சிறுவயதுகளில் அருகிலிருந்த மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலுக்கு அப்பா அழைத்துச் செல்வார். அங்கே சுவர்களில் சமயக்கதைகளை நினைவுபடுத்தும் அழகான ஓவியங்கள் உட்சுவர்களில் வரையப்பட்டிருக்கும். அவற்றை அப்போது தனது நண்பர் (சிவப்பிரகாசம்?) வரைந்ததாகச் சொன்னதாக ஞாபகத்திலுண்டு. அம்மாவின் ஊருக்கருகில் இருந்த நகுலேச்சரம் கோயிலும் இவ்வாறான சுவரோவியங்களைப் பார்த்திருக்கின்றேன்.  

துயரம் என்னவென்றால், இவ்விரு ஆலயங்களும் போரில் பாதிக்கப்பட்டு இந்த அசலான ஓவியங்கள் இப்போது முற்றாக அழிந்துவிட்டிருக்கின்றன. அந்தக் காலங்களில் எங்கேனும் இவை ஆவணமாக்கபட்டு வைக்கப்பட்டிருந்தனவா என்றும் தெரியவில்லை.



எனது காலத்தவர்க்கு நிதானமாக சென்று பார்க்கும் ஓவியக் கண்காட்சிகள் அன்றைய காலத்தில் வாய்க்கவில்லை. பெரும்பாலான ஓவியங்களையும், சிற்பங்களையும் கோயில்களில்தான் பார்த்திருக்கின்றோம். பின்னர் யுத்தகாலத்தில் இயக்கம் தமது பிரச்சாரங்களுக்காக சுவர்களில் வரைந்த போர்க்காலத்தைச் சித்தரிக்கும் ஓவியங்களைப் பார்த்து வளர்ந்திருக்கின்றோம். அது தவிர, யுத்தகளங்களில் மரணமடைந்த போராளிகளின் அஞ்சலிகளும்,மா-வீரர் நினைவு வாரத்தை நினைவுபடுத்தும் பதாதைகளும் மட்டுமே எமக்கான ஓவிய உலகை விரிக்கும் சுருங்கிய எல்லையாக இருந்தன.

புலம்பெயர்ந்த பின், ஓவிய அறிவு அவ்வளவாக இல்லாதபோதும் ஓவியங்களை/ஓவியக் கண்காட்சிகளைத் தேடிப் போவது பிடித்தமாக ஒன்றாக இருந்தது. எமக்குப் பிடித்தமான சூழ்நிலைகளுக்குள் எம்மைத் தக்க வைப்பது என்பதே வாழ்வின் அலுப்புகளுக்குள் இடையில் சுவாரசியம் தரக்கூடியது.


சிலர் அவ்வளவாக வாசிக்காவிட்டாலும், புத்தகங்களை விருப்புடன் வாசித்துக் குவிப்பார்களே, அப்படி எனக்கு ஓவிய உலகு அவ்வளவு பரிட்சயமில்லாதபோதும் ஓவியங்களோடு இருக்க எப்போதும் விரும்புகின்றவன். மேலும் ஒருவர் தமக்குச் சுட்டுப்போட்டாலும் வராத ஒரு திறமையைப் பிறரிடம் பார்த்து வியப்பதைப் போல, நானும் ஓவியங்களை வரைபவர்களை அப்படி நேசமுடன் அரவணைக்க விரும்புவதுண்டு.

*
ஈழத்தில் மாற்கு மாஸ்டர், ஆசை இராசையா, ஓவியர் ரமணி, 'சிரித்திரன்' சுந்தர், கிக்கோ என்று சிறந்த ஓவியர்கள் இருந்திருக்கின்றார்கள். மாற்கு மாஸ்டரிடம் நேரடியாகவும், மானசீகமுமாக கற்ற ஓரு ஓவியப் பரம்பரை இன்றும் எம்மிடம் இருக்கின்றது.

போர் எதைத்தான் விட்டு வைத்திருக்கின்றது. போர்க்காலத்தில் ஓவியர்களும் அருகிப் போயிருந்தார்கள். ஆனால் இப்போது புதிய தலைமுறை ஓவியத்தில் மிளிர்ந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி தரக்கூடியது. ஈழத்தில் ஓவியர்கள் குறித்த என் தேடல் எல்லைக்குட்பட்டது. சில ஓவியர்களைத் தொடர்ந்து வந்தபடி இருப்பேன். ஒரு படைப்பாளி காலத்தின் நீட்சியில் எப்படி மாற்றமடைகின்றார்கள் என்பதைக் கவனிப்பேன்.

அப்படி நிறைய இளம் ஓவியர்கள் கடந்த பத்து வருடங்களில் தமிழகத்தில் சிறந்த கலைஞர்களாக மாறியிருப்பதைப் பார்த்திருக்கின்றேன். அப்படி காலத்தோடு வளர நமக்கு ஈழத்தில் அப்படியான வாய்ப்புக்களும், நம்மை வழிநடத்தும் முன்னோடிகளும் குறைவு என்பது ஒருபுறமிருந்தாலும், இத்தடைகளைத் தாண்டி வருகின்றவர்கள் எனக்கு மிக முக்கியமானவர்கள்.



அப்படி ஒருவராக பிருந்தாஜினியை அவதானித்திருக்கின்றேன். அவரின் தொடக்க கால ஓவியங்களில் இருந்து எப்படி நீர்வர்ணங்களில் தேர்ச்சி பெற்ற ஒருவராக மிளிருகின்றார் என்பதை அவரது அண்மைக்கால ஓவியங்களை வைத்து அறுதியிட்டுக் கூற முடியும். மேலும் ஈழத்தில் ஒருவர் தனது வாழ்க்கையை ஓவியத்துக்கு என்று அர்ப்பணித்து அதில் மட்டும் இயங்கிக் கொண்டிருப்பது என்பது மிக அரிதானது. இன்னொருவகையில் எதிர்கால வாழ்க்கையை வைத்துப் பார்த்தால் ஆபத்தானதும் கூட.  ஆனால் அப்படி முழுநேர ஓவியராக இயங்குகின்றவர் பிருந்தாஜினி என நினைக்கின்றேன்.

கனடாவில் இப்படி  முழுநேர ஓவியராக இருந்து, பிழைப்புக்காக வேறெந்தத் தொழிலுக்கும் போகாது, ஒரு சுயாதீன ஓவியராக இருந்து தனது ஐம்பதாவது வயதில் மரணித்தவர் நமது ஓவியர் கருணா. அப்படி தமக்குப் பிடித்த துறையில் மட்டும் பிற கவலைகள்/பொறுப்புகள்/சுமைகளை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு மூழ்கியிருப்பது என்பது எவ்வளவு கடினமானது என்பதை நாமனைவரும் அறிவோம்.

அண்மையில் ஈழத்தில் ஓவியர் ரமணி மரணமடைந்தவர். எனது பதின்மங்களில் யார் இவற்றை வரைந்தது என்று அறியாமலே அவரது ஓவியங்களைப் பார்த்து வளர்ந்திருக்கின்றேன். எனது தந்தையார் ஒரளவு நன்றாக ஓவியங்களை வரையக்கூடியவர். அப்படியே எனது சகோதரர்களில் ஒருவருக்கும் (அவரின் மகளே ஓவியங்களை வரையும் நிலா) ஓவியங்கள் வரைவது ஒருகாலகட்டம் வரை பிடித்தமாக இருந்திருக்கின்றது. 



அண்மையில் அவரோடு கதைத்துக் கொண்டிருந்தபோதுதான் ஓவியர் ரமணி தன்னை மிகப் பாதித்த ஓர் ஓவியர் எனச் சொன்னார். அவரின் பாதிப்பிலிருந்தும், சிரித்திரன் சுந்தரின் பாதிப்பிலிருந்தும் எனது அண்ணா அவருக்கான ஓவியங்களை வரைந்திருக்கக்கூடும். அவற்றின் சுவடுகளையும் எமது அகதி/இடம்பெயர் வாழ்வு அழித்துச் சென்றிருந்தது.  எனது அண்ணா உக்ரேனிலிருந்து கனடாவுக்கு அகதியாக வந்திறங்கியபோது, அவருக்கு நெருக்கமான சில பொருட்களென கொண்டுவந்திருந்த ஒரு சூட்கேஸையும் விமானநிலையத்தில் கைவிட்டு வெறுங்கையோடு கனடாவின் மண்ணை மிதித்தவர். இது அவருக்கான கதை மட்டுமல்ல, இப்படித்தான் ஒரு தலைமுறை அந்நிய நிலங்களுக்கு வந்திறங்கியவர்கள் என்பதால் திகைப்பதற்கு ஏதுமில்லை.

ஓவியர் ஆசை இராசையா, மாற்கு மாஸ்டர் போல முக்கியமான ஓர் ஓவியர். அவரும் இனக்கலவரத்தில் பாதிப்புற்று தெற்கிலிருந்து  யாழ்ப்பாணத்துக்கு வந்திறங்கிய ஒருவர்தான். பல தமிழ் ஓவியர்களுக்குக் கிடைக்காத ஒரு சிறப்பு, அவருக்கு அரச நிறுவங்களோடு சேர்ந்து வேலை செய்ய  ஒருகாலத்தில் வாய்த்திருக்கின்றது. ஆனால்அதனால் பல முக்கிய ஆளுமைகளுடைய ஓவியங்களை இலங்கையரசின் முத்திரைகளுக்காக ஆசை இராசையா வரைந்திருக்கின்றார். அவரின் அடர்த்தியான இயல்புவர்ண ஓவியங்கள் தனித்துவமானவை.

மாற்கு மாஸ்டர், ஆசை இராசையா, ஏ.ஜே.கனகரட்ன போன்றவர்கள் பெரும் திறமையாளர்கள், அவர்கள் யாழ்ப்பாணத்துச் சூழலை விட்டு வேறொரிடத்தில் பிறந்தோ/வளர்ந்தோ இருந்திருந்தால் எப்படிப் போற்றப்பட்டிருப்பார்கள் என்று சிலவேளைகளில் யோசித்து மனம் வெதும்பதுவண்டு. பிறகு வான்கோ, காஃப்கா போன்றவர்களையே அவர்கள் வாழும் காலத்தில் கைவிட்டு அவர்களின் மரணங்களின் பின் கண்டுகொண்டு ஓர் உலகு இருக்கையில் இதில் வருந்துவதற்கு ஏதுமில்லையென என்னை நானே தேற்றிக் கொள்வதுண்டு. இப்படி மாற்கு மாஸ்டர், ஆசை இராசையா, ஏஜே, 'சிரித்திரன்'சுந்தர் போன்றவர்களின் அசல் திறமையை  மீளக்கண்டுபிடிக்க ஒரு தலைமுறை புதிதாய் எங்களிடையே தோன்றாமலா போய்விடும்?

***

நன்றி: ஓவியங்கள் ஆசை இராசையாவுடது. முதல் படம் அவரே அவரை வரைந்த பிரதிமை.

குறிப்பு:
Uploaded Image
ஆசை இராசையாவின் ஓவியங்களின்  'Echoes in the Bunker' கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நடக்கின்றதென்பதைப் பார்த்தபோது இவற்றையெல்லாம் எழுதவேண்டும் போலத் தோன்றியது. யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களும், யாழுக்குப் போகின்றவர்களும் தவறவிடக்கூடாத ஓவியக்கண்காட்சி இது