து இருக்கையில் இருந்த பெண்ணுக்கு எப்படிக் கேட்டதோ தெரியாது, "அண்ணா, நீங்கள் நம்ம சீமானின் விடீயோக்கள் தினமும் பார்ப்பீர்களோ" என்று கேட்டார். "இல்லையே, நான் காலையில் கண் விழிப்பதே, என் குரு நித்தியானந்தாவின் சொற்பொழிவுகளோடுதான் என்றேன். அய்யோ, அது இன்னும் ஆபத்தானதே' என்று காலியான இருக்கை தேடி அடுத்த வரிசைக்கு அவர் எழும்பிச் சென்றுவிட்டார்.

எப்படா பேய் வரும் வருமென்று எதிர்பார்த்த எனக்கு, படம் முடியும்வரை பேயே வராதது சுறாப்புட்டில் புட்டு இல்லாதது மாதிரி ஏமாற்றமாக இருந்தது. அதுகூடப் பரவாயில்லை, தூக்கம் ஒழுங்காக இல்லாதுவிட்டால், சிந்திப்பது குழம்பும் என்று 5 நிமிடக் குறும்படத்தில் சொல்லவேண்டிய செய்தியை ஏன் 2 மணித்தியாலப் படத்தில் நீட்டித்துச் சொன்னர்களோ தெரியவில்லை.

இந்தத் துயரத்தை நண்பர் ஒருவருக்குச் சொல்லிக் கொண்டிருந்தேன். வசந்தமுல்லைக்குப் போனபோது கூட பக்கத்து அரங்கில் தீபிகா படுகோனேயின் "பதான்" போய்க் கொண்டிருந்தது. ஏற்கனவே தேசப்பற்று என் இரத்தத்தில் உயர் அழுத்தத்தில் இருப்பதால் பேய்ப்படம் பார்த்து, தைக் கீழே இறக்கத்தான் வசந்தமுல்லைக்குப் போனேன்ஆனால் பேயைக் கண்ணில் காட்டவில்லை என அவருக்குச் சொன்னேன். அவரோ, நீ இலங்கைத் தமிழ்ப் பாடத் திட்டத்தில் 'வசந்தமுல்லை பந்தடித்தல்என்ற காமக் கிறங்கல் பகுதியைப் படித்த ஞாபகத்தில் ஒரு செமி போர்ன் படத்தை எதிர்பார்த்து வசந்தமுல்லை’க்குப் போயிருப்பாய், உன்னை வைத்து நன்கு செய்துவிட்டார்கள் என்று சொல்லிவிட்டு ஹா ஹா எனச் சிரித்தார். 

இறுதியில் ஒரு மோகினியை எப்படியோ  நான் சந்தித்துவிட்டேன் என்று அவருக்குச் சொல்லவில்லை.

 
************


(Feb 13, 2023)

திருக்கோணமலை

Monday, July 03, 2023

 

நண்பகல் நேரத்து மயக்கம்

********************

திருக்கோணமலையில் நின்றபோது 'விடுதலை' படத்தை முதல் காட்சியிலே பார்க்க விருப்பம் ஏற்பட்டது. பத்துதலை, விடுதலை என்று நிறையத் தலைகள் ஒரே நேரத்தில் வெளிவந்ததால் எந்தக் காட்சி எப்போது ஓடுகின்றது என இந்தத் தறுதலைக்கும் குழப்பம் வந்தது. 5 நிமிட நடையில் அருகில் நெல்சன் தியேட்டர் இருக்க, நேரேயே போய் கேட்கலாமென காலை 10.30 மணிக்காட்சிக்குப் புறப்பட்டேன்.

இதற்குள் காளிகோயில் திருவிழாவிற்கு வரும் அடியார்க்கு எங்கள் சித்தி குடும்பம் தினம் மோர் ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தது. மோரைக் கரைத்தல், வெங்காயம், மிளகாய் வெட்டிக் கலத்தெனும் கடின வேலைகளையெல்லாம் மற்றவர்கள் செய்தார்கள். நான் மோரை அள்ளி ஊற்றும் திருபணியை மட்டும் செய்து பிறருக்கு கடும் தன்னார்வலர் போலப் படங்காட்டினேன். கூடவே உதவிக்கு இரண்டு பெண்கள் இருந்ததால், வெயில் சுட்டெரித்தாலும் மனது மோரைப் போல் குளிர்மையாக இருந்தது. அம்மாளாச்சி, தன் அணுக்கத் தொண்டனுக்குக் கொடுக்கும் அருள் என்பது இதுதானோ?

அன்று காலை தொடங்கிய மோர் அள்ளியூற்றும் அருட்பணியை முடிக்கவே பத்தரைக்கு மேலே ஆகிவிட்டது.

இதற்கிடையில் ஒருத்தன் வெளிவீதியில் அடியடித்த மணல் உடலோடு வந்து அடிக்கடி மோர் வாங்கிக் குடித்தான். நான் என்ன ஓர் பக்தி, உடலைக் கூடக் கழுவாமல் மண்ணோடு வந்து தாகத்தோடு மோர் வாங்கிக் குடிக்கின்றானே என வியக்க, அருகில் இருந்த பெண்களோ, 'அண்ணா, இவன் மோருக்காகவே உடம்பில் சும்மா மணலை அள்ளிப்பூசிக்கொண்டு வந்திருக்கின்றான்' என்று இப்படிப்பட்ட ஆண் இனத்தில் நான் பிறந்தற்காகப் பெருமிதப்பட்டதையே உடைத்து நொறுக்கினார்கள்.

உண்மையாக உழைப்பவர்கள் அதன் பெருமிதத்தைக் காட்ட, வியர்வைத்துளிகளைக் காட்டியபடி எங்கும் செல்லாம், என்னைப் போன்ற மோர் ஊற்றியே முதுகுவலி கண்டவர்கள் அப்படி வியர்வையுடன் வெளியே செல்வது உழைப்பவர்க்கே அவமானம். ஆகவே ஓடிப்போய் குளித்துவிட்டு நெல்சன் தியேட்டருக்குப் போக 10.45 ஆகிவிட்டது. இவ்வளவு பெரிய தியேட்டரைக் கட்டிவிட்டு உள்ளே போகவும், ரிக்கெட் எடுக்கவும் ஒரு சுரங்கப்பாதை போல ஒற்றை இருட்டுப் பாதை வைத்திருந்தது தெரியாமல், 'எங்கையடா என்ரன்ஸு' என்று நான் குழப்பிப் போனேன்.

அப்படி தியேட்டர் தெருவுக்குள் திரும்பும்போது ஒரு இளைஞனைக் கண்டேன். சுட்டெரிக்கும் வெயிலுக்குள் மேலாடை இல்லாது குறுக்கும் மறுக்குமாகப் பெருந் தெருவில் திரிந்து கொண்டிருந்தார். ஆள் திடகாத்திரமாகவும்
, நல்ல உயரமாகவும் இருந்தார். ஏதும் வம்புக்குப் போனால் நம்ம பத்துதலசிம்பு போன்ற பத்துப்பேரையே அடித்துத் துவைக்கக் கூடிய 'ஆஜானுபாவராக'த் தெரிந்தார். நான் ஒருமாதிரி இருண்ட பாதையைக் கண்டுபிடித்து நெல்சன் தியேட்டக்காரர்களிடம் விடுதலைக்கு ரிக்கெட் கேட்க, இப்போது 'பத்துதல' தான் இரண்டரைக்குத்தான் 'விடுதலை' என்றனர். உடனே காளி கோயிலடிக்குத் திரும்பிப்போகவும் வெட்கமாயிருந்தது. விடுதலைக்கு விடுவிடுவென்று மோர் ஊற்றிப் போனவர், விரைவிலே விடுதலையாகி அந்த 'அடியடித்த மணல்மேனியன்' போல வந்துவிட்டாரென்று இந்தப் பெண்களே என்னை நக்கலடிப்பார்கள். எனவே தியேட்டருக்கு வெளியே வந்து ஒரு பெருமரத்தடியில் இருந்து தெருவை வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன்.

இப்போதும் அந்த இளைஞர் அவ்வளவு உக்கிர வெயிலுக்குள் எதையோ தன்பாட்டில் பேசியபடி, குறுக்கும் மறுக்குமாகத் திரிந்து கொண்டிருந்தார். அவரோடு வந்தவர் என அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர் என்னோடு பேசத் தொடங்கினார். தானும், அந்த திடகாத்திர இளைஞரும் படம் பார்க்க வந்தோம். ஆனால் தியேட்டருக்குள் போனவுடன் படம் பார்க்கப் பிடிக்கவில்லை என்று அவர் வெளியே வந்துவிட்டார். அது கூட பரவாயில்லை. இப்போது மேற்சட்டையைக் கழற்றிவிட்டு இப்படி ரோட்டில் திரிகிறார், என்ன செய்வது என்றும் தெரியவில்லை என்று கவலையுடன் சொன்னார்.

அந்த திடகாத்திர இளைஞரின் பெற்றோர் இவரோடு படம் பார்க்க அந்த இளைஞனை ஓட்டோவில் அனுப்பத்தான் இப்படி அவர் மேற்சட்டையைக் கழற்றிவிட்டு அங்கும் இங்குமாக அலையத் தொடங்கியிருக்கிறார். எனக்கு என்ன சொல்வதென்றும் தெரியவில்லை. எப்படியெனினும் இவரை அவரின் பெற்றோரிடம் கொண்டுபோய் ஒப்படைத்தால்தான் தனக்கு நிம்மதி என்றும்
, அவர்களுக்குத்தான் இப்போது தொலைபேசியிருக்கின்றேன் என்றார் இவர்.

அவர் வீட்டிலிருந்து வரும்போதும் ஏதேனும் இப்படி வித்தியாசமான சமிக்ஞைகள் காட்டினாரா எனக் கேட்டேன். எனக்கு அவரைப் பற்றி அவ்வளவு தெரியாது, அந்த இளைஞன் கனடாவிலிருந்து வந்திருக்கின்றார் எனச் சொன்னார். கனடாவிலிருந்து வருகின்றவர்கள் எல்லோருமே என்னை மாதிரி ஒரு மார்க்கமாகவே இருக்கின்றார்கள் என்பதால் நானும் கனடாதான் என்று இவரிடம் சொல்லாமல் தவிர்த்தேன்.

ஆனால் ஓட்டோவில் வரும்போது அல்லாவைப் பற்றி எதிர்மறையாகக் கதைத்துக் கொண்டிருந்தார். நீங்களே சொல்லுங்கள் அல்லாஹ்தானே இந்த உலகத்தைப் படைத்தார், ஆனால் இவர் அதை மறுத்து அப்படியில்லை என்று சொல்லிக் கொண்டுவந்தார் என்றார். நான் இந்த விவாதத்திற்குள் போக விரும்பாது அவரவர்க்கு அவரவர் நம்பிக்கை. அதன் வழி ஒவ்வொருவரையும் விட்டுவிட்டால் நமக்கும் நிம்மதி என்று சொல்லி விட்டு, அந்த இளைஞரை வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு செல்லும் வழியைப் பார்ப்போம் என்றேன்.

சிலவேளை இப்படி அந்த இளைஞர் தன்போக்கில் தெருவில் திரிய, பொலிஸ் ஏதாவது வந்து கேட்டால் என்ன சொல்வது என்பது பற்றித்தான் நாங்கள் இரண்டுபேரும் பயந்தோம். கொஞ்சம் பதற்றமாகவும் இருக்கத்தான் செய்தது. நல்லவேளையாக கொஞ்ச நேரத்தில் அந்த இளைஞரின் வாப்பா யாரோ ஒருவரை ஆட்டோவில் அனுப்ப, இளைஞர் மிக நிதானமாக தியேட்டருக்குப் பக்கத்தில் இருந்த மரத்தில் கழற்றியெறிந்த ஷேர்ட்டை எடுத்து அணிந்துகொண்டு, எதுவுமே நடக்காததுபோல ஓட்டோவிற்குள் ஏறி எனக்குக் கையசைத்தார். நானும் அவர்களிடம் இருந்து விடைபெற்று காளி கோயிலடியை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

எல்லாமே நடந்தன, ஆனால் எதுவுமே நிகழவில்லை போல அந்தப் பொழுதை, காலமென்ற கருந்துளை கடந்தகாலமாய் உட்செரித்துப் போயிற்று. வாழ்வில் சில சந்தர்ப்பங்களில் நாமேன் நமக்குத் துளியும் சம்பந்தமில்லாத விடயங்களுக்குச் சாட்சியமாக இருக்கின்றோமென்பதும் புரிவதில்லை.

*********************


(Apr 21, 2023)


கார்காலக் குறிப்புகள் - 08

Sunday, July 02, 2023

 

குடும்பம் என்கின்ற அமைப்பில் பெண்களே அச்சாணிகளாய் இருக்கின்றார்கள். அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டாலும், அவர்களின் வழிநடத்தல் இல்லாது போகும்போது குடும்பம் என்ற அமைப்பு உடையத் தொடங்குகின்றது. அப்போதும் அந்தச் சிதைவைச் சரிசெய்து அடுத்த தலைமுறைக்கு வழிநடத்தவும் இன்னொரு பெண்ணே பெரும்பாலும் தேவைப்படுகின்றார். மனிதகுல வரலாற்றில் வேட்டையாடும் காலம்வரை பொறுப்புக்கள் திணிக்கப்படாது சுதந்திரமாக இருந்த பெண், வேளாண்மைச் சமூகமாக வாழமுற்பட்டபோது எப்படி குடும்பம்என்ற அமைப்பால் உள்ளிழுக்கப்பட்டாள் என்பது நாமனைவரும் ஏற்கனவே அறிந்தே இருக்கின்றோம்.

அசோகமித்திரனின் ‘மணல்என்கின்ற குறுநாவலில் வரும் அம்மா என்கின்ற பாத்திரமே இந்தக் குடும்பத்தில் ஒவ்வொருவரையும் இணைத்துக் கொள்ளும் முக்கிய கண்ணியாக இருக்கின்றார். அம்மாவின் பெரும்பாலான நேரம் வீட்டுச் சமையலறையிலேயே கழிந்துவிடுகின்றது. அவருக்கு மூன்று பெண்களும், இரண்டு ஆண்களும். இரண்டு பெண்கள் திருமாணமாகிவிட்டனர். இப்பெண்களின் தகப்பனும், இரண்டு ஆண்களும் உழைப்பவர்களாக இருப்பினும், எவ்வித பொருளாதார சுதந்திரமும் இல்லாது வீட்டுக்குள் வாழும் அம்மாவே எல்லோரையும் கவனித்துக் கொள்கின்றார். பிரச்சினைகள் வரும்போது அந்த அழுத்தங்களைக் குறைத்து குடும்பத்தைக் கொண்டு செல்கின்றார்.

இந்தக் குடும்பத்தில் திருமணம் செய்துவிட்டுப் போன ஒரு பெண், குழந்தைகளுடன் வீட்டுக்குத் திரும்பி வருவதுடன் இக்குறுநாவல் தொடங்குகின்றது. ஏதோ சிறுவிடுமுறையில் தன் மகள் வனஜா வந்திருக்கின்றார் என்று நினைக்கும் அம்மாவிற்கு, வனஜா தனது கணவரோடு சண்டை பிடித்து வந்திருக்கின்றார் என்பது புரிகிறது. ஏற்கனவே வீட்டில் இருக்கும் இரண்டு மகன்கள், இளையமகளோடு வனஜாவையும் பார்க்கவேண்டிய பொறுப்பு அம்மாவுக்கு வந்துவிடுகின்றது.

மூன்று ஆண்கள் வீட்டில் இருந்தாலும், அந்த ஆண்களுக்கு இடையில் ஏதும் பெரிய பேச்சுவார்த்தை இருப்பதில்லை. இளையமகன் அப்பு வித்தியாசமானவன். வீட்டில் இருந்து அதிகம் அந்நியப்பட்டவனாக இருக்கின்றான். மூத்தமகன் மணி கிட்டத்தட்ட அப்பாவைப் போன்றவன். வேலையில் கிடைக்கும் சம்பளத்தை அப்பாவிடம் கொடுத்துவிடும் இன்னும் மணமாகாத மகன்.

மணிக்கு வீட்டில் பெண் பார்க்கின்றனர். மணிக்கு அந்தப் பெண்ணைப் பிடித்தாலும், அம்மாவுக்கு அந்தப் பெண் தங்கள் குடும்பத்துக்கு ஏற்ற பெண் இல்லை என்கின்ற எண்ணம் இருக்கின்றது. அம்மாவின் கடைசிமகள் சரோஜா மருத்துவம் படித்துக்கொண்டிருப்பவள்.

இவ்வாறு குடும்பம் ஒவ்வொரு பக்கமாய் இழுபடுகின்றபோது அம்மா சட்டென்று இறந்து போகின்றாள். குடும்பத்தின் எல்லாக் கண்ணிகளும் சிதறுகின்றன. மணியின் திருமணம் நின்றுபோகின்றது. திருமணம் செய்த பெண்கள் சொத்தில் பங்கு கேட்கின்றார்கள். இளையமகள் சரோஜாவின் மருத்துவ மேற்படிப்பு கட்டுவதற்கு பணமில்லாததால் இடைநிறுத்தப்படுகின்றது. அம்மாவின் இரண்டாவது மகன் வேறொரு சாதியில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வீட்டை விட்டுப் போய்விடுகின்றான்.

குறுநாவல் இறுதியில், ஒரு வருத்தக்கார அப்பா, இன்னமும் திருமணம் செய்யாத மூத்தமகன் மணி, படிப்பை மிகவும் நேசித்து, இப்போது எல்லாவற்றையும் கைவிட்டு வீட்டுக்குள் அம்மாவின் பொறுப்பை எடுத்துக்கொண்ட சரோஜா போன்ற உயிர்ப்பற்று வாழவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்வதுடன் முடிகின்றது.

ந்த நாவலில் அசோகமித்திரன் சம்பவங்களை மட்டும் கொண்டு நமக்கு விபரிக்கின்றார். எந்தப் பாத்திரத்துக்குள்ளும் இறங்கி தத்துவவிசாரணைகள் செய்வதில்லை. இவர்கள்தான் மனிதர்கள்
, இவ்வாறுதான் வாழ்க்கை இருக்கின்றது என்ற சித்தரிப்பை மட்டும் நமக்கு எழுத்தால் காட்டுகின்றார். நாம் காட்சிச் சிதறல்களாய் காலத்தில் நகரும் ஒரு வாழ்வின் பகுதியை மெளனமாகப் பார்த்துக் கொள்கின்றோம். இந்த நாவல் 1969இல் வெளியிடப்பட்டிருக்கின்றது. இன்றைக்கு 50 வருடங்கள் ஆன பின்னும், நம் குடும்பங்களைத் தாங்கிக்கொள்ளும்/இணைத்துக்கொள்ளும் கண்ணிகளாக நம் அம்மாக்களே இருப்பதை எண்ணிப் பெருமூச்சுவிடுகின்றோம். பெண்கள் இல்லாத வீடுகள் பொலிந்து செழிப்பதில்லை என்பதையும் கண்டுணர்கின்றோம்.

இப்படி நமக்கு குடும்பம் என்ற அமைப்புக்கு பெண்களே முக்கியமாக இருக்கின்றார்கள் என்று தெரிந்தும், நாம் அவர்களை இன்னும் சுரண்டுபவர்களாகவும், அவர்களுடன் பொறுப்புக்களை பகிர்ந்து கொள்ளத் தயங்குபவர்களாகவும் இருக்கின்றோம். வீடுகளில் பெண்களின் சம்பளமற்ற உழைப்பையும், அவர்கள் நமக்கு வழங்கும் நிபந்தனையற்ற அன்பையும் கண்டும்காணாது, இன்னுமின்னும் அவர்கள் நமக்கு அள்ளி வழங்கவேண்டுமென எதிர்பார்க்கின்றோம். இந்த எதிர்ப்பார்ப்பை, நமது தடித்தனத்தைத்தான் அசோகமித்திரன் ஒரு குடும்பத்தின் வாழ்வை இங்கே சொல்வதன் மூலம் கேள்வி கேட்க விரும்புகின்றார் போலும்.

அசோகமித்திரன் என் பிரியத்துக்குரிய எழுத்தாளர். அவரின் பெரும்பாலான நாவல்கள்/குறுநாவல்கள் தேடித்தேடி வாசித்திருக்கின்றேன். பிறரால் அவ்வளவு கவனிக்கப்படாத ஒற்றன்எனக்கு மிக நெருக்கத்திற்குரிய நாவல். பிரியமான எழுத்தாளர் என்றாலும் அவருக்கு இருக்கும் சில சனாதனமான கருத்துக்களை எல்லாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றில்லை.

இதில் ஓரிடத்தில் சரோஜினி பரீட்சை எடுத்து பெறுபேறுகள் வந்தபின் தொடர்ந்து படிக்க முடியாது இருக்கும்போது, “பர்ஸ்ட் கிளாஸ்தான், ஒரு டிவாங்கியிருக்கிறாள். அப்பா பூணூலை எடுத்துக் காண்பித்தார். மூணு டி வாங்கினாலே இதுக்கு இல்லேன்னுடுவான். ஒரு டிக்கெல்லாம் அவ்வளவு சுலபமா?” என்று எழுதியிருப்பார். இது இந்தக் குறுநாவலில் வரும் ஒரு பாத்திரம் சொன்னாலும், அசோகமித்திரன் இதைப்பற்றி பிறகு எந்த இடத்திலும் தன் குரலில் அதற்கான நியாயம்/அநியாயம் பற்றிப் பேசுவதில்லை. அசோகமித்திரன் இறுதிக்காலத்தில் கூட பிராமணர்கள் தமிழ்நாட்டில் ஒடுக்கப்படுகின்றார்கள் என்கின்றமாதிரியான நேர்காணல் ஒன்றைக்கொடுத்து சர்ச்சைக்குள்ளானவர். இது ஒருவகையில் இடஒதுக்கீடு மீது அசோகமித்திரன் மீதிருக்கும் ஒவ்வாமை என்றே எடுத்துக்கொள்ளவேண்டும். ஒரு புனைவில் பாத்திரங்கள் political correctness இல்லாது பேசலாம். ஆனால் எழுத்தாளரின் குரல் என்பது மறைந்தும்/ மறையாமலும் பிரதியொன்றில் அரசியலைச் சொல்வதை தேர்ந்த வாசகரொருவர் அறிந்துகொள்வார்.

இவ்வாறே இன்னொரு இடத்தில் அப்பு அதுவரை வீட்டில் இருந்தபடி, அம்மாவின் ஒரு மாதத் திதி வரும் நாளன்று சரியாக வீட்டைவிட்டு வெளியே போய், வேறொரு சாதியில் உள்ள பெண்ணைத் திருமணம் செய்வான். அதுவரை வீட்டோடு இருந்த, அம்மாவின் மீது நேசமுள்ள அப்பு அந்தநாளை தன் வாழ்வின் முக்கியமான தருணமொன்றிற்காக ஏன் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றான்? ஒருநாள் மேலதிகமாகக் காத்திருக்கமாட்டானா? இப்படி அப்புவின் பாத்திரத்தை எதிர்மறையாக (வேறொரு சாதியில் மணம் செய்வதால்) வாசகர்க்கு காண்பிப்பதிலும் அசோகமித்திரனின் அகமனது செயற்பட்டிருக்கின்றது என்று ஒரு வாசிப்பை நாம் செய்யலாம்.

அதேசமயம் பெண் பாத்திரங்களை, முக்கியமாக சரோஜினியை அசோகமித்திரன் நேர்த்தியாகப் படைத்திருப்பார். நிறையக் கனவுகள் இருக்கும் சரோஜினி அம்மாவின் மரணத்தோடு வீட்டுக்குள் முடங்கிப் போகின்றாள். திருமணம் செய்யாத இன்னொரு 'அம்மா'வாக அவள் அந்தக் குடும்பத்துக்கு பிறகு மாறியும் விடுகின்றாள் அவளுக்கு வயதும் ஏறிப்போகின்றது. கல்வி கற்கும்போது சிறகு விரித்த பறவையாத் திரிந்த அவளுக்கு வீட்டுக்குள் எப்போதும் இருப்பதும் மூச்சுமுட்டுகின்றது. தமையனிடம் வெளியே போய்விட்டு வரப்போகின்றேன் எனச் சொல்கின்றாள். அப்போது மணி 'காய்கறி ஏதும் வாங்கிவரப் போகின்றாயா?' எனக் கேட்கின்றான். அதற்கு சரோஜா, 'வெளியே போகின்றதுன்னாக் கூட, உங்களுக்கு உழைக்கத்தான் நான் போகணுமா?' என்று கேட்கின்றாள்.

இங்கே நம் பெண்களை குடும்பம் என்ற அமைப்புக்கு வெளியே சென்றுபார்க்க, உந்தித்தள்ளும் ஓர் அசோகமித்திரனைப் பார்க்கின்றோம். வீட்டுக்குள் உழைத்தது போதாது, வெளியே போவது என்றால் கூட 'உங்களுக்கு உழைக்கத்தானா?' என்று கேட்கும் பெண் குரலில். அவளுக்கென்ற ஓர் தனித்துவமான வாழ்வு இல்லையா என்ற கேள்வியே தொக்கி நிற்கின்றது. இந்த குரல், அசோகமித்திரனில் 'தண்ணீர்' நாவலில் வரும் சகோதரி பாத்திரங்கள், அனைத்து சோகங்கள்/ஏமாற்றங்களுக்கு அப்பாலும், தமக்கான வாழ்வைத் தெரிவுசெய்யும் இடங்களில் இன்னும் தெளிவாக ஒலிப்பதும் நினைவுக்கு வருகின்றது.

அசோகமித்திரன் எனக்குப் பிடித்தவர் என்றாலும், ‘மணல்என்கின்ற இந்த குறுநாவல் கவனிக்கத் தக்கதொரு புனைவு என்றாலும், அசோகமித்திரனை விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கின்ற எந்த அவசியமும் எனக்கில்லை. நான் முன்னோடியாகக் கொள்கின்ற ஒருவரை அவரின் பிரதிக்குள் இருக்கும் பலவீனங்களோடோ கொண்டாடமுடியும். ஆகவேதான் எனக்கு அசோகமித்திரன் ஒரு வழிகாட்டியாகவும் இருக்கின்றார்.

அம்மா மணல்தான். அவரைப் பிறதோடோ/பிறரோடோ குழைந்து பூசிதான் குடும்பம் என்ற அமைப்பை வலுவாகக் கட்டமுடியும். ஆனால் மணல் தனித்து எதனோடும் ஒட்டாது சட்டென்று உதிர்ந்துபோகும்போது, குடும்பம் என்ற அமைப்பும், அதன் அத்தனை கனாக்களோடும் எளிதில் சிதறியும் போய்விடுகின்றது.

**************************


(May 07, 2023)


பெங்களூருவில் இருந்து கொச்சிக்கு..

Friday, June 30, 2023

 

ரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்துக்கு வந்து சேர்ந்திருந்தேன். விடிகாலை 6 மணிக்கு பேருந்தில் புதிய நகர் வந்துவிட்டேன். தங்கவேண்டிய அறைக்கோ 11மணிக்குப் பிறகுதான் அனுமதி. நீண்ட நெடும் பயணம் தந்த கசகசப்பில் அலுப்புடன் காலையில் தேநீர்க்கடை தேடிப் புறப்பட்டேன். சில தெருவோரக் கடைகள் இருந்தாலும், கழிப்பறை இருக்கும் கஃபே என் தெரிவாக இருந்தது. நான் அந்தக் கஃபேயிற்குப் போன நேரமே அவர்கள் திறக்கத் தொடங்கினார்கள். என்னைப் போலவே இன்னொருவரும் தேநீருக்காய் வந்து காத்திருந்தார்.

தேநீருக்கான மெனுவைக் கையில் வைத்தபடி இருவரும் பேசத் தொடங்கினோம். பெங்களூர்க்காரர், படித்தது டெல்கியில். இப்போது பேராசிரியராகப் பணி புரிவது சென்னையில் IITயில் என்றார். அவரின் ஆய்வுகள் பெரும்பாலும் urban studies and planning குறித்தது.

85இல் டெல்கியில் கற்றுக்கொண்டிருந்தபோது இலங்கைக்கு வீடமைப்புத் திட்டத்துக்காய் அனுப்பப்பட்டபோது பெற்ற அனுவங்களை அவர் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது பிரேமதாசா வீடமைப்பு அமைச்சராக இருந்திருக்கிறார். இடமும் தெரியாது, மொழியும் தெரியாது, தங்கள் திட்டமிடல் எவ்வளவு மோசமாக இருந்தது என்பது பற்றிச் சிலாகித்துக் கூறினார். சில மாதங்கள் இருந்து செய்த திட்டத்தில், எளிய மக்கள் சொன்னவற்றைக் கதைகளாக தான் ஸ்கெட்சுக்களாய் வரைந்து கொண்டேன் என்றார். அப்போதுதான் 83 கலவரம் முடிந்து மக்கள் மனவடுக்களோடு இருந்தனர் என்பதை நினைவில் வைத்துச் சொன்னார்.

இந்தக் கதையின் நீட்சியில் இப்போது
அருமையான கிராபிக் நாவல்கள் வருகின்றதென அவர் சொல்ல, ஈழப்போர் குறித்து பல்வேறு உள்ளடுக்குகளில் கதை சொன்ன "வன்னி" கிராபிக் நாவலைப் பற்றி நான் குறிப்பிட்டேன். அவர் அதை வாசித்திருந்தார் என்பது மட்டுமின்றி, அதில் 2 பிரதிகள் வாங்கி தன் நண்பர்களுக்குக் கொடுத்தேன் எனச் சொல்லச் சற்று ஆச்சரியமாக இருந்தது. இன்றைக்கு தமிழ்நாட்டில் இருந்துகொண்டு ஈழம் பற்றிப் பேசும் எந்த அரசியல்வாதியோ, புலம்பெயர் இலக்கியமா, அகதி இலக்கியமா என்று பேசுபவர்களோ இதைப் பற்றி அறியத் துளியும் முயற்சி எடுத்திருக்கமாட்டார்கள் என்பது என் துணிபு.

ந்தப் பேராசிரியர் இறுக்கமற்று இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் தெய்யம் பற்றிப் பேச்சு வந்தது. கேரளாவிலா
, கர்னாடாகவிலா இதன் தோற்றம் முகிழ்ந்தது என்பது பற்றிப் பேச்சுப் போனது. பிராமணியத்துக்கு எதிரான கதையாடல்களினால் உருவான தெய்யம், அந்தந்தப் பகுதிகளுக்குரிய கதைகளைப் படிமமாக்கி வந்தது என்று அவர் விரிவாக விளங்கப்படுத்தினார். தெய்யம் இலங்கையின் கண்டியன் ஆட்டத்தோடு தொடர்புபடும் இடங்கள் பற்றியும் நாங்கள் பேசிக் கொண்டோம். 

அவர் ஒரு நல்லதொரு பேராசிரியர் போல. இதன் ஆரம்ப ஆவணங்கள் எங்கே சேகரத்திலிருக்கின்றன போன்ற விபரங்களையும், தனது நண்பர் தெய்யம் குறித்த ஆவணப்படத்தின் இணைய இணைப்பையும் பின்னர் அனுப்பி வைத்தார். அதேவேளை கந்தாரா திரைப்படம் எப்படி மோசமாக இந்த ஆட்டத்தை வியாபாரப்படுத்தியது என்று கவலை தெரிவித்திருந்தார். நானும், எங்கள் ஈழப்போராட்டத்தின் சிக்கலான கதையாடல்களை விளங்கிக் கொள்ளாது எழுதப்படும்/திரைப்படமாக்கப்படும் படைப்புக்கள் எப்படி எங்களுக்கு எரிச்சலைத் தருகின்றன என்பது பற்றி அவருக்குச் சொல்லிக் கொண்டிருந்தேன்.


இறுதியில் பேராசிரியர் சந்திக்க வேண்டிய அவரின் நண்பரின் அழைப்பு வந்தது. நல்லதொரு உரையாடலாக இருந்தற்கு நன்றி சொல்லி, அவரின் தேநீர் என் செலவெனச் சொன்னேன். பேராசியர் போகும்போது தான் 3 வருடங்கள் ரொறொண்டோ பல்கலைக் கழகத்தில் கற்பித்தேன் எனச் சொல்லி ஆச்சரியப்படுத்தினார். ஏன் ரொறொண்டோவை விட்டு இந்தியா மீண்டீர்களெனக் கேட்டேன். என் வரைகலைஞர் மனைவிக்கு அந்தக் குளிர் பிடிக்கவில்லை அதுதான் வந்துவிட்டோம் என்றார். எனக்குந்தான் பனி பிடிப்பதில்லை, ஆனால் என்னிடம் ஓடி வந்துவிடுங்கள் உங்கள் வாழ்வைக் கதகதப்பாகிவிடுகிறேன் எனச் சொல்லத்தான் எவரும் எனக்கு இந்தியாவில் இல்லையென நினைத்துச் சலித்தபோதும், இன்னும் கொஞ்சம் தேநீராவது அருந்த எனக்காய் மீதம் இருக்கின்றதேயென நிம்மதியடைந்தேன்.

***********


(Feb 02, 2023)

வரலாற்றில் வாழ்தல்


ஸ்.பொ(ன்னுத்துரை) ஒரு சுவாரசியமான மனிதர். தானொரு காட்டான்என்று வாழ்நாளுக்கான இயல்விருது கனடாவில் கொடுக்கப்பட்டபோது பொதுவெளியில் தயங்காமல் பிரகடனப்படுத்தியவர். அவரின் வரலாற்றின் வாழ்தல்உண்மைகளை இயன்றளவு அப்படியே முன்வைக்கின்ற ஒரு சுயசரிதை நூல். வரலாற்றில் வாழ்தல் ஆயிரம் பக்கங்களுக்கு மேலா? அதுவும் இரண்டு பகுதிகளா? 3000 இற்கு மேற்பட்ட பக்கங்களை வாசிப்பதா என்று பயந்து கொண்டிருந்தேன். ஆனால் மனுஷன் அலுப்பே வராதவளவுக்கு அவ்வளவு சுவாரசியமாக எழுதியிருக்கின்றார்.


வரலாற்றின் வாழ்தலின் இரண்டாம் பாகத்தில் இப்போது நிற்கின்றேன். முதல் பாகம் எஸ்.பொ, முற்போக்கு இலக்கிய முகாமிலிருந்து வெளியேறுவதோடு நிறைவுபெறும். முதல் பாகத்தில் நடுவில், பெண்களைக் கண்டாலே தூரவிலகும் ஒரு உள்ளொடுங்கியாக இருக்கின்றாரே, எப்படி இந்த மனுஷனால் தீஎல்லாம் எழுத முடிந்ததென்று நானே சலித்தபோது, மனுசன் ஒரு காதல் கசந்து (அதற்காய் மூன்று வருடம் எதையும் எழுதாமல் இலக்கியத் துறவறம் எல்லாம் செய்திருக்கின்றார்) மீண்டெழுந்தபோது செய்ததெல்லாம் மன்மதலீலைகள்தான்.

முற்போக்கு அணியினரோடு முரண்டு பிடித்தது, ஒடுக்கப்பட்ட சாதி அடையாளத்தோடு பிறந்ததால் எப்படி ஒடுக்கப்பட்டேன் என்று அதை வைத்து பரிதாபந் தேடாமல், ஓர்மத்துடன் அதற்குள் இருந்து எழுந்து வந்ததைப் பற்றி எழுதியது மட்டுமில்லாமல், இந்த மன்மதனாட்டங்களையும் எழுத்தில் நேர்மையாக முன்வைக்க முடிந்ததால்தான் அவர் எனக்கு இன்றும் ஆசான்.

இரண்டாம் பாகத்தில்..

யாழ்ப்பாணத்தில் முட்டையடிப்பும், கொழும்பில் கதிரையடியும் முற்போக்கு அணியினரிடம் வாங்கிக் கட்டியபின், எஸ்.பொ அவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு வீயை வெளியிடுகின்றார். எதிரியை நேரடியாகச் சந்திப்பது என்ற ஓர்மத்துடன் தன் புத்தக வெளியீட்டு விழாவில் வந்து விமர்சனம் வைக்கவேண்டுமென்று கைலாசபதியையும், சிவத்தம்பியையும் நேரில் சென்று எஸ்.பொ அழைக்கின்றார். கைலாசபதி நாசூக்காய் மறுத்தாலும், சிவத்தம்பி வெளியீட்டு நிகழ்வில் வந்து பேசி, எஸ்.பொவின் வீதொகுப்பை நிராகரிக்கின்றார். நீங்கள் நிராகரிப்பது சரி, உங்கள் முற்போக்கு எழுத்தாளர் அணியினர் எழுதிய கதையை உங்கள் விமர்சன அளவீட்டிற்கு முன்வையுங்கள் என்று எஸ்.பொ தனது ஏற்புரையில் எகிறுகிறார். 

சிவத்தம்பியரோ, உனது அந்தத் 'தீ'யுமல்ல இந்த 'வீ'யுமல்ல என்றுவிட்டு மேடையில் அமைதியாகி விடுகின்றார். இப்படியாக அந்தக்காலத்தில் எதிர்ப்பும், எகிறலும், புரிந்துகொள்ளலும் நடந்திருக்கின்றதென்பது சுவாரசியமானதுதான். இன்றைக்கு வெவ்வேறு அணியினர் எஸ்.பொவையும், கைலாசபதியையும், சிவத்தம்பியையும் சுவீகரித்துக் கொண்டிருந்தாலும், இந்த சண்டை/சர்ச்சரவுகளைத்தாண்டி அவரவர்க்கான இடம் அவரவர்க்கு தமிழ்ச்சூழலில் இருக்கத்தான் செய்கிறது.

யாழ்ப்பாணத்தில் பிறந்த எஸ்.பொ அளவுக்கு இன்னொருவர் இந்தளவுக்கு கிழக்கு தமிழர்களோடும், முஸ்லிம்களோடும் நெருங்கிப் பழகி, அந்த அனுபவங்களை எழுத்தில் முன்வைத்திருப்பார்களோ தெரியாது. அந்தளவுக்கு கிழக்கு மாகாணத்து மக்களைப் பற்றி விபரித்து எழுதியிருக்கின்றார். யாழ்ப்பாணத்து நனவிடைதோய்தல்போல மட்டக்களப்பு நினைவுகளை எழுத எஸ்.பொ விரும்பியிருந்தபோதும் அது நிகழாதது சோகமான விடயந்தான். யாழில் பிறந்து வளர்ந்ததால் அதில் காலூன்றியபடி, அதேசமயம் அது குறித்து எவ்விதப் போலி பெருமிதமும் கொள்ளாது, பிற இடங்களை/மக்களை நேசிக்கத் தெரிந்தவராக எஸ்.பொ எப்போதும் இருந்திருக்கின்றார்.

ஸ்.பொ 60/70களின் காலங்களை விபரிக்கின்றபோது இவர்கள் எல்லாம் இலங்கையில் வாழ்ந்தார்களா என்ற வியப்பு வருகின்றது. சாத்தான்குளத்து அப்துல் ஜாப்பார் என்கின்ற கிரிக்கெட் வர்ணனைகளை அழகு தமிழில் செய்த அறிவிப்பாளர் எல்லாம் இலங்கையில் வாழ்ந்ததோடல்லாது, எஸ்.பொ எழுதிய நாடகங்களில் நடித்துமிருக்கின்றார்கள். அப்படி எஸ்.பொவின் நாடகங்களில் நடித்த வேறு சிலர் அப்துல் ஹமீது மற்றும் பின்னாளில் அமைச்சரான அஸ்வர் எனப்பட்டியல் நீளும்.. இதனூடாக வரலாற்றின் ஒரு காலகட்டத்தையும் அறிந்து கொள்கின்றோம். எம்.ரஹ்மானின் இளம்பிறைசஞ்சிகை உள்ளிட்ட வேறு சில பத்திரிகைகளில் எஸ்.பொ பத்திகள் எழுதியிருக்கின்றார். அவற்றையும் தொகுப்பாக்கினால் இன்னும் சுவாரசியமான அந்தக்காலத்தைய விடயங்கள் வெளிக்கொணரப்பட்டிருக்கும் என எழுதுகின்ற எஸ்.பொ அதைக் கொண்டு வராமலே காலமாகி விட்டார்.

எஸ்.பொவின் சடங்கு’, ‘நனவிடைதோய்தல்', 'வீபோன்று, அதிகம் பேசப்படாத “?” முக்கியமான படைப்பென்பது என் துணிபு. அந்தக் காலத்தில் இப்படி ஒரு அங்கதமான பிரதி எழுதப்பட்டிருக்கின்றதென்று வியந்திருக்கின்றேன். அது எழுதப்பட்ட கதை சுவாரசியமானது. ஒரு முஸ்லிம் அரசியல்வாதிக்கு அவரின் ஊழல்பற்றி அங்கதச் சுவையுடன் முஸ்லிம் சமூகம் ஒரு துண்டுப்பிரசுரத்தை வெளியிடுகின்றது. அதை அவர்கள் பந்தநூல் என்று குறிப்பிடுகின்றனர். இதையே முதன்மையாக வைத்து எஸ்.பொ அன்றைய சூழ்நிலையைப் பின்னணியாக்கி “?” எழுதுகின்றார். அந்த வடிவம் எப்படி அமைய வேண்டுமென்பதற்காய் உ.வே.சா பதிப்பித்த பழந்தமிழ் நூல்கள்வரை தேடிப் போயிருக்கின்றார்.

இந்த புத்தகத்திற்காய் உழைத்த நேரத்துக்கு தன்னால் 2 புதிய புத்தகங்கள் எழுதியிருக்கலாம் என்றும் குறிப்பிடுகின்றார். "?" எழுதியபின் இன்னொரு சோகம் நிகழ்கின்றது. நூல் தயாரான பின் ஒரு பயணத்தின்பின் அந்தக் கையெழுத்துப் பிரதியை எஸ்.பொ தொலைத்துவிடுகின்றார். இப்போது நமக்கு கிடைக்கும் “?”, அவர் முதல் பிரதியை எழுதுவதற்கு எடுத்து வைத்த குறிப்புக்களை வைத்து எழுதியது. அதை இரண்டாம் முறை எழுதுவதென்பது எவ்வளவு சித்திரவதையானது என்பதை எஸ்.பொ மனம் நொந்து 'வரலாற்றில் வாழ்தலில்'' எழுதியிருக்கின்றார்.

இதை எழுதுவதற்கான காரணமாக என்னைப் பற்றிய மதிப்பீடு ஒன்று தேவை. பிறருடைய மதிப்பீட்டுகளிலும் பார்க்கச் சுய விமர்சனங்கள் என் வளர்ச்சிக்கும் தனித்துவப் பார்வைக்கும் உதவியிருக்கின்றன. சுய விமர்சனத்தின் நன்மைகளை கம்யூனிஸ முகாமில் அறிந்து கொண்டேன். இதனால் நான் வெற்றிகளைக் கண்டு மருண்டதில்லை. தோல்விகளைக் கண்டு துவண்டதில்லை. வெற்றிகளின் நிழல்களிலே நான் சயனிக்க விரும்பியதும் இல்லைஎன்று எஸ்.பொ எழுதுகின்றார்.

எஸ்.பொ சுதந்திரனில் சடங்குஎழுதிய அதே காலகட்டத்தில் தேடல்என்றொரு தொடர்கதையையும் வீரகேசரியில் எழுதியிருக்கின்றார். ஆனால் அது முற்றிலும் தரப்படும் காசுக்காக எழுதப்பட்டது. நீங்கள் சடங்கையும் தேடலையும் அருகருகில் வைத்துப் பார்த்தால் இரண்டின் தரமும் தெரியும் என்று வெளிப்படையாக வரலாற்றில் வாழ்தலில்எழுதிச் செல்வதால்தான் எஸ்.பொ தனித்துவமானவர் எனச் சொல்கின்றேன். ஆகவேதான் அவர் என் ஆசான்.

*********************************


(Feb 21, 2023)

குமரகம்

Thursday, June 29, 2023

 


மா
லையில் அந்த ஒழுங்கைகளில் நடந்து கொண்டிருந்தேன். ஒரு பக்கம் படகுகள் மிதக்கும் ஆறு. இன்னொரு பக்கம் சிறு சிறு ஓடைகள். இரண்டையும் டார்த்தீனியம் மூட முயற்சித்தாலும் நீர் அதைத் தாண்டி முன்னே சென்று கொண்டிருந்தது. சூரியன் மறைந்த பொழுதுகளில் வீடுகளில் எல்லாம் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. ஒழுங்கையில் இருந்தே இவற்றைப் பார்க்க ஊர் கார்த்திகைத் தீபநாட்கள் ஞாபகம் வருகின்றன.


மென்னிருளில் பெரும் குத்துவிளக்குகளில் திரி சுண்டிய அகல்கள் அவ்வளவு அழகாக இருக்கின்றன. அநேகமாய் எல்லா வீட்டு முன்றல்களிலும் நாராயண குருவின் புகைப்படங்கள் சட்டமிட்டு மாட்டப்பட்டிருக்கின்றன. ஒரு நூற்றாண்டுக்குள் ஒருவர் வழிபடக்கூடிய தெயவத் தன்மையை அடைந்திருப்பது வியப்புத்தான்.

நகர்ந்துகொண்டிருக்கும் நாட்களில் பயணத்தில் எந்தக் காலத்தில் நிற்கின்றேனென எனக்குக் குழப்பம் வருவதுண்டு. காலநிலை, பண்பாடு, உணவு என்று முற்றிலும் வேறான சுழ்நிலைக்குள் இருக்கையில் எது அசலான வாழ்வெனத் திகைப்பதுண்டு. எல்லாவிதமான வாழ்வும் சமாந்திரமாக இருக்கையில் நமது மொழியும், பண்பாடும், அறிவும்,வீரமுந்தான் சிறந்ததென்கின்ற அறைகூவல்கள்தான் எவ்வளவு அபத்தமானது.

இந்தப் பயணத்தில் வாசிக்க நகுலனையும், ஜே.பி.சாணக்கியாவையும் எடுத்து வந்திருந்தேன். நமக்குத்தான் பயணத்தில் காலமும் வெளியும் குழப்பமடைகின்றது என்றால், நகுலன் பயணிக்காமலே இந்த இடத்தையும் இருப்பையும் மேலும் குழப்பிவிடுவார். நான் நகுலனை வாசித்துக்கொ ண்டு, நண்பருக்கு இன்னும் கொஞ்சக்காலத்தில் ஒன்றையே திருப்பத் திருப்பப் பேசிக்கொண்டிருக்கும் நகுலனைப் போல நானும் எழுத்தின் தனிமைக்குள் போய்விடுவேன் எனச் சொன்னேன். 'அப்படி உன்னை மாறவிடமாட்டேன், நீ உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உன்னைத் தேடி வருவேன்' என்றார். நான் பேசியது மனிதர்கள் இல்லாத தனிமையைப் பற்றியல்ல, மனிதர்கள் சூழ இருந்தாலும் நான் உருவாகிக்கொள்ளும் தனிமைத் தீவு பற்றியது.

நான் மேலும் நீள நடந்துகொண்டிருந்தேன். ஒரு வீட்டிலிருந்தவர்களிடையே என் தயக்கம் நீக்கிப் பேச்சுக்கொடுத்தேன்.தினமும் காலையும் மாலையும் இப்படி வெளி விறாந்தையில் குத்துவிளக்கேற்றி குடும்பம்,பிள்ளைகளாய் வழிபாடு செய்வது வழக்கம் என்றனர். நான் அவர்களுடன் பேசி விடைபெற்று, மீண்டும் அதே பாதையில் திரும்பியபோது அங்கே பிரார்த்தனைப் பாடல்களுடன் வழிபாடு நடப்பதைப் பார்த்தபடி நகர்ந்தேன். இவ்வாறு ஒரு கலாசாரம் சுவீடனில் மாலைவேளைகளில் பார்த்திருக்கிறேன். வீடுகள், உணவகங்கள் எங்கும் மாலையில் அது எவ்வளவு பனிக்காலமாக இருந்தாலும் விளக்குக் கொளுத்துவார்கள். அது அவர்களின் கடல் நாடோடிக் கலாசாரத்தோடு வந்ததாகச் சொன்னதாய் ஞாபகம்.

ஒரு நாள் எவ்வளவு மோசமாக இருந்தாலும் ஒரு விளக்கின் முன் மனதைக் குவித்து இருப்பதென்பது அருமையானது. சும்மா இந்த விளக்குகளைக் கடந்து சென்ற எனக்கே உள்ளே அமைதி பரவி உள்ளம் கனிந்திருந்தது.

அடுத்த நாள் படகுத் துறையை அண்டி நடக்கையில் ஒரு கோயில் கவர்ந்திழுத்தது. சிறு கோயில் எனினும் கேரளாபாணிக்குரிய கலைத்துவம் அதில் மிளிர்ந்தது. முருகன் கோயில்
, ஆனால் அதற்குள் இருந்த சாஸ்தாவும், துர்க்கையும் வேறொரு அழகில் கருங்கற்களில் மிளிர்ந்து கொண்டிருந்தனர். நாராயண குருவுக்கும் ஒரு இடமிருந்தது. அவருக்கு சிறு பூஜை நடந்த பின்னரே மூலவருக்கும் பிறருக்கும் பூசைகள் நடக்கத் தொடங்கின.

சில மாலைகள் சூடி, ஏழு தீபங்கள் ஏற்றப்பட்டு, ஒளியிலே மிளிர்ந்த அம்மனின் முகம் மனதுக்கு மிக நெருக்கமாயிற்று. பூசைகள் தொடங்க முன்னர் இருந்த அமைதியில் கருமையில் துலங்கிய அம்மனின் விழிகளில், இப்படி அலைந்து அலைந்து எதைத் தேடுகின்றேன் என்று அலையடிக்கும் கணங்கள் சட்டென்று உறைந்து போயிருந்தன.

*********

(Feb 08, 2023)

கார்காலக் குறிப்புகள் - 07

Wednesday, June 28, 2023

 

ண்பரொருவர் சில நாள்களின் முன் சந்திப்பதற்காக அழைத்திருந்தார். நாங்கள் தேநீர் அருந்தியபடி எங்கேனும் கஃபேயில் இருந்து உரையாடுவோம் என்றபோதும், அவரது குடும்பத்தினருக்கும் அறிமுகப்படுத்த வேண்டுமென்று என்னை அவர்களின் வீட்டுக்கு அழைத்து சென்றார். அவரது துணைவியாரும் சுவாரசியமானவர். எங்கள் உரையாடல் பெரும்பாலும் திரைப்படங்களைப் பற்றியதாக இருந்தது.

நண்பர் இப்போது ஒரு முழுநீள சிங்களப் படத்தை எடுத்து முடித்திருந்தார். அதை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றார். எனக்கு விருப்பமெனில் தனது ஸ்டூடியோவில் ஒரு பிரத்தியேகக் காட்சியைத் திரையிடுகினறேன் என்றார். இன்னமும் பொதுவெளியில் திரையிடாத ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதென்பது ஓர் அரியவிடயமல்லவா?

இத்திரைப்படத்தின் கதை கயிற்று முனை மேல் நடப்பது போன்றது. கொஞ்சம் சறுக்கினாலே பார்வையாளர்களை கதைக்கு வெளியே தள்ளிவிடும். ஆனால் அதை நாம் உணராவண்ணம் திரைக்கதை ஆக்கப்பட்டிருந்தது. ஒன்றரை மணித்தியாலத்துக்கு மேலாக இருக்குமென்று நினைக்கின்றேன். நான் அந்தத் திரைப்படத்துக்குள்ளேயே வரும் வெவ்வேறு பாத்திரங்களில் ஒருவனாக இருந்தேன்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையாகத் திரைப்படங்களைப் பார்ப்பார்கள். காட்சிகளாக, கதைகளாக, இசையாக எனப் பார்க்கும் வகை ஒவ்வொருவருக்கும் வேறுபட்டது. எனக்கு ஒரு திரைப்படம் எத்தகைய அதிநுட்பமான கருவிகளால் படமாக்கப்பட்டாலும், முதலில் திரைக்கதையின் பின்னே மனம் நகர்ந்தபடியிருக்கும். பின்னர் அத்திரைப்படத்தை இன்னொருமுறை பார்க்கும்போது திரைப்படத்தின் மிகுதி விடயங்கள் தெளிவுறத் தொடங்கும்.

நண்பரோடு இத்திரைப்படத்தைப் பற்றிப் பேசும்போது சதா பிரணவனின் இன்னும் பொதுவில் திரையிடப்படாத Friday & Friday பற்றியும் குறிப்பிட்டேன். தனிப்பட்டு அத்திரைப்படத்தைப் பார்க்க எனக்கு சதா பிரணவன் இணையத்தினூடு ஒழுங்கு செய்திருந்தார். அத்திரைப்படம் வெளிவரும்போது புலம்பெயர் சூழலில் கவனிக்கத்ததொரு படமாக இருக்கும். லெனின் எம். சிவம், சதா பிரணவன், பிரதீபன் போன்றவர்கள் புலம்பெயர் தேசத்திலும், சோமீதரன், ஹசீன் போன்றவர்கள் தமிழகத்தில் இருந்தும் திரைப்படம் முயற்சிகளை பல்வேறு வாழ்வியல்/பொருளாதார நெருக்கடிகளிலிருந்து செய்து கொண்டிருக்கின்றார்கள். நாம் தென்னிந்தியத் திரைப்பட மோகங்களின் பின் மட்டும் அலையாமல், இவர்களின் முயற்சியையும் ஊக்குவிக்கவேண்டும். முக்கியமாக புலம்பெயர்ந்த தேசத்தில் இருந்து பெருமளவில் பணத்தை முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள், நம்மிடையும் திரைப்படங்களை எடுக்க வல்லவர்கள் இருக்கின்றார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இதுவே நாம் இன்னமும் சொல்லாத கதைகளை திரையில் சொல்கின்ற களங்களை விரிக்கச் செய்யும்.

இந்தச் சிங்களத் திரைப்படத்தை எடுத்த நண்பருக்கு தென்னிந்தியாவில் புதிய வெளிகள் திறக்க இருக்கின்றன. விரைவில் அது குறித்த அறிவித்தல்களைப் பொதுவெளியில் அறிவிப்பாரென நினைக்கின்றேன். எனக்குப் பிடித்த சிங்கள நெறியாளர் பிரசன்ன விதானகே காடிக்குப் பிறகு இந்தியாவிலேயே மலையாள நடிகர்களை வைத்து ஒரு திரைப்படம் எடுத்துக் கொண்டிருக்கின்றார்.

000000000

எனக்கும், இந்நண்பருக்கும் பொதுவான நண்பராக இருந்த ஒருவரைப் பற்றிய பேச்சும் இடைநடுவில் போனது. என்னை சமூக வலைத்தளங்களில் அந்தப் பொது நண்பர்’ block செய்ததைப் போல, இந்த நண்பரோடும் நட்பிலிருந்து விலகிவிட்டார். இன்று அந்தப் பொது நண்பர் பொதுவெளியில் கவனத்தை ஈர்க்கும் கவனிக்கத்தொரு ஆளுமையாகிவிட்டார். ஆனால் எனக்கும் இந்த நண்பருக்கும் அவரோடு வந்துவிட்ட விலகல், படைப்பாளியாக இருக்கையில் அவரின் அறம் சார்ந்த விடயங்கள் குறிந்ததாகும். ஒருவர் நல்லதொரு படைப்பாளியாக ஆகும்போது, மற்றமை (Other) குறித்த புரிதல் தெளிவாக இருக்கவேண்டும். ஆனால் இந்த பொதுநண்பரோ ஆர்ப்பாட்டங்களுக்கு நண்பர்களுடன் போய் அவர்களின் அனுமதியின்றி படம்பிடித்து தன் படங்களில் பாவிப்பது, மிகவும் ஆபத்தான பின்னணியில் இருந்து அரசியல் விடயங்களைப் பேசுபவர்களைப் பேசவிட்டு, அவர்களுக்கு அறிவிக்காது படமாக்குவது, உதவிக்கு வருபவர்களின் வாகன அடையாளங்களை மறைக்காது திரையில் வெளியிடுவதென்று அவர் செய்யும் அறம்பிறழ்ந்த விடயங்கள் சொல்லிமாளாதவை. இவ்வாறான விடயங்கள் நடந்ததை அவருக்குச் சுட்டிக்காட்டும்போது, ஒரு சாதாரண மன்னிப்பைச் சொல்லிவிட்டு, இதேபோன்றவற்றை அவர் தொடர்ந்து செய்துகொண்டிருப்பதுதான் எமக்கு ஏமாற்றமளிப்பது.

ஒருவர் தன் படைப்பின் உள்ளடக்கத்தால் வாசகர்/பார்வையாளர்களை கவர்ந்து, அந்த விடயம் குறித்த உரையாடல்களைச் செய்வதே ஒரு நல்லதொரு படைப்பாளிக்குரிய அடையாளம், ஆனால் இந்தப் பொது நண்பரோ தேவையில்லாத சர்ச்சைகளை முன்னோட்டங்களில் உருவாக்குவதே தன் கடன் பணிசெய்து கிடப்பதென்பது போல இருப்பார். என்ன செய்ய, இவை குறித்து மேலும் நிறைய எழுதலாம். ஆனால் இந்தப் பொது நண்பரும் நானும் இப்போது அவ்வவ்போது சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் வாழ்வதால் அவையடங்கிப் பேசுவதுதான் எனக்கும் நல்லது.

இந்த சிங்களப் படத்தை இயக்கிய நண்பரின் வாழ்க்கையே ஒரு திரைப்படமாக்கக்கூடிய அவதிகளும், அலைச்சல்களும் நிறைந்தவை என்பதை அவர் சொன்னபோது அறிந்தேன். இலங்கையில் பிறந்த நம்மிடம் எவ்வளவு கதைகள் எழுதுவதற்கும்/காட்சிப்படுத்துவதற்கும் இருக்கின்றன. இந்த நண்பர் திரைப்படத் துறைக்கு எவ்விதப் பின்னணியும் இல்லாது வந்தவர். மிகவும் கஷ்டப்பட்டு வந்து ஓரிடத்தை நிலைநிறுத்தியும் விட்டார். இப்போது திரைப்படத் துறைக்குள் முழுதாகப் போவதால், அவரின் professional quit செய்து ஒரு வருடமாகிவிட்டது. இவ்வாறான ஒரு அலைச்சலில்தான் நானும் சிக்கியிருக்கின்றேன் என்பதால் எனக்கு அவருடன் நெருக்கம் இன்னும் கூடியது.

எங்களுக்குப் பிடிக்கும் ஒன்றைச் செய்யும்போது ஏதோ பலவற்றை இழக்கத்தான் வேண்டியிருக்கின்றது. அந்த இழப்புக்கள், அடையும் விடயங்களின் மேல் இருக்கும் காதலால் சமன் செய்யப்படுகின்றது. ஆனால் நம் எல்லோருக்கும் தத்தளிப்புக்களும், நெருக்கடிகளும் இருக்கின்றன; அவை அந்தரங்கமானவை. எப்போதாவது இப்படி ஒத்த அலைவரிசையுள்ளவர்களுடன் உரையாடும்போது மட்டும் மேலெழக்கூடியவை.

நண்பரின் ஸ்டூடியோ இப்போது பலரும் வந்து தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ளும் இடமாக இருக்கின்றது. தான் தனித்துக் கஷ்டப்பட்டது போலவன்றி அடுத்த தலைமுறை இன்னும் முன்னேறிச் செல்லவேண்டும் என்பதாய் அவரின் ஸ்டூடியோ பலருக்காய்த் திறந்திருக்கின்றது. அவரிடமிருந்து ஒளிப்பதிவாளர்கள், எடிட்டர்கள் பண்பட்டு இப்போது பிற திரைப்படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர் என்பது உவகை கொள்கின்ற விடயம்.

000000000

ஜெயமோகனின் தன் மீட்சிநூலில் இவ்வாறு தம் விருப்பம் சார்ந்து, தம் கனவுகள் சார்ந்து இயங்குபவர்கள் பற்றி நிறையப் பேசப்பட்டிருக்கும். ஜெமோ முன்வைக்கும் சராசரிகள்மீது எனக்கு முரண் உரையாடல்கள் இருக்கின்றன. அவர் கீதை முன்வைக்கும் ‘’ஆகவே செயல் ஆற்றுகஎன்பதிலிருந்தும், நித்ய சைதன்ய யதியின் விதி சமைப்பவர்கள்என்பதிலிருந்தும் இந்த கருத்தாக்கத்தை முன்வைக்கின்றார். எனக்கு யதி முன் வைக்கும் விதி சமைப்பவர்களோடு நெருங்கி வரக்கூடியதாக இருக்கிறது. இந்த உலகில் எல்லோரும் செயலாற்ற வேண்டியவர்கள் அல்ல. நாம் எமக்கான சாதாரண வாழ்வோடும் இவ்வாழ்வை வாழ்ந்துவிட்டுப் போகலாம். அப்படித்தான் பல பேர் இருக்கின்றார்கள். ஆனால் ஒருவருக்குள் அந்தச் சராசரித்தன்மையைத் தாண்டி ஏதேனும் செய்யும் உந்துதல் இருந்தால் அவர் அதை நோக்கிப் போகத்தான் வேண்டும்.

எல்லோருக்கும் இது ஓரு கட்டாயமில்லை. செயலாற்றாமல் கூட இருக்கலாம். அப்படித்தான் எத்தனையோ பேர் இருக்கின்றனர். மேலும் இப்படி உங்களுக்கு லெளதீக விடயங்களை மீறி ஒன்று பிடித்து அதை நோக்கி நீங்கள் நகர்வதாயின் நிறைய இழக்கத்தான் வேண்டும். ஆனால் அது தரும் மனநிறைவை நீங்கள் வேறு எங்கும் உணரமுடியாது. அதேவேளை இதை வைத்து நீங்கள் அதிகாரத்தை நோக்கி நகர்வீர்களாயின் உங்கள் கலை உங்களைக் கைவிட்டும் போய்விடும். நீங்கள் இவ்வாறு செயலாற்றும்போது நூற்றாண்டுகளாய்த் தொடர்ந்து வரும் கண்ணியின் ஒரு சிறு தொடர்ச்சியென உணரவேண்டுமென அந்நூலில் யதியை முன்வைத்தும் உரையாடப்பட்டிருக்கும்.

வெளியில் சாதாரணமாவராகவும், இவற்றில் ஏற்படும் நிறைவை உள்ளே அனுபவித்தபடியும் நாங்கள் இருக்க முடியும். இது ஒருவகையில் ஸென் சொல்வதும் கூட; முதலில் மலைகள் மலைகளாகவே இருந்தன. ஞானமடைகின்ற முதல் துளியில் மலைகள் மறைந்துவிடுகின்றன. ஞானம் நமக்குள் தெளிவுறும்போது மறைந்த மலைகள் மீண்டும் தோன்றிவிடுகின்றன. ஞானமடைய முன்னர் பார்த்த அதே மலைகள்தான் வெளியில் இப்போது தெரிகின்றன. ஆனால் ஞானமடைந்தவர் பார்த்துக்கொண்டிருப்பது அதே மலைகள்தானா?  என்பதுதான் அந்தத் தத்துவச் சரடு.

ஆகவே, விரும்பியவர்கள் விரும்பியதைச் செய்யத் துணியுங்கள். காலம் ஒருபோதும் நமக்காகக் காத்திருப்பதில்லை. வெற்றி என்பதும் தோல்வி என்பதும் வெளிச் சூழலுக்கான ஓர் பாவனை மட்டுமே என்ற புரிதல் வந்தால் சலிப்புக்களை மீறிச் செல்ல முடியும். நம் பயணங்களிடையே நாம் எதை அடைந்தோம் என்பதே நம் அகமனதுக்கு முக்கியமானது.

**********************


(May 20, 2023)

கொச்சின்

Tuesday, June 27, 2023

 

காலையில் பெஞ்சில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் அவரைப் பார்த்தேன். மனிதர்கள் கடந்துபோகையில் அவர்களின் விழிகளைப் பார்ப்பதைப் பொதுவாகத் தவிர்ப்பேன். ஏனோ இவரின் விழிகளைப் பார்த்து ஒரு சின்ன தலையசைப்பை இருவரும் செய்தோம். மூக்குத்தி அணிந்த பெண்கள் எப்போதும் வசீகரிப்பதைப் போல, இவரின் கடுக்கனும், நீண்ட தாடியும் என்னைக் கவர்ந்திருக்கலாம்.

இவ்வாறு பல்வேறு மனிதர்களை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கையில் நமக்குள் பல கதைகள் பீறிட்டெழச் செய்யும். அவை எல்லாம் கதைகளாக விட்டாலும் அந்த நேரத்தில் மனதுக்கு மிகுந்த பரவசத்தை அளிக்கும்.

எதிரே ஒருவர் சோளப் பொத்திகளை அவித்து விற்கத் தயாராகிக் கொண்டிருந்தார். நடக்கும்போது காலைக் கெந்திக் கெந்தி நடந்து கொண்டிருந்தார். ஆனால் அமர்ந்து இருக்கும்போது அதன் சுவடில்லாது அவ்வளவு கம்பீரமாக இருந்தார். அவரிடம் முதல் வாடிக்கையாளராக ஒரு சோளப்பொத்தியை வாங்கிக் கொண்டு மீண்டும் கடந்து போகின்றவர்களை அவதானிக்கத் தொடங்கினேன்.

இப்படி பெங்களூரு ஒரியன் மாலின் வெளிப்புறத்தில் சும்மா நெடும்பொழுது இருந்திருக்கின்றேன். உண்மையில் பெங்களூரு ஒரு பல்கலாசார நகர் மட்டுமில்லை, gender neutral நகருங்கூட. எவரும் எவரையும் வித்தியாசமாக உற்றுப்பார்க்காது, அவரவர் அவரவர்க்கு விரும்பிய ஆடைகளுடன் இயல்பாக நடமாடிக் கொண்டிருந்தனர். காலநிலையும் இதமாக இருந்தது. நான் நின்றது யஷ்வந்தபுரத்தில் சந்தை இருந்த இடத்தில். அங்கே கூட ஒரு நிதானமும்,இரைச்சல் அவ்வளவு இல்லாதும் இருந்தது. வாகன நெருக்கடி மட்டும் சென்னையைத் மீறித் தெரிந்திருந்தது.

டுத்த நாள் மாலையும் அதே இடத்தில் இந்த கடுக்கன் மனிதரைச் சந்தித்தேன். இம்முறை சும்மா தலையசைப்போடு கடந்து போகாமல் பேசத் தொடங்கினோம். நான் பெஞ்சில் இருக்க, அவர் அருகில் அமராமல் சட்டென்று தரையில் அமர்ந்தார். தானொரு ஹிப்பியெனவும், தனக்கு அன்னைப் பூமியில் இருக்க விருப்பம் என்று சொல்லி அப்படியே அமர்ந்துவிட்டார். முதுகில் ஒரு வலி இருப்பதால் அமர்வதில், பொதிகள் சுமப்பதில் மிகுந்த கவனமாக நான் இப்போது இருக்கிறேன். ஆனால் எனக்கு அப்படி ஒருவர் தரையில் அமர்ந்தவுடன் என்ன செய்வதென்றும் தெரியவில்லை. ஒருவர் பெஞ்சில் இருக்காமல் தரையில் இருக்கையில் எப்படி உரையாடுவது. அது இன்னொருவரை அவமதிப்பதாகிப் போய்விடும். சரி வாருங்களென இன்னொரு பக்கமாய் தரையில் இருப்போமென அழைத்துச் சென்று அவருக்கருகில் அமர்ந்தேன்.

அவர் ஹிப்பி வாழ்வைச் சொல்லத் தொடங்கினார். இப்போது ஒரு தெருக்கலைஞராக பாடவும் ஆடவும் செய்கின்றார் எனவும் சொன்னார். இந்தியாவிலும்,ஐரோப்பாவிலும் நிறைய இடங்களில் அலைந்து திரிந்திருக்கின்றார். சில வருடங்களுக்கு முன் ஒரு குரோஷியா ஓவியை ஒருத்தியைக் காதலித்து திருமணம் செய்து அண்மையில் பிரிந்துவிட்டேன் என்றார்.

அந்தப் பெண்ணின் முகநூல் பக்கத்தை, அவரிடம் தொலைபேசி இல்லாததால் என் அலைபேசியில் வைத்துக் காட்டினார். பின்னர் தமிழ்ப்படங்கள், இசை எனப் பேசிக் கொண்டிருந்தோம். அவரோடு இன்னொரு இளைஞனும் இருந்தார். அவரிடம் கொஞ்சக் காசு கொடுத்து ஒரு தண்ணீர்ப்போத்தலும், பிஸ்கெட் பைக்கற்றும் வாங்கி அவர்களோடு திரிந்த ஒரு நாயிற்கு ஊட்டிக் கொண்டிருந்தார்.

பிறகு ஊதுவதற்கு சிலும்பி வேண்டுமா எனக் கேட்டார். அது குறித்து எவ்விதமான தப்பபிப்பிராயம் இல்லையென்றபோதும், இப்போது வேண்டாமென மறுத்தேன். ஒரு சம்பிரதாயத்துக்காய் அவர் பற்றி வைத்த பீடியை மட்டும் வாங்கி சிலமுறை இழுத்துக் கொண்டேன்.

ஒரு பாடகன் என்று சொல்லி தனது கதையைச் சொல்லும் பாடலைப் பாடட்டா எனக் கேட்டார். நிச்சயம் பாடுங்கள் என்றபோது பல்வேறு மொழிகள் கலந்து அந்தப் பாடலைப் பாடிக்காட்டினார்.

நம் உரையாடல்கள் இன்னும் ஆழமாகப் போனபோது ஒரு பெருங்குடிகாரர் வந்து இடையில் குழப்பினார். 'இவரும் நல்ல மனிதர்தான், கொஞ்சம் கூடக் குடிப்பார் அவ்வளவுதான்' என்றார். அது பிரச்சினையில்லை என்று குடிகாரரைப் பேசவிட்டு நாம் அமைதியாக இருந்தோம்.

சட்டென்று இந்தக் காதல் என்பது அவ்வளவு கஷ்டமானது என்றார் கடுக்கன்காரர். அவரின் கதையில் இருந்து இந்தக் காதலில் இருந்து அவரால் அவ்வளவு விடுபட முடியவில்லை என்பது புரிந்தது. குரோஷியா காதலியை இறுதியில் குரோஷியாவில் இருந்து பிரிந்து வந்தபோது
, இந்தியா போய் யாரையாவது திருமணம் செய்து சந்தோசமாக இரு என்று சொன்னார், நான் என்ன பதில் அவருக்குச் சொன்னேன் தெரியுமா என்று கேட்டார். என்ன சொன்னீர்கள் என்றேன்.ஒரு வருடத்தில் 365 நாட்கள் இருந்தால் அந்த 365 நாளும் ஒவ்வொருவராக தினமும் திருமணம் செய்ய என்னால் முடியும். ஆனால் நீ ஒருத்திதான் என் என்றென்றைக்குமான காதலி. உனக்காய்க் கடைசிவரை காத்திருப்பேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன் என்றார்.

அதன் பிறகு நான் அமைதியாகிவிட்டேன். எதைச் சொன்னாலும் புரியாத ஆழத்துக்குள் அவர் சென்றுவிட்டார் என்பது புரிந்தது. "காலம் என்றொரு அருமருந்து" எனச் சொல்வது கூட இப்போது தேய்வழக்காகிவிட்டது அல்லவா. மெளனம் அதைவிட எவ்வளவோ சிறந்தது.

அந்தப் பெண்ணின் நினைவுகள் அவருக்குள் பெருக்கெடுத்துப் பாய்ந்திருக்கவேண்டும். சட்டென்று நான் போய் வருகிறேன் என அமைதியை இடைமறித்து, எப்படித் தற்செயலாகச் சந்தித்தோமா அப்படியே பிரிந்துபோனார்.

ஒரு நாடோடியாக அலைபவரைக் கூட இப்படி காதல் பெருஞ் சூழலுக்குள் அலையவைத்து தன்னிலை மறக்கச் செய்துவிட்டதே என நினைத்துக் கொண்டேன். நாம் யாராக இருந்தாலும் உள்ளே நேசத்துக்காய் ஏங்கும், எதன் பொருட்டோ சட்டென்று உடைந்துவிடக் கூடிய சாதாரண மனிதர்கள்தானில்லையா?

*********

(Feb 04, 2023)